Skip to main content

மனமும் அதன் விளக்கமும் | ஓட்டம் முன்னதா, அச்சம் முன்னதா? | பெ. தூரன்

ள்ளக் கிளர்ச்சிகள் எத்தனை என்பது பற்றிச் சில ஆண்டுகளுக்கு முன்னலெல்லாம் பெரிய பெரிய பட்டியல்கள் வெளியிடுவதுண்டு. ஒவ்வொரு கிளர்ச்சியின் தன்மையென்ன, அதனோடு தொடர்புள்ள இயல்பூக்கம் என்ன, அது பிறப்பிலிருந்தே உண்டானதா அல்லது சூழ்நிலையால் தோன்றியதா என்று இப்படியெல்லாம் ஆராய்ச்சிகள் நடைபெறும்.
நடத்தைக் கொள்கை உளவியலைத் தோற்றுவித்த வாட்ஸன் என்பவர் பச்சைக் குழந்தைகளைக் கொண்டு ஆராய்ச்சிகள் நடத்தியதன் பயனாக மனிதனுக்கு அச்சம், இனம், அன்பு என்ற மூன்று உள்ளக் கிளர்ச்சிகள்தான் இயல்பாகவே அமைந்திருக்கின்றன என்று கூறினார். இவர் கூறியதைப் பொதுவாக எல்லாரும் ஆமோதித்தார்கள்.
ஆனால் அண்மையிலே சில உளவியலறிஞர்கள் செய்த ஆராய்ச்சியின் விளைவாக மேலே கூறியவாறு குழந்தைகளின் உள்ளக் கிளர்ச்சிகள் தெளிவாகவும் தனித்தனியாகவும் இருக்கின்றனவா என்பதில் ஐயம் தோன்றியிருக்கிறது.
குழந்தைப் பருவத்திலேயே உள்ளக் கிளர்ச்சிகள் இருக்கின்றன என்பதை மட்டும் நாம் தெரிந்து கொண்டால் போதும். அதற்கு மேற்பட்ட ஆராய்ச்சிகளை உளவியல் அறிஞர்களுக்கு விட்டுவிடலாம்.
உள்ளக் கிளர்ச்சியைப் பற்றி இன்னும் ஒரு வேடிக்கையான விவாதம் உண்டு. உள்ளக் கிளர்ச்சி முதலில் தோன்றி அதன் விளைவாகச் செயல் நடைபெறுகிறதா அல்லது செயல் நடைபெற்று அதன் விளைவாக உள்ளக் கிளர்ச்சி தோன்றுகிறதா என் பதிலே பெரிய விவாதம் ஏற்பட்டுவிட்டது.
மனத்திலே துயரம் உண்டாகிறது; அதனால் ஒருவன் அழுகிறான் என்று நாம் சொல்லுகிறோம். அதுதான் உண்மை என்று நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால் வில்லியம் ஜேம்ஸ் என்ற உளவியலறிஞரும், கார்ல் லாங் என்ற உடலியல் வல்லுநரும் நமது நம்பிக்கைக்கு முற்றிலும் மாறான ஒரு கருத்தைப் புதிதாக வெளியிட்டார்கள். “முதலில் மனிதன் அழுகிறான்; பிறகுதான் துயரம் என்ற உள்ளக் கிளர்ச்சி தோன்றுகிறது” என்று அவர்கள் கூறினார்கள். அதாவது உடலிலே மாறுதல்கள் ஏற்பட்ட பிறகே அவற்றிற்கேற்ற உள்ளக் கிளர்ச்சிகள் எழுகின்றன என்று அவர்கள் வாதித்தார்கள்.
இந்தக் கொள்கை உண்மையென்றும் உண்மையன்று என்றும் நிலைநாட்ட எத்தனையோ சோதனைகள் நடந்திருக்கின்றன. “நீ முதலில் ஒட்டம் பிடிக்கிறாய்; பிறகுதான் அச்சம் தோன்றுகிறது" என்று கூறினால் சிரிக்கத்தான் தோன்றும். ஆனால் அவ்வளவு எளிதாக இக்கொள்கையை ஒதுக்கித்தள்ளிவிட இதுவரையிலும் முடியவில்லை.
ஷெரிங்டன், கானன் என்ற இருவர் தாங்கள் செய்த ஆராய்ச்சிகளைக் கொண்டு இக்கொள்கை தவறானது என்று காட்ட சில ஆண்டுகளுக்கு முன்னே முயன்றார்கள். ஆனால் இவர்களுடைய ஆராய்ச்சிகளைக் கொண்டு இக்கொள்கையை முடிவாக மறுக்க முடியாது என்று ஆங்கெல் என்ற மற்றொரு அறிஞர் தக்க காரணங்களுடன் விளக்கியிருக்கிறார்.
இந்த விவாதத்தின் முடிவு எப்படியானலும் உள்ளக் கிளர்ச்சிகளைப் பற்றிப் பொதுவாக நாம் அறிந்துகொள்ள வேண்டிய உண்மைகளை அது பெரிதும் மாற்றிவிடாது.
நமது உடம்பின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு வகையான சுரப்பிகள் (Glands) இருக்கின்றன. வாயில் உமிழ்நீர் சுரப்பது ஒருவகைச் சுரப்பியால் தான். வளர்ச்சிக்கு உதவ ஒருவகைச் சுரப்பி இருக்கிறது. இப்படிப் பல சுரப்பிகள் இருந்து பல வேலைகளைச் செய்கின்றன.
சுரப்பிகளிலே நாளமில்லாத சுரப்பிகள் சில உண்டு. அவை தம்மிடத்துச் சுரக்கும் சுரப்புப் பொருளை நேராக இரத்தத்தில் கலக்கும்படி செய்கின்றன. அவைகள் உள்ளக் கிளர்ச்சிகளால் உடம்பிலும் செயலிலும் ஏற்படும் மாறுதல்களுக்குக் காரணமாக இருக்கின்றனவென்று கண்டிருக்கிறார்கள். ஆட்ரீனல் என்ற சுரப்பி சிறுநீர்ப் பைக்கு மேலே இருக்கிறது. வலி, அச்சம், சினம் ஆகிய கிளர்ச்சிகளால் அந்தச் சுரப்பி பாதிக்கப்படுகிறது என்றும் செயற்கை முறையிலே அச்சுரப்பி நீரை ஒருவனுடைய இரத்தத்தில் சேரும்படி செய்தால் அச்சத்தால் ஏற்படும் உடல் மாறுபாடுகளெல்லாம் உண்டாகிறதென்றும் கானன் என்பார் ஆராய்ந்து கண்டிருக்கிறார். இவ்வாறே மற்றச் சுரப்பிகளின் தன்மைகளையும் ஆராய்ந்து கூறியிருக்கிறார்.
சுரப்பிகள் அல்லது மற்ற உடல் உறுப்புகளின் செய்கைகளால் உள்ளக் கிளர்ச்சிகள் தோன்றுவதானாலும் அல்லது உள்ளக் கிளர்ச்சிகளால் உறுப்புகளின் செய்கைகள் மாறுபாடடைவதானாலும் மனிதனுடைய வாழ்க்கையிலே ஏற்படும் விளைவு ஒன்றுதான். இழிந்த உள்ளக் கிளர்ச்சிகளுக்கு ஆட்பட்ட மனிதன் வீழ்ச்சியடைகிறான். அவற்றிற்கு ஆட்படாமல் அவற்றை உயர்மடைமாற்றம் செய்துகொண்டவன் உயர்வடைகிறான். இந்த உண்மையைத்தான் நாம் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.
அறிவு, பகுத்தறிவு என்றெல்லாம் நாம் பேசுகிறோம். ஆனால் உள்ளக் கிளர்ச்சிகளே ஒருவனுடைய செயல்களுக்கு முக்கியக் காரணமாக இருக்கின்றன. நல்ல பழக்கங்களையும், பற்றுதல்களையும், குறிக்கோள்களையும் உண்டாக்கிக் கொள்வதாலும், மனத்திட்பத்தாலும் ஒருவன் தனது உள்ளக் கிளர்ச்சிகளை நல்வழிப்படுத்திக்கொள்ள முடியுமானால் அவன் மேம்பாடடையலாம். மனச்சான்றும் அறிவும் இம்முயற்சியிலே அவனுக்குத் துணையாக நிற்க வேண்டும்.

Comments

Most Popular

கு. ப. ராஜகோபாலன் என்கிற முழுமை | க. நா. சுப்ரமண்யம்

கு. ப. ராஜகோபாலனின் கதைகளை , அவை எழுதப்பட்டு சற்றேறக் குறைய ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு இன்று படித்துப் பார்க்கும்போது கூட அவர் லாகவமும் , கதை நடத்தும் திறனும் , உருவ , கருத்து அமைதியுடன் மிகவும் சிறப்பாகவே உள்ளத்தில் தட்டுகின்றன. வாழ்க்கையை முழுப்பார்வையுடன் பார்ப்பது அவர்க்கு மிகவும் சிறிய கதைகளிலும் கூடச் சாத்தியமாக இருந்திருக்கிறது. ஆண் , பெண் உறவுகளை , பால் உணர்ச்சிகளை அப்பட்டமாக , உரக்க , மனத்தையும் கண்ணையும் ஒருங்கே உறுத்துகிற மாதிரிச் சொல்வது இன்று பலருக்கும் கைவந்த கலையாக இருக்கிறது. ஆனால் , அதையே சூக்ஷ்மமாகச் செய்கிற காரியம் , கலையுணர்ச்சியுடன் முழுவதும் சொல்லாமல் சொல்லிவிடுகிற காரியம் கு.ப.ரா . வுக்கு மிகவும் சிறப்பாக கைவந்திருந்ததை இன்று படிக்கும்போதும் உணர முடிகிறது. இந்த மென்மையும் , கலை உணர்ச்சியும் பக்கம் பக்கமாக பச்சையாக எதை எதையோ எழுதுகிற தமிழ் எழுத்தாளர்களுக்கு எட்டாத ஒரு விஷயம். அவர்கள் கு.ப.ரா . விடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். புத்தனுடைய துறவுக்கு அசுவகோஷன் முதல் எத்தனையோ இலக்கியாசிரியர்கள் பலர் காரணங்கள் கண்டு சொல்லிவிட்டார்கள். மூப்பு , நோய் , சாவு...

மனமும் அதன் விளக்கமும் | கனவின் பொருள் | பெ. தூரன்

ப ல கனவுகள் சிக்கல் நிறைந்திருக்கின்றன; அவற்றில் தோன்றும் நிகழ்ச்சிகள் மேலாகப் பார்க்கும்போது பொருளற்றவைகளாகவும் இருக்கின்றன. கோ. என்பவர் கண்ட ஒரு கனவை இங்கே ஆராய்வோம். “ஏதோ ஒரு பெரிய கோயில். அங்கே நானும் என் நண்பர்கள் சி. வே. மா. ஆகிய மூவரும் சேர்ந்து ஒருவனைக் கொலை செய்தோம். அவனுடைய மூக்கை மாத்திரம் அறுத்துச் சந்தனத்தில் வைத்துச் சாமிக்கு வைத்தோம். பிணம் வெளியிலேயே கிடந்தது. சி. தான் மூக்கை அறுத்தவர். கடவுளைத் தொழுவதற்காகப் பலர் ஒரு மோட்டார்க் காரில் வந்தார்கள். உடனே நான் பிணத்தைத் துரக்கிக் கோபுரத்தின் மேல் வீசினேன். இதை எனது ஆசிரியர் ஒருவர் பார்த்துக் கொண்டார்.” “நான் ஒடி வந்துவிட்டேன். வழியில் என் நண்பர் வீ. யைச் சந்தித்து வேறொருவனிடம் சைக்கிள் வாங்கி இருவரும் ஏறிக்கொண்டு ஊருக்குச் சென்றோம். வழியில் சி. தம் அண்ணனிடம் ஒன்றும் நடக்காதது போல் வந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கொலை செய்துவிட்டு இவர் இவ்வளவு தாராளமாக வெளியில் நடமாடுகிறாரே என்று வியந்தேன்.” "நாங்கள் ஒரு சத்திரத்தில் புகுந்துகொண்டிருந்தோம். ஆனால் சி. வேறு சில நண்பர்களிடம் சாலையில் சென்றுகொண்டிருந்தார்.” ...

இரு சகோதரர்கள்

  [ அ. கி. கோபாலன், அ. கி. ஜயராமன் நேர்காணல் ] நேர்கண்டவர்: எஸ். குரு படங்கள்: திரு. சுதாகர் நோபல் பரிசு பெற்ற நாவல்களைப் பதிப்பித்த அ. கி. கோபாலன் நீங்கள் பதிப்பாளரானது எப்படி ? தென்னாற்காடு மேலக்குமாரமங்கலம் என் சொந்த ஊர். எங்கள் கிராமத்தில் நான்காவது வகுப்பு படித்தேன். கிராமத்தில் எங்கள் அப்பா விவசாயம் செய்துகொண்டிருந்தார். நிறைய நஞ்சை நிலம் இருந்தது. பங்காளிக் காய்ச்சலினால் எங்கள் சொத்துகள் பறிபோயின. முதலில் என் அண்ணன் அ. கி. ஜெயராமன் சென்னைக்கு வந்து ஒரு ஹோட்டலில் சர்வராகச் சேர்ந்துவிட்டு , அப்புறம் என்னை ஊரிலிருந்து வரவழைத்து , என்னையும் சர்வராகச் சேர்த்துவிட்டார். சைனா பஜார் பழைய ஆரிய பவனுக்கு எதிரே ஆனந்த லட்சுமி பவன் என்று இருந்தது. அங்குதான் சர்வராகச் சேர்ந்தோம். இட்லி அரையணா , காபி முக்காலணா , பீடா காலணா , ஸ்பெஷல் பீடா அரையணா விற்ற காலம் அது. ஹோட்டலுக்கு அருகில் ச. சு. சங்கரலிங்கக் கவிராயர் என்ற நாடகாசிரியர் தங்கியிருந்தார். சங்கரலிங்கக் கவிராயர் , சங்கரதாஸ் சுவாமிகளுக்கு இணையானவர். அவரிடம் நாடகப் பாடல்கள் கேட்டேன். ஹோட்டலில் சக ஊழியர்களிடம் சொல்லிவிட்டு , ஆ...