Skip to main content

பறக்கும் வித்தை | தி. ஜ. ரங்கநாதன்



குழந்தைகளிடம் காந்திக்கு மிகுந்த அன்பு. அவர்களை அவர் ஒருபோதும் மறக்கமாட்டார். அவருடைய ஆசிரமத்தில் பல குழந்தைகள் இருந்தன. காந்தி வெளியூர்களில் எங்கே இருந்தாலும் சரி, ஆசிரமக் குழந்தைகளுக்குத் தவறாமல் கடிதம் எழுதுவார்.
அப்போது இந்தியா சுதந்தரம் அடையவில்லை. அந்நிய சர்க்கார் இதை ஆண்டது. அந்தக் சர்க்காரைக் காந்தி எதிர்த்தார். பல முறை போராட்டம் நடத்தினார்; பல முறை சிறைப்பட்டார்.
அவற்றுள் ஒன்று உப்புச் சத்தியாகிரகம். அப்போது அவர் சிறைப்பட்டார். ஏரவாடா சிறையில் அவர் இருந்தார். அந்த நாளிலும் ஆசிரமக் குழந்தைகளை அவர் மறக்கவில்லை; அவர்களுக்குக் கடிதம் எழுதினார். ஒரு கடிதம் மிக்க அருமையானது. அது இதுதான்:
சின்னஞ்சிறு குருவிகளே!
சாதாரணக் குருவிகள் இருக்கின்றன. அவற்றுக்குச் சிறகு உண்டு. அது இல்லாவிட்டால் அவற்றால் பறக்க முடியாது.
சிறகு இருந்தால் யார்தான் பறக்க முடியாது? யாருந்தான் பறக்க முடியும்
ஆனால், சிறகு இல்லாமலே பறப்பது எப்படி? அதை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அப்போது உங்கள் தொல்லைகள் எல்லாம் நீங்கிவிடும். சிறகு இல்லாமலே நீங்கள் பறக்கலாம். அதை நான் கற்றுக்கொடுக்கிறேன்
இங்கே பாருங்கள்; எனக்குச் சிறகு இல்லை. என்றாலும், ஒவ்வொரு நாளும் நான் உங்களை எண்ணுகிறேன்; அந்த எண்ணத்திலே உங்களிடம் பறந்து வருகிறேன்.
அடடா! இதோ இருக்கிறாள், விமலா குட்டி; இதோ இருக்கிறான், ஹரி; இதோ இருக்கிறான், தர்மகுமார்!
நீங்களுங்கூட எண்ணத்திலேயே என்னிடம் பறந்து வர முடியும்.
எப்படி எண்ணுவது (யோசிப்பது) என்று தெரியவேண்டும். அது தெரிந்தவர்களுக்கு ஆசிரியர் வேண்டியதில்லை. ஆசிரியர் நமக்கு வழிகாட்டுவார்; ஆனால், எண்ணும் ஆற்றலை அவர் தரமுடியாது. அது நம் உள்ளத்திலேயே இருக்கிறது. அறிவு வேண்டும். அது உள்ளவர்களின் எண்ணம் சிறப்பாய் இருக்கும்.
பிரபு பாயின் மாலைப் பிரார்த்தனை நடக்குமே; உங்களுள் யார் யார் அப்போது ஒழுங்காய்ப் பிரார்த்தனை செய்யாதவர்? அவர்களுடைய பெயர்களை எனக்குத் தெரிவியுங்கள்.
எனக்கு ஒரு கடிதம் எழுதுங்கள். அதில் எல்லாரும் கையெழுத்திடுங்கள். கையெழுத்திடத் தெரியாதவர் உங்களுள் சிலர் இருப்பார்கள். அவர்கள் ஒரு சிலுவைக்குறி போடலாம்; அதுவே போதும்.
உங்களுக்கு என் ஆசிகள்,
பாபு.

அடுத்தக் கதை: முதல் சிறைவாசம்

Comments

Most Popular

மனமும் அதன் விளக்கமும் | உள்ளக் கிளர்ச்சி | பெ. தூரன்

ம னம் என்பது மாயமாக இருந்தாலும் அதில் எத்தனை எத்தனை குமுறல்கள், கொந்தளிப்புகள், கிளர்ச்சிகள் தோன்றுகின்றன! சினம் பிறக்கிறது, அச்சம் உண்டாகிறது - இப்படி எத்தனை விதமான அனுபவங்கள்! சினம், அச்சம், காதல், காமம், துக்கம், வெறுப்பு முதலியவைகளுக்கு உள்ளக் கிளர்ச்சிகள் என்று பெயர். குழந்தை அழுகிறது; அடுத்த விநாடியிலே மகிழ்ச்சியால் சிரிக்கிறது. குழந்தைகள் தங்கள் உள்ளக் கிளர்ச்சிகளை உடனே வெளிப்படுத்திவிடுகின்றன. விரைவிலே அவை மறைந்தும் போகின்றன. கண்ணம்மா ஓடிவருகிருள். “அம்மா, அடுத்த வீட்டுக் கிட்டுவுக்கு மிட்டாய் கொடுக்க வேண்டாம்” என்று அவன் மேலே வெறுப்போடு பேசுகிறாள். ஆனால் சிறிது நேரத்திற்குள்ளே இரண்டு பேரும் சேர்ந்து விளையாடத் தொடங்கி விடுகிறார்கள். கண்ணம்மா தன்னிடமிருந்த் மிட்டாயை அவனுக்குக் கொடுக்கிறாள். கிட்டுவின் மேல் ஏற்பட்டிருந்த வெறுப்பை அவள் மறந்தே விடுகிறாள். இந்தக் குழந்தைகளைப் போல் உலக மக்கள் இருக்கக்கூடாதா என்றுகூடச் சொல்லத் தோன்றுகிறது. ஆனால் மனிதன் தனது உள்ளக் கிளர்ச்சிகள் அனைத்தையும் குழந்தைகளைப்போலத் திடீர் திடீரென்று உடனே வெளிப்படுத்தலாமா? சமூக வாழ்க்கையிலே அது முறையா...

மணிபல்லவம் - ஜம்பு கொல பட்டினம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்ககாலத்து நூலாகிய மணிமேகலையிலே, இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப்பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள பழைய பௌத்த நூல்களிலேயும் இலங்கைத்தீவின் வடகோடியில் இருந்த ஜம்புகோல் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. தமிழ் நூலில் கூறப்படும் குறிப்பு களைக் கொண்டும் பாலி மொழி நூல்களில் கூறப்படும் குறிப்புகளைக் கொண்டும் மணிபல்லவமும் ஜம்புகொல பட்டினமும் ஒரே இடம் என்று துணியலாம். பெயர் வேறுபடு வதிலிருந்து இரண்டும் வெவ்வேறிடங்கள் எனக் கருதும்படி இருந்தாலும், இவைகளைப்பற்றிக் கூறப்படும் செய்திகளை உற்றுநோக்கினால், இரண்டும் ஒன்றே என்பது ஐயமற விளங்குகிறது. இதனை ஈண்டு ஆராய்வோம். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலேதான் மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்தது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை கூறுவது காண்க. சோழ நாட்டின் துறைமுகப்பட்டினமாகிய புகார்ப்பட்டினத்தில் இருந்து தெற்கே 30 யோசனை தொலைவில் மணிபல்லவம் இருந்தது (...

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு...