Skip to main content

ஆஸ்பத்திரி காட்சி | தி. ஜ. ரங்கநாதன்


ஆஸ்பத்திரியில் மிகவும் ஒழுங்காக காந்தி நடந்துகொண்டார். இது டாக்டருக்கு மகிழ்ச்சி அளித்தது; நர்ஸுக்குப் பிரியமாயிருந்தது. எல்லாரும் காந்தியிடம் அன்பு கொண்டார்கள்.
ஒரு நர்ஸ் இங்கிலீஷ்காரி. இங்கிலாந்து, ஆப்பிரிக்கா ஆகிய இரண்டு நாடுகளின் ஆஸ்பத்திரிகளிலும் பணிபுரிந்தவள்; நீண்ட கால அனுபவம் உடையவள். மிகவும் கண்டிப்பாய் நடப்பவள்.
"நோயாளிகளிடம் நல்ல பெயர் வாங்க ஆசைப்படாதே. அதற்கு ஒரு நாளும் முயற்சி செய்யாதே" இப்படித்தான் அவளுடைய டாக்டர்கள் சொல்வார்களாம். காந்திக்கு இதை எல்லாம் அவள்தான் சொன்னாள்.
மூன்று நாள்கள் சென்றன. காந்தி மீது அவள் பற்று கொண்டாள். காந்தியின் அறையை அலங்காரம் செய்தாள். பூக்களைக் கொண்டுவந்தாள்; அழகழகாய் ஜோடித்து வைத்தாள்.
"எப்படி இருக்கிறது அறை? என் கைவேலையைப் பார்த்தீர்களா?" என்று காந்தியைக் கேட்டாள்.
அங்கு இன்னொரு நர்ஸ் இருந்தாள். அவள் மிக இளம் பெண். "என் மனத்துக்கு இசைந்த முதல் நோயாளி இவர்தாம். காந்திக்குப் பணிவிடை செய்வதே ஓர் இன்பம். அது எனக்குக் கிடைத்த பாக்கியம்என்றாள். அவள் காந்தி பற்றி நல்ல அறிக்கை எழுதினாள்; அதில் அவரைப் பாராட்டியிருந்தாள்.
டாக்டர் வந்தார். "இதற்கு முன் இந்த மாதிரி அறிக்கையை நீ எழுதியதே இல்லையே!" என்று அவளைக் கேட்டார்.
"இதற்குமுன் இந்த மாதிரி நோயாளி எனக்குக் கிட்டியது இல்லையே!" என்று அவள் பதில் சொன்னாள்.
மற்ற நர்ஸுகள் அவளைக் கிண்டல் செய்தார்கள். "என்ன இது! காந்தியிடம் மிகமிகப் பிரியம் கொள்கிறாயே; வேடிக்கைதான்!" என்றார்கள்.
"ஆமாம். அவருக்குப் பணிவிடை செய்வது ஒரு பாக்கியம். அது உங்களுக்குக் கிட்டவில்லை. கிட்டினால், நீங்களும் என் போல்தான் நடப்பீர்கள்!" என்று அவள் கூறினாள்.
இதை அவளே மஹாதேவ தேசாயிடம் சொன்னாள். அவர் காந்தியின் காரியதரிசி; அதோடு துணைவருங்கூட.
வெள்ளைக்கார டாக்டர் மட்டும் என்ன அவரும் காந்தியிடம் பேரன்பு செலுத்தினார். அந்த டாக்டரை மக்களெல்லாம் பாராட்டினார்கள்; அவரைப் புகழ்ந்து கடிதம் எழுதினார்கள்; தந்தி அடித்தார்கள்.
எண்ணற்ற கடிதங்கள், தந்திகள் பறந்தன!
"இத்தனைக்கும் நான் எப்படிப் பதில் எழுதுவேன்" என்று டாக்டர் மலைத்தார்.
எல்லோருக்கும் பொதுவாய்ப் பத்திரிகையிலே எழுதிவிடுகிறேன்என்றார். அப்படியே செய்தார்.
பெரிய பெரிய தலைவர்களெல்லாம் புனா நகருக்கு ஓடி வந்தார்கள்; காந்தியைப் பார்க்கத்தான்.
காந்திக்கு ஓய்வு வேண்டும்; அவருக்குத் தொல்லை கொடுக்கக்கூடாது - இது எல்லாருக்கும் தெரியும்.
ஜயகர் வந்தார். "நான் எட்ட இருந்து தரிசனம் செய்கிறேன்" என்றார்.
ஜவஹர்லால் நேரு வந்தார். "நான் முதலிலே வந்துவிடவில்லை; எல்லாருக்கும் கடைசியிலே வந்து காண்கிறேன்" என்றார். காந்தியின் மகன் தேவதாஸிடம் இப்படி உறுதி கூறினார்.
மௌலானா சௌகத் அலி வந்தார். காந்தி பேச முயன்றார். "நீங்கள் என்னோடு பேசவே கூடாது. நான் பதில் சொல்லமாட்டேன்" என்று மௌலானா சொல்லிவிட்டார். படுக்கையைத் துழாவினார். காந்தியின் பாதத்தைப் போர்வை மூடியிருந்தது. அதை விலக்கினார். பாதத்தை முத்தமிட்டார்; விடைபெற்றார்.
சங்கர்லால் பாங்கர் வந்தார்; அவருக்குத் துயரம் நெஞ்சை அடைத்தது; கண்ணீர் பெருக்கினார்.
மோதிலால் நேரு வந்தார்; கண்டார்; விடை பெற்றார். ஆனால், போக மனம் வரவேயில்லை. ரயில் வண்டியை வேண்டுமென்றே தவறவிட்டார். மறுபடியும் காந்தியிடம் வந்தார்; இரண்டாவது முறையும் விடைபெற்றார்.
லாலா லஜபதிராய் வந்தார்; காந்தியிடம் பேச அவருக்கு மிக்க ஆசையாயிருந்தது. சிரமப்பட்டு அந்த ஆசையை அவர் அடக்கிக்கொண்டார் ஒதுங்கி ஒருபுறமாய்ப் போய் நின்றார். பிறகு அகன்றார். நகரைவிட்டுச் செல்லுமுன் மறுபடியும் வந்தார். ஏதோ சொல்ல வந்தார். பேச்சைக் கண்ணீர் தடுத்தது. கண்ணீர் பேச்சைத் தடுத்தது. இதைக் கண்டார் காந்தி. அவருக்குச் சிரிப்பு வந்தது. அவர் எப்போதும் 'ஹஹ்-ஹஹ்-ஹ' என்று வாய்விட்டுச் சிரிப்பார். இப்போது புன்சிரிப்பே மலர்ந்தது.
"லாலாஜி! இது பெரிய வேடிக்கையாய் இருக்கிறது. கலகல என்று சிரிக்க வேண்டும் போல் இருக்கிறது எனக்கு. ஆனால், இந்தக் காயம் இருக்கிறது. தையல் பிரிந்துபோகுமே! அதனால்தான் சிரிக்க முடியவில்லை'' என்றார். லாலாஜிக்கு இது களிப்பூட்டியது. அவருடைய நெஞ்சுக்கனம் குறைந்தது. வெளியே வந்தார். "நாம் இப்போது துயரப்பட வேண்டியதில்லை; மகிழவேண்டும். கருணைக்கடலான கடவுள் நமக்கு அருள் சுரந்துவிட்டார்என்று எல்லோரிடமும் சொன்னார்.
கடைசியில் ஒரு நாள் ஆங்கில டாக்டர் வந்தார். "அரசாங்கத்தார் உங்களை விடுதலை செய்துவிட்டார்கள்" என்று அறிவித்தார் காந்தி சில நிமிட நேரம் பேசாமல் இருந்தார்.
பிறகு புன்சிரிப்புடன் சொன்னார்: "அது சரி; ஆனால், இன்னும் சில நாள் வரையில் நான் உங்கள் நோயாளியும் விருந்தாளியுமாயிருக்க விரும்புகிறேன். அனுமதி தருவீர்களா?"
டாக்டர் சிரித்துக்கொண்டே கூறினார்: "ஆஹா! அப்படியே இருங்கள். என் நோயாளியான உங்களை நம்புகிறேன். நான் டாக்டர் என்ற முறையில் போடும் கட்டளைகளை மீறமாட்டீர்களே? உங்களை இங்கு தங்க வைத்துக்கொள்வதில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி; திருப்தி. நீங்கள் முற்றும் குணம் அடையச் செய்கிறேன். அது என் பொறுப்பு." அப்படியே ஒரு மாத காலம் காந்தி அந்த ஆஸ்பத்திரியிலிருந்தார். நன்றாய்க் குணமானதும் விடைபெற்றுச் சென்றார்.

