Skip to main content

தீபாவளி யாருக்கு? - மகாத்மா காந்தி


சகோதர சகோதரிகளே,

இன்று தீபாவளி. இத்தருணத்தில் அனைவருக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இது இந்துக்களின் நாட்காட்டியில் ஒரு சிறப்பான நாள். விக்ரம் நாட்காட்டி1யின்படி நாளை, வியாழக்கிழமை புத்தாண்டு பிறக்கிறது. தீபாவளி ஒளிமயமாகக் கொண்டாடப்படுவது ஏன் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ராமனுக்கும் ராவணனுக்கும் இடையே நடந்த மகத்தான போரில் நன்மையின் சின்னமாக ராமனும் தீமையின் சின்னமாக ராவணனும் உள்ளனர். ராமன் ராவணனை வெற்றி கொண்டான். அந்த வெற்றி இந்தியாவில் ராம ராஜ்யத்தை நிறுவியது.

ஆனால் இன்று இந்தியாவில் ராம ராஜ்யம் இல்லை. அப்படியானால் நாம் எப்படி தீபாவளியைக் கொண்டாட முடியும்? யாரெல்லாம் ராமனைத் தன்னுள்ளேயே கொண்டிருக்கிறார்களோ அவர்கள்தான் இந்த வெற்றியைக் கொண்டாட முடியும். கடவுள் ஒருவரே நம் ஆன்மாவில் ஒளியேற்றக் கூடும். அந்த ஒளியே உண்மையான ஒளியாகும். இன்று பாடப்பட்ட பஜனை கடவுளைக் காண்பதற்கு அந்தக் கவிஞர்2 கொண்டிருந்த விருப்பத்தையே வலியுறுத்துகிறது. கூட்டம் கூட்டமாக மக்கள் செயற்கையான ஒளியைக் காணச் செல்கிறார்கள்; ஆனால், இன்று நமக்கு வேண்டியிருப்பது அகத்தில் ஏற்றப்படும் அன்பின் ஒளிதான். நாம் நமக்குள் அன்பின் ஒளியை ஏற்ற வேண்டும். அப்போதுதான் நாம் வாழ்த்துக்களுக்குத் தகுதியானவர்கள் ஆவோம். இன்று ஆயிரக்கணக்கானவர்கள் கடும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் நெஞ்சில் கை வைத்து இந்து, சீக்கியர், முஸ்லிம் என யாராக இருந்தாலும் துன்பத்தில் உள்ள அனைவரும் எம் சகோதர சகோதரிகள் என்று சொல்ல முடியுமா? இதுதான் உங்களுக்கான பரிசோதனை. ராமனும் ராவணனும் நன்மைக்கும் தீமைக்கும் நடக்கும் என்றுமே முடிவுறாத போராட்டத்தின் குறியீடுகள். உண்மையான ஒளி உள்ளத்திலிருந்து பிறப்பதே.

புண்பட்ட காஷ்மீரைக் கண்ட பண்டித ஜவஹர்லால் நேரு எவ்வளவு மன வருந்தத்தோடு திரும்பியிருக்கிறார்! அவரால் நேற்றும் இன்று பிற்பகலிலும் நடைபெற்ற செயற்குழுக் கூட்டங்களில் கலந்துகொள்ள இயலவில்லை. அவர் பாராமுல்லா4விலிருந்து எனக்கு மலர்களைக் கொண்டுவந்துள்ளார். நான் எப்போதும் இதுபோன்ற இயற்கையின் பரிசுகளை நேசிக்கிறேன். ஆனால் இன்று கொள்ளை, கலவரம் மற்றும் ரத்தக்களறிகள் அந்த எழில்மிகு நிலப்பரப்பின் அழகைக் குலைத்துள்ளன. ஜவஹர்லால் ஜம்முவுக்கும் சென்றார். அங்கும் நிலைமை நன்றாக இல்லை.

ஸ்ரீ ஷ்யாமள்தாஸ் காந்தி மற்றும் தேபர்பாய்5 ஆகியோர் சர்தார் படேலின் ஆலோசனைக் கோரியதால், அவர் ஜூனாகத் செல்ல வேண்டியிருந்தது. ஜின்னா, பூட்டோ இருவருமே கோபமாக இருக்கிறார்கள்; இந்திய அரசாங்கம் அவர்களை ஏமாற்றிவிட்டதாகவும் ஜூனாகத் (இந்திய) ஒன்றியத்தில் இணைய அழுத்தம் கொடுப்பதாகவும் நினைக்கிறார்கள்.

தேசத்தில் அமைதியையும் நல்லெண்ணத்தையும் நிலைநாட்டும் பொருட்டு, அவர்கள் மனதில் வெறுப்பையும் அவநம்பிக்கையையும் போக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. கடவுளின் இருப்பை உங்களுக்குள்ளேயே உணரவில்லை எனில், அற்ப உட்பூசல்களை மறக்கவில்லை எனில், காஷ்மீரிலோ ஜூனாகத்திலோ வெற்றி பெற்றும் பயனில்லை. அஞ்சி ஓடிய முஸ்லிம்கள் எல்லோரையும் திரும்ப வரவழைக்கும் வரை நாம் தீபாவளி கொண்டாட முடியாது. அதேபோல பாகிஸ்தானும் அங்கிருந்து ஓடிய இந்து மற்றும் சீக்கியர்களை அழைக்காமல் இருக்க முடியாது.

காங்கிரஸ் செயற்குழு விஷயத்தில் நான் என்ன செய்ய முடியும் என்பதை நாளை சொல்கிறேன். வியாழக்கிழமை பிறக்கும் புத்தாண்டில் உங்களுக்கும், இந்திய நாட்டுக்கும் மகிழ்ச்சியானதாக அமைய வேண்டும். கடவுள் உங்கள் அகத்தில் ஒளியேற்றட்டும்; அது பரஸ்பர உதவிக்கும் இந்தியாவுக்கும் மட்டுமன்றி இவ்வுலகம் முழுமைக்கும் சேவை புரியட்டும்.

(நவம்பர் 12, 1947 அன்று பிரார்த்தனை கூட்டத்தில் காந்தியின் பேச்சு)

1 குஜராத்தி நாட்காட்டியின்படி
2  ரஞ்சூத் தாஸ்.
3 பாராமுல்லா பயங்கர கலவரத்துக்குப் பின் இந்தியப் படையின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தது.
4 யு. என். தேபர் அல்லது உச்சரங்கராய் நவல்சங்கர் தேபர் (1905-77);

Comments

Most Popular

பழங்காலத்து எழுதுகருவிகள் - மயிலை சீனி. வேங்கடசாமி

இந்தக் காலத்திலே உலகம் முழுவதும் காகிதத்தாளும் பேனாவும் எழுதுகருவிகளாகப் பயன்பட்டுவருகின்றன. இவை எழுத்து வேலைக்குப் பெரிதும் வாய்ப்பாகவும் எளிதாகவும் அமைந்திருக்கின்றன. ஆனால், காகிதத்தாள் வருவதற்கு முன்பு, பண்டைக் காலத்திலே இவ்வளவு எளிதானவும் வாய்ப்பானவும் ஆன எழுதுகருவிகள் இல்லை. பண்டைக் காலத்திலே உலக மக்கள் எவ்விதமான எழுதுகருவிகளை வழங்கிவந்தார்கள் என்பது பற்றியும், பின்னர் காகிதத்தாள் எவ்வாறு நடைமுறையில் வந்தது என்பதைப் பற்றியும் ஈண்டுக் கூறுவோம். களிமண் சுவடிகள் சிறிய ஆசியா தேசத்தில் யூப்ரெடிஸ், டைகிரிஸ் ஆறுகள் பாய்கிற இடத்தில் இருந்த கால்டியா, ஸைரியா நாட்டு மக்கள் ஆதிகாலத்தில் களிமண்ணை எழுதுகருவியாகக் கொண்டிருந் தார்கள். களிமண்ணைப் பிசைந்து சிறுசிறு பலகைகளைப்போல் அமைத்து, அப்பலகை காய்ந்து போவதற்கு முன்னமே ஆணி போன்ற கருவியினால் எழுதி உலரவைத்துப் புத்தகமாக உபயோகித்தார்கள்; அவர்கள் எழுதிய எழுத்துகளுக்குக் கூனிபார்ம் எழுத்து என்று பெயர் கூறுவர். அவர்கள் எழுதிய களிமண் சுவடிகளைப் புத்தகசாலையில் வைத்துப் போற்றி னார்கள். அவ்வாறு போற்றி வைக்கப்பட்டிருந்த களிமண் சுவடிகள் பல, சமீப...

