Skip to main content

மனமும் அதன் விளக்கமும் | இன நனவிலி மனம் | பெ. தூரன்

பிராய்டு என்ற உளவியலார் நனவிலி மனத்தைப் பற்றி ஆராய்ந்து உளப் பகுப்பியல் முறையைத் தோற்றுவித்தார் என்று கண்டோம். உளப்பகுப்பியலின் தந்தை அவரே. அவரோடு ஆட்லரும், யுங் என்பவரும் மாணவராகப் பல ஆண்டுகள் வேலை செய்தனர். பிறகு இருவரும் கொள்கை வேறுபாடுகளால் வேறு வேறாகப் பிரிந்தனர். ஆட்லரின் பிற்காலக் கருத்தைப் பற்றி முன்பே கூறப்பட்டுள்ளது. இங்கு யுங்கின் கொள்கையைச் சுருக்கமாக ஆராய்வோம்.
நனவிலி மனத்தைப் பிற்காலத்தில் பிராய்டு ‘இத்’ என்றும், அதில் எழும் ஆற்றலை ‘லிபிடோ’ (Libido) என்றும் குறிப்பிட்டார். லிபிடோ பாலியல்பு வாய்ந்தது என்றும், மனக் கோளாறுகளெல்லாம் இது ஒழுங்காக அமையாததால் ஏற்படுகின்றன என்றும், இந்தப் பாலியல்பு குழவிப் பருவ முதற்கொண்டே தொடங்குகிறதென்றும் கருதினார். நனவிலி மனம் குழவிப் பருவத்தில் சிறிதாக இருந்தபோதும், வயது ஆக ஆக அக்குழந்தைக்குத் தடைகளும் விதிகளும் பெருகுகின்ற காரணத்தினால் நனவிலி மனத்தில் பல விதமான இச்சைகளும் ஆர்வங்களும் மிகுதியாகி நனவிலி மனம் விரிவடைகின்றது. அதனால்தான் நனவிலி மனம் நனவு மனத்தினின்றும் வளர்ந்ததேயாகும் என்று பொதுப்படையாகக் கூறுவதுண்டு.
இக் கருத்தைப் பல நாள் ஆராய்ந்து பிராய்டின் கொள்கையினின்றும் மாறுபட்ட கருத்தை யுங் வெளியிட்டார். நனவிலி மனம் முற்றிலும் பாலியல்பு வாய்ந்தது என்பதை இவர் பிற்காலத்தில் ஒப்புக்கொள்ளவில்லை. லிபிடோ என்பது மனிதன் உயிர் வாழ விரும்பும் ஆர்வத்தையே குறிக்கிறது என்று இவர் கருதினர். மேலும் பிராய்டு குறிப்பிட்ட இனம் அல்லது தொகுப்பு நனவிலி மனத்தைப் பற்றி இவர் விரிவாக ஆராய்ந்து பல புதிய கருத்துகளை வெளியிட்டார். யுங்கின் கொள்கைப்படி நனவிலி மனத்தில் இரண்டு பகுதிகள் உண்டு. சமூகம் ஏற்றுக்கொள்ளாத இச்சைகள் அனுபவங்கள் ஒரு பகுதியில் இருக்கும். மற்றொரு பகுதியில் அவனுடைய மூதாதையர் அனுபவங்களும், அவர்களுடைய இச்சைகளும் மறைந்து கிடக்கும். யுங்கின் மற்றொரு முக்கியமான கருத்து “நனவு மனத்திலிருந்து நனவிலி மனம் தோன்றவில்லை; ஆனால் நனவிலி மனத்திலிருந்தே நனவு மனம் தோன்றுகிறது” என்பதாகும். உடல் அமைப்பு எவ்வாறு ஒருவனுடைய மூதாதையரின் உடலமைப்பை அடிப்படையாகக் கொண்டிருக்கிறதோ அதேபோல அவனுடைய மனத்தின் அமைப்பும் மூதாதையரின் மன அமைப்பைப் பொறுத்திருக்கிறதென்று யுங் கூறுகிறார். மனிதன் ஒரு பெரிய வண்டியைப் போன்றவன்; அந்த வண்டி அவனுடைய மூதாதையரையெல்லாம் சுமந்து செல்கிறது என்று இதை விளக்கிச் சொல்வதுண்டு.
நனவிலி மனத்தைப் பற்றி இவ்வாறு இரண்டு பகுதிகளாகக் கூறும்போது இங்கும் தனித்தனியாக இரண்டு பகுதிகள் இருப்பதில்லையென்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். மனத்தில் நனவு மனம், நனவிலி மனம் என்று தனித்தனிப் பகுதிகள் இல்லை என்று முன்பு அறிந்துகொண்டதைப் போலவே இங்கும் அறிந்துகொள்ள வேண்டும்.
