Skip to main content

அறுவை சிகிச்சை | தி. ஜ. ரங்கநாதன்

முதல் சிறைவாசத்தில் இரண்டு ஆண்டுகள் கழிந்தன. காந்திக்குக் குடல் அநுபந்த நோய் வந்தது. வயிற்றில் தாங்கமுடியாத வலி ஏற்பட்டது.
அதைக் கண்டு சிறையின் மேல் அதிகாரி பயந்தார். தமது காரிலே காந்தியை ஏற்றிக் கொண்டார். சிறைக்கு வெளியே புனா நகரில் ஸாஸூன் ஆஸ்பத்திரி இருக்கிறது. அவரை அங்கே கொண்டுபோய்விட்டார்.
கர்னல் மேடாக் என்ற ஆங்கிலேயர் அங்கே பெரிய சர்ஜன். உடனே அறுவை சிகிச்சை செய்யவேண்டும். இல்லாவிட்டால் நோய் கடுமையாகிவிடும்என்று அவர் சொன்னார்.
காந்தி இணங்கினார்.
"உங்கள் சொந்த டாக்டர்கள் இருப்பார்கள் அவர்களுக்குச் சொல்லியனுப்ப வேண்டுமா?" என்று அதிகாரிகள் அவரைக் கேட்டார்கள்.
"பம்பாயில் டாக்டர் தலால் என்பவர் இருக்கிறார்; பரோடாவில் டாக்டர் ஜீவராஜ் மேத்தா என்பவர் இருக்கிறார். இருவரையும் வரவழையுங்கள்'' என்றார் காந்தி.
காந்தி தெரிவித்த டாக்டர்களுக்கு அப்படியே செய்தி அனுப்பினார்கள். ஆனால், காந்தியின் நாடித்துடிப்பு மோசமாயிற்று. காய்ச்சல் கடுமையாயிற்று. உடனே அறுவைச் சிகிச்சை செய்யவேண்டும்; இல்லாவிட்டால் காந்தியின் உயிருக்கே ஆபத்து என்னும் நிலை தோன்றியது.
நோய்ப்பகுதியைக் கத்தியால் அறுப்பார்கள் - இதுதான் அறுவைச் சிகிச்சை. எல்லா டாக்டர்களும் இதைச் செய்யமுடியாது; நிபுணர்களே செய்ய முடியும்.
சிறிது பிசகினால் அபாயம். அறுவை நன்றாய் நடந்திருக்கலாம்; அப்போதும் உயிர் பிழைக்காமல் போகலாம். "நான் சம்மதிக்கிறேன்" என்று நோயாளி எழுதிக் கொடுக்க வேண்டும். அப்புறந்தான் அறுவையை டாக்டர் செய்வார்.
காந்தியோ பெரிய தலைவர்; மக்களின் உள்ளத்தைக் கவர்ந்தவர். ஆங்கிலேயரோ சர்க்காரை நடத்துகிறவர்கள். ஆங்கில டாக்டர் இந்த அறுவையைச் செய்யலாமா?
"நன்றாய்ச் செய்யலாம். ஆங்கில டாக்டரிடம் எனக்கு நம்பிக்கை உண்டு. அவர் சூதுவாது புரியமாட்டார்" என்று காந்தி சொன்னார். எதிரியிடமும் நல்லெண்ணம் கொண்டவர் காந்தி.
காந்தி சம்மதித்துவிட்டார்; மக்கள் என்ன நினைப்பார்களோ? தவறாக எண்ணிக் கலகம் செய்யமாட்டார்களா? - இப்படியெல்லாம் அதிகாரிகள் பயந்தார்கள்.
ஆனால், ஆங்கில டாக்டர் மேடக் பயப்படவில்லை. அறுவையைச் செய்யத் துணிந்துவிட்டார்.
"உங்கள் நண்பர் சிலர் உடன் இருக்கட்டும். யார் யாருக்குச் சொல்லி அனுப்பலாம்" என்று அதிகாரிகள் கேட்டார்கள்.
"கனம் சீனிவாச சாஸ்திரியார், டாக்டர் பதக், என்.ஸி.கேல்கர் - இந்த மூன்று பேருக்கும் சொல்லி அனுப்புங்கள்" என்றார் காந்தி.
கனம் சாஸ்திரியார் அந்த ஊரிலேயே அப்போது இருந்தார். அவரும் நண்பர்களும் ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்தார்கள்.
எழுத்து மூலம் காந்தியின் சம்மதம் வேண்டும். ஒரு கடித வாசகத்தைக் காந்தி சொன்னார்; சீனிவாச சாஸ்திரியார் அதை எழுதினார். "அறுவை செய்துகொள்ள எனக்குச் சம்மதம்'' என்று கடிதத்தில் காந்தி தெரிவித்தார்.
கடிதத்தில் காந்தி கையெழுத்திட வேண்டும் அவரிடம் நீட்டினார்கள். அப்பொழுது அவருடைய கை 'வெடவெட' என்று நடுங்கியது.
டாக்டர் மேடக்கை நோக்கிக் காந்தி சொன்னார்: "என் கை எப்படி நடுங்குகிறது, பார்த்தீர்களா? இதை நீங்கள்தாம் சரி செய்ய வேண்டும்."
"கவலை வேண்டாம். உங்கள் உடம்பில் டன் கணக்கான பலத்தை நாங்கள் ஏற்றிவிடுகிறோம்" என்றார் டாக்டர் மேடக்.
இரவு பத்து மணிக்கு மின்சார விளக்கொளியில் அறுவைச் சிகிச்சை நடந்தது.
என்ன விபரீதம்! அப்போது வானம் இடித்தது; மின்னல் வீசியது. மின்சாரம் தடைப்பட்டது. விளக்கு அணைந்தது.
'ஹரிகேன் லைட்' என்ற மண்ணெண்ணெய் விளக்கை ஏற்றினார்கள். அந்த வெளிச்சத்தில் அறுவையை டாக்டர் செய்து முடித்தார்.
செம்மையான சிகிச்சை; காந்தி பிழைத்தார்.

அடுத்தக் கதை: ஆஸ்பத்திரி காட்சி

Comments

Most Popular

இராவணன் இலங்கை - மயிலை சீனி. வேங்கடசாமி

தமிழ் நாட்டை அடுத்துள்ள இலங்கைத் தீவினை, இராவணன் ஆண்ட இலங்கை என்று மக்கள் கருதி வந்தனர்; வருகின்றனர். ஆழ்வார்களும் ஏனையோரும் இலங்கையைத் தென் இலங்கை என்று கூறியிருக்கிறபடியால், சிங்களத் தீவாகிய இலங்கைதான் இராவணன் ஆண்ட இலங்கை என மக்கள் தவறாகக் கருதி வருகின்றனர் போலும். 'தென் இலங்கை' என்பதற்குத் தமிழ் நாட்டிற்குத் தெற்கிலுள்ள இலங்கை என்று பொருள் கூறுவது சரித்திரத்துக்கு முரண்பட்டது. தென் இலங்கை என்பதற்கு, 'அயோத்திக்குத் தெற்கிலுள்ள இலங்கை' என்று பொருள் கொள்வதுதான் சரித்திரத்திற்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்தமானது. ஆனால், தமிழ் நாட்டை அடுத்துள்ள சிங்களத் தீவாகிய இலங்கைதான் இராவணன் ஆண்ட இலங்கை என்று பல நூற்றாண்டுகளாகக் கருதப்பட்டு வருகிறது. இத்தவறான கருத்து சங்க நூல்களிலும் இடம் பெற்றுவிட்டது. சங்க நூல்கள் கூறுவன தமிழ் நாட்டிலுள்ள கோடிக்கரை (தனுஷ்கோடி) என்னும் கடற்கரையருகில், ஓர் ஆலமரத்தின்கீழ் இராமர் தங்கி, சீதையை மீட்கும் வழியை வானர வீரர்களுடன் கலந்து யோசித்தார் என்று கடுவன் மள்ளனார் என்னும் புலவர் கூறுகிறார். "வென்வேற் கவுரியர் தொன்முது கோடி, முழங்கிரும் பெளவம...

மனமும் அதன் விளக்கமும் | கனவின் பொருள் | பெ. தூரன்

ப ல கனவுகள் சிக்கல் நிறைந்திருக்கின்றன; அவற்றில் தோன்றும் நிகழ்ச்சிகள் மேலாகப் பார்க்கும்போது பொருளற்றவைகளாகவும் இருக்கின்றன. கோ. என்பவர் கண்ட ஒரு கனவை இங்கே ஆராய்வோம். “ஏதோ ஒரு பெரிய கோயில். அங்கே நானும் என் நண்பர்கள் சி. வே. மா. ஆகிய மூவரும் சேர்ந்து ஒருவனைக் கொலை செய்தோம். அவனுடைய மூக்கை மாத்திரம் அறுத்துச் சந்தனத்தில் வைத்துச் சாமிக்கு வைத்தோம். பிணம் வெளியிலேயே கிடந்தது. சி. தான் மூக்கை அறுத்தவர். கடவுளைத் தொழுவதற்காகப் பலர் ஒரு மோட்டார்க் காரில் வந்தார்கள். உடனே நான் பிணத்தைத் துரக்கிக் கோபுரத்தின் மேல் வீசினேன். இதை எனது ஆசிரியர் ஒருவர் பார்த்துக் கொண்டார்.” “நான் ஒடி வந்துவிட்டேன். வழியில் என் நண்பர் வீ. யைச் சந்தித்து வேறொருவனிடம் சைக்கிள் வாங்கி இருவரும் ஏறிக்கொண்டு ஊருக்குச் சென்றோம். வழியில் சி. தம் அண்ணனிடம் ஒன்றும் நடக்காதது போல் வந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கொலை செய்துவிட்டு இவர் இவ்வளவு தாராளமாக வெளியில் நடமாடுகிறாரே என்று வியந்தேன்.” "நாங்கள் ஒரு சத்திரத்தில் புகுந்துகொண்டிருந்தோம். ஆனால் சி. வேறு சில நண்பர்களிடம் சாலையில் சென்றுகொண்டிருந்தார்.” ...

இலக்கிய விமரிசனம் - சில சிந்தனைகள் | க. நா. சுப்ரமண்யம்

எனக்கு இலக்கிய விமரிசனம் செய்வதிலே அவ்வளவாக நம்பிக்கை கிடையாது . இலக்கியத் துறைகளிலே சிலருக்குச் சில துறைகளில்தான் ஈடுபாடிருக்க முடியும் . எனக்குச் சிறுகதை , நாடகம் , நாவல் , கதை என்கிற துறைகளிலே ஈடுபாடு உண்டு . விமரிசனம் , கட்டுரை போன்ற துறைகளில் அவ்வளவாக ஈடுபாடு கிடையாதுதான் . எனினும் ஒரு இருபத்தைந்து வருஷங்களாகவே நான் இலக்கிய விமரிசனம் செய்துகொண்டு வரவேண்டியதாக இருந்திருக்கிறது . இஷ்டமில்லாமலேதான் நான் இலக்கிய விமரிசனம் செய்து கொண்டு வருகிறேன் - தவிர்க்க முடியாத நிர்ப்பந்தத்தினால் . சில சமயம் நான் ஆழந்தெரியாமல் காலை விட்டுவிடுவதும் உண்டு - ஆனால் நான் சொல்வதெல்லாவற்றையும் என்னளவில் உண்மையென்று நம்பித்தான் சொல்கிறேன் . என்னளவில் உண்மைதான் . அதனால் உங்களுக்கும் உண்மையாகத்தானே இருக்கவேண்டும் ? இலக்கிய விமரிசனத்தின் அவசியத்தைப்பற்றிப் பலரும் சொல்லிவிட்டார்கள் . அவசியம் என்று ஏற்றுக்கொள்ளுபவர்களும்கூட இன்று தமிழில் இலக்கியம் சரியானபடி வளர்ச்சியடையாத தோஷத்தினால் இலக்கிய விமரிசனத்துக்கு அவ்வளவாக அவசியமில்லை ...