Skip to main content

மனமும் அதன் விளக்கமும் | மனவசியம் | பெ. தூரன்

ஸ்திரியா நாட்டின் தலைநகராகிய வியன்னா நகரத்தில் மெஸ்மர் என்ற புகழ்பெற்ற மருத்துவர் ஒருவர் இருந்தார். ஒருநாள் அவர் நோயாளி ஒருவருக்குச் சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கும்போது ஓர் அதிசயம் நடந்தது. அவர் நோயாளியை உறக்கத்தில் ஆழ்ந்து போகும்படி செய்துவிட்டார். இதைவிட அதிசயமென்னவென்றால் அந்த உறக்கநிலையிலேயே நோயாளி தமக்கு மருத்துவர் இட்ட கட்டளைகளையெல்லாம் செய்தார்! உறக்கநிலையிலேயே பேசவும் செய்தார்!
டாக்டர் மெஸ்மர் வேறு சில நோயாளிகளையும் இவ்வாறு உறக்கநிலையில் ஆழ்த்த முயன்றார். அவருக்கு வெற்றியே கிடைத்தது. இவ்வாறு உறங்கச் செய்து அந்த உறக்கநிலையிலேயே உடல் நலத்திற்காக நோயாளிக்கு என்னென்ன செய்யவேண்டும் என்று சொல்லுகிறாரோ அவற்றை விழித்த பிறகும் நோயாளிகள் மிக அக்கறையோடு செய்தார்கள். விழித்து எழுந்த உடனேயே நோயாளிகள் தங்களுக்குப் பெரிதும் நன்மை ஏற்பட்டுள்ளதாக உணர்ந்தார்கள். டாக்டர் மெஸ்மர் தம் கைவிரல் நுனிகளின் மூலம் ஏதோ ஒருவகையான காந்த திரவம் போன்ற சக்தி செல்லுவதாகவும் அதனாலேயே நோயாளிகளுக்கு நல்ல பலன் கிடைப்பதாகவும் நம்பினார். இந்த மனவசியமானது மெஸ்மரிசம் என்று அவர் பெயராலேயே வழங்கலாயிற்று.
அடுத்த நாற்பது ஐம்பது ஆண்டுகளில் இந்த மெஸ்மரிச முறையைப் பற்றி ஐரோப்பிய நாடுகளில் மிக விரிவான ஆராய்ச்சிகள் நடந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடையில் பிரிட்டனில் மான்செஸ்டரில் ஜேம்ஸ் பிரெய்டு என்ற ஒரு புகழ்பெற்ற மருத்துவர் இருந்தார். அவர் மெஸ்மரிசத்தைப் பற்றி ஆராய்ந்து டாக்டர் மெஸ்மர் கூறியபடி மனவசியம் செய்பவரிடமிருந்து காந்த சக்தி ஒன்றும் பாய்வதில்லை என்பதை நிரூபித்தார். மன ஆற்றல் மிகுந்த யாரும் வேறொரு வரை உறக்கம் போன்ற ஒரு நிலையில் ஆழ்த்த முடியும் என்றும் அந்த நிலையிலேயே ஏவியவாறு செய்யும்படி தூண்டவும் முடியுமென்றும் அவர் காட்டினர். மனவசியம் செய்து அதன் மூலம் நல்ல பயன்களை உண்டாக்கலாம் என்பதை உணர்ந்துகொண்டால் மனவசியம் செய்வோருடன் மனவசியம் செய்யப்படுபவரும் ஒத்துழைப்பார். இந்த ஒத்துழைப்பு மிகவும் தேவையாகும். மனவசியம் செய்பவருடன் வைத்துள்ள நம்பிக்கையே வசியப்படுத்துவதற்கு அடிப்படையாகும். முழு ஒத்துழைப்புக் கிடைக்காதபோது வசியப்படுத்துவது பெரும்பாலும் இயலாது.
வசியமடைய வேண்டியவரை எளிதில் உறங்குமாறு செய்ய அதற்கேற்ற அமைதியான சூழ்நிலையை அமைத்து வசியம் செய்பவர் தம்மையோ அல்லது ஏதேனும் ஒரு பளபளப்பான பொருளையோ இமைகொட்டாமல் பார்க்கும்படி செய்வது உறக்கநிலை ஏற்படுவதற்கு முதற்படியாகும். பிறகு முகத்தையும், மார்பையும் மெதுவாக வருடிவிட்டுக்கொண்டே, “உறங்கு; நீ இதோ உறங்கப்போகிறாய். உறங்கப்போகிறாய். உறங்கியாகிவிட்டது” என்று கூறுவது இரண்டாவது படி. இவற்றின் பயனாக வசியம் செய்யப்படுபவர் உறங்கிவிடுவார். மீண்டும் விழித்துக்கொள் என்று கூறும் வரையில் இந்த உறக்கநிலை நீடித்திருக்கும். இந்த நிலையிலே மனவசியம் செய்பவர் கட்டளையிட்டவாறெல்லாம் வசியம் செய்யப்படுபவர் செய்வார்; ஆனால் அவரை எது வேண்டுமானலும் செய்யும்படி தூண்ட இயலாது. வசியம் செய்யப்படுபவருக்கு விருப்பமில்லாத செயலைச் செய்யும்படி அவரை ஏவ முடியாது. அவருடைய கொள்கைகளுக்கும், ஒழுக்கத்திற்கும் மாறுபட்ட எதையும் வசிய நிலையில்கூடச் செய்ய அவர் உடன்படமாட்டார். ஒருவர் புலால் உண்பதை வெறுப்பவராக இருக்கலாம். அவரைப் புலால் உண்ணும்படி வசிய நிலையிலேகூடச் செய்ய முடியாது. ஆனால் புலால் உணவை இரகசியமாகச் சாப்பிடுபவர் புலாலை உண்ணுமாறு கட்டளை இடப்பட்டால் அவர் அதைச் செய்வார். கொள்கைக்கு மாறான கட்டளை இடப்பட்டால் மனவசியம் உறக்கம் கலைந்துபோகும்.
மனவசியத்திற்கு இப்பொழுது மெஸ்மரிசம் என்ற பெயரைவிட ஹிப்னாட்டிசம் என்ற பெயர்தான் அதிகமாக வழங்குகிறது. ஹிப்னாஸ் என்ற கிரேக்கச் சொல்லிற்கு உறக்கம் என்பது பொருள். அந்தச் சொல்லைக் கொண்டு இம்முறைக்கு ஹிப்னாட்டிசம் என்ற பெயரை டாக்டர் பிரெய்டு கொடுத்தார்.
இந்த மனவசிய நிலையைப் பற்றிச் சிறிது ஆராய்வோம். மனம் என்பதில் நனவு மனம், நனவிலி மனம் என்பதாக இரண்டு பகுதிகள் இருப்பதை நாம் முன்பே அறிவோம். நனவு மனத்தைவிட நனவிலி மனம்தான் பெரிதும் ஆற்றல் கொண்டது என்பதையும் நாம் அறிவோம். விழித்திருக்கும் நிலையில் நாம் நனவு மனத்தையே பெரிதும் பயன்படுத்துகிறோம். ஆனால் நனவிலி மனத்தை நல்ல வழிகளிலே செல்லும்படி செய்து அதையும் பயன்படுத்த முடியுமானால் மிகுதியான நன்மை கிடைக்கும்.
நனவு மனம் எதையும் சீர்தூக்கிப் பார்க்கும் தன்மை வாய்ந்தது. ஆனால் நனவிலி மனம் நாம் விழித்திருக்கும்போது வேலை செய்யாமல் இருப்பதோடு, அதற்குச் சீர்தூக்கிப் பார்க்கும் தன்மையும் இல்லை. அதன் ஆதிக்கம் ஓங்காதபடி நனவு மனமே தடுத்து வைத்திருக்கிறதென்பதை நாம் முன்பே தெரிந்துகொண்டிருக்கிறோம். அதனால் ஏதாவது ஒரு கருத்தை ஒருவருக்குக் கூறினால் அவருடைய நனவு மனம் காவற்காரன்போலத் தடையாக நிற்பதனால் அந்தக் கருத்து நனவிலி மனத்திற்கு எளிதில் செல்ல இயலாது. ஆனால் மனவசிய நிலையில் இருக்கும் பொழுது இந்த நிலைமை முற்றிலும் மாறிவிடுகிறது. மனவசிய உறக்கநிலையில் நனவு மனத்தின் ஆதிக்கம் குறைந்துவிடுகிறது. நனவிலி மனம் ஓங்கியெழுந்து மனவசியக்காரரோடு ஒத்துழைக்கத் தொடங்கிவிடுகிறது. ஆதலால் அந்த நிலையில் மனவசியம் செய்பவர் கூறுகின்ற கட்டளைகள் நனவிலி மனத்தை நேராக அடைய முடிகிறது. அதனால் மனவசியம் செய்யப்பட்டவர் மனவசியம் செய்வோருக்குப் பணிந்து அவர் சொல்கின்றபடி செய்கின்றார்.
மனவசிய உறக்கம் என்பதை நாம் உறக்கநிலையில் இருப்பதைப்போன்ற உறக்கமென்று எண்ணி விடக்கூடாது. அது உறக்கமுமில்லை; நினைவிழந்த தன்மையுமன்று. அது பொதுவாக உறக்கம் ஏற்படுவதற்குச் சற்று முன்னால் ஏற்படும் ஒரு நிலைமையைப் போன்றதேயாகும். மனவசிய உறக்கநிலையில் மனவசியம் செய்பவர் ஆணையிட்டால் நடக்கலாம்; பேசலாம்; விழிப்பு நிலையிலே இருப்பதைப் போலவே வேறு செயல்களையும் செய்யலாம். மனவசிய நிலையிலே ஒருவனுடைய பொறிகளின் ஆற்றல்களைக் குறைக்கவும் கூடும்; கூர்மைப்படுத்தவும் கூடும். அந்த நிலையிலே அவர் உடலில் ஏற்பட்டுள்ள மிகுந்த வலியையும் அவர் உணரமாட்டார். கசப்பான பண்டத்தை மிகவும் இனிப்பானதென்று கூறிக் கொடுத்தால் அப்பண்டம் இனிப்பதாகவே எண்ணி அவர் சுவைத்து உண்பார். அருவருக்கத்தக்க கெட்ட நாற்றத்தையும் நறுமணம் என்று கூறி முகரச் சொன்னால் அவ்வாறே முகர்ந்து மகிழ்வார்.
மனவசியத்தால் நமது ஐம்புலன்களின் கூர்மையை மிகுதிப்படுத்தலாம். இதற்கும் ஒரு எல்லை உண்டென்றாலும் நோயைக் குணப்படுத்தவும், தவறான எண்ணங்களை நீக்கவும் இது கையாளப்படுவதுண்டு. மனவசிய நிலையில் நோய் குணமாகிவிட்டது என்ற கருத்தைக் கொடுப்பதன் மூலம் நோயைக் குணமாக்கலாம். ஆயினும் நோய்களைக் குணப்படுத்த இதை யாரும் இன்று பெரிதும் பயன்படுத்துவதில்லை. நோய்க்கு அடிப்படையான காரணத்தைக் கண்டுபிடித்து அந்நோயைக் களைய முயல்வதே விஞ்ஞான முறைச் சிகிச்சையாகுமென்பது இன்றைய கருத்தாகும். நரம்புக் கோளாறுகளையும், உறக்கமின்மையையும், திக்கிப் பேசுதலையும் நகத்தைக் கடித்துக்கொண்டே இருத்தலையும், இன்னும் இவை போன்ற பலவற்றையும் குணப்படுத்துதற்கு மேல்நாடுகளில் இம்முறை பயன்பட்டு வருகிறது.
எமிலி கூவே என்னும் பிரான்சு நாட்டு உளவியலார், "ஒருவன் தன்னைத்தானே வசியம் செய்து கொண்டு நோயையும், உள்ளச் சோர்வையும் நீக்கிக் கொள்ளலாம்" என்று காட்டியுள்ளார். இவ்வாறு தனக்குத்தானே கருத்தேற்றிக்கொள்ளப் பழகிக்கொண்டால் அதனால் சிறந்த நன்மைகள் விளையும் என்பது அவருடைய எண்ணமாகும்.
மன வசியம் புதிதான முறையல்ல. நமது நாட்டில் யோகிகள் இதைக் கையாளுகிறார்கள். பாரசீக ஞானிகளுக்கும் மற்றவர்களுக்கும் இது தெரிந்திருந்தது.
இக்காலத்தில் விளம்பரம் செய்வதில் தேர்ச்சி பெற்றவர்கள் மக்களின் மனத்தை வசியப்படுத்தக் கூடிய அழகிய படங்களோடு ஒரு பொருளை விளம்பரம் செய்து தங்கள் வாணிகத்தைப் பெருக்கிக்கொள்கிறார்கள். பதவியிலிருப்பவர்கள் தங்கள் அதிகாரக் கட்டளைகளால் பிறரைப் பணிந்து நடக்குமாறு செய்துவிடுகிறார்கள். இவை போன்ற பலவும் மனவசியத்தின் பல கிளைகளாகும்.
உளவியல் உண்மைகளை அறிந்துகொள்வதற்கும் மனவசியம் பயன்படுகிறது. மனவசிய உறக்கத்தின் போது நினைவு ஆற்றல் மிகுந்திருப்பதாலும் நனவிலி உளத்தின் ஆதிக்கம் ஓங்குவதாலும் அதிலே அழுந்தியிருக்கும் எண்ணங்களையும், இச்சைகளையும் அறிந்து கொள்வதற்கு இது ஒரு வழியாகப் பயன்படுகிறது.
இந்த வழியில் ஒருசில குறைபாடுகள் உண்டு. ஆனால் அதை நாம் தெரிந்துகொள்ள வேண்டுவதில்லை. மனவசியம் என்பது மனத்தின் ஆழத்தில் புதையுண்டு கிடக்கும் இச்சைகளை அறிந்துகொள்ள உதவும் என்பதை அறிந்துகொள்வதே இங்கு முக்கியமாகும்.

Comments

Most Popular

மணிபல்லவம் - ஜம்பு கொல பட்டினம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்ககாலத்து நூலாகிய மணிமேகலையிலே, இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப்பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள பழைய பௌத்த நூல்களிலேயும் இலங்கைத்தீவின் வடகோடியில் இருந்த ஜம்புகோல் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. தமிழ் நூலில் கூறப்படும் குறிப்பு களைக் கொண்டும் பாலி மொழி நூல்களில் கூறப்படும் குறிப்புகளைக் கொண்டும் மணிபல்லவமும் ஜம்புகொல பட்டினமும் ஒரே இடம் என்று துணியலாம். பெயர் வேறுபடு வதிலிருந்து இரண்டும் வெவ்வேறிடங்கள் எனக் கருதும்படி இருந்தாலும், இவைகளைப்பற்றிக் கூறப்படும் செய்திகளை உற்றுநோக்கினால், இரண்டும் ஒன்றே என்பது ஐயமற விளங்குகிறது. இதனை ஈண்டு ஆராய்வோம். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலேதான் மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்தது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை கூறுவது காண்க. சோழ நாட்டின் துறைமுகப்பட்டினமாகிய புகார்ப்பட்டினத்தில் இருந்து தெற்கே 30 யோசனை தொலைவில் மணிபல்லவம் இருந்தது (

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு , https://tinyurl.

சிறுகதை என்றால் என்ன? | க. நா. சுப்ரமண்யம்

சி றுகதை என்றால் என்ன ? உருவத்தால் சிறியதாக இருக்கவேண்டும் என்றும் , கதையாக இருக்கவேண்டும் என்றும் சட்டென்று பதில் கூறிவிடலாம். ஓரளவு திருப்தி தருகிற பதில் மாதிரித்தான் இருக்கிறது. ஆனால் யோசித்துப் பார்க்கும்போது தோன்றுகிறது - உருவத்தில் சிறியது என்றால் எவ்வளவு சிறியது என்றும் , கதை என்றால் என்ன என்றும் கேள்விகள் தோன்றுகின்றன. இரண்டாவது கேள்விக்குப் பதில் முதலில் சொல்லிப் பார்க்கலாம். அத்தைப் பாட்டி கதையிலிருந்து , கம்பராமாயணத்தின் கருப்பொருள் வரையில் , ஏசாப்புக் கதைகளிலிருந்து மஹாபாரதத்து குருக்ஷேத்திரம் வரையில் , எல்லாமே கதையை ஆதாரமாகக் கொண்டவைதான். நாவல் , நாடகம் என்கிற இலக்கியத் துறைக்கும் ஆதாரமான விஷயம் கதைகள்தான். சிறுகதைக்கு ஆதாரமான கதை என்ன ? எப்படியிருக்க வேண்டும் ? ஓ. ஹென்றியின் கதைகளிலே பல சம்பவங்கள் அடுக்கடுக்காக வந்து கடைசியில் ஒரு திருப்பம் திரும்பி ஒடித்து வக்கிரமாக நிற்கும். மோபஸான் கதைகளிலே அடுக்கடுக்காகப் பல விஷயங்கள் சொல்லப்பட்டு , ஒரு சம்பவத்தைச் செயற்கை முத்தைப்போல உருட்டித் திரட்டித் தரும். சம்பவங்களை நம்புகிற இந்த இரண்டு கதைகளுக்கும் அப