Skip to main content

பல ரூபங்களில் காந்தி: ஏலம் விடுபவர் | அனு பந்தோபாத்யாயா


தன்னை மகாத்மா என்று சொல்வதையும் ஜனங்கள் தனது கால்களைத் தொட்டுக் கும்பிடுவதையும் தடை செய்வதற்கு ஒரு சட்டம் இயற்றப்பட்டால் அதை ஆதரிப்பதற்கு காந்திஜி தயாராக இருந்தார். இருப்பினும் அவர் சென்ற இடங்களில் எல்லாம் பெருந்தலைவர் என்ற முறையில் அவருக்கு அளிக்கப்பட்ட தடபுடலான வரவேற்பை அவரால் தவிர்க்க முடியவில்லை. பல்வேறு நற்பணிகளுக்காகவும் ஜனங்களுடன் எப்போதும் தொடர்பு வைத்துக்கொள்வதற்காகவும் அவர் எப்போதும் பயணம் செய்துகொண்டே இருந்தார். சென்ற இடத்தில் எல்லாம் அவரை மக்கள் அன்புடனும் பக்தியுடனும் வரவேற்றனர் அன்பளிப்பாக அவருக்கு மாலைகளும் மலர்க்கொத்துக்களும், விலை உயர்ந்த கண்ணாடிச் சட்டங்களிலும் பேழைகளிலும் வைக்கப்பட்ட பாராட்டுக் கடிதங்களும், பணப்பைகளும், நகைகளும் அளிக்கப்பட்டன. காந்திஜிக்கு மக்களின் இந்த அன்பு பிடித்திருந்தது. இருந்தாலும் சாதாரண மக்களின் வருவாய் நாள் ஒன்றுக்கு மூன்று பைசா என்று இருந்த நிலையில் பணம், மாலைகளிலும் பாராட்டுக் கடிதங்களிலும் அன்பளிப்புகளிலும் விரயம் செய்யப்படுவதை காந்திஜி விரும்பவில்லை.
இவ்வாறு பணம் வீணடிக்கப்படுவதை காந்திஜியால் எவ்வளவு முயன்றும் தடுக்க இயலவில்லை. இருந்த தேவையற்ற அன்பளிப்புப் பொருள்களை எப்படிப் பயனுள்ளதாக மாற்றலாம் என்று அவர் சிந்தித்தார். அவருக்கு ஒரு வழி தோன்றிவிட்டது. தனக்குக் கிடைக்கும் அன்பளிப்புப் பொருள்களை எல்லாம் ஏலம் விடுவது என்று முடிவு செய்தார். பகிரங்கமான முறையில் அன்பளிப்புப் பொருள்கள் பணமாக மாறும். பொதுக்கூட்ட மேடைகளில் அவர் இப்படி ஆரம்பிப்பார். ''எனது அன்புக்குரிய இந்த மாலைகளை இப்போது என்ன செய்வது! சிறுமிகளை இங்கே காணோம். (சிறுமிகள் அங்கு இருந்திருந்தால் மாலைகளை அவர்களது கழுத்தில் போட்டிருப்பாராம் காந்திஜி! என்ன கிண்டல்). யாராவது இவற்றை வாங்க முன்வருவீர்களா? இரண்டு ரூபாய், ஒருதரம், மூன்று ரூபாய் இரண்டுதரம், ஐந்து ரூபாய் மூன்றுதரம்" என்று ஜாலியாக ஏலம் விடுவார். ஏலம் மேலே மேலே ஏறிக்கொண்டே இருக்கும் - ஒரு சிறிய எலுமிச்சம் பழமானாலும் சரி, ஒரு பூமாலையானாலும் சரி, மாலை சில தடவை முப்பது ரூபாயிலும் விலைபோகும். முந்நூறு ரூபாயிலும் போகும். கிராமவாசிகள்கூட ஏலத்தில் பங்கேற்று பொருள்களை அதிக விலைக்கு வாங்குவதுண்டு. ஒரு முறை காந்திஜி பேழை ஒன்றைக் கையில் எடுத்து "இதன் விலை முந்நூறு ரூபாய், மன்னிக்க வேண்டும் தவறாகச் சொல்லிவிட்டேன். இதன் விலை 75 ரூபாய்தான்", என்றார். அதை முந்நூறு ரூபாயில் ஒருவர் ஏலம் கேட்டபோது ரூ. 300 ரூ. 300 என்று காந்திஜி கூவத் தொடங்கிவிட்டார். ''முன்பு ஒரு தடவை இப்படிப்பட்ட பேழையை ஆயிரம் ரூபாய்க்கு விற்றிருக்கிறேன்'' என்றார். கல்கத்தா நகரமக்கள் மூன்று முறை காந்திஜிக்கு அது போன்ற விலை உயர்ந்த பேழைகளைப் பரிசாக அளித்தனர். மூன்று முறையும் அப்பேழைகளை ஏலம் விட்டுவிட்டார். அவர் கூறுவார் "நீங்கள் பேரன்புடன் எனக்கு அளித்துள்ள பொருள்களை ஏலம் விடுவதன் மூலம் உங்களது அன்பை நான் அலட்சியம் செய்வதாக எண்ண வேண்டாம். என்னிடம் பெரிய டிரங்குப் பெட்டி ஏதும் இல்லாததால் இந்தப் பேழையை என்னால் எடுத்துச்செல்ல இயலாது. ஆசிரமத்திலும் இப்பேழையை வைக்க இடம் எதுவும் கிடையாது. இப்படிப் பொருள்களை ஏலம் விடுவதில் தவறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இதன் காரணமாக மக்கள் மத்தியில் நற்பணிகளுக்கு உதவ வேண்டும் என்ற ஒரு தர்ம சிந்தனையும் ஒரு ஆரோக்கியமான போட்டி உணர்வும் ஏற்படுகின்றன. மேலும் பொருள்களை ஏலம் எடுப்பவர்கள் எனக்காக அதிக விலை கொடுப்பதாகவும் நான் நினைக்கவில்லை.''
