Skip to main content

மனமும் அதன் விளக்கமும் | மனவசியம் | பெ. தூரன்

ஸ்திரியா நாட்டின் தலைநகராகிய வியன்னா நகரத்தில் மெஸ்மர் என்ற புகழ்பெற்ற மருத்துவர் ஒருவர் இருந்தார். ஒருநாள் அவர் நோயாளி ஒருவருக்குச் சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கும்போது ஓர் அதிசயம் நடந்தது. அவர் நோயாளியை உறக்கத்தில் ஆழ்ந்து போகும்படி செய்துவிட்டார். இதைவிட அதிசயமென்னவென்றால் அந்த உறக்கநிலையிலேயே நோயாளி தமக்கு மருத்துவர் இட்ட கட்டளைகளையெல்லாம் செய்தார்! உறக்கநிலையிலேயே பேசவும் செய்தார்!
டாக்டர் மெஸ்மர் வேறு சில நோயாளிகளையும் இவ்வாறு உறக்கநிலையில் ஆழ்த்த முயன்றார். அவருக்கு வெற்றியே கிடைத்தது. இவ்வாறு உறங்கச் செய்து அந்த உறக்கநிலையிலேயே உடல் நலத்திற்காக நோயாளிக்கு என்னென்ன செய்யவேண்டும் என்று சொல்லுகிறாரோ அவற்றை விழித்த பிறகும் நோயாளிகள் மிக அக்கறையோடு செய்தார்கள். விழித்து எழுந்த உடனேயே நோயாளிகள் தங்களுக்குப் பெரிதும் நன்மை ஏற்பட்டுள்ளதாக உணர்ந்தார்கள். டாக்டர் மெஸ்மர் தம் கைவிரல் நுனிகளின் மூலம் ஏதோ ஒருவகையான காந்த திரவம் போன்ற சக்தி செல்லுவதாகவும் அதனாலேயே நோயாளிகளுக்கு நல்ல பலன் கிடைப்பதாகவும் நம்பினார். இந்த மனவசியமானது மெஸ்மரிசம் என்று அவர் பெயராலேயே வழங்கலாயிற்று.
அடுத்த நாற்பது ஐம்பது ஆண்டுகளில் இந்த மெஸ்மரிச முறையைப் பற்றி ஐரோப்பிய நாடுகளில் மிக விரிவான ஆராய்ச்சிகள் நடந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடையில் பிரிட்டனில் மான்செஸ்டரில் ஜேம்ஸ் பிரெய்டு என்ற ஒரு புகழ்பெற்ற மருத்துவர் இருந்தார். அவர் மெஸ்மரிசத்தைப் பற்றி ஆராய்ந்து டாக்டர் மெஸ்மர் கூறியபடி மனவசியம் செய்பவரிடமிருந்து காந்த சக்தி ஒன்றும் பாய்வதில்லை என்பதை நிரூபித்தார். மன ஆற்றல் மிகுந்த யாரும் வேறொரு வரை உறக்கம் போன்ற ஒரு நிலையில் ஆழ்த்த முடியும் என்றும் அந்த நிலையிலேயே ஏவியவாறு செய்யும்படி தூண்டவும் முடியுமென்றும் அவர் காட்டினர். மனவசியம் செய்து அதன் மூலம் நல்ல பயன்களை உண்டாக்கலாம் என்பதை உணர்ந்துகொண்டால் மனவசியம் செய்வோருடன் மனவசியம் செய்யப்படுபவரும் ஒத்துழைப்பார். இந்த ஒத்துழைப்பு மிகவும் தேவையாகும். மனவசியம் செய்பவருடன் வைத்துள்ள நம்பிக்கையே வசியப்படுத்துவதற்கு அடிப்படையாகும். முழு ஒத்துழைப்புக் கிடைக்காதபோது வசியப்படுத்துவது பெரும்பாலும் இயலாது.
வசியமடைய வேண்டியவரை எளிதில் உறங்குமாறு செய்ய அதற்கேற்ற அமைதியான சூழ்நிலையை அமைத்து வசியம் செய்பவர் தம்மையோ அல்லது ஏதேனும் ஒரு பளபளப்பான பொருளையோ இமைகொட்டாமல் பார்க்கும்படி செய்வது உறக்கநிலை ஏற்படுவதற்கு முதற்படியாகும். பிறகு முகத்தையும், மார்பையும் மெதுவாக வருடிவிட்டுக்கொண்டே, “உறங்கு; நீ இதோ உறங்கப்போகிறாய். உறங்கப்போகிறாய். உறங்கியாகிவிட்டது” என்று கூறுவது இரண்டாவது படி. இவற்றின் பயனாக வசியம் செய்யப்படுபவர் உறங்கிவிடுவார். மீண்டும் விழித்துக்கொள் என்று கூறும் வரையில் இந்த உறக்கநிலை நீடித்திருக்கும். இந்த நிலையிலே மனவசியம் செய்பவர் கட்டளையிட்டவாறெல்லாம் வசியம் செய்யப்படுபவர் செய்வார்; ஆனால் அவரை எது வேண்டுமானலும் செய்யும்படி தூண்ட இயலாது. வசியம் செய்யப்படுபவருக்கு விருப்பமில்லாத செயலைச் செய்யும்படி அவரை ஏவ முடியாது. அவருடைய கொள்கைகளுக்கும், ஒழுக்கத்திற்கும் மாறுபட்ட எதையும் வசிய நிலையில்கூடச் செய்ய அவர் உடன்படமாட்டார். ஒருவர் புலால் உண்பதை வெறுப்பவராக இருக்கலாம். அவரைப் புலால் உண்ணும்படி வசிய நிலையிலேகூடச் செய்ய முடியாது. ஆனால் புலால் உணவை இரகசியமாகச் சாப்பிடுபவர் புலாலை உண்ணுமாறு கட்டளை இடப்பட்டால் அவர் அதைச் செய்வார். கொள்கைக்கு மாறான கட்டளை இடப்பட்டால் மனவசியம் உறக்கம் கலைந்துபோகும்.
மனவசியத்திற்கு இப்பொழுது மெஸ்மரிசம் என்ற பெயரைவிட ஹிப்னாட்டிசம் என்ற பெயர்தான் அதிகமாக வழங்குகிறது. ஹிப்னாஸ் என்ற கிரேக்கச் சொல்லிற்கு உறக்கம் என்பது பொருள். அந்தச் சொல்லைக் கொண்டு இம்முறைக்கு ஹிப்னாட்டிசம் என்ற பெயரை டாக்டர் பிரெய்டு கொடுத்தார்.
இந்த மனவசிய நிலையைப் பற்றிச் சிறிது ஆராய்வோம். மனம் என்பதில் நனவு மனம், நனவிலி மனம் என்பதாக இரண்டு பகுதிகள் இருப்பதை நாம் முன்பே அறிவோம். நனவு மனத்தைவிட நனவிலி மனம்தான் பெரிதும் ஆற்றல் கொண்டது என்பதையும் நாம் அறிவோம். விழித்திருக்கும் நிலையில் நாம் நனவு மனத்தையே பெரிதும் பயன்படுத்துகிறோம். ஆனால் நனவிலி மனத்தை நல்ல வழிகளிலே செல்லும்படி செய்து அதையும் பயன்படுத்த முடியுமானால் மிகுதியான நன்மை கிடைக்கும்.
நனவு மனம் எதையும் சீர்தூக்கிப் பார்க்கும் தன்மை வாய்ந்தது. ஆனால் நனவிலி மனம் நாம் விழித்திருக்கும்போது வேலை செய்யாமல் இருப்பதோடு, அதற்குச் சீர்தூக்கிப் பார்க்கும் தன்மையும் இல்லை. அதன் ஆதிக்கம் ஓங்காதபடி நனவு மனமே தடுத்து வைத்திருக்கிறதென்பதை நாம் முன்பே தெரிந்துகொண்டிருக்கிறோம். அதனால் ஏதாவது ஒரு கருத்தை ஒருவருக்குக் கூறினால் அவருடைய நனவு மனம் காவற்காரன்போலத் தடையாக நிற்பதனால் அந்தக் கருத்து நனவிலி மனத்திற்கு எளிதில் செல்ல இயலாது. ஆனால் மனவசிய நிலையில் இருக்கும் பொழுது இந்த நிலைமை முற்றிலும் மாறிவிடுகிறது. மனவசிய உறக்கநிலையில் நனவு மனத்தின் ஆதிக்கம் குறைந்துவிடுகிறது. நனவிலி மனம் ஓங்கியெழுந்து மனவசியக்காரரோடு ஒத்துழைக்கத் தொடங்கிவிடுகிறது. ஆதலால் அந்த நிலையில் மனவசியம் செய்பவர் கூறுகின்ற கட்டளைகள் நனவிலி மனத்தை நேராக அடைய முடிகிறது. அதனால் மனவசியம் செய்யப்பட்டவர் மனவசியம் செய்வோருக்குப் பணிந்து அவர் சொல்கின்றபடி செய்கின்றார்.
மனவசிய உறக்கம் என்பதை நாம் உறக்கநிலையில் இருப்பதைப்போன்ற உறக்கமென்று எண்ணி விடக்கூடாது. அது உறக்கமுமில்லை; நினைவிழந்த தன்மையுமன்று. அது பொதுவாக உறக்கம் ஏற்படுவதற்குச் சற்று முன்னால் ஏற்படும் ஒரு நிலைமையைப் போன்றதேயாகும். மனவசிய உறக்கநிலையில் மனவசியம் செய்பவர் ஆணையிட்டால் நடக்கலாம்; பேசலாம்; விழிப்பு நிலையிலே இருப்பதைப் போலவே வேறு செயல்களையும் செய்யலாம். மனவசிய நிலையிலே ஒருவனுடைய பொறிகளின் ஆற்றல்களைக் குறைக்கவும் கூடும்; கூர்மைப்படுத்தவும் கூடும். அந்த நிலையிலே அவர் உடலில் ஏற்பட்டுள்ள மிகுந்த வலியையும் அவர் உணரமாட்டார். கசப்பான பண்டத்தை மிகவும் இனிப்பானதென்று கூறிக் கொடுத்தால் அப்பண்டம் இனிப்பதாகவே எண்ணி அவர் சுவைத்து உண்பார். அருவருக்கத்தக்க கெட்ட நாற்றத்தையும் நறுமணம் என்று கூறி முகரச் சொன்னால் அவ்வாறே முகர்ந்து மகிழ்வார்.
மனவசியத்தால் நமது ஐம்புலன்களின் கூர்மையை மிகுதிப்படுத்தலாம். இதற்கும் ஒரு எல்லை உண்டென்றாலும் நோயைக் குணப்படுத்தவும், தவறான எண்ணங்களை நீக்கவும் இது கையாளப்படுவதுண்டு. மனவசிய நிலையில் நோய் குணமாகிவிட்டது என்ற கருத்தைக் கொடுப்பதன் மூலம் நோயைக் குணமாக்கலாம். ஆயினும் நோய்களைக் குணப்படுத்த இதை யாரும் இன்று பெரிதும் பயன்படுத்துவதில்லை. நோய்க்கு அடிப்படையான காரணத்தைக் கண்டுபிடித்து அந்நோயைக் களைய முயல்வதே விஞ்ஞான முறைச் சிகிச்சையாகுமென்பது இன்றைய கருத்தாகும். நரம்புக் கோளாறுகளையும், உறக்கமின்மையையும், திக்கிப் பேசுதலையும் நகத்தைக் கடித்துக்கொண்டே இருத்தலையும், இன்னும் இவை போன்ற பலவற்றையும் குணப்படுத்துதற்கு மேல்நாடுகளில் இம்முறை பயன்பட்டு வருகிறது.
எமிலி கூவே என்னும் பிரான்சு நாட்டு உளவியலார், "ஒருவன் தன்னைத்தானே வசியம் செய்து கொண்டு நோயையும், உள்ளச் சோர்வையும் நீக்கிக் கொள்ளலாம்" என்று காட்டியுள்ளார். இவ்வாறு தனக்குத்தானே கருத்தேற்றிக்கொள்ளப் பழகிக்கொண்டால் அதனால் சிறந்த நன்மைகள் விளையும் என்பது அவருடைய எண்ணமாகும்.
மன வசியம் புதிதான முறையல்ல. நமது நாட்டில் யோகிகள் இதைக் கையாளுகிறார்கள். பாரசீக ஞானிகளுக்கும் மற்றவர்களுக்கும் இது தெரிந்திருந்தது.
இக்காலத்தில் விளம்பரம் செய்வதில் தேர்ச்சி பெற்றவர்கள் மக்களின் மனத்தை வசியப்படுத்தக் கூடிய அழகிய படங்களோடு ஒரு பொருளை விளம்பரம் செய்து தங்கள் வாணிகத்தைப் பெருக்கிக்கொள்கிறார்கள். பதவியிலிருப்பவர்கள் தங்கள் அதிகாரக் கட்டளைகளால் பிறரைப் பணிந்து நடக்குமாறு செய்துவிடுகிறார்கள். இவை போன்ற பலவும் மனவசியத்தின் பல கிளைகளாகும்.
உளவியல் உண்மைகளை அறிந்துகொள்வதற்கும் மனவசியம் பயன்படுகிறது. மனவசிய உறக்கத்தின் போது நினைவு ஆற்றல் மிகுந்திருப்பதாலும் நனவிலி உளத்தின் ஆதிக்கம் ஓங்குவதாலும் அதிலே அழுந்தியிருக்கும் எண்ணங்களையும், இச்சைகளையும் அறிந்து கொள்வதற்கு இது ஒரு வழியாகப் பயன்படுகிறது.
இந்த வழியில் ஒருசில குறைபாடுகள் உண்டு. ஆனால் அதை நாம் தெரிந்துகொள்ள வேண்டுவதில்லை. மனவசியம் என்பது மனத்தின் ஆழத்தில் புதையுண்டு கிடக்கும் இச்சைகளை அறிந்துகொள்ள உதவும் என்பதை அறிந்துகொள்வதே இங்கு முக்கியமாகும்.

