Skip to main content

ஆஸ்பத்திரி காட்சி | தி. ஜ. ரங்கநாதன்


ஆஸ்பத்திரியில் மிகவும் ஒழுங்காக காந்தி நடந்துகொண்டார். இது டாக்டருக்கு மகிழ்ச்சி அளித்தது; நர்ஸுக்குப் பிரியமாயிருந்தது. எல்லாரும் காந்தியிடம் அன்பு கொண்டார்கள்.
ஒரு நர்ஸ் இங்கிலீஷ்காரி. இங்கிலாந்து, ஆப்பிரிக்கா ஆகிய இரண்டு நாடுகளின் ஆஸ்பத்திரிகளிலும் பணிபுரிந்தவள்; நீண்ட கால அனுபவம் உடையவள். மிகவும் கண்டிப்பாய் நடப்பவள்.
"நோயாளிகளிடம் நல்ல பெயர் வாங்க ஆசைப்படாதே. அதற்கு ஒரு நாளும் முயற்சி செய்யாதே" இப்படித்தான் அவளுடைய டாக்டர்கள் சொல்வார்களாம். காந்திக்கு இதை எல்லாம் அவள்தான் சொன்னாள்.
மூன்று நாள்கள் சென்றன. காந்தி மீது அவள் பற்று கொண்டாள். காந்தியின் அறையை அலங்காரம் செய்தாள். பூக்களைக் கொண்டுவந்தாள்; அழகழகாய் ஜோடித்து வைத்தாள்.
"எப்படி இருக்கிறது அறை? என் கைவேலையைப் பார்த்தீர்களா?" என்று காந்தியைக் கேட்டாள்.
அங்கு இன்னொரு நர்ஸ் இருந்தாள். அவள் மிக இளம் பெண். "என் மனத்துக்கு இசைந்த முதல் நோயாளி இவர்தாம். காந்திக்குப் பணிவிடை செய்வதே ஓர் இன்பம். அது எனக்குக் கிடைத்த பாக்கியம்என்றாள். அவள் காந்தி பற்றி நல்ல அறிக்கை எழுதினாள்; அதில் அவரைப் பாராட்டியிருந்தாள்.
டாக்டர் வந்தார். "இதற்கு முன் இந்த மாதிரி அறிக்கையை நீ எழுதியதே இல்லையே!" என்று அவளைக் கேட்டார்.
"இதற்குமுன் இந்த மாதிரி நோயாளி எனக்குக் கிட்டியது இல்லையே!" என்று அவள் பதில் சொன்னாள்.
மற்ற நர்ஸுகள் அவளைக் கிண்டல் செய்தார்கள். "என்ன இது! காந்தியிடம் மிகமிகப் பிரியம் கொள்கிறாயே; வேடிக்கைதான்!" என்றார்கள்.
"ஆமாம். அவருக்குப் பணிவிடை செய்வது ஒரு பாக்கியம். அது உங்களுக்குக் கிட்டவில்லை. கிட்டினால், நீங்களும் என் போல்தான் நடப்பீர்கள்!" என்று அவள் கூறினாள்.
இதை அவளே மஹாதேவ தேசாயிடம் சொன்னாள். அவர் காந்தியின் காரியதரிசி; அதோடு துணைவருங்கூட.
வெள்ளைக்கார டாக்டர் மட்டும் என்ன அவரும் காந்தியிடம் பேரன்பு செலுத்தினார். அந்த டாக்டரை மக்களெல்லாம் பாராட்டினார்கள்; அவரைப் புகழ்ந்து கடிதம் எழுதினார்கள்; தந்தி அடித்தார்கள்.
எண்ணற்ற கடிதங்கள், தந்திகள் பறந்தன!
"இத்தனைக்கும் நான் எப்படிப் பதில் எழுதுவேன்" என்று டாக்டர் மலைத்தார்.
எல்லோருக்கும் பொதுவாய்ப் பத்திரிகையிலே எழுதிவிடுகிறேன்என்றார். அப்படியே செய்தார்.
பெரிய பெரிய தலைவர்களெல்லாம் புனா நகருக்கு ஓடி வந்தார்கள்; காந்தியைப் பார்க்கத்தான்.
காந்திக்கு ஓய்வு வேண்டும்; அவருக்குத் தொல்லை கொடுக்கக்கூடாது - இது எல்லாருக்கும் தெரியும்.
ஜயகர் வந்தார். "நான் எட்ட இருந்து தரிசனம் செய்கிறேன்" என்றார்.
ஜவஹர்லால் நேரு வந்தார். "நான் முதலிலே வந்துவிடவில்லை; எல்லாருக்கும் கடைசியிலே வந்து காண்கிறேன்" என்றார். காந்தியின் மகன் தேவதாஸிடம் இப்படி உறுதி கூறினார்.
மௌலானா சௌகத் அலி வந்தார். காந்தி பேச முயன்றார். "நீங்கள் என்னோடு பேசவே கூடாது. நான் பதில் சொல்லமாட்டேன்" என்று மௌலானா சொல்லிவிட்டார். படுக்கையைத் துழாவினார். காந்தியின் பாதத்தைப் போர்வை மூடியிருந்தது. அதை விலக்கினார். பாதத்தை முத்தமிட்டார்; விடைபெற்றார்.
சங்கர்லால் பாங்கர் வந்தார்; அவருக்குத் துயரம் நெஞ்சை அடைத்தது; கண்ணீர் பெருக்கினார்.
மோதிலால் நேரு வந்தார்; கண்டார்; விடை பெற்றார். ஆனால், போக மனம் வரவேயில்லை. ரயில் வண்டியை வேண்டுமென்றே தவறவிட்டார். மறுபடியும் காந்தியிடம் வந்தார்; இரண்டாவது முறையும் விடைபெற்றார்.
லாலா லஜபதிராய் வந்தார்; காந்தியிடம் பேச அவருக்கு மிக்க ஆசையாயிருந்தது. சிரமப்பட்டு அந்த ஆசையை அவர் அடக்கிக்கொண்டார் ஒதுங்கி ஒருபுறமாய்ப் போய் நின்றார். பிறகு அகன்றார். நகரைவிட்டுச் செல்லுமுன் மறுபடியும் வந்தார். ஏதோ சொல்ல வந்தார். பேச்சைக் கண்ணீர் தடுத்தது. கண்ணீர் பேச்சைத் தடுத்தது. இதைக் கண்டார் காந்தி. அவருக்குச் சிரிப்பு வந்தது. அவர் எப்போதும் 'ஹஹ்-ஹஹ்-ஹ' என்று வாய்விட்டுச் சிரிப்பார். இப்போது புன்சிரிப்பே மலர்ந்தது.
"லாலாஜி! இது பெரிய வேடிக்கையாய் இருக்கிறது. கலகல என்று சிரிக்க வேண்டும் போல் இருக்கிறது எனக்கு. ஆனால், இந்தக் காயம் இருக்கிறது. தையல் பிரிந்துபோகுமே! அதனால்தான் சிரிக்க முடியவில்லை'' என்றார். லாலாஜிக்கு இது களிப்பூட்டியது. அவருடைய நெஞ்சுக்கனம் குறைந்தது. வெளியே வந்தார். "நாம் இப்போது துயரப்பட வேண்டியதில்லை; மகிழவேண்டும். கருணைக்கடலான கடவுள் நமக்கு அருள் சுரந்துவிட்டார்என்று எல்லோரிடமும் சொன்னார்.
கடைசியில் ஒரு நாள் ஆங்கில டாக்டர் வந்தார். "அரசாங்கத்தார் உங்களை விடுதலை செய்துவிட்டார்கள்" என்று அறிவித்தார் காந்தி சில நிமிட நேரம் பேசாமல் இருந்தார்.
பிறகு புன்சிரிப்புடன் சொன்னார்: "அது சரி; ஆனால், இன்னும் சில நாள் வரையில் நான் உங்கள் நோயாளியும் விருந்தாளியுமாயிருக்க விரும்புகிறேன். அனுமதி தருவீர்களா?"
டாக்டர் சிரித்துக்கொண்டே கூறினார்: "ஆஹா! அப்படியே இருங்கள். என் நோயாளியான உங்களை நம்புகிறேன். நான் டாக்டர் என்ற முறையில் போடும் கட்டளைகளை மீறமாட்டீர்களே? உங்களை இங்கு தங்க வைத்துக்கொள்வதில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி; திருப்தி. நீங்கள் முற்றும் குணம் அடையச் செய்கிறேன். அது என் பொறுப்பு." அப்படியே ஒரு மாத காலம் காந்தி அந்த ஆஸ்பத்திரியிலிருந்தார். நன்றாய்க் குணமானதும் விடைபெற்றுச் சென்றார்.

Comments

Most Popular

குலாப்ஜான் காதல் | புதுமைப்பித்தன்

‘ காதலாவது உருளைக்கிழங்காவது ’ - சி . சுப்பிரமணிய பாரதி நான் ஆராய்ச்சிப் பிரியன் . அதிலும் தர்க்கரீதியாக புத்தியை வசீகரிக்கக்கூடிய ஆராய்ச்சியென்றால் , அதுதான் எனது தெய்வம் . கம்பனுடைய காவியங்கள் முதல் , நாணயச் செலாவணி , தீண்டாதார் ஆலயப் பிரவேசம் ஈறாக , எல்லாம் தர்க்க முறையில் அடைபட்டு ஒத்து இருந்தால்தான் எனது கொள்கை . இல்லாவிடில் அதற்கும் நமக்கும் வெகுதூரம் . இந்தக் காதல் விஷயத்தை நன்றாக ஆராய்ந்து கவனித்ததில் , சாதாரணமாக அல்ல , அபரிமிதமாக , காவியங்கள் , நாவல்கள் என்ற கற்பனைப் பிரதேசங்களில்தான் விளைகின்றன . இல்லாவிட்டால் அவை நமது பொருள்காட்சி சாலைகளைத் தப்பி இருக்க முடியுமா ? அகப்பொருள் இலக்கணக்காரர் கூறுவதைப் பார்த்தால் அசல் , கலப்பில்லாத பழம் பெருந்தமிழ் மக்களுடனிருந்து அவர்கள் தங்களுடைய ஏடுகளுடன் கடலால் கொள்ளப்பட்ட பொழுது , அவர்களுடன் சங்கமமாயிற்றென்று நினைக்க ஏதுவிருக்கிறது . ஆழ்ந்து யோசிக்குந்தோறும் , தர்க்க ஆராய்ச்சியை வழிபடும் எனக்கு , அதன் கூற்றுக்கள் வெகு வினோதமாகவே காணப்படுகின்றன . எனது ஆர

