Skip to main content

அடிமனம் | மனப் பகுப்பியலின் தந்தை | பெ. தூரன்

படம் - பிராய்டும் அவரது நண்பர் கோல்லரும்
பிராய்டு தமது நான்காம் வயதிலிருந்து ஆஸ்திரியாவின் தலைநகராகிய வியன்னாவில் வளர்ந்து வந்தார். அவர் பிறந்தது மொரேவியாவில் உள்ள பிரீபர்க் (Freiberg) என்ற ஊரிலாகும். மொரேவியா இப்பொழுது செக் கோஸ்லோவாக்கியாவில் ஒரு பாகமாக இருக்கிறது. பிராய்டு ஒரு யூதருக்கு அவருடைய இரண்டாம் மனைவியின் பிள்ளையாகப் பிறந்தார். பிராய்டு வியன்னா பல்கலைக்கழகத்தில் வைத்தியத் துறையில் கல்வி பயின்று பட்டம் பெற்றுப் பிறகு மனித உடம்பிலுள்ள நரம்பு மண்டலத்தைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அவருடைய ஆராய்ச்சியிலே அவருக்கு நல்ல வெற்றி கிடைக்கக்கூடிய சந்தர்ப்பம் வந்தது. கண்ணில் ரண சிகிச்சை செய்யவேண்டி நேர்ந்தால் அதில் வலி தெரியாமல் இருப்பதற்காக கொக்கேன் என்னும் மருந்தைப் பயன்படுத்த முடியும் என்பதை இவர் தமது ஆராய்ச்சியின் மூலம் அநேகமாகக் கண்டுபிடித்துவிட்டார். ஆனால் அதைப் பூர்த்திசெய்து பிறருக்கும் எடுத்துக்காட்டி நிரூபிப்பதற்கு முன்பாக இவர் அந்த ஆராய்ச்சியை விட்டுப் போகும்படி நேரிட்டது. இவருடைய காதலி பல ஆண்டுகளாக வேறொரு பட்டனத்திலே காத்திருந்தாள். அவளால் மேலும் காத்திருக்க முடியவில்லை போலும். அவள் அவசரமாக வரும்படி அழைத்ததை மறுக்க முடியாமல் இவர் தமது ஆராய்ச்சியை முடியும் தருணத்தில் விட்டுவிட்டுப் போய்விட்டார். அந்த ஆராய்ச்சியை இவருடைய நண்பரான கோல்லர் (Koller) முடித்து இவருக்கு உரித்தான புகழை அவர் சம்பாதித்துக்கொண்டார்.
பிராய்டு தமது காதலியை மணந்துகொண்ட பிறகு தமது பழைய ஆராய்ச்சிகளில் சில காலம் ஈடுபட்டிருந்தார். ஆனால் பொருளாதார நிலைமை அவ்வாறு ஆராய்ச்சி செய்வதற்கு இடங்கொடுக்காததால் இவர் நரம்புக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குச் சிகிச்சை செய்யும் தொழிலை நடத்தலானர்.
நரம்பு மண்டல நோய்களைத் தீர்ப்பதற்கு மேலும் சிறந்த தகுதிபெற வேண்டுமென்று பிராய்டுக்கு விருப்பம் உண்டாயிற்று. அதனால் இவர் 1885-ல் பாரிஸுக்குச் சென்றார். அந்த சமயத்தில் பாரிஸில் ஷார்க்கோ என்பவர் ஹிஸ்டிரியா நோயைக் குணமாக்குவதில் பெருங்கீர்த்தி பெற்றிருந்தாரென்று முன்பே கூறினேன். அவரோடு பிராய்டு ஒராண்டு வேலை செய்தார். ஷார்க்கோ மனவசிய முறையைக் கையாண்டு ஹிஸ்டிரியா நோயாளிகளைக் குணமாக்குவதைக் கண்டு அம்முறையைப் பாராட்டினார்.
1886-ல் பிராய்டு வியன்னாவுக்குத் திரும்பிவந்து ஜோசப் பிராயருடன் சேர்ந்து தொழில் நடத்தலானர். பிராயரும் ஹிஸ்டிரியா நோயைக் குணப்படுத்துவதில் புகழ் வாய்ந்தவர். அவர் தற்செயலாகக் கண்டுபிடித்த ஒரு முறைதான் பிற்காலக்கில் பிராய்டுக்குத் தமது மனப்பகுப்பியல் கொள்கையை நிறுவுவதில் உதவியாக இருந்தது. மனவசிய நிலையில் இருக்கும்போது ஹிஸ்டிரியா நோயாளியான ஒரு பெண்மணி தனது பழைய அநுபவங்களைக் கூறியதும் அவ்வாறு கூறியதால் அவளுடைய நோய் குணமாகி வந்ததையும் பிராயர் கவனித்த விஷயத்தைப் பற்றி முன்பே தெரிந்து கொண்டோம். இது பிராய்டுக்குப் பெருந்துணையாக இருந்தது. பிராயர் இந்த ஆராய்ச்சியைத் தொடர்ந்து செய்யவில்லை.
ஆனால் பிராய்டு அம்முறையைக் கையாண்டதோடு அம்முறையைக் கையாளுவதற்கு மனவசியமும் அவசியமில்லை என்று கண்டாரென்பதையும் முன்பே அறிந்திருக்கிறோம்.
மனவசிய நிலையில் நோயாளியை வைப்பதற்குப் பதிலாக மனத்திலே தோன்றும் எண்ணங்களையெல்லாம் தாராளமாகச் சொல்லும்படி செய்யும் 'தடையிலாத் தொடர்முறை' என்பது பிராய்டு வகுத்தது. அதுவே அடிமனத்தில் மறைந்து கிடக்கும் இச்சைகளையும் அநுபவங்களையும் வெளிக் கொண்டு வருவதற்கு நல்ல சாதகமாக அமையலாயிற்று. பிராய்டு இந்த முறையைத் தமது அநுபவத்தின் பயனாக மிகச் சிறப்பாகத் திட்டப்படுத்தினார். இத்துடன் கனவுப் பகுப்பு முதலான வேறு பரிசீலனைகளும் அடிமன இச்சைகளையும், அடிமனத்தில் அழுந்திக்கிடக்கும் அநுபவங்களையும் அறிவதற்கு உதவுகின்றன என்பதையும் அவர் கண்டறிந்தார்.

