நாவலுக்கு, சிறுகதைக்கு, நாடகத்துக்கு என்று அடிக்கடி சில ஸ்தாபனங்களின் பெயரால் பரிசுகள் அளிக்கிறார்கள். நிறையத் தொகைகளும் அளிக்கிறார்கள். சில சந்தர்ப்பங்களில் அதனால் தாங்கள் சிறப்பாக இலக்கிய சேவை செய்துவிட்டதாகவும் எண்ணிக்கொள்ளுகிறார்கள். இலக்கியத்துக்கும் பரிசுகளுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. பல ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் நடந்த ஒரு கவிதைப் பரிசுப் போட்டியிலே கவி சுப்பிரமணிய பாரதியார் கலந்துகொண்டார். பரிசு அவருக்குக் கிடைக்கவில்லை. அ. மாதவையாவுக்குக் கிடைத்தது கவிதைப் பரிசு. அதற்காகக் கவியாகப் பாரதியாரின் இலக்கிய அந்தஸ்து குறைந்துவிடவில்லை - மாதவையாவின் வசன அந்தஸ்தும் குறைந்துவிடவில்லை. குறிப்பிட்ட ஒரு மூன்று, ஐந்து, ஏழு அல்லது ஒன்பது பஞ்சாயத்தார்களைத் திருப்திப்படுத்துகிற எழுத்து சிறந்த எழுத்து என்று சொல்லமுடியாது. இந்தப் பஞ்சாயத்தார்களுடைய இலக்கிய அறிவுபற்றிக்கூட நாம் குறைபட வேண்டாம். ஒரு நல்ல புஸ்தகம் குறிப்பிட்ட ஒரு நபருக்குக்கூடத் திருப்தி தருமா என்பது சந்தேகம்தான். எதிர்பாராத ஒரு இடத்தில் எதிரொலி எழுப்பித் திருப்தி தரும் நூல், குறிப்பிட்ட ஒருவரைத் திருப்த...