Skip to main content

அடிமனம் | அடிமனம் வகுத்த வாய்க்கால் | பெ. தூரன்


சில பெற்றோர்கள் குழந்தைகளிடம் அதிகமாக அன்பு காட்டுவதில்லை. குழந்தைகளிடம் அன்பிருந்தாலும் சாதாரணமாக அதை வெளிக்குக் காட்டுவதில்லை. ஆனால் குழந்தைகள் நோய்வாய்ப்பட்டால் அப்பொழுது அவற்றினிடம் விசேஷமான அன்பும் கவனமும் செலுத்துவார்கள். நோய் வந்துவிட்டதே என்று பெரிதும் கவலைப்படுவார்கள். இதைக் கண்டு ஒரு சில குழந்தைகள் அந்த அன்பையும் கவனத்தையும் பெறுவதற்காகவே நோயாகப் படுத்துவிடுவதுண்டு. குழந்தை தெரிந்தே அவ்வாறு செய்வதாகக் கருத வேண்டியதில்லை. எப்படியோ அந்த நிலைமை உண்டாகுமாறு இந்த மாய மனம் செய்துவிடுகிறது.
சிலருக்கு எதிர்பாராத ஒரு துரதிஷ்டம் அல்லது துன்பம் வந்துவிடுகிறது. அவர்களில் ஒரு சிலர் ஏதாவது ஒரு துறையில் தங்கள் மனத்தை முழுவதும் செலுத்தி அந்தத் துன்பத்தை மெதுவாக மறக்கிறார்கள். ஒருவர் சமூக சேவையிலே ஈடுபடலாம்; ஒருவர் கலைத் துறையிலே இறங்கலாம்; ஒருவர் ஒரு பெரிய தொழில் முறையிலே செல்லலாம். இவ்வாறு ஏதாவது ஒரு துறையில் சென்று தங்கள் துன்பத்தை மறக்கிறார்கள். மற்றும் சிலருக்கு இவ்வாறு ஒன்றும் செய்ய முடிகிறதில்லை. துன்பத்தை மறக்கவும் முடியாமல் அதை எதிர்த்துப் போராடி உண்மையை உணர்ந்து துணிவோடு நிற்கவும் முடியாமல் அவர்கள் தடுமாறுகிருர்கள். இப்படிப்பட்டவர்களிடந்தான் மனக்கோளாறுகள் தோன்றுகின்றன.
வேறொரு வகையில் மனக் கோளாறுகள் தோன்றுவதையும் நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டும். மனத்திலே ஏதாவதொரு இச்சை தோன்றுகின்றது என்று வைத்துக்கொள்வோம். அது இழிந்ததாக இருக்கலாம் அல்லது சமூகம் ஏற்காததாக இருக்கலாம். அதே சமயத்தில் அந்த இச்சையை எதிர்த்து வேறொரு சக்தி மனத்தில் தோன்றுகிறது. இரண்டிற்கும் நனவு மனத்திலேயே போராட்டம் நடைபெறுகிறது. அந்த இச்சைப்படி நடக்கக்கூடாது; அது இழிந்தது என்கிற சக்தி வலுவடைந்து விடுகிறதென்று வைத்துக்கொள்வோம். அப்பொழுது அந்த இச்சையின் வலுக்குறைந்து மறைந்துபோகிறது. இவ்விதம்தான் சாதாரணமாக வாழ்க்கையில் பெரும்பாலும் நடைபெறுகிறது.
இந்தச் சமயத்திலே பிராய்டு மனத்தை எவ்வாறு பகுத்து நோக்குகிறார் என்பதைச் சற்று விரிவாக நாம் தெரிந்து கொள்ளுவது நல்லது. நனவு மனம், நனவடி மனம், நனவிலிமனம் என்று மனத்தைப் பிரிப்பது ஒரு வகை. இன்னொரு வகையான பிரிவினையை படம் விளக்குகிறது.
குழந்தை பிறக்கின்றபோது அதற்கு இயல்பூக்கமாக அமைந்துள்ள சில உந்தல்களும் ஆசைகளுமே இருக்கின்றன. இவைகளெல்லாம் குழந்தைக்கு ஏதாவது ஒருவகையில் இன்பங்கொடுக்கக்கூடியனவாகவே அமைந்தவை. அதாவது குழந்தையின் மனம் பெரும்பாலும் இன்பம் தரும் செயல்களைத் தூண்டும் உந்தல்களைக் கொண்டதாகவே முதலில் அமைந்திருக்கிறது என்று பிராய்டு கூறுகிறார். இதற்கு இத் (Id) என்று பெயர். இது நனவிலி மனப்பாகமுமாகும். இதுதான் லிபிடோவின் நிலைக்களம். இங்குதான் இயல்பூக்கங்களும், இச்சைகளும் கூத்தடிக்கின்றன. இங்கே இன்பம் என்ற தத்துவமே ஆட்சி புரிகின்றது. இதற்கு நியாய அநியாயம் தெரியாது. இதற்குள்ளேதான் அடக்கப்பட்ட இச்சைகள் வந்து சேர்கின்றன. ஆனால் வாழ்க்கை என்பது வெறும் இன்பம் நாடும் செயல்களாகவே இருக்க முடியாது என்று விரைவில் குழந்தை தெரிந்துகொள்ளத் தொடங்குகிறது. தாய் தந்தையரின் நடத்தையும், சூழ்நிலை அனுபவங்களும் இந்த உணர்வு பிறப்பதற்கு உதவியாக நிற்கின்றன. இவ்வாறு உணர்வு பிறக்கப் பிறக்கக் குழந்தை தனது