Skip to main content

கொள்ளையோ கொள்ளை | கிழக்கு இந்தியக் கம்பெனி வழிமறித்தல் | ஜே. சி. குமரப்பா


இக்கம்பெனியார் இங்கு வந்த காலத்தில் கையில் கிடைத்ததை எல்லாம் பிடுங்கி வெளியேற்றி வந்தார்கள். கபடமான முறையில் திருட வேண்டுமென்று ஏற்படவில்லை. வெட்ட வெளிச்சமாகவே கொள்ளையடித்து வந்தார்கள். பிளாஸி யுத்தத்திற்குப் பிறகு இருந்துவந்த நிலைமையை மெகாலே கீழே கூறியுள்ளவாறு வர்ணிக்கிறார்:-
இக்கம்பெனியின் மீதும், அதன் அதிகாரிகள் மீதும் தனமானது மழையைப் போல் கொட்டிக்கொண்டேயிருந்தது. எட்டு லட்சம் பவுன்கள் பெறுமானமுள்ள வெள்ளி ரூபாய்கள் மூர்ஷிதாபாத்தினின்று கல்கத்தாவிலுள்ள வில்லியம் கோட்டைக்கு நதி மார்க்கமாக அனுப்பப்பட்டது. அதுவரை காய்ந்து கிடந்த கல்கத்தா இப்பணம் கிடைத்தவுடன் ஒளிபெற்று, ஆடம்பரமடைந்துவிட்டது. உடனே இங்கிலாந்திலும் சுறுசுறுப்பு உண்டாயிற்று. தலைகீழாகப் படுத்திருந்த வியாபாரங்கள் மறுபடியும் ஆரம்பிக்கப்பட்டன. ஆங்கில ஜனங்களுக்கு மீண்டும் மூச்சு வந்துவிட்டதாகவே காணப்பட்டது. எங்கும் பண நடமாட்டம் அதிகமாயிற்று. தன் மனம் திருப்தி அடையும் வரை கிளைவும் திரவியம் சேகரித்துக்கொண்டார். இவரைத் தடுக்கவோ, எதிர்க்கவோ அங்கு யாரும் கிடையாது.
ஆங்கில சாம்ராஜ்யத்திற்கு இந்தியாவில் அடிகோலிய இக் கிளைவ் இங்குக் கொள்ளை அடிக்கும் முறையை முதலில் ஆரம்பித்து நடத்திவைத்தான். இவ்விடம் கொள்ளை கொண்ட திரவியம் முழுவதும் இங்கிலாந்து சென்றடைந்தது. அந்நாட்டிற்கும் போதுமான மூலதனம் கிடைத்தது. மூன்றே வருஷத்திற்குள் சீர்திருத்தப்பட்ட தரி (Fly Shuttle) வெளிக்கொண்டுவரப்பட்டது. அடுத்த நான்கு வருஷங்களுக்குள் புதிய நூல் நூற்கும் இயந்திரம் (Hargreaves Spinning Jenny) வெளிவந்தது. 1768ல் வாட் என்பவர் நீராவி என்ஜினை நிர்மாணித்தார். 1778ல் கிராம்டன் என்பவர் கண்டுபிடித்த மியூல்என்ற நெசவு இயந்திரம் வெளிவந்தது. விசையினால் இயக்கப்படக்கூடிய தரி 1785-ல் பேடன்ட்’ (Patent) செய்துகொள்ளப்பட்டது. இதுவே இங்கிலாந்தில் கைத்தொழில் முன்னேற்றத்திற்கும் இந்தியாவின் கைத்தொழில் பிற்போக்கிற்கும் அடிப்படையான இதிகாசச் சுருக்கமாகும். ஆராய்ச்சியாளர்களின் யுக்திகளைக் காரியாம்சத்தில் செய்து பரீட்சிக்கத் தேவையான மூலதனம் இவ்வாறு இந்தியாவினின்றே கொள்ளையிட்டுக் கொண்டுபோகப்பட்டது.
"உலகம் தோன்றிய நாள் முதல் எத்தகைய தொழிலும் பிரிட்டிஷார் இந்தியாவில் நடத்திய கொள்ளையைப்போல் இவ்வளவு அளவற்ற லாபத்தை அளித்ததே கிடையாது; சுமார் ஐம்பது வருஷங்கள் வரை இவர்களுக்கு ஒருவிதமான போட்டியும் இல்லாது ஏகபோகமாக அனுபவிக்க முடிந்தது.''
1750-ல் இங்கிலாந்தில் ஒரு வட்டிக்கடையும் இருக்கவில்லை. ஆனால் 1790-லோ ஒவ்வொரு வியாபார ஸ்தலத்திலும் ஏராளமான வட்டிக்கடைகள் ஏற்பட்டுவிட்டன.
வங்காளத்திலிருந்து வந்த ஏராளமான வெள்ளியின் மூலம் இங்கிலாந்தின் தனம் அதிகரித்ததோடு அல்லாமல் பணத்தின் நடமாட்டமும் பெருகிற்று. 1759-ல் 10, 15 பவுன்களுக்கு நோட்டுகள் அச்சடித்து வெளியிடப்பட்டன. கிராமாந்தரங்களிலும் இந்த நோட்டுகள் ஏராளமாகப் புழக்கத்திற்கு வந்தன.
