Skip to main content

சிந்தனை முதல்வன்

பாரதி, வ. வெ. சு. அய்யர் மறைவுக்குப் பின் தமிழ் மறுமலர்ச்சி இலக்கிய இயக்கம் நீண்ட இடைவெளி விட்டுப் போய்விடாமல், ஒரு தொடர்ச்சி கொடுத்த, பாரதியின் முதல் சீடன் வ.ரா. மறைந்து போய் பதினைந்து ஆண்டுகள் ஆகின்றன. பாரதியின் சீடனாக மட்டும் இருந்த்தோடு நின்றுவிடவில்லை வ.ரா. பாரதி புகழ் பரப்பினவர். தேசிய பாட்டுகளுக்காக மட்டும் தேசிய கவியாகவே கருதப்பட்டிருந்த பாரதியை இலக்கிய ரீதியாக கவிஞன் என்று தமிழகம் எங்கும் சுற்றி அவனது இலக்கிய சாதனையை எடுத்துச் சொன்னவர். வ.ரா. அதோடு பாரதியை மகாவி என்று முதன்முதலில் கூறியவரும் அவரே. இன்று பாரதிக்கு மண்டபம் கட்டி கவுரவித்து, மகாகவி என்று வாய்க்கு வாய் கூறுகிறது. ஆனால் முப்பதுகளில் இதைச் சொல்ல மதிப்பீட்டு சக்தியும் எதிர்காலப் பார்வையும் அவர் ஒருவருக்குத்தான் இருந்தது. அந்த வ.ரா.வை தமிழகம் ஒரு கணம் நினைத்துக்கொள்ளத் தயங்குகிறது. மறுக்கிறதா மறக்க விரும்புகிறதா தெரியவில்லை.

பாரதி மீது காட்டிய இலக்கிய அக்கறைக்காக மட்டும் எழுத்து அவரைப் 'பெரியவன்' என்று பாராட்டிவிடாது. பாரதி வழியிலே குட்டி பதினாறடியாக பாய்ந்து தமிழ் இலக்கியத்தைத் தானும் வளப்படுத்தி ஒரு படைதிரட்டி வலுப்படுத்தச் செய்ததுக்காகவே வ.ரா. 'பெரிய எழுத்தாளன்'. பாரதியின் சீடன் மணிக்கொடித் தலைவன் ஆனான். அவர் பேனாவிலே வளர்ந்த மணிக்கொடி ஒரு பத்திரிகையாக மட்டும் இல்லை. ஸ்தாபனமாக மட்டும் இல்லை. ஒரு இயக்கமாகவே இருந்தது. தமிழ் இலக்கியம் அதுவரை காணாத சில இலக்கிய உருவங்கள் பிறக்க, வளர பின்னாலும் உண்டாக ஏற்பட வகை செய்த ஒரு இலக்கியத் தலைவன் வ.ரா. 'தமிழ்நாட்டில் ஆழ்ந்த கருத்துக்களோடு எழுதுகிற முதல் தரமான எழுத்தாளர் வ.ரா.' என்பது அவரது தோழர் டி. எஸ். சொக்கலிங்கம் கருத்து. ந. பிச்சமூர்த்தி 'கொள்கைகளுடன் பழகியவர் வ.ரா.' என்று கூறி இருக்கிறார். எழுத்தாளர்களின் எழுத்தாளர் என்று கல்கியே குறிப்பிட்டிருக்கிறார். பாரதிக்குப் பின் தமிழனுக்காக சிந்தித்தவர் வ.ரா. இன்னும் தமிழ் உரைநடையை புதுப்பித்தவர் வ.ரா. அந்த வ.ரா.வை தமிழகம் நினைக்கிறதா?

மணிக்கொடி கோஷ்டி, மணிக்கொடி பரப்பரை, மணிக்கொழி வழி பத்திரிகை என்பதுக்கெல்லாம் மூலவறான அந்த இலக்கியத் தலைவனுக்கு அவன் காட்டிய வழியில் செல்லும் 'எழுத்து' தன் இலக்கிய வணக்கத்தைச் செலுத்திக் கொள்கிறது.

- ‘எழுத்து’ (ஆகஸ்ட், செப்டம்பர் 66) இதழில் வெளியான தலையங்கம்

விரைவில் வெளிவரும் 'சிந்தனை முதல்வன்: வ.ரா. நினைவோடை' மின் நூலிலிருந்து

Comments

Most Popular

மனமும் அதன் விளக்கமும் | இன நனவிலி மனம் | பெ. தூரன்

பி ராய்டு என்ற உளவியலார் நனவிலி மனத்தைப் பற்றி ஆராய்ந்து உளப் பகுப்பியல் முறையைத் தோற்றுவித்தார் என்று கண்டோம். உளப்பகுப்பியலின் தந்தை அவரே. அவரோடு ஆட்லரும், யுங் என்பவரும் மாணவராகப் பல ஆண்டுகள் வேலை செய்தனர். பிறகு இருவரும் கொள்கை வேறுபாடுகளால் வேறு வேறாகப் பிரிந்தனர். ஆட்லரின் பிற்காலக் கருத்தைப் பற்றி முன்பே கூறப்பட்டுள்ளது. இங்கு யுங்கின் கொள்கையைச் சுருக்கமாக ஆராய்வோம். நனவிலி மனத்தைப் பிற்காலத்தில் பிராய்டு ‘இத்’ என்றும், அதில் எழும் ஆற்றலை ‘லிபிடோ’ (Libido) என்றும் குறிப்பிட்டார். லிபிடோ பாலியல்பு வாய்ந்தது என்றும், மனக் கோளாறுகளெல்லாம் இது ஒழுங்காக அமையாததால் ஏற்படுகின்றன என்றும், இந்தப் பாலியல்பு குழவிப் பருவ முதற்கொண்டே தொடங்குகிறதென்றும் கருதினார். நனவிலி மனம் குழவிப் பருவத்தில் சிறிதாக இருந்தபோதும், வயது ஆக ஆக அக்குழந்தைக்குத் தடைகளும் விதிகளும் பெருகுகின்ற காரணத்தினால் நனவிலி மனத்தில் பல விதமான இச்சைகளும் ஆர்வங்களும் மிகுதியாகி நனவிலி மனம் விரிவடைகின்றது. அதனால்தான் நனவிலி மனம் நனவு மனத்தினின்றும் வளர்ந்ததேயாகும் என்று பொதுப்படையாகக் கூறுவதுண்டு. இக் கருத்தைப் பல ந...

பெரியம்மை | சுரேஷ்குமார இந்திரஜித்

பெரியப்பா அருமையாகப் பாடுவார். ‘முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே’ என்ற டி.எம்.எஸ். பாட்டை ஏற்ற இறக்கங்கள், பிர்காக்கள் பிசகாமல் பாடுவார். அப்போது பெரியம்மை முகத்தைப் பார்க்கவேண்டுமே. அவர் முகம் பெருமிதத்தோடும் பரவசத்தோடும் இருக்கும். பெரியம்மா முருங்கைக்காய் குழம்பு வைத்தால் நிறைய சாப்பிடவேண்டியிருக்கும். குழம்புகள் ருசியாகச் செய்வதற்கென்றே அவள் பிறந்திருக்கிறாள். கத்தரிக்காய் புளிக்குழம்பும் அப்படித்தான் அவ்வளவு ருசியாக இருக்கும். என் அம்மைக்கு இந்தக் குழம்புகள் ருசி கூடி வராது. சப்பென்று இருக்கும். நான் வேலை பார்க்கும் ஊரிலிருந்து வீட்டுக்கு வந்திருந்தேன். பெரியப்பாவைப் பார்ப்பதற்கும், அவர் பாட்டைக் கேட்பதற்கும் அவர் வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன். இது மார்கழி மாதம். வாசல்களில் கோலம் போட்டு பூசணிப்பூவை மையமாக வைத்திருந்தார்கள். அநேகமாக சில வீடுகள் நீங்கலாக எல்லா வீட்டு வாசல்களிலும் பூசணிப்பூவை வைத்திருந்தார்கள். செண்பகவல்லி மதினி வீட்டைக் கடக்கும்போது மல்லிகைப்பூ வாசம் வந்தது. மதினி வீட்டுக் காம்பவுண்டுக்குள் மல்லிகைப்பூ கொடிக்குப் பந்தல் போட்டிருந்ததைப் பார்த்தேன். வேல...

இரு சகோதரர்கள்

  [ அ. கி. கோபாலன், அ. கி. ஜயராமன் நேர்காணல் ] நேர்கண்டவர்: எஸ். குரு படங்கள்: திரு. சுதாகர் நோபல் பரிசு பெற்ற நாவல்களைப் பதிப்பித்த அ. கி. கோபாலன் நீங்கள் பதிப்பாளரானது எப்படி ? தென்னாற்காடு மேலக்குமாரமங்கலம் என் சொந்த ஊர். எங்கள் கிராமத்தில் நான்காவது வகுப்பு படித்தேன். கிராமத்தில் எங்கள் அப்பா விவசாயம் செய்துகொண்டிருந்தார். நிறைய நஞ்சை நிலம் இருந்தது. பங்காளிக் காய்ச்சலினால் எங்கள் சொத்துகள் பறிபோயின. முதலில் என் அண்ணன் அ. கி. ஜெயராமன் சென்னைக்கு வந்து ஒரு ஹோட்டலில் சர்வராகச் சேர்ந்துவிட்டு , அப்புறம் என்னை ஊரிலிருந்து வரவழைத்து , என்னையும் சர்வராகச் சேர்த்துவிட்டார். சைனா பஜார் பழைய ஆரிய பவனுக்கு எதிரே ஆனந்த லட்சுமி பவன் என்று இருந்தது. அங்குதான் சர்வராகச் சேர்ந்தோம். இட்லி அரையணா , காபி முக்காலணா , பீடா காலணா , ஸ்பெஷல் பீடா அரையணா விற்ற காலம் அது. ஹோட்டலுக்கு அருகில் ச. சு. சங்கரலிங்கக் கவிராயர் என்ற நாடகாசிரியர் தங்கியிருந்தார். சங்கரலிங்கக் கவிராயர் , சங்கரதாஸ் சுவாமிகளுக்கு இணையானவர். அவரிடம் நாடகப் பாடல்கள் கேட்டேன். ஹோட்டலில் சக ஊழியர்களிடம் சொல்லிவிட்டு , ஆ...