Skip to main content

அறுவை சிகிச்சை | தி. ஜ. ரங்கநாதன்

முதல் சிறைவாசத்தில் இரண்டு ஆண்டுகள் கழிந்தன. காந்திக்குக் குடல் அநுபந்த நோய் வந்தது. வயிற்றில் தாங்கமுடியாத வலி ஏற்பட்டது.
அதைக் கண்டு சிறையின் மேல் அதிகாரி பயந்தார். தமது காரிலே காந்தியை ஏற்றிக் கொண்டார். சிறைக்கு வெளியே புனா நகரில் ஸாஸூன் ஆஸ்பத்திரி இருக்கிறது. அவரை அங்கே கொண்டுபோய்விட்டார்.
கர்னல் மேடாக் என்ற ஆங்கிலேயர் அங்கே பெரிய சர்ஜன். உடனே அறுவை சிகிச்சை செய்யவேண்டும். இல்லாவிட்டால் நோய் கடுமையாகிவிடும்என்று அவர் சொன்னார்.
காந்தி இணங்கினார்.
"உங்கள் சொந்த டாக்டர்கள் இருப்பார்கள் அவர்களுக்குச் சொல்லியனுப்ப வேண்டுமா?" என்று அதிகாரிகள் அவரைக் கேட்டார்கள்.
"பம்பாயில் டாக்டர் தலால் என்பவர் இருக்கிறார்; பரோடாவில் டாக்டர் ஜீவராஜ் மேத்தா என்பவர் இருக்கிறார். இருவரையும் வரவழையுங்கள்'' என்றார் காந்தி.
காந்தி தெரிவித்த டாக்டர்களுக்கு அப்படியே செய்தி அனுப்பினார்கள். ஆனால், காந்தியின் நாடித்துடிப்பு மோசமாயிற்று. காய்ச்சல் கடுமையாயிற்று. உடனே அறுவைச் சிகிச்சை செய்யவேண்டும்; இல்லாவிட்டால் காந்தியின் உயிருக்கே ஆபத்து என்னும் நிலை தோன்றியது.
நோய்ப்பகுதியைக் கத்தியால் அறுப்பார்கள் - இதுதான் அறுவைச் சிகிச்சை. எல்லா டாக்டர்களும் இதைச் செய்யமுடியாது; நிபுணர்களே செய்ய முடியும்.
சிறிது பிசகினால் அபாயம். அறுவை நன்றாய் நடந்திருக்கலாம்; அப்போதும் உயிர் பிழைக்காமல் போகலாம். "நான் சம்மதிக்கிறேன்" என்று நோயாளி எழுதிக் கொடுக்க வேண்டும். அப்புறந்தான் அறுவையை டாக்டர் செய்வார்.
காந்தியோ பெரிய தலைவர்; மக்களின் உள்ளத்தைக் கவர்ந்தவர். ஆங்கிலேயரோ சர்க்காரை நடத்துகிறவர்கள். ஆங்கில டாக்டர் இந்த அறுவையைச் செய்யலாமா?
"நன்றாய்ச் செய்யலாம். ஆங்கில டாக்டரிடம் எனக்கு நம்பிக்கை உண்டு. அவர் சூதுவாது புரியமாட்டார்" என்று காந்தி சொன்னார். எதிரியிடமும் நல்லெண்ணம் கொண்டவர் காந்தி.
காந்தி சம்மதித்துவிட்டார்; மக்கள் என்ன நினைப்பார்களோ? தவறாக எண்ணிக் கலகம் செய்யமாட்டார்களா? - இப்படியெல்லாம் அதிகாரிகள் பயந்தார்கள்.
ஆனால், ஆங்கில டாக்டர் மேடக் பயப்படவில்லை. அறுவையைச் செய்யத் துணிந்துவிட்டார்.
"உங்கள் நண்பர் சிலர் உடன் இருக்கட்டும். யார் யாருக்குச் சொல்லி அனுப்பலாம்" என்று அதிகாரிகள் கேட்டார்கள்.
"கனம் சீனிவாச சாஸ்திரியார், டாக்டர் பதக், என்.ஸி.கேல்கர் - இந்த மூன்று பேருக்கும் சொல்லி அனுப்புங்கள்" என்றார் காந்தி.
கனம் சாஸ்திரியார் அந்த ஊரிலேயே அப்போது இருந்தார். அவரும் நண்பர்களும் ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்தார்கள்.
எழுத்து மூலம் காந்தியின் சம்மதம் வேண்டும். ஒரு கடித வாசகத்தைக் காந்தி சொன்னார்; சீனிவாச சாஸ்திரியார் அதை எழுதினார். "அறுவை செய்துகொள்ள எனக்குச் சம்மதம்'' என்று கடிதத்தில் காந்தி தெரிவித்தார்.
கடிதத்தில் காந்தி கையெழுத்திட வேண்டும் அவரிடம் நீட்டினார்கள். அப்பொழுது அவருடைய கை 'வெடவெட' என்று நடுங்கியது.
டாக்டர் மேடக்கை நோக்கிக் காந்தி சொன்னார்: "என் கை எப்படி நடுங்குகிறது, பார்த்தீர்களா? இதை நீங்கள்தாம் சரி செய்ய வேண்டும்."
"கவலை வேண்டாம். உங்கள் உடம்பில் டன் கணக்கான பலத்தை நாங்கள் ஏற்றிவிடுகிறோம்" என்றார் டாக்டர் மேடக்.
இரவு பத்து மணிக்கு மின்சார விளக்கொளியில் அறுவைச் சிகிச்சை நடந்தது.
என்ன விபரீதம்! அப்போது வானம் இடித்தது; மின்னல் வீசியது. மின்சாரம் தடைப்பட்டது. விளக்கு அணைந்தது.
'ஹரிகேன் லைட்' என்ற மண்ணெண்ணெய் விளக்கை ஏற்றினார்கள். அந்த வெளிச்சத்தில் அறுவையை டாக்டர் செய்து முடித்தார்.
செம்மையான சிகிச்சை; காந்தி பிழைத்தார்.

