Skip to main content

இலக்கியப் பரிசுகள் | க. நா. சுப்ரமண்யம்


நாவலுக்கு, சிறுகதைக்கு, நாடகத்துக்கு என்று அடிக்கடி சில ஸ்தாபனங்களின் பெயரால் பரிசுகள் அளிக்கிறார்கள். நிறையத் தொகைகளும் அளிக்கிறார்கள். சில சந்தர்ப்பங்களில் அதனால் தாங்கள் சிறப்பாக இலக்கிய சேவை செய்துவிட்டதாகவும் எண்ணிக்கொள்ளுகிறார்கள்.

இலக்கியத்துக்கும் பரிசுகளுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை.

பல ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் நடந்த ஒரு கவிதைப் பரிசுப் போட்டியிலே கவி சுப்பிரமணிய பாரதியார் கலந்துகொண்டார். பரிசு அவருக்குக் கிடைக்கவில்லை. அ. மாதவையாவுக்குக் கிடைத்தது கவிதைப் பரிசு. அதற்காகக் கவியாகப் பாரதியாரின் இலக்கிய அந்தஸ்து குறைந்துவிடவில்லை - மாதவையாவின் வசன அந்தஸ்தும் குறைந்துவிடவில்லை.

குறிப்பிட்ட ஒரு மூன்று, ஐந்து, ஏழு அல்லது ஒன்பது பஞ்சாயத்தார்களைத் திருப்திப்படுத்துகிற எழுத்து சிறந்த எழுத்து என்று சொல்லமுடியாது. இந்தப் பஞ்சாயத்தார்களுடைய இலக்கிய அறிவுபற்றிக்கூட நாம் குறைபட வேண்டாம். ஒரு நல்ல புஸ்தகம் குறிப்பிட்ட ஒரு நபருக்குக்கூடத் திருப்தி தருமா என்பது சந்தேகம்தான். எதிர்பாராத ஒரு இடத்தில் எதிரொலி எழுப்பித் திருப்தி தரும் நூல், குறிப்பிட்ட ஒருவரைத் திருப்திப்படுத்த வேண்டும் என்ற அவசியமேயில்லை.

தமிழ்நாட்டில் - தமிழ் வளர்ச்சிக் கழகம், ஆனந்த விகடன், நாராயணசாமி ஐயர் பரிசுகள்தான் இப்படி என்றில்லை. உலகத்திலுள்ள எல்லா இலக்கியப் பரிசுகளுக்குமே பொதுவாக உள்ள குறைதான் இது. இலக்கிய மதிப்பீடு அப்படி ஒன்றும் ஓட்டெடுத்துச் சுலபமாகச் செய்துவிட முடியாது.

அரசியல் முதலிய காரணங்களினால் நோபல் இலக்கியப் பரிசுகளில்கூடக் குறைபாடுகள் ஏராளமாக நேர்ந்துவிடுவதுண்டு என்பது தெரிகிறது.

1935 முதல் 1940 வரையில் ஆனந்த விகடனில் மட்டும் சுமார் நூறு பேர்வழிகளுக்காவது பரிசுகள் வழங்கியிருப்பார்கள். அந்தப் பரிசுகள் பெற்றவர்களில் முக்கால்வாசிப் பேர்வழிகள் எழுதுவதையே நிறுத்திவிட்டவர்கள், மற்றவர்களில் பெரும்பகுதியினரின் பெயரையே தமிழகம் மறந்துவிட்டது இந்த சொல்ப காலத்திலேயே என்றும் சொல்லலாம்.

இதனாலெல்லாம் ஒன்றும் நிரந்தரமாக அசைக்கமுடியாதபடி நிர்த்தாரணம் ஆகிவிடவில்லை என்றாலும்கூட, இலக்கியப் பரிசுகள் இலக்கியபூர்வமாக ஒன்றுக்கும் உதவாதவை என்பதுதான் என் அபிப்பிராயம். அதில் ஒரே ஒரு நல்ல அம்சம் இதுதான்: ஏழை ஆசிரியன் ஒருவனுக்கு ஏதோ ஒரு சமயத்தில் மொத்தமாக ஒரு தொகை கிடைத்திருக்கிறது என்பதுதான் அந்த நல்ல அம்சம். மற்றப்படி இலக்கிய ரீதியில் இலக்கியப் பரிசுகள் பற்றி இலக்கிய ரஸிகனோ விமரிசகனோ கவலைப்பட வேண்டியதேயில்லை.

(விமரிசனக் கலை நூலிலிருந்து)

