Skip to main content

பறக்கும் வித்தை | தி. ஜ. ரங்கநாதன்



குழந்தைகளிடம் காந்திக்கு மிகுந்த அன்பு. அவர்களை அவர் ஒருபோதும் மறக்கமாட்டார். அவருடைய ஆசிரமத்தில் பல குழந்தைகள் இருந்தன. காந்தி வெளியூர்களில் எங்கே இருந்தாலும் சரி, ஆசிரமக் குழந்தைகளுக்குத் தவறாமல் கடிதம் எழுதுவார்.
அப்போது இந்தியா சுதந்தரம் அடையவில்லை. அந்நிய சர்க்கார் இதை ஆண்டது. அந்தக் சர்க்காரைக் காந்தி எதிர்த்தார். பல முறை போராட்டம் நடத்தினார்; பல முறை சிறைப்பட்டார்.
அவற்றுள் ஒன்று உப்புச் சத்தியாகிரகம். அப்போது அவர் சிறைப்பட்டார். ஏரவாடா சிறையில் அவர் இருந்தார். அந்த நாளிலும் ஆசிரமக் குழந்தைகளை அவர் மறக்கவில்லை; அவர்களுக்குக் கடிதம் எழுதினார். ஒரு கடிதம் மிக்க அருமையானது. அது இதுதான்:
சின்னஞ்சிறு குருவிகளே!
சாதாரணக் குருவிகள் இருக்கின்றன. அவற்றுக்குச் சிறகு உண்டு. அது இல்லாவிட்டால் அவற்றால் பறக்க முடியாது.
சிறகு இருந்தால் யார்தான் பறக்க முடியாது? யாருந்தான் பறக்க முடியும்
ஆனால், சிறகு இல்லாமலே பறப்பது எப்படி? அதை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அப்போது உங்கள் தொல்லைகள் எல்லாம் நீங்கிவிடும். சிறகு இல்லாமலே நீங்கள் பறக்கலாம். அதை நான் கற்றுக்கொடுக்கிறேன்
இங்கே பாருங்கள்; எனக்குச் சிறகு இல்லை. என்றாலும், ஒவ்வொரு நாளும் நான் உங்களை எண்ணுகிறேன்; அந்த எண்ணத்திலே உங்களிடம் பறந்து வருகிறேன்.
அடடா! இதோ இருக்கிறாள், விமலா குட்டி; இதோ இருக்கிறான், ஹரி; இதோ இருக்கிறான், தர்மகுமார்!
நீங்களுங்கூட எண்ணத்திலேயே என்னிடம் பறந்து வர முடியும்.
எப்படி எண்ணுவது (யோசிப்பது) என்று தெரியவேண்டும். அது தெரிந்தவர்களுக்கு ஆசிரியர் வேண்டியதில்லை. ஆசிரியர் நமக்கு வழிகாட்டுவார்; ஆனால், எண்ணும் ஆற்றலை அவர் தரமுடியாது. அது நம் உள்ளத்திலேயே இருக்கிறது. அறிவு வேண்டும். அது உள்ளவர்களின் எண்ணம் சிறப்பாய் இருக்கும்.
பிரபு பாயின் மாலைப் பிரார்த்தனை நடக்குமே; உங்களுள் யார் யார் அப்போது ஒழுங்காய்ப் பிரார்த்தனை செய்யாதவர்? அவர்களுடைய பெயர்களை எனக்குத் தெரிவியுங்கள்.
எனக்கு ஒரு கடிதம் எழுதுங்கள். அதில் எல்லாரும் கையெழுத்திடுங்கள். கையெழுத்திடத் தெரியாதவர் உங்களுள் சிலர் இருப்பார்கள். அவர்கள் ஒரு சிலுவைக்குறி போடலாம்; அதுவே போதும்.
உங்களுக்கு என் ஆசிகள்,
பாபு.

அடுத்தக் கதை: முதல் சிறைவாசம்

Comments

Most Popular

உறையூர் மறைந்த வரலாறு - மயிலை சீனி. வேங்கடசாமி

ஊர்களும் நகரங்களும் சிற்சில காரணங்களால் அழிந்து படுவதுண்டு. எரிமலைகளாலும், ஆறுகளாலும், மண்காற்றி னாலும், கடற்பெருக்காலும் ஊர்கள் அழிகின்றன. இவ்வாறு அழிந்துபோன ஊர்கள் பலப்பல. கி.பி. முதலாம் நூற்றாண்டிலே கிரேக்க நாட்டிலே இருந்த பாம்பி என்னும் நகரம், வெசூவியஸ் என்னும் எரிமலை கக்கிய நெருப்பினாலும் சாம்பலினாலும் மூடுண்டு அழிந்துவிட்டது. அழிந்துபோன அந்நகரத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் தோண்டியபோது, புதையுண்ட வீதிகளையும், மனைகளையும், மக்களின் எலும்புக் கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். சிந்து நதிக்கரையிலே இருந்த ஹரப்பா, மொகஞ்சதரோ என்னும் நகரங்கள் வெள்ளப் பெருக்கினால் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்துவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன்னர் அவ்விடங்களை அகழ்ந்து பார்த்தபோது, அக் காலத்துக் கட்டடங்களையும், தெருக்களையும், பாண்டங் களையும், எலும்புக்கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். புதுச்சேரிக்குத் தெற்கே பத்து மைல் தொலைவில் உள்ள அரிக்கமேடு என்னும் கடற்கரைப் பட்டினம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தமிழ் நாட்டில் பேர்பெற்ற துறைமுகமாக இருந்தது. யவனர் முதலிய வெ...

பழங்காலத்து எழுதுகருவிகள் - மயிலை சீனி. வேங்கடசாமி

இந்தக் காலத்திலே உலகம் முழுவதும் காகிதத்தாளும் பேனாவும் எழுதுகருவிகளாகப் பயன்பட்டுவருகின்றன. இவை எழுத்து வேலைக்குப் பெரிதும் வாய்ப்பாகவும் எளிதாகவும் அமைந்திருக்கின்றன. ஆனால், காகிதத்தாள் வருவதற்கு முன்பு, பண்டைக் காலத்திலே இவ்வளவு எளிதானவும் வாய்ப்பானவும் ஆன எழுதுகருவிகள் இல்லை. பண்டைக் காலத்திலே உலக மக்கள் எவ்விதமான எழுதுகருவிகளை வழங்கிவந்தார்கள் என்பது பற்றியும், பின்னர் காகிதத்தாள் எவ்வாறு நடைமுறையில் வந்தது என்பதைப் பற்றியும் ஈண்டுக் கூறுவோம். களிமண் சுவடிகள் சிறிய ஆசியா தேசத்தில் யூப்ரெடிஸ், டைகிரிஸ் ஆறுகள் பாய்கிற இடத்தில் இருந்த கால்டியா, ஸைரியா நாட்டு மக்கள் ஆதிகாலத்தில் களிமண்ணை எழுதுகருவியாகக் கொண்டிருந் தார்கள். களிமண்ணைப் பிசைந்து சிறுசிறு பலகைகளைப்போல் அமைத்து, அப்பலகை காய்ந்து போவதற்கு முன்னமே ஆணி போன்ற கருவியினால் எழுதி உலரவைத்துப் புத்தகமாக உபயோகித்தார்கள்; அவர்கள் எழுதிய எழுத்துகளுக்குக் கூனிபார்ம் எழுத்து என்று பெயர் கூறுவர். அவர்கள் எழுதிய களிமண் சுவடிகளைப் புத்தகசாலையில் வைத்துப் போற்றி னார்கள். அவ்வாறு போற்றி வைக்கப்பட்டிருந்த களிமண் சுவடிகள் பல, சமீப...

மனமும் அதன் விளக்கமும் | இன நனவிலி மனம் | பெ. தூரன்

பி ராய்டு என்ற உளவியலார் நனவிலி மனத்தைப் பற்றி ஆராய்ந்து உளப் பகுப்பியல் முறையைத் தோற்றுவித்தார் என்று கண்டோம். உளப்பகுப்பியலின் தந்தை அவரே. அவரோடு ஆட்லரும், யுங் என்பவரும் மாணவராகப் பல ஆண்டுகள் வேலை செய்தனர். பிறகு இருவரும் கொள்கை வேறுபாடுகளால் வேறு வேறாகப் பிரிந்தனர். ஆட்லரின் பிற்காலக் கருத்தைப் பற்றி முன்பே கூறப்பட்டுள்ளது. இங்கு யுங்கின் கொள்கையைச் சுருக்கமாக ஆராய்வோம். நனவிலி மனத்தைப் பிற்காலத்தில் பிராய்டு ‘இத்’ என்றும், அதில் எழும் ஆற்றலை ‘லிபிடோ’ (Libido) என்றும் குறிப்பிட்டார். லிபிடோ பாலியல்பு வாய்ந்தது என்றும், மனக் கோளாறுகளெல்லாம் இது ஒழுங்காக அமையாததால் ஏற்படுகின்றன என்றும், இந்தப் பாலியல்பு குழவிப் பருவ முதற்கொண்டே தொடங்குகிறதென்றும் கருதினார். நனவிலி மனம் குழவிப் பருவத்தில் சிறிதாக இருந்தபோதும், வயது ஆக ஆக அக்குழந்தைக்குத் தடைகளும் விதிகளும் பெருகுகின்ற காரணத்தினால் நனவிலி மனத்தில் பல விதமான இச்சைகளும் ஆர்வங்களும் மிகுதியாகி நனவிலி மனம் விரிவடைகின்றது. அதனால்தான் நனவிலி மனம் நனவு மனத்தினின்றும் வளர்ந்ததேயாகும் என்று பொதுப்படையாகக் கூறுவதுண்டு. இக் கருத்தைப் பல ந...