Skip to main content

காந்தி: சத்திய சோதனைக்குப் பின் - 1



(காந்திஜி, தமது சுய சரிதையை 1920-ஆம் ஆண்டு வரையில்தான் எழுதியுள்ளார். அதிலிருந்து அவர் அமரத்துவம் அடைந்தது வரை, மொத்தம் 28 வருட காலத்தில் அவரது வாழ்க்கையிலும், நாட்டு வாழ்விலும் நிகழ்ந்த முக்கியமான சம்பவங்கள் வருடவாரியாக இத்தளத்தில் வெளியாகிறது. சுய சரிதையைப் படித்து முடித்த வாசகர்கள், காந்திஜியின் வாழ்க்கை முழுவதையும் தெரிந்துகொள்ளுவதற்கு உதவியாக இருக்கும் என்ற நோக்கில் இந்தக் குறிப்புகள் மகாத்மா காந்தி நூல்கள் வரிசையில், தொகுதி மூன்றில் சேர்க்கப்பட்டன.)

1920 (வயது 51)


வைசிராயிடம் கிலாபத் தூதுக்கோஷ்டி செல்லுவது சம்பந்தமாக, ஜனவரி 18-ஆம் தேதியன்று டில்லியில் காந்திஜியை மெளலானா அபுல்கலாம் ஆஸாத் முதல் முதலில் சந்தித்தார். அங்கே திலகரும் உடன் இருந்தார்.

ஜனவரி 19-இல் தூதுகோஷ்டிக்குக் காந்திஜி தலைமை தாங்கி, வைசிராயிடம் சென்றார்.

மே மாதத்தில் ஹன்டர் கமிட்டி அறிக்கை வெளியாயிற்று. காந்திஜி மிகவும் அதிர்ச்சியடைந்தார். சர்க்காரின் ஒத்துழைப்பாளராக இருந்தவர், ஒத்துழையாமைக்காரர் ஆனார்.

துருக்கி மீது விதிக்கப்பட்ட சமாதான நிபந்தனைகளும், வைசிராயின் செய்தியும்மே 14- இல் அறிவிக்கப்பட்டன. அவற்றைக் குறித்து மகாத்மா விடுத்த தமது செய்தியில், நிபந்தனைகள் ஏமாற்றம் அளிக்கக்கூடியவையே என்று ஒப்புக்கொண்டிருந்தபோதிலும், தவிர்க்க முடியாதவற்றை ஏற்றுக்கொள்ளுமாறு முஸ்லிம்களுக்கு யோசனை கூறியிருந்தார்.

மே 18-இல் காந்திஜி, மெளலானா ஷௌகத் அலி, அபுல் கலாம் ஆஸாத் ஆகியோர் அடங்கிய கிலாபத் உப கமிட்டி, ஒத்துழையாமைத் தீர்மானத்தை நிறைவேற்றியது. ஜூன் 30-இல் அலகாபாத்தில் கூடிய முஸ்லிம் மகாநாடு அதை ஊர்ஜிதம் செய்து அங்கீகரித்தது.

காந்திஜி, வைசிராய்க்கு எழுதிய பகிரங்கக் கடிதத்தில், "மேன்மை தங்கிய தங்கள் சர்க்காருக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற்றுக்கொள்ளும்படி, என் முஸ்லிம் நண்பர்களுக்கு ஆலோசனை கூறியிருக்கிறேன். அவர்களோடு ஹிந்துக்கள் சேர வேண்டுமென்றும் ஆலோசனை கூறியிருக்கிறேன்'' என்று தெரிவித்தார். ஒத்துழையாமையை, ''முட்டாள்தனமானது, எல்லா திட்டங்களையும் விட மிகவும் முட்டாள்தனமான திட்டம் இது'' என்று வைசிராய் வர்ணித்தார்.

ஒத்துழையாமை ஆரம்பமாவதற்கு முன்னதாக ஜூலை 31-ஆம் தேதியன்று உண்ணாவிரதமும், பிரார்த்தனையும் நடைபெறும் என்று காந்திஜி அறிவித்தார்.

ஒத்துழையாமைக்குச் சகலமும் பக்குவமாக இருந்தது. . . கா. . தீர்மானத்தின்படி நடப்பதாகத் திலகர் வாக்களித்தார். ஆனால் ஜூலை 31-ஆம் தேதியன்று இரவு அவர் காலமாகிவிட்டார். ''என் மிகப் பெரிய துணைவர் போய்விட் டார்'' என்று துக்கித்தார் காந்திஜி.

ஆகஸ்டு முதல் தேதியன்று காந்திஜி, வைசிராய்க்குக் கடிதம் எழுதி, தம்முடைய கெய்ஸர் - - ஹிந்த் தங்கப் பதக்கத்தையும், போயர் யுத்தப் பதக்கத்தையும் திரும்பக் கொடுத்துவிடுவதாகத் தெரிவித்தார். கவிஞர் ரவீந்திரநாத் டாகுர் தமது 'ஸர்' பட்டத்தை உதறினார்.

இதற்கிடையே முஸ்லிம்கள் ஆப்கானிஸ்தானத்துக்கு ஹிஜ்ராத் பண்ண (ஓடிப்போக) ஆரம்பித்தார்கள். ஆகஸ்டில் 18,000 மக்கள் போய்க்கொண்டிருந்தபோது, ஆப்கன் அதிகாரிகள் அவர்களுடைய பிரவேசத்தைத் தடுத்தார்கள்.

செப்டம்பர் 4-இலிருந்து 9 வரை கல்கத்தாவில் காங்கிரஸின் விசேஷ மகாநாடு நடைபெற்றது. காந்திஜி, தீர்மானத்தில் சுயராஜ்யக் கோரிக்கையைச் சேர்த்தார். இயக்கத்தில் முதலாவதாகச் சேர்ந்தவர் மோதிலால் நேரு. ஸ்ரீமதி அன்னிபெஸன்ட், பண்டித மாளவியா, சி. ஆர். தாஸ் ஆகியோரும் பிரசன்னமாக இருந்தனர். நீண்ட விவாதத்துக்குப் பிறகு ஒத்துழையாமைத் தீர்மானம் நிறைவேறியது.

அகில இந்தியத் திலகர் ஞாபகார்த்த நிதியும், சுயராஜ்ய நிதியும் சேர்க்க அக்டோபர் 2-இல் ..கா.. தீர்மானித்தது.

ஸ்ரீ பியாரிலால் அக்டோபரில் காந்திஜியிடம் வந்து சேர்ந்தார்.

நவம்பரில் காந்திஜி, குஜராத் தேசீய சர்வகலாசாலையை ஸ்தாபித்தார்.

டிசம்பர் 26-இல் நாகபுரி காங்கிரஸ், லாலா லஜபதிராயும், சி. ஆர். தாஸும் கூறிய யோசனைகளின்பேரில், சிறு மாறுதல்களுடன் ஒத்துழையாமைத் தீர்மானத்தை ஏகமனமாக ஊர்ஜிதம் செய்தது. தீர்மானத்தை ஸ்ரீ தாஸ் கொண்டுவந்தார். லஜபதி ராய் ஆமோதித்தார். காங்கிரஸுக்கு ஸ்ரீ சி. விஜயராகவாச்சாரியார் தலைமை வகித்தார்.

காந்திஜி தயாரித்த காங்கிரஸ் விதிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. காங்கிரஸின் குறிக்கோள் பற்றிய, "சாத்தியமானால் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்குள் அடங்கிய சுயராஜ்யத்தை அடைவது, அவசியமானால் அதற்குள் அடங்காத சுயராஜ்யத்தைப் பெறுவது" என்பது பற்றிக் கடுமையான விவாதம் நடந்தது. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்குள் அடங்கிய சுயராஜ்யம் என்பதை மாளவியாவும், ஜின்னாவும் விரும்பினார்கள். ஆனால் காங்கிரஸ், அசல் தீர்மானத்தை நிறைவேற்றியது. ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமை, தீண்டாமை ஒழிப்பு, கதரைப் பரப்புதல் ஆகியவற்றிற்கான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

கொன்னாட் கோமகனுக்கு மரியாதை செய்வதற்காக நடக்கும் வைபவங்களில் கலந்துகொள்ள வேண்டாம் என்று தேசத்துக்குக் கோரிக்கை விடப்பட்டது. ஐரிஷ் சுதந்திரத்துக்காக 65 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து இறந்த கார்க் மேயர் மாக்ஸ்வினியின் நினைவுக்கு இந்தியா மரியாதை செலுத்தியது.

