Skip to main content

தமிழ் படித்த பெண்டாட்டி | புதுமைப்பித்தன்



(மொப்பஸான் கதையின் தழுவு)

அன்று கப்பலில் வெகு கூட்டம். நான் சிங்கப்பூருக்குப் புறப்பட்டிருந்தேன். கப்பலும் ஏக கோஷம், இரைச்சலுடன் துறைமுகத்தை விட்டுப் புறப்பட்டது. நான் கப்பலின் மேல்தட்டிலிருந்து கப்பல் கடலுக்குள் செல்லுவதை கவனித்துக்கொண்டிருந்தேன்.

திடீரென்று என்னை யாரோ கூப்பிட்டார்கள். திரும்பிப் பார்த்தேன். எனது பழைய நண்பன் ஹரிஹரன்.

இருவரும் கை குலுக்கினோம். நண்பன் சீமையில் வக்கீல் பரிட்சை கொடுத்துவிட்டு, இலங்கையில் இருக்கிறான் என்று மட்டும் தெரியும். பார்த்து வெகு நாளாகிவிட்டது.

இருவரும் கை குலுக்கினோம்.

'எங்கு பார்த்தாலும் இந்த வெள்ளைக்காரக் கூட்டம்தானா. என்ன வெறுப்பாக இருக்கிறது!' என்றான் என் நண்பன்.

'ஏன் இப்படி அவர்களை வெறுக்கிறாய்?' என்றேன்.

'நீதான் பார். சமுத்திரத்தையே தங்களுக்குப் பட்டா எழுதிவைத்த மாதிரி பார்க்கிறதை; அதில் என்ன மமதை. என்னமோ பெரிய சண்டைக் கப்பல்கள் இருந்துவிட்டால் பக்கத்தில் இருப்பவன் மனிதன் என்றுகூடத் தெரியாது போலிருக்கிறது. இவர்கள் இங்கே வராமல் விரட்டுவதற்கு வழியில்லையா?'

'ஏன்? அவர்களைப் பற்றி எனக்குக் கவலையே இல்லை' என்றேன்.

'உனக்கென்ன கவலை. எனக்குத் தெரியும். அந்த ஜாதியில் ஒருத்தியை நான் கலியாணம் செய்துகொண்டேன்' என்றான் வெறுப்புடன்.

நான் திடுக்கிட்டேன்.... பிறகு....

'அதைப் பற்றி நன்றாகக் கூறு. ஏன்? அவள் என்ன, தொந்தரவு கொடுக்கிறாளா?'

'தொந்தரவு கொடுக்கவில்லை.'

'பின்.... அவள் என்ன... நடத்தை...'

'அதை ஏன் கேட்கிறாய். அவள் கற்புடையவளாகவே இருக்கிறாள். அப்படி ஏதாவது இருந்தால்தான் விவாகரத்திற்காவது வழியுண்டே ?'

'பிறகு என்னதான் சொல்லேன். எனக்கு ஒன்றும் அர்த்தமாகவில்லையே.'

'கஷ்டம் என்னவென்றால் அவள் தமிழ் பேசப் படித்துக்கொண்டாள். சொல்லுகிறேன் கேள். கொஞ்ச நாட்களுக்கு முன் சீமைக்குப் போயிருந்தேனே அப்பொழுது அவளைச் சந்தித்தேன். நல்ல அழகி.... அவள் அழகில் ஈடுபட்டேன். நல்ல குடும்பத்துப் பெண். அவர்களும் இங்கு இருந்தவர்களாம். அவளைப் பார்த்ததும் எனது இலக்ஷியம் கனவு என்றெல்லாம் நினைத்துக்கொண்டேன். இன்னொன்று உனக்குத் தெரிய வேண்டும். நம்முடைய ஆட்களுக்கு அன்னிய நாட்டுப் பெண்ணென்றால் அவ்வளவுதான். அவள் வெள்ளைக்காரியாக இருக்கட்டும், அல்லது மலையாளத்துப் பெண்ணாக இருக்கட்டும். அவள் நமது பாஷையில் ஒரு வார்த்தை குளறிவிட்டால் அவ்வளவுதான்.’

'நான் அவளைச் சந்தித்த பொழுது அவளும் தமிழ் பேசினாள். எனக்கு அர்த்தமாகவில்லை. நானும் தமிழ் பேசினேன். அவளுக்கு அர்த்தமாகவில்லை. ஆனால் அதுதான் சுவாரஸ்யமாக இருந்தது. அதனால் அவளைக் கலியாணம் செய்துகொண்டேன். பிறகு இங்கு வந்த பிறகு, தமிழ் வாத்தியார் ஒருவரை வைத்தேன். இத்தனை நாள் அவள் இலக்கணத்தைக் கிழித்து அகராதியைச் சிதைத்தாள். அது ரொம்ப வேடிக்கையாக இருந்தது. சுவாரஸ்யமாக இருந்தது. கேட்பதற்கு இன்பமாக இருந்தது. இப்பொழுதோ... ஐயோ கடவுளே.... "நீவிர் வருக'' என்கிறாள் என்னைப் பார்த்து. நடமாடுகிற தமிழ் இலக்கணம்தான். இப்பொழுது அவள் பாஷை சீனத்துச் சரக்காக இருக்கிறது. ஒன்றும் புரியவில்லை . நான் ஒரு கிளியைக் கலியாணம் பண்ணிக்கொண்டேன். இந்தத் தப்பிதத்திற்கு எந்தக் குட்டிச் சுவற்றில் முட்டிக் கொள்ளுவது.'

சற்று மெளனம்.

'இப்பொழுது உமது மனைவி எங்கிருக்கிறாள்?'

'அவளை சென்னையில் விட்டுவிட்டு வந்திருக்கிறேன்.'

'பிறகு நீ...?'

'சிங்கப்பூருக்குரெஸ்ட்எடுக்க(களைப்பாற)ப் போகிறேன்.'

'பெண்கள் எவ்வளவு தூரம் முட்டாளாக இருப்பார்கள் சில சமயங்களில் என்று தெரிகிறதா?' என்றேன்.

'ஏன்? ஆண்களை ஏன் மறந்துவிட்டாய்?' என்றான் எனது நண்பன்.

மணிக்கொடி, 7 அக்டோபர் 1934

Comments

Most Popular

மனமும் அதன் விளக்கமும் - மனமெனும் மாயம் | பெ. தூரன்

ம னம் என்பதென்ன? அது எங்கே இருக்கிறது? கை, கால், கண், இதயம் என்றால் உடம்பில் உள்ள உறுப்புகள் என்று உடனே தெரிகிறது. அவைகளுக்கு வடிவம் உண்டு. பருமன் உண்டு. ஆதலால் அவைகளை எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மனம் என்பது எது? அதற்கு வடிவம் உண்டா? பருமன் உண்டா? தொட்டுப் பார்த்து அறிந்துகொள்ள முடியுமா? இவ்வாறு எண்ணிப் பார்த்தால் ஒன்றும் விளங்குவதில்லை. இவ்வாறு எண்ணுவதற்கு அந்த மனமே காரணமாக இருக்கிறதென்று தோன்றுகிறது. ஆனால் அது என்ன என்று மட்டும் எளிதில் அறிந்துகொள்ள முடிகிறதில்லை. மனத்திற்கு உருவமில்லை; கன பரிமாணமும் இல்லை. மனம் என்பது தசை, நரம்பு முதலியவைகளால் ஆக்கப்பட்டதன்று. அது சடப் பொருள் அன்று; அது சூக்குமப் பொருள், சடப் பொருள் என்றால் அது உடம்பைச் சேர்ந்த ஒர் உறுப்பாகிவிடும்; எளிதாக அதை அறிந்துகொள்ளவும் முடியும். சிலர் மூளைதான் மனம் என்று தவறாகக் கருதுகிறார்கள். மூளை என்பது உடம்போடு சேர்ந்த ஒரு பருப்பொருளான உறுப்பு. அது மனம் அல்ல. சூக்குமப் பொருளாக மனம் இருக்கிறதென்று மட்டும் நமக்குப் புலனாகிறது. அந்த மனந்தான் ஆசைகள், எண்ணங்கள், நோக்கங்கள், நம்பிக்கைகள் முதலியவற்றிற்கு இடமாயிரு

