Skip to main content

நாகம்மாள்: முன்னுரை


முதல் முதலில் ஸ்ரீ ஷண்முகசுந்தரத்தின் சிறுகதைகளைப் படித்தபொழுது அவற்றில் தென்பட்ட கிராமாந்தர வாழ்க்கை அனுபவத்தைக் கண்டு ஆச்சரியமடைந்தேன். அவ்வளவு தேர்ச்சி பெற்றவர் குடியான வாழ்க்கையையே ஆதாரமாகக் கொண்ட நவீனம் ஒன்றை எழுதலாம் என்ற கருத்தை அவருக்குத் தெரிவித்தேன்.
இரண்டே மாதத்தில் நாகம்மாள் என்ற சிறு நாவலை எழுதி முடித்துக்கொண்டு வந்து காட்டினார். பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் நவீனம் எழுதவேண்டுமென்று வருஷத்திட்டங்கள் போட்டுக்கொண்டு யோசனையளவில் நின்றுகொண்டிருக்கும் பொழுது இளைஞர் ஒருவர் திடீரென்று ஒன்றை எழுதி முடித்துவிட்டதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்.
நான் எதிர்பார்த்தவாறே அதில் கிராம வாழ்க்கை வெகு நுட்பமாகவும் அனுதாபத்துடனும் சித்தரிக்கப்பட்டிருந்தது. நாகம்மாள் நம் கண்முன் நிற்கிறாள் போல இருக்கிறது. ஒய்யாரமும் தனிப்போக்கும் கொண்ட அவளிடம் நற்குணங்களும் நிரம்பி இருக்கின்றன. சின்னப்பன், ராமாயி, கெட்டியப்பன் எல்லோரும் தத்ரூபமாக இருக்கிறார்கள். நாராயண முதலி முதல் சின்னப்பன் மாமியார் வரை எல்லோரும் உயிர்பெற்று உலவுகிறார்கள்.
கிராமப் புனருத்தாரணம் என்கிறோம். கிராமக் கைத்தொழில்கள் மறுபடி உயிர்பெற வேண்டுமென்கிறோம். அவற்றிற்கெல்லாம் முன்பு கிராம வாழ்வே புத்துயிர் பெற வேண்டும்; அதாவது குடியான வாழ்வின் அழகிய அம்சங்கள் மக்கள் மனதைக் கவரும்படியான முறையில் சித்திரங்கள் உற்பத்தியாக வேண்டும். கிராம பாஷையின் மூர்ச்சனை ஸ்தானங்கள் எல்லாம் எல்லோருக்கும் அறிமுகமாக வேண்டும். ஹார்டியினுடைய வெஸ்ஸெக்ஸ் நாவல்களைப் போன்ற அழியாத எழுத்துக்கள் தமிழ்நாடெங்கும் தோன்றி கிராம வாழ்க்கையின் விரிவையும் மேன்மையையும் தூய்மையையும் படம் பிடிக்க வேண்டுமென்று எனக்கு வெகுநாளைய அவா.
ஷண்முகசுந்தரத்தின் நவீனம் அந்த வகையில் முதல் நூல் என்றே சொல்லவேண்டும். வெங்கமேடு ஹார்டியின் எக்டன் பொட்டலை நினைப்பூட்டுகிறது.
பெரியவருக்கு உற்சாகம் அதிகரித்தது. ஒருதரம் கனைத்துக் கொண்டு, “கேளடா ராஜா, மலைபோலே மண்டிக் கிடந்த கள்ளிகளெல்லாம் மாயமாய் மறஞ்சது பாத்தாயா? நாம் எத்தனை நாள் கத்தியிலும் அரிவாளிலும் வெட்டித் தள்ளியும் வெட்டவெட்டக் கொழுத்தது? எப்படிப் பூண்டற்றுப் போச்சுது, பாத்தாயா? கள்ளியை நாசம் பண்ணின வெள்ளைப்பூச்சியையும் பார்த்திருப்பாய்... இண்ணைக்கு ஒரு ஆனையைக்கூட தூக்கியடிக்கலாமென்று உனக்குத் தோணுது... ஆனா இந்த நல்ல ரத்தம் நொடியிலே மறைஞ்சுடுமப்பா!...'
இதில் ஷண்முகசுந்தரத்தின் தமிழ் நடையிலுள்ள மேன்மையும் குறையும் நன்றாகத் தெரிகிறது. குடியானப் பேச்சை வெகு நுட்பமாக கிரகித்திருக்கிறார்; ஆனால் நடுவில் சில இலக்கணப் பதங்கள் சேர்ந்து கொச்சையின் வேகத்தைக் குறைக்கின்றன.
ஆனால் முதல் முதலாக எழுதிய நூலில் எல்லா எழுத்தாளர்களுக்கும் இருக்கும் கொச்சை இலக்கணத் தொல்லையை இவ்வளவுதூரம் சமாளித்திருப்பதே பெரிய விஷயம்.
இன்னும் சில குறைகள் இருக்கலாம், இருக்கின்றன. ஆனால் என்ன? இந்தமாதிரி குடியான வாழ்க்கையையே ஆதாரமாகக் கொண்டு தமிழில் எழுதப்பட்ட முதல் நவீனம் இதுதான்.
ஆசிரியர் இளைஞர்; கவியுள்ளத்துடன் குடியான வாழ்க்கையை அனுபவித்து நுட்பமாகக் கவனித்து மனதில் பதித்துக்கொண்டவர். தெளிவாக எழுதும் சக்தியும் பெற்றிருக்கிறார். அவர் மேலும் குடியான வாழ்க்கையை இன்னும் பல சித்திரங்களில் நமக்கு அளிக்கவேண்டும்.
ஏனெனில் அந்த வாழ்க்கையில்தான் எளிமையும் நம் குணமும் இருக்கிறது; அதில்தான் சிக்கனமும் பெருந்தன்மையும் இருக்கிறது; அதில்தான் பரோபகாரமும் ஆத்மீகப் பற்றும் இருக்கிறது. அதுதான் உயர்விற்கு ஆதாரம்; அது புனருத்தாரமானால் கிராமப் புனருத்தாரணம் நிறைவேறும்.
கு. ப. ராஜகோபாலன்
கும்பகோணம்
1.6.42


Comments

Most Popular

பாண்டியர் நிறுவிய தமிழ்ச் சங்கம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்க காலத்திலே, மதுரை மாநகரத்திலே பாண்டிய மன்னர் மூன்று தமிழ்ச் சங்கங்களை நிறுவித் தமிழை ஆராய்ந்தார்கள் என்று இறையனார் அகப்பொருள் உரை முதலிய நூல்கள் கூறுகின்றன. அச்சங்கங்களில் இயல், இசை, நாடகம், என்னும் முத்தமிழ்கள் ஆராயப்பட்டன. பத்துப் பாட்டு, எட்டுத் தொகை முதலிய செய்யுள்கள் கடைச் சங்கப் புலவர்களால் பாடப்பட்டன. கடைச் சங்கம் கி.பி. 300க்கு முன்பு இருந்தது என்று சரித்திரம் கூறுகிறது. ஆனால், இக்காலத்தில் சிலர், தமிழ் வரலாற்றினையும், நாட்டு வரலாற்றினையும் நேர்மையாகவும் சரியாகவும் ஆராய்ந்து பாராமல், தமிழ்ச் சங்கம் கி.பி. 5ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டது என்றும், அந்தத் தமிழ்ச் சங்கத்தில் தொல்காப்பியம் தோன்றியது என்றும் கூறுகின்றனர்; எழுதுகின்றனர். இவ்வாறு பிழைபட்ட ஆராய்ச்சியைக் கூறுகிறவர்களில் முதன்மை யானவர் அண்மையில் காலஞ்சென்ற திரு. எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்கள். வையாபுரிப் பிள்ளையவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழாராய்ச்சித் துறைத் தலைவராக இருந்தபடியால், அவர் கூறுவன எல்லாம் உண்மை என்று பாமர மக்கள் நினைக்கிறார்கள். பாமர மக்கள் மட்டும் அல்லாமல் படித்தவர்கள் கூட, ஆராய்ந்து பார்த்...

