Skip to main content

சகுண - நிர்குண பக்தி | வினோபா பாவே

Photo Courtesy: Gautam Bajaj / Vinoba Darshan
இராமனும் கிருஷ்ணனும் ஒருவனே. பரதனும் இலட்சுமணனும் போல்தான் உத்தவனும் அர்ஜுனனும். கிருஷ்ணன் இருக்குமிடத்தில் உத்தவன் இருக்கவே செய்கிறான். உத்தவனால் கிருஷ்ணனை விட்டு ஒரு கணமும் பிரிந்திருக்க முடிவதில்லை. அவன் எப்பொழுதும் கிருஷ்ணன் பணிவிடையிலேயே மூழ்கியிருப்பவன். கிருஷ்ணன் இல்லாத பொழுது அவனுக்கு உலகமே இரசமற்றதாய் சாரமில்லாததாய்த் தோன்றும். அர்ஜுனனும் கிருஷ்ணனுக்குத் தோழன். ஆனால் அவன் தொலைவில் அஸ்தினாபுரத்திலிருந்து வந்தான். அர்ஜுனன் கிருஷ்ணனுடைய காரியத்தைச் செய்பவனே. ஆனால் கிருஷ்ணன் துவாரகையிலிருக்க, அஸ்தினாபுரத்திலிருந்து வந்தான். இருவரின் சம்பந்தம் இத்தகையது. கிருஷ்ணனுக்குத் தன் உடலைத் துறத்தல் அவசியமென்று தோன்றிய பொழுது அவன் உத்தவனிடம். இதோ, நான் போகிறேன்என்றான். அதற்கு உத்தவன், “என்னை உடன் அழைத்துப் போகமாட்டீரா? நாம் இருவரும் சேர்ந்தே போவோமேஎன்றான். ஆனால், கிருஷ்ணன் எனக்கு அது பிடித்தமில்லை. சூரியன் தன் ஒளியைத் தீயினிடம் வைத்துவிட்டுப் போவது போல் நான் என் ஒளியை உன்னிடம் விட்டுப்போகின்றேன்என்றான். இவ்வாறு பகவான் இறுதிக் கால ஏற்பாட்டைச் செய்து உத்தவனுக்கு ஞானத்தை அளித்து அனுப்பினார்.
பிறகு யாத்திரையில் உத்தவனுக்கு மைத்திரேய ரிஷியின் மூலம் பகவான் தம் ஊருக்கு (வைகுண்டத்திற்கு)ப் போய்விட்டாரென்று தெரியவருகிறது. ஆனால் அதனால் அவன் மனம் சிறிதும் வருந்தவில்லை. விசேஷமானது ஏதோ நடந்ததாகவே அவனுக்குத் தோன்றவில்லை. குரு இறந்துவிட்டாரென்று சீடன் அழுதான். இருவரும் கற்ற வித்தை பாழாயிற்றுஎன்று சொல்லுவதுண்டே, அந்நிலையில் உத்தவன் இல்லை. பிரிவு நேர்ந்ததாகவே அவன் நினைக்கவில்லை. அவன் தன் ஆயுள் முழுவதும் சகுண உபாசனை செய்தவன். ஆண்டவன் அருகிலேயே இருந்துவந்தவன். ஆனால் இப்பொழுது அவனுக்கு நிர்குணத்தில் இன்பம் தோன்றத் தொடங்கிவிட்டது. இவ்வாறு அவன் நிர்க்குணத்தின் வழியைக் கடக்கவேண்டியதாயிற்று. சகுணம் முதலில், ஆனால் அதை அடுத்தாற்போல் நிர்குணத்தின் படி றியே ஆக வேண்டும். இல்லையேல் பூரணத்துவம் ஏற்படாது.
அர்ஜுனன் நிலையோ இதற்கு நேர்மாறானது. கிருஷ்ணன் அவனை என்ன செய்யச் சொல்லியிருந்தான்? தனக்குப் பிறகு எல்லாப் பெண்டிரையும் பாதுகாக்கும் பொறுப்பை அவன் அர்ஜுனனிடம் ஒப்புவித்திருந்தான். அர்ஜுனன் அஸ்தினாபுரத்தினின்று வந்து துவாரகையிலிருந்து ஸ்ரீ கிருஷ்ணனது ஸ்திரீகளை அழைத்துக்கொண்டு போனான். வழியில் ஹிபொருக்கருகே பஞ்சாபிலிருந்து வந்த திருடர்கள் அவனை வழிப்பறி செய்துவிட்டார்கள். அந்தக் காலத்தில் அவன் ஒருவனே ஆண்மகன் என்று சொல்லப்பட்டவன், தலைசிறந்த வீரனென்று புகழ் பெற்றவன், தோல்வி என்பதையே அறியாதிருந்தது காரணமாய் விஜயன் (வெற்றி வீரன்) என்று பிரசித்தி பெற்றிருந்தவன், சிவனையே நேருக்கு நேராய் நின்று எதிர்த்துப் பணியச் செய்தவன். அதே அர்ஜுனன் ஆஜ்மீருக்கருகில் ஓட்டமாய் ஓடித் தப்பினான், கிருஷ்ணன் போய்விட்டதனால் அவன் மனம் பெரிதும் பாதிக்கப்பட்டுவிட்டது. உயிரே போய்விட்டது போலும் உயிரும் ஆதரவுமற்ற வெற்றுடலைப் போலும் அவன் ஆகிவிட்டான். அதாவது இடையறாது கர்மம் புரிந்துகொண்டு கிருஷ்ணனிடமிருந்து விலகியே இருந்த நிர்குண உபாசகனான அர்ஜுனனுக்கு இறுதியில் இந்தப் பிரிவு தாளமுடியாததாகிவிட்டது. அவனுடைய நிர்குணம் இறுதியில் பிரிவின் மூலம் பீறிட்டுக்கொண்டு வெளிவந்தது. அவனது காமம் அனைத்துமே முடிந்துவிட்டது போல் ஆயிற்று. அவனுடைய நிர்குணத்திற்கு இறுதியில் சகுணத்தின் அனுபவம் ஏற்பட்டது. சகுணம் . நிர்குணத்திற்குப் போகவும் நிர்குணம் சகுணத்திற்கு வரவேண்டியிருக்கிறது என்பது கருத்து. இவ்வாறு இரண்டுமே ஒன்று மற்றதினால் நிறைவுறுகின்றன.
ஆகையால் சகுண உபாசகன், நிர்குண உபாசகன் ஆகிய இருவரிடையில் உள்ள வேற்றுமை என்னவெனச் சொல்ல முயலும் பொழுது அதைச் சொல்லுவது சிரமமாகிவிடுகிறது. சகுணமும் நிர்குணமும் இறுதியில் ஒன்றாகிவிடுகின்றன. பக்தியின் அருவி முதலில் சகுணத்திலிருந்து தோன்றிய போதிலும் இறுதியில் நிர்குணம் வரை ஓடுகிறது. பழைய காலத்தில் நடந்த விஷயம் ஒன்று. நான் வைக்கம் சத்தியாக்ரஹம் பார்க்கப் போயிருந்தேன். மலையாளத்தின் எல்லையில் சங்கராச்சாரியர் பிறந்த ஊர் இருக்கிறது. பூகோளம் பற்றிய இவ்விஷயம் என் நினைவிலிருந்தது. நான் போய்க்கொண்டிருந்த மார்க்கத்தின் பக்கத்திலேயே எங்கோ சங்கராச்சாரியரது 'காலடி' கிராமம் இருக்குமென்று எனக்குத் தோன்றியதால் உடன் வந்த மலையாளியைக் கேட்டேன். அவர், “இங்கிருந்து 10, 12 மைல் தொலைவு இருக்கும். நீங்கள் அங்கே போக வேண்டுமா?” என்று கேட்டார். நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். நான் சத்தியாக்ரஹம் பார்க்கப் போய்க்கொண்டிருந்ததால் எனக்கு வேறெங்கும் போவது உசிதமென்று தோன்றவில்லை. அவ்வாறு செய்தது சரியே என்று எனக்கு இப்பொழுதும் தோன்றுகிறது. ஆனால் இரவில் நான் தூங்கத் தொடங்கிய பொழுது அக்காலடி கிராமமும் சங்கராச்சாரியரது உருவும் மீண்டும் மீண்டும் என்னெதிரில் வந்து சுழன்றுகொண்டிருந்ததால் தூக்கம் கலைந்துபோயிற்று. அந்த அனுபவம் எனக்கு இன்றும் அப்படியே இருந்துகொண்டிருக்கிறது. அந்த ஞானச் சிறப்பும், அவரது அத்தெய்வீக அத்வைத நிஷ்டையும், எதிரில் வியாபித்துள்ள சம்சாரம் அனைத்தும் பொய் என்று முடிவுகட்டும் அசாதாரணமான ஒளி பொருந்திய வைராக்கியமும், அவருடைய கம்பீரமான மொழியும் அவரிடமிருந்து நான் பெற்றுள்ள அளவிலடங்காத உதவியும் எனக்கு அடிக்கடி நினைவுக்கு வந்துகொண்டிருந்தன. இரவில் இப்பாவனைகளெல்லாம் எதிரில் வந்து நின்றன. அப்பொழுது இந்த நிர்குணத்தில் சகுணம் எப்படி நிரம்பி வழிந்துகொண்டிருக்கிறது என்ற அனுபவம் எனக்கு ஏற்பட்டது. நேருக்கு நேராய்ச் சந்தித்திருந்தாலும் அவ்வளவு நேசம் இருந்திராது. நிர்குணத்திலும் சகுணம் பூரணமாய் நிரம்பியே இருக்கிறது. நான் பெரும்பாலும் நண்பர்களுக்கு க்ஷேமங்களை விசாரித்துக் கடிதம் எழுதுவதில்லை. ஆனால் எந்த நண்பருக்கும் கடிதம் எழுதாவிட்டாலும் உள்ளுக்குள் அவர் நினைவு எப்பொழுதும் இருந்துகொண்டேதானிருக்கும். கடிதம் எழுதாதிருப்பினும் அவர் நினைவு உள்ளே பூரணமாய் நிரம்பியிருக்கும். நிர்குணத்தில் இவ்வாறு சகுணம் மறைந்து நிற்கிறது. சகுணம், நிர்குணம் ஆகிய இரண்டும் ஒன்றே. விக்கிரகத்தை எதிரில் வைத்துக்கொண்டு பூஜை செய்தல், வெளிப்படையாய்ச் சேவை செய்தல், உள்ளுக்குள் இடையறாது உலகின் நன்மையைக் கோரியவாறே புறத்தே தெரியும்படி எதையும் செய்யாதிருத்தல் ஆகிய இவ்விரண்டிற்குமுள்ள மதிப்பும் சிறப்பும் ஒன்றே.
(கீதைப் பேருரைகளிலிருந்து. ‘சகுண - நிர்குண பக்தி: இரண்டும் ஒன்றே - சொந்த அனுபவம்’ என்ற தலைப்பில் ‘ஆத்ம ஜோதி’ இதழில் வெளியானது.)

Comments

Most Popular

கு. ப. ராஜகோபாலன் என்கிற முழுமை | க. நா. சுப்ரமண்யம்

கு. ப. ராஜகோபாலனின் கதைகளை , அவை எழுதப்பட்டு சற்றேறக் குறைய ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு இன்று படித்துப் பார்க்கும்போது கூட அவர் லாகவமும் , கதை நடத்தும் திறனும் , உருவ , கருத்து அமைதியுடன் மிகவும் சிறப்பாகவே உள்ளத்தில் தட்டுகின்றன. வாழ்க்கையை முழுப்பார்வையுடன் பார்ப்பது அவர்க்கு மிகவும் சிறிய கதைகளிலும் கூடச் சாத்தியமாக இருந்திருக்கிறது. ஆண் , பெண் உறவுகளை , பால் உணர்ச்சிகளை அப்பட்டமாக , உரக்க , மனத்தையும் கண்ணையும் ஒருங்கே உறுத்துகிற மாதிரிச் சொல்வது இன்று பலருக்கும் கைவந்த கலையாக இருக்கிறது. ஆனால் , அதையே சூக்ஷ்மமாகச் செய்கிற காரியம் , கலையுணர்ச்சியுடன் முழுவதும் சொல்லாமல் சொல்லிவிடுகிற காரியம் கு.ப.ரா . வுக்கு மிகவும் சிறப்பாக கைவந்திருந்ததை இன்று படிக்கும்போதும் உணர முடிகிறது. இந்த மென்மையும் , கலை உணர்ச்சியும் பக்கம் பக்கமாக பச்சையாக எதை எதையோ எழுதுகிற தமிழ் எழுத்தாளர்களுக்கு எட்டாத ஒரு விஷயம். அவர்கள் கு.ப.ரா . விடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். புத்தனுடைய துறவுக்கு அசுவகோஷன் முதல் எத்தனையோ இலக்கியாசிரியர்கள் பலர் காரணங்கள் கண்டு சொல்லிவிட்டார்கள். மூப்பு , நோய் , சாவு...

எழுத்து ஆக்கம் - மயிலை சீனி. வேங்கடசாமி

பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னே மனிதன் பேசக் கற்றுக்கொண்டான். அஃதாவது, தன் எண்ணங்களைப் பேச்சின் மூலமாகப் பிறருக்குத் தெரிவிக்கக் கற்றுக் கொண்டான். மனிதன் கற்றுக்கொண்ட பேச்சு அவனை மிருகத் தன்மையிலிருந்து மனிதத் தன்மைக்கு உயர்த்திவிட்டது. பின்னும், பல காலம் சென்ற பிறகு மனிதன், தன் எண்ணங் களையும் கருத்துக்களையும், எழுத்து மூலமாகப் பிறருக்குத் தெரிவிக்க முயற்சி செய்தான், முயற்சி செய்து அதில் வெற்றி அடைந்தான். எழுத்துக்களைக் கண்டுபிடித்து அதன் மூலமாகத் தன் கருத்துக்களை மற்றவர்களுக்குத் தெரிவிக்கக் கற்றுக்கொண்ட வித்தையானது, மனிதனை மிக உயர்ந்த நாகரிகத்தை அடையச் செய்துவிட்டது. எழுதப் படிக்கக் கற்றுக்கொள்ளாமல், வெறும் பேச்சோடு மட்டும் நின்று விட்டிருந்தால், இப்போது மனிதன் அடைந்திருக்கிற உயர்ந்த நாகரிக நிலையை அடைந்திருக்க முடியாது. எழுத்தைக் கண்டுபிடித்த ஆதிகாலத்து மனிதர், இப்போது உலகத்திலே வழங்குகிற ஒலி எழுத்துக்களைக் கண்டுபிடிக்கவில்லை. அஃதாவது, தனித்தனியாக ஒவ்வொரு ஒலிக்கும் ஒவ்வொரு எழுத்தைக் கண்டுபிடிக்கவில்லை. உருவங்களைச் சித்திரம் வரைவதுபோல் வரைந்து அவற்றின் மூலமாக அக்காலத்து மனிதர் ...

புதுமையும் பித்தமும் - 1 | க. நா. சுப்ரமண்யம்

புதுமைப்பித்தன் கதைகள் எல்லாவற்றையும் ஒரே நூலாக வெளியிட்டுப் பார்க்க வேண்டும் என்கிற ஆசையில் வெளிவருகிற புஸ்தகம் இது. அவர் எழுதிய கதைகளில் மிகச் சிறந்தவையெல்லாம் இதில் அடங்கியிருக்கின்றன. தொண்ணூற்றுச் சொச்சம் கதைகளில் ஒரு முப்பதுக்கும் அதிகமாகவே சிறந்த கதைகளாகவும் , இன்னும் 30 கதைகளுக்கு அதிகமாக நல்ல கதைகளாகவும் , மற்றவை சாதாரண தரத்தில் அமைந்தவை என்றும் பொதுவாகச் சொல்லலாம். இந்தப் புத்தகத்தில் அடங்காமல் விட்டுப்போன புதுமைப்பித்தன் எழுதிய சிறுகதைகள் சில - ஒன்றிரண்டு இருக்கலாம். அதிகம் போனால் நாலைந்தும் இருக்கலாம் - அவை கிடைத்தால் அவற்றையும் மறுபதிப்பில் சேர்த்துக்கொள்வார்கள் பிரசுரகர்த்தாக்கள் என்று நாம் நம்பலாம். சிறுகதைகள் மட்டும் எழுதவில்லை புதுமைப்பித்தன். சில ஓரங்க நாடகங்கள் , மற்றும் இலக்கியப் பொதுக்கட்டுரைகள் , வேளூர் வெ. கந்தசாமிப்பிள்ளை என்ற புனைபெயரில் சில கவிதைகள் , இவை தவிர பல மொழிபெயர்ப்புகள் (அனேகமாகச் சிறுகதைகள் , ‘பிரேத மனிதன்’ என்கிற மேரி ஷெல்லியின் விஞ்ஞான நாவல் , குப்ரினின் ‘யாமா’வில் ஒரு பகுதி. இவற்றை மொழிபெயர்த்தார். அவருக்கு ஆங்கிலம் தவிர வேறு ஐரோப்பிய மொழிகள் த...