நனவிலி மனத்திலே இரண்டு விதமான ஆற்றல்கள் உண்டு என்றும் யுங் கூறியுள்ளார். அனிமா (Anima) என்று ஒரு ஆற்றலையும், மற்றொரு ஆற்றலை நிழல் (Shadow) என்றும் அவர் வழங்கினர். அனிமா ஆற்றலானது ஒருவனுடைய அகத்தையும் அதன் வழியாக அவனுடைய ஆளுமையையும் மேலோங்கச் செய்கிறது. அனிமா ஆற்றல் ஒருவனிடத்தில் திறம்பட வேலை செய்தால் அவனுக்கு எந்தத் துறையில் திறமை இருக்கிறதோ, அந்தத் துறையில் அவன் சிறந்து விளங்குவான். கவிதை, இசை, சிற்பம் முதலான துறைகளில் புகழ்பெற அனிமா ஆற்றல் சிறப்பாக உதவுகிறது. அனிமா ஆற்றலுக்கு மாறான தன்மைகளை நிழலாற்றல் ஒருவனுடைய ஆளுமையில் தோற்றுவிக்கின்றது. காமுகனும், பிறரை வெறுப்பவனும் இந்த நிழல் ஆற்றலின் ஆதிக்கத்திலே இருப்பவர்கள் என்று கூறலாம்.
ஒருவனுடைய தனிப்பட்ட பிரச்சினைகளை ஆராய்வதோடு யுங் நின்றுவிடுவதில்லை. இந்தப் பிரபஞ்சத்தில் அம்மனிதனுக்கு உரித்தான இடத்தையும் அறிந்துகொள்ளுமாறு செய்ய அவர் முனைந்தார். ஆகையால் மனித மனத்தின் இன்னும் ஆழமான பகுதிக்கு யுங் செல்கிறார் என்று நாம் கூற முடியும். ஆதலால் அவர் மேல்நாட்டு உளவியலார்களின் திறமையைக் கொண்டிருப்பதோடு பாரத தேசத்து யோகிகளின் உள்ளுணர்வு ஆற்றலையும் கொண்டிருந்தார் எனலாம். வெளி உலகத்திலிருந்து ஒருவனுக்கு ஏற்படும் அனுபவங்களை அவர் தெரிந்துகொள்ள முடிந்ததோடு மனத்திலே ஒலிக்கும் உள் ஒலியையும், மனத்திலே ஒளி விடும் ஆன்மாவையும் அவர் விளக்கிக் கூற முயன்றார். அதனாலேயே அவருடைய முறை விஞ்ஞான அடிப்படையாக இல்லை என்று பலர் கருத இடமளித்தது. ஒருவன் தன் வாழ்க்கையிலே வெற்றி காணாது தோல்வியடைந்த முயற்சிகளுக்கு ஈடு செய்யவே நரம்புக் கோளாறுகளும், கனவுகளும், பொய்க் கற்பனைகளும் தோன்றுகின்றன என்று யுங் கருதினார். லிபிடோ என்பதை பிராய்டை விட மிக விரிவான பொருளில் இவர் வழங்கினார். நரம்புக் கோளாறுகளை வெளியுலக அனுபவங்களின் வாயிலாக மட்டும் இவர் விளக்குவதில்லை. ஒரு மனிதனுடைய தனித்தன்மை வெளியுலக வெற்றி தோல்விகளால் மட்டும் முன்னேற்றமடைவதில்லை என்றும் ஆன்மிக முன்னேற்றமும் அதற்குக் காரணம் என்றும் அவர் எண்ணினர். மேலைநாட்டு உளவியல் அறிஞர்கள் சடப்பொருளை மட்டும் ஆராய்ந்தார்கள். கீழ்நாட்டு யோகிகள் சடப்பொருளை மாயை என்று விலக்கிவிட்டு ஆன்மாவுக்கே முக்கியத்துவம் கொடுத்தார்கள். ஒருவனுடைய மனம் நல்ல முறையில் அமையவேண்டுமானால் இந்த இரண்டுமே மிக முக்கியம் என்று யுங் வலியுறுத்துகிறார், “நன்கு பண்பட்டு வளர்ந்த மனிதனொருவனுக்கு நனவு மனம் மிக விரிந்திருக்க வேண்டும். அவனுடைய நனவிலி மனம் மிகமிகச் சுருங்கி இருக்க வேண்டும்” என்று யுங் கூறியுள்ளார்.
ஒரு மனிதன் ஆரோக்கியமான மனத்தோடுகூடி இருக்கவேண்டுமானல் மதம் மிக முக்கியம் என்றும் யுங் கருதினார். மதமே ஒருவனுடைய ஆன்மிகத் தேவைகளை நிறைவேற்றுகிறது. மதப் பற்றுடைய வாழ்க்கை குறைந்து வருவதாலேயே மனத்திலே அமைதியின்மையும், மனக்கோளாறுகளும் பெருகி வருகின்றன என்று யுங் அழுத்தமாகக் கூறினார்.