இன்பத்தையே நாடுவதைச் சிறிது சிறிதாக விட்டுக்கொடுத்து சமூக ஒழுங்குக்கு உட்படுவதற்குத் தயாராகிறது. அதன் காரணமாக இத் என்னும் மனப்பகுதியில் தனது இச்சைகளையே நாடும் பகுதி ஒன்றும், சமூக ஒழுங்குகளின் வலிமையால் தோன்றும் ஒரு பகுதியுமாக இரண்டு பிரிவுகள் தோன்றுகின்றன. இந்தப் புதிய பகுதியே அகம் (Ego) என்பது. ஆனால் இது இத் என்பதிலிருந்து முற்றிலும் தனிப்பட்டிருப்பதில்லை. இதன் அடிப்பகுதி இத்துடன் கலந்திருக்கிறது. இதன் ஒரு பகுதி நனவு நிலையோடும் மற்றப்பகுதி நனவிலி நிலையோடும் தொடர்புடையது என்றும் கூறலாம். இதிலிருந்துதான் அடக்கப்பட்ட இச்சைகள் இத்துக்குச் செல்கின்றன. இச்சையானது தூய்மையடைந்து சமூகத்திற்கு ஏற்றதான உந்தலாக மாறுவதும் இங்கேதான். இவ்வாறு இழிந்த இச்சைகள் தூய்மையடைவதை உயர்மடை மாற்றம் என்று கூறுவார்கள். இயல்பான உந்தல்கள் அதாவது இயல்பூக்கங்கள் இத்திலிருந்து முக்கியமாக வேலை செய்வதுபோல புலக்காட்சி (Perception) அல்லது புலன் உணர்வு அகத்திலிருந்து முக்கியமான வேலை செய்கிறது. இது நன்னெறியைப் பின்பற்ற முயல்கிறது என்று கூறலாம். ஆனால் தூங்கிப்போவதும் உண்டு. அகம் மூன்று விதமான சக்திகளால் கட்டுப்பட்டுக் கிடக்கிறது. வெளியுலகம் அல்லது சமுதாயத்திற்கு அது கட்டுப்பட வேண்டும். அதீத அகத்தின் (Super Ego) ஆணையையும் கவனிக்க வேண்டும்; அதே சமயத்தில் இத்திலிருந்து கூத்தாடும் லிபிடோவின் ஆதிக்கத்திற்கும் உட்பட வேண்டும்.
இத்திலிருந்து கிளம்பும் உந்தல்களையும் இச்சைகளையும் திருப்திப்படுத்த இந்த அகம் தக்க சமயம் பார்த்துக்கொண்டிருக்கும்; தீமையேற்படாத முறையிலே இந்தத் திருப்தியுண்டாக்குவதற்கு அது முயலும். அப்படிச் செய்யாமல் வேறு சில சமயங்களிலே இத்தின் இச்சைகளை விட்டொழிக்கும்படியோ அல்லது அவற்றை மாற்றியமைத்துக்கொள்ளும்படியோ தூண்டும்; அல்லது அந்த இச்சைகளைத் திருப்தி செய்யும் காலத்தைத் தள்ளிப்போடவாவது முயலும்.
இத்துக்கும் அகத்திற்கும் இடையே போராட்டம் நிகழும். அகத்தால் அடக்கப்பட்ட இச்சை இத்தில் அமிழும்போதுதான் சிக்கலும் மனக்கோளாறும் ஏற்படக் காரணமாகின்றது.
அதீத அகம் என்பது அகத்தினின்று தோன்றியதாகும். இது பெரும்பாலும் நனவிலி நிலையிலிருந்து வேலை செய்கிறது. இதற்கு அகத்தின் மேல் ஆதிக்கம் செலுத்தும் வல்லமையுண்டு. இது அவ்வப்போது அகத்தினிடமுள்ள குறைகளைக் கண்டு இடித்துக் கூறுகிறது. அதீத அகத்தை மனச்சான்று என்று கூறலாம். இது சமூகம் வகுக்கின்ற ஒழுக்க முறையை ஏற்றுக்கொண்டு அகத்தை அதற்கேற்றவாறு நன்னெறியில் நிறுத்த முயல்கின்றது. அகம் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றபோதுதான் அடக்கப்பட்ட இச்சைகள் இத்துக்குச் சென்று பலவித மனக்கோளாறுகளுக்குக் காரணமாகின்றன.
இங்கு நாம் அடக்கலுக்கும் ஒடுக்கலுக்கும் (Suppression) உள்ள வித்தியாசத்தை நன்கு மனத்திற் கொள்ள வேண்டும். அடக்கல் என்பது நனவிலி நிலையில் நடப்பது; அடக்கப்பட்ட இச்சை இத்துக்குச் சென்று கோளாறுகளை உண்டாக்கக் காரணமாக இருக்கும். ஆனால் ஒடுக்கல் என்பது நனவு நிலையில் நடப்பது. என்னென்னவோ ஆசைகள் நம்மை அடிக்கடி பீடிக்கத் தொடங்குகின்றன; அவற்றை நாம் ஒடுக்க வேண்டியிருக்கிறது. இது நியாயமானதும் இயல்பானதுமான செயலாகும். இப்படி ஒடுக்குவதால் எவ்விதத் தீங்கும் விளைவதில்லை. நாகரிகமான ஒரு சமூகத்தில் வாழும் ஒருவனுக்கு இது அவசியமுமாகும்; இதனால் அவன் நன்மையே அடைகிறான்; சமூகமும் அமைதியோடு இருக்கின்றது.