Comments

Most Popular

மனமும் அதன் விளக்கமும் | கனவின் பொருள் | பெ. தூரன்

ப ல கனவுகள் சிக்கல் நிறைந்திருக்கின்றன; அவற்றில் தோன்றும் நிகழ்ச்சிகள் மேலாகப் பார்க்கும்போது பொருளற்றவைகளாகவும் இருக்கின்றன. கோ. என்பவர் கண்ட ஒரு கனவை இங்கே ஆராய்வோம். “ஏதோ ஒரு பெரிய கோயில். அங்கே நானும் என் நண்பர்கள் சி. வே. மா. ஆகிய மூவரும் சேர்ந்து ஒருவனைக் கொலை செய்தோம். அவனுடைய மூக்கை மாத்திரம் அறுத்துச் சந்தனத்தில் வைத்துச் சாமிக்கு வைத்தோம். பிணம் வெளியிலேயே கிடந்தது. சி. தான் மூக்கை அறுத்தவர். கடவுளைத் தொழுவதற்காகப் பலர் ஒரு மோட்டார்க் காரில் வந்தார்கள். உடனே நான் பிணத்தைத் துரக்கிக் கோபுரத்தின் மேல் வீசினேன். இதை எனது ஆசிரியர் ஒருவர் பார்த்துக் கொண்டார்.” “நான் ஒடி வந்துவிட்டேன். வழியில் என் நண்பர் வீ. யைச் சந்தித்து வேறொருவனிடம் சைக்கிள் வாங்கி இருவரும் ஏறிக்கொண்டு ஊருக்குச் சென்றோம். வழியில் சி. தம் அண்ணனிடம் ஒன்றும் நடக்காதது போல் வந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கொலை செய்துவிட்டு இவர் இவ்வளவு தாராளமாக வெளியில் நடமாடுகிறாரே என்று வியந்தேன்.” "நாங்கள் ஒரு சத்திரத்தில் புகுந்துகொண்டிருந்தோம். ஆனால் சி. வேறு சில நண்பர்களிடம் சாலையில் சென்றுகொண்டிருந்தார்.” ...

மணிபல்லவம் - ஜம்பு கொல பட்டினம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்ககாலத்து நூலாகிய மணிமேகலையிலே, இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப்பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள பழைய பௌத்த நூல்களிலேயும் இலங்கைத்தீவின் வடகோடியில் இருந்த ஜம்புகோல் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. தமிழ் நூலில் கூறப்படும் குறிப்பு களைக் கொண்டும் பாலி மொழி நூல்களில் கூறப்படும் குறிப்புகளைக் கொண்டும் மணிபல்லவமும் ஜம்புகொல பட்டினமும் ஒரே இடம் என்று துணியலாம். பெயர் வேறுபடு வதிலிருந்து இரண்டும் வெவ்வேறிடங்கள் எனக் கருதும்படி இருந்தாலும், இவைகளைப்பற்றிக் கூறப்படும் செய்திகளை உற்றுநோக்கினால், இரண்டும் ஒன்றே என்பது ஐயமற விளங்குகிறது. இதனை ஈண்டு ஆராய்வோம். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலேதான் மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்தது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை கூறுவது காண்க. சோழ நாட்டின் துறைமுகப்பட்டினமாகிய புகார்ப்பட்டினத்தில் இருந்து தெற்கே 30 யோசனை தொலைவில் மணிபல்லவம் இருந்தது (...

எழுத்து ஆக்கம் - மயிலை சீனி. வேங்கடசாமி

பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னே மனிதன் பேசக் கற்றுக்கொண்டான். அஃதாவது, தன் எண்ணங்களைப் பேச்சின் மூலமாகப் பிறருக்குத் தெரிவிக்கக் கற்றுக் கொண்டான். மனிதன் கற்றுக்கொண்ட பேச்சு அவனை மிருகத் தன்மையிலிருந்து மனிதத் தன்மைக்கு உயர்த்திவிட்டது. பின்னும், பல காலம் சென்ற பிறகு மனிதன், தன் எண்ணங் களையும் கருத்துக்களையும், எழுத்து மூலமாகப் பிறருக்குத் தெரிவிக்க முயற்சி செய்தான், முயற்சி செய்து அதில் வெற்றி அடைந்தான். எழுத்துக்களைக் கண்டுபிடித்து அதன் மூலமாகத் தன் கருத்துக்களை மற்றவர்களுக்குத் தெரிவிக்கக் கற்றுக்கொண்ட வித்தையானது, மனிதனை மிக உயர்ந்த நாகரிகத்தை அடையச் செய்துவிட்டது. எழுதப் படிக்கக் கற்றுக்கொள்ளாமல், வெறும் பேச்சோடு மட்டும் நின்று விட்டிருந்தால், இப்போது மனிதன் அடைந்திருக்கிற உயர்ந்த நாகரிக நிலையை அடைந்திருக்க முடியாது. எழுத்தைக் கண்டுபிடித்த ஆதிகாலத்து மனிதர், இப்போது உலகத்திலே வழங்குகிற ஒலி எழுத்துக்களைக் கண்டுபிடிக்கவில்லை. அஃதாவது, தனித்தனியாக ஒவ்வொரு ஒலிக்கும் ஒவ்வொரு எழுத்தைக் கண்டுபிடிக்கவில்லை. உருவங்களைச் சித்திரம் வரைவதுபோல் வரைந்து அவற்றின் மூலமாக அக்காலத்து மனிதர் ...