Skip to main content

காந்தி யார்? - 1 | வெ. சாமிநாத சர்மா


எழுபத்திரண்டு சதுர மைல் விஸ்தீரணமுள்ள வாழ்க்கையென்னும் யுத்த மைதானத்தில், அன்பு, அஞ்சாமை என்ற இரண்டு ஆயுதங்கள் தரித்துக் கொண்டு, முகத்திலே புன்சிரிப்புத் தவழ, கம்பீரமாகத் தலை நிமிர்ந்து நிற்கிற ஒரு போர் வீரனாகக் காட்சியளிக்கிறார் காந்தியடிகள் இன்று நமக்கு. இந்த எழுபத்திரண்டு வருஷகாலத்தில் அவர் எத்தனையோ போர்களை நடத்தியிருக்கிறார்; எத்தனையோ பேரைத் தாக்கியிருக்கிறார்; எத்தனையோ பேரால் தாக்கப்பட்டுமிருக்கிறார். ஆனால், அவர் தமது முகத்தில் சலிப்புக் காட்டியதோ, அகத்தில் வன்மம் கொண்டதோ கிடையாது. யுத்தத்தில் சகஜமாக ஏற்படக்கூடிய அநேக காயங்களை அவர் பட்டிருக் கிறார். ஆனால், எல்லாம் மார்பிலேதான். அவருடைய முதுகிலே ஒரு வடுவைக்கூடக் காண முடியாது. அப்படியே, எதிரிகளைத் தாக்குகிறபோதும், அவர்களுடைய மார்பிலேதான் காயமுண்டு பண்ணினாரே தவிர, அவர்களுடைய முதுகுப்பக்கம் ஓர் அடிகூடக் கொடுத்ததில்லை. மற்றும், சத்துருக்களின் தனிமையையோ, அசதியையோ, அசட்டு அகங்காரத்தையோ அவர், தமது வெற்றிக்குச் சாதகமாக உபயோகித்துக்கொண்டதில்லை. எதிரிகளுடைய பலஹீனத்தின் மீது வெற்றிக்கொடி நாட்டிவிடக்கூடிய சந்தர்ப்பங்கள் எத்தனையோ அவருக்குக் கிடைத்தன. ஆனால், அவர் சந்தர்ப்பவாதியாக இருக்கவில்லை; இருக்க மறுத்துவிட்டார். ஒரு யுத்த வீரனுடைய லட்சணத்தினின்று அணுவளவு பிறழவும் அவர் சம்மதிக்கவில்லை. இப்படிப்பட்ட யுத்த வீரனாகிய அவர், இன்று, தமது ஜீவன யாத்திரையின் எழுபத்து மூன்றாவது மைற்கல்லை யடைந்திருக்கிறார். அவரை நாம் வாழ்த்தி வணங்குவோமாக.

காந்தியடிகளின் வாழ்க்கையைச் சதுர மைல் கணக்கில்தான் மேலே நாம் வருணித்திருக்கிறோம். ஏன் தெரியுமா? அவருடைய வாழ்க்கை , எவ்வளவுக்கெவ்வளவு நீளமாகிக்கொண்டு போகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு அகலமாகியும் கொண்டுபோகிறதினால்தான். உலகத்திலே தோன்றிய மகான்கள் பலருடைய வாழ்க்கை வரலாறுகளை நாம் பரிசீலனை செய்து பார்த்தோமானால், ஒன்று நீளமாகவாவது இருக்கும்; அல்லது அகலமாகவாவது இருக்கும். இரண்டும் ஒன்று சேர்ந்திருக்கக் காண்பது அரிது. சங்கராச்சாரியாரென்ன, விவேகானந்தரென்ன, இப்படிப்பட்டவர்களுடைய வாழ்க்கையெல்லாம் நீளமான வாழ்க்கையல்ல; அகன்ற வாழ்க்கை. ஆனால், புத்தர் பிரானுடைய வாழ்க்கை, நீளமும் அகலமும் சேர்ந்த சதுர வாழ்க்கை. அது போலவே காந்தியடிகளுடைய வாழ்க்கையும் சதுர வாழ்க்கையாகப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. எப்பொழுதுமே, யாருடைய சதுர வாழ்க்கையும், தனித்துவமும் மகத்துவமும் பொருந்தியதாகவே இருக்கும். இன்று காந்தியடிகளுடைய திருநாமம் உலகத்தில் எதிரொலியுடன் முழங்கிக்கொண்டிருக்கிறதென்று சொன்னால், அஃது அவருடைய புனித வாழ்க்கைக்குத்தானே தவிர, அவருடைய தளர்ந்த உடலுக்காகவல்ல; குறுகிய உருவத்திற்காகவல்ல. அவர், மகா மேதாவியுமல்ல, அவரைவிடச் சிறந்த அறிஞர்கள், உலகத்தின் நானா பாகங்களிலும் ஆயிரக்கணக்காக இருக்கிறார்கள். அல்லது அவருடைய உறுதியான கடவுள் நம்பிக்கை, அவரை இந்த உன்னத பதவியில் கொண்டு வைத்திருக்கிறதென்றும் சொல்லமுடியாது. அறுபத்து மூன்று நாயன்மார்களையும், சூர தாஸையும், கபீரையும், மீராபாயையும் இவர்கள் போன்ற நூற்றுக்கணக்கான பேரையும் கண்ட பாரத தேசத்திற்கு, காந்தியடிகளின் கடவுள் நம்பிக்கை ஒரு புதுமையுமல்ல; விசேஷமுமல்ல. எத்தனையோ பக்தர்களைப் போல் அவர் ஒருவர். அவ்வளவுதான்.