Comments

Most Popular

மனமும் அதன் விளக்கமும் - மனமெனும் மாயம் | பெ. தூரன்

ம னம் என்பதென்ன? அது எங்கே இருக்கிறது? கை, கால், கண், இதயம் என்றால் உடம்பில் உள்ள உறுப்புகள் என்று உடனே தெரிகிறது. அவைகளுக்கு வடிவம் உண்டு. பருமன் உண்டு. ஆதலால் அவைகளை எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மனம் என்பது எது? அதற்கு வடிவம் உண்டா? பருமன் உண்டா? தொட்டுப் பார்த்து அறிந்துகொள்ள முடியுமா? இவ்வாறு எண்ணிப் பார்த்தால் ஒன்றும் விளங்குவதில்லை. இவ்வாறு எண்ணுவதற்கு அந்த மனமே காரணமாக இருக்கிறதென்று தோன்றுகிறது. ஆனால் அது என்ன என்று மட்டும் எளிதில் அறிந்துகொள்ள முடிகிறதில்லை. மனத்திற்கு உருவமில்லை; கன பரிமாணமும் இல்லை. மனம் என்பது தசை, நரம்பு முதலியவைகளால் ஆக்கப்பட்டதன்று. அது சடப் பொருள் அன்று; அது சூக்குமப் பொருள், சடப் பொருள் என்றால் அது உடம்பைச் சேர்ந்த ஒர் உறுப்பாகிவிடும்; எளிதாக அதை அறிந்துகொள்ளவும் முடியும். சிலர் மூளைதான் மனம் என்று தவறாகக் கருதுகிறார்கள். மூளை என்பது உடம்போடு சேர்ந்த ஒரு பருப்பொருளான உறுப்பு. அது மனம் அல்ல. சூக்குமப் பொருளாக மனம் இருக்கிறதென்று மட்டும் நமக்குப் புலனாகிறது. அந்த மனந்தான் ஆசைகள், எண்ணங்கள், நோக்கங்கள், நம்பிக்கைகள் முதலியவற்றிற்கு இடமாயிரு

