Skip to main content

காந்தி: சத்திய சோதனைக்குப் பின் - 1



(காந்திஜி, தமது சுய சரிதையை 1920-ஆம் ஆண்டு வரையில்தான் எழுதியுள்ளார். அதிலிருந்து அவர் அமரத்துவம் அடைந்தது வரை, மொத்தம் 28 வருட காலத்தில் அவரது வாழ்க்கையிலும், நாட்டு வாழ்விலும் நிகழ்ந்த முக்கியமான சம்பவங்கள் வருடவாரியாக இத்தளத்தில் வெளியாகிறது. சுய சரிதையைப் படித்து முடித்த வாசகர்கள், காந்திஜியின் வாழ்க்கை முழுவதையும் தெரிந்துகொள்ளுவதற்கு உதவியாக இருக்கும் என்ற நோக்கில் இந்தக் குறிப்புகள் மகாத்மா காந்தி நூல்கள் வரிசையில், தொகுதி மூன்றில் சேர்க்கப்பட்டன.)

1920 (வயது 51)


வைசிராயிடம் கிலாபத் தூதுக்கோஷ்டி செல்லுவது சம்பந்தமாக, ஜனவரி 18-ஆம் தேதியன்று டில்லியில் காந்திஜியை மெளலானா அபுல்கலாம் ஆஸாத் முதல் முதலில் சந்தித்தார். அங்கே திலகரும் உடன் இருந்தார்.

ஜனவரி 19-இல் தூதுகோஷ்டிக்குக் காந்திஜி தலைமை தாங்கி, வைசிராயிடம் சென்றார்.

மே மாதத்தில் ஹன்டர் கமிட்டி அறிக்கை வெளியாயிற்று. காந்திஜி மிகவும் அதிர்ச்சியடைந்தார். சர்க்காரின் ஒத்துழைப்பாளராக இருந்தவர், ஒத்துழையாமைக்காரர் ஆனார்.

துருக்கி மீது விதிக்கப்பட்ட சமாதான நிபந்தனைகளும், வைசிராயின் செய்தியும்மே 14- இல் அறிவிக்கப்பட்டன. அவற்றைக் குறித்து மகாத்மா விடுத்த தமது செய்தியில், நிபந்தனைகள் ஏமாற்றம் அளிக்கக்கூடியவையே என்று ஒப்புக்கொண்டிருந்தபோதிலும், தவிர்க்க முடியாதவற்றை ஏற்றுக்கொள்ளுமாறு முஸ்லிம்களுக்கு யோசனை கூறியிருந்தார்.

மே 18-இல் காந்திஜி, மெளலானா ஷௌகத் அலி, அபுல் கலாம் ஆஸாத் ஆகியோர் அடங்கிய கிலாபத் உப கமிட்டி, ஒத்துழையாமைத் தீர்மானத்தை நிறைவேற்றியது. ஜூன் 30-இல் அலகாபாத்தில் கூடிய முஸ்லிம் மகாநாடு அதை ஊர்ஜிதம் செய்து அங்கீகரித்தது.

காந்திஜி, வைசிராய்க்கு எழுதிய பகிரங்கக் கடிதத்தில், "மேன்மை தங்கிய தங்கள் சர்க்காருக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற்றுக்கொள்ளும்படி, என் முஸ்லிம் நண்பர்களுக்கு ஆலோசனை கூறியிருக்கிறேன். அவர்களோடு ஹிந்துக்கள் சேர வேண்டுமென்றும் ஆலோசனை கூறியிருக்கிறேன்'' என்று தெரிவித்தார். ஒத்துழையாமையை, ''முட்டாள்தனமானது, எல்லா திட்டங்களையும் விட மிகவும் முட்டாள்தனமான திட்டம் இது'' என்று வைசிராய் வர்ணித்தார்.

ஒத்துழையாமை ஆரம்பமாவதற்கு முன்னதாக ஜூலை 31-ஆம் தேதியன்று உண்ணாவிரதமும், பிரார்த்தனையும் நடைபெறும் என்று காந்திஜி அறிவித்தார்.

ஒத்துழையாமைக்குச் சகலமும் பக்குவமாக இருந்தது. . . கா. . தீர்மானத்தின்படி நடப்பதாகத் திலகர் வாக்களித்தார். ஆனால் ஜூலை 31-ஆம் தேதியன்று இரவு அவர் காலமாகிவிட்டார். ''என் மிகப் பெரிய துணைவர் போய்விட் டார்'' என்று துக்கித்தார் காந்திஜி.

