Skip to main content

தமிழ் படித்த பெண்டாட்டி | புதுமைப்பித்தன்



(மொப்பஸான் கதையின் தழுவு)

அன்று கப்பலில் வெகு கூட்டம். நான் சிங்கப்பூருக்குப் புறப்பட்டிருந்தேன். கப்பலும் ஏக கோஷம், இரைச்சலுடன் துறைமுகத்தை விட்டுப் புறப்பட்டது. நான் கப்பலின் மேல்தட்டிலிருந்து கப்பல் கடலுக்குள் செல்லுவதை கவனித்துக்கொண்டிருந்தேன்.

திடீரென்று என்னை யாரோ கூப்பிட்டார்கள். திரும்பிப் பார்த்தேன். எனது பழைய நண்பன் ஹரிஹரன்.

இருவரும் கை குலுக்கினோம். நண்பன் சீமையில் வக்கீல் பரிட்சை கொடுத்துவிட்டு, இலங்கையில் இருக்கிறான் என்று மட்டும் தெரியும். பார்த்து வெகு நாளாகிவிட்டது.

இருவரும் கை குலுக்கினோம்.

'எங்கு பார்த்தாலும் இந்த வெள்ளைக்காரக் கூட்டம்தானா. என்ன வெறுப்பாக இருக்கிறது!' என்றான் என் நண்பன்.

'ஏன் இப்படி அவர்களை வெறுக்கிறாய்?' என்றேன்.

'நீதான் பார். சமுத்திரத்தையே தங்களுக்குப் பட்டா எழுதிவைத்த மாதிரி பார்க்கிறதை; அதில் என்ன மமதை. என்னமோ பெரிய சண்டைக் கப்பல்கள் இருந்துவிட்டால் பக்கத்தில் இருப்பவன் மனிதன் என்றுகூடத் தெரியாது போலிருக்கிறது. இவர்கள் இங்கே வராமல் விரட்டுவதற்கு வழியில்லையா?'

'ஏன்? அவர்களைப் பற்றி எனக்குக் கவலையே இல்லை' என்றேன்.

'உனக்கென்ன கவலை. எனக்குத் தெரியும். அந்த ஜாதியில் ஒருத்தியை நான் கலியாணம் செய்துகொண்டேன்' என்றான் வெறுப்புடன்.

நான் திடுக்கிட்டேன்.... பிறகு....

'அதைப் பற்றி நன்றாகக் கூறு. ஏன்? அவள் என்ன, தொந்தரவு கொடுக்கிறாளா?'

'தொந்தரவு கொடுக்கவில்லை.'

'பின்.... அவள் என்ன... நடத்தை...'

'அதை ஏன் கேட்கிறாய். அவள் கற்புடையவளாகவே இருக்கிறாள். அப்படி ஏதாவது இருந்தால்தான் விவாகரத்திற்காவது வழியுண்டே ?'

'பிறகு என்னதான் சொல்லேன். எனக்கு ஒன்றும் அர்த்தமாகவில்லையே.'

'கஷ்டம் என்னவென்றால் அவள் தமிழ் பேசப் படித்துக்கொண்டாள். சொல்லுகிறேன் கேள். கொஞ்ச நாட்களுக்கு முன் சீமைக்குப் போயிருந்தேனே அப்பொழுது அவளைச் சந்தித்தேன். நல்ல அழகி.... அவள் அழகில் ஈடுபட்டேன். நல்ல குடும்பத்துப் பெண். அவர்களும் இங்கு இருந்தவர்களாம். அவளைப் பார்த்ததும் எனது இலக்ஷியம் கனவு என்றெல்லாம் நினைத்துக்கொண்டேன். இன்னொன்று உனக்குத் தெரிய வேண்டும். நம்முடைய ஆட்களுக்கு அன்னிய நாட்டுப் பெண்ணென்றால் அவ்வளவுதான். அவள் வெள்ளைக்காரியாக இருக்கட்டும், அல்லது மலையாளத்துப் பெண்ணாக இருக்கட்டும். அவள் நமது பாஷையில் ஒரு வார்த்தை குளறிவிட்டால் அவ்வளவுதான்.’

'நான் அவளைச் சந்தித்த பொழுது அவளும் தமிழ் பேசினாள். எனக்கு அர்த்தமாகவில்லை. நானும் தமிழ் பேசினேன். அவளுக்கு அர்த்தமாகவில்லை. ஆனால் அதுதான் சுவாரஸ்யமாக இருந்தது. அதனால் அவளைக் கலியாணம் செய்துகொண்டேன். பிறகு இங்கு வந்த பிறகு, தமிழ் வாத்தியார் ஒருவரை வைத்தேன். இத்தனை நாள் அவள் இலக்கணத்தைக் கிழித்து அகராதியைச் சிதைத்தாள். அது ரொம்ப வேடிக்கையாக இருந்தது. சுவாரஸ்யமாக இருந்தது. கேட்பதற்கு இன்பமாக இருந்தது. இப்பொழுதோ... ஐயோ கடவுளே.... "நீவிர் வருக'' என்கிறாள் என்னைப் பார்த்து. நடமாடுகிற தமிழ் இலக்கணம்தான். இப்பொழுது அவள் பாஷை சீனத்துச் சரக்காக இருக்கிறது. ஒன்றும் புரியவில்லை . நான் ஒரு கிளியைக் கலியாணம் பண்ணிக்கொண்டேன். இந்தத் தப்பிதத்திற்கு எந்தக் குட்டிச் சுவற்றில் முட்டிக் கொள்ளுவது.'

சற்று மெளனம்.

'இப்பொழுது உமது மனைவி எங்கிருக்கிறாள்?'

'அவளை சென்னையில் விட்டுவிட்டு வந்திருக்கிறேன்.'

'பிறகு நீ...?'

'சிங்கப்பூருக்குரெஸ்ட்எடுக்க(களைப்பாற)ப் போகிறேன்.'

'பெண்கள் எவ்வளவு தூரம் முட்டாளாக இருப்பார்கள் சில சமயங்களில் என்று தெரிகிறதா?' என்றேன்.

'ஏன்? ஆண்களை ஏன் மறந்துவிட்டாய்?' என்றான் எனது நண்பன்.

மணிக்கொடி, 7 அக்டோபர் 1934

Comments

Most Popular

மனமும் அதன் விளக்கமும் | இன நனவிலி மனம் | பெ. தூரன்

பி ராய்டு என்ற உளவியலார் நனவிலி மனத்தைப் பற்றி ஆராய்ந்து உளப் பகுப்பியல் முறையைத் தோற்றுவித்தார் என்று கண்டோம். உளப்பகுப்பியலின் தந்தை அவரே. அவரோடு ஆட்லரும், யுங் என்பவரும் மாணவராகப் பல ஆண்டுகள் வேலை செய்தனர். பிறகு இருவரும் கொள்கை வேறுபாடுகளால் வேறு வேறாகப் பிரிந்தனர். ஆட்லரின் பிற்காலக் கருத்தைப் பற்றி முன்பே கூறப்பட்டுள்ளது. இங்கு யுங்கின் கொள்கையைச் சுருக்கமாக ஆராய்வோம். நனவிலி மனத்தைப் பிற்காலத்தில் பிராய்டு ‘இத்’ என்றும், அதில் எழும் ஆற்றலை ‘லிபிடோ’ (Libido) என்றும் குறிப்பிட்டார். லிபிடோ பாலியல்பு வாய்ந்தது என்றும், மனக் கோளாறுகளெல்லாம் இது ஒழுங்காக அமையாததால் ஏற்படுகின்றன என்றும், இந்தப் பாலியல்பு குழவிப் பருவ முதற்கொண்டே தொடங்குகிறதென்றும் கருதினார். நனவிலி மனம் குழவிப் பருவத்தில் சிறிதாக இருந்தபோதும், வயது ஆக ஆக அக்குழந்தைக்குத் தடைகளும் விதிகளும் பெருகுகின்ற காரணத்தினால் நனவிலி மனத்தில் பல விதமான இச்சைகளும் ஆர்வங்களும் மிகுதியாகி நனவிலி மனம் விரிவடைகின்றது. அதனால்தான் நனவிலி மனம் நனவு மனத்தினின்றும் வளர்ந்ததேயாகும் என்று பொதுப்படையாகக் கூறுவதுண்டு. இக் கருத்தைப் பல ந...

மணிபல்லவம் - ஜம்பு கொல பட்டினம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்ககாலத்து நூலாகிய மணிமேகலையிலே, இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப்பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள பழைய பௌத்த நூல்களிலேயும் இலங்கைத்தீவின் வடகோடியில் இருந்த ஜம்புகோல் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. தமிழ் நூலில் கூறப்படும் குறிப்பு களைக் கொண்டும் பாலி மொழி நூல்களில் கூறப்படும் குறிப்புகளைக் கொண்டும் மணிபல்லவமும் ஜம்புகொல பட்டினமும் ஒரே இடம் என்று துணியலாம். பெயர் வேறுபடு வதிலிருந்து இரண்டும் வெவ்வேறிடங்கள் எனக் கருதும்படி இருந்தாலும், இவைகளைப்பற்றிக் கூறப்படும் செய்திகளை உற்றுநோக்கினால், இரண்டும் ஒன்றே என்பது ஐயமற விளங்குகிறது. இதனை ஈண்டு ஆராய்வோம். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலேதான் மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்தது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை கூறுவது காண்க. சோழ நாட்டின் துறைமுகப்பட்டினமாகிய புகார்ப்பட்டினத்தில் இருந்து தெற்கே 30 யோசனை தொலைவில் மணிபல்லவம் இருந்தது (...

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு...