Skip to main content

சிந்தனை முதல்வன்

பாரதி, வ. வெ. சு. அய்யர் மறைவுக்குப் பின் தமிழ் மறுமலர்ச்சி இலக்கிய இயக்கம் நீண்ட இடைவெளி விட்டுப் போய்விடாமல், ஒரு தொடர்ச்சி கொடுத்த, பாரதியின் முதல் சீடன் வ.ரா. மறைந்து போய் பதினைந்து ஆண்டுகள் ஆகின்றன. பாரதியின் சீடனாக மட்டும் இருந்த்தோடு நின்றுவிடவில்லை வ.ரா. பாரதி புகழ் பரப்பினவர். தேசிய பாட்டுகளுக்காக மட்டும் தேசிய கவியாகவே கருதப்பட்டிருந்த பாரதியை இலக்கிய ரீதியாக கவிஞன் என்று தமிழகம் எங்கும் சுற்றி அவனது இலக்கிய சாதனையை எடுத்துச் சொன்னவர். வ.ரா. அதோடு பாரதியை மகாவி என்று முதன்முதலில் கூறியவரும் அவரே. இன்று பாரதிக்கு மண்டபம் கட்டி கவுரவித்து, மகாகவி என்று வாய்க்கு வாய் கூறுகிறது. ஆனால் முப்பதுகளில் இதைச் சொல்ல மதிப்பீட்டு சக்தியும் எதிர்காலப் பார்வையும் அவர் ஒருவருக்குத்தான் இருந்தது. அந்த வ.ரா.வை தமிழகம் ஒரு கணம் நினைத்துக்கொள்ளத் தயங்குகிறது. மறுக்கிறதா மறக்க விரும்புகிறதா தெரியவில்லை.

பாரதி மீது காட்டிய இலக்கிய அக்கறைக்காக மட்டும் எழுத்து அவரைப் 'பெரியவன்' என்று பாராட்டிவிடாது. பாரதி வழியிலே குட்டி பதினாறடியாக பாய்ந்து தமிழ் இலக்கியத்தைத் தானும் வளப்படுத்தி ஒரு படைதிரட்டி வலுப்படுத்தச் செய்ததுக்காகவே வ.ரா. 'பெரிய எழுத்தாளன்'. பாரதியின் சீடன் மணிக்கொடித் தலைவன் ஆனான். அவர் பேனாவிலே வளர்ந்த மணிக்கொடி ஒரு பத்திரிகையாக மட்டும் இல்லை. ஸ்தாபனமாக மட்டும் இல்லை. ஒரு இயக்கமாகவே இருந்தது. தமிழ் இலக்கியம் அதுவரை காணாத சில இலக்கிய உருவங்கள் பிறக்க, வளர பின்னாலும் உண்டாக ஏற்பட வகை செய்த ஒரு இலக்கியத் தலைவன் வ.ரா. 'தமிழ்நாட்டில் ஆழ்ந்த கருத்துக்களோடு எழுதுகிற முதல் தரமான எழுத்தாளர் வ.ரா.' என்பது அவரது தோழர் டி. எஸ். சொக்கலிங்கம் கருத்து. ந. பிச்சமூர்த்தி 'கொள்கைகளுடன் பழகியவர் வ.ரா.' என்று கூறி இருக்கிறார். எழுத்தாளர்களின் எழுத்தாளர் என்று கல்கியே குறிப்பிட்டிருக்கிறார். பாரதிக்குப் பின் தமிழனுக்காக சிந்தித்தவர் வ.ரா. இன்னும் தமிழ் உரைநடையை புதுப்பித்தவர் வ.ரா. அந்த வ.ரா.வை தமிழகம் நினைக்கிறதா?

மணிக்கொடி கோஷ்டி, மணிக்கொடி பரப்பரை, மணிக்கொழி வழி பத்திரிகை என்பதுக்கெல்லாம் மூலவறான அந்த இலக்கியத் தலைவனுக்கு அவன் காட்டிய வழியில் செல்லும் 'எழுத்து' தன் இலக்கிய வணக்கத்தைச் செலுத்திக் கொள்கிறது.