எழுத்தாளர்களும் மின்னூல்களும்

இது குறைந்தது இரண்டு மின்னூல்களாவது வெளியிட்டுள்ள தமிழ் எழுத்தாளர்களின் அகரவரிசை தொகுப்பு. அவ்வப்போது புதிய இணைப்புகள் சேர்க்கப்படுகின்றன. இணைப்புகளில் அந்தந்த எழுத்தாளர்களின் இனி வரும் நூல்களும் தொகுக்கப்படும். கடைசியாக செப்டம்பர் 03, 2020 அன்று புதுப்பிக்கப்பட்டது.) அசோகமித்திரன் https://amzn.to/3cIKLFC |  https://amzn.to/3avBTS4 |  https://amzn.to/2zqxsLz அம்பை  https://amzn.to/3eIsOsl அருட்செல்வப்பேரரசன்  https://amzn.to/3eOosQr அருண் நரசிம்மன்  https://amzn.to/2VRkUV4 அழ. வள்ளியப்பா  https://amzn.to/2ZcvybO அழகிய பெரியவன்  https://cutt.ly/Lft1hhC அழகுநிலா  https://amzn.to/37bgFc5 அனோஜன் பாலகிருஷ்ணன்  https://amzn.to/2KvZM1n அஜயன் பாலா  https://amzn.to/2xJFC1e அ. கா. பெருமாள்  https://cutt.ly/pfs2w5j அ. வெண்ணிலா  https://cutt.ly/9fhYybK ஆரணி குப்புசாமி முதலியார்  https://amzn.to/2V1OWWD ஆ. இரா. வேங்கடாசலபதி  https://amzn.to/2RZQrD0 ஆ. சிவசுப்பிரமணியன் https://amzn.to/2xHVVvp ஆத்மார்த்தி  https://amzn.to/3eOnx2r ஆனந்த்  https://cutt.ly/LaTpEs7 ஆர். சிவகும

மொழிபெயர்ப்பு | க. நா. சுப்ரமண்யம்

மொழிபெயர்ப்பு என்பதைச் சாதாரணமாக ஒரு கலை என்று சொல்வது வழக்கமில்லை. கலையோ , தொழிலோ - மொழிபெயர்ப்பு என்பது இலக்கியத்திலே ஒரு தனித் துறை. அது மிகவும் அவசியமானது. இலக்கிய வளர்ச்சியின் அடிப்படையான காரியங்களிலே மொழிபெயர்ப்பும் ஒன்று. மொழிபெயர்ப்புகள் அதிகம் இல்லாத காலத்திலே இலக்கிய வளர்ச்சி வேகமாக நடைபெறுவதில்லை என்பது சரித்திரபூர்வமாக நமக்குத் தெரிகிற உண்மை. தமிழிலே மொழிபெயர்ப்புகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தோன்றிவிட்டன. கம்பனை மொழிபெயர்ப்பு நூல் என்று சொல்லமுடியாது ; ஆனால் திருக்குறளின் ஒரு பகுதி மொழிபெயர்ப்பு நூல் என்று திடமாகச் சொல்லலாம். மனு , பரதர் , கெளடில்யர் முதலியவர்களின் சம்ஸ்கிருத சூத்திரங்களைக் குறளாசிரியர் மொழிபெயர்த்துத் தமிழாக்கித் தந்திருக்கிறார். தமிழாக்கி என்று சொல்வதிலே ஒரு விஷயம் அடங்கியிருக்கிறது. தமிழிலே வெளிவருகிற மொழிபெயர்ப்புகள் தமிழாகத்தான் இருக்கவேண்டுமா என்று என்னை யாராவது கேட்டால் , வேண்டாம் இருக்கக்கூடாது என்றே நான் பதில் சொல்லுவேன். எந்த மொழிபெயர்ப்புமே முதல் நூல் போலாகிவிடக்கூடாது - முழுதும் தமிழாகிவிடக்கூடாது. மொழிபெயர்ப்பாசிரியன் முத