இப்படி அவர் ஒரு சாதாரண மனிதராகக் காணப்பட்ட போதிலும், உலகத்திலுள்ள அறிஞர்களெல்லோரும் அவருக்கு வணக்கஞ் செலுத்துகிறார்கள்; பக்தர்களெல்லோரும் அவரைப் பூஜிக்கிறார்கள்; பயில்வான்களெல்லோரும் அவர் முன்னே, நூற்றுப் பன்னிரண்டு பவுண்ட் நிறையுள்ள அவர் முன்னே, கைகட்டி நிற்கிறார்கள்; அழகுத் தெய்வங்களெல்லாம், அவருடைய 'பொக்கை வாய்'க்கு முன்னே வாய்பொத்தி நிற்கின்றன; நாவலர்களெல்லோரும் அவருடைய மௌனத்திற்கு முன்னே நாவடங்கி நிற்கிறார்கள்; ஆனால், அவர் நாவசைந்தால் நாடு அசைகிறது. இவை மட்டுமா? மேற்படி அறிஞர்களும், பக்தர்களும், பயில்வான்களும், காவலர்களும், இன்னோரன்ன பலரும் அவருடைய திருமுன்னர், தங்கள் தங்கள் கலைத்திறமை, தொழில் திறமை முதலியவைகளைக் காட்டி அவருடைய ஆசீர்வாதத்தைப் பெறப் போட்டி போடுகிறார்கள்; அந்த ஆசீர்வாதத்தைக்கொண்டு பிரகாசிக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள்; அந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுப் பிரகாசிக்கிற பிரகாசந்தான் உண்மையான பிரகாசமென்று, சாசுவதமான பிரகாசமென்று நம்புகிறார்கள். இஃதென்ன வேடிக்கை!

1927-ஆம் வருஷம், மகாத்மா காந்தி, தேக அசெளக்கியங் காரணமாக, பெங்களூருக்கு வந்திருக்கிறார். 'குமாரா பார்க்' என்ற மாளிகையில் மைசூர் அரசாங்கத்தார் அவருக்கு வேண்டிய வசதிகள் செய்து கொடுத்து உபசரித்து வருகிறார்கள். ஒருநாள் காலை நேரம். அடிகளார், தமது அறையில் கட்டிலொன்றின் மீது சாய்ந்தவண்ணம் படுத்திருக்கிறார். அவருடைய புகழொளியைக் கண்டு வெட்கப்பட்டோ என்னவோ, சூரியன், ஜன்னல் வழியாக அவரை எட்டி எட்டிப் பார்க்கிறான். அடிகளின் முகம் மலர்ந்திருக்கிறது. அப்பொழுது ஆறரை அடி உயர முள்ள ஒரு கம்பீர உருவம் உள்ளே நுழைந்தது. நரைத்த தாடி மீசை. முற்காலத்து முனிவர்கள் போன்ற முகத்தோற்றம். அந்த முகத்தில் அறிவும் சாந்தமும் குலவிக்கொண்டிருக்கின்றன. உள்ளே நுழைந்த அந்த வடிவம், சாய்ந்து படுத்திருந்த உருவத்தை மூன்று முறை வலம் வந்தது. பின்னர் சாஷ்டாங்கமாக நமஸ்காரஞ் செய்துவிட்டு, கூப்பிய கையோடு, பக்தி மேலீட்டால் கண்களில் தாரை தாரையாக நீர் பெருகிக்கொண்டிருக்க, இமய பர்வதம்போல் அசையாது நின்றுகொண்டிருந்தது. ஆஜானுபாகுவான அந்த உருவத்தைப் பார்த்துக் காந்தியடிகள் ''என்னை இப்படிப் பரிகசிக்கலாமா? தங்களுடைய அறிவுக் கோயிலின் நுழைவாயிலில் கையேந்தி நிற்கும் ஒரு பிட்சுகன் அல்லவா நான்?'' என்றார். ''அப்படிச் சொல்லக் கூடாது; தாங்கள் ஒரு சமுத்திரம். அதிலிருந்து தெறிக்கும் ஒரு திவலை நான். ஆத்ம சக்திக்கு முன்னே அறிவு எம்மாத்திரம்? சூரியன் முன்னே மின்மினிப்பூச்சி மாதிரி. என்னைத் தூய்மைப்படுத்திக்கொள்ள நான் இங்கு வந்தேனேயன்றி, தங்களைத் தொந்திரவு படுத்துவதற்காகவல்ல" என்றது வேத ஒலியின் எதிரொலி போன்ற அந்தக் குரல். இந்த வார்த்தையைக் கேட்ட மாத்திரத்தில், காந்தியடிகளின் கண்களில் நீர் ததும்பியது. வணங்கி நின்ற அந்த உருவமும், மெளனமாக விடைபெற்றுக்கொண்டு, அறையை விட்டு வெளியே சென்று விட்டது. இந்தக் காட்சியை நாம் எத்தனை தரம் நமது அகக்கண்ணால் தரிசித்தாலும் அத்தனை தரமும் நமது உள்ளத்தில் 'ஊறாத அமிழ்து ஊறி' நம்மைப் பரவசப் படுத்துகின்றது. வணங்கிய அவர் யார்? அப்பொழுது மைசூர் சர்வகலாசாலையின் 'வைஸ் சான்ஸல்ராக' இருந்த ஸர் வ்ருஜேந்திர நாத சீலர், உலக அறிஞர்களிலே ஒருவர். சகல கலைகளிலும் அவருக்குள்ள புலமையைப் பாராட்டு முகத்தான் அவரைச் சாதாரணமாக 'நடக்கும் அகராதி' என்று நண்பர்கள் அழைப்பார்கள். ஸர் ஜகதிஸ சந்திர போஸ், ஸர் பிரபுல்ல சந்திர ரே, ஸர் அஷுடோஷ் முக்கர்ஜி முதலிய அறிவு அரசர்களெல்லோரும், வ்ருஜேந்திர நாத சீலரை, தங்களுடைய அறிவுச் சக்ரவர்த்தியாகப் போற்றி வந்தார்கள். ஆனால், இந்த அறிவுச் சக்ரவர்த்தி, அந்தச் சத்தியாத்மாவுக்கு முன்னே அடங்கி ஒடுங்கி நின்றார். இப்படி இந்திய நாட்டு அறிஞர்கள் மட்டுமல்ல, மேனாட்டு அறிஞர்களான ஆல்பர்ட் ஈன்ஸ்டீன், கில்பர்ட் முர்ரே, சி.இ.எம். ஜோட், பெர்ரி டேல் கீத், கவுண்ட் ஹெர்மான் கெய்ஸர்லிங் முதலிய பலரும் அவருக்குத் தங்களாலான காணிக்கையைச் செலுத்திய வண்ணமிருக்கிறார்கள். இஃதென்ன புதிர்!

(அறிவோம்...)

Comments

Most Popular

இராவணன் இலங்கை - மயிலை சீனி. வேங்கடசாமி

தமிழ் நாட்டை அடுத்துள்ள இலங்கைத் தீவினை, இராவணன் ஆண்ட இலங்கை என்று மக்கள் கருதி வந்தனர்; வருகின்றனர். ஆழ்வார்களும் ஏனையோரும் இலங்கையைத் தென் இலங்கை என்று கூறியிருக்கிறபடியால், சிங்களத் தீவாகிய இலங்கைதான் இராவணன் ஆண்ட இலங்கை என மக்கள் தவறாகக் கருதி வருகின்றனர் போலும். 'தென் இலங்கை' என்பதற்குத் தமிழ் நாட்டிற்குத் தெற்கிலுள்ள இலங்கை என்று பொருள் கூறுவது சரித்திரத்துக்கு முரண்பட்டது. தென் இலங்கை என்பதற்கு, 'அயோத்திக்குத் தெற்கிலுள்ள இலங்கை' என்று பொருள் கொள்வதுதான் சரித்திரத்திற்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்தமானது. ஆனால், தமிழ் நாட்டை அடுத்துள்ள சிங்களத் தீவாகிய இலங்கைதான் இராவணன் ஆண்ட இலங்கை என்று பல நூற்றாண்டுகளாகக் கருதப்பட்டு வருகிறது. இத்தவறான கருத்து சங்க நூல்களிலும் இடம் பெற்றுவிட்டது. சங்க நூல்கள் கூறுவன தமிழ் நாட்டிலுள்ள கோடிக்கரை (தனுஷ்கோடி) என்னும் கடற்கரையருகில், ஓர் ஆலமரத்தின்கீழ் இராமர் தங்கி, சீதையை மீட்கும் வழியை வானர வீரர்களுடன் கலந்து யோசித்தார் என்று கடுவன் மள்ளனார் என்னும் புலவர் கூறுகிறார். "வென்வேற் கவுரியர் தொன்முது கோடி, முழங்கிரும் பெளவம...

மனமும் அதன் விளக்கமும் | கனவின் பொருள் | பெ. தூரன்

ப ல கனவுகள் சிக்கல் நிறைந்திருக்கின்றன; அவற்றில் தோன்றும் நிகழ்ச்சிகள் மேலாகப் பார்க்கும்போது பொருளற்றவைகளாகவும் இருக்கின்றன. கோ. என்பவர் கண்ட ஒரு கனவை இங்கே ஆராய்வோம். “ஏதோ ஒரு பெரிய கோயில். அங்கே நானும் என் நண்பர்கள் சி. வே. மா. ஆகிய மூவரும் சேர்ந்து ஒருவனைக் கொலை செய்தோம். அவனுடைய மூக்கை மாத்திரம் அறுத்துச் சந்தனத்தில் வைத்துச் சாமிக்கு வைத்தோம். பிணம் வெளியிலேயே கிடந்தது. சி. தான் மூக்கை அறுத்தவர். கடவுளைத் தொழுவதற்காகப் பலர் ஒரு மோட்டார்க் காரில் வந்தார்கள். உடனே நான் பிணத்தைத் துரக்கிக் கோபுரத்தின் மேல் வீசினேன். இதை எனது ஆசிரியர் ஒருவர் பார்த்துக் கொண்டார்.” “நான் ஒடி வந்துவிட்டேன். வழியில் என் நண்பர் வீ. யைச் சந்தித்து வேறொருவனிடம் சைக்கிள் வாங்கி இருவரும் ஏறிக்கொண்டு ஊருக்குச் சென்றோம். வழியில் சி. தம் அண்ணனிடம் ஒன்றும் நடக்காதது போல் வந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கொலை செய்துவிட்டு இவர் இவ்வளவு தாராளமாக வெளியில் நடமாடுகிறாரே என்று வியந்தேன்.” "நாங்கள் ஒரு சத்திரத்தில் புகுந்துகொண்டிருந்தோம். ஆனால் சி. வேறு சில நண்பர்களிடம் சாலையில் சென்றுகொண்டிருந்தார்.” ...

இலக்கிய விமரிசனம் - சில சிந்தனைகள் | க. நா. சுப்ரமண்யம்

எனக்கு இலக்கிய விமரிசனம் செய்வதிலே அவ்வளவாக நம்பிக்கை கிடையாது . இலக்கியத் துறைகளிலே சிலருக்குச் சில துறைகளில்தான் ஈடுபாடிருக்க முடியும் . எனக்குச் சிறுகதை , நாடகம் , நாவல் , கதை என்கிற துறைகளிலே ஈடுபாடு உண்டு . விமரிசனம் , கட்டுரை போன்ற துறைகளில் அவ்வளவாக ஈடுபாடு கிடையாதுதான் . எனினும் ஒரு இருபத்தைந்து வருஷங்களாகவே நான் இலக்கிய விமரிசனம் செய்துகொண்டு வரவேண்டியதாக இருந்திருக்கிறது . இஷ்டமில்லாமலேதான் நான் இலக்கிய விமரிசனம் செய்து கொண்டு வருகிறேன் - தவிர்க்க முடியாத நிர்ப்பந்தத்தினால் . சில சமயம் நான் ஆழந்தெரியாமல் காலை விட்டுவிடுவதும் உண்டு - ஆனால் நான் சொல்வதெல்லