Skip to main content

மனமும் அதன் விளக்கமும் | மாயக் குரங்கு | பெ. தூரன்


னம் மிகப் பொல்லாதது என்பதற்கு எடுத்துக்காட்டாக அதன் மாயச் செய்கை ஒன்றை இங்குக் கூற விரும்புகிறேன். ஒருவனுக்கு ஏதாவது ஒன்றின்மேல் விருப்பம் இருக்கும். ஆனால் அவன் அந்த விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்வதைப் பிறர் உணர்ந்தால் அவனைப் பற்றிக் குறைவாக எண்ணுவார்கள். சமூகம் அவனைப் பழிக்கும். இது அவனுக்குத் தெரியும். இருந்தாலும் அந்த ஆசை மட்டும் விடாது. அந்த நிலையிலே அவன் தன்னை அறியாமலேயே தனது செய்கையைப் பிறர் ஆமோதிக்க வேண்டுமென்று அவர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஏதாவது ஒரு காரணம் கற்பிக்கத் தொடங்குவான். அவனுடைய மனம் இந்த வேலையைச் செய்கிறது. அவன் தெரிந்தே காரணம் கண்டுபிடிக்கலாம். அல்லது அவனறியாமலேயே இந்தக் காரணம் கண்டுபிடிக்கும் வேலை நடக்கும். அவனுக்கே இந்த மர்மம் தெரியாது. மனம் தந்திரமாக இதைச் செய்துவிடும். அவனும் அது சரியான காரணந்தான் என்றும், அதனாலேயே அதை விரும்புவதாகவும் நிச்சயமாக நம்புவான்.

மது அருந்தும் பழக்கமுள்ள ஒருவனை எனக்குத் தெரியும். அவன் கள் குடிப்பதற்குத் தனக்குள்ள ஒரு நோய்தான் காரணம் என்று பிறர் அறியும்படி கூறுவான். கள்ளைக் குடிக்காவிட்டால் வயிற்றுவலி நீங்குவதில்லையாம். எத்தனையோ மருந்துகளையெல்லாம் சாப்பிட்டும் இந்த நோய் குணமடையவில்லை. இறுதியாக இந்த மருந்துதான் குணம் கொடுத்ததாம். கள்ளைக் குடித்துக்கொண்டிருந்தால் வயிற்று வலியே அவனுக்கு வருவதில்லை.

குடிகாரனைச் சமூகம் தாழ்வாக மதிக்கும் என்று அவன் அறிந்திருக்கிறான். இருந்தாலும் கள்ளின் மேலுள்ள ஆசை மட்டும் அவனை விடுவதாகக் காணோம். அதனால் அவனுடைய மனம் இது போன்ற ஒரு காரணத்தை அவனறியாமலேயே கற்பித்துக் கொடுத்திருக்கிறது. அந்தக் காரணம் முற்றிலும் சரியென்று அவனே நம்புகிறான்.

இவ்வாறு நிகழ்வதில் அவன் தன் காரணத்தைச் சரியானதென்று நம்புவதோடு இன்னும் ஒரு ஆச்சரியமென்னவென்றால் உடல் நிலையும் பல சமயங்களில் அதற்கேற்றவாறு அமைந்துவிடுகிறது. கள் குடிக்காவிட்டால் வயிற்றுவலி உண்மையாகவே அவனுக்கு வந்துவிடுகிறது.

ஒரு சங்கீத வித்வான் தமது இசையரங்கிற்குக் கூட்டம் வராததற்குக் கீழ்வருமாறு காரணம் சொன்னார். “இன்றைக்குக் குதிரைப் பந்தயமல்லவா? அதனால் எல்லாரும் அங்கே போயிருப்பார்கள்” என்றார் அவர். உண்மையில் அவருடைய இசையரங்கு மக்களுக்குப் பிடிக்கவில்லை என்ற உண்மை அவருக்குத் தெரியும். அதை மறைப்பதற்காக அவர் தெரிந்தே இந்தக் காரணத்தைக் கற்பித்திருக்கிறார்.

இது போன்று அறிந்தோ அறியாமலோ காரணம் கற்பிக்கும் செயலுக்கு அறிவுப் பொருத்தந் தேடல் (Rationalisation) என்று பெயர். ஆனால் மேலே கூறியது போல அறிவுப் பொருந்தந் தேடல் என்பது அவ்வளவு எளிமையானதுமல்ல. அது இன்னும் சிக்கலானது. மனத்திலே ஆழ்ந்து பதிந்து கிடக்கும் ஏதோ ஒரு உணர்ச்சியாலும் இது ஏற்படலாம். வீட்டின் உட்புறச் சுவரில் ஒட்டுவதற்காக ஒருத்தி சிவப்பு நிறக் காகிதம் வாங்க விரும்பியதை அவள் கணவன் தடை செய்தானாம், “சிவப்பு நிறமான சுவர்க் காகிதம் கண்ணுக்குத் தொந்தரவு கொடுக்கிறது” என்று அவன் காரணம் கூறினான். அவன் கூறிய காரணத்தை நன்கு ஆராய்ந்து பார்த்தபோது அவன் சிவப்பு நிறத்தை வெறுத்ததற்கு உண்மையான காரணம் தெரிந்தது. சிறு வயதிலே அவன் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது ஒரு சமயம் தண்டனை பெறுவதற்காகத் தலைமையாசிரியரின் அறைக்குச் செல்லவேண்டியிருந்தது. அப்போது அந்த அறைக்குச் சிவப்பு நிறச் சுவர்க் காகிதம் ஒட்டியிருந்தது. அந்த நிறம் அவன் சிறு வயதிலே பெற்ற தண்டனையின் வேதனை உணர்ச்சியை மேலோங்கித் தோன்றும்படி செய்ததே அவன் அதை வெறுத்ததற்கு உண்மையான காரணம் என்றும், கண்ணுக்குத் தொந்தரவு கொடுக்கின்றது என்பது அறிவுப் பொருத்தந் தேடல் என்றும் பிராய்டு என்ற உளவியலறிஞர் கூறுகிறார்.

இந்த உணர்ச்சி இதுவரையில் எங்கிருந்தது? அவனுக்கு இதைப் பற்றி நல்ல நினைவுகூட இல்லையே? அவ்வாறிருக்க அந்த உணர்ச்சி எங்கே பதுங்கிக் கிடந்தது? இப்பொழுது அது எப்படி மேலே வந்தது? இவற்றையெல்லாம் தெரிந்துகொள்வதற்கு முதலில் மனத்தின் அமைப்பைப் பற்றி இன்னும் சற்று விரிவாக அறிந்துகொள்ள வேண்டும்.

அறிவுப் பொருத்தந் தேடுவதிலே மற்றொரு வகையுமுண்டு.

அண்ணாமலை கணக்குத் தேர்விலே வெற்றி பெறவில்லை. “ஏண்டா இப்படி ஆயிற்று?” என்று கேட்டால், "அது என் குற்றமல்ல. கணக்காசிரியர் சரியாகக் கற்றுக்கொடுக்கவில்லை” என்று அவன் பதில் சொல்லுகிறான். தான் சொல்லுவது சரியான காரணம் என்று கூட அவன் நினைத்துக்கொண்டிருக்கிறான்.

எனக்குத் தெரிந்த இளங்கவிஞர் ஒருவர் தமது பாடல்களைப் பத்திரிகையாசிரியர்கள் ஏற்றுக்கொள்ளாததற்கு அடிக்கடி ஒரு காரணம் சொல்லுவார். “இந்த ஆசிரியர்களுக்கு உண்மையான கவிதையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளத் தெரியவே தெரியாது. எல்லாரும் சுவை உணர்ச்சியே இல்லாதவர்கள்” என்று அவர் சினம் பொங்கப் பேசுவார்.

இவ்வாறு குற்றத்தைப் பிறர்மேல் ஏற்றிச் சொல்லுவதற்கு உளவியலிலே விட்சேபம் என்று பெயர் வழங்குகிறது. விட்சேபத்திற்கும் அறிவுப் பொருத்தம் தேடலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பல சமயங்களிலே இரண்டையும் பிரித்துப் பார்ப்பதுகூட இயலாமற்போகும்.

இந்த இரண்டு தன்மைகளுக்கும் அடிப்படையான காரணம் ஒன்றுதான். தன்னைப்பற்றிப் பிறர் இழிவாகக் கருதக்கூடாது என்ற எண்ணமே இங்கே வேலை செய்கிறது. மனத்தின் மாயச் செயல்களில் இதுவும் ஒன்று. ஆதலால் அந்த மனத்தைப் பற்றி இன்னும் சற்று விரிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அதன் மாயத்தை நன்கு புரிந்து கொள்ள முடியும். இதை அடுத்த பகுதியில் காண்போம்.

Comments

Most Popular

பழங்காலத்து எழுதுகருவிகள் - மயிலை சீனி. வேங்கடசாமி

இந்தக் காலத்திலே உலகம் முழுவதும் காகிதத்தாளும் பேனாவும் எழுதுகருவிகளாகப் பயன்பட்டுவருகின்றன. இவை எழுத்து வேலைக்குப் பெரிதும் வாய்ப்பாகவும் எளிதாகவும் அமைந்திருக்கின்றன. ஆனால், காகிதத்தாள் வருவதற்கு முன்பு, பண்டைக் காலத்திலே இவ்வளவு எளிதானவும் வாய்ப்பானவும் ஆன எழுதுகருவிகள் இல்லை. பண்டைக் காலத்திலே உலக மக்கள் எவ்விதமான எழுதுகருவிகளை வழங்கிவந்தார்கள் என்பது பற்றியும், பின்னர் காகிதத்தாள் எவ்வாறு நடைமுறையில் வந்தது என்பதைப் பற்றியும் ஈண்டுக் கூறுவோம். களிமண் சுவடிகள் சிறிய ஆசியா தேசத்தில் யூப்ரெடிஸ், டைகிரிஸ் ஆறுகள் பாய்கிற இடத்தில் இருந்த கால்டியா, ஸைரியா நாட்டு மக்கள் ஆதிகாலத்தில் களிமண்ணை எழுதுகருவியாகக் கொண்டிருந் தார்கள். களிமண்ணைப் பிசைந்து சிறுசிறு பலகைகளைப்போல் அமைத்து, அப்பலகை காய்ந்து போவதற்கு முன்னமே ஆணி போன்ற கருவியினால் எழுதி உலரவைத்துப் புத்தகமாக உபயோகித்தார்கள்; அவர்கள் எழுதிய எழுத்துகளுக்குக் கூனிபார்ம் எழுத்து என்று பெயர் கூறுவர். அவர்கள் எழுதிய களிமண் சுவடிகளைப் புத்தகசாலையில் வைத்துப் போற்றி னார்கள். அவ்வாறு போற்றி வைக்கப்பட்டிருந்த களிமண் சுவடிகள் பல, சமீப...

சங்கரதாஸ் சுவாமிகள் வரலாறு - அவ்வை டி.கே. சண்முகம்

நாடகத் தமிழை வளர்த்த தந்தை அவர்; நாடகாசிரியர்கள் பலருக்குப் பேராசிரியர் அவர். சென்ற ஐம்பது ஆண்டுகளுக்கிடையே அவரது பாடல்களையோ வசனங்களையோ உபயோகிக்காத நடிக நடிகையர் தமிழ் நாடக உலகில் இல்லையென்றே சொல்லிவிடலாம். நாடக உலகம் அப்பெரியாரைத் தமிழ் நாடகத் தலைமையாசிரியர் எனப் போற்றியது. எளிமையும் இனிமையும் ததும்பும் பாடல்களாலும் தேன் சொட்டும் தீந்தமிழ் வசனங்களாலும் அப்பெருமகனார் இயற்றியருளிய நாடகங்கள்தாம் தமிழ் நாடகக் கலை வளர்ச்சிக்கு அடிப்படைச் செல்வம் என்று கூறினால் அது மிகையாகாது. முழுப்பெயரையும் சொல்ல வேண்டியதில்லை. சுவாமிகள் என்றாலே போதும். தமிழ் நாடக உலகில் அது சங்கரதாஸ் சுவாமிகள் ஒருவரைத்தான் குறிக்கும். சுவாமிகள் காலத்திலிருந்த மிகப்பெரிய புலவர்களும் நாடகாசிரியர்களுமான உடுமலைச் சரபம் முத்துசாமிக் கவிராயர், குடந்தை வீராசாமி வாத்தியார் முதலியோரெல்லாம் சுவாமிகளின் புலமைக்குத் தலை வணங்கிப் பாராட்டினர். ஆங்கில மோகத்தால் தாய்மொழியிற் பேசுவதுகூடக் கெளரவக் குறைவென்று கருதப்பட்ட காலத்தில் நாடக மேடையின் மூலம் தமிழை வளர்த்த பெரியார் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள். இசையரங்குகளிலே தெலு...

மனமும் அதன் விளக்கமும் | கனவின் பொருள் | பெ. தூரன்

ப ல கனவுகள் சிக்கல் நிறைந்திருக்கின்றன; அவற்றில் தோன்றும் நிகழ்ச்சிகள் மேலாகப் பார்க்கும்போது பொருளற்றவைகளாகவும் இருக்கின்றன. கோ. என்பவர் கண்ட ஒரு கனவை இங்கே ஆராய்வோம். “ஏதோ ஒரு பெரிய கோயில். அங்கே நானும் என் நண்பர்கள் சி. வே. மா. ஆகிய மூவரும் சேர்ந்து ஒருவனைக் கொலை செய்தோம். அவனுடைய மூக்கை மாத்திரம் அறுத்துச் சந்தனத்தில் வைத்துச் சாமிக்கு வைத்தோம். பிணம் வெளியிலேயே கிடந்தது. சி. தான் மூக்கை அறுத்தவர். கடவுளைத் தொழுவதற்காகப் பலர் ஒரு மோட்டார்க் காரில் வந்தார்கள். உடனே நான் பிணத்தைத் துரக்கிக் கோபுரத்தின் மேல் வீசினேன். இதை எனது ஆசிரியர் ஒருவர் பார்த்துக் கொண்டார்.” “நான் ஒடி வந்துவிட்டேன். வழியில் என் நண்பர் வீ. யைச் சந்தித்து வேறொருவனிடம் சைக்கிள் வாங்கி இருவரும் ஏறிக்கொண்டு ஊருக்குச் சென்றோம். வழியில் சி. தம் அண்ணனிடம் ஒன்றும் நடக்காதது போல் வந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கொலை செய்துவிட்டு இவர் இவ்வளவு தாராளமாக வெளியில் நடமாடுகிறாரே என்று வியந்தேன்.” "நாங்கள் ஒரு சத்திரத்தில் புகுந்துகொண்டிருந்தோம். ஆனால் சி. வேறு சில நண்பர்களிடம் சாலையில் சென்றுகொண்டிருந்தார்.” ...