மனிதன் எதேச்சையாகத் திரிந்து வாழ்வதற்காகப் படைக்கப்பட்டவன். அவன் இப்பொழுது பெரிய பெரிய நகரங்களில் புதிய சூழ்நிலைகளில் வாழவேண்டியிருக்கிறது. அவசரமும், பரபரப்பும், வேகமும் மிகுந்த இந்த வாழ்க்கையானது அவனுடைய அமைதிக்குப் பாதகமாக நின்று புதிய புதிய மனக்கோளாறுகளையும் மனநோய்களையும் விளைவிக்கின்றன. நாட்டுப் புறங்களிடையே வாழும் மக்களிடையேயும், ஆதிவாசிகளாக உள்ள மக்களிடையிலேயும் இத்தகைய கோளாறுகள் காணப்படினும் நகரத்தின் நாகரிக வாழ்க்கையில் உள்ளவர்களிடையே காணப்படுதைப் போல அத்தனை மிகுதியாக இக்கோளாறுகளை அவர்களிடையே காண முடியாது.
நரம்புக் கோளாறுகளையும், படபடப்பையும் கட்டுப்படுத்துவதற்கென்று நரம்புகளுக்கு மயக்கத்தை அளிக்கும் பலவகையான மருந்துகள் இக்காலத்தில் தோன்றியுள்ளன. உறக்கத்திற்காக உட்கொள்ளும் மாத்திரைகள் இல்லாவிட்டால் இன்று பலரால் இரவிலே உறங்கவே முடியாது என்ற நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. ஆகவே இந்த நிலைமை மாற வேண்டுமானல் மன அமைதிக்கான வழிகளை நாம் பின்பற்றவேண்டும். தியானம் என்பது மனத்திற்கு மிகப் பெரிய அமைதியளிக்கும் சாதனம் என்று ஞானிகள் பழங்காலத்திலிருந்தே கூறியுள்ளார்கள். இன்று மஹரிஷி மஹேஷ் யோகி என்ற பெரியார் இமயமலைச் சாரலிலே தியான நிலையம் ஒன்றை அமைத்து மக்களுக்குத் தியானத்தின் பெருமையை உணர்த்த முற்பட்டிருக்கின்றார். எளிதாக எல்லாரும் பின்பற்றக்கூடிய தியான முறையை அவர் வகுத்து அதில் மக்களுக்குப் பயிற்சியளித்து வருகிறார். உலகிலுள்ள பல நாட்டு மக்களும் அந்நிலையத்திற்கு வந்து பயிற்சி பெறுகிறார்கள்.
உலகப் புகழ்வாய்ந்த கலைஞர்களும் தங்களுடைய பழைய வாழ்க்கையிலே சலிப்படைந்து இந்தத் தியான நிலையத்தை நாடுகிறார்கள் என்றால் தியானத்தின் பெருமையை நாம் நன்கு அறிந்து கொள்ளலாம்.
ஆட்லரும், யுங்கும் பிராய்டின் கருத்துகளை முற்றிலும் ஏற்க மறுத்துத் தனித்தனியே பிரிந்து விட்டார்கள் என்பதைக் கண்டோம். பொதுவாகப் பார்க்குமிடத்து பிராய்டின் கருத்தே பெரியதோர் அளவில் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட போதிலும் யுங்கின் கொள்கையானது மேல்நாட்டு உலோகாயுதக் கொள்கைக்கும், கீழ்நாட்டு ஆன்மிகக் கொள்கைக்கும் பாலம் அமைத்து இரண்டையும் பிணைத்து இரண்டும் மனிதனுடைய முழுமையான வாழ்விற்குத் தேவையானவையே என்று காட்டுவதாக அமைந்துள்ளது.
ஆட்லரின் கொள்கை மிக எளிமையானது; சிக்கலற்றது; எல்லாருக்கும் எளிதில் புரியக் கூடியது. அதனால் பலர் அதை வரவேற்றார்கள். அதனாலும் பல நன்மைகள் உண்டாயின. யுங்கின் கொள்கை மதப் பற்றுடையவர்களுக்கு உகந்ததாகப்பட்டது. பொதுவாக இக்காலத்தில் இரண்டுமே மனப் பகுப்பியலை மேலும் விளக்க உதவின. யுங்கின் கொள்கை, மனத்தைப் பற்றி அறிய மனத்தின் ஆழத்திற்குள்ளே முழுகிப் பார்க்க உதவி செய்கின்றது என்று கூறலாம்.

