Skip to main content

சகுண - நிர்குண பக்தி | வினோபா பாவே

Photo Courtesy: Gautam Bajaj / Vinoba Darshan
இராமனும் கிருஷ்ணனும் ஒருவனே. பரதனும் இலட்சுமணனும் போல்தான் உத்தவனும் அர்ஜுனனும். கிருஷ்ணன் இருக்குமிடத்தில் உத்தவன் இருக்கவே செய்கிறான். உத்தவனால் கிருஷ்ணனை விட்டு ஒரு கணமும் பிரிந்திருக்க முடிவதில்லை. அவன் எப்பொழுதும் கிருஷ்ணன் பணிவிடையிலேயே மூழ்கியிருப்பவன். கிருஷ்ணன் இல்லாத பொழுது அவனுக்கு உலகமே இரசமற்றதாய் சாரமில்லாததாய்த் தோன்றும். அர்ஜுனனும் கிருஷ்ணனுக்குத் தோழன். ஆனால் அவன் தொலைவில் அஸ்தினாபுரத்திலிருந்து வந்தான். அர்ஜுனன் கிருஷ்ணனுடைய காரியத்தைச் செய்பவனே. ஆனால் கிருஷ்ணன் துவாரகையிலிருக்க, அஸ்தினாபுரத்திலிருந்து வந்தான். இருவரின் சம்பந்தம் இத்தகையது. கிருஷ்ணனுக்குத் தன் உடலைத் துறத்தல் அவசியமென்று தோன்றிய பொழுது அவன் உத்தவனிடம். இதோ, நான் போகிறேன்என்றான். அதற்கு உத்தவன், “என்னை உடன் அழைத்துப் போகமாட்டீரா? நாம் இருவரும் சேர்ந்தே போவோமேஎன்றான். ஆனால், கிருஷ்ணன் எனக்கு அது பிடித்தமில்லை. சூரியன் தன் ஒளியைத் தீயினிடம் வைத்துவிட்டுப் போவது போல் நான் என் ஒளியை உன்னிடம் விட்டுப்போகின்றேன்என்றான். இவ்வாறு பகவான் இறுதிக் கால ஏற்பாட்டைச் செய்து உத்தவனுக்கு ஞானத்தை அளித்து அனுப்பினார்.
பிறகு யாத்திரையில் உத்தவனுக்கு மைத்திரேய ரிஷியின் மூலம் பகவான் தம் ஊருக்கு (வைகுண்டத்திற்கு)ப் போய்விட்டாரென்று தெரியவருகிறது. ஆனால் அதனால் அவன் மனம் சிறிதும் வருந்தவில்லை. விசேஷமானது ஏதோ நடந்ததாகவே அவனுக்குத் தோன்றவில்லை. குரு இறந்துவிட்டாரென்று சீடன் அழுதான். இருவரும் கற்ற வித்தை பாழாயிற்றுஎன்று சொல்லுவதுண்டே, அந்நிலையில் உத்தவன் இல்லை. பிரிவு நேர்ந்ததாகவே அவன் நினைக்கவில்லை. அவன் தன் ஆயுள் முழுவதும் சகுண உபாசனை செய்தவன். ஆண்டவன் அருகிலேயே இருந்துவந்தவன். ஆனால் இப்பொழுது அவனுக்கு நிர்குணத்தில் இன்பம் தோன்றத் தொடங்கிவிட்டது. இவ்வாறு அவன் நிர்க்குணத்தின் வழியைக் கடக்கவேண்டியதாயிற்று. சகுணம் முதலில், ஆனால் அதை அடுத்தாற்போல் நிர்குணத்தின் படி றியே ஆக வேண்டும். இல்லையேல் பூரணத்துவம் ஏற்படாது.
அர்ஜுனன் நிலையோ இதற்கு நேர்மாறானது. கிருஷ்ணன் அவனை என்ன செய்யச் சொல்லியிருந்தான்? தனக்குப் பிறகு எல்லாப் பெண்டிரையும் பாதுகாக்கும் பொறுப்பை அவன் அர்ஜுனனிடம் ஒப்புவித்திருந்தான். அர்ஜுனன் அஸ்தினாபுரத்தினின்று வந்து துவாரகையிலிருந்து ஸ்ரீ கிருஷ்ணனது ஸ்திரீகளை அழைத்துக்கொண்டு போனான். வழியில் ஹிபொருக்கருகே பஞ்சாபிலிருந்து வந்த திருடர்கள் அவனை வழிப்பறி செய்துவிட்டார்கள். அந்தக் காலத்தில் அவன் ஒருவனே ஆண்மகன் என்று சொல்லப்பட்டவன், தலைசிறந்த வீரனென்று புகழ் பெற்றவன், தோல்வி என்பதையே அறியாதிருந்தது காரணமாய் விஜயன் (வெற்றி வீரன்) என்று பிரசித்தி பெற்றிருந்தவன், சிவனையே நேருக்கு நேராய் நின்று எதிர்த்துப் பணியச் செய்தவன். அதே அர்ஜுனன் ஆஜ்மீருக்கருகில் ஓட்டமாய் ஓடித் தப்பினான், கிருஷ்ணன் போய்விட்டதனால் அவன் மனம் பெரிதும் பாதிக்கப்பட்டுவிட்டது. உயிரே போய்விட்டது போலும் உயிரும் ஆதரவுமற்ற வெற்றுடலைப் போலும் அவன் ஆகிவிட்டான். அதாவது இடையறாது கர்மம் புரிந்துகொண்டு கிருஷ்ணனிடமிருந்து விலகியே இருந்த நிர்குண உபாசகனான அர்ஜுனனுக்கு இறுதியில் இந்தப் பிரிவு தாளமுடியாததாகிவிட்டது. அவனுடைய நிர்குணம் இறுதியில் பிரிவின் மூலம் பீறிட்டுக்கொண்டு வெளிவந்தது. அவனது காமம் அனைத்துமே முடிந்துவிட்டது போல் ஆயிற்று. அவனுடைய நிர்குணத்திற்கு இறுதியில் சகுணத்தின் அனுபவம் ஏற்பட்டது. சகுணம் . நிர்குணத்திற்குப் போகவும் நிர்குணம் சகுணத்திற்கு வரவேண்டியிருக்கிறது என்பது கருத்து. இவ்வாறு இரண்டுமே ஒன்று மற்றதினால் நிறைவுறுகின்றன.
ஆகையால் சகுண உபாசகன், நிர்குண உபாசகன் ஆகிய இருவரிடையில் உள்ள வேற்றுமை என்னவெனச் சொல்ல முயலும் பொழுது அதைச் சொல்லுவது சிரமமாகிவிடுகிறது. சகுணமும் நிர்குணமும் இறுதியில் ஒன்றாகிவிடுகின்றன. பக்தியின் அருவி முதலில் சகுணத்திலிருந்து தோன்றிய போதிலும் இறுதியில் நிர்குணம் வரை ஓடுகிறது. பழைய காலத்தில் நடந்த விஷயம் ஒன்று. நான் வைக்கம் சத்தியாக்ரஹம் பார்க்கப் போயிருந்தேன். மலையாளத்தின் எல்லையில் சங்கராச்சாரியர் பிறந்த ஊர் இருக்கிறது. பூகோளம் பற்றிய இவ்விஷயம் என் நினைவிலிருந்தது. நான் போய்க்கொண்டிருந்த மார்க்கத்தின் பக்கத்திலேயே எங்கோ சங்கராச்சாரியரது 'காலடி' கிராமம் இருக்குமென்று எனக்குத் தோன்றியதால் உடன் வந்த மலையாளியைக் கேட்டேன். அவர், “இங்கிருந்து 10, 12 மைல் தொலைவு இருக்கும். நீங்கள் அங்கே போக வேண்டுமா?” என்று கேட்டார். நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். நான் சத்தியாக்ரஹம் பார்க்கப் போய்க்கொண்டிருந்ததால் எனக்கு வேறெங்கும் போவது உசிதமென்று தோன்றவில்லை. அவ்வாறு செய்தது சரியே என்று எனக்கு இப்பொழுதும் தோன்றுகிறது. ஆனால் இரவில் நான் தூங்கத் தொடங்கிய பொழுது அக்காலடி கிராமமும் சங்கராச்சாரியரது உருவும் மீண்டும் மீண்டும் என்னெதிரில் வந்து சுழன்றுகொண்டிருந்ததால் தூக்கம் கலைந்துபோயிற்று. அந்த அனுபவம் எனக்கு இன்றும் அப்படியே இருந்துகொண்டிருக்கிறது. அந்த ஞானச் சிறப்பும், அவரது அத்தெய்வீக அத்வைத நிஷ்டையும், எதிரில் வியாபித்துள்ள சம்சாரம் அனைத்தும் பொய் என்று முடிவுகட்டும் அசாதாரணமான ஒளி பொருந்திய வைராக்கியமும், அவருடைய கம்பீரமான மொழியும் அவரிடமிருந்து நான் பெற்றுள்ள அளவிலடங்காத உதவியும் எனக்கு அடிக்கடி நினைவுக்கு வந்துகொண்டிருந்தன. இரவில் இப்பாவனைகளெல்லாம் எதிரில் வந்து நின்றன. அப்பொழுது இந்த நிர்குணத்தில் சகுணம் எப்படி நிரம்பி வழிந்துகொண்டிருக்கிறது என்ற அனுபவம் எனக்கு ஏற்பட்டது. நேருக்கு நேராய்ச் சந்தித்திருந்தாலும் அவ்வளவு நேசம் இருந்திராது. நிர்குணத்திலும் சகுணம் பூரணமாய் நிரம்பியே இருக்கிறது. நான் பெரும்பாலும் நண்பர்களுக்கு க்ஷேமங்களை விசாரித்துக் கடிதம் எழுதுவதில்லை. ஆனால் எந்த நண்பருக்கும் கடிதம் எழுதாவிட்டாலும் உள்ளுக்குள் அவர் நினைவு எப்பொழுதும் இருந்துகொண்டேதானிருக்கும். கடிதம் எழுதாதிருப்பினும் அவர் நினைவு உள்ளே பூரணமாய் நிரம்பியிருக்கும். நிர்குணத்தில் இவ்வாறு சகுணம் மறைந்து நிற்கிறது. சகுணம், நிர்குணம் ஆகிய இரண்டும் ஒன்றே. விக்கிரகத்தை எதிரில் வைத்துக்கொண்டு பூஜை செய்தல், வெளிப்படையாய்ச் சேவை செய்தல், உள்ளுக்குள் இடையறாது உலகின் நன்மையைக் கோரியவாறே புறத்தே தெரியும்படி எதையும் செய்யாதிருத்தல் ஆகிய இவ்விரண்டிற்குமுள்ள மதிப்பும் சிறப்பும் ஒன்றே.
(கீதைப் பேருரைகளிலிருந்து. ‘சகுண - நிர்குண பக்தி: இரண்டும் ஒன்றே - சொந்த அனுபவம்’ என்ற தலைப்பில் ‘ஆத்ம ஜோதி’ இதழில் வெளியானது.)

Comments

Most Popular

மனமும் அதன் விளக்கமும் - மனமெனும் மாயம் | பெ. தூரன்

ம னம் என்பதென்ன? அது எங்கே இருக்கிறது? கை, கால், கண், இதயம் என்றால் உடம்பில் உள்ள உறுப்புகள் என்று உடனே தெரிகிறது. அவைகளுக்கு வடிவம் உண்டு. பருமன் உண்டு. ஆதலால் அவைகளை எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மனம் என்பது எது? அதற்கு வடிவம் உண்டா? பருமன் உண்டா? தொட்டுப் பார்த்து அறிந்துகொள்ள முடியுமா? இவ்வாறு எண்ணிப் பார்த்தால் ஒன்றும் விளங்குவதில்லை. இவ்வாறு எண்ணுவதற்கு அந்த மனமே காரணமாக இருக்கிறதென்று தோன்றுகிறது. ஆனால் அது என்ன என்று மட்டும் எளிதில் அறிந்துகொள்ள முடிகிறதில்லை. மனத்திற்கு உருவமில்லை; கன பரிமாணமும் இல்லை. மனம் என்பது தசை, நரம்பு முதலியவைகளால் ஆக்கப்பட்டதன்று. அது சடப் பொருள் அன்று; அது சூக்குமப் பொருள், சடப் பொருள் என்றால் அது உடம்பைச் சேர்ந்த ஒர் உறுப்பாகிவிடும்; எளிதாக அதை அறிந்துகொள்ளவும் முடியும். சிலர் மூளைதான் மனம் என்று தவறாகக் கருதுகிறார்கள். மூளை என்பது உடம்போடு சேர்ந்த ஒரு பருப்பொருளான உறுப்பு. அது மனம் அல்ல. சூக்குமப் பொருளாக மனம் இருக்கிறதென்று மட்டும் நமக்குப் புலனாகிறது. அந்த மனந்தான் ஆசைகள், எண்ணங்கள், நோக்கங்கள், நம்பிக்கைகள் முதலியவற்றிற்கு இடமாயிரு...