Comments

Most Popular

கு. ப. ராஜகோபாலன் என்கிற முழுமை | க. நா. சுப்ரமண்யம்

கு. ப. ராஜகோபாலனின் கதைகளை , அவை எழுதப்பட்டு சற்றேறக் குறைய ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு இன்று படித்துப் பார்க்கும்போது கூட அவர் லாகவமும் , கதை நடத்தும் திறனும் , உருவ , கருத்து அமைதியுடன் மிகவும் சிறப்பாகவே உள்ளத்தில் தட்டுகின்றன. வாழ்க்கையை முழுப்பார்வையுடன் பார்ப்பது அவர்க்கு மிகவும் சிறிய கதைகளிலும் கூடச் சாத்தியமாக இருந்திருக்கிறது. ஆண் , பெண் உறவுகளை , பால் உணர்ச்சிகளை அப்பட்டமாக , உரக்க , மனத்தையும் கண்ணையும் ஒருங்கே உறுத்துகிற மாதிரிச் சொல்வது இன்று பலருக்கும் கைவந்த கலையாக இருக்கிறது. ஆனால் , அதையே சூக்ஷ்மமாகச் செய்கிற காரியம் , கலையுணர்ச்சியுடன் முழுவதும் சொல்லாமல் சொல்லிவிடுகிற காரியம் கு.ப.ரா . வுக்கு மிகவும் சிறப்பாக கைவந்திருந்ததை இன்று படிக்கும்போதும் உணர முடிகிறது. இந்த மென்மையும் , கலை உணர்ச்சியும் பக்கம் பக்கமாக பச்சையாக எதை எதையோ எழுதுகிற தமிழ் எழுத்தாளர்களுக்கு எட்டாத ஒரு விஷயம். அவர்கள் கு.ப.ரா . விடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். புத்தனுடைய துறவுக்கு அசுவகோஷன் முதல் எத்தனையோ இலக்கியாசிரியர்கள் பலர் காரணங்கள் கண்டு சொல்லிவிட்டார்கள். மூப்பு , நோய் , சாவு...

எழுத்து ஆக்கம் - மயிலை சீனி. வேங்கடசாமி

பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னே மனிதன் பேசக் கற்றுக்கொண்டான். அஃதாவது, தன் எண்ணங்களைப் பேச்சின் மூலமாகப் பிறருக்குத் தெரிவிக்கக் கற்றுக் கொண்டான். மனிதன் கற்றுக்கொண்ட பேச்சு அவனை மிருகத் தன்மையிலிருந்து மனிதத் தன்மைக்கு உயர்த்திவிட்டது. பின்னும், பல காலம் சென்ற பிறகு மனிதன், தன் எண்ணங் களையும் கருத்துக்களையும், எழுத்து மூலமாகப் பிறருக்குத் தெரிவிக்க முயற்சி செய்தான், முயற்சி செய்து அதில் வெற்றி அடைந்தான். எழுத்துக்களைக் கண்டுபிடித்து அதன் மூலமாகத் தன் கருத்துக்களை மற்றவர்களுக்குத் தெரிவிக்கக் கற்றுக்கொண்ட வித்தையானது, மனிதனை மிக உயர்ந்த நாகரிகத்தை அடையச் செய்துவிட்டது. எழுதப் படிக்கக் கற்றுக்கொள்ளாமல், வெறும் பேச்சோடு மட்டும் நின்று விட்டிருந்தால், இப்போது மனிதன் அடைந்திருக்கிற உயர்ந்த நாகரிக நிலையை அடைந்திருக்க முடியாது. எழுத்தைக் கண்டுபிடித்த ஆதிகாலத்து மனிதர், இப்போது உலகத்திலே வழங்குகிற ஒலி எழுத்துக்களைக் கண்டுபிடிக்கவில்லை. அஃதாவது, தனித்தனியாக ஒவ்வொரு ஒலிக்கும் ஒவ்வொரு எழுத்தைக் கண்டுபிடிக்கவில்லை. உருவங்களைச் சித்திரம் வரைவதுபோல் வரைந்து அவற்றின் மூலமாக அக்காலத்து மனிதர் ...

புதுமையும் பித்தமும் - 1 | க. நா. சுப்ரமண்யம்

புதுமைப்பித்தன் கதைகள் எல்லாவற்றையும் ஒரே நூலாக வெளியிட்டுப் பார்க்க வேண்டும் என்கிற ஆசையில் வெளிவருகிற புஸ்தகம் இது. அவர் எழுதிய கதைகளில் மிகச் சிறந்தவையெல்லாம் இதில் அடங்கியிருக்கின்றன. தொண்ணூற்றுச் சொச்சம் கதைகளில் ஒரு முப்பதுக்கும் அதிகமாகவே சிறந்த கதைகளாகவும் , இன்னும் 30 கதைகளுக்கு அதிகமாக நல்ல கதைகளாகவும் , மற்றவை சாதாரண தரத்தில் அமைந்தவை என்றும் பொதுவாகச் சொல்லலாம். இந்தப் புத்தகத்தில் அடங்காமல் விட்டுப்போன புதுமைப்பித்தன் எழுதிய சிறுகதைகள் சில - ஒன்றிரண்டு இருக்கலாம். அதிகம் போனால் நாலைந்தும் இருக்கலாம் - அவை கிடைத்தால் அவற்றையும் மறுபதிப்பில் சேர்த்துக்கொள்வார்கள் பிரசுரகர்த்தாக்கள் என்று நாம் நம்பலாம். சிறுகதைகள் மட்டும் எழுதவில்லை புதுமைப்பித்தன். சில ஓரங்க நாடகங்கள் , மற்றும் இலக்கியப் பொதுக்கட்டுரைகள் , வேளூர் வெ. கந்தசாமிப்பிள்ளை என்ற புனைபெயரில் சில கவிதைகள் , இவை தவிர பல மொழிபெயர்ப்புகள் (அனேகமாகச் சிறுகதைகள் , ‘பிரேத மனிதன்’ என்கிற மேரி ஷெல்லியின் விஞ்ஞான நாவல் , குப்ரினின் ‘யாமா’வில் ஒரு பகுதி. இவற்றை மொழிபெயர்த்தார். அவருக்கு ஆங்கிலம் தவிர வேறு ஐரோப்பிய மொழிகள் த...