Skip to main content

கொள்ளையோ கொள்ளை | கிழக்கு இந்தியக் கம்பெனி வழிமறித்தல் | ஜே. சி. குமரப்பா


இக்கம்பெனியார் இங்கு வந்த காலத்தில் கையில் கிடைத்ததை எல்லாம் பிடுங்கி வெளியேற்றி வந்தார்கள். கபடமான முறையில் திருட வேண்டுமென்று ஏற்படவில்லை. வெட்ட வெளிச்சமாகவே கொள்ளையடித்து வந்தார்கள். பிளாஸி யுத்தத்திற்குப் பிறகு இருந்துவந்த நிலைமையை மெகாலே கீழே கூறியுள்ளவாறு வர்ணிக்கிறார்:-
இக்கம்பெனியின் மீதும், அதன் அதிகாரிகள் மீதும் தனமானது மழையைப் போல் கொட்டிக்கொண்டேயிருந்தது. எட்டு லட்சம் பவுன்கள் பெறுமானமுள்ள வெள்ளி ரூபாய்கள் மூர்ஷிதாபாத்தினின்று கல்கத்தாவிலுள்ள வில்லியம் கோட்டைக்கு நதி மார்க்கமாக அனுப்பப்பட்டது. அதுவரை காய்ந்து கிடந்த கல்கத்தா இப்பணம் கிடைத்தவுடன் ஒளிபெற்று, ஆடம்பரமடைந்துவிட்டது. உடனே இங்கிலாந்திலும் சுறுசுறுப்பு உண்டாயிற்று. தலைகீழாகப் படுத்திருந்த வியாபாரங்கள் மறுபடியும் ஆரம்பிக்கப்பட்டன. ஆங்கில ஜனங்களுக்கு மீண்டும் மூச்சு வந்துவிட்டதாகவே காணப்பட்டது. எங்கும் பண நடமாட்டம் அதிகமாயிற்று. தன் மனம் திருப்தி அடையும் வரை கிளைவும் திரவியம் சேகரித்துக்கொண்டார். இவரைத் தடுக்கவோ, எதிர்க்கவோ அங்கு யாரும் கிடையாது.
ஆங்கில சாம்ராஜ்யத்திற்கு இந்தியாவில் அடிகோலிய இக் கிளைவ் இங்குக் கொள்ளை அடிக்கும் முறையை முதலில் ஆரம்பித்து நடத்திவைத்தான். இவ்விடம் கொள்ளை கொண்ட திரவியம் முழுவதும் இங்கிலாந்து சென்றடைந்தது. அந்நாட்டிற்கும் போதுமான மூலதனம் கிடைத்தது. மூன்றே வருஷத்திற்குள் சீர்திருத்தப்பட்ட தரி (Fly Shuttle) வெளிக்கொண்டுவரப்பட்டது. அடுத்த நான்கு வருஷங்களுக்குள் புதிய நூல் நூற்கும் இயந்திரம் (Hargreaves Spinning Jenny) வெளிவந்தது. 1768ல் வாட் என்பவர் நீராவி என்ஜினை நிர்மாணித்தார். 1778ல் கிராம்டன் என்பவர் கண்டுபிடித்த மியூல்என்ற நெசவு இயந்திரம் வெளிவந்தது. விசையினால் இயக்கப்படக்கூடிய தரி 1785-ல் பேடன்ட்’ (Patent) செய்துகொள்ளப்பட்டது. இதுவே இங்கிலாந்தில் கைத்தொழில் முன்னேற்றத்திற்கும் இந்தியாவின் கைத்தொழில் பிற்போக்கிற்கும் அடிப்படையான இதிகாசச் சுருக்கமாகும். ஆராய்ச்சியாளர்களின் யுக்திகளைக் காரியாம்சத்தில் செய்து பரீட்சிக்கத் தேவையான மூலதனம் இவ்வாறு இந்தியாவினின்றே கொள்ளையிட்டுக் கொண்டுபோகப்பட்டது.
"உலகம் தோன்றிய நாள் முதல் எத்தகைய தொழிலும் பிரிட்டிஷார் இந்தியாவில் நடத்திய கொள்ளையைப்போல் இவ்வளவு அளவற்ற லாபத்தை அளித்ததே கிடையாது; சுமார் ஐம்பது வருஷங்கள் வரை இவர்களுக்கு ஒருவிதமான போட்டியும் இல்லாது ஏகபோகமாக அனுபவிக்க முடிந்தது.''
1750-ல் இங்கிலாந்தில் ஒரு வட்டிக்கடையும் இருக்கவில்லை. ஆனால் 1790-லோ ஒவ்வொரு வியாபார ஸ்தலத்திலும் ஏராளமான வட்டிக்கடைகள் ஏற்பட்டுவிட்டன.
வங்காளத்திலிருந்து வந்த ஏராளமான வெள்ளியின் மூலம் இங்கிலாந்தின் தனம் அதிகரித்ததோடு அல்லாமல் பணத்தின் நடமாட்டமும் பெருகிற்று. 1759-ல் 10, 15 பவுன்களுக்கு நோட்டுகள் அச்சடித்து வெளியிடப்பட்டன. கிராமாந்தரங்களிலும் இந்த நோட்டுகள் ஏராளமாகப் புழக்கத்திற்கு வந்தன.
ஏறக்குறைய பிளாஸி யுத்தம் ஆரம்பித்தது முதல் வாடர்லூ யுத்தம் முடியும் வரை சுமார் பத்தாயிரம் லட்சம் பவுன்கள் மதிப்புள்ள இந்திய திரவியம் இங்கிலாந்து பாங்குகளுக்குச் சென்றிருக்கின்றது. அந்தச் சமயத்து ரூபாய்களுக்குத் தற்கால ரூபாய்களைவிடப் பல மடங்கு அதிகமான மதிப்பு இருந்துவந்தது. ஆகவே இவர்கள் கொண்டு சென்ற இந்தக் கணக்கற்ற தொகையின் மதிப்பை ஊகித்துப் பாருங்கள். இவ்வளவு தொகையையும் கொண்டு போனார்களே, அவைகளைத் திருப்பிக் கொடுக்கும் எண்ணத்துடன் எடுத்துச் சென்றார்களா? அதுதான் இல்லை. ஏனெனில் இவ்வளவு தொகையையும் அவர்களின் நாட்டுக்கு வேண்டிய கடனாகஎடுத்துச் சென்றிருந்தால் இவர்களின் தேசியக் கடன் ஏராளமாக இருக்க வேண்டாமா? 1815-ம் வருஷத்துப் புள்ளிவிவரப்படி இந்நாட்டாரின் தேசியக் கடன் சுமார் 8610 லட்சம் பவுன்கள் என்று கணக்குக் காட்டுகிறார்கள். அதற்கு முன் 50 வருஷமாக இந்தியாவிலிருந்து எடுத்துச் சென்ற தொகையில் இது மிகச்சிறு அளவேயாகும்.
முதல் விழுங்குதல்
மேலே சொன்னவை எல்லாம் வெட்ட வெளிச்சமாக, சற்றும் கூச்சமின்றிக் கொள்ளை கொண்ட காலம். இவ்வளவு கொள்ளை அடித்துப் பணக்காரர்கள் என்ற கௌரவமான பட்டம் கிடைத்திருக்கிறது. முன்போல தங்கள் வேலையை வெளிப்படையாகச் செய்துவர சங்கோசப்பட்டார்கள். ஆகவே இந்த இரண்டாவது முறையைக் கையாளத் தொடங்கினார்கள். இந்தியாவில் கிடைத்த வரி வகைகளைக் கொண்டு வியாபாரச் சரக்குகளை வாங்கி இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்துவந்தார்கள். இந்த வியாபாரச் சரக்குகள் முழுதும் கம்பெனியார்களின் சொந்தப் பொருள்களாகக் கருதப்பட்டன. முதலில் சொன்ன முறைக்கும், இந்தப் புதிய முறைக்கும் வித்தியாசம் என்ன என்றால், முன்பு பணமாகக் கொண்டுபோனார்கள் என்பதே. இரண்டும் சந்தேகமில்லாமல் கொள்ளைதான்.
கம்பெனியார்கள் இவ்வளவு ஏராளமான திரவியங்களை இங்கிருந்து அள்ளிச்செல்ல முடிந்ததானால் இந்தியாவுக்குப் பொதுக்கடன் உண்டாகியிருக்கக் காரணமே இல்லை. சற்று கௌரவமான முறையில் இந்திய திரவியங்கள் யாவற்றையும் இங்கிலாந்து பாங்குக்குக் கொண்டு சேர்த்தார்கள். கம்பெனியார் இந்தியாவின் அரசாங்கம் நடத்தும் பொறுப்பு ஏற்றிருந்தார்கள். குடிபடைகளிடமிருந்து வசூலிக்கப்படும் வரியானது திரும்ப அவர்களின் நலனிற்காகவும் தேச முன்னேற்றத்திற்காகவும் செலவு செய்யப்படவேண்டும். நாட்டின் வரியை மனம் போனபடி செலவு செய்தல் நீதியான அரசுமுறை ஆகாது. அப்படி இருக்க கிடைத்த வரி யாவற்றையும் வியாபாரச் சரக்குகளாக மாற்றி வெளிநாடு அனுப்பிவைப்பது என்பது மிக்க கொடுமையான தேசத் துரோகமாகும். இதனால் குடிபடைகள் மிகவும் அல்லலுற்றார்கள். ஒவ்வொரு தடவையும் வரி செலுத்தினார்களே ஒழிய அதற்குப் பிரதி உபகாரமாக அரசாங்கத்தாரிடமிருந்து யாதொரு நலனையும் பெற்றார்களில்லை. 1793 முதல் 1812 வரையில் வருஷம் ஒன்றுக்குச் சராசரி 130 லட்சம் பவுன்கள் வீதம் இவ்வரிப்பணம் நாடுகடத்தப்பட்டிருக்கிறது.

கொள்ளையோ கொள்ளை மின் நூலை வாங்க,
https://tinyurl.com/KollayoKollai

Comments

Most Popular

புதுமையும் பித்தமும் - 3 | க. நா. சுப்ரமண்யம்

புதுமையும் பித்தமும் - 2 | க. நா. சுப்ரமண்யம் இந்தப் பகுதியில் பொதுவாக இலக்கியத்தைப் பற்றியும் , சிறப்பாகத் தமிழ்ச் சிறுகதை பற்றியும் புதுமைப்பித்தன் சொல்லிப் போயிருக்கிற சில விஷயங்களைப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. அவர் படைப்புகளில் ஆட்சி செலுத்திய கொள்கைகள் , சித்தாந்தங்கள் முதலியவற்றையும் , அவருக்கிருந்த இலக்கிய நோக்கம் , வாழ்க்கை லட்சியங்கள் இவற்றையும் ஓரளவுக்குத் தெரிந்துகொள்ள இது உபயோகமாக இருக்கும். இலக்கியம் என்றால் என்ன என்கிற கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்கிற மாதிரி தன் கட்டுரைத் தொகுப்பிற்கு அவர் முன்னுரை எழுதுகிறபோது சில விஷயங்களைச் சொல்லியிருக்கிறார். ‘வாழ்வு , வாழ்க்கை என்று இரண்டு பதங்கள் உண்டு. இவற்றிடையே உள்ள தொடர்பையோ தொடர்பற்ற தன்மையையோ விளக்குவது , மனித சிந்தனையின் சாரம். வாழ்வு எனில் தோற்றம் , ஸ்திதி , மறைவு என முக்கூறாகத் தோன்றும் பிரபஞ்சத்தன்மை. வாழ்க்கை என்பது தனிப்பட்ட ஜீவராசியின் உயிர்ப் பாசத்தினால் நிகழும் அவஸ்தை. இவ்விரண்டுக்கும் உள்ள தொடர்பைக் காட்டுவது மனித சிந்தனையின் சாரம். அது தத்துவமாக உருவாகிறது. வாழ்வின் நியதி ஒன்று , சூத்திரம் ஒன்று என்று வற்பு...

மனமும் அதன் விளக்கமும் | கனவின் பொருள் | பெ. தூரன்

ப ல கனவுகள் சிக்கல் நிறைந்திருக்கின்றன; அவற்றில் தோன்றும் நிகழ்ச்சிகள் மேலாகப் பார்க்கும்போது பொருளற்றவைகளாகவும் இருக்கின்றன. கோ. என்பவர் கண்ட ஒரு கனவை இங்கே ஆராய்வோம். “ஏதோ ஒரு பெரிய கோயில். அங்கே நானும் என் நண்பர்கள் சி. வே. மா. ஆகிய மூவரும் சேர்ந்து ஒருவனைக் கொலை செய்தோம். அவனுடைய மூக்கை மாத்திரம் அறுத்துச் சந்தனத்தில் வைத்துச் சாமிக்கு வைத்தோம். பிணம் வெளியிலேயே கிடந்தது. சி. தான் மூக்கை அறுத்தவர். கடவுளைத் தொழுவதற்காகப் பலர் ஒரு மோட்டார்க் காரில் வந்தார்கள். உடனே நான் பிணத்தைத் துரக்கிக் கோபுரத்தின் மேல் வீசினேன். இதை எனது ஆசிரியர் ஒருவர் பார்த்துக் கொண்டார்.” “நான் ஒடி வந்துவிட்டேன். வழியில் என் நண்பர் வீ. யைச் சந்தித்து வேறொருவனிடம் சைக்கிள் வாங்கி இருவரும் ஏறிக்கொண்டு ஊருக்குச் சென்றோம். வழியில் சி. தம் அண்ணனிடம் ஒன்றும் நடக்காதது போல் வந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கொலை செய்துவிட்டு இவர் இவ்வளவு தாராளமாக வெளியில் நடமாடுகிறாரே என்று வியந்தேன்.” "நாங்கள் ஒரு சத்திரத்தில் புகுந்துகொண்டிருந்தோம். ஆனால் சி. வேறு சில நண்பர்களிடம் சாலையில் சென்றுகொண்டிருந்தார்.” ...

மணிபல்லவம் - ஜம்பு கொல பட்டினம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்ககாலத்து நூலாகிய மணிமேகலையிலே, இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப்பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள பழைய பௌத்த நூல்களிலேயும் இலங்கைத்தீவின் வடகோடியில் இருந்த ஜம்புகோல் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. தமிழ் நூலில் கூறப்படும் குறிப்பு களைக் கொண்டும் பாலி மொழி நூல்களில் கூறப்படும் குறிப்புகளைக் கொண்டும் மணிபல்லவமும் ஜம்புகொல பட்டினமும் ஒரே இடம் என்று துணியலாம். பெயர் வேறுபடு வதிலிருந்து இரண்டும் வெவ்வேறிடங்கள் எனக் கருதும்படி இருந்தாலும், இவைகளைப்பற்றிக் கூறப்படும் செய்திகளை உற்றுநோக்கினால், இரண்டும் ஒன்றே என்பது ஐயமற விளங்குகிறது. இதனை ஈண்டு ஆராய்வோம். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலேதான் மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்தது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை கூறுவது காண்க. சோழ நாட்டின் துறைமுகப்பட்டினமாகிய புகார்ப்பட்டினத்தில் இருந்து தெற்கே 30 யோசனை தொலைவில் மணிபல்லவம் இருந்தது (...