Skip to main content

இலக்கியப் பரிசுகள் | க. நா. சுப்ரமண்யம்


நாவலுக்கு, சிறுகதைக்கு, நாடகத்துக்கு என்று அடிக்கடி சில ஸ்தாபனங்களின் பெயரால் பரிசுகள் அளிக்கிறார்கள். நிறையத் தொகைகளும் அளிக்கிறார்கள். சில சந்தர்ப்பங்களில் அதனால் தாங்கள் சிறப்பாக இலக்கிய சேவை செய்துவிட்டதாகவும் எண்ணிக்கொள்ளுகிறார்கள்.

இலக்கியத்துக்கும் பரிசுகளுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை.

பல ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் நடந்த ஒரு கவிதைப் பரிசுப் போட்டியிலே கவி சுப்பிரமணிய பாரதியார் கலந்துகொண்டார். பரிசு அவருக்குக் கிடைக்கவில்லை. அ. மாதவையாவுக்குக் கிடைத்தது கவிதைப் பரிசு. அதற்காகக் கவியாகப் பாரதியாரின் இலக்கிய அந்தஸ்து குறைந்துவிடவில்லை - மாதவையாவின் வசன அந்தஸ்தும் குறைந்துவிடவில்லை.

குறிப்பிட்ட ஒரு மூன்று, ஐந்து, ஏழு அல்லது ஒன்பது பஞ்சாயத்தார்களைத் திருப்திப்படுத்துகிற எழுத்து சிறந்த எழுத்து என்று சொல்லமுடியாது. இந்தப் பஞ்சாயத்தார்களுடைய இலக்கிய அறிவுபற்றிக்கூட நாம் குறைபட வேண்டாம். ஒரு நல்ல புஸ்தகம் குறிப்பிட்ட ஒரு நபருக்குக்கூடத் திருப்தி தருமா என்பது சந்தேகம்தான். எதிர்பாராத ஒரு இடத்தில் எதிரொலி எழுப்பித் திருப்தி தரும் நூல், குறிப்பிட்ட ஒருவரைத் திருப்திப்படுத்த வேண்டும் என்ற அவசியமேயில்லை.

தமிழ்நாட்டில் - தமிழ் வளர்ச்சிக் கழகம், ஆனந்த விகடன், நாராயணசாமி ஐயர் பரிசுகள்தான் இப்படி என்றில்லை. உலகத்திலுள்ள எல்லா இலக்கியப் பரிசுகளுக்குமே பொதுவாக உள்ள குறைதான் இது. இலக்கிய மதிப்பீடு அப்படி ஒன்றும் ஓட்டெடுத்துச் சுலபமாகச் செய்துவிட முடியாது.

அரசியல் முதலிய காரணங்களினால் நோபல் இலக்கியப் பரிசுகளில்கூடக் குறைபாடுகள் ஏராளமாக நேர்ந்துவிடுவதுண்டு என்பது தெரிகிறது.

1935 முதல் 1940 வரையில் ஆனந்த விகடனில் மட்டும் சுமார் நூறு பேர்வழிகளுக்காவது பரிசுகள் வழங்கியிருப்பார்கள். அந்தப் பரிசுகள் பெற்றவர்களில் முக்கால்வாசிப் பேர்வழிகள் எழுதுவதையே நிறுத்திவிட்டவர்கள், மற்றவர்களில் பெரும்பகுதியினரின் பெயரையே தமிழகம் மறந்துவிட்டது இந்த சொல்ப காலத்திலேயே என்றும் சொல்லலாம்.

இதனாலெல்லாம் ஒன்றும் நிரந்தரமாக அசைக்கமுடியாதபடி நிர்த்தாரணம் ஆகிவிடவில்லை என்றாலும்கூட, இலக்கியப் பரிசுகள் இலக்கியபூர்வமாக ஒன்றுக்கும் உதவாதவை என்பதுதான் என் அபிப்பிராயம். அதில் ஒரே ஒரு நல்ல அம்சம் இதுதான்: ஏழை ஆசிரியன் ஒருவனுக்கு ஏதோ ஒரு சமயத்தில் மொத்தமாக ஒரு தொகை கிடைத்திருக்கிறது என்பதுதான் அந்த நல்ல அம்சம். மற்றப்படி இலக்கிய ரீதியில் இலக்கியப் பரிசுகள் பற்றி இலக்கிய ரஸிகனோ விமரிசகனோ கவலைப்பட வேண்டியதேயில்லை.

(விமரிசனக் கலை நூலிலிருந்து)

Comments

Most Popular

புதுமையும் பித்தமும் - 3 | க. நா. சுப்ரமண்யம்

புதுமையும் பித்தமும் - 2 | க. நா. சுப்ரமண்யம் இந்தப் பகுதியில் பொதுவாக இலக்கியத்தைப் பற்றியும் , சிறப்பாகத் தமிழ்ச் சிறுகதை பற்றியும் புதுமைப்பித்தன் சொல்லிப் போயிருக்கிற சில விஷயங்களைப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. அவர் படைப்புகளில் ஆட்சி செலுத்திய கொள்கைகள் , சித்தாந்தங்கள் முதலியவற்றையும் , அவருக்கிருந்த இலக்கிய நோக்கம் , வாழ்க்கை லட்சியங்கள் இவற்றையும் ஓரளவுக்குத் தெரிந்துகொள்ள இது உபயோகமாக இருக்கும். இலக்கியம் என்றால் என்ன என்கிற கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்கிற மாதிரி தன் கட்டுரைத் தொகுப்பிற்கு அவர் முன்னுரை எழுதுகிறபோது சில விஷயங்களைச் சொல்லியிருக்கிறார். ‘வாழ்வு , வாழ்க்கை என்று இரண்டு பதங்கள் உண்டு. இவற்றிடையே உள்ள தொடர்பையோ தொடர்பற்ற தன்மையையோ விளக்குவது , மனித சிந்தனையின் சாரம். வாழ்வு எனில் தோற்றம் , ஸ்திதி , மறைவு என முக்கூறாகத் தோன்றும் பிரபஞ்சத்தன்மை. வாழ்க்கை என்பது தனிப்பட்ட ஜீவராசியின் உயிர்ப் பாசத்தினால் நிகழும் அவஸ்தை. இவ்விரண்டுக்கும் உள்ள தொடர்பைக் காட்டுவது மனித சிந்தனையின் சாரம். அது தத்துவமாக உருவாகிறது. வாழ்வின் நியதி ஒன்று , சூத்திரம் ஒன்று என்று வற்பு...

மனமும் அதன் விளக்கமும் | கனவின் பொருள் | பெ. தூரன்

ப ல கனவுகள் சிக்கல் நிறைந்திருக்கின்றன; அவற்றில் தோன்றும் நிகழ்ச்சிகள் மேலாகப் பார்க்கும்போது பொருளற்றவைகளாகவும் இருக்கின்றன. கோ. என்பவர் கண்ட ஒரு கனவை இங்கே ஆராய்வோம். “ஏதோ ஒரு பெரிய கோயில். அங்கே நானும் என் நண்பர்கள் சி. வே. மா. ஆகிய மூவரும் சேர்ந்து ஒருவனைக் கொலை செய்தோம். அவனுடைய மூக்கை மாத்திரம் அறுத்துச் சந்தனத்தில் வைத்துச் சாமிக்கு வைத்தோம். பிணம் வெளியிலேயே கிடந்தது. சி. தான் மூக்கை அறுத்தவர். கடவுளைத் தொழுவதற்காகப் பலர் ஒரு மோட்டார்க் காரில் வந்தார்கள். உடனே நான் பிணத்தைத் துரக்கிக் கோபுரத்தின் மேல் வீசினேன். இதை எனது ஆசிரியர் ஒருவர் பார்த்துக் கொண்டார்.” “நான் ஒடி வந்துவிட்டேன். வழியில் என் நண்பர் வீ. யைச் சந்தித்து வேறொருவனிடம் சைக்கிள் வாங்கி இருவரும் ஏறிக்கொண்டு ஊருக்குச் சென்றோம். வழியில் சி. தம் அண்ணனிடம் ஒன்றும் நடக்காதது போல் வந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கொலை செய்துவிட்டு இவர் இவ்வளவு தாராளமாக வெளியில் நடமாடுகிறாரே என்று வியந்தேன்.” "நாங்கள் ஒரு சத்திரத்தில் புகுந்துகொண்டிருந்தோம். ஆனால் சி. வேறு சில நண்பர்களிடம் சாலையில் சென்றுகொண்டிருந்தார்.” ...

மனமும் அதன் விளக்கமும் | இன நனவிலி மனம் | பெ. தூரன்

பி ராய்டு என்ற உளவியலார் நனவிலி மனத்தைப் பற்றி ஆராய்ந்து உளப் பகுப்பியல் முறையைத் தோற்றுவித்தார் என்று கண்டோம். உளப்பகுப்பியலின் தந்தை அவரே. அவரோடு ஆட்லரும், யுங் என்பவரும் மாணவராகப் பல ஆண்டுகள் வேலை செய்தனர். பிறகு இருவரும் கொள்கை வேறுபாடுகளால் வேறு வேறாகப் பிரிந்தனர். ஆட்லரின் பிற்காலக் கருத்தைப் பற்றி முன்பே கூறப்பட்டுள்ளது. இங்கு யுங்கின் கொள்கையைச் சுருக்கமாக ஆராய்வோம். நனவிலி மனத்தைப் பிற்காலத்தில் பிராய்டு ‘இத்’ என்றும், அதில் எழும் ஆற்றலை ‘லிபிடோ’ (Libido) என்றும் குறிப்பிட்டார். லிபிடோ பாலியல்பு வாய்ந்தது என்றும், மனக் கோளாறுகளெல்லாம் இது ஒழுங்காக அமையாததால் ஏற்படுகின்றன என்றும், இந்தப் பாலியல்பு குழவிப் பருவ முதற்கொண்டே தொடங்குகிறதென்றும் கருதினார். நனவிலி மனம் குழவிப் பருவத்தில் சிறிதாக இருந்தபோதும், வயது ஆக ஆக அக்குழந்தைக்குத் தடைகளும் விதிகளும் பெருகுகின்ற காரணத்தினால் நனவிலி மனத்தில் பல விதமான இச்சைகளும் ஆர்வங்களும் மிகுதியாகி நனவிலி மனம் விரிவடைகின்றது. அதனால்தான் நனவிலி மனம் நனவு மனத்தினின்றும் வளர்ந்ததேயாகும் என்று பொதுப்படையாகக் கூறுவதுண்டு. இக் கருத்தைப் பல ந...