Skip to main content

மனமும் அதன் விளக்கமும் | இன நனவிலி மனம் | பெ. தூரன்

பிராய்டு என்ற உளவியலார் நனவிலி மனத்தைப் பற்றி ஆராய்ந்து உளப் பகுப்பியல் முறையைத் தோற்றுவித்தார் என்று கண்டோம். உளப்பகுப்பியலின் தந்தை அவரே. அவரோடு ஆட்லரும், யுங் என்பவரும் மாணவராகப் பல ஆண்டுகள் வேலை செய்தனர். பிறகு இருவரும் கொள்கை வேறுபாடுகளால் வேறு வேறாகப் பிரிந்தனர். ஆட்லரின் பிற்காலக் கருத்தைப் பற்றி முன்பே கூறப்பட்டுள்ளது. இங்கு யுங்கின் கொள்கையைச் சுருக்கமாக ஆராய்வோம்.
நனவிலி மனத்தைப் பிற்காலத்தில் பிராய்டு ‘இத்’ என்றும், அதில் எழும் ஆற்றலை ‘லிபிடோ’ (Libido) என்றும் குறிப்பிட்டார். லிபிடோ பாலியல்பு வாய்ந்தது என்றும், மனக் கோளாறுகளெல்லாம் இது ஒழுங்காக அமையாததால் ஏற்படுகின்றன என்றும், இந்தப் பாலியல்பு குழவிப் பருவ முதற்கொண்டே தொடங்குகிறதென்றும் கருதினார். நனவிலி மனம் குழவிப் பருவத்தில் சிறிதாக இருந்தபோதும், வயது ஆக ஆக அக்குழந்தைக்குத் தடைகளும் விதிகளும் பெருகுகின்ற காரணத்தினால் நனவிலி மனத்தில் பல விதமான இச்சைகளும் ஆர்வங்களும் மிகுதியாகி நனவிலி மனம் விரிவடைகின்றது. அதனால்தான் நனவிலி மனம் நனவு மனத்தினின்றும் வளர்ந்ததேயாகும் என்று பொதுப்படையாகக் கூறுவதுண்டு.
இக் கருத்தைப் பல நாள் ஆராய்ந்து பிராய்டின் கொள்கையினின்றும் மாறுபட்ட கருத்தை யுங் வெளியிட்டார். நனவிலி மனம் முற்றிலும் பாலியல்பு வாய்ந்தது என்பதை இவர் பிற்காலத்தில் ஒப்புக்கொள்ளவில்லை. லிபிடோ என்பது மனிதன் உயிர் வாழ விரும்பும் ஆர்வத்தையே குறிக்கிறது என்று இவர் கருதினர். மேலும் பிராய்டு குறிப்பிட்ட இனம் அல்லது தொகுப்பு நனவிலி மனத்தைப் பற்றி இவர் விரிவாக ஆராய்ந்து பல புதிய கருத்துகளை வெளியிட்டார். யுங்கின் கொள்கைப்படி நனவிலி மனத்தில் இரண்டு பகுதிகள் உண்டு. சமூகம் ஏற்றுக்கொள்ளாத இச்சைகள் அனுபவங்கள் ஒரு பகுதியில் இருக்கும். மற்றொரு பகுதியில் அவனுடைய மூதாதையர் அனுபவங்களும், அவர்களுடைய இச்சைகளும் மறைந்து கிடக்கும். யுங்கின் மற்றொரு முக்கியமான கருத்து “நனவு மனத்திலிருந்து நனவிலி மனம் தோன்றவில்லை; ஆனால் நனவிலி மனத்திலிருந்தே நனவு மனம் தோன்றுகிறது” என்பதாகும். உடல் அமைப்பு எவ்வாறு ஒருவனுடைய மூதாதையரின் உடலமைப்பை அடிப்படையாகக் கொண்டிருக்கிறதோ அதேபோல அவனுடைய மனத்தின் அமைப்பும் மூதாதையரின் மன அமைப்பைப் பொறுத்திருக்கிறதென்று யுங் கூறுகிறார். மனிதன் ஒரு பெரிய வண்டியைப் போன்றவன்; அந்த வண்டி அவனுடைய மூதாதையரையெல்லாம் சுமந்து செல்கிறது என்று இதை விளக்கிச் சொல்வதுண்டு.
நனவிலி மனத்தைப் பற்றி இவ்வாறு இரண்டு பகுதிகளாகக் கூறும்போது இங்கும் தனித்தனியாக இரண்டு பகுதிகள் இருப்பதில்லையென்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். மனத்தில் நனவு மனம், நனவிலி மனம் என்று தனித்தனிப் பகுதிகள் இல்லை என்று முன்பு அறிந்துகொண்டதைப் போலவே இங்கும் அறிந்துகொள்ள வேண்டும்.
