கொள்ளையோ கொள்ளை | பூர்வபீடிகை இக்கம்பெனியார் இங்கு வந்த காலத்தில் கையில் கிடைத்ததை எல்லாம் பிடுங்கி வெளியேற்றி வந்தார்கள். கபடமான முறையில் திருட வேண்டுமென்று ஏற்படவில்லை. வெட்ட வெளிச்சமாகவே கொள்ளையடித்து வந்தார்கள். பிளாஸி யுத்தத்திற்குப் பிறகு இருந்துவந்த நிலைமையை மெகாலே கீழே கூறியுள்ளவாறு வர்ணிக்கிறார்:- “ இக்கம்பெனியின் மீதும் , அதன் அதிகாரிகள் மீதும் தனமானது மழையைப் போல் கொட்டிக்கொண்டேயிருந்தது. எட்டு லட்சம் பவுன்கள் பெறுமானமுள்ள வெள்ளி ரூபாய்கள் மூர்ஷிதாபாத்தினின்று கல்கத்தாவிலுள்ள வில்லியம் கோட்டைக்கு நதி மார்க்கமாக அனுப்பப்பட்டது. அதுவரை காய்ந்து கிடந்த கல்கத்தா இப்பணம் கிடைத்தவுடன் ஒளிபெற்று , ஆடம்பரமடைந்துவிட்டது. உடனே இங்கிலாந்திலும் சுறுசுறுப்பு உண்டாயிற்று. தலைகீழாகப் படுத்திருந்த வியாபாரங்கள் மறுபடியும் ஆரம்பிக்கப்பட்டன. ஆங்கில ஜனங்களுக்கு மீண்டும் மூச்சு வந்துவிட்டதாகவே காணப்பட்டது. எங்கும் பண நடமாட்டம் அதிகமாயிற்று. தன் மனம் திருப்தி அடையும் வரை கிளைவும் திரவியம் சேகரித்துக்கொண்டார். இவரைத் தடுக்கவோ , எதிர்க்கவோ அங்கு யாரும் கிடையாது. ” ஆங்கில சாம்ராஜ்யத்திற...