சில சமயங்களில் அவர் பேச்சைக் கேட்ட பின்பும்கூட தாராளமாக நன்கொடை தர யாருமே முன்வராத சந்தர்ப்பங்களும் இருந்தன. ஆனால், பெரும்பாலும் ஏலத்தில் கணிசமான தொகை அவருக்குக் கிடைத்து வந்தது. ஒரு எலுமிச்சம்பழம் பத்து ரூபாய்க்கு ஏலம் போயிற்று. ஒரு சிட்ட மாலை 201 ரூபாய்க்கு ஏலம் போயிற்று. தங்கத் தக்கிளி ஒன்று 5000 ரூபாய்க்கு ஏலம் போயிற்று. பேழை ஒன்றுக்கு ஏலத்தில் 1000 ரூபாய் கிடைத்தது. கட்டடம் ஒன்றிற்கு அடிக்கல் நாட்டியபின் அவர் பயன்படுத்திய மண்வெட்டியும் தட்டுக்கூடையும் 1000 ரூபாய்க்கு ஏல விற்பனையாகியது. ஒரு ஏலத்தின் போது ஒரு சிறுவன் அணிந்திருந்த தங்கக் காப்பு அவரது கவனத்தை ஈர்க்கவே, காந்திஜி அந்தப் பக்கமாகக் கையை நீட்டினார். பையனின் தாயார் பையனைத் தூக்கிப் பிடித்து காந்திஜிக்கு உதவினார். காப்பைக் கழற்றிக்கொண்டு பையனைத் தட்டிக் கொடுத்தார். காப்பு ஏலம் விடப்பட்டது.
ஒருமுறை இப்படி ஒரு அறிவிப்பை அவர் வெளியிட்டார்: என்னிடம் எண்ணற்ற மோதிரங்கள் உள்ளன. அவற்றை நான் ஏலம் விடப்போகிறேன்.மூன்று தடவை ஏலம் விடப்பட்ட மோதிரம் ஒன்று 445 ரூபாய்க்கு ஏலம் போயிற்று. அதன் அடக்கவிலை ரூ. 30 மட்டுமே. ஒருமுறை அவருக்குக் கிடைத்த நன்கொடைப் பணத்தை எண்ணியபோது அதில் ரூபாய் நோட்டுக்கள், வெள்ளி நாணயங்கள் மற்றும் செப்புக் காசுகளைத் தவிர சோழி ஒன்றும் காணப்பட்டது. அதைக் கண்டு காந்திஜி மனம் நெகிழ்ந்தார். "மிகவும் ஏழையான ஒரு மனிதர் தன்னிடம் பணம் ஏதும் இல்லாததால் தன்னிடம் இருந்த இச்சோழியை அளித்துள்ளார். இது அவரது தியாக மனப்பான்மையின் சின்னம். தங்கத்தைக் காட்டிலும் விலை உயர்ந்தது'' என்று கூறினார்! உண்மையிலேயே தங்கத்தைக் காட்டிலும் அதிக மதிப்பு ஏற்பட்டு அச்சோழி ரூ. 111க்கு விற்பனையாகியது. தொடர்ச்சியான பயணங்களும், நாள் முழுதும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவேண்டிய நிர்ப்பந்தமும் பலவித சிக்கலான பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் பணியும் இருந்தபோதும்கூட காந்திஜி சற்றும் தளர்ச்சி அடைய மாட்டார். அவரிடம் இருந்த வியாபாரிஎப்போதுமே விழிப்புடனும் உற்சாகத்துடனும் இருப்பார். தனது 78வது வயதில் ஹிந்து முஸ்லீம் கலவரங்களினால் துயரமற்றிருந்த நிலையிலும்கூட பீகார்ப் பயணத்தின்போது மூஸ்லீம்களின் நலனுக்காகப் பணவசூல் செய்து அணிகலன்களையும் அன்பளிப்பாகப் பெற்று அவற்றை ஏலம் விட்டார்.
காந்திஜியிடம் தன்னுடையது என்று பணமோ பொருளோ கிடையாது. அவரே ஒரு ஏழை ஆசிரம வாசி. ஒரு முறை ஒரு பொது நலத்திற்காக செப்புக்காசு ஒன்றை நன்கொடையாக அளித்தார். அதே செப்புக்காசை காந்திஜியிடம் அன்பு கொண்ட ஒரு நபர் 500 ரூபாய் செலுத்திப் பெற்றுக்கொண்டார்!
- தமிழில்: எம். ஆர். ராஜகோபாலன்

Comments

Most Popular

மனமும் அதன் விளக்கமும் - மனமெனும் மாயம் | பெ. தூரன்

ம னம் என்பதென்ன? அது எங்கே இருக்கிறது? கை, கால், கண், இதயம் என்றால் உடம்பில் உள்ள உறுப்புகள் என்று உடனே தெரிகிறது. அவைகளுக்கு வடிவம் உண்டு. பருமன் உண்டு. ஆதலால் அவைகளை எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மனம் என்பது எது? அதற்கு வடிவம் உண்டா? பருமன் உண்டா? தொட்டுப் பார்த்து அறிந்துகொள்ள முடியுமா? இவ்வாறு எண்ணிப் பார்த்தால் ஒன்றும் விளங்குவதில்லை. இவ்வாறு எண்ணுவதற்கு அந்த மனமே காரணமாக இருக்கிறதென்று தோன்றுகிறது. ஆனால் அது என்ன என்று மட்டும் எளிதில் அறிந்துகொள்ள முடிகிறதில்லை. மனத்திற்கு உருவமில்லை; கன பரிமாணமும் இல்லை. மனம் என்பது தசை, நரம்பு முதலியவைகளால் ஆக்கப்பட்டதன்று. அது சடப் பொருள் அன்று; அது சூக்குமப் பொருள், சடப் பொருள் என்றால் அது உடம்பைச் சேர்ந்த ஒர் உறுப்பாகிவிடும்; எளிதாக அதை அறிந்துகொள்ளவும் முடியும். சிலர் மூளைதான் மனம் என்று தவறாகக் கருதுகிறார்கள். மூளை என்பது உடம்போடு சேர்ந்த ஒரு பருப்பொருளான உறுப்பு. அது மனம் அல்ல. சூக்குமப் பொருளாக மனம் இருக்கிறதென்று மட்டும் நமக்குப் புலனாகிறது. அந்த மனந்தான் ஆசைகள், எண்ணங்கள், நோக்கங்கள், நம்பிக்கைகள் முதலியவற்றிற்கு இடமாயிரு