Comments

Most Popular

கு. ப. ராஜகோபாலன் என்கிற முழுமை | க. நா. சுப்ரமண்யம்

கு. ப. ராஜகோபாலனின் கதைகளை , அவை எழுதப்பட்டு சற்றேறக் குறைய ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு இன்று படித்துப் பார்க்கும்போது கூட அவர் லாகவமும் , கதை நடத்தும் திறனும் , உருவ , கருத்து அமைதியுடன் மிகவும் சிறப்பாகவே உள்ளத்தில் தட்டுகின்றன. வாழ்க்கையை முழுப்பார்வையுடன் பார்ப்பது அவர்க்கு மிகவும் சிறிய கதைகளிலும் கூடச் சாத்தியமாக இருந்திருக்கிறது. ஆண் , பெண் உறவுகளை , பால் உணர்ச்சிகளை அப்பட்டமாக , உரக்க , மனத்தையும் கண்ணையும் ஒருங்கே உறுத்துகிற மாதிரிச் சொல்வது இன்று பலருக்கும் கைவந்த கலையாக இருக்கிறது. ஆனால் , அதையே சூக்ஷ்மமாகச் செய்கிற காரியம் , கலையுணர்ச்சியுடன் முழுவதும் சொல்லாமல் சொல்லிவிடுகிற காரியம் கு.ப.ரா . வுக்கு மிகவும் சிறப்பாக கைவந்திருந்ததை இன்று படிக்கும்போதும் உணர முடிகிறது. இந்த மென்மையும் , கலை உணர்ச்சியும் பக்கம் பக்கமாக பச்சையாக எதை எதையோ எழுதுகிற தமிழ் எழுத்தாளர்களுக்கு எட்டாத ஒரு விஷயம். அவர்கள் கு.ப.ரா . விடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். புத்தனுடைய துறவுக்கு அசுவகோஷன் முதல் எத்தனையோ இலக்கியாசிரியர்கள் பலர் காரணங்கள் கண்டு சொல்லிவிட்டார்கள். மூப்பு , நோய் , சாவு...

மனமும் அதன் விளக்கமும் | கனவின் பொருள் | பெ. தூரன்

ப ல கனவுகள் சிக்கல் நிறைந்திருக்கின்றன; அவற்றில் தோன்றும் நிகழ்ச்சிகள் மேலாகப் பார்க்கும்போது பொருளற்றவைகளாகவும் இருக்கின்றன. கோ. என்பவர் கண்ட ஒரு கனவை இங்கே ஆராய்வோம். “ஏதோ ஒரு பெரிய கோயில். அங்கே நானும் என் நண்பர்கள் சி. வே. மா. ஆகிய மூவரும் சேர்ந்து ஒருவனைக் கொலை செய்தோம். அவனுடைய மூக்கை மாத்திரம் அறுத்துச் சந்தனத்தில் வைத்துச் சாமிக்கு வைத்தோம். பிணம் வெளியிலேயே கிடந்தது. சி. தான் மூக்கை அறுத்தவர். கடவுளைத் தொழுவதற்காகப் பலர் ஒரு மோட்டார்க் காரில் வந்தார்கள். உடனே நான் பிணத்தைத் துரக்கிக் கோபுரத்தின் மேல் வீசினேன். இதை எனது ஆசிரியர் ஒருவர் பார்த்துக் கொண்டார்.” “நான் ஒடி வந்துவிட்டேன். வழியில் என் நண்பர் வீ. யைச் சந்தித்து வேறொருவனிடம் சைக்கிள் வாங்கி இருவரும் ஏறிக்கொண்டு ஊருக்குச் சென்றோம். வழியில் சி. தம் அண்ணனிடம் ஒன்றும் நடக்காதது போல் வந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கொலை செய்துவிட்டு இவர் இவ்வளவு தாராளமாக வெளியில் நடமாடுகிறாரே என்று வியந்தேன்.” "நாங்கள் ஒரு சத்திரத்தில் புகுந்துகொண்டிருந்தோம். ஆனால் சி. வேறு சில நண்பர்களிடம் சாலையில் சென்றுகொண்டிருந்தார்.” ...

இரு சகோதரர்கள்

  [ அ. கி. கோபாலன், அ. கி. ஜயராமன் நேர்காணல் ] நேர்கண்டவர்: எஸ். குரு படங்கள்: திரு. சுதாகர் நோபல் பரிசு பெற்ற நாவல்களைப் பதிப்பித்த அ. கி. கோபாலன் நீங்கள் பதிப்பாளரானது எப்படி ? தென்னாற்காடு மேலக்குமாரமங்கலம் என் சொந்த ஊர். எங்கள் கிராமத்தில் நான்காவது வகுப்பு படித்தேன். கிராமத்தில் எங்கள் அப்பா விவசாயம் செய்துகொண்டிருந்தார். நிறைய நஞ்சை நிலம் இருந்தது. பங்காளிக் காய்ச்சலினால் எங்கள் சொத்துகள் பறிபோயின. முதலில் என் அண்ணன் அ. கி. ஜெயராமன் சென்னைக்கு வந்து ஒரு ஹோட்டலில் சர்வராகச் சேர்ந்துவிட்டு , அப்புறம் என்னை ஊரிலிருந்து வரவழைத்து , என்னையும் சர்வராகச் சேர்த்துவிட்டார். சைனா பஜார் பழைய ஆரிய பவனுக்கு எதிரே ஆனந்த லட்சுமி பவன் என்று இருந்தது. அங்குதான் சர்வராகச் சேர்ந்தோம். இட்லி அரையணா , காபி முக்காலணா , பீடா காலணா , ஸ்பெஷல் பீடா அரையணா விற்ற காலம் அது. ஹோட்டலுக்கு அருகில் ச. சு. சங்கரலிங்கக் கவிராயர் என்ற நாடகாசிரியர் தங்கியிருந்தார். சங்கரலிங்கக் கவிராயர் , சங்கரதாஸ் சுவாமிகளுக்கு இணையானவர். அவரிடம் நாடகப் பாடல்கள் கேட்டேன். ஹோட்டலில் சக ஊழியர்களிடம் சொல்லிவிட்டு , ஆ...