Skip to main content

‘எழுத்து’ மின்னூலாக்கம் நிறைவு

சி. சு. செல்லப்பா

இருபதாம் நூற்றாண்டில் நிகழ்ந்த மகத்தான சாதனைகளில் ஒன்று சி. சு. செல்லப்பாவின் ‘எழுத்து’ பத்திரிகை என்றார் சுந்தர ராமசாமி. நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு ‘எழுத்து’ ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. இப்போது ‘எழுத்து’ பத்திரிகையின் 119 இதழ்களும் அமேசான் கிண்டில் மின்னூல்களாகக் கிடைக்கின்றன.

‘எழுத்து’ இதழ்களை மின்னூலாக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டானதற்கு விமலாதித்த மாமல்லன் அவர்கள் முதல் காரணம். அவர் ‘கசடதபற’, ‘கவனம்’, ‘’, ‘மீட்சி’ ஆகிய சிறுபத்திரிகைகளை மின்னூலாக்கி வெளியிட்டிருக்கிறார். அவரது முயற்சியைக் கவனித்து வந்ததால் சி. சு. செல்லப்பாவின் ‘எழுத்து’ இதழ்களை நாம் மின்னூலாக்கலாம் என்ற எண்ணம் உண்டானது. நண்பர் சு. அருண் பிரசாத் மூலம் சி. சு. செல்லப்பாவின் புதல்வர் சுப்ரமணியன் அவர்களைத் தொடர்புகொண்டு அனுமதி கோரினேன்; மகிழ்ச்சியுடன் இசைந்தார். 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் நாள் சி. சு. செல்லப்பா பிறந்தநாளில் முதல் இதழ் பதிவேற்றப்பட்டது. அதிலிருந்து நான்கு வருடங்களாக ‘எழுத்து’ இதழ்கள் சிறுகச்சிறுகப் பதிவேற்றப்பட்டுள்ளன.

*

இந்தப் பணி நிறைவேற உதவிய பலருக்கு நன்றி சொல்லவேண்டும். ‘எழுத்து’ இதழ்களை மின்னூலாக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததும் மகிழ்ச்சியுடன் வரவேற்று ஊக்கப்படுத்தியவர் திரு. சுப்ரமணியன் அவர்கள். அவர் வைத்த நம்பிக்கைக்கும் ஆதரவுக்கும் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.

தமிழ் டிஜிட்டல் லைப்ரரி வலைத்தளத்தில் ‘எழுத்து’ பத்திரிகையின் சுமார் 70 இதழ்கள் ஏற்கெனவே பதிவேற்றப்பட்டிருந்தன. அவை இப்பணியில் பயன்பட்டன. முதல் 24 இதழ்களும் இடையிடையே சில இதழ்களும் தேவைப்பட்டன. அவற்றைத் தந்து உதவிய ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்துக்கும் பிரெஞ்சு நிறுவன நூலகத்துக்கும் மனமார்ந்த நன்றி.

நண்பர் சு. அருண் பிரசாத் திரு. சுப்ரமணியன் அவர்களைத் தொடர்புகொள்ள உதவியதுடன் ‘எழுத்து’ இதழ்கள் மின்னூலாக வெளிவருவது குறித்து ‘எழுந்து வரும் எழுத்து’ (ஆனந்த விகடன், 13.10.2021) என்ற கட்டுரையையும் எழுதினார். நண்பர் ராம்பிரசாத் ஹரிஹரன் ‘எழுத்து’ இதழ்கள் ஒவ்வொன்றையும் ‘அழியாச்சுடர்கள்’ பக்கத்தில் பகிர்ந்து அதிக கவனிப்பைப் பெற உதவினார். இவர்களுக்கும் நன்றி.

*

‘எழுத்து’ பத்திரிகையின் மின்னூலாக்கம் நிகழ்ந்ததால் துணை வினைகள் பலவும் நடந்தேறின. ந. சிதம்பர சுப்ரமண்யன் ‘எழுத்து’ இதழில் எழுதிய ‘விண்ணும் மண்ணும்’ என்ற தொடர் நூலாக்கம் பெற்றது. க.நா.சு. எழுதிய ‘சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்’ தொடரும் நூலாகத் தொகுக்கப்பட்டது. ‘எழுத்து’ இதழில் சி.சு.செ. அளித்த சிறிய குறிப்பின் மூலமாகவே க.நா.சு. ‘கல்கி’ இதழில் எழுதிய ‘உலகத்துச் சிறந்த நாவலாசிரியர்கள்’ என்ற தொடர் நூலாக வெளியாகியுள்ளது. ‘எழுத்து’ இதழில் வெளியான ‘வெற்றியின் பண்பு’ என்ற கதை ‘பராங்குசம் கதைகள்’ தொகுப்பில் சேர்க்கப்பட்டது. ‘உண்மைதேடியின் அநுபவ இலக்கிய வடிவங்கள்’ என்ற கட்டுரை ‘தி. ஜானகிராமன் கட்டுரைகள்’ தொகுப்பில் இடம்பெற்றது. இதுபோல இன்னும் வெளிவர இருக்கும் சில நூல்களுக்கும் ‘எழுத்து’ இதழ்களின் மின்னூலாக்கம் பயன்பட்டுள்ளது.

