படம் - பிராய்டும் அவரது நண்பர் கோல்லரும் |
பிராய்டு தமது நான்காம் வயதிலிருந்து ஆஸ்திரியாவின்
தலைநகராகிய வியன்னாவில் வளர்ந்து வந்தார். அவர் பிறந்தது மொரேவியாவில் உள்ள பிரீபர்க்
(Freiberg) என்ற ஊரிலாகும். மொரேவியா இப்பொழுது செக் கோஸ்லோவாக்கியாவில் ஒரு பாகமாக
இருக்கிறது. பிராய்டு ஒரு யூதருக்கு அவருடைய இரண்டாம் மனைவியின் பிள்ளையாகப் பிறந்தார்.
பிராய்டு வியன்னா பல்கலைக்கழகத்தில் வைத்தியத் துறையில் கல்வி பயின்று பட்டம் பெற்றுப்
பிறகு மனித உடம்பிலுள்ள நரம்பு மண்டலத்தைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அவருடைய
ஆராய்ச்சியிலே அவருக்கு நல்ல வெற்றி கிடைக்கக்கூடிய சந்தர்ப்பம் வந்தது. கண்ணில் ரண
சிகிச்சை செய்யவேண்டி நேர்ந்தால் அதில் வலி தெரியாமல் இருப்பதற்காக கொக்கேன் என்னும்
மருந்தைப் பயன்படுத்த முடியும் என்பதை இவர் தமது ஆராய்ச்சியின் மூலம் அநேகமாகக் கண்டுபிடித்துவிட்டார்.
ஆனால் அதைப் பூர்த்திசெய்து பிறருக்கும் எடுத்துக்காட்டி நிரூபிப்பதற்கு முன்பாக இவர்
அந்த ஆராய்ச்சியை விட்டுப் போகும்படி நேரிட்டது. இவருடைய காதலி பல ஆண்டுகளாக வேறொரு
பட்டனத்திலே காத்திருந்தாள். அவளால் மேலும் காத்திருக்க முடியவில்லை போலும். அவள் அவசரமாக
வரும்படி அழைத்ததை மறுக்க முடியாமல் இவர் தமது ஆராய்ச்சியை முடியும் தருணத்தில் விட்டுவிட்டுப்
போய்விட்டார். அந்த ஆராய்ச்சியை இவருடைய நண்பரான கோல்லர் (Koller) முடித்து இவருக்கு
உரித்தான புகழை அவர் சம்பாதித்துக்கொண்டார்.
பிராய்டு தமது காதலியை மணந்துகொண்ட பிறகு
தமது பழைய ஆராய்ச்சிகளில் சில காலம் ஈடுபட்டிருந்தார். ஆனால் பொருளாதார நிலைமை அவ்வாறு
ஆராய்ச்சி செய்வதற்கு இடங்கொடுக்காததால் இவர் நரம்புக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குச்
சிகிச்சை செய்யும் தொழிலை நடத்தலானர்.
நரம்பு மண்டல நோய்களைத் தீர்ப்பதற்கு மேலும்
சிறந்த தகுதிபெற வேண்டுமென்று பிராய்டுக்கு விருப்பம் உண்டாயிற்று. அதனால் இவர்
1885-ல் பாரிஸுக்குச் சென்றார். அந்த சமயத்தில் பாரிஸில் ஷார்க்கோ என்பவர் ஹிஸ்டிரியா
நோயைக் குணமாக்குவதில் பெருங்கீர்த்தி பெற்றிருந்தாரென்று முன்பே கூறினேன். அவரோடு
பிராய்டு ஒராண்டு வேலை செய்தார். ஷார்க்கோ மனவசிய முறையைக் கையாண்டு ஹிஸ்டிரியா நோயாளிகளைக்
குணமாக்குவதைக் கண்டு அம்முறையைப் பாராட்டினார்.
1886-ல் பிராய்டு வியன்னாவுக்குத் திரும்பிவந்து
ஜோசப் பிராயருடன் சேர்ந்து தொழில் நடத்தலானர். பிராயரும் ஹிஸ்டிரியா நோயைக் குணப்படுத்துவதில்
புகழ் வாய்ந்தவர். அவர் தற்செயலாகக் கண்டுபிடித்த ஒரு முறைதான் பிற்காலக்கில் பிராய்டுக்குத்
தமது மனப்பகுப்பியல் கொள்கையை நிறுவுவதில் உதவியாக இருந்தது. மனவசிய நிலையில் இருக்கும்போது
ஹிஸ்டிரியா நோயாளியான ஒரு பெண்மணி தனது பழைய அநுபவங்களைக் கூறியதும் அவ்வாறு கூறியதால்
அவளுடைய நோய் குணமாகி வந்ததையும் பிராயர் கவனித்த விஷயத்தைப் பற்றி முன்பே தெரிந்து
கொண்டோம். இது பிராய்டுக்குப் பெருந்துணையாக இருந்தது. பிராயர் இந்த ஆராய்ச்சியைத்
தொடர்ந்து செய்யவில்லை.
ஆனால் பிராய்டு அம்முறையைக் கையாண்டதோடு
அம்முறையைக் கையாளுவதற்கு மனவசியமும் அவசியமில்லை என்று கண்டாரென்பதையும் முன்பே அறிந்திருக்கிறோம்.
மனவசிய நிலையில் நோயாளியை வைப்பதற்குப் பதிலாக மனத்திலே தோன்றும் எண்ணங்களையெல்லாம் தாராளமாகச் சொல்லும்படி செய்யும் 'தடையிலாத் தொடர்முறை' என்பது பிராய்டு வகுத்தது. அதுவே அடிமனத்தில் மறைந்து கிடக்கும் இச்சைகளையும் அநுபவங்களையும் வெளிக் கொண்டு வருவதற்கு நல்ல சாதகமாக அமையலாயிற்று. பிராய்டு இந்த முறையைத் தமது அநுபவத்தின் பயனாக மிகச் சிறப்பாகத் திட்டப்படுத்தினார். இத்துடன் கனவுப் பகுப்பு முதலான வேறு பரிசீலனைகளும் அடிமன இச்சைகளையும், அடிமனத்தில் அழுந்திக்கிடக்கும் அநுபவங்களையும் அறிவதற்கு உதவுகின்றன என்பதையும் அவர் கண்டறிந்தார்.
Comments
Post a Comment