Skip to main content

கு. ப. ராஜகோபாலன் என்கிற முழுமை | க. நா. சுப்ரமண்யம்


கு. ப. ராஜகோபாலனின் கதைகளை, அவை எழுதப்பட்டு சற்றேறக் குறைய ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு இன்று படித்துப் பார்க்கும்போது கூட அவர் லாகவமும், கதை நடத்தும் திறனும், உருவ, கருத்து அமைதியுடன் மிகவும் சிறப்பாகவே உள்ளத்தில் தட்டுகின்றன. வாழ்க்கையை முழுப்பார்வையுடன் பார்ப்பது அவர்க்கு மிகவும் சிறிய கதைகளிலும் கூடச் சாத்தியமாக இருந்திருக்கிறது.
ஆண், பெண் உறவுகளை, பால் உணர்ச்சிகளை அப்பட்டமாக, உரக்க, மனத்தையும் கண்ணையும் ஒருங்கே உறுத்துகிற மாதிரிச் சொல்வது இன்று பலருக்கும் கைவந்த கலையாக இருக்கிறது. ஆனால், அதையே சூக்ஷ்மமாகச் செய்கிற காரியம், கலையுணர்ச்சியுடன் முழுவதும் சொல்லாமல் சொல்லிவிடுகிற காரியம் கு.ப.ரா.வுக்கு மிகவும் சிறப்பாக கைவந்திருந்ததை இன்று படிக்கும்போதும் உணர முடிகிறது. இந்த மென்மையும், கலை உணர்ச்சியும் பக்கம் பக்கமாக பச்சையாக எதை எதையோ எழுதுகிற தமிழ் எழுத்தாளர்களுக்கு எட்டாத ஒரு விஷயம். அவர்கள் கு.ப.ரா.விடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
புத்தனுடைய துறவுக்கு அசுவகோஷன் முதல் எத்தனையோ இலக்கியாசிரியர்கள் பலர் காரணங்கள் கண்டு சொல்லிவிட்டார்கள். மூப்பு, நோய், சாவு என்ற மூன்றுடன் க்ஷண சுகத்திற்குப் பிறகு ஏற்படுகிற விரக்தியும் ஒரு காரணமாக, இந்தத் தொகுப்பில் முதல் கதையில் முதல் வாக்கியமாக அமைந்துள்ள நாலாவது காரணம் நியாயமானதாகவும், செயல்பாடுள்ளதாகவும் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னும் தோன்றியது - இன்று மீண்டும் படிக்கும்போதும் தோன்றுகிறது.
பதினேழு கதைகளில் பதினேழு புதுப்புது அனுபவங்களை முழுமையாக நமக்கு உண்டாக்கி உருவாக்கித் தருகிறார் கு. ப. ராஜகோபாலன். ஸுஜாதா புத்தனுக்கு பதினெட்டு நாட்கள் கடும் தபசுக்குப் பிறகு அளித்த பால்சோறு (அது கருணையின் உருவகமாகவே) கு.ப.ராவின் கதையில் அவருக்கு மகாபோதத்தை விளைவிக்கிறது. டெஸ்டிமோனா மனதில் ஒத்ததெல்லோவிடம் காதல் வித்து தோன்ற அவன் பிரதாபங்கள் உபயோகப்பட்ட மாதிரி அதுவரை கண்ணால் பார்க்காத வேங்கி மன்னனிடம் காதல் வருகிறது குந்தவைக்கு. தர்மயுத்தம் என்கிற தத்துவம் என்ன என்று சிவாஜியின் வீரப்போர்கள் விளக்கியதைக் கடைசிக் கதையில் எடுத்துக்காட்டுகிறார் கு.ப.ரா.
சரித்திரத்தை அடிப்படையாகக் கொண்ட சிறுகதைகள் இப்படித்தான் அமையவேண்டும் என்று கூறுவது போல அமைந்திருக்கின்றன கு.ப.ராவின் சரித்திரக் கதைகள் பதினேழும். இவற்றில் ஒரு ஆச்சர்யக் குறிக்குக்கூட இடம் தரவில்லை அவர். ஆச்சர்யக் குறிகளுக்கும் உரத்த குரலுக்கும் படோடாபத்துக்கும் ஆர்ப்பாட்டத்துக்கும் அர்த்தமற்ற வார்த்தைகளுக்கும் நம்மை ஆளாக்கிவிட்டார்கள் பிற்காலத்தில் சரித்திரக் கதை என்று எழுத வந்த எழுத்தாளர்கள். அவர்கள் எழுத்து இலக்கியமாகவில்லை. கு.ப.ராவின் எழுத்துக்கள் பெருமளவில், மேன்மையான தளத்தில் இலக்கியமாகின்றன என்பது நமக்குப் புரியவருகிறது. கனகாம்பரம் என்கிற கதையை கு.ப.ரா. எழுதியபோது இந்த மாதிரியெல்லாம் கதைகள் எழுதக்கூடாது என்று ரசனையற்ற குரலில் அப்போதைய தமிழ்நாட்டு அரசியல் தலைவர் கூறினார் என்பதை நினைக்கும்போது இந்தத் தலைவருக்கும் அவர் கோஷ்டியினருக்கும் என்ன மரமண்டை என்று நினைக்கவே தோன்றுகிறது. இலக்கியம் இந்த சட்டாம்பிள்ளைகளையெல்லாம் மீறி நிற்கிறது என்பது நிதர்சனமாகவே தெரிகிறது. 'திரை' என்கிற கதையை கு.ப.ரா. எழுதியபோது "கணவனில்லாத தாயைப் பற்றிய கதையா? வேண்டாம். நீதி கெட்டுவிடும்" என்று சொன்ன இலக்கிய சட்டாம்பிள்ளைகள் இன்று இலக்கிய கர்த்தாக்களாக உயிருடன் இருந்தாலும் நீடிக்க முடியவில்லை. முருக பக்தர்களாகத்தான், அரசியல் தலைவர்களாகத்தான் தெரியவருகிறார்கள்.
நல்ல எழுத்து எல்லாமே, இலக்கியமாகும்போது புரட்சிகரமாகவும் அமைகிறது என்பது கு.ப.ரா.வின் எழுத்துக்களில் தெரியவருகிறது. புரட்சி என்கிற ஆசையில் எழுதவில்லை அவர். மனிதன் என்கிற நினைப்பில் எழுதினார். சரித்திர புருஷர்கள் பற்றி எழுதுவது இதில் ஒரு அம்சம். இதிலும் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து, சிலவற்றை விட்டுவிட்டு, புரட்சிகரமாகத் தெரிந்த விஷயத்தையும் கையாள முடியும் என்பதற்கு இந்தப் பதினேழு சரித்திரக் கதைகளும் சான்றுகள்.
கு. ப. ராஜகோபாலன் தனது நாற்பத்தியிரண்டு ஆண்டுகளில் (1902-1944) பலவிதமான இலக்கியச் சோதனைகள் செய்துபார்த்தவர். சிறுகதைகள், சிறு நாடகங்கள், சிந்தனை உலகப் போக்கு, இலக்கிய விமர்சனம், வசன கவிதை, சரித்திரம் என்று பல சோதனைகள் செய்துபார்த்தவர். அற்புதமான சில மொழிபெயர்ப்புகளும் செய்திருக்கிறார். இலக்கியம் பற்றி தெளிவான பல அபிப்பிராயங்கள், கொள்கைகள் அவருக்கிருந்தன. எல்லாவற்றிற்கும் மேலாக தமிழில் எழுத, இலக்கியம் படைக்க முன்வருபவர்களின் எதிர்காலத்தில் அவருக்கு ஏராளமான நம்பிக்கையிருந்தது. தான் எனும் அகங்காரமில்லாமல் பலருக்கும் வழிகாட்டியவர்; கை கொடுத்தவர். எல்லா பனித்துளிகளிலும் முழுச்சூரியனும் தெரிகிற மாதிரி அவர் எழுத்துகளில் மிகவும் சுலபமானவை, சிறியவைகளிலும் கூட அவருடைய முழு தனித்வத்தையும் பார்க்க முடியும். அவருடைய கதைகள் மற்றும் எழுத்துக்கள் மீண்டும் தமிழர் தலைமுறைகளுக்குப் படிக்கக் கிடைக்கின்றன என்பது பற்றி மிகவும் சந்தோஷப்படலாம்.
இந்திய சரித்திரத்தின் பல சம்பவங்கள் இந்த நூலில் கதைகளாகப் புனையப்பட்டுள்ளன. ஆனால் இதில் பெரிய அம்சம் இதுவல்ல. இந்தப் பதினேழு கதைகளையும் படிப்பவர்களுக்கும்கூட கு. ப. ராஜகோபாலன் என்கிற "முழுமை" தெரிகிறது என்பது இந்தக் கதைகளின் பெரிய விஷயம். மற்றப்படி இந்தத் தலைமுறை வாசகர்களும் வரப்போகிற தலைமுறை வாசகர்களும் இந்த நூலைப் படித்ததுப் பற்றிப் பெருமைப்படக்கூடிய அளவில் ஒவ்வொரு கதையிலும் பல அம்சங்கள் இருக்கின்றன. படித்துப் பார்த்து அனுபவித்து நினைவுபடுத்திக்கொள்பவர்களும் மீண்டும் ஒருதரம் படித்துப் பார்ப்பவர்களும் நம்மிடையே அதிர்ஷ்டசாலிகள் என்று நான் சொல்வேன்.
க. நா. சுப்ரமண்யம்
மயிலை, சென்னை.
விஜயதசமி, 1987.


('காணாமலே காதல்' என்ற கு.ப.ரா.வின் சிறுகதைத் தொகுதிக்கு எழுதிய முன்னுரை)

Comments

Most Popular

மனமும் அதன் விளக்கமும் - மனமெனும் மாயம் | பெ. தூரன்

ம னம் என்பதென்ன? அது எங்கே இருக்கிறது? கை, கால், கண், இதயம் என்றால் உடம்பில் உள்ள உறுப்புகள் என்று உடனே தெரிகிறது. அவைகளுக்கு வடிவம் உண்டு. பருமன் உண்டு. ஆதலால் அவைகளை எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மனம் என்பது எது? அதற்கு வடிவம் உண்டா? பருமன் உண்டா? தொட்டுப் பார்த்து அறிந்துகொள்ள முடியுமா? இவ்வாறு எண்ணிப் பார்த்தால் ஒன்றும் விளங்குவதில்லை. இவ்வாறு எண்ணுவதற்கு அந்த மனமே காரணமாக இருக்கிறதென்று தோன்றுகிறது. ஆனால் அது என்ன என்று மட்டும் எளிதில் அறிந்துகொள்ள முடிகிறதில்லை. மனத்திற்கு உருவமில்லை; கன பரிமாணமும் இல்லை. மனம் என்பது தசை, நரம்பு முதலியவைகளால் ஆக்கப்பட்டதன்று. அது சடப் பொருள் அன்று; அது சூக்குமப் பொருள், சடப் பொருள் என்றால் அது உடம்பைச் சேர்ந்த ஒர் உறுப்பாகிவிடும்; எளிதாக அதை அறிந்துகொள்ளவும் முடியும். சிலர் மூளைதான் மனம் என்று தவறாகக் கருதுகிறார்கள். மூளை என்பது உடம்போடு சேர்ந்த ஒரு பருப்பொருளான உறுப்பு. அது மனம் அல்ல. சூக்குமப் பொருளாக மனம் இருக்கிறதென்று மட்டும் நமக்குப் புலனாகிறது. அந்த மனந்தான் ஆசைகள், எண்ணங்கள், நோக்கங்கள், நம்பிக்கைகள் முதலியவற்றிற்கு இடமாயிரு

எழுத்தாளர்களும் மின்னூல்களும்

இது குறைந்தது இரண்டு மின்னூல்களாவது வெளியிட்டுள்ள தமிழ் எழுத்தாளர்களின் அகரவரிசை தொகுப்பு. அவ்வப்போது புதிய இணைப்புகள் சேர்க்கப்படுகின்றன. இணைப்புகளில் அந்தந்த எழுத்தாளர்களின் இனி வரும் நூல்களும் தொகுக்கப்படும். கடைசியாக செப்டம்பர் 03, 2020 அன்று புதுப்பிக்கப்பட்டது.) அசோகமித்திரன் https://amzn.to/3cIKLFC |  https://amzn.to/3avBTS4 |  https://amzn.to/2zqxsLz அம்பை  https://amzn.to/3eIsOsl அருட்செல்வப்பேரரசன்  https://amzn.to/3eOosQr அருண் நரசிம்மன்  https://amzn.to/2VRkUV4 அழ. வள்ளியப்பா  https://amzn.to/2ZcvybO அழகிய பெரியவன்  https://cutt.ly/Lft1hhC அழகுநிலா  https://amzn.to/37bgFc5 அனோஜன் பாலகிருஷ்ணன்  https://amzn.to/2KvZM1n அஜயன் பாலா  https://amzn.to/2xJFC1e அ. கா. பெருமாள்  https://cutt.ly/pfs2w5j அ. வெண்ணிலா  https://cutt.ly/9fhYybK ஆரணி குப்புசாமி முதலியார்  https://amzn.to/2V1OWWD ஆ. இரா. வேங்கடாசலபதி  https://amzn.to/2RZQrD0 ஆ. சிவசுப்பிரமணியன் https://amzn.to/2xHVVvp ஆத்மார்த்தி  https://amzn.to/3eOnx2r ஆனந்த்  https://cutt.ly/LaTpEs7 ஆர். சிவகும

பாண்டியர் நிறுவிய தமிழ்ச் சங்கம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்க காலத்திலே, மதுரை மாநகரத்திலே பாண்டிய மன்னர் மூன்று தமிழ்ச் சங்கங்களை நிறுவித் தமிழை ஆராய்ந்தார்கள் என்று இறையனார் அகப்பொருள் உரை முதலிய நூல்கள் கூறுகின்றன. அச்சங்கங்களில் இயல், இசை, நாடகம், என்னும் முத்தமிழ்கள் ஆராயப்பட்டன. பத்துப் பாட்டு, எட்டுத் தொகை முதலிய செய்யுள்கள் கடைச் சங்கப் புலவர்களால் பாடப்பட்டன. கடைச் சங்கம் கி.பி. 300க்கு முன்பு இருந்தது என்று சரித்திரம் கூறுகிறது. ஆனால், இக்காலத்தில் சிலர், தமிழ் வரலாற்றினையும், நாட்டு வரலாற்றினையும் நேர்மையாகவும் சரியாகவும் ஆராய்ந்து பாராமல், தமிழ்ச் சங்கம் கி.பி. 5ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டது என்றும், அந்தத் தமிழ்ச் சங்கத்தில் தொல்காப்பியம் தோன்றியது என்றும் கூறுகின்றனர்; எழுதுகின்றனர். இவ்வாறு பிழைபட்ட ஆராய்ச்சியைக் கூறுகிறவர்களில் முதன்மை யானவர் அண்மையில் காலஞ்சென்ற திரு. எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்கள். வையாபுரிப் பிள்ளையவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழாராய்ச்சித் துறைத் தலைவராக இருந்தபடியால், அவர் கூறுவன எல்லாம் உண்மை என்று பாமர மக்கள் நினைக்கிறார்கள். பாமர மக்கள் மட்டும் அல்லாமல் படித்தவர்கள் கூட, ஆராய்ந்து பார்த்