‘கல்கி’, ‘சரஸ்வதி’, ‘தீபம்’, ‘தாமரை’, ‘நடை’, ‘The Quest’, ‘Thought’, ‘Poetry India’, ‘The Sunday Standard’ போன்ற பிற பத்திரிகைகளில் வெளியான கட்டுரைகளை ‘எழுத்து’ விவாதத்துக்கு எடுத்துக்கொண்டிருக்கிறது. இந்த இலக்கியச் சர்ச்சைகள் அந்தக்காலத்து மற்ற இதழ்களையும் பார்வையிடத் தூண்டி, புதிய தேடல்களுக்கு வழிவகுத்திருக்கின்றன. குறிப்பாக, ‘தீபம்’ வெளியிட்ட சி. சு. செல்லப்பாவின் ‘எழுத்து அனுபவங்கள்’, ‘நமது இலக்கியத் தேட்டம்’ என்ற இரு தொடர்களும் முக்கியமானவை. அவை நூலாக்கம் பெறவேண்டும்.

‘எழுத்து’ 11 ஆண்டுகளில் 119 இதழ்களைக் கண்டது. 34-35, 66-67, 92-93, 101-102, 103-104, 105-106, 107-108 ஆகியவை இரட்டை இதழ்கள். மொத்தமாக சுமார் 2600 பக்கங்கள் வருகின்றன. அச்சில் 5000 பக்கங்கள் வரக்கூடும். ஆய்வாளர்களின் தேடலுக்கு உதவும் வகையில் ‘எழுத்து’ முழுத்தொகுப்பாகவும் விரைவில் பதிவேற்றப்படும். குறிப்பிட்ட எழுத்தாளரின் படைப்புகளை மட்டும் தேடியெடுக்க உதவும் வகையில் பொருளடைவும் தயாரித்து வெளியிடப்படும்.

இந்தப் பணியை முடிக்க நான்கு ஆண்டுகள் எடுத்துக்கொண்ட குறை மட்டும் என்னைச் சேர்ந்தது. இக்குறையை மறந்துவிட்டால் உள்ளிய வினை முடித்த இனிமை மிகுதிதான். இதுவரை உடன்வந்த அனைவருக்கும் நன்றி.

- ஶ்ரீநிவாச கோபாலன்


(சி. சு. செல்லப்பா ‘எழுத்து’ காலத்துக்குப் பிறகும் ‘பார்வை’, ‘சுவை’ என்ற சிற்றிதழ்களையும் சிறுது காலம் நடத்தியிருக்கிறார். அந்த இதழ்களை கைவசம் வைத்திருப்பவர்கள் உதவினால், அவற்றையும் மின்னூலாக பதிவேற்றலாம்.)

*

எழுத்து 119 இதழ்களையும் இங்கே பெறலாம்

https://amzn.to/41RsAti

‘எழுத்து’ - 119 இதழ்களின் பொருளடக்கம்

Comments

Most Popular

பழங்காலத்து எழுதுகருவிகள் - மயிலை சீனி. வேங்கடசாமி

இந்தக் காலத்திலே உலகம் முழுவதும் காகிதத்தாளும் பேனாவும் எழுதுகருவிகளாகப் பயன்பட்டுவருகின்றன. இவை எழுத்து வேலைக்குப் பெரிதும் வாய்ப்பாகவும் எளிதாகவும் அமைந்திருக்கின்றன. ஆனால், காகிதத்தாள் வருவதற்கு முன்பு, பண்டைக் காலத்திலே இவ்வளவு எளிதானவும் வாய்ப்பானவும் ஆன எழுதுகருவிகள் இல்லை. பண்டைக் காலத்திலே உலக மக்கள் எவ்விதமான எழுதுகருவிகளை வழங்கிவந்தார்கள் என்பது பற்றியும், பின்னர் காகிதத்தாள் எவ்வாறு நடைமுறையில் வந்தது என்பதைப் பற்றியும் ஈண்டுக் கூறுவோம். களிமண் சுவடிகள் சிறிய ஆசியா தேசத்தில் யூப்ரெடிஸ், டைகிரிஸ் ஆறுகள் பாய்கிற இடத்தில் இருந்த கால்டியா, ஸைரியா நாட்டு மக்கள் ஆதிகாலத்தில் களிமண்ணை எழுதுகருவியாகக் கொண்டிருந் தார்கள். களிமண்ணைப் பிசைந்து சிறுசிறு பலகைகளைப்போல் அமைத்து, அப்பலகை காய்ந்து போவதற்கு முன்னமே ஆணி போன்ற கருவியினால் எழுதி உலரவைத்துப் புத்தகமாக உபயோகித்தார்கள்; அவர்கள் எழுதிய எழுத்துகளுக்குக் கூனிபார்ம் எழுத்து என்று பெயர் கூறுவர். அவர்கள் எழுதிய களிமண் சுவடிகளைப் புத்தகசாலையில் வைத்துப் போற்றி னார்கள். அவ்வாறு போற்றி வைக்கப்பட்டிருந்த களிமண் சுவடிகள் பல, சமீப...

மனமும் அதன் விளக்கமும் | கனவின் பொருள் | பெ. தூரன்

ப ல கனவுகள் சிக்கல் நிறைந்திருக்கின்றன; அவற்றில் தோன்றும் நிகழ்ச்சிகள் மேலாகப் பார்க்கும்போது பொருளற்றவைகளாகவும் இருக்கின்றன. கோ. என்பவர் கண்ட ஒரு கனவை இங்கே ஆராய்வோம். “ஏதோ ஒரு பெரிய கோயில். அங்கே நானும் என் நண்பர்கள் சி. வே. மா. ஆகிய மூவரும் சேர்ந்து ஒருவனைக் கொலை செய்தோம். அவனுடைய மூக்கை மாத்திரம் அறுத்துச் சந்தனத்தில் வைத்துச் சாமிக்கு வைத்தோம். பிணம் வெளியிலேயே கிடந்தது. சி. தான் மூக்கை அறுத்தவர். கடவுளைத் தொழுவதற்காகப் பலர் ஒரு மோட்டார்க் காரில் வந்தார்கள். உடனே நான் பிணத்தைத் துரக்கிக் கோபுரத்தின் மேல் வீசினேன். இதை எனது ஆசிரியர் ஒருவர் பார்த்துக் கொண்டார்.” “நான் ஒடி வந்துவிட்டேன். வழியில் என் நண்பர் வீ. யைச் சந்தித்து வேறொருவனிடம் சைக்கிள் வாங்கி இருவரும் ஏறிக்கொண்டு ஊருக்குச் சென்றோம். வழியில் சி. தம் அண்ணனிடம் ஒன்றும் நடக்காதது போல் வந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கொலை செய்துவிட்டு இவர் இவ்வளவு தாராளமாக வெளியில் நடமாடுகிறாரே என்று வியந்தேன்.” "நாங்கள் ஒரு சத்திரத்தில் புகுந்துகொண்டிருந்தோம். ஆனால் சி. வேறு சில நண்பர்களிடம் சாலையில் சென்றுகொண்டிருந்தார்.” ...

ஐரோப்பியர் வருகை - மயிலை சீனி. வேங்கடசாமி

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே, மேல் நாட்டார் நமது இந்தியா தேசத்துடன், சிறப்பாகத் தென் இந்தியாவுடன், வர்த்தகத் தொடர்பு கொண்டிருந்ததாகத் தெரிகிறது. யவனர் (உரோமர், கிரேக்கர்) என்னும் ஐரோப்பிய ஜாதியார், சேர நாட்டின் கடற்கரைப் பட்டினங்களிற் பண்ட சாலைகள் அமைத்து, அவற்றில் நமது நாட்டுச் சரக்குகளைச் சேமித்து வைத்துக் கப்பல்கள் மூலமாக ஐரோப்பிய நாடுகளுக்குக் கொண்டு போனார்கள். மதுரை, புகார், (காவிரிப்பூம் பட்டினம்) முதலிய நகரங்களிலும் யவனர் வசித்து வந்ததாகத் தமிழ் நூல்களினால் அறிகிறோம். கி.மு. 22 இல் மதுரையில் அரசாண்டிருந்த பாண்டிய மன்னன், அகஸ்தஸ் ஸீஸர் (Augustus Ceasar) என்னும் யவன அரசனிடம் தூதுவர்களை அனுப்பினான் என்று ஸ்த்ராபோ (Starbo) என்னும் மேல் நாட்டாசிரியர் எழுதியிருக்கிறார். தமிழருக்கும் யவனருக்கும் இருந்த இவ்வர்த்தகத் தொடர்பு, கி.பி. 47 முதல் மேன்மேலும் அதிகப்பட்டது. ஏனென்றால், அந்த ஆண்டில் ஹிப்பலஸ் (Hippalus) என்பவர், இந்து சமுத்திரத்தில் வீசுகிற வட கிழக்கு தென் மேற்குப் பருவக் காற்றைக் கண்டுபிடித்தார். இப்பருவக் காற்று வீசுகிற காலங்களில் பிரயாணம் செய்வதால் மாலுமிகள் விரைவாகக் க...