ஏறக்குறைய பிளாஸி யுத்தம் ஆரம்பித்தது முதல் வாடர்லூ யுத்தம் முடியும் வரை சுமார் பத்தாயிரம் லட்சம் பவுன்கள் மதிப்புள்ள இந்திய திரவியம் இங்கிலாந்து பாங்குகளுக்குச் சென்றிருக்கின்றது. அந்தச் சமயத்து ரூபாய்களுக்குத் தற்கால ரூபாய்களைவிடப் பல மடங்கு அதிகமான மதிப்பு இருந்துவந்தது. ஆகவே இவர்கள் கொண்டு சென்ற இந்தக் கணக்கற்ற தொகையின் மதிப்பை ஊகித்துப் பாருங்கள். இவ்வளவு தொகையையும் கொண்டு போனார்களே, அவைகளைத் திருப்பிக் கொடுக்கும் எண்ணத்துடன் எடுத்துச் சென்றார்களா? அதுதான் இல்லை. ஏனெனில் இவ்வளவு தொகையையும் அவர்களின் நாட்டுக்கு வேண்டிய கடனாகஎடுத்துச் சென்றிருந்தால் இவர்களின் தேசியக் கடன் ஏராளமாக இருக்க வேண்டாமா? 1815-ம் வருஷத்துப் புள்ளிவிவரப்படி இந்நாட்டாரின் தேசியக் கடன் சுமார் 8610 லட்சம் பவுன்கள் என்று கணக்குக் காட்டுகிறார்கள். அதற்கு முன் 50 வருஷமாக இந்தியாவிலிருந்து எடுத்துச் சென்ற தொகையில் இது மிகச்சிறு அளவேயாகும்.
முதல் விழுங்குதல்
மேலே சொன்னவை எல்லாம் வெட்ட வெளிச்சமாக, சற்றும் கூச்சமின்றிக் கொள்ளை கொண்ட காலம். இவ்வளவு கொள்ளை அடித்துப் பணக்காரர்கள் என்ற கௌரவமான பட்டம் கிடைத்திருக்கிறது. முன்போல தங்கள் வேலையை வெளிப்படையாகச் செய்துவர சங்கோசப்பட்டார்கள். ஆகவே இந்த இரண்டாவது முறையைக் கையாளத் தொடங்கினார்கள். இந்தியாவில் கிடைத்த வரி வகைகளைக் கொண்டு வியாபாரச் சரக்குகளை வாங்கி இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்துவந்தார்கள். இந்த வியாபாரச் சரக்குகள் முழுதும் கம்பெனியார்களின் சொந்தப் பொருள்களாகக் கருதப்பட்டன. முதலில் சொன்ன முறைக்கும், இந்தப் புதிய முறைக்கும் வித்தியாசம் என்ன என்றால், முன்பு பணமாகக் கொண்டுபோனார்கள் என்பதே. இரண்டும் சந்தேகமில்லாமல் கொள்ளைதான்.
கம்பெனியார்கள் இவ்வளவு ஏராளமான திரவியங்களை இங்கிருந்து அள்ளிச்செல்ல முடிந்ததானால் இந்தியாவுக்குப் பொதுக்கடன் உண்டாகியிருக்கக் காரணமே இல்லை. சற்று கௌரவமான முறையில் இந்திய திரவியங்கள் யாவற்றையும் இங்கிலாந்து பாங்குக்குக் கொண்டு சேர்த்தார்கள். கம்பெனியார் இந்தியாவின் அரசாங்கம் நடத்தும் பொறுப்பு ஏற்றிருந்தார்கள். குடிபடைகளிடமிருந்து வசூலிக்கப்படும் வரியானது திரும்ப அவர்களின் நலனிற்காகவும் தேச முன்னேற்றத்திற்காகவும் செலவு செய்யப்படவேண்டும். நாட்டின் வரியை மனம் போனபடி செலவு செய்தல் நீதியான அரசுமுறை ஆகாது. அப்படி இருக்க கிடைத்த வரி யாவற்றையும் வியாபாரச் சரக்குகளாக மாற்றி வெளிநாடு அனுப்பிவைப்பது என்பது மிக்க கொடுமையான தேசத் துரோகமாகும். இதனால் குடிபடைகள் மிகவும் அல்லலுற்றார்கள். ஒவ்வொரு தடவையும் வரி செலுத்தினார்களே ஒழிய அதற்குப் பிரதி உபகாரமாக அரசாங்கத்தாரிடமிருந்து யாதொரு நலனையும் பெற்றார்களில்லை. 1793 முதல் 1812 வரையில் வருஷம் ஒன்றுக்குச் சராசரி 130 லட்சம் பவுன்கள் வீதம் இவ்வரிப்பணம் நாடுகடத்தப்பட்டிருக்கிறது.

