Skip to main content

பறக்கும் வித்தை | தி. ஜ. ரங்கநாதன்



குழந்தைகளிடம் காந்திக்கு மிகுந்த அன்பு. அவர்களை அவர் ஒருபோதும் மறக்கமாட்டார். அவருடைய ஆசிரமத்தில் பல குழந்தைகள் இருந்தன. காந்தி வெளியூர்களில் எங்கே இருந்தாலும் சரி, ஆசிரமக் குழந்தைகளுக்குத் தவறாமல் கடிதம் எழுதுவார்.
அப்போது இந்தியா சுதந்தரம் அடையவில்லை. அந்நிய சர்க்கார் இதை ஆண்டது. அந்தக் சர்க்காரைக் காந்தி எதிர்த்தார். பல முறை போராட்டம் நடத்தினார்; பல முறை சிறைப்பட்டார்.
அவற்றுள் ஒன்று உப்புச் சத்தியாகிரகம். அப்போது அவர் சிறைப்பட்டார். ஏரவாடா சிறையில் அவர் இருந்தார். அந்த நாளிலும் ஆசிரமக் குழந்தைகளை அவர் மறக்கவில்லை; அவர்களுக்குக் கடிதம் எழுதினார். ஒரு கடிதம் மிக்க அருமையானது. அது இதுதான்:
சின்னஞ்சிறு குருவிகளே!
சாதாரணக் குருவிகள் இருக்கின்றன. அவற்றுக்குச் சிறகு உண்டு. அது இல்லாவிட்டால் அவற்றால் பறக்க முடியாது.
சிறகு இருந்தால் யார்தான் பறக்க முடியாது? யாருந்தான் பறக்க முடியும்
ஆனால், சிறகு இல்லாமலே பறப்பது எப்படி? அதை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அப்போது உங்கள் தொல்லைகள் எல்லாம் நீங்கிவிடும். சிறகு இல்லாமலே நீங்கள் பறக்கலாம். அதை நான் கற்றுக்கொடுக்கிறேன்
இங்கே பாருங்கள்; எனக்குச் சிறகு இல்லை. என்றாலும், ஒவ்வொரு நாளும் நான் உங்களை எண்ணுகிறேன்; அந்த எண்ணத்திலே உங்களிடம் பறந்து வருகிறேன்.
அடடா! இதோ இருக்கிறாள், விமலா குட்டி; இதோ இருக்கிறான், ஹரி; இதோ இருக்கிறான், தர்மகுமார்!
நீங்களுங்கூட எண்ணத்திலேயே என்னிடம் பறந்து வர முடியும்.
எப்படி எண்ணுவது (யோசிப்பது) என்று தெரியவேண்டும். அது தெரிந்தவர்களுக்கு ஆசிரியர் வேண்டியதில்லை. ஆசிரியர் நமக்கு வழிகாட்டுவார்; ஆனால், எண்ணும் ஆற்றலை அவர் தரமுடியாது. அது நம் உள்ளத்திலேயே இருக்கிறது. அறிவு வேண்டும். அது உள்ளவர்களின் எண்ணம் சிறப்பாய் இருக்கும்.
பிரபு பாயின் மாலைப் பிரார்த்தனை நடக்குமே; உங்களுள் யார் யார் அப்போது ஒழுங்காய்ப் பிரார்த்தனை செய்யாதவர்? அவர்களுடைய பெயர்களை எனக்குத் தெரிவியுங்கள்.
எனக்கு ஒரு கடிதம் எழுதுங்கள். அதில் எல்லாரும் கையெழுத்திடுங்கள். கையெழுத்திடத் தெரியாதவர் உங்களுள் சிலர் இருப்பார்கள். அவர்கள் ஒரு சிலுவைக்குறி போடலாம்; அதுவே போதும்.
உங்களுக்கு என் ஆசிகள்,
பாபு.

அடுத்தக் கதை: முதல் சிறைவாசம்

Comments

Most Popular

‘எழுத்து’ - 119 இதழ்களின் பொருளடக்கம்

எழுத்து 1: ஜனவரி 1959 எழுத்து வளர - தலையங்கம் சாகித்ய அகாடமி தமிழ்ப் பரிசு – க.நா.சு. பெட்டிக்கடை நாரணன் – ந. பிச்சமூர்த்தி கவிதை - மயன் சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்: ஒரு தொகுப்புக்கான சில குறிப்புகள் – க. நா. சுப்ரமண்யம் எழுதுவதெல்லாம்… - சிட்டி தாழை பூத்தது – பெ. கோ. சுந்தர்ராஜன் பாரதிக்குப்பின்-1: டாக்டர் சாமிநாதையர் – க.நா.சு. கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா விண்ணும் மண்ணும் – ந. சிதம்பரசுப்ரமண்யன் இன்றைய தமிழ் இலக்கிய விமர்சன தோரணை – சி. சு. செல்லப்பா வானம் - மயன் கெளமாரி – சாலிவாஹனன் உண்மைதேடியின் அனுபவ இலக்கிய வடிவங்கள் – தி. ஜானகிராமன்   எழுத்து 2: பிப்ரவரி 1959 வாடைக் காற்று - அசுவதி எழுத்தும் அதன் வாசகர்களும் இலக்கியமும் குழுவும் எஸ். வையாபுரிப்பிள்ளை – க. நா. சுப்ரமண்யம் திறனாய்வு - வில்லி அருளும் பொருளும் – ந. சிதம்பர சுப்ரமண்யன் கவி – வேதனை – தி. சோ. வேணுகோபாலன் தர்க்கம் - ஜெயகாந்தன் அன்று வருவாரோ ? – கு. அழகிரிசாமி வெற்றியின் பண்பு - பராங்குசம் தரிசனம் - மயன் கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா ...

சுதந்திரத்துக்குப் பிறகு மொழிபெயர்ப்புகள் | க. நா. சுப்ரமண்யம்

தமிழிலக்கியத்தில் போதுமான அளவுக்கு இலக்கியபூர்வமான மொழிபெயர்ப்பு நூல்கள் வந்துள்ளனவா என்று கேட்டால் , இல்லை என்றுதான் பதில் சொல்லவேண்டும். அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்கிற அளவுக்குக்கூட மொழிபெயர்ப்புகள் வெளியாகவில்லை. அதுவும் சமீபகாலத்தில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவில் எந்த மொழிபெயர்ப்பும் என் கண்ணில் படவில்லை. 1935 க்குப் பிறகு 1950 வரையில் சரசரவெனப் பல உலக இலக்கிய நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பெற்று ஓரளவுக்கு வாசகர்களிடையே ஓர் ஆர்வத்தையும் தூண்டின. அப்போதுங்கூட இலக்கிய வேகத்தை உண்டாக்கித் தாங்கக்கூடிய அளவுக்கு மொழிபெயர்ப்புகள் வந்ததாகச் சொல்வதற்கில்லை. அந்தக் காலகட்டத்தில் மொழிபெயர்ப்புகள் செய்து வெளியிட முன்வந்தவர்கள் ஓரளவுக்குத் தங்கள் ரசனையினால் தூண்டப்பெற்றவர்களாக , இந்த நூல் தமிழில் இருந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணி , அதனால் தங்களுக்கு லாபம் என்ன கிடைக்கும் என்கிற எண்ணத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு மொழிபெயர்ப்பதில் ஈடுபட்டனர். அந்த அளவுக்குச் சுதந்திரத்திற்குப்பின் ஓர் உந்துதல் , ஈடுபாடு இல்லை என்றுதான் சொல்லவேண்டும். பிளேட்டோ , ரூஸ்ஸோ , டால்ஸ்டாய் மற்றும் ப...

மனமும் அதன் விளக்கமும் | இன நனவிலி மனம் | பெ. தூரன்

பி ராய்டு என்ற உளவியலார் நனவிலி மனத்தைப் பற்றி ஆராய்ந்து உளப் பகுப்பியல் முறையைத் தோற்றுவித்தார் என்று கண்டோம். உளப்பகுப்பியலின் தந்தை அவரே. அவரோடு ஆட்லரும், யுங் என்பவரும் மாணவராகப் பல ஆண்டுகள் வேலை செய்தனர். பிறகு இருவரும் கொள்கை வேறுபாடுகளால் வேறு வேறாகப் பிரிந்தனர். ஆட்லரின் பிற்காலக் கருத்தைப் பற்றி முன்பே கூறப்பட்டுள்ளது. இங்கு யுங்கின் கொள்கையைச் சுருக்கமாக ஆராய்வோம். நனவிலி மனத்தைப் பிற்காலத்தில் பிராய்டு ‘இத்’ என்றும், அதில் எழும் ஆற்றலை ‘லிபிடோ’ (Libido) என்றும் குறிப்பிட்டார். லிபிடோ பாலியல்பு வாய்ந்தது என்றும், மனக் கோளாறுகளெல்லாம் இது ஒழுங்காக அமையாததால் ஏற்படுகின்றன என்றும், இந்தப் பாலியல்பு குழவிப் பருவ முதற்கொண்டே தொடங்குகிறதென்றும் கருதினார். நனவிலி மனம் குழவிப் பருவத்தில் சிறிதாக இருந்தபோதும், வயது ஆக ஆக அக்குழந்தைக்குத் தடைகளும் விதிகளும் பெருகுகின்ற காரணத்தினால் நனவிலி மனத்தில் பல விதமான இச்சைகளும் ஆர்வங்களும் மிகுதியாகி நனவிலி மனம் விரிவடைகின்றது. அதனால்தான் நனவிலி மனம் நனவு மனத்தினின்றும் வளர்ந்ததேயாகும் என்று பொதுப்படையாகக் கூறுவதுண்டு. இக் கருத்தைப் பல ந...