அடுத்தக் கதை: ஆஸ்பத்திரி காட்சி

Comments

Most Popular

மனமும் அதன் விளக்கமும் | இன நனவிலி மனம் | பெ. தூரன்

பி ராய்டு என்ற உளவியலார் நனவிலி மனத்தைப் பற்றி ஆராய்ந்து உளப் பகுப்பியல் முறையைத் தோற்றுவித்தார் என்று கண்டோம். உளப்பகுப்பியலின் தந்தை அவரே. அவரோடு ஆட்லரும், யுங் என்பவரும் மாணவராகப் பல ஆண்டுகள் வேலை செய்தனர். பிறகு இருவரும் கொள்கை வேறுபாடுகளால் வேறு வேறாகப் பிரிந்தனர். ஆட்லரின் பிற்காலக் கருத்தைப் பற்றி முன்பே கூறப்பட்டுள்ளது. இங்கு யுங்கின் கொள்கையைச் சுருக்கமாக ஆராய்வோம். நனவிலி மனத்தைப் பிற்காலத்தில் பிராய்டு ‘இத்’ என்றும், அதில் எழும் ஆற்றலை ‘லிபிடோ’ (Libido) என்றும் குறிப்பிட்டார். லிபிடோ பாலியல்பு வாய்ந்தது என்றும், மனக் கோளாறுகளெல்லாம் இது ஒழுங்காக அமையாததால் ஏற்படுகின்றன என்றும், இந்தப் பாலியல்பு குழவிப் பருவ முதற்கொண்டே தொடங்குகிறதென்றும் கருதினார். நனவிலி மனம் குழவிப் பருவத்தில் சிறிதாக இருந்தபோதும், வயது ஆக ஆக அக்குழந்தைக்குத் தடைகளும் விதிகளும் பெருகுகின்ற காரணத்தினால் நனவிலி மனத்தில் பல விதமான இச்சைகளும் ஆர்வங்களும் மிகுதியாகி நனவிலி மனம் விரிவடைகின்றது. அதனால்தான் நனவிலி மனம் நனவு மனத்தினின்றும் வளர்ந்ததேயாகும் என்று பொதுப்படையாகக் கூறுவதுண்டு. இக் கருத்தைப் பல ந...

பெரியம்மை | சுரேஷ்குமார இந்திரஜித்

பெரியப்பா அருமையாகப் பாடுவார். ‘முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே’ என்ற டி.எம்.எஸ். பாட்டை ஏற்ற இறக்கங்கள், பிர்காக்கள் பிசகாமல் பாடுவார். அப்போது பெரியம்மை முகத்தைப் பார்க்கவேண்டுமே. அவர் முகம் பெருமிதத்தோடும் பரவசத்தோடும் இருக்கும். பெரியம்மா முருங்கைக்காய் குழம்பு வைத்தால் நிறைய சாப்பிடவேண்டியிருக்கும். குழம்புகள் ருசியாகச் செய்வதற்கென்றே அவள் பிறந்திருக்கிறாள். கத்தரிக்காய் புளிக்குழம்பும் அப்படித்தான் அவ்வளவு ருசியாக இருக்கும். என் அம்மைக்கு இந்தக் குழம்புகள் ருசி கூடி வராது. சப்பென்று இருக்கும். நான் வேலை பார்க்கும் ஊரிலிருந்து வீட்டுக்கு வந்திருந்தேன். பெரியப்பாவைப் பார்ப்பதற்கும், அவர் பாட்டைக் கேட்பதற்கும் அவர் வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன். இது மார்கழி மாதம். வாசல்களில் கோலம் போட்டு பூசணிப்பூவை மையமாக வைத்திருந்தார்கள். அநேகமாக சில வீடுகள் நீங்கலாக எல்லா வீட்டு வாசல்களிலும் பூசணிப்பூவை வைத்திருந்தார்கள். செண்பகவல்லி மதினி வீட்டைக் கடக்கும்போது மல்லிகைப்பூ வாசம் வந்தது. மதினி வீட்டுக் காம்பவுண்டுக்குள் மல்லிகைப்பூ கொடிக்குப் பந்தல் போட்டிருந்ததைப் பார்த்தேன். வேல...

இரு சகோதரர்கள்

  [ அ. கி. கோபாலன், அ. கி. ஜயராமன் நேர்காணல் ] நேர்கண்டவர்: எஸ். குரு படங்கள்: திரு. சுதாகர் நோபல் பரிசு பெற்ற நாவல்களைப் பதிப்பித்த அ. கி. கோபாலன் நீங்கள் பதிப்பாளரானது எப்படி ? தென்னாற்காடு மேலக்குமாரமங்கலம் என் சொந்த ஊர். எங்கள் கிராமத்தில் நான்காவது வகுப்பு படித்தேன். கிராமத்தில் எங்கள் அப்பா விவசாயம் செய்துகொண்டிருந்தார். நிறைய நஞ்சை நிலம் இருந்தது. பங்காளிக் காய்ச்சலினால் எங்கள் சொத்துகள் பறிபோயின. முதலில் என் அண்ணன் அ. கி. ஜெயராமன் சென்னைக்கு வந்து ஒரு ஹோட்டலில் சர்வராகச் சேர்ந்துவிட்டு , அப்புறம் என்னை ஊரிலிருந்து வரவழைத்து , என்னையும் சர்வராகச் சேர்த்துவிட்டார். சைனா பஜார் பழைய ஆரிய பவனுக்கு எதிரே ஆனந்த லட்சுமி பவன் என்று இருந்தது. அங்குதான் சர்வராகச் சேர்ந்தோம். இட்லி அரையணா , காபி முக்காலணா , பீடா காலணா , ஸ்பெஷல் பீடா அரையணா விற்ற காலம் அது. ஹோட்டலுக்கு அருகில் ச. சு. சங்கரலிங்கக் கவிராயர் என்ற நாடகாசிரியர் தங்கியிருந்தார். சங்கரலிங்கக் கவிராயர் , சங்கரதாஸ் சுவாமிகளுக்கு இணையானவர். அவரிடம் நாடகப் பாடல்கள் கேட்டேன். ஹோட்டலில் சக ஊழியர்களிடம் சொல்லிவிட்டு , ஆ...