Skip to main content

காந்தி: சத்திய சோதனைக்குப் பின் - 1



(காந்திஜி, தமது சுய சரிதையை 1920-ஆம் ஆண்டு வரையில்தான் எழுதியுள்ளார். அதிலிருந்து அவர் அமரத்துவம் அடைந்தது வரை, மொத்தம் 28 வருட காலத்தில் அவரது வாழ்க்கையிலும், நாட்டு வாழ்விலும் நிகழ்ந்த முக்கியமான சம்பவங்கள் வருடவாரியாக இத்தளத்தில் வெளியாகிறது. சுய சரிதையைப் படித்து முடித்த வாசகர்கள், காந்திஜியின் வாழ்க்கை முழுவதையும் தெரிந்துகொள்ளுவதற்கு உதவியாக இருக்கும் என்ற நோக்கில் இந்தக் குறிப்புகள் மகாத்மா காந்தி நூல்கள் வரிசையில், தொகுதி மூன்றில் சேர்க்கப்பட்டன.)

1920 (வயது 51)


வைசிராயிடம் கிலாபத் தூதுக்கோஷ்டி செல்லுவது சம்பந்தமாக, ஜனவரி 18-ஆம் தேதியன்று டில்லியில் காந்திஜியை மெளலானா அபுல்கலாம் ஆஸாத் முதல் முதலில் சந்தித்தார். அங்கே திலகரும் உடன் இருந்தார்.

ஜனவரி 19-இல் தூதுகோஷ்டிக்குக் காந்திஜி தலைமை தாங்கி, வைசிராயிடம் சென்றார்.

மே மாதத்தில் ஹன்டர் கமிட்டி அறிக்கை வெளியாயிற்று. காந்திஜி மிகவும் அதிர்ச்சியடைந்தார். சர்க்காரின் ஒத்துழைப்பாளராக இருந்தவர், ஒத்துழையாமைக்காரர் ஆனார்.

துருக்கி மீது விதிக்கப்பட்ட சமாதான நிபந்தனைகளும், வைசிராயின் செய்தியும்மே 14- இல் அறிவிக்கப்பட்டன. அவற்றைக் குறித்து மகாத்மா விடுத்த தமது செய்தியில், நிபந்தனைகள் ஏமாற்றம் அளிக்கக்கூடியவையே என்று ஒப்புக்கொண்டிருந்தபோதிலும், தவிர்க்க முடியாதவற்றை ஏற்றுக்கொள்ளுமாறு முஸ்லிம்களுக்கு யோசனை கூறியிருந்தார்.

மே 18-இல் காந்திஜி, மெளலானா ஷௌகத் அலி, அபுல் கலாம் ஆஸாத் ஆகியோர் அடங்கிய கிலாபத் உப கமிட்டி, ஒத்துழையாமைத் தீர்மானத்தை நிறைவேற்றியது. ஜூன் 30-இல் அலகாபாத்தில் கூடிய முஸ்லிம் மகாநாடு அதை ஊர்ஜிதம் செய்து அங்கீகரித்தது.

காந்திஜி, வைசிராய்க்கு எழுதிய பகிரங்கக் கடிதத்தில், "மேன்மை தங்கிய தங்கள் சர்க்காருக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற்றுக்கொள்ளும்படி, என் முஸ்லிம் நண்பர்களுக்கு ஆலோசனை கூறியிருக்கிறேன். அவர்களோடு ஹிந்துக்கள் சேர வேண்டுமென்றும் ஆலோசனை கூறியிருக்கிறேன்'' என்று தெரிவித்தார். ஒத்துழையாமையை, ''முட்டாள்தனமானது, எல்லா திட்டங்களையும் விட மிகவும் முட்டாள்தனமான திட்டம் இது'' என்று வைசிராய் வர்ணித்தார்.

ஒத்துழையாமை ஆரம்பமாவதற்கு முன்னதாக ஜூலை 31-ஆம் தேதியன்று உண்ணாவிரதமும், பிரார்த்தனையும் நடைபெறும் என்று காந்திஜி அறிவித்தார்.

ஒத்துழையாமைக்குச் சகலமும் பக்குவமாக இருந்தது. . . கா. . தீர்மானத்தின்படி நடப்பதாகத் திலகர் வாக்களித்தார். ஆனால் ஜூலை 31-ஆம் தேதியன்று இரவு அவர் காலமாகிவிட்டார். ''என் மிகப் பெரிய துணைவர் போய்விட் டார்'' என்று துக்கித்தார் காந்திஜி.

ஆகஸ்டு முதல் தேதியன்று காந்திஜி, வைசிராய்க்குக் கடிதம் எழுதி, தம்முடைய கெய்ஸர் - - ஹிந்த் தங்கப் பதக்கத்தையும், போயர் யுத்தப் பதக்கத்தையும் திரும்பக் கொடுத்துவிடுவதாகத் தெரிவித்தார். கவிஞர் ரவீந்திரநாத் டாகுர் தமது 'ஸர்' பட்டத்தை உதறினார்.