Comments

Most Popular

கு. ப. ராஜகோபாலன் என்கிற முழுமை | க. நா. சுப்ரமண்யம்

கு. ப. ராஜகோபாலனின் கதைகளை , அவை எழுதப்பட்டு சற்றேறக் குறைய ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு இன்று படித்துப் பார்க்கும்போது கூட அவர் லாகவமும் , கதை நடத்தும் திறனும் , உருவ , கருத்து அமைதியுடன் மிகவும் சிறப்பாகவே உள்ளத்தில் தட்டுகின்றன. வாழ்க்கையை முழுப்பார்வையுடன் பார்ப்பது அவர்க்கு மிகவும் சிறிய கதைகளிலும் கூடச் சாத்தியமாக இருந்திருக்கிறது. ஆண் , பெண் உறவுகளை , பால் உணர்ச்சிகளை அப்பட்டமாக , உரக்க , மனத்தையும் கண்ணையும் ஒருங்கே உறுத்துகிற மாதிரிச் சொல்வது இன்று பலருக்கும் கைவந்த கலையாக இருக்கிறது. ஆனால் , அதையே சூக்ஷ்மமாகச் செய்கிற காரியம் , கலையுணர்ச்சியுடன் முழுவதும் சொல்லாமல் சொல்லிவிடுகிற காரியம் கு.ப.ரா . வுக்கு மிகவும் சிறப்பாக கைவந்திருந்ததை இன்று படிக்கும்போதும் உணர முடிகிறது. இந்த மென்மையும் , கலை உணர்ச்சியும் பக்கம் பக்கமாக பச்சையாக எதை எதையோ எழுதுகிற தமிழ் எழுத்தாளர்களுக்கு எட்டாத ஒரு விஷயம். அவர்கள் கு.ப.ரா . விடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். புத்தனுடைய துறவுக்கு அசுவகோஷன் முதல் எத்தனையோ இலக்கியாசிரியர்கள் பலர் காரணங்கள் கண்டு சொல்லிவிட்டார்கள். மூப்பு , நோய் , சாவு...