‘எழுத்து’ - 119 இதழ்களின் பொருளடக்கம்

எழுத்து 1: ஜனவரி 1959 எழுத்து வளர - தலையங்கம் சாகித்ய அகாடமி தமிழ்ப் பரிசு – க.நா.சு. பெட்டிக்கடை நாரணன் – ந. பிச்சமூர்த்தி கவிதை - மயன் சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்: ஒரு தொகுப்புக்கான சில குறிப்புகள் – க. நா. சுப்ரமண்யம் எழுதுவதெல்லாம்… - சிட்டி தாழை பூத்தது – பெ. கோ. சுந்தர்ராஜன் பாரதிக்குப்பின்-1: டாக்டர் சாமிநாதையர் – க.நா.சு. கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா விண்ணும் மண்ணும் – ந. சிதம்பரசுப்ரமண்யன் இன்றைய தமிழ் இலக்கிய விமர்சன தோரணை – சி. சு. செல்லப்பா வானம் - மயன் கெளமாரி – சாலிவாஹனன் உண்மைதேடியின் அனுபவ இலக்கிய வடிவங்கள் – தி. ஜானகிராமன்   எழுத்து 2: பிப்ரவரி 1959 வாடைக் காற்று - அசுவதி எழுத்தும் அதன் வாசகர்களும் இலக்கியமும் குழுவும் எஸ். வையாபுரிப்பிள்ளை – க. நா. சுப்ரமண்யம் திறனாய்வு - வில்லி அருளும் பொருளும் – ந. சிதம்பர சுப்ரமண்யன் கவி – வேதனை – தி. சோ. வேணுகோபாலன் தர்க்கம் - ஜெயகாந்தன் அன்று வருவாரோ ? – கு. அழகிரிசாமி வெற்றியின் பண்பு - பராங்குசம் தரிசனம் - மயன் கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா ...

சுதந்திரத்துக்குப் பிறகு மொழிபெயர்ப்புகள் | க. நா. சுப்ரமண்யம்

தமிழிலக்கியத்தில் போதுமான அளவுக்கு இலக்கியபூர்வமான மொழிபெயர்ப்பு நூல்கள் வந்துள்ளனவா என்று கேட்டால் , இல்லை என்றுதான் பதில் சொல்லவேண்டும். அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்கிற அளவுக்குக்கூட மொழிபெயர்ப்புகள் வெளியாகவில்லை. அதுவும் சமீபகாலத்தில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவில் எந்த மொழிபெயர்ப்பும் என் கண்ணில் படவில்லை. 1935 க்குப் பிறகு 1950 வரையில் சரசரவெனப் பல உலக இலக்கிய நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பெற்று ஓரளவுக்கு வாசகர்களிடையே ஓர் ஆர்வத்தையும் தூண்டின. அப்போதுங்கூட இலக்கிய வேகத்தை உண்டாக்கித் தாங்கக்கூடிய அளவுக்கு மொழிபெயர்ப்புகள் வந்ததாகச் சொல்வதற்கில்லை. அந்தக் காலகட்டத்தில் மொழிபெயர்ப்புகள் செய்து வெளியிட முன்வந்தவர்கள் ஓரளவுக்குத் தங்கள் ரசனையினால் தூண்டப்பெற்றவர்களாக , இந்த நூல் தமிழில் இருந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணி , அதனால் தங்களுக்கு லாபம் என்ன கிடைக்கும் என்கிற எண்ணத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு மொழிபெயர்ப்பதில் ஈடுபட்டனர். அந்த அளவுக்குச் சுதந்திரத்திற்குப்பின் ஓர் உந்துதல் , ஈடுபாடு இல்லை என்றுதான் சொல்லவேண்டும். பிளேட்டோ , ரூஸ்ஸோ , டால்ஸ்டாய் மற்றும் ப...