இதற்கிடையே முஸ்லிம்கள் ஆப்கானிஸ்தானத்துக்கு ஹிஜ்ராத் பண்ண (ஓடிப்போக) ஆரம்பித்தார்கள். ஆகஸ்டில் 18,000 மக்கள் போய்க்கொண்டிருந்தபோது, ஆப்கன் அதிகாரிகள் அவர்களுடைய பிரவேசத்தைத் தடுத்தார்கள்.

செப்டம்பர் 4-இலிருந்து 9 வரை கல்கத்தாவில் காங்கிரஸின் விசேஷ மகாநாடு நடைபெற்றது. காந்திஜி, தீர்மானத்தில் சுயராஜ்யக் கோரிக்கையைச் சேர்த்தார். இயக்கத்தில் முதலாவதாகச் சேர்ந்தவர் மோதிலால் நேரு. ஸ்ரீமதி அன்னிபெஸன்ட், பண்டித மாளவியா, சி. ஆர். தாஸ் ஆகியோரும் பிரசன்னமாக இருந்தனர். நீண்ட விவாதத்துக்குப் பிறகு ஒத்துழையாமைத் தீர்மானம் நிறைவேறியது.

அகில இந்தியத் திலகர் ஞாபகார்த்த நிதியும், சுயராஜ்ய நிதியும் சேர்க்க அக்டோபர் 2-இல் ..கா.. தீர்மானித்தது.

ஸ்ரீ பியாரிலால் அக்டோபரில் காந்திஜியிடம் வந்து சேர்ந்தார்.

நவம்பரில் காந்திஜி, குஜராத் தேசீய சர்வகலாசாலையை ஸ்தாபித்தார்.

டிசம்பர் 26-இல் நாகபுரி காங்கிரஸ், லாலா லஜபதிராயும், சி. ஆர். தாஸும் கூறிய யோசனைகளின்பேரில், சிறு மாறுதல்களுடன் ஒத்துழையாமைத் தீர்மானத்தை ஏகமனமாக ஊர்ஜிதம் செய்தது. தீர்மானத்தை ஸ்ரீ தாஸ் கொண்டுவந்தார். லஜபதி ராய் ஆமோதித்தார். காங்கிரஸுக்கு ஸ்ரீ சி. விஜயராகவாச்சாரியார் தலைமை வகித்தார்.

காந்திஜி தயாரித்த காங்கிரஸ் விதிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. காங்கிரஸின் குறிக்கோள் பற்றிய, "சாத்தியமானால் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்குள் அடங்கிய சுயராஜ்யத்தை அடைவது, அவசியமானால் அதற்குள் அடங்காத சுயராஜ்யத்தைப் பெறுவது" என்பது பற்றிக் கடுமையான விவாதம் நடந்தது. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்குள் அடங்கிய சுயராஜ்யம் என்பதை மாளவியாவும், ஜின்னாவும் விரும்பினார்கள். ஆனால் காங்கிரஸ், அசல் தீர்மானத்தை நிறைவேற்றியது. ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமை, தீண்டாமை ஒழிப்பு, கதரைப் பரப்புதல் ஆகியவற்றிற்கான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

கொன்னாட் கோமகனுக்கு மரியாதை செய்வதற்காக நடக்கும் வைபவங்களில் கலந்துகொள்ள வேண்டாம் என்று தேசத்துக்குக் கோரிக்கை விடப்பட்டது. ஐரிஷ் சுதந்திரத்துக்காக 65 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து இறந்த கார்க் மேயர் மாக்ஸ்வினியின் நினைவுக்கு இந்தியா மரியாதை செலுத்தியது.

இந்தச் சந்தர்ப்பத்திலிருந்து, காந்திஜியும் காங்கிரஸும் ஒரு பொருள் குறிக்கும் இரு சொற்கள் என்ற நிலை ஏற்பட்டது.

தினந்தோறும் அரைமணி நேரம் நூற்பதற்கு முன் சாப்பிடுவதில்லை என்று காந்திஜி பிரதிக்ஞை எடுத்துக்கொண்டார்.

  • (நன்றி: மகாத்மா காந்தி நூல்கள் - தொகுதி மூன்று)

