Skip to main content

தமிழ் படித்த பெண்டாட்டி | புதுமைப்பித்தன்



(மொப்பஸான் கதையின் தழுவு)

அன்று கப்பலில் வெகு கூட்டம். நான் சிங்கப்பூருக்குப் புறப்பட்டிருந்தேன். கப்பலும் ஏக கோஷம், இரைச்சலுடன் துறைமுகத்தை விட்டுப் புறப்பட்டது. நான் கப்பலின் மேல்தட்டிலிருந்து கப்பல் கடலுக்குள் செல்லுவதை கவனித்துக்கொண்டிருந்தேன்.

திடீரென்று என்னை யாரோ கூப்பிட்டார்கள். திரும்பிப் பார்த்தேன். எனது பழைய நண்பன் ஹரிஹரன்.

இருவரும் கை குலுக்கினோம். நண்பன் சீமையில் வக்கீல் பரிட்சை கொடுத்துவிட்டு, இலங்கையில் இருக்கிறான் என்று மட்டும் தெரியும். பார்த்து வெகு நாளாகிவிட்டது.

இருவரும் கை குலுக்கினோம்.

'எங்கு பார்த்தாலும் இந்த வெள்ளைக்காரக் கூட்டம்தானா. என்ன வெறுப்பாக இருக்கிறது!' என்றான் என் நண்பன்.

'ஏன் இப்படி அவர்களை வெறுக்கிறாய்?' என்றேன்.

'நீதான் பார். சமுத்திரத்தையே தங்களுக்குப் பட்டா எழுதிவைத்த மாதிரி பார்க்கிறதை; அதில் என்ன மமதை. என்னமோ பெரிய சண்டைக் கப்பல்கள் இருந்துவிட்டால் பக்கத்தில் இருப்பவன் மனிதன் என்றுகூடத் தெரியாது போலிருக்கிறது. இவர்கள் இங்கே வராமல் விரட்டுவதற்கு வழியில்லையா?'

'ஏன்? அவர்களைப் பற்றி எனக்குக் கவலையே இல்லை' என்றேன்.

'உனக்கென்ன கவலை. எனக்குத் தெரியும். அந்த ஜாதியில் ஒருத்தியை நான் கலியாணம் செய்துகொண்டேன்' என்றான் வெறுப்புடன்.

நான் திடுக்கிட்டேன்.... பிறகு....

'அதைப் பற்றி நன்றாகக் கூறு. ஏன்? அவள் என்ன, தொந்தரவு கொடுக்கிறாளா?'

'தொந்தரவு கொடுக்கவில்லை.'

'பின்.... அவள் என்ன... நடத்தை...'

'அதை ஏன் கேட்கிறாய். அவள் கற்புடையவளாகவே இருக்கிறாள். அப்படி ஏதாவது இருந்தால்தான் விவாகரத்திற்காவது வழியுண்டே ?'

'பிறகு என்னதான் சொல்லேன். எனக்கு ஒன்றும் அர்த்தமாகவில்லையே.'

'கஷ்டம் என்னவென்றால் அவள் தமிழ் பேசப் படித்துக்கொண்டாள். சொல்லுகிறேன் கேள். கொஞ்ச நாட்களுக்கு முன் சீமைக்குப் போயிருந்தேனே அப்பொழுது அவளைச் சந்தித்தேன். நல்ல அழகி.... அவள் அழகில் ஈடுபட்டேன். நல்ல குடும்பத்துப் பெண். அவர்களும் இங்கு இருந்தவர்களாம். அவளைப் பார்த்ததும் எனது இலக்ஷியம் கனவு என்றெல்லாம் நினைத்துக்கொண்டேன். இன்னொன்று உனக்குத் தெரிய வேண்டும். நம்முடைய ஆட்களுக்கு அன்னிய நாட்டுப் பெண்ணென்றால் அவ்வளவுதான். அவள் வெள்ளைக்காரியாக இருக்கட்டும், அல்லது மலையாளத்துப் பெண்ணாக இருக்கட்டும். அவள் நமது பாஷையில் ஒரு வார்த்தை குளறிவிட்டால் அவ்வளவுதான்.’

