Skip to main content

ஈப்புலி | ந. பிச்சமூர்த்தி


வீட்டிலே பெரிய தொந்தரவாக இருந்தது. கடவுள் எதற்காக ஈக்களைப் படைத்தார்? குழம்பிலும் சாதத்திலும் விழுந்து செத்துப்போகவா? இருக்கமுடியாது. பின் ஏன்? அவரைத்தான் கேட்க வேண்டும். ஆனால் என் எஜமானி கேட்பது வேறு. வீடு மாற்றுகிறீர்களா அல்லது செத்துப் போகட்டுமா? இப்பொழுது செத்துப்போகக் கூடாது. ஆறில் சாவு வேண்டாம். நூறிலேயே இருக்கட்டும். ஆக வேண்டிய காரியம் ரொம்ப பாக்கி இருக்கிறது.
"உங்கள் ஆசையெல்லாம் சரிதான். ஆனால் ஈக்குழம்பு தின்றால் சாகாமல் இருக்க முடியாதே.''
ஜாகை மாற்றுவதற்கு நான் இருந்த கிராமத்தில் வசதி இல்லை. குருவியானால் கூட்டிலிருக்கலாம். குரங்கானால் மரத்தில் வசிக்கலாம். சாகுருவியானால் கோபுரத்தில் வாழலாம். பாம்பானால் புற்றைத் தேடலாம். நாங்கள் என்ன செய்ய முடியும்? அங்கே வேறு வீடு கிடைக்காது.
கொசுவுக்கும் மூட்டைப்பூச்சிக்கும் மருந்துண்டு என்று கேள்வி. ஈக்கு மருந்துண்டா? மருந்தில்லை. மாற்றுண்டு என்று ஒரு கிராமத்தான் சொன்னான்.
மறுநாள் அந்த ஆள் ஒரு செடியை ஒடித்துக்கொண்டு வந்து கொடுத்தான். ''இதென்ன ?''
''ஈப்புலி.''
''அப்படி என்றால்''
"இதை வீட்டில் வைத்தால் இதிலுள்ள பூச்சிகள் ஈக்களைப் பிடித்துத் தின்றுவிடும். ஈக்குழம்பு பிறகு கிடைக்காது.''
அந்தச் செடியை ஊன்றிப் பார்த்தேன். அதில் கணக்கின்றி வட்டம் வட்டமாய் வாசல்கள், இருந்தன. சிறிய இலைகள் எல்லாம் சேர்ந்து சிலந்தி நூல் போன்றதொன்றினால் பிணைக்கப்பட்டிருந்தது. செடியையும் கூட்டையும் பார்த்தால் குன்றில் மேகம் கவிந்தது போலும், புகை உறைந்து போர்வையானது போலும் இருந்தது.
ஈக்கள் மத்தியில் அதை வைத்தேன். ஒரு வினாடிகூட ஆகவில்லை. ''பஸ்ஸ்ஸ்..'' என்ற சப்தம். அந்தக் கூட்டில் நாலு ஈக்கள் உட்கார்ந்துவிட்டு ஓட முயன்றன. தப்பிக்கொள்ளச் செய்த முயற்சியால்தான் ஈக்களின் சிறகிலிருந்து அந்த ஓசை எழுந்தது. பின்னும் ஒரு வினாடிதான், அதற்குள் கூட்டிலிருந்து பத்துப் பதினைந்து பூச்சிகள் வெளியே வந்தன. சிலந்தியைப் போன்ற உருவம் ஒவ்வொன்றும் வாசலண்டை வந்து முன் கால்கள் இரண்டையும் நீட்டி ஈக்களைப்பற்றி உள்ளே இழுத்துச் சென்றன. அப்புறம் சத்தத்தைக் காணோம். சிறிது நேரம் இந்த வேடிக்கையைச் கவனித்தேன். கூட்டிலுள்ள மேகம் போன்ற நூலில் ஒருவிதமான பசை இருக்கிறதென்று தெரிந்தது. அதனால்தான் உட்கார்ந்த ஈக்கள் ஓடிவிட முடியவில்லை.
ஈப்புலி என்பதில் சந்தேகமில்லை! ஏனென்றால் இரண்டு மணி நேரத்திற்கும் பிறகுகூட கூட்டின்மேல் இங்குமங்கும் ஈக்கள் புலி வாயில் போய்விட்டன. அன்று முழுவதும் வேட்டை ஓயவில்லை.
இரண்டு பகலும் இரவும் கழிந்தன. மறுநாள் காலையில் ஈப்புலி வேட்டையாடுவதைக் காண உட்கார்ந்தேன். பஸ்ஸ்.. என்ற ஓசையைக் காணோம். இதென்ன விநோதம்! ஈப்புலி ஆட்டுக்குட்டியைப்போல் சுத்த சைவமாகிவிட்டதா என்ன என்று ஆச்சரியப்பட்டேன். நேரம் ஆக ஆக ஈக்கள் கூட்டை மொய்த்தன. இந்த ரகசியத்தை அறியவேண்டுமென்பதற்காக நான் அரை ஈப்புலியாகிவிட்டேன். அதாவது ஈயைப் பிடித்துத் தின்னாமல் வெறுமனே விரட்டிவிட்டு கூட்டை ஊன்றி கவனித்தேன். எறும்புகள் கூட்டின் வாசல்களிலிருந்து சாரி சாரியாக வந்துகொண்டிருந்தன. கூட்டைக் கையிலெடுத்து ஆட்டினேன். பேச்சு மூச்சு காணோம். அப்பொழுதுதான் விஷயம் விளங்கிற்று ஈப்புலிக்கும் ஈப்புலி ஒன்று உண்டுஅதாவது ஈப்புலிகள் கூட்டில் செத்துக் கிடக்காவிட்டால் எறும்புகள் சாரி வைப்பானேன்? அவைகள் சாகாவிட்டால் கூட்டின் மேலிருக்கும் பசையில் ஈரமிருக்க வேண்டுமல்லவா? ஈக்கள் வந்து உட்கார்ந்துவிட்டுத் தாராளமாய்ப் பறந்து செல்வதும், கூட்டின் மேல் உலாவுவதும் கூட்டில் பசை இல்லை என்பதற்கு அத்தாட்சி அல்லவா!
ஈப்புலிகள் உயிருடன் இருந்தபொழுதும் அவ்வளவாக ஈக்கள் தொந்திரவு குறையவில்லை. நக்ஷத்திர மண்டலத்திலிருந்து ஒரு ஆயிரம் கழிந்தால் ஆகாசம் பள்ளிக்கூடத்து பிளாக் போர்டைப்போல் சுத்தக் கருப்பாகிவிடுமா?
மனைவியை அழைத்து கூட்டைக் காட்டினேன். எறும்புகள் சாரி வைப்பதுதான் அவள் கண்ணில் பட்டது.
"ஆனால் ஈப்புலி செத்துப்போய்விட்டதா?''
''ஆமாம்?''
''ஏன்?''
"நான் யோசித்துப் பார்த்தேன். சில விஷயங்கள் மனதில் பட்டன. மீன் கரையில் வருமா? அதே மாதிரிதான் ஈப்புலியும். ஈப்புலி வெட்டவெளியில் செடிகளில் கூடு கட்டக் கூடியது. செடியோடு அதன் கூடும் அப்பொழுது ஸ்திரமாக இருக்கும். நாம் என்ன செய்தோமென்றால் ஈப்புலிக் கூட்டைக் கொண்டுவந்து புகை சூழ்ந்த சமயலறையில் வைத்தோம். போதாக்குறைக்கு நம்முடைய குழந்தைகள் கூட்டை அடிக்கடி தூக்கிப் பல இடங்களில் வைத்தார்கள்திருவையாறு சப்தஸ்தான பல்லக்கைப் போல. அந்தமாதிரி மாற்றியதின் காரணமாக ஈப்புலி எச்சிலைத் துப்பிக் கூட்டின் மீது பசை தடவி வலை பின்னுமே அதைச் செய்யவில்லை. செய்யமுடியாது போலிருக்கிறதே; அதனால்தான் மூன்றாவது நாள் காலையில் கூட்டில் உட்கார்ந்த ஈக்கள் ஒட்டிக்கொள்ளாமல் பறந்துவிட்டன. தேளுக்கு கொடுக்கை வெட்டிவிட்டால் சீக்கிரம் செத்துவிடும் என்பார்கள். அதேமாதிரி ஈக்களைப் பிடிக்க முடியாத பொழுது ஈப்புலிகள் பட்டினியால் செத்துவிடுகின்றன தெரிந்ததா?''
"நன்றாகத் தெரிந்தது! ஈக்குழம்புக்கு என்ன செய்கிறதென்று தான் தெரியவில்லை?''
ஈக்கள் அசுரப்பிறப்பு. ஒன்று செத்தால் எட்டு பிறக்கும். தவிர ஈப்புலிகளுக்கும் ஒரு ஈப்புலி இருக்கிறதென்று தெரிந்துவிட்டது. ஆகையினால் குழம்பைப் பண்ணிய பிறகு ஒரு கொசுவலைத் துணியைப் பாத்திரத்தில் வேடு கட்டிவிடு.''
"அதைவிட நல்ல யோசனை தெரியும். மூடுகிறதற்கு வீட்டில் தாம்பாளம் இல்லையா என்ன! ஒரு சமயம் மறந்து போனால் அரோஹரா! கடைசிப் பல்லக்கில் ஏறவேண்டியதுதான்!''

Comments

Most Popular

மனமும் அதன் விளக்கமும் | கனவின் பொருள் | பெ. தூரன்

ப ல கனவுகள் சிக்கல் நிறைந்திருக்கின்றன; அவற்றில் தோன்றும் நிகழ்ச்சிகள் மேலாகப் பார்க்கும்போது பொருளற்றவைகளாகவும் இருக்கின்றன. கோ. என்பவர் கண்ட ஒரு கனவை இங்கே ஆராய்வோம். “ஏதோ ஒரு பெரிய கோயில். அங்கே நானும் என் நண்பர்கள் சி. வே. மா. ஆகிய மூவரும் சேர்ந்து ஒருவனைக் கொலை செய்தோம். அவனுடைய மூக்கை மாத்திரம் அறுத்துச் சந்தனத்தில் வைத்துச் சாமிக்கு வைத்தோம். பிணம் வெளியிலேயே கிடந்தது. சி. தான் மூக்கை அறுத்தவர். கடவுளைத் தொழுவதற்காகப் பலர் ஒரு மோட்டார்க் காரில் வந்தார்கள். உடனே நான் பிணத்தைத் துரக்கிக் கோபுரத்தின் மேல் வீசினேன். இதை எனது ஆசிரியர் ஒருவர் பார்த்துக் கொண்டார்.” “நான் ஒடி வந்துவிட்டேன். வழியில் என் நண்பர் வீ. யைச் சந்தித்து வேறொருவனிடம் சைக்கிள் வாங்கி இருவரும் ஏறிக்கொண்டு ஊருக்குச் சென்றோம். வழியில் சி. தம் அண்ணனிடம் ஒன்றும் நடக்காதது போல் வந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கொலை செய்துவிட்டு இவர் இவ்வளவு தாராளமாக வெளியில் நடமாடுகிறாரே என்று வியந்தேன்.” "நாங்கள் ஒரு சத்திரத்தில் புகுந்துகொண்டிருந்தோம். ஆனால் சி. வேறு சில நண்பர்களிடம் சாலையில் சென்றுகொண்டிருந்தார்.” ...