கொள்ளையோ கொள்ளை மின் நூலை வாங்க,
https://tinyurl.com/KollayoKollai

Comments

Most Popular

மனமும் அதன் விளக்கமும் - மனமெனும் மாயம் | பெ. தூரன்

ம னம் என்பதென்ன? அது எங்கே இருக்கிறது? கை, கால், கண், இதயம் என்றால் உடம்பில் உள்ள உறுப்புகள் என்று உடனே தெரிகிறது. அவைகளுக்கு வடிவம் உண்டு. பருமன் உண்டு. ஆதலால் அவைகளை எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மனம் என்பது எது? அதற்கு வடிவம் உண்டா? பருமன் உண்டா? தொட்டுப் பார்த்து அறிந்துகொள்ள முடியுமா? இவ்வாறு எண்ணிப் பார்த்தால் ஒன்றும் விளங்குவதில்லை. இவ்வாறு எண்ணுவதற்கு அந்த மனமே காரணமாக இருக்கிறதென்று தோன்றுகிறது. ஆனால் அது என்ன என்று மட்டும் எளிதில் அறிந்துகொள்ள முடிகிறதில்லை. மனத்திற்கு உருவமில்லை; கன பரிமாணமும் இல்லை. மனம் என்பது தசை, நரம்பு முதலியவைகளால் ஆக்கப்பட்டதன்று. அது சடப் பொருள் அன்று; அது சூக்குமப் பொருள், சடப் பொருள் என்றால் அது உடம்பைச் சேர்ந்த ஒர் உறுப்பாகிவிடும்; எளிதாக அதை அறிந்துகொள்ளவும் முடியும். சிலர் மூளைதான் மனம் என்று தவறாகக் கருதுகிறார்கள். மூளை என்பது உடம்போடு சேர்ந்த ஒரு பருப்பொருளான உறுப்பு. அது மனம் அல்ல. சூக்குமப் பொருளாக மனம் இருக்கிறதென்று மட்டும் நமக்குப் புலனாகிறது. அந்த மனந்தான் ஆசைகள், எண்ணங்கள், நோக்கங்கள், நம்பிக்கைகள் முதலியவற்றிற்கு இடமாயிரு