ஆகஸ்டு முதல் தேதியன்று காந்திஜி, வைசிராய்க்குக் கடிதம் எழுதி, தம்முடைய கெய்ஸர் - - ஹிந்த் தங்கப் பதக்கத்தையும், போயர் யுத்தப் பதக்கத்தையும் திரும்பக் கொடுத்துவிடுவதாகத் தெரிவித்தார். கவிஞர் ரவீந்திரநாத் டாகுர் தமது 'ஸர்' பட்டத்தை உதறினார்.

இதற்கிடையே முஸ்லிம்கள் ஆப்கானிஸ்தானத்துக்கு ஹிஜ்ராத் பண்ண (ஓடிப்போக) ஆரம்பித்தார்கள். ஆகஸ்டில் 18,000 மக்கள் போய்க்கொண்டிருந்தபோது, ஆப்கன் அதிகாரிகள் அவர்களுடைய பிரவேசத்தைத் தடுத்தார்கள்.

செப்டம்பர் 4-இலிருந்து 9 வரை கல்கத்தாவில் காங்கிரஸின் விசேஷ மகாநாடு நடைபெற்றது. காந்திஜி, தீர்மானத்தில் சுயராஜ்யக் கோரிக்கையைச் சேர்த்தார். இயக்கத்தில் முதலாவதாகச் சேர்ந்தவர் மோதிலால் நேரு. ஸ்ரீமதி அன்னிபெஸன்ட், பண்டித மாளவியா, சி. ஆர். தாஸ் ஆகியோரும் பிரசன்னமாக இருந்தனர். நீண்ட விவாதத்துக்குப் பிறகு ஒத்துழையாமைத் தீர்மானம் நிறைவேறியது.

அகில இந்தியத் திலகர் ஞாபகார்த்த நிதியும், சுயராஜ்ய நிதியும் சேர்க்க அக்டோபர் 2-இல் ..கா.. தீர்மானித்தது.

ஸ்ரீ பியாரிலால் அக்டோபரில் காந்திஜியிடம் வந்து சேர்ந்தார்.

நவம்பரில் காந்திஜி, குஜராத் தேசீய சர்வகலாசாலையை ஸ்தாபித்தார்.

டிசம்பர் 26-இல் நாகபுரி காங்கிரஸ், லாலா லஜபதிராயும், சி. ஆர். தாஸும் கூறிய யோசனைகளின்பேரில், சிறு மாறுதல்களுடன் ஒத்துழையாமைத் தீர்மானத்தை ஏகமனமாக ஊர்ஜிதம் செய்தது. தீர்மானத்தை ஸ்ரீ தாஸ் கொண்டுவந்தார். லஜபதி ராய் ஆமோதித்தார். காங்கிரஸுக்கு ஸ்ரீ சி. விஜயராகவாச்சாரியார் தலைமை வகித்தார்.

காந்திஜி தயாரித்த காங்கிரஸ் விதிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. காங்கிரஸின் குறிக்கோள் பற்றிய, "சாத்தியமானால் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்குள் அடங்கிய சுயராஜ்யத்தை அடைவது, அவசியமானால் அதற்குள் அடங்காத சுயராஜ்யத்தைப் பெறுவது" என்பது பற்றிக் கடுமையான விவாதம் நடந்தது. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்குள் அடங்கிய சுயராஜ்யம் என்பதை மாளவியாவும், ஜின்னாவும் விரும்பினார்கள். ஆனால் காங்கிரஸ், அசல் தீர்மானத்தை நிறைவேற்றியது. ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமை, தீண்டாமை ஒழிப்பு, கதரைப் பரப்புதல் ஆகியவற்றிற்கான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

கொன்னாட் கோமகனுக்கு மரியாதை செய்வதற்காக நடக்கும் வைபவங்களில் கலந்துகொள்ள வேண்டாம் என்று தேசத்துக்குக் கோரிக்கை விடப்பட்டது. ஐரிஷ் சுதந்திரத்துக்காக 65 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து இறந்த கார்க் மேயர் மாக்ஸ்வினியின் நினைவுக்கு இந்தியா மரியாதை செலுத்தியது.

இந்தச் சந்தர்ப்பத்திலிருந்து, காந்திஜியும் காங்கிரஸும் ஒரு பொருள் குறிக்கும் இரு சொற்கள் என்ற நிலை ஏற்பட்டது.

தினந்தோறும் அரைமணி நேரம் நூற்பதற்கு முன் சாப்பிடுவதில்லை என்று காந்திஜி பிரதிக்ஞை எடுத்துக்கொண்டார்.

  • (நன்றி: மகாத்மா காந்தி நூல்கள் - தொகுதி மூன்று)

Comments

Most Popular

இரு சகோதரர்கள்

  [ அ. கி. கோபாலன், அ. கி. ஜயராமன் நேர்காணல் ] நேர்கண்டவர்: எஸ். குரு படங்கள்: திரு. சுதாகர் நோபல் பரிசு பெற்ற நாவல்களைப் பதிப்பித்த அ. கி. கோபாலன் நீங்கள் பதிப்பாளரானது எப்படி ? தென்னாற்காடு மேலக்குமாரமங்கலம் என் சொந்த ஊர். எங்கள் கிராமத்தில் நான்காவது வகுப்பு படித்தேன். கிராமத்தில் எங்கள் அப்பா விவசாயம் செய்துகொண்டிருந்தார். நிறைய நஞ்சை நிலம் இருந்தது. பங்காளிக் காய்ச்சலினால் எங்கள் சொத்துகள் பறிபோயின. முதலில் என் அண்ணன் அ. கி. ஜெயராமன் சென்னைக்கு வந்து ஒரு ஹோட்டலில் சர்வராகச் சேர்ந்துவிட்டு , அப்புறம் என்னை ஊரிலிருந்து வரவழைத்து , என்னையும் சர்வராகச் சேர்த்துவிட்டார். சைனா பஜார் பழைய ஆரிய பவனுக்கு எதிரே ஆனந்த லட்சுமி பவன் என்று இருந்தது. அங்குதான் சர்வராகச் சேர்ந்தோம். இட்லி அரையணா , காபி முக்காலணா , பீடா காலணா , ஸ்பெஷல் பீடா அரையணா விற்ற காலம் அது. ஹோட்டலுக்கு அருகில் ச. சு. சங்கரலிங்கக் கவிராயர் என்ற நாடகாசிரியர் தங்கியிருந்தார். சங்கரலிங்கக் கவிராயர் , சங்கரதாஸ் சுவாமிகளுக்கு இணையானவர். அவரிடம் நாடகப் பாடல்கள் கேட்டேன். ஹோட்டலில் சக ஊழியர்களிடம் சொல்லிவிட்டு , ஆ...

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு...

பெரியம்மை | சுரேஷ்குமார இந்திரஜித்

பெரியப்பா அருமையாகப் பாடுவார். ‘முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே’ என்ற டி.எம்.எஸ். பாட்டை ஏற்ற இறக்கங்கள், பிர்காக்கள் பிசகாமல் பாடுவார். அப்போது பெரியம்மை முகத்தைப் பார்க்கவேண்டுமே. அவர் முகம் பெருமிதத்தோடும் பரவசத்தோடும் இருக்கும். பெரியம்மா முருங்கைக்காய் குழம்பு வைத்தால் நிறைய சாப்பிடவேண்டியிருக்கும். குழம்புகள் ருசியாகச் செய்வதற்கென்றே அவள் பிறந்திருக்கிறாள். கத்தரிக்காய் புளிக்குழம்பும் அப்படித்தான் அவ்வளவு ருசியாக இருக்கும். என் அம்மைக்கு இந்தக் குழம்புகள் ருசி கூடி வராது. சப்பென்று இருக்கும். நான் வேலை பார்க்கும் ஊரிலிருந்து வீட்டுக்கு வந்திருந்தேன். பெரியப்பாவைப் பார்ப்பதற்கும், அவர் பாட்டைக் கேட்பதற்கும் அவர் வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன். இது மார்கழி மாதம். வாசல்களில் கோலம் போட்டு பூசணிப்பூவை மையமாக வைத்திருந்தார்கள். அநேகமாக சில வீடுகள் நீங்கலாக எல்லா வீட்டு வாசல்களிலும் பூசணிப்பூவை வைத்திருந்தார்கள். செண்பகவல்லி மதினி வீட்டைக் கடக்கும்போது மல்லிகைப்பூ வாசம் வந்தது. மதினி வீட்டுக் காம்பவுண்டுக்குள் மல்லிகைப்பூ கொடிக்குப் பந்தல் போட்டிருந்ததைப் பார்த்தேன். வேல...