பெரியம்மை | சுரேஷ்குமார இந்திரஜித்

பெரியப்பா அருமையாகப் பாடுவார். ‘முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே’ என்ற டி.எம்.எஸ். பாட்டை ஏற்ற இறக்கங்கள், பிர்காக்கள் பிசகாமல் பாடுவார். அப்போது பெரியம்மை முகத்தைப் பார்க்கவேண்டுமே. அவர் முகம் பெருமிதத்தோடும் பரவசத்தோடும் இருக்கும். பெரியம்மா முருங்கைக்காய் குழம்பு வைத்தால் நிறைய சாப்பிடவேண்டியிருக்கும். குழம்புகள் ருசியாகச் செய்வதற்கென்றே அவள் பிறந்திருக்கிறாள். கத்தரிக்காய் புளிக்குழம்பும் அப்படித்தான் அவ்வளவு ருசியாக இருக்கும். என் அம்மைக்கு இந்தக் குழம்புகள் ருசி கூடி வராது. சப்பென்று இருக்கும். நான் வேலை பார்க்கும் ஊரிலிருந்து வீட்டுக்கு வந்திருந்தேன். பெரியப்பாவைப் பார்ப்பதற்கும், அவர் பாட்டைக் கேட்பதற்கும் அவர் வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன். இது மார்கழி மாதம். வாசல்களில் கோலம் போட்டு பூசணிப்பூவை மையமாக வைத்திருந்தார்கள். அநேகமாக சில வீடுகள் நீங்கலாக எல்லா வீட்டு வாசல்களிலும் பூசணிப்பூவை வைத்திருந்தார்கள். செண்பகவல்லி மதினி வீட்டைக் கடக்கும்போது மல்லிகைப்பூ வாசம் வந்தது. மதினி வீட்டுக் காம்பவுண்டுக்குள் மல்லிகைப்பூ கொடிக்குப் பந்தல் போட்டிருந்ததைப் பார்த்தேன். வேல

மனமும் அதன் விளக்கமும் - மனமெனும் மாயம் | பெ. தூரன்

ம னம் என்பதென்ன? அது எங்கே இருக்கிறது? கை, கால், கண், இதயம் என்றால் உடம்பில் உள்ள உறுப்புகள் என்று உடனே தெரிகிறது. அவைகளுக்கு வடிவம் உண்டு. பருமன் உண்டு. ஆதலால் அவைகளை எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மனம் என்பது எது? அதற்கு வடிவம் உண்டா? பருமன் உண்டா? தொட்டுப் பார்த்து அறிந்துகொள்ள முடியுமா? இவ்வாறு எண்ணிப் பார்த்தால் ஒன்றும் விளங்குவதில்லை. இவ்வாறு எண்ணுவதற்கு அந்த மனமே காரணமாக இருக்கிறதென்று தோன்றுகிறது. ஆனால் அது என்ன என்று மட்டும் எளிதில் அறிந்துகொள்ள முடிகிறதில்லை. மனத்திற்கு உருவமில்லை; கன பரிமாணமும் இல்லை. மனம் என்பது தசை, நரம்பு முதலியவைகளால் ஆக்கப்பட்டதன்று. அது சடப் பொருள் அன்று; அது சூக்குமப் பொருள், சடப் பொருள் என்றால் அது உடம்பைச் சேர்ந்த ஒர் உறுப்பாகிவிடும்; எளிதாக அதை அறிந்துகொள்ளவும் முடியும். சிலர் மூளைதான் மனம் என்று தவறாகக் கருதுகிறார்கள். மூளை என்பது உடம்போடு சேர்ந்த ஒரு பருப்பொருளான உறுப்பு. அது மனம் அல்ல. சூக்குமப் பொருளாக மனம் இருக்கிறதென்று மட்டும் நமக்குப் புலனாகிறது. அந்த மனந்தான் ஆசைகள், எண்ணங்கள், நோக்கங்கள், நம்பிக்கைகள் முதலியவற்றிற்கு இடமாயிரு