Skip to main content

Posts

Showing posts from July, 2020

காஃப்காவும் ஒரு தமிழ் எழுத்தாளரும் | க. நா. சுப்ரமண்யம்

காஃப்கா என்கிற பெயரை முதல் முதலாக நான் புதுமைப்பித்தன் மூலமாகத்தான் கேள்விப்பட்டேன் என்று எண்ணுகிறேன். 1937 மத்தியில் இருக்கலாம். Dorothy Norman என்பவருடைய Twice A Year Press வெளியீடாக வந்த அமெரிக்கப் பதிப்பு ஒன்று எப்படியோ Second Hand work ஆக நண்பர் புதுமைப்பித்தனுக்குக் கிடைத்தது. அதில் ஒன்றிரண்டு கதைகளையும் அவர் மொழிபெயர்க்க உத்தேசித்து மொழிபெயர்த்தார் என்று எண்ணுகிறேன். A Franz Kafka Miscellaneous என்கிற பெயருடன் வெளிவந்த அந்த நூலில் , காஃப்காவிலிருந்து பல பகுதிகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தன ; காஃப்காவைப் பற்றியும் ஒருசில கட்டுரைகளும் இருந்தன. ஒருநாள் அந்த நூலை என்னிடம் தந்து அதை ஒரே நாளில் படித்துவிட்டுத் திருப்பித் தந்துவிட வேண்டும் என்கிற நிபந்தனையுடன் கொடுத்தார் புதுமைப்பித்தன். காஃப்காவைப் பற்றிய கட்டுரைகளை நான் படிக்கவில்லை ; எனக்கு விமர்சனத்தில் அன்றும் அவ்வளவாக நம்பிக்கை கிடையாது ; இன்றும் கிடையாது. ஆனால் அந்த நூலில் இருந்த காஃப்கா மொழிபெயர்ப்புகளையெல்லாம் உடகார்ந்து இரவோடு இரவாகப் படித்துவிட்டேன். இரவு எப்போது தூங்கினேன் என்கிற நினைவில்லை. ஆனால் காஃப்காவைப்

ஆரோக்கிய நிகேதனம் - படிக்குமுன்...

('ஆரோக்கிய நிகேதனம்' நாவல் அமேசான் கிண்டிலில் ஜூலை 23ஆம் தேதி, தாராசங்கர் பந்த்யோபாத்யாய் அவர்களின் பிறந்த நாளில் வெளியாகிறது. இந்த நாவலுக்கு அதன் மொழிபெயர்ப்பாளர் த. நா. குமாரஸ்வாமி எழுதிய முன்னுரை இது.) அகில இந்திய எழுத்தாளர்கள் மாநாடு 1959 ஆம் ஆண்டு சென்னையில் கூடியது . ஸ்ரீ தாராசங்கர் பந்த்யோபாத்யாய் அதற்குத் தலைமை தாங்கினார் . நிகழ்ச்சி முடிந்ததும் அவருடன் அளவளாவ அவருடைய அறைக்குச் சென்றேன் . அவருடைய நவீனங்களில் ஒன்றான ஆகுன் , அப்பொழுது என்னுடன் வைத்திருந்தேன் . ( இந்நூலை அக்கினி என்ற பெயரில் 1943 ஆம் ஆண்டில் மொழிபெயர்த்து நான் தாராசங்கரை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தினேன் ) அதனை அவரிடம் தந்து அவர் தம் நினைவை நான் போற்றும் வகையில் ஒரு நல்லுரையை அதில் பதிக்கும்படி வேண்டினேன் . அந்நூலின் உட்புறமமாக வங்காளிப் பத்திரிகையொன்றில் வந்த அவர் உருவப்படத்தை ஒட்டிவைத்திருப்பதைப் பார்த்து மென்னகை பூத்து அவர் , “ எத்தனை வருஷங்களுக்கு முன் எடுத்த என் படம் ! அந்த நாட்கள் மறைந்துவிட்டன . இப்போது நான் எவ்வளவோ மாறிப்போய்விட்டேன் . இன்று அந்த தாராசங்கரின் மெலிந்த நிழலே நான் ” என்றதும் அவருட

ரங்கூன் பிரயாணம் | ஏ. கே. செட்டியார்

திடீரென்று ஒருநாள் , ரங்கூனுக்குப் போவதென்று முடிவு செய்தேன். ஆனால் எந்த வழியாகச் செல்வது என்பதுதான் யோசனை. இந்தியாவிலிருந்து ரங்கூனுக்குக் கப்பல் வழியாக மூன்று நகரங்களிலிருந்து செல்லலாம். கல்கத்தா , சென்னை , விசாகபட்டணம். யுத்தம் ஆரம்பமான பிறகு கப்பல் போக்குவரத்து முன்னிருந்தது போல ஒழுங்காக இல்லை. முன்னர் , 5000, 7000 டன் நிறையுள்ள கப்பல்கள் , மூன்று அல்லது நான்கு தினங்களில் ரங்கூனை அடைந்துவிடும். இப்பொழுது , கல்கத்தா , சென்னை முதலிய நகரங்களிலிருந்து 2000 அல்லது 3000 டன் நிறையுள்ள சிறிய சீனக் கப்பல்களும் , நார்வீஜியக் கப்பல்களும் , நினைத்த பொழுது செல்கின்றன. இவைகள் எல்லாம் முன்னர் சாமான் கப்பல்கள். இப்பொழுதும் பிரயாணிகளை , சாமான்களைப் போலத்தான் கொண்டுபோய்ச் சேர்க்கின்றன. சில சமயங்களில் இக்கப்பல்கள் ரங்கூனை அ டைவதற்கு எட்டு நாட்கள் கூட ஆகிவிடுகின்றன. தற்போது ரங்கூனுக்குச் செல்கின்ற கப்பல்களில் விசாகப்பட்டணத்திலிருந்து செல்கின்ற கப்பல்கள்தான் சிறிது வசதியுள்ளவை. விசாகப்பட்டணத்திற்கு இப்பொழுது சுக்கிர தசை அடிக்க ஆரம்பித்திருக்கிறது. ஆந்திர சர்வகலாசாலை , சினிமா ஸ்டுடியோ , நாற்புறமு