- ‘எழுத்து’ (ஆகஸ்ட், செப்டம்பர் 66) இதழில் வெளியான தலையங்கம்

விரைவில் வெளிவரும் 'சிந்தனை முதல்வன்: வ.ரா. நினைவோடை' மின் நூலிலிருந்து

Comments

Most Popular

மனமும் அதன் விளக்கமும் | உள்ளக் கிளர்ச்சி | பெ. தூரன்

ம னம் என்பது மாயமாக இருந்தாலும் அதில் எத்தனை எத்தனை குமுறல்கள், கொந்தளிப்புகள், கிளர்ச்சிகள் தோன்றுகின்றன! சினம் பிறக்கிறது, அச்சம் உண்டாகிறது - இப்படி எத்தனை விதமான அனுபவங்கள்! சினம், அச்சம், காதல், காமம், துக்கம், வெறுப்பு முதலியவைகளுக்கு உள்ளக் கிளர்ச்சிகள் என்று பெயர். குழந்தை அழுகிறது; அடுத்த விநாடியிலே மகிழ்ச்சியால் சிரிக்கிறது. குழந்தைகள் தங்கள் உள்ளக் கிளர்ச்சிகளை உடனே வெளிப்படுத்திவிடுகின்றன. விரைவிலே அவை மறைந்தும் போகின்றன. கண்ணம்மா ஓடிவருகிருள். “அம்மா, அடுத்த வீட்டுக் கிட்டுவுக்கு மிட்டாய் கொடுக்க வேண்டாம்” என்று அவன் மேலே வெறுப்போடு பேசுகிறாள். ஆனால் சிறிது நேரத்திற்குள்ளே இரண்டு பேரும் சேர்ந்து விளையாடத் தொடங்கி விடுகிறார்கள். கண்ணம்மா தன்னிடமிருந்த் மிட்டாயை அவனுக்குக் கொடுக்கிறாள். கிட்டுவின் மேல் ஏற்பட்டிருந்த வெறுப்பை அவள் மறந்தே விடுகிறாள். இந்தக் குழந்தைகளைப் போல் உலக மக்கள் இருக்கக்கூடாதா என்றுகூடச் சொல்லத் தோன்றுகிறது. ஆனால் மனிதன் தனது உள்ளக் கிளர்ச்சிகள் அனைத்தையும் குழந்தைகளைப்போலத் திடீர் திடீரென்று உடனே வெளிப்படுத்தலாமா? சமூக வாழ்க்கையிலே அது முறையா...

சங்கரதாஸ் சுவாமிகள் வரலாறு - அவ்வை டி.கே. சண்முகம்

நாடகத் தமிழை வளர்த்த தந்தை அவர்; நாடகாசிரியர்கள் பலருக்குப் பேராசிரியர் அவர். சென்ற ஐம்பது ஆண்டுகளுக்கிடையே அவரது பாடல்களையோ வசனங்களையோ உபயோகிக்காத நடிக நடிகையர் தமிழ் நாடக உலகில் இல்லையென்றே சொல்லிவிடலாம். நாடக உலகம் அப்பெரியாரைத் தமிழ் நாடகத் தலைமையாசிரியர் எனப் போற்றியது. எளிமையும் இனிமையும் ததும்பும் பாடல்களாலும் தேன் சொட்டும் தீந்தமிழ் வசனங்களாலும் அப்பெருமகனார் இயற்றியருளிய நாடகங்கள்தாம் தமிழ் நாடகக் கலை வளர்ச்சிக்கு அடிப்படைச் செல்வம் என்று கூறினால் அது மிகையாகாது. முழுப்பெயரையும் சொல்ல வேண்டியதில்லை. சுவாமிகள் என்றாலே போதும். தமிழ் நாடக உலகில் அது சங்கரதாஸ் சுவாமிகள் ஒருவரைத்தான் குறிக்கும். சுவாமிகள் காலத்திலிருந்த மிகப்பெரிய புலவர்களும் நாடகாசிரியர்களுமான உடுமலைச் சரபம் முத்துசாமிக் கவிராயர், குடந்தை வீராசாமி வாத்தியார் முதலியோரெல்லாம் சுவாமிகளின் புலமைக்குத் தலை வணங்கிப் பாராட்டினர். ஆங்கில மோகத்தால் தாய்மொழியிற் பேசுவதுகூடக் கெளரவக் குறைவென்று கருதப்பட்ட காலத்தில் நாடக மேடையின் மூலம் தமிழை வளர்த்த பெரியார் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள். இசையரங்குகளிலே தெலு...

‘எழுத்து’ - 119 இதழ்களின் பொருளடக்கம்

எழுத்து 1: ஜனவரி 1959 எழுத்து வளர - தலையங்கம் சாகித்ய அகாடமி தமிழ்ப் பரிசு – க.நா.சு. பெட்டிக்கடை நாரணன் – ந. பிச்சமூர்த்தி கவிதை - மயன் சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்: ஒரு தொகுப்புக்கான சில குறிப்புகள் – க. நா. சுப்ரமண்யம் எழுதுவதெல்லாம்… - சிட்டி தாழை பூத்தது – பெ. கோ. சுந்தர்ராஜன் பாரதிக்குப்பின்-1: டாக்டர் சாமிநாதையர் – க.நா.சு. கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா விண்ணும் மண்ணும் – ந. சிதம்பரசுப்ரமண்யன் இன்றைய தமிழ் இலக்கிய விமர்சன தோரணை – சி. சு. செல்லப்பா வானம் - மயன் கெளமாரி – சாலிவாஹனன் உண்மைதேடியின் அனுபவ இலக்கிய வடிவங்கள் – தி. ஜானகிராமன்   எழுத்து 2: பிப்ரவரி 1959 வாடைக் காற்று - அசுவதி எழுத்தும் அதன் வாசகர்களும் இலக்கியமும் குழுவும் எஸ். வையாபுரிப்பிள்ளை – க. நா. சுப்ரமண்யம் திறனாய்வு - வில்லி அருளும் பொருளும் – ந. சிதம்பர சுப்ரமண்யன் கவி – வேதனை – தி. சோ. வேணுகோபாலன் தர்க்கம் - ஜெயகாந்தன் அன்று வருவாரோ ? – கு. அழகிரிசாமி வெற்றியின் பண்பு - பராங்குசம் தரிசனம் - மயன் கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா ...