Skip to main content

ஆரோக்கிய நிகேதனம் - படிக்குமுன்...


('ஆரோக்கிய நிகேதனம்' நாவல் அமேசான் கிண்டிலில் ஜூலை 23ஆம் தேதி, தாராசங்கர் பந்த்யோபாத்யாய் அவர்களின் பிறந்த நாளில் வெளியாகிறது. இந்த நாவலுக்கு அதன் மொழிபெயர்ப்பாளர் த. நா. குமாரஸ்வாமி எழுதிய முன்னுரை இது.)

அகில இந்திய எழுத்தாளர்கள் மாநாடு 1959ஆம் ஆண்டு சென்னையில் கூடியது. ஸ்ரீ தாராசங்கர் பந்த்யோபாத்யாய் அதற்குத் தலைமை தாங்கினார். நிகழ்ச்சி முடிந்ததும் அவருடன் அளவளாவ அவருடைய அறைக்குச் சென்றேன். அவருடைய நவீனங்களில் ஒன்றான ஆகுன், அப்பொழுது என்னுடன் வைத்திருந்தேன். (இந்நூலை அக்கினி என்ற பெயரில் 1943ஆம் ஆண்டில் மொழிபெயர்த்து நான் தாராசங்கரை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தினேன்) அதனை அவரிடம் தந்து அவர் தம் நினைவை நான் போற்றும் வகையில் ஒரு நல்லுரையை அதில் பதிக்கும்படி வேண்டினேன். அந்நூலின் உட்புறமமாக வங்காளிப் பத்திரிகையொன்றில் வந்த அவர் உருவப்படத்தை ஒட்டிவைத்திருப்பதைப் பார்த்து மென்னகை பூத்து அவர், “எத்தனை வருஷங்களுக்கு முன் எடுத்த என் படம்! அந்த நாட்கள் மறைந்துவிட்டன. இப்போது நான் எவ்வளவோ மாறிப்போய்விட்டேன். இன்று அந்த தாராசங்கரின் மெலிந்த நிழலே நான் என்றதும் அவருடைய கண்கள் கடந்த அத்தொலைவு நாட்களை நோக்கி நிலைத்தன. அந்தப் படத்தின் கீழேயே ஒரு கவிதையை வரைந்து தம் முத்திரையையும் வைத்தார்[1].

அன்னாருடைய மற்றொரு சிறந்த நவீனமான ராஇ கமல்என்ற நூலைப் பின்னர் கமலினி என்ற பெயரில் மொழிபெயர்த்து வெளியிட்டேன்.

ஆரோக்கிய நிகேதனம்என்ற அவருடைய இந்நவீனம் முற்றிலும் புது வகையானது. உலகத்துப் பேரிலக்கியங்களின் வரிசையில் இடம்பெறுவதற்கான தகுதியுடையது இது. இதுபோன்ற ஒரு ரசனையை உருவாக்க எழுத்தாளனுக்குத் தன் நாட்டைப்பற்றிய ஆழ்ந்த பரிச்சயம் வேண்டும்; பல்வேறு மக்களுடன் இழைந்து பழகி அவர்கள் நெஞ்சத்தைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் வேண்டும். இவற்றுடன் காவிய நோக்கும் கலந்துவிட்டால் அந்த எழுத்துச்சிற்பம் என்றும் அழியாது. ஜீவன் மஷாய் என்ற பாத்திரமே கதையில் ஊடுபாவாகப் பரவி நிற்கிறது. அவரின்றி இந்நவீனத்தில் ஒரு சிறு நிகழ்ச்சிகூட நகரவில்லை. எத்துணையோ தன்மையான மனிதர் அவருடன் மோதுகின்றனர். காந்தம்  இரும்புத்துகளை இழுத்துக்கொள்வது போல் மையமாக விளங்கும் அவரை நோக்கியே ஈர்க்கப்படுகின்றனர். சித்த வைத்தியர் ஜீவன் மஷாய் ஓர் உயர்வகைக் குணசித்திரம். ஆயிரக்கணக்கான நினைவோட்டங்கள் (Stream of consciousness) கலந்த ஆரோக்கிய நிகேதனம்எக்காலத்தும் படிப்பவர் உள்ளத்தில் ஆழப் பதியவல்லது. நமது நாட்டுப் பண்டைய ஆயுர்வேத சித்த மருத்துவ முறைகள் பிற்போக்கானவை, வெறும் பச்சிலைச் சாறும் செங்கல் சூரணமும் கொண்ட விஷயங்கள் என ஒருவகை அலட்சிய மனப்பான்மை பரவியுள்ளது. இந்த நூலைப் படித்தால் இம்மருள் முற்றிலும் விலகும்.

1955இல் இந்நூலுக்கு ரவீந்திர புரஸ்கார் (பரிசு) கிடைத்தது. மறு ஆண்டே சாகித்திய அக்காதெமியும் இதற்குத் தன் பரிசை வழங்கியது. சரத் சந்திரருக்குப் பிறகு வங்க இலக்கிய பீடத்தில் அமர்ந்து அழியா பல இலக்கியங்களைப் படைத்த இவர் இன்று நம்மிடையே இல்லை. அன்னாருடைய இந்நூலைத் தமிழ் வடிவில் தருவதற்கு ஆதரவு தந்த சாகித்திய அக்காதெமியாருக்கு எனது நன்றி. எனது விருப்பம் போல் இதனைச் செம்மையாக அச்சுருவில் வருவதற்குத் துணை நின்ற ஜயம் கம்பனியாருக்கு நான் என்றும் கடமைப்பட்டவனாவேன். தமிழ் ஆர்வலர் இதனை ஏற்பரென நம்புகின்றேன்.

சென்னை-35
16-5-1972
தண்டலம் நா. குமாரஸ்வாமி

[1] ஆமார் புராதந கியேச்சே ஹாராயே

ஸந்த்யார் மத்யாஹ்நே கே திபே பிராயே

- தாராசங்கர்.

Comments

Most Popular

கு. ப. ராஜகோபாலன் என்கிற முழுமை | க. நா. சுப்ரமண்யம்

கு. ப. ராஜகோபாலனின் கதைகளை , அவை எழுதப்பட்டு சற்றேறக் குறைய ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு இன்று படித்துப் பார்க்கும்போது கூட அவர் லாகவமும் , கதை நடத்தும் திறனும் , உருவ , கருத்து அமைதியுடன் மிகவும் சிறப்பாகவே உள்ளத்தில் தட்டுகின்றன. வாழ்க்கையை முழுப்பார்வையுடன் பார்ப்பது அவர்க்கு மிகவும் சிறிய கதைகளிலும் கூடச் சாத்தியமாக இருந்திருக்கிறது. ஆண் , பெண் உறவுகளை , பால் உணர்ச்சிகளை அப்பட்டமாக , உரக்க , மனத்தையும் கண்ணையும் ஒருங்கே உறுத்துகிற மாதிரிச் சொல்வது இன்று பலருக்கும் கைவந்த கலையாக இருக்கிறது. ஆனால் , அதையே சூக்ஷ்மமாகச் செய்கிற காரியம் , கலையுணர்ச்சியுடன் முழுவதும் சொல்லாமல் சொல்லிவிடுகிற காரியம் கு.ப.ரா . வுக்கு மிகவும் சிறப்பாக கைவந்திருந்ததை இன்று படிக்கும்போதும் உணர முடிகிறது. இந்த மென்மையும் , கலை உணர்ச்சியும் பக்கம் பக்கமாக பச்சையாக எதை எதையோ எழுதுகிற தமிழ் எழுத்தாளர்களுக்கு எட்டாத ஒரு விஷயம். அவர்கள் கு.ப.ரா . விடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். புத்தனுடைய துறவுக்கு அசுவகோஷன் முதல் எத்தனையோ இலக்கியாசிரியர்கள் பலர் காரணங்கள் கண்டு சொல்லிவிட்டார்கள். மூப்பு , நோய் , சாவு...

எழுத்து ஆக்கம் - மயிலை சீனி. வேங்கடசாமி

பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னே மனிதன் பேசக் கற்றுக்கொண்டான். அஃதாவது, தன் எண்ணங்களைப் பேச்சின் மூலமாகப் பிறருக்குத் தெரிவிக்கக் கற்றுக் கொண்டான். மனிதன் கற்றுக்கொண்ட பேச்சு அவனை மிருகத் தன்மையிலிருந்து மனிதத் தன்மைக்கு உயர்த்திவிட்டது. பின்னும், பல காலம் சென்ற பிறகு மனிதன், தன் எண்ணங் களையும் கருத்துக்களையும், எழுத்து மூலமாகப் பிறருக்குத் தெரிவிக்க முயற்சி செய்தான், முயற்சி செய்து அதில் வெற்றி அடைந்தான். எழுத்துக்களைக் கண்டுபிடித்து அதன் மூலமாகத் தன் கருத்துக்களை மற்றவர்களுக்குத் தெரிவிக்கக் கற்றுக்கொண்ட வித்தையானது, மனிதனை மிக உயர்ந்த நாகரிகத்தை அடையச் செய்துவிட்டது. எழுதப் படிக்கக் கற்றுக்கொள்ளாமல், வெறும் பேச்சோடு மட்டும் நின்று விட்டிருந்தால், இப்போது மனிதன் அடைந்திருக்கிற உயர்ந்த நாகரிக நிலையை அடைந்திருக்க முடியாது. எழுத்தைக் கண்டுபிடித்த ஆதிகாலத்து மனிதர், இப்போது உலகத்திலே வழங்குகிற ஒலி எழுத்துக்களைக் கண்டுபிடிக்கவில்லை. அஃதாவது, தனித்தனியாக ஒவ்வொரு ஒலிக்கும் ஒவ்வொரு எழுத்தைக் கண்டுபிடிக்கவில்லை. உருவங்களைச் சித்திரம் வரைவதுபோல் வரைந்து அவற்றின் மூலமாக அக்காலத்து மனிதர் ...

புதுமையும் பித்தமும் - 1 | க. நா. சுப்ரமண்யம்

புதுமைப்பித்தன் கதைகள் எல்லாவற்றையும் ஒரே நூலாக வெளியிட்டுப் பார்க்க வேண்டும் என்கிற ஆசையில் வெளிவருகிற புஸ்தகம் இது. அவர் எழுதிய கதைகளில் மிகச் சிறந்தவையெல்லாம் இதில் அடங்கியிருக்கின்றன. தொண்ணூற்றுச் சொச்சம் கதைகளில் ஒரு முப்பதுக்கும் அதிகமாகவே சிறந்த கதைகளாகவும் , இன்னும் 30 கதைகளுக்கு அதிகமாக நல்ல கதைகளாகவும் , மற்றவை சாதாரண தரத்தில் அமைந்தவை என்றும் பொதுவாகச் சொல்லலாம். இந்தப் புத்தகத்தில் அடங்காமல் விட்டுப்போன புதுமைப்பித்தன் எழுதிய சிறுகதைகள் சில - ஒன்றிரண்டு இருக்கலாம். அதிகம் போனால் நாலைந்தும் இருக்கலாம் - அவை கிடைத்தால் அவற்றையும் மறுபதிப்பில் சேர்த்துக்கொள்வார்கள் பிரசுரகர்த்தாக்கள் என்று நாம் நம்பலாம். சிறுகதைகள் மட்டும் எழுதவில்லை புதுமைப்பித்தன். சில ஓரங்க நாடகங்கள் , மற்றும் இலக்கியப் பொதுக்கட்டுரைகள் , வேளூர் வெ. கந்தசாமிப்பிள்ளை என்ற புனைபெயரில் சில கவிதைகள் , இவை தவிர பல மொழிபெயர்ப்புகள் (அனேகமாகச் சிறுகதைகள் , ‘பிரேத மனிதன்’ என்கிற மேரி ஷெல்லியின் விஞ்ஞான நாவல் , குப்ரினின் ‘யாமா’வில் ஒரு பகுதி. இவற்றை மொழிபெயர்த்தார். அவருக்கு ஆங்கிலம் தவிர வேறு ஐரோப்பிய மொழிகள் த...