எழுத்தாளர்களும் மின்னூல்களும்

இது குறைந்தது இரண்டு மின்னூல்களாவது வெளியிட்டுள்ள தமிழ் எழுத்தாளர்களின் அகரவரிசை தொகுப்பு. அவ்வப்போது புதிய இணைப்புகள் சேர்க்கப்படுகின்றன. இணைப்புகளில் அந்தந்த எழுத்தாளர்களின் இனி வரும் நூல்களும் தொகுக்கப்படும். கடைசியாக செப்டம்பர் 03, 2020 அன்று புதுப்பிக்கப்பட்டது.) அசோகமித்திரன் https://amzn.to/3cIKLFC |  https://amzn.to/3avBTS4 |  https://amzn.to/2zqxsLz அம்பை  https://amzn.to/3eIsOsl அருட்செல்வப்பேரரசன்  https://amzn.to/3eOosQr அருண் நரசிம்மன்  https://amzn.to/2VRkUV4 அழ. வள்ளியப்பா  https://amzn.to/2ZcvybO அழகிய பெரியவன்  https://cutt.ly/Lft1hhC அழகுநிலா  https://amzn.to/37bgFc5 அனோஜன் பாலகிருஷ்ணன்  https://amzn.to/2KvZM1n அஜயன் பாலா  https://amzn.to/2xJFC1e அ. கா. பெருமாள்  https://cutt.ly/pfs2w5j அ. வெண்ணிலா  https://cutt.ly/9fhYybK ஆரணி குப்புசாமி முதலியார்  https://amzn.to/2V1OWWD ஆ. இரா. வேங்கடாசலபதி  https://amzn.to/2RZQrD0 ஆ. சிவசுப்பிரமணியன் https://amzn.to/2xHVVvp ஆத்மார்த்தி  https://amzn.to/3eOnx2r ஆனந்த்  https://cutt.ly/LaTpEs7 ஆர். சிவகும

மொழிபெயர்ப்பு | க. நா. சுப்ரமண்யம்

மொழிபெயர்ப்பு என்பதைச் சாதாரணமாக ஒரு கலை என்று சொல்வது வழக்கமில்லை. கலையோ , தொழிலோ - மொழிபெயர்ப்பு என்பது இலக்கியத்திலே ஒரு தனித் துறை. அது மிகவும் அவசியமானது. இலக்கிய வளர்ச்சியின் அடிப்படையான காரியங்களிலே மொழிபெயர்ப்பும் ஒன்று. மொழிபெயர்ப்புகள் அதிகம் இல்லாத காலத்திலே இலக்கிய வளர்ச்சி வேகமாக நடைபெறுவதில்லை என்பது சரித்திரபூர்வமாக நமக்குத் தெரிகிற உண்மை. தமிழிலே மொழிபெயர்ப்புகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தோன்றிவிட்டன. கம்பனை மொழிபெயர்ப்பு நூல் என்று சொல்லமுடியாது ; ஆனால் திருக்குறளின் ஒரு பகுதி மொழிபெயர்ப்பு நூல் என்று திடமாகச் சொல்லலாம். மனு , பரதர் , கெளடில்யர் முதலியவர்களின் சம்ஸ்கிருத சூத்திரங்களைக் குறளாசிரியர் மொழிபெயர்த்துத் தமிழாக்கித் தந்திருக்கிறார். தமிழாக்கி என்று சொல்வதிலே ஒரு விஷயம் அடங்கியிருக்கிறது. தமிழிலே வெளிவருகிற மொழிபெயர்ப்புகள் தமிழாகத்தான் இருக்கவேண்டுமா என்று என்னை யாராவது கேட்டால் , வேண்டாம் இருக்கக்கூடாது என்றே நான் பதில் சொல்லுவேன். எந்த மொழிபெயர்ப்புமே முதல் நூல் போலாகிவிடக்கூடாது - முழுதும் தமிழாகிவிடக்கூடாது. மொழிபெயர்ப்பாசிரியன் முத