Skip to main content

க.நா.சு.வின் புதிய நூல்கள்

க.நா.சு.வின் தொகுக்கப்படாத, மறுபதிப்பு காணாத படைப்புகள் அழிசி வெளியீடாக வெளியாகிக்கொண்டிருக்கின்றன. சென்ற ஆண்டு ராணிதிலக் தொகுத்த ‘விசிறி’ சிறுகதைத் தொகுப்பும் ‘விமரிசனக்கலை’  கட்டுரைத் தொகுப்பும் வெளியாயின. அவற்றைத் தொடர்ந்து இன்னும் சில க.நா.சு. நூல்கள் வெளிவருகின்றன.


1. எமன்

சிறுகதைகள், நாடகங்கள், கவிதைகள், மொழிபெயர்ப்புகள், தழுவல்கள் என இதுவரை தொகுக்கப்படாத பல்வகை படைப்புகளைத் தேடித் தொகுத்திருக்கிறார் 'காவிரி' இதழ் ஆசிரியர் விக்ரம். இந்நூலின் பின்னிணைப்பில் க.நா.சு.வின் அரிய புகைப்படங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.


2. சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்

எழுத்து இதழில் க.நா.சு. எழுதிய தொடர் முதன்முறை நூலாகிறது. நிறைவுபெறாத இத்தொடரில் க.நா.சு. கட்டுரைகளுக்கு அப்போது வெளியான எதிர்வினைகளும் க.நா.சு. தேர்ந்தெடுத்த கதைகளும் இந்நூலில் இணைக்கப்பட்டுள்ளன.


3. புதுமையும் பித்தமும்: ஆளுமை – படைப்பு – விவாதம்

புதுமைப்பித்தன் பற்றி க.நா.சு. எழுதியவற்றின் தொகுப்பு. ஏற்கெனவே 2006ஆம் ஆண்டு வெளியான நூலின் விரிவாக்கப்பட்ட மறுபதிப்பு. புதிய கட்டுரைகளுடன் பு.பி. - க.நா.சு. இருவரும் பங்குகொண்ட விவாதப் பதிவுகளையும் உள்ளடக்கியது.


4. இலக்கிய அரசியல்

இது தொகுக்கப்படாத கட்டுரைகளின் திரட்டு. முப்பதுகளிலிருந்து எண்பதுகள்வரை க.நா.சு. பல்வேறு இதழ்களில் எழுதியவை. ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகள், கடிதங்கள் சிலவும் இந்நூலில் இடம்பெறுபவை. பல முக்கியமான கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பு.


5. படித்திருக்கிறீர்களா? (பாகம் 1)

சுதேசமித்திரன் வாரப் பதிப்பில் எழுதிய கட்டுரைத் தொடரின் முதல் பாகம். இதன் மறுபதிப்பு வெளிவந்துவிட்டது. அடுத்த பாகமும் விரைவில் வெளியாகும்.


6. கு.ப.ரா. என்கிற முழுமை

கு.ப.ரா. பற்றி க.நா.சு. எழுதிய கட்டுரைகளின் திரட்டு இது. இந்நூல் மின்னூலாக மட்டும் வெளியாகிறது. வெவ்வேறு காலங்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு.

***

இவை தவிர, புத்தாண்டுக்கான திட்டத்தில் இருப்பவை:

துரை. லட்சுமிபதி தொகுத்திருக்கும் 'க.நா.சு. நேர்காணல்கள்' (‘சதங்கை’ இதழில் வெளியான நேர்காணல் இன்னும் கிடைக்கவில்லை. அதுவும் கிடைத்தால் தொகுப்பு முழுமையடையும்.)

'நினைவுகள்' என்ற தன்வரலாற்றுத் தொடர். (க.நா.சு.வின் கைப்பிரதிகளிலிருந்து எடுத்து ‘முன்றில்’ இதழில் வெளியிட்டவர் மா. அரங்கநாதன்.)

விஷால் ராஜா தொகுக்கும் தேர்ந்தெடுத்த கட்டுரைகளின் தொகுப்பு.

(பின்குறிப்பு: இம்மாத இறுதியில் புதிய நூல்களுக்கான முன்பதிவுத் திட்டம் அறிவிக்கப்படும்)

Comments

Most Popular

இலக்கியத்தில் உருவங்கள் | க. நா. சுப்ரமண்யம்

இலக்கியத்தில் பல பல உருவங்கள் உண்டு. அவை முதல் முதலாகப் பல பல மொழிகளில் தோன்றி இலக்கிய உருவம் பெற்று சிறப்பாகச் சில மொழிகளில் பிரமாதமான இலக்கிய அந்தஸ்து பெற்றவை. இந்த உருவம் இந்த மொழியைச் சேர்ந்தது என்று யாரும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. அப்படிச் சொல்லவேண்டிய அவசியமும் இல்லை. கிணற்றுத் தவளைகள்தான் இந்த மாதிரிப் பெருமை தேடிக்கொண்டு, தங்கள் தங்கள் மொழியே உலகிலுள்ள எல்லா இலக்கியத்துக்கும் ஆதாரம் என்று கட்சி கட்டிக்கொண்டு பெருமை பாராட்டிக்கொண்டிருக்க முடியும். இன்றைய தமிழ் இலக்கியாசிரியன் உலகிலுள்ள எல்லா மொழி இலக்கியங்களுக்கும் உருவங்களுக்கும் வாரிசு. தெரிந்தோ தெரியாமலோ அவன் தமிழ்ப் பழமைக்கெல்லாம் வாரிசாகிறான். - சிலப்பதிகாரத்தையும், சங்க நூல்களையும், கம்பராமாயணத்தையும், தேவாரம் திருவாச கத்தையும் அறிந்தோ அறியாமலோ, அவன் மனம் அந்த மரபிலேதான் சமைகிறது. தமிழனாகப் பிறந்த தோஷத்தினால் அவன் விடுகிற மூச்சே தமிழ் மரபு மூச்சு என்றுதான் சொல்லவேண்டும். இதிலே பிற மொழிகளின் மரபு எங்கே எப்படி வருகிறது என்று கேட்கலாம். சம்ஸ்கிருத முதல் நூலை அறிந்ததாகக் காட்டிக்கொள்கிற கம்பனும், ஐரோப்பிய நாவ...

மனமும் அதன் விளக்கமும் | கனவின் பொருள் | பெ. தூரன்

ப ல கனவுகள் சிக்கல் நிறைந்திருக்கின்றன; அவற்றில் தோன்றும் நிகழ்ச்சிகள் மேலாகப் பார்க்கும்போது பொருளற்றவைகளாகவும் இருக்கின்றன. கோ. என்பவர் கண்ட ஒரு கனவை இங்கே ஆராய்வோம். “ஏதோ ஒரு பெரிய கோயில். அங்கே நானும் என் நண்பர்கள் சி. வே. மா. ஆகிய மூவரும் சேர்ந்து ஒருவனைக் கொலை செய்தோம். அவனுடைய மூக்கை மாத்திரம் அறுத்துச் சந்தனத்தில் வைத்துச் சாமிக்கு வைத்தோம். பிணம் வெளியிலேயே கிடந்தது. சி. தான் மூக்கை அறுத்தவர். கடவுளைத் தொழுவதற்காகப் பலர் ஒரு மோட்டார்க் காரில் வந்தார்கள். உடனே நான் பிணத்தைத் துரக்கிக் கோபுரத்தின் மேல் வீசினேன். இதை எனது ஆசிரியர் ஒருவர் பார்த்துக் கொண்டார்.” “நான் ஒடி வந்துவிட்டேன். வழியில் என் நண்பர் வீ. யைச் சந்தித்து வேறொருவனிடம் சைக்கிள் வாங்கி இருவரும் ஏறிக்கொண்டு ஊருக்குச் சென்றோம். வழியில் சி. தம் அண்ணனிடம் ஒன்றும் நடக்காதது போல் வந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கொலை செய்துவிட்டு இவர் இவ்வளவு தாராளமாக வெளியில் நடமாடுகிறாரே என்று வியந்தேன்.” "நாங்கள் ஒரு சத்திரத்தில் புகுந்துகொண்டிருந்தோம். ஆனால் சி. வேறு சில நண்பர்களிடம் சாலையில் சென்றுகொண்டிருந்தார்.” ...

காந்திஜி குடும்ப மூதாதையர் வரலாறு

[மகாத்மா காந்தி தமது 'சுயசரிதை'யில் தம் குடும்ப வரலாற்றைச் சொல்லும்போது, தமது பாட்டனாரைப் பற்றி மாத்திரமே குறிப்பிட்டிருக்கிறார். ஆகையால், காந்தி குடும்பத்தைப் பற்றிய முந்திய வரலாற்றையும் அறிய விரும்புவோருக்குப் பயனுள்ளதாக இருக்கட்டும் என்பதற்காக அக்குடும்ப வரலாற்றைக் குறித்து, ஸ்ரீ பிரபுதாஸ் காந்தி எழுதியிருக்கும் "காந்தியுடன் என் குழந்தைப் பருவம்'' என்ற நூலிலிருந்து....] நான் சேகரிக்க முடிந்த தகவல்களிலிருந்து, எங்கள் குடும்ப சரித்திரத்தில் லால்ஜி காந்தியின் பெயர்தான் முதல் முதல் தெரிகிறது. லால்ஜி காந்தி குடும்பத்தில் ஐந்தாவது தலைமுறையாகப் பிறந்தவரான உத்தம சந்திர காந்தியே, காந்தி குடும்பப் பெயருக்குக் கௌரவத்தையும் கீர்த்தியையும் தேடித் தந்தார். ஏழாவது தலைமுறையில் பிறந்தவரே, மகாத்மா காந்தி. லால்ஜி காந்தியின் குமாரர் ராம்ஜி காந்தி. இவர் தப்தாரியாக வேலை பார்த்தார். ஆகவே, போர்பந்தர் சமஸ்தான திவானுக்கு வலக்கரம்போல் இருந்தார். இப்பொழுது மந்திரி சபையில் உள்நாட்டு மந்திரிக்கு என்ன பொறுப்புக்கள் உண்டோ அவையே தப்தாரியின் பொறுப்புக்களாகும். ராம்ஜி காந்தியின் மகன் ர...