நனவிலி மனத்திலே இரண்டு விதமான ஆற்றல்கள் உண்டு என்றும் யுங் கூறியுள்ளார். அனிமா (Anima) என்று ஒரு ஆற்றலையும், மற்றொரு ஆற்றலை நிழல் (Shadow) என்றும் அவர் வழங்கினர். அனிமா ஆற்றலானது ஒருவனுடைய அகத்தையும் அதன் வழியாக அவனுடைய ஆளுமையையும் மேலோங்கச் செய்கிறது. அனிமா ஆற்றல் ஒருவனிடத்தில் திறம்பட வேலை செய்தால் அவனுக்கு எந்தத் துறையில் திறமை இருக்கிறதோ, அந்தத் துறையில் அவன் சிறந்து விளங்குவான். கவிதை, இசை, சிற்பம் முதலான துறைகளில் புகழ்பெற அனிமா ஆற்றல் சிறப்பாக உதவுகிறது. அனிமா ஆற்றலுக்கு மாறான தன்மைகளை நிழலாற்றல் ஒருவனுடைய ஆளுமையில் தோற்றுவிக்கின்றது. காமுகனும், பிறரை வெறுப்பவனும் இந்த நிழல் ஆற்றலின் ஆதிக்கத்திலே இருப்பவர்கள் என்று கூறலாம்.
ஒருவனுடைய தனிப்பட்ட பிரச்சினைகளை ஆராய்வதோடு யுங் நின்றுவிடுவதில்லை. இந்தப் பிரபஞ்சத்தில் அம்மனிதனுக்கு உரித்தான இடத்தையும் அறிந்துகொள்ளுமாறு செய்ய அவர் முனைந்தார். ஆகையால் மனித மனத்தின் இன்னும் ஆழமான பகுதிக்கு யுங் செல்கிறார் என்று நாம் கூற முடியும். ஆதலால் அவர் மேல்நாட்டு உளவியலார்களின் திறமையைக் கொண்டிருப்பதோடு பாரத தேசத்து யோகிகளின் உள்ளுணர்வு ஆற்றலையும் கொண்டிருந்தார் எனலாம். வெளி உலகத்திலிருந்து ஒருவனுக்கு ஏற்படும் அனுபவங்களை அவர் தெரிந்துகொள்ள முடிந்ததோடு மனத்திலே ஒலிக்கும் உள் ஒலியையும், மனத்திலே ஒளி விடும் ஆன்மாவையும் அவர் விளக்கிக் கூற முயன்றார். அதனாலேயே அவருடைய முறை விஞ்ஞான அடிப்படையாக இல்லை என்று பலர் கருத இடமளித்தது. ஒருவன் தன் வாழ்க்கையிலே வெற்றி காணாது தோல்வியடைந்த முயற்சிகளுக்கு ஈடு செய்யவே நரம்புக் கோளாறுகளும், கனவுகளும், பொய்க் கற்பனைகளும் தோன்றுகின்றன என்று யுங் கருதினார். லிபிடோ என்பதை பிராய்டை விட மிக விரிவான பொருளில் இவர் வழங்கினார். நரம்புக் கோளாறுகளை வெளியுலக அனுபவங்களின் வாயிலாக மட்டும் இவர் விளக்குவதில்லை. ஒரு மனிதனுடைய தனித்தன்மை வெளியுலக வெற்றி தோல்விகளால் மட்டும் முன்னேற்றமடைவதில்லை என்றும் ஆன்மிக முன்னேற்றமும் அதற்குக் காரணம் என்றும் அவர் எண்ணினர். மேலைநாட்டு உளவியல் அறிஞர்கள் சடப்பொருளை மட்டும் ஆராய்ந்தார்கள். கீழ்நாட்டு யோகிகள் சடப்பொருளை மாயை என்று விலக்கிவிட்டு ஆன்மாவுக்கே முக்கியத்துவம் கொடுத்தார்கள். ஒருவனுடைய மனம் நல்ல முறையில் அமையவேண்டுமானால் இந்த இரண்டுமே மிக முக்கியம் என்று யுங் வலியுறுத்துகிறார், “நன்கு பண்பட்டு வளர்ந்த மனிதனொருவனுக்கு நனவு மனம் மிக விரிந்திருக்க வேண்டும். அவனுடைய நனவிலி மனம் மிகமிகச் சுருங்கி இருக்க வேண்டும்” என்று யுங் கூறியுள்ளார்.
ஒரு மனிதன் ஆரோக்கியமான மனத்தோடுகூடி இருக்கவேண்டுமானல் மதம் மிக முக்கியம் என்றும் யுங் கருதினார். மதமே ஒருவனுடைய ஆன்மிகத் தேவைகளை நிறைவேற்றுகிறது. மதப் பற்றுடைய வாழ்க்கை குறைந்து வருவதாலேயே மனத்திலே அமைதியின்மையும், மனக்கோளாறுகளும் பெருகி வருகின்றன என்று யுங் அழுத்தமாகக் கூறினார்.
மனிதன் எதேச்சையாகத் திரிந்து வாழ்வதற்காகப் படைக்கப்பட்டவன். அவன் இப்பொழுது பெரிய பெரிய நகரங்களில் புதிய சூழ்நிலைகளில் வாழவேண்டியிருக்கிறது. அவசரமும், பரபரப்பும், வேகமும் மிகுந்த இந்த வாழ்க்கையானது அவனுடைய அமைதிக்குப் பாதகமாக நின்று புதிய புதிய மனக்கோளாறுகளையும் மனநோய்களையும் விளைவிக்கின்றன. நாட்டுப் புறங்களிடையே வாழும் மக்களிடையேயும், ஆதிவாசிகளாக உள்ள மக்களிடையிலேயும் இத்தகைய கோளாறுகள் காணப்படினும் நகரத்தின் நாகரிக வாழ்க்கையில் உள்ளவர்களிடையே காணப்படுதைப் போல அத்தனை மிகுதியாக இக்கோளாறுகளை அவர்களிடையே காண முடியாது.
நரம்புக் கோளாறுகளையும், படபடப்பையும் கட்டுப்படுத்துவதற்கென்று நரம்புகளுக்கு மயக்கத்தை அளிக்கும் பலவகையான மருந்துகள் இக்காலத்தில் தோன்றியுள்ளன. உறக்கத்திற்காக உட்கொள்ளும் மாத்திரைகள் இல்லாவிட்டால் இன்று பலரால் இரவிலே உறங்கவே முடியாது என்ற நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. ஆகவே இந்த நிலைமை மாற வேண்டுமானல் மன அமைதிக்கான வழிகளை நாம் பின்பற்றவேண்டும். தியானம் என்பது மனத்திற்கு மிகப் பெரிய அமைதியளிக்கும் சாதனம் என்று ஞானிகள் பழங்காலத்திலிருந்தே கூறியுள்ளார்கள். இன்று மஹரிஷி மஹேஷ் யோகி என்ற பெரியார் இமயமலைச் சாரலிலே தியான நிலையம் ஒன்றை அமைத்து மக்களுக்குத் தியானத்தின் பெருமையை உணர்த்த முற்பட்டிருக்கின்றார். எளிதாக எல்லாரும் பின்பற்றக்கூடிய தியான முறையை அவர் வகுத்து அதில் மக்களுக்குப் பயிற்சியளித்து வருகிறார். உலகிலுள்ள பல நாட்டு மக்களும் அந்நிலையத்திற்கு வந்து பயிற்சி பெறுகிறார்கள்.
உலகப் புகழ்வாய்ந்த கலைஞர்களும் தங்களுடைய பழைய வாழ்க்கையிலே சலிப்படைந்து இந்தத் தியான நிலையத்தை நாடுகிறார்கள் என்றால் தியானத்தின் பெருமையை நாம் நன்கு அறிந்து கொள்ளலாம்.
ஆட்லரும், யுங்கும் பிராய்டின் கருத்துகளை முற்றிலும் ஏற்க மறுத்துத் தனித்தனியே பிரிந்து விட்டார்கள் என்பதைக் கண்டோம். பொதுவாகப் பார்க்குமிடத்து பிராய்டின் கருத்தே பெரியதோர் அளவில் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட போதிலும் யுங்கின் கொள்கையானது மேல்நாட்டு உலோகாயுதக் கொள்கைக்கும், கீழ்நாட்டு ஆன்மிகக் கொள்கைக்கும் பாலம் அமைத்து இரண்டையும் பிணைத்து இரண்டும் மனிதனுடைய முழுமையான வாழ்விற்குத் தேவையானவையே என்று காட்டுவதாக அமைந்துள்ளது.
ஆட்லரின் கொள்கை மிக எளிமையானது; சிக்கலற்றது; எல்லாருக்கும் எளிதில் புரியக் கூடியது. அதனால் பலர் அதை வரவேற்றார்கள். அதனாலும் பல நன்மைகள் உண்டாயின. யுங்கின் கொள்கை மதப் பற்றுடையவர்களுக்கு உகந்ததாகப்பட்டது. பொதுவாக இக்காலத்தில் இரண்டுமே மனப் பகுப்பியலை மேலும் விளக்க உதவின. யுங்கின் கொள்கை, மனத்தைப் பற்றி அறிய மனத்தின் ஆழத்திற்குள்ளே முழுகிப் பார்க்க உதவி செய்கின்றது என்று கூறலாம்.

Comments

Most Popular

இராவணன் இலங்கை - மயிலை சீனி. வேங்கடசாமி

தமிழ் நாட்டை அடுத்துள்ள இலங்கைத் தீவினை, இராவணன் ஆண்ட இலங்கை என்று மக்கள் கருதி வந்தனர்; வருகின்றனர். ஆழ்வார்களும் ஏனையோரும் இலங்கையைத் தென் இலங்கை என்று கூறியிருக்கிறபடியால், சிங்களத் தீவாகிய இலங்கைதான் இராவணன் ஆண்ட இலங்கை என மக்கள் தவறாகக் கருதி வருகின்றனர் போலும். 'தென் இலங்கை' என்பதற்குத் தமிழ் நாட்டிற்குத் தெற்கிலுள்ள இலங்கை என்று பொருள் கூறுவது சரித்திரத்துக்கு முரண்பட்டது. தென் இலங்கை என்பதற்கு, 'அயோத்திக்குத் தெற்கிலுள்ள இலங்கை' என்று பொருள் கொள்வதுதான் சரித்திரத்திற்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்தமானது. ஆனால், தமிழ் நாட்டை அடுத்துள்ள சிங்களத் தீவாகிய இலங்கைதான் இராவணன் ஆண்ட இலங்கை என்று பல நூற்றாண்டுகளாகக் கருதப்பட்டு வருகிறது. இத்தவறான கருத்து சங்க நூல்களிலும் இடம் பெற்றுவிட்டது. சங்க நூல்கள் கூறுவன தமிழ் நாட்டிலுள்ள கோடிக்கரை (தனுஷ்கோடி) என்னும் கடற்கரையருகில், ஓர் ஆலமரத்தின்கீழ் இராமர் தங்கி, சீதையை மீட்கும் வழியை வானர வீரர்களுடன் கலந்து யோசித்தார் என்று கடுவன் மள்ளனார் என்னும் புலவர் கூறுகிறார். "வென்வேற் கவுரியர் தொன்முது கோடி, முழங்கிரும் பெளவம...

மனமும் அதன் விளக்கமும் | கனவின் பொருள் | பெ. தூரன்

ப ல கனவுகள் சிக்கல் நிறைந்திருக்கின்றன; அவற்றில் தோன்றும் நிகழ்ச்சிகள் மேலாகப் பார்க்கும்போது பொருளற்றவைகளாகவும் இருக்கின்றன. கோ. என்பவர் கண்ட ஒரு கனவை இங்கே ஆராய்வோம். “ஏதோ ஒரு பெரிய கோயில். அங்கே நானும் என் நண்பர்கள் சி. வே. மா. ஆகிய மூவரும் சேர்ந்து ஒருவனைக் கொலை செய்தோம். அவனுடைய மூக்கை மாத்திரம் அறுத்துச் சந்தனத்தில் வைத்துச் சாமிக்கு வைத்தோம். பிணம் வெளியிலேயே கிடந்தது. சி. தான் மூக்கை அறுத்தவர். கடவுளைத் தொழுவதற்காகப் பலர் ஒரு மோட்டார்க் காரில் வந்தார்கள். உடனே நான் பிணத்தைத் துரக்கிக் கோபுரத்தின் மேல் வீசினேன். இதை எனது ஆசிரியர் ஒருவர் பார்த்துக் கொண்டார்.” “நான் ஒடி வந்துவிட்டேன். வழியில் என் நண்பர் வீ. யைச் சந்தித்து வேறொருவனிடம் சைக்கிள் வாங்கி இருவரும் ஏறிக்கொண்டு ஊருக்குச் சென்றோம். வழியில் சி. தம் அண்ணனிடம் ஒன்றும் நடக்காதது போல் வந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கொலை செய்துவிட்டு இவர் இவ்வளவு தாராளமாக வெளியில் நடமாடுகிறாரே என்று வியந்தேன்.” "நாங்கள் ஒரு சத்திரத்தில் புகுந்துகொண்டிருந்தோம். ஆனால் சி. வேறு சில நண்பர்களிடம் சாலையில் சென்றுகொண்டிருந்தார்.” ...

இலக்கிய விமரிசனம் - சில சிந்தனைகள் | க. நா. சுப்ரமண்யம்

எனக்கு இலக்கிய விமரிசனம் செய்வதிலே அவ்வளவாக நம்பிக்கை கிடையாது . இலக்கியத் துறைகளிலே சிலருக்குச் சில துறைகளில்தான் ஈடுபாடிருக்க முடியும் . எனக்குச் சிறுகதை , நாடகம் , நாவல் , கதை என்கிற துறைகளிலே ஈடுபாடு உண்டு . விமரிசனம் , கட்டுரை போன்ற துறைகளில் அவ்வளவாக ஈடுபாடு கிடையாதுதான் . எனினும் ஒரு இருபத்தைந்து வருஷங்களாகவே நான் இலக்கிய விமரிசனம் செய்துகொண்டு வரவேண்டியதாக இருந்திருக்கிறது . இஷ்டமில்லாமலேதான் நான் இலக்கிய விமரிசனம் செய்து கொண்டு வருகிறேன் - தவிர்க்க முடியாத நிர்ப்பந்தத்தினால் . சில சமயம் நான் ஆழந்தெரியாமல் காலை விட்டுவிடுவதும் உண்டு - ஆனால் நான் சொல்வதெல்லாவற்றையும் என்னளவில் உண்மையென்று நம்பித்தான் சொல்கிறேன் . என்னளவில் உண்மைதான் . அதனால் உங்களுக்கும் உண்மையாகத்தானே இருக்கவேண்டும் ? இலக்கிய விமரிசனத்தின் அவசியத்தைப்பற்றிப் பலரும் சொல்லிவிட்டார்கள் . அவசியம் என்று ஏற்றுக்கொள்ளுபவர்களும்கூட இன்று தமிழில் இலக்கியம் சரியானபடி வளர்ச்சியடையாத தோஷத்தினால் இலக்கிய விமரிசனத்துக்கு அவ்வளவாக அவசியமில்லை ...