மனமும் அதன் விளக்கமும் | கனவின் பொருள் | பெ. தூரன்

ப ல கனவுகள் சிக்கல் நிறைந்திருக்கின்றன; அவற்றில் தோன்றும் நிகழ்ச்சிகள் மேலாகப் பார்க்கும்போது பொருளற்றவைகளாகவும் இருக்கின்றன. கோ. என்பவர் கண்ட ஒரு கனவை இங்கே ஆராய்வோம். “ஏதோ ஒரு பெரிய கோயில். அங்கே நானும் என் நண்பர்கள் சி. வே. மா. ஆகிய மூவரும் சேர்ந்து ஒருவனைக் கொலை செய்தோம். அவனுடைய மூக்கை மாத்திரம் அறுத்துச் சந்தனத்தில் வைத்துச் சாமிக்கு வைத்தோம். பிணம் வெளியிலேயே கிடந்தது. சி. தான் மூக்கை அறுத்தவர். கடவுளைத் தொழுவதற்காகப் பலர் ஒரு மோட்டார்க் காரில் வந்தார்கள். உடனே நான் பிணத்தைத் துரக்கிக் கோபுரத்தின் மேல் வீசினேன். இதை எனது ஆசிரியர் ஒருவர் பார்த்துக் கொண்டார்.” “நான் ஒடி வந்துவிட்டேன். வழியில் என் நண்பர் வீ. யைச் சந்தித்து வேறொருவனிடம் சைக்கிள் வாங்கி இருவரும் ஏறிக்கொண்டு ஊருக்குச் சென்றோம். வழியில் சி. தம் அண்ணனிடம் ஒன்றும் நடக்காதது போல் வந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கொலை செய்துவிட்டு இவர் இவ்வளவு தாராளமாக வெளியில் நடமாடுகிறாரே என்று வியந்தேன்.” "நாங்கள் ஒரு சத்திரத்தில் புகுந்துகொண்டிருந்தோம். ஆனால் சி. வேறு சில நண்பர்களிடம் சாலையில் சென்றுகொண்டிருந்தார்.” ...

தமிழில் வசனநடை | க. நா. சுப்ரமண்யம்

எல்லா மொழிகளிலுமே இலக்கிய ரீதியாகக் கவனிக்கும்போது கவிதை என்பதை ஒட்டிப் பின்னர்தான் வசன நடை என்பது எழுந்திருக்கிறது என்பது வெளிப்படை . தமிழும் அதற்கு விலக்கல்ல . தமிழ்க் கவிதை கி . மு . ஐந்தாயிரத்தில் தோன்றியது என்று வைத்துக்கொண்டால் , கவிதை தோன்றி ஆறாயிரத்து எழுநூற்றிருபது வருஷங்களுக்குப் பிறகுதான் வசன நடை தோற்றிற்று . தமிழ்க் கவிதை தோன்றியது கி . பி . மூன்றாம் நூற்றாண்டை ஒட்டியே என்று ஏற்றுக்கொண்டால் , வசனம் தோன்றியது ஒரு ஆயிரத்தி நானூறு வருஷங்களுக்குப் பிறகு என்றுதான் சொல்ல வேண்டும் . நான் இந்த இரண்டாவது காலவரையே நியாயமானது என்று எண்ணுபவன் . எஸ் . வையாபுரிப் பிள்ளை அவர்களின் ஆராய்ச்சிகளும் இதையே வற்புறுத்துகின்றன என்று தான் சொல்லவேண்டும் . உரை என்று சொல்லப்படுவதும் வசனமும் ஒன்றுதான் என்று அபிப்பிராயம் தெரிவித்துக்கொண்டிருப்பதில் சாரமில்லை . உரை இருந்திருக்கிறது . தமிழர்கள் ஊமைகள் அல்ல , ஆரம்ப காலத்திலிருந்தே உரையாடிக்கொண்டுதான் வந்திருக்கிறார்கள் என்று சொல்வது ஹாஸ்யமாகப் பொருத்தமாக இருக்கும் . உ...