Skip to main content

அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 - முடிவுகள்

ழிசி மின்புத்தக வெளியீட்டகம் இலக்கிய விமர்சனப் போக்கை வளர்த்தெடுக்கும் வகையில் கடந்த மாதம் ஒரு போட்டியை அறிவித்திருந்தது. அமேசான் தளத்தில் வலையேற்றப்படும்  பொதுத்தள நூல்களிலிருந்து கிடைக்கும் வருவாயை வாசகர்களுக்கே திருப்பியளிக்க அழிசி விழைந்தது. ஆகஸ்ட் 15ஆம் தேதியுடன் நிறைவுபெற்ற இப்போட்டியில் மொத்தம் 24 கட்டுரைகள் வந்தன. 2 கட்டுரைகள் காலதமாதம் காரணமாக போட்டிக்கு பரிசீலிக்கவில்லை. 2 கட்டுரைகள் தமிழ் அல்லாது வேற்று மொழி நாவல் மற்றும் மொழியாக்க நாவல் குறித்தான விமர்சன கட்டுரையாக இருந்ததால் அவையும் பரிசீலிக்கப்படவில்லை. எனினும் விதிவிலக்காக ரமேஷ் கல்யாண் அவர்கள் எழுதிய 'When the river sleeps' எனும் ஆங்கில நாவலைப் பற்றிய கட்டுரை மிகச் சிறந்தது என்பதில் நடுவர் குழுவிற்கு ஒருமித்த கருத்து இருந்தது. ஆகவே அவ்வகையில் ரமேஷ் கல்யாண் அவர்களுக்கு அறிவிக்கப்படாத ஒரு சிறப்பு பரிசை நடுவர் குழுவின் பரிந்துரையின் பேரில் அழிசி அளிக்கிறது.

வந்திருந்த கட்டுரைகளில் பொதுவாக விமர்சன நோக்கு என்பது மிகக் குறைவாகவே புலப்பட்டது. வெவ்வேறு வகையான வாசிப்புகளே பெரும்பாலும் விமர்சனத்தின் பேரால் முன்வைக்கப்பட்டன. விமர்சன நோக்கு என்பதன் பொருள் ஆசிரியரையோ ஆக்கத்தையோ பூரணமாக நிராகரித்து தூற்றுவதும் அல்ல. தேர்ந்த விமர்சன கட்டுரை என்பது ஒரு படைப்பின் தனித்தன்மை என்ன? பேசுபொருள் என்ன? தவறவிட்டவை எவை? தமிழ் இலக்கிய வெளியில் அதன் இடம் என்ன? எந்த ஆக்கங்களுடன் ஒப்பிடத்தக்கது? ஆசிரியரின் முந்தைய ஆக்கங்களுடன் உள்ள தொடர்ச்சி என்ன? என எல்லாவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டும். புத்தக அறிமுகம் அல்லது வாசிப்பு என்ற நிலையில் கட்டுரைகள் நின்றுவிட்டன. எனினும் அவ்வகையில் சிறந்த வாசிப்புக் கோணங்களை முன்வைத்த கட்டுரைகள் பலவும் வாசிக்கக் கிடைத்தன. பரீசீலனைக்கு உட்பட்ட 20 கட்டுரைகளில் இருந்து பத்து கட்டுரைகளை கொண்ட நீள் பட்டியல் இடப்பட்டது.

1. காவல் கோட்டம் - ரஞ்சனி பாசு
2. வெள்ளையானை - சிவ மணியன்
3. நிழலின் தனிமை- ஜெயன் கோபாலகிருஷ்ணன்
4. கொற்றவை- கமல தேவி
5. மெனிஞ்சியோமா - அழகுநிலா
6. வெள்ளை யானை - ஜினுராஜ்
7. இமைக்கணம்- அகிலன்
8. நிழலின் தனிமை - கமலக்கண்ணன்
9. யாமம் - மகேந்திரன்
10. ஆப்பிளுக்கு முன் - சரளா முருகையன்

இந்த பத்து கட்டுரைகளும் பதாகை இணைய இதழில் அதன் ஆசிரியர்களின் விருப்பின் பேரில் பிரசுரிக்கப்படும். விவாதத்தின் ஊடாக இதிலிருந்து ஐந்து கட்டுரைகள் கொண்ட குறும்பட்டியல் தயாரிக்கப்பட்டது.

1. காவல் கோட்டம் - ரஞ்சனி பாசு
2. நிழலின் தனிமை - ஜெயன் கோபாலகிருஷ்ணன்
3. வெள்ளை யானை - சிவ மணியன்
4. யாமம் - மகேந்திரன்
5. ஆப்பிளுக்கு முன் - சரளா முருகையன்

தீவிர பரீசீலனைக்கு பின் ஐந்து நடுவர்களில் நால்வர் ரஞ்சனி பாசு எழுதிய காவல் கோட்டம் பற்றிய விமர்சனத்தை பரிசுக்கு உரியதாக தேர்ந்தெடுத்தார்கள். எழுத்தாளர் தூயன் சரளா முருகையன் அவர்களின் ஆப்பிளுக்கு முன் பற்றிய விமர்சன கட்டுரையை தேர்வு செய்தார். பெரும்பான்மையினரின் முடிவையொட்டி, போட்டிக்கு வந்ததிலேயே சிறந்த கட்டுரையாக ரஞ்சனி பாசு அவர்களின் காவல் கோட்டம் பற்றிய விமர்சனம் தேர்வு செய்யப்படுகிறது. விமர்சன நோக்கு குறைவாக வெளிப்பட்டாலும், மதுரையின் வரலாற்றுடன் நாவலை இணை வைத்து வாசிக்கும் செறிவான கட்டுரை.

பங்குகொண்ட அனைவருக்கும் நன்றி. போட்டியை வழிநடத்தி முடிவு அறிவுப்பு வரை துணை நின்ற சுரேஷ் பிரதீப், சுனில் கிருஷ்ணன், தூயன், ரியாஸ், மதியழகன் அடங்கிய நடுவர் குழுவுக்கு நன்றி. இப்போட்டி பற்றிய அறிவிப்பை தங்கள் இணையதளங்களில் வெளியிட்டு உதவிய எழுத்தாளர்கள் ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் ஆகியோருக்கும் நன்றி. கிண்டில் பரிசு பெறும் ரஞ்சனி பாசு மற்றும் சிறப்பு பரிசு பெறும் ரமேஷ் கல்யாண் ஆகியோருக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

அழிசி

Comments

Most Popular

பெரியம்மை | சுரேஷ்குமார இந்திரஜித்

பெரியப்பா அருமையாகப் பாடுவார். ‘முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே’ என்ற டி.எம்.எஸ். பாட்டை ஏற்ற இறக்கங்கள், பிர்காக்கள் பிசகாமல் பாடுவார். அப்போது பெரியம்மை முகத்தைப் பார்க்கவேண்டுமே. அவர் முகம் பெருமிதத்தோடும் பரவசத்தோடும் இருக்கும். பெரியம்மா முருங்கைக்காய் குழம்பு வைத்தால் நிறைய சாப்பிடவேண்டியிருக்கும். குழம்புகள் ருசியாகச் செய்வதற்கென்றே அவள் பிறந்திருக்கிறாள். கத்தரிக்காய் புளிக்குழம்பும் அப்படித்தான் அவ்வளவு ருசியாக இருக்கும். என் அம்மைக்கு இந்தக் குழம்புகள் ருசி கூடி வராது. சப்பென்று இருக்கும். நான் வேலை பார்க்கும் ஊரிலிருந்து வீட்டுக்கு வந்திருந்தேன். பெரியப்பாவைப் பார்ப்பதற்கும், அவர் பாட்டைக் கேட்பதற்கும் அவர் வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன். இது மார்கழி மாதம். வாசல்களில் கோலம் போட்டு பூசணிப்பூவை மையமாக வைத்திருந்தார்கள். அநேகமாக சில வீடுகள் நீங்கலாக எல்லா வீட்டு வாசல்களிலும் பூசணிப்பூவை வைத்திருந்தார்கள். செண்பகவல்லி மதினி வீட்டைக் கடக்கும்போது மல்லிகைப்பூ வாசம் வந்தது. மதினி வீட்டுக் காம்பவுண்டுக்குள் மல்லிகைப்பூ கொடிக்குப் பந்தல் போட்டிருந்ததைப் பார்த்தேன். வேல

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு , https://tinyurl.

மனமும் அதன் விளக்கமும் | இன நனவிலி மனம் | பெ. தூரன்

பி ராய்டு என்ற உளவியலார் நனவிலி மனத்தைப் பற்றி ஆராய்ந்து உளப் பகுப்பியல் முறையைத் தோற்றுவித்தார் என்று கண்டோம். உளப்பகுப்பியலின் தந்தை அவரே. அவரோடு ஆட்லரும், யுங் என்பவரும் மாணவராகப் பல ஆண்டுகள் வேலை செய்தனர். பிறகு இருவரும் கொள்கை வேறுபாடுகளால் வேறு வேறாகப் பிரிந்தனர். ஆட்லரின் பிற்காலக் கருத்தைப் பற்றி முன்பே கூறப்பட்டுள்ளது. இங்கு யுங்கின் கொள்கையைச் சுருக்கமாக ஆராய்வோம். நனவிலி மனத்தைப் பிற்காலத்தில் பிராய்டு ‘இத்’ என்றும், அதில் எழும் ஆற்றலை ‘லிபிடோ’ (Libido) என்றும் குறிப்பிட்டார். லிபிடோ பாலியல்பு வாய்ந்தது என்றும், மனக் கோளாறுகளெல்லாம் இது ஒழுங்காக அமையாததால் ஏற்படுகின்றன என்றும், இந்தப் பாலியல்பு குழவிப் பருவ முதற்கொண்டே தொடங்குகிறதென்றும் கருதினார். நனவிலி மனம் குழவிப் பருவத்தில் சிறிதாக இருந்தபோதும், வயது ஆக ஆக அக்குழந்தைக்குத் தடைகளும் விதிகளும் பெருகுகின்ற காரணத்தினால் நனவிலி மனத்தில் பல விதமான இச்சைகளும் ஆர்வங்களும் மிகுதியாகி நனவிலி மனம் விரிவடைகின்றது. அதனால்தான் நனவிலி மனம் நனவு மனத்தினின்றும் வளர்ந்ததேயாகும் என்று பொதுப்படையாகக் கூறுவதுண்டு. இக் கருத்தைப் பல ந