இந்தச் சந்தர்ப்பத்திலிருந்து, காந்திஜியும் காங்கிரஸும் ஒரு பொருள் குறிக்கும் இரு சொற்கள் என்ற நிலை ஏற்பட்டது.

தினந்தோறும் அரைமணி நேரம் நூற்பதற்கு முன் சாப்பிடுவதில்லை என்று காந்திஜி பிரதிக்ஞை எடுத்துக்கொண்டார்.

  • (நன்றி: மகாத்மா காந்தி நூல்கள் - தொகுதி மூன்று)

Comments

Most Popular

உறையூர் மறைந்த வரலாறு - மயிலை சீனி. வேங்கடசாமி

ஊர்களும் நகரங்களும் சிற்சில காரணங்களால் அழிந்து படுவதுண்டு. எரிமலைகளாலும், ஆறுகளாலும், மண்காற்றி னாலும், கடற்பெருக்காலும் ஊர்கள் அழிகின்றன. இவ்வாறு அழிந்துபோன ஊர்கள் பலப்பல. கி.பி. முதலாம் நூற்றாண்டிலே கிரேக்க நாட்டிலே இருந்த பாம்பி என்னும் நகரம், வெசூவியஸ் என்னும் எரிமலை கக்கிய நெருப்பினாலும் சாம்பலினாலும் மூடுண்டு அழிந்துவிட்டது. அழிந்துபோன அந்நகரத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் தோண்டியபோது, புதையுண்ட வீதிகளையும், மனைகளையும், மக்களின் எலும்புக் கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். சிந்து நதிக்கரையிலே இருந்த ஹரப்பா, மொகஞ்சதரோ என்னும் நகரங்கள் வெள்ளப் பெருக்கினால் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்துவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன்னர் அவ்விடங்களை அகழ்ந்து பார்த்தபோது, அக் காலத்துக் கட்டடங்களையும், தெருக்களையும், பாண்டங் களையும், எலும்புக்கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். புதுச்சேரிக்குத் தெற்கே பத்து மைல் தொலைவில் உள்ள அரிக்கமேடு என்னும் கடற்கரைப் பட்டினம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தமிழ் நாட்டில் பேர்பெற்ற துறைமுகமாக இருந்தது. யவனர் முதலிய வெ

மணிபல்லவம் - ஜம்பு கொல பட்டினம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்ககாலத்து நூலாகிய மணிமேகலையிலே, இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப்பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள பழைய பௌத்த நூல்களிலேயும் இலங்கைத்தீவின் வடகோடியில் இருந்த ஜம்புகோல் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. தமிழ் நூலில் கூறப்படும் குறிப்பு களைக் கொண்டும் பாலி மொழி நூல்களில் கூறப்படும் குறிப்புகளைக் கொண்டும் மணிபல்லவமும் ஜம்புகொல பட்டினமும் ஒரே இடம் என்று துணியலாம். பெயர் வேறுபடு வதிலிருந்து இரண்டும் வெவ்வேறிடங்கள் எனக் கருதும்படி இருந்தாலும், இவைகளைப்பற்றிக் கூறப்படும் செய்திகளை உற்றுநோக்கினால், இரண்டும் ஒன்றே என்பது ஐயமற விளங்குகிறது. இதனை ஈண்டு ஆராய்வோம். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலேதான் மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்தது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை கூறுவது காண்க. சோழ நாட்டின் துறைமுகப்பட்டினமாகிய புகார்ப்பட்டினத்தில் இருந்து தெற்கே 30 யோசனை தொலைவில் மணிபல்லவம் இருந்தது (

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு , https://tinyurl.