Comments

Most Popular

குலாப்ஜான் காதல் | புதுமைப்பித்தன்

‘ காதலாவது உருளைக்கிழங்காவது ’ - சி . சுப்பிரமணிய பாரதி நான் ஆராய்ச்சிப் பிரியன் . அதிலும் தர்க்கரீதியாக புத்தியை வசீகரிக்கக்கூடிய ஆராய்ச்சியென்றால் , அதுதான் எனது தெய்வம் . கம்பனுடைய காவியங்கள் முதல் , நாணயச் செலாவணி , தீண்டாதார் ஆலயப் பிரவேசம் ஈறாக , எல்லாம் தர்க்க முறையில் அடைபட்டு ஒத்து இருந்தால்தான் எனது கொள்கை . இல்லாவிடில் அதற்கும் நமக்கும் வெகுதூரம் . இந்தக் காதல் விஷயத்தை நன்றாக ஆராய்ந்து கவனித்ததில் , சாதாரணமாக அல்ல , அபரிமிதமாக , காவியங்கள் , நாவல்கள் என்ற கற்பனைப் பிரதேசங்களில்தான் விளைகின்றன . இல்லாவிட்டால் அவை நமது பொருள்காட்சி சாலைகளைத் தப்பி இருக்க முடியுமா ? அகப்பொருள் இலக்கணக்காரர் கூறுவதைப் பார்த்தால் அசல் , கலப்பில்லாத பழம் பெருந்தமிழ் மக்களுடனிருந்து அவர்கள் தங்களுடைய ஏடுகளுடன் கடலால் கொள்ளப்பட்ட பொழுது , அவர்களுடன் சங்கமமாயிற்றென்று நினைக்க ஏதுவிருக்கிறது . ஆழ்ந்து யோசிக்குந்தோறும் , தர்க்க ஆராய்ச்சியை வழிபடும் எனக்கு , அதன் கூற்றுக்கள் வெகு வினோதமாகவே காணப்படுகின்றன . எனது ஆர