Comments

Most Popular

இலக்கியத்தில் உருவங்கள் | க. நா. சுப்ரமண்யம்

இலக்கியத்தில் பல பல உருவங்கள் உண்டு. அவை முதல் முதலாகப் பல பல மொழிகளில் தோன்றி இலக்கிய உருவம் பெற்று சிறப்பாகச் சில மொழிகளில் பிரமாதமான இலக்கிய அந்தஸ்து பெற்றவை. இந்த உருவம் இந்த மொழியைச் சேர்ந்தது என்று யாரும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. அப்படிச் சொல்லவேண்டிய அவசியமும் இல்லை. கிணற்றுத் தவளைகள்தான் இந்த மாதிரிப் பெருமை தேடிக்கொண்டு, தங்கள் தங்கள் மொழியே உலகிலுள்ள எல்லா இலக்கியத்துக்கும் ஆதாரம் என்று கட்சி கட்டிக்கொண்டு பெருமை பாராட்டிக்கொண்டிருக்க முடியும். இன்றைய தமிழ் இலக்கியாசிரியன் உலகிலுள்ள எல்லா மொழி இலக்கியங்களுக்கும் உருவங்களுக்கும் வாரிசு. தெரிந்தோ தெரியாமலோ அவன் தமிழ்ப் பழமைக்கெல்லாம் வாரிசாகிறான். - சிலப்பதிகாரத்தையும், சங்க நூல்களையும், கம்பராமாயணத்தையும், தேவாரம் திருவாச கத்தையும் அறிந்தோ அறியாமலோ, அவன் மனம் அந்த மரபிலேதான் சமைகிறது. தமிழனாகப் பிறந்த தோஷத்தினால் அவன் விடுகிற மூச்சே தமிழ் மரபு மூச்சு என்றுதான் சொல்லவேண்டும். இதிலே பிற மொழிகளின் மரபு எங்கே எப்படி வருகிறது என்று கேட்கலாம். சம்ஸ்கிருத முதல் நூலை அறிந்ததாகக் காட்டிக்கொள்கிற கம்பனும், ஐரோப்பிய நாவ...

மனமும் அதன் விளக்கமும் | கனவின் பொருள் | பெ. தூரன்

ப ல கனவுகள் சிக்கல் நிறைந்திருக்கின்றன; அவற்றில் தோன்றும் நிகழ்ச்சிகள் மேலாகப் பார்க்கும்போது பொருளற்றவைகளாகவும் இருக்கின்றன. கோ. என்பவர் கண்ட ஒரு கனவை இங்கே ஆராய்வோம். “ஏதோ ஒரு பெரிய கோயில். அங்கே நானும் என் நண்பர்கள் சி. வே. மா. ஆகிய மூவரும் சேர்ந்து ஒருவனைக் கொலை செய்தோம். அவனுடைய மூக்கை மாத்திரம் அறுத்துச் சந்தனத்தில் வைத்துச் சாமிக்கு வைத்தோம். பிணம் வெளியிலேயே கிடந்தது. சி. தான் மூக்கை அறுத்தவர். கடவுளைத் தொழுவதற்காகப் பலர் ஒரு மோட்டார்க் காரில் வந்தார்கள். உடனே நான் பிணத்தைத் துரக்கிக் கோபுரத்தின் மேல் வீசினேன். இதை எனது ஆசிரியர் ஒருவர் பார்த்துக் கொண்டார்.” “நான் ஒடி வந்துவிட்டேன். வழியில் என் நண்பர் வீ. யைச் சந்தித்து வேறொருவனிடம் சைக்கிள் வாங்கி இருவரும் ஏறிக்கொண்டு ஊருக்குச் சென்றோம். வழியில் சி. தம் அண்ணனிடம் ஒன்றும் நடக்காதது போல் வந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கொலை செய்துவிட்டு இவர் இவ்வளவு தாராளமாக வெளியில் நடமாடுகிறாரே என்று வியந்தேன்.” "நாங்கள் ஒரு சத்திரத்தில் புகுந்துகொண்டிருந்தோம். ஆனால் சி. வேறு சில நண்பர்களிடம் சாலையில் சென்றுகொண்டிருந்தார்.” ...

காந்திஜி குடும்ப மூதாதையர் வரலாறு

[மகாத்மா காந்தி தமது 'சுயசரிதை'யில் தம் குடும்ப வரலாற்றைச் சொல்லும்போது, தமது பாட்டனாரைப் பற்றி மாத்திரமே குறிப்பிட்டிருக்கிறார். ஆகையால், காந்தி குடும்பத்தைப் பற்றிய முந்திய வரலாற்றையும் அறிய விரும்புவோருக்குப் பயனுள்ளதாக இருக்கட்டும் என்பதற்காக அக்குடும்ப வரலாற்றைக் குறித்து, ஸ்ரீ பிரபுதாஸ் காந்தி எழுதியிருக்கும் "காந்தியுடன் என் குழந்தைப் பருவம்'' என்ற நூலிலிருந்து....] நான் சேகரிக்க முடிந்த தகவல்களிலிருந்து, எங்கள் குடும்ப சரித்திரத்தில் லால்ஜி காந்தியின் பெயர்தான் முதல் முதல் தெரிகிறது. லால்ஜி காந்தி குடும்பத்தில் ஐந்தாவது தலைமுறையாகப் பிறந்தவரான உத்தம சந்திர காந்தியே, காந்தி குடும்பப் பெயருக்குக் கௌரவத்தையும் கீர்த்தியையும் தேடித் தந்தார். ஏழாவது தலைமுறையில் பிறந்தவரே, மகாத்மா காந்தி. லால்ஜி காந்தியின் குமாரர் ராம்ஜி காந்தி. இவர் தப்தாரியாக வேலை பார்த்தார். ஆகவே, போர்பந்தர் சமஸ்தான திவானுக்கு வலக்கரம்போல் இருந்தார். இப்பொழுது மந்திரி சபையில் உள்நாட்டு மந்திரிக்கு என்ன பொறுப்புக்கள் உண்டோ அவையே தப்தாரியின் பொறுப்புக்களாகும். ராம்ஜி காந்தியின் மகன் ர...