எழுத்தாளர்களும் மின்னூல்களும்

இது குறைந்தது இரண்டு மின்னூல்களாவது வெளியிட்டுள்ள தமிழ் எழுத்தாளர்களின் அகரவரிசை தொகுப்பு. அவ்வப்போது புதிய இணைப்புகள் சேர்க்கப்படுகின்றன. இணைப்புகளில் அந்தந்த எழுத்தாளர்களின் இனி வரும் நூல்களும் தொகுக்கப்படும். கடைசியாக செப்டம்பர் 03, 2020 அன்று புதுப்பிக்கப்பட்டது.) அசோகமித்திரன் https://amzn.to/3cIKLFC |  https://amzn.to/3avBTS4 |  https://amzn.to/2zqxsLz அம்பை  https://amzn.to/3eIsOsl அருட்செல்வப்பேரரசன்  https://amzn.to/3eOosQr அருண் நரசிம்மன்  https://amzn.to/2VRkUV4 அழ. வள்ளியப்பா  https://amzn.to/2ZcvybO அழகிய பெரியவன்  https://cutt.ly/Lft1hhC அழகுநிலா  https://amzn.to/37bgFc5 அனோஜன் பாலகிருஷ்ணன்  https://amzn.to/2KvZM1n அஜயன் பாலா  https://amzn.to/2xJFC1e அ. கா. பெருமாள்  https://cutt.ly/pfs2w5j அ. வெண்ணிலா  https://cutt.ly/9fhYybK ஆரணி குப்புசாமி முதலியார்  https://amzn.to/2V1OWWD ஆ. இரா. வேங்கடாசலபதி  https://amzn.to/2RZQrD0 ஆ. சிவசுப்பிரமணியன் https://amzn.to/2xHVVvp ஆத்மார்த்தி  https://amzn.to/3eOnx2r ஆனந்த்  https://cutt.ly/LaTpEs7 ஆர். சிவகும

மொழிபெயர்ப்பு | க. நா. சுப்ரமண்யம்

மொழிபெயர்ப்பு என்பதைச் சாதாரணமாக ஒரு கலை என்று சொல்வது வழக்கமில்லை. கலையோ , தொழிலோ - மொழிபெயர்ப்பு என்பது இலக்கியத்திலே ஒரு தனித் துறை. அது மிகவும் அவசியமானது. இலக்கிய வளர்ச்சியின் அடிப்படையான காரியங்களிலே மொழிபெயர்ப்பும் ஒன்று. மொழிபெயர்ப்புகள் அதிகம் இல்லாத காலத்திலே இலக்கிய வளர்ச்சி வேகமாக நடைபெறுவதில்லை என்பது சரித்திரபூர்வமாக நமக்குத் தெரிகிற உண்மை. தமிழிலே மொழிபெயர்ப்புகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தோன்றிவிட்டன. கம்பனை மொழிபெயர்ப்பு நூல் என்று சொல்லமுடியாது ; ஆனால் திருக்குறளின் ஒரு பகுதி மொழிபெயர்ப்பு நூல் என்று திடமாகச் சொல்லலாம். மனு , பரதர் , கெளடில்யர் முதலியவர்களின் சம்ஸ்கிருத சூத்திரங்களைக் குறளாசிரியர் மொழிபெயர்த்துத் தமிழாக்கித் தந்திருக்கிறார். தமிழாக்கி என்று சொல்வதிலே ஒரு விஷயம் அடங்கியிருக்கிறது. தமிழிலே வெளிவருகிற மொழிபெயர்ப்புகள் தமிழாகத்தான் இருக்கவேண்டுமா என்று என்னை யாராவது கேட்டால் , வேண்டாம் இருக்கக்கூடாது என்றே நான் பதில் சொல்லுவேன். எந்த மொழிபெயர்ப்புமே முதல் நூல் போலாகிவிடக்கூடாது - முழுதும் தமிழாகிவிடக்கூடாது. மொழிபெயர்ப்பாசிரியன் முத