அண்ணய்யனின் மனத்தத்துவம் | ஏ. கே. ராமானுஜன்

அவனுக்கு ஆச்சரியம். மிகுந்த ஆச்சரியம். இந்த அமெரிக்க மானிட இயல் அறிஞன், இந்த ஃபர்கூசனைப் பாருங்கள். மனு நீதியைப் படித்திருக்கிறான். இவனுக்கு நம்முடைய சூதகங்களைப் பற்றி எவ்வளவு தெரிந்திருக்கிறது, தான் பிராமணன். தனக்கு இதெல்லாம் தெரியவில்லை. அமெரிக்காவுக்கு வர வேண்டும் ஆன்ம ஞானத்துக்கு மகாத்மாக்கள் சிறையில் உட்கார்ந்து கம்பிகளுக்கிடையில் சுயசரிதம் எழுதியதைப் போலே. நேரு இங்கிலாந்துக்குப் போய் சொந்த நாட்டைப் பற்றித் தெரிந்து கொண்டதைப் போலே. தூரத்திலிருந்தால் பச்சை. நம் உடம்பின் பன்னிரெண்டு திரவங்களிலிருந்து நமக்கு நோய்கள் ஏற்படுகின்றன. உடம்பின் அழுக்கு, வீரியம், இரத்தம், மூளையின் நிணநீர், சிறுநீர், மலம், கொழுப்பு, காதுக்குறும்பி, கண்ணீர், கண்ணில் பீளை, தோலின் வியர்வை (மனு 5. 135) சிகாகோவிலிருந்தாலும் நினைப்பதெல்லாம் கன்னடத்தில்தான். ஒன்று, இரண்டு, மூன்று, நாலு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து, பதினொன்று, பதினொன்று, பதினொன்று. முதல் தடவை எண்ணியபோது பதினொரு மலங்களே கிடைத்தன. திரும்பவும் எண்ணும்போது பன்னிரண்டு, சரியாகப் பன்னிரண்டு. அவனுக்குத் தெரிந்த இந்தப் பன்னிரெண்டில் எச்...

ஐரோப்பியர் வருகை - மயிலை சீனி. வேங்கடசாமி

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே, மேல் நாட்டார் நமது இந்தியா தேசத்துடன், சிறப்பாகத் தென் இந்தியாவுடன், வர்த்தகத் தொடர்பு கொண்டிருந்ததாகத் தெரிகிறது. யவனர் (உரோமர், கிரேக்கர்) என்னும் ஐரோப்பிய ஜாதியார், சேர நாட்டின் கடற்கரைப் பட்டினங்களிற் பண்ட சாலைகள் அமைத்து, அவற்றில் நமது நாட்டுச் சரக்குகளைச் சேமித்து வைத்துக் கப்பல்கள் மூலமாக ஐரோப்பிய நாடுகளுக்குக் கொண்டு போனார்கள். மதுரை, புகார், (காவிரிப்பூம் பட்டினம்) முதலிய நகரங்களிலும் யவனர் வசித்து வந்ததாகத் தமிழ் நூல்களினால் அறிகிறோம். கி.மு. 22 இல் மதுரையில் அரசாண்டிருந்த பாண்டிய மன்னன், அகஸ்தஸ் ஸீஸர் (Augustus Ceasar) என்னும் யவன அரசனிடம் தூதுவர்களை அனுப்பினான் என்று ஸ்த்ராபோ (Starbo) என்னும் மேல் நாட்டாசிரியர் எழுதியிருக்கிறார். தமிழருக்கும் யவனருக்கும் இருந்த இவ்வர்த்தகத் தொடர்பு, கி.பி. 47 முதல் மேன்மேலும் அதிகப்பட்டது. ஏனென்றால், அந்த ஆண்டில் ஹிப்பலஸ் (Hippalus) என்பவர், இந்து சமுத்திரத்தில் வீசுகிற வட கிழக்கு தென் மேற்குப் பருவக் காற்றைக் கண்டுபிடித்தார். இப்பருவக் காற்று வீசுகிற காலங்களில் பிரயாணம் செய்வதால் மாலுமிகள் விரைவாகக் க...