பெரியம்மை | சுரேஷ்குமார இந்திரஜித்

பெரியப்பா அருமையாகப் பாடுவார். ‘முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே’ என்ற டி.எம்.எஸ். பாட்டை ஏற்ற இறக்கங்கள், பிர்காக்கள் பிசகாமல் பாடுவார். அப்போது பெரியம்மை முகத்தைப் பார்க்கவேண்டுமே. அவர் முகம் பெருமிதத்தோடும் பரவசத்தோடும் இருக்கும். பெரியம்மா முருங்கைக்காய் குழம்பு வைத்தால் நிறைய சாப்பிடவேண்டியிருக்கும். குழம்புகள் ருசியாகச் செய்வதற்கென்றே அவள் பிறந்திருக்கிறாள். கத்தரிக்காய் புளிக்குழம்பும் அப்படித்தான் அவ்வளவு ருசியாக இருக்கும். என் அம்மைக்கு இந்தக் குழம்புகள் ருசி கூடி வராது. சப்பென்று இருக்கும். நான் வேலை பார்க்கும் ஊரிலிருந்து வீட்டுக்கு வந்திருந்தேன். பெரியப்பாவைப் பார்ப்பதற்கும், அவர் பாட்டைக் கேட்பதற்கும் அவர் வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன். இது மார்கழி மாதம். வாசல்களில் கோலம் போட்டு பூசணிப்பூவை மையமாக வைத்திருந்தார்கள். அநேகமாக சில வீடுகள் நீங்கலாக எல்லா வீட்டு வாசல்களிலும் பூசணிப்பூவை வைத்திருந்தார்கள். செண்பகவல்லி மதினி வீட்டைக் கடக்கும்போது மல்லிகைப்பூ வாசம் வந்தது. மதினி வீட்டுக் காம்பவுண்டுக்குள் மல்லிகைப்பூ கொடிக்குப் பந்தல் போட்டிருந்ததைப் பார்த்தேன். வேல

மனமும் அதன் விளக்கமும் - மனமெனும் மாயம் | பெ. தூரன்

ம னம் என்பதென்ன? அது எங்கே இருக்கிறது? கை, கால், கண், இதயம் என்றால் உடம்பில் உள்ள உறுப்புகள் என்று உடனே தெரிகிறது. அவைகளுக்கு வடிவம் உண்டு. பருமன் உண்டு. ஆதலால் அவைகளை எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மனம் என்பது எது? அதற்கு வடிவம் உண்டா? பருமன் உண்டா? தொட்டுப் பார்த்து அறிந்துகொள்ள முடியுமா? இவ்வாறு எண்ணிப் பார்த்தால் ஒன்றும் விளங்குவதில்லை. இவ்வாறு எண்ணுவதற்கு அந்த மனமே காரணமாக இருக்கிறதென்று தோன்றுகிறது. ஆனால் அது என்ன என்று மட்டும் எளிதில் அறிந்துகொள்ள முடிகிறதில்லை. மனத்திற்கு உருவமில்லை; கன பரிமாணமும் இல்லை. மனம் என்பது தசை, நரம்பு முதலியவைகளால் ஆக்கப்பட்டதன்று. அது சடப் பொருள் அன்று; அது சூக்குமப் பொருள், சடப் பொருள் என்றால் அது உடம்பைச் சேர்ந்த ஒர் உறுப்பாகிவிடும்; எளிதாக அதை அறிந்துகொள்ளவும் முடியும். சிலர் மூளைதான் மனம் என்று தவறாகக் கருதுகிறார்கள். மூளை என்பது உடம்போடு சேர்ந்த ஒரு பருப்பொருளான உறுப்பு. அது மனம் அல்ல. சூக்குமப் பொருளாக மனம் இருக்கிறதென்று மட்டும் நமக்குப் புலனாகிறது. அந்த மனந்தான் ஆசைகள், எண்ணங்கள், நோக்கங்கள், நம்பிக்கைகள் முதலியவற்றிற்கு இடமாயிரு