எழுத்து ஆக்கம் - மயிலை சீனி. வேங்கடசாமி

பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னே மனிதன் பேசக் கற்றுக்கொண்டான். அஃதாவது, தன் எண்ணங்களைப் பேச்சின் மூலமாகப் பிறருக்குத் தெரிவிக்கக் கற்றுக் கொண்டான். மனிதன் கற்றுக்கொண்ட பேச்சு அவனை மிருகத் தன்மையிலிருந்து மனிதத் தன்மைக்கு உயர்த்திவிட்டது. பின்னும், பல காலம் சென்ற பிறகு மனிதன், தன் எண்ணங் களையும் கருத்துக்களையும், எழுத்து மூலமாகப் பிறருக்குத் தெரிவிக்க முயற்சி செய்தான், முயற்சி செய்து அதில் வெற்றி அடைந்தான். எழுத்துக்களைக் கண்டுபிடித்து அதன் மூலமாகத் தன் கருத்துக்களை மற்றவர்களுக்குத் தெரிவிக்கக் கற்றுக்கொண்ட வித்தையானது, மனிதனை மிக உயர்ந்த நாகரிகத்தை அடையச் செய்துவிட்டது. எழுதப் படிக்கக் கற்றுக்கொள்ளாமல், வெறும் பேச்சோடு மட்டும் நின்று விட்டிருந்தால், இப்போது மனிதன் அடைந்திருக்கிற உயர்ந்த நாகரிக நிலையை அடைந்திருக்க முடியாது. எழுத்தைக் கண்டுபிடித்த ஆதிகாலத்து மனிதர், இப்போது உலகத்திலே வழங்குகிற ஒலி எழுத்துக்களைக் கண்டுபிடிக்கவில்லை. அஃதாவது, தனித்தனியாக ஒவ்வொரு ஒலிக்கும் ஒவ்வொரு எழுத்தைக் கண்டுபிடிக்கவில்லை. உருவங்களைச் சித்திரம் வரைவதுபோல் வரைந்து அவற்றின் மூலமாக அக்காலத்து மனிதர் ...

மனமும் அதன் விளக்கமும் | கனவின் பொருள் | பெ. தூரன்

ப ல கனவுகள் சிக்கல் நிறைந்திருக்கின்றன; அவற்றில் தோன்றும் நிகழ்ச்சிகள் மேலாகப் பார்க்கும்போது பொருளற்றவைகளாகவும் இருக்கின்றன. கோ. என்பவர் கண்ட ஒரு கனவை இங்கே ஆராய்வோம். “ஏதோ ஒரு பெரிய கோயில். அங்கே நானும் என் நண்பர்கள் சி. வே. மா. ஆகிய மூவரும் சேர்ந்து ஒருவனைக் கொலை செய்தோம். அவனுடைய மூக்கை மாத்திரம் அறுத்துச் சந்தனத்தில் வைத்துச் சாமிக்கு வைத்தோம். பிணம் வெளியிலேயே கிடந்தது. சி. தான் மூக்கை அறுத்தவர். கடவுளைத் தொழுவதற்காகப் பலர் ஒரு மோட்டார்க் காரில் வந்தார்கள். உடனே நான் பிணத்தைத் துரக்கிக் கோபுரத்தின் மேல் வீசினேன். இதை எனது ஆசிரியர் ஒருவர் பார்த்துக் கொண்டார்.” “நான் ஒடி வந்துவிட்டேன். வழியில் என் நண்பர் வீ. யைச் சந்தித்து வேறொருவனிடம் சைக்கிள் வாங்கி இருவரும் ஏறிக்கொண்டு ஊருக்குச் சென்றோம். வழியில் சி. தம் அண்ணனிடம் ஒன்றும் நடக்காதது போல் வந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கொலை செய்துவிட்டு இவர் இவ்வளவு தாராளமாக வெளியில் நடமாடுகிறாரே என்று வியந்தேன்.” "நாங்கள் ஒரு சத்திரத்தில் புகுந்துகொண்டிருந்தோம். ஆனால் சி. வேறு சில நண்பர்களிடம் சாலையில் சென்றுகொண்டிருந்தார்.” ...