மனமும் அதன் விளக்கமும் | கனவின் பொருள் | பெ. தூரன்

ப ல கனவுகள் சிக்கல் நிறைந்திருக்கின்றன; அவற்றில் தோன்றும் நிகழ்ச்சிகள் மேலாகப் பார்க்கும்போது பொருளற்றவைகளாகவும் இருக்கின்றன. கோ. என்பவர் கண்ட ஒரு கனவை இங்கே ஆராய்வோம். “ஏதோ ஒரு பெரிய கோயில். அங்கே நானும் என் நண்பர்கள் சி. வே. மா. ஆகிய மூவரும் சேர்ந்து ஒருவனைக் கொலை செய்தோம். அவனுடைய மூக்கை மாத்திரம் அறுத்துச் சந்தனத்தில் வைத்துச் சாமிக்கு வைத்தோம். பிணம் வெளியிலேயே கிடந்தது. சி. தான் மூக்கை அறுத்தவர். கடவுளைத் தொழுவதற்காகப் பலர் ஒரு மோட்டார்க் காரில் வந்தார்கள். உடனே நான் பிணத்தைத் துரக்கிக் கோபுரத்தின் மேல் வீசினேன். இதை எனது ஆசிரியர் ஒருவர் பார்த்துக் கொண்டார்.” “நான் ஒடி வந்துவிட்டேன். வழியில் என் நண்பர் வீ. யைச் சந்தித்து வேறொருவனிடம் சைக்கிள் வாங்கி இருவரும் ஏறிக்கொண்டு ஊருக்குச் சென்றோம். வழியில் சி. தம் அண்ணனிடம் ஒன்றும் நடக்காதது போல் வந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கொலை செய்துவிட்டு இவர் இவ்வளவு தாராளமாக வெளியில் நடமாடுகிறாரே என்று வியந்தேன்.” "நாங்கள் ஒரு சத்திரத்தில் புகுந்துகொண்டிருந்தோம். ஆனால் சி. வேறு சில நண்பர்களிடம் சாலையில் சென்றுகொண்டிருந்தார்.” ...

பல ரூபங்களில் காந்தி: நூற்பவர் | அனு பந்தோபாத்யாயா

காந்திஜி முதலில் பழகியது துணி நெசவுதான். கைத்தறியில் நெய்வதற்கு அவர் மில் நூலையே பயன்படுத்தினார். அதில் அவருக்கு திருப்தி ஏற்படவில்லை. காரணம் , அதை சுயதேவைப் பூர்த்தி என்று சொல்ல முடியாது. அவர் துணி தயாரிக்கும் தொழிலில் முதல் படியில் தொடங்கி முற்றிலுமாக நிபுணத்துவம் பெற விரும்பினார். முதலில் பருத்தி பயிரிட வேண்டும். பருத்தியிலிருந்து பஞ்சுக் காய்களைப் பறித்து சுத்தம் செய்து , பட்டை தயார் செய்து , நூல் நூற்று நெசவும் செய்ய வேண்டும். நூல் நூற்பதற்கான சர்க்கா அவருக்கு எளிதில் கிடைக்கவில்லை. அதனால் பயன் ஏதும் இல்லை என்ற காரணத்தினால் கிராம மக்கள் சர்க்காக்களை எப்போதோ தூக்கி எறிந்துவிட்டிருந்தனர். பல கிராமங்களில் தேடிய பின்பு ஒரு கிராமத்தில் ஒரு பெண்மணி இன்னமும் ராட்டையில் நூற்றுக்கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நூற்பில் தேர்ச்சி பெற்ற ஒருவர் மூலமாக ஆசிரமவாசிகளுக்கு சர்க்காவில் எப்படி நூற்க வேண்டும் என்று சொல்லித்தரப்பட்டது. ஒரு முறை அவர் நோயிலிருந்து மீண்டுகொண்டிருந்த தருணத்தில் ராட்டைகளின் ஒலி அவருக்கு சங்கீதம் போல் கேட்டது. அவரும் விரைவில் ராட்டையில் நூல் நூற்கப் பழகிவிட்டார். தி...