'நான் அவளைச் சந்தித்த பொழுது அவளும் தமிழ் பேசினாள். எனக்கு அர்த்தமாகவில்லை. நானும் தமிழ் பேசினேன். அவளுக்கு அர்த்தமாகவில்லை. ஆனால் அதுதான் சுவாரஸ்யமாக இருந்தது. அதனால் அவளைக் கலியாணம் செய்துகொண்டேன். பிறகு இங்கு வந்த பிறகு, தமிழ் வாத்தியார் ஒருவரை வைத்தேன். இத்தனை நாள் அவள் இலக்கணத்தைக் கிழித்து அகராதியைச் சிதைத்தாள். அது ரொம்ப வேடிக்கையாக இருந்தது. சுவாரஸ்யமாக இருந்தது. கேட்பதற்கு இன்பமாக இருந்தது. இப்பொழுதோ... ஐயோ கடவுளே.... "நீவிர் வருக'' என்கிறாள் என்னைப் பார்த்து. நடமாடுகிற தமிழ் இலக்கணம்தான். இப்பொழுது அவள் பாஷை சீனத்துச் சரக்காக இருக்கிறது. ஒன்றும் புரியவில்லை . நான் ஒரு கிளியைக் கலியாணம் பண்ணிக்கொண்டேன். இந்தத் தப்பிதத்திற்கு எந்தக் குட்டிச் சுவற்றில் முட்டிக் கொள்ளுவது.'

சற்று மெளனம்.

'இப்பொழுது உமது மனைவி எங்கிருக்கிறாள்?'

'அவளை சென்னையில் விட்டுவிட்டு வந்திருக்கிறேன்.'

'பிறகு நீ...?'

'சிங்கப்பூருக்குரெஸ்ட்எடுக்க(களைப்பாற)ப் போகிறேன்.'

'பெண்கள் எவ்வளவு தூரம் முட்டாளாக இருப்பார்கள் சில சமயங்களில் என்று தெரிகிறதா?' என்றேன்.

'ஏன்? ஆண்களை ஏன் மறந்துவிட்டாய்?' என்றான் எனது நண்பன்.

மணிக்கொடி, 7 அக்டோபர் 1934

Comments

Most Popular

குலாப்ஜான் காதல் | புதுமைப்பித்தன்

‘ காதலாவது உருளைக்கிழங்காவது ’ - சி . சுப்பிரமணிய பாரதி நான் ஆராய்ச்சிப் பிரியன் . அதிலும் தர்க்கரீதியாக புத்தியை வசீகரிக்கக்கூடிய ஆராய்ச்சியென்றால் , அதுதான் எனது தெய்வம் . கம்பனுடைய காவியங்கள் முதல் , நாணயச் செலாவணி , தீண்டாதார் ஆலயப் பிரவேசம் ஈறாக , எல்லாம் தர்க்க முறையில் அடைபட்டு ஒத்து இருந்தால்தான் எனது கொள்கை . இல்லாவிடில் அதற்கும் நமக்கும் வெகுதூரம் . இந்தக் காதல் விஷயத்தை நன்றாக ஆராய்ந்து கவனித்ததில் , சாதாரணமாக அல்ல , அபரிமிதமாக , காவியங்கள் , நாவல்கள் என்ற கற்பனைப் பிரதேசங்களில்தான் விளைகின்றன . இல்லாவிட்டால் அவை நமது பொருள்காட்சி சாலைகளைத் தப்பி இருக்க முடியுமா ? அகப்பொருள் இலக்கணக்காரர் கூறுவதைப் பார்த்தால் அசல் , கலப்பில்லாத பழம் பெருந்தமிழ் மக்களுடனிருந்து அவர்கள் தங்களுடைய ஏடுகளுடன் கடலால் கொள்ளப்பட்ட பொழுது , அவர்களுடன் சங்கமமாயிற்றென்று நினைக்க ஏதுவிருக்கிறது . ஆழ்ந்து யோசிக்குந்தோறும் , தர்க்க ஆராய்ச்சியை வழிபடும் எனக்கு , அதன் கூற்றுக்கள் வெகு வினோதமாகவே காணப்படுகின்றன . எனது ஆர

பெரியம்மை | சுரேஷ்குமார இந்திரஜித்

பெரியப்பா அருமையாகப் பாடுவார். ‘முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே’ என்ற டி.எம்.எஸ். பாட்டை ஏற்ற இறக்கங்கள், பிர்காக்கள் பிசகாமல் பாடுவார். அப்போது பெரியம்மை முகத்தைப் பார்க்கவேண்டுமே. அவர் முகம் பெருமிதத்தோடும் பரவசத்தோடும் இருக்கும். பெரியம்மா முருங்கைக்காய் குழம்பு வைத்தால் நிறைய சாப்பிடவேண்டியிருக்கும். குழம்புகள் ருசியாகச் செய்வதற்கென்றே அவள் பிறந்திருக்கிறாள். கத்தரிக்காய் புளிக்குழம்பும் அப்படித்தான் அவ்வளவு ருசியாக இருக்கும். என் அம்மைக்கு இந்தக் குழம்புகள் ருசி கூடி வராது. சப்பென்று இருக்கும். நான் வேலை பார்க்கும் ஊரிலிருந்து வீட்டுக்கு வந்திருந்தேன். பெரியப்பாவைப் பார்ப்பதற்கும், அவர் பாட்டைக் கேட்பதற்கும் அவர் வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன். இது மார்கழி மாதம். வாசல்களில் கோலம் போட்டு பூசணிப்பூவை மையமாக வைத்திருந்தார்கள். அநேகமாக சில வீடுகள் நீங்கலாக எல்லா வீட்டு வாசல்களிலும் பூசணிப்பூவை வைத்திருந்தார்கள். செண்பகவல்லி மதினி வீட்டைக் கடக்கும்போது மல்லிகைப்பூ வாசம் வந்தது. மதினி வீட்டுக் காம்பவுண்டுக்குள் மல்லிகைப்பூ கொடிக்குப் பந்தல் போட்டிருந்ததைப் பார்த்தேன். வேல

மனமும் அதன் விளக்கமும் - மனமெனும் மாயம் | பெ. தூரன்

ம னம் என்பதென்ன? அது எங்கே இருக்கிறது? கை, கால், கண், இதயம் என்றால் உடம்பில் உள்ள உறுப்புகள் என்று உடனே தெரிகிறது. அவைகளுக்கு வடிவம் உண்டு. பருமன் உண்டு. ஆதலால் அவைகளை எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மனம் என்பது எது? அதற்கு வடிவம் உண்டா? பருமன் உண்டா? தொட்டுப் பார்த்து அறிந்துகொள்ள முடியுமா? இவ்வாறு எண்ணிப் பார்த்தால் ஒன்றும் விளங்குவதில்லை. இவ்வாறு எண்ணுவதற்கு அந்த மனமே காரணமாக இருக்கிறதென்று தோன்றுகிறது. ஆனால் அது என்ன என்று மட்டும் எளிதில் அறிந்துகொள்ள முடிகிறதில்லை. மனத்திற்கு உருவமில்லை; கன பரிமாணமும் இல்லை. மனம் என்பது தசை, நரம்பு முதலியவைகளால் ஆக்கப்பட்டதன்று. அது சடப் பொருள் அன்று; அது சூக்குமப் பொருள், சடப் பொருள் என்றால் அது உடம்பைச் சேர்ந்த ஒர் உறுப்பாகிவிடும்; எளிதாக அதை அறிந்துகொள்ளவும் முடியும். சிலர் மூளைதான் மனம் என்று தவறாகக் கருதுகிறார்கள். மூளை என்பது உடம்போடு சேர்ந்த ஒரு பருப்பொருளான உறுப்பு. அது மனம் அல்ல. சூக்குமப் பொருளாக மனம் இருக்கிறதென்று மட்டும் நமக்குப் புலனாகிறது. அந்த மனந்தான் ஆசைகள், எண்ணங்கள், நோக்கங்கள், நம்பிக்கைகள் முதலியவற்றிற்கு இடமாயிரு