எழுத்தாளர்களும் மின்னூல்களும்

இது குறைந்தது இரண்டு மின்னூல்களாவது வெளியிட்டுள்ள தமிழ் எழுத்தாளர்களின் அகரவரிசை தொகுப்பு. அவ்வப்போது புதிய இணைப்புகள் சேர்க்கப்படுகின்றன. இணைப்புகளில் அந்தந்த எழுத்தாளர்களின் இனி வரும் நூல்களும் தொகுக்கப்படும். கடைசியாக செப்டம்பர் 03, 2020 அன்று புதுப்பிக்கப்பட்டது.) அசோகமித்திரன் https://amzn.to/3cIKLFC |  https://amzn.to/3avBTS4 |  https://amzn.to/2zqxsLz அம்பை  https://amzn.to/3eIsOsl அருட்செல்வப்பேரரசன்  https://amzn.to/3eOosQr அருண் நரசிம்மன்  https://amzn.to/2VRkUV4 அழ. வள்ளியப்பா  https://amzn.to/2ZcvybO அழகிய பெரியவன்  https://cutt.ly/Lft1hhC அழகுநிலா  https://amzn.to/37bgFc5 அனோஜன் பாலகிருஷ்ணன்  https://amzn.to/2KvZM1n அஜயன் பாலா  https://amzn.to/2xJFC1e அ. கா. பெருமாள்  https://cutt.ly/pfs2w5j அ. வெண்ணிலா  https://cutt.ly/9fhYybK ஆரணி குப்புசாமி முதலியார்  https://amzn.to/2V1OWWD ஆ. இரா. வேங்கடாசலபதி  https://amzn.to/2RZQrD0 ஆ. சிவசுப்பிரமணியன் https://amzn.to/2xHVVvp ஆத்மார்த்தி  https://amzn.to/3eOnx2r ஆனந்த்  https://cutt.ly/LaTpEs7 ஆர். சிவகும

பாண்டியர் நிறுவிய தமிழ்ச் சங்கம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்க காலத்திலே, மதுரை மாநகரத்திலே பாண்டிய மன்னர் மூன்று தமிழ்ச் சங்கங்களை நிறுவித் தமிழை ஆராய்ந்தார்கள் என்று இறையனார் அகப்பொருள் உரை முதலிய நூல்கள் கூறுகின்றன. அச்சங்கங்களில் இயல், இசை, நாடகம், என்னும் முத்தமிழ்கள் ஆராயப்பட்டன. பத்துப் பாட்டு, எட்டுத் தொகை முதலிய செய்யுள்கள் கடைச் சங்கப் புலவர்களால் பாடப்பட்டன. கடைச் சங்கம் கி.பி. 300க்கு முன்பு இருந்தது என்று சரித்திரம் கூறுகிறது. ஆனால், இக்காலத்தில் சிலர், தமிழ் வரலாற்றினையும், நாட்டு வரலாற்றினையும் நேர்மையாகவும் சரியாகவும் ஆராய்ந்து பாராமல், தமிழ்ச் சங்கம் கி.பி. 5ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டது என்றும், அந்தத் தமிழ்ச் சங்கத்தில் தொல்காப்பியம் தோன்றியது என்றும் கூறுகின்றனர்; எழுதுகின்றனர். இவ்வாறு பிழைபட்ட ஆராய்ச்சியைக் கூறுகிறவர்களில் முதன்மை யானவர் அண்மையில் காலஞ்சென்ற திரு. எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்கள். வையாபுரிப் பிள்ளையவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழாராய்ச்சித் துறைத் தலைவராக இருந்தபடியால், அவர் கூறுவன எல்லாம் உண்மை என்று பாமர மக்கள் நினைக்கிறார்கள். பாமர மக்கள் மட்டும் அல்லாமல் படித்தவர்கள் கூட, ஆராய்ந்து பார்த்