Skip to main content

அறுவை சிகிச்சை | தி. ஜ. ரங்கநாதன்

முதல் சிறைவாசத்தில் இரண்டு ஆண்டுகள் கழிந்தன. காந்திக்குக் குடல் அநுபந்த நோய் வந்தது. வயிற்றில் தாங்கமுடியாத வலி ஏற்பட்டது.
அதைக் கண்டு சிறையின் மேல் அதிகாரி பயந்தார். தமது காரிலே காந்தியை ஏற்றிக் கொண்டார். சிறைக்கு வெளியே புனா நகரில் ஸாஸூன் ஆஸ்பத்திரி இருக்கிறது. அவரை அங்கே கொண்டுபோய்விட்டார்.
கர்னல் மேடாக் என்ற ஆங்கிலேயர் அங்கே பெரிய சர்ஜன். உடனே அறுவை சிகிச்சை செய்யவேண்டும். இல்லாவிட்டால் நோய் கடுமையாகிவிடும்என்று அவர் சொன்னார்.
காந்தி இணங்கினார்.
"உங்கள் சொந்த டாக்டர்கள் இருப்பார்கள் அவர்களுக்குச் சொல்லியனுப்ப வேண்டுமா?" என்று அதிகாரிகள் அவரைக் கேட்டார்கள்.
"பம்பாயில் டாக்டர் தலால் என்பவர் இருக்கிறார்; பரோடாவில் டாக்டர் ஜீவராஜ் மேத்தா என்பவர் இருக்கிறார். இருவரையும் வரவழையுங்கள்'' என்றார் காந்தி.
காந்தி தெரிவித்த டாக்டர்களுக்கு அப்படியே செய்தி அனுப்பினார்கள். ஆனால், காந்தியின் நாடித்துடிப்பு மோசமாயிற்று. காய்ச்சல் கடுமையாயிற்று. உடனே அறுவைச் சிகிச்சை செய்யவேண்டும்; இல்லாவிட்டால் காந்தியின் உயிருக்கே ஆபத்து என்னும் நிலை தோன்றியது.
நோய்ப்பகுதியைக் கத்தியால் அறுப்பார்கள் - இதுதான் அறுவைச் சிகிச்சை. எல்லா டாக்டர்களும் இதைச் செய்யமுடியாது; நிபுணர்களே செய்ய முடியும்.
சிறிது பிசகினால் அபாயம். அறுவை நன்றாய் நடந்திருக்கலாம்; அப்போதும் உயிர் பிழைக்காமல் போகலாம். "நான் சம்மதிக்கிறேன்" என்று நோயாளி எழுதிக் கொடுக்க வேண்டும். அப்புறந்தான் அறுவையை டாக்டர் செய்வார்.
காந்தியோ பெரிய தலைவர்; மக்களின் உள்ளத்தைக் கவர்ந்தவர். ஆங்கிலேயரோ சர்க்காரை நடத்துகிறவர்கள். ஆங்கில டாக்டர் இந்த அறுவையைச் செய்யலாமா?
"நன்றாய்ச் செய்யலாம். ஆங்கில டாக்டரிடம் எனக்கு நம்பிக்கை உண்டு. அவர் சூதுவாது புரியமாட்டார்" என்று காந்தி சொன்னார். எதிரியிடமும் நல்லெண்ணம் கொண்டவர் காந்தி.
காந்தி சம்மதித்துவிட்டார்; மக்கள் என்ன நினைப்பார்களோ? தவறாக எண்ணிக் கலகம் செய்யமாட்டார்களா? - இப்படியெல்லாம் அதிகாரிகள் பயந்தார்கள்.
ஆனால், ஆங்கில டாக்டர் மேடக் பயப்படவில்லை. அறுவையைச் செய்யத் துணிந்துவிட்டார்.
"உங்கள் நண்பர் சிலர் உடன் இருக்கட்டும். யார் யாருக்குச் சொல்லி அனுப்பலாம்" என்று அதிகாரிகள் கேட்டார்கள்.
"கனம் சீனிவாச சாஸ்திரியார், டாக்டர் பதக், என்.ஸி.கேல்கர் - இந்த மூன்று பேருக்கும் சொல்லி அனுப்புங்கள்" என்றார் காந்தி.
கனம் சாஸ்திரியார் அந்த ஊரிலேயே அப்போது இருந்தார். அவரும் நண்பர்களும் ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்தார்கள்.
எழுத்து மூலம் காந்தியின் சம்மதம் வேண்டும். ஒரு கடித வாசகத்தைக் காந்தி சொன்னார்; சீனிவாச சாஸ்திரியார் அதை எழுதினார். "அறுவை செய்துகொள்ள எனக்குச் சம்மதம்'' என்று கடிதத்தில் காந்தி தெரிவித்தார்.
கடிதத்தில் காந்தி கையெழுத்திட வேண்டும் அவரிடம் நீட்டினார்கள். அப்பொழுது அவருடைய கை 'வெடவெட' என்று நடுங்கியது.
டாக்டர் மேடக்கை நோக்கிக் காந்தி சொன்னார்: "என் கை எப்படி நடுங்குகிறது, பார்த்தீர்களா? இதை நீங்கள்தாம் சரி செய்ய வேண்டும்."
"கவலை வேண்டாம். உங்கள் உடம்பில் டன் கணக்கான பலத்தை நாங்கள் ஏற்றிவிடுகிறோம்" என்றார் டாக்டர் மேடக்.
இரவு பத்து மணிக்கு மின்சார விளக்கொளியில் அறுவைச் சிகிச்சை நடந்தது.
என்ன விபரீதம்! அப்போது வானம் இடித்தது; மின்னல் வீசியது. மின்சாரம் தடைப்பட்டது. விளக்கு அணைந்தது.
'ஹரிகேன் லைட்' என்ற மண்ணெண்ணெய் விளக்கை ஏற்றினார்கள். அந்த வெளிச்சத்தில் அறுவையை டாக்டர் செய்து முடித்தார்.
செம்மையான சிகிச்சை; காந்தி பிழைத்தார்.

அடுத்தக் கதை: ஆஸ்பத்திரி காட்சி

Comments

Most Popular

மனமும் அதன் விளக்கமும் | உள்ளக் கிளர்ச்சி | பெ. தூரன்

ம னம் என்பது மாயமாக இருந்தாலும் அதில் எத்தனை எத்தனை குமுறல்கள், கொந்தளிப்புகள், கிளர்ச்சிகள் தோன்றுகின்றன! சினம் பிறக்கிறது, அச்சம் உண்டாகிறது - இப்படி எத்தனை விதமான அனுபவங்கள்! சினம், அச்சம், காதல், காமம், துக்கம், வெறுப்பு முதலியவைகளுக்கு உள்ளக் கிளர்ச்சிகள் என்று பெயர். குழந்தை அழுகிறது; அடுத்த விநாடியிலே மகிழ்ச்சியால் சிரிக்கிறது. குழந்தைகள் தங்கள் உள்ளக் கிளர்ச்சிகளை உடனே வெளிப்படுத்திவிடுகின்றன. விரைவிலே அவை மறைந்தும் போகின்றன. கண்ணம்மா ஓடிவருகிருள். “அம்மா, அடுத்த வீட்டுக் கிட்டுவுக்கு மிட்டாய் கொடுக்க வேண்டாம்” என்று அவன் மேலே வெறுப்போடு பேசுகிறாள். ஆனால் சிறிது நேரத்திற்குள்ளே இரண்டு பேரும் சேர்ந்து விளையாடத் தொடங்கி விடுகிறார்கள். கண்ணம்மா தன்னிடமிருந்த் மிட்டாயை அவனுக்குக் கொடுக்கிறாள். கிட்டுவின் மேல் ஏற்பட்டிருந்த வெறுப்பை அவள் மறந்தே விடுகிறாள். இந்தக் குழந்தைகளைப் போல் உலக மக்கள் இருக்கக்கூடாதா என்றுகூடச் சொல்லத் தோன்றுகிறது. ஆனால் மனிதன் தனது உள்ளக் கிளர்ச்சிகள் அனைத்தையும் குழந்தைகளைப்போலத் திடீர் திடீரென்று உடனே வெளிப்படுத்தலாமா? சமூக வாழ்க்கையிலே அது முறையா...

சங்கரதாஸ் சுவாமிகள் வரலாறு - அவ்வை டி.கே. சண்முகம்

நாடகத் தமிழை வளர்த்த தந்தை அவர்; நாடகாசிரியர்கள் பலருக்குப் பேராசிரியர் அவர். சென்ற ஐம்பது ஆண்டுகளுக்கிடையே அவரது பாடல்களையோ வசனங்களையோ உபயோகிக்காத நடிக நடிகையர் தமிழ் நாடக உலகில் இல்லையென்றே சொல்லிவிடலாம். நாடக உலகம் அப்பெரியாரைத் தமிழ் நாடகத் தலைமையாசிரியர் எனப் போற்றியது. எளிமையும் இனிமையும் ததும்பும் பாடல்களாலும் தேன் சொட்டும் தீந்தமிழ் வசனங்களாலும் அப்பெருமகனார் இயற்றியருளிய நாடகங்கள்தாம் தமிழ் நாடகக் கலை வளர்ச்சிக்கு அடிப்படைச் செல்வம் என்று கூறினால் அது மிகையாகாது. முழுப்பெயரையும் சொல்ல வேண்டியதில்லை. சுவாமிகள் என்றாலே போதும். தமிழ் நாடக உலகில் அது சங்கரதாஸ் சுவாமிகள் ஒருவரைத்தான் குறிக்கும். சுவாமிகள் காலத்திலிருந்த மிகப்பெரிய புலவர்களும் நாடகாசிரியர்களுமான உடுமலைச் சரபம் முத்துசாமிக் கவிராயர், குடந்தை வீராசாமி வாத்தியார் முதலியோரெல்லாம் சுவாமிகளின் புலமைக்குத் தலை வணங்கிப் பாராட்டினர். ஆங்கில மோகத்தால் தாய்மொழியிற் பேசுவதுகூடக் கெளரவக் குறைவென்று கருதப்பட்ட காலத்தில் நாடக மேடையின் மூலம் தமிழை வளர்த்த பெரியார் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள். இசையரங்குகளிலே தெலு...

‘எழுத்து’ - 119 இதழ்களின் பொருளடக்கம்

எழுத்து 1: ஜனவரி 1959 எழுத்து வளர - தலையங்கம் சாகித்ய அகாடமி தமிழ்ப் பரிசு – க.நா.சு. பெட்டிக்கடை நாரணன் – ந. பிச்சமூர்த்தி கவிதை - மயன் சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்: ஒரு தொகுப்புக்கான சில குறிப்புகள் – க. நா. சுப்ரமண்யம் எழுதுவதெல்லாம்… - சிட்டி தாழை பூத்தது – பெ. கோ. சுந்தர்ராஜன் பாரதிக்குப்பின்-1: டாக்டர் சாமிநாதையர் – க.நா.சு. கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா விண்ணும் மண்ணும் – ந. சிதம்பரசுப்ரமண்யன் இன்றைய தமிழ் இலக்கிய விமர்சன தோரணை – சி. சு. செல்லப்பா வானம் - மயன் கெளமாரி – சாலிவாஹனன் உண்மைதேடியின் அனுபவ இலக்கிய வடிவங்கள் – தி. ஜானகிராமன்   எழுத்து 2: பிப்ரவரி 1959 வாடைக் காற்று - அசுவதி எழுத்தும் அதன் வாசகர்களும் இலக்கியமும் குழுவும் எஸ். வையாபுரிப்பிள்ளை – க. நா. சுப்ரமண்யம் திறனாய்வு - வில்லி அருளும் பொருளும் – ந. சிதம்பர சுப்ரமண்யன் கவி – வேதனை – தி. சோ. வேணுகோபாலன் தர்க்கம் - ஜெயகாந்தன் அன்று வருவாரோ ? – கு. அழகிரிசாமி வெற்றியின் பண்பு - பராங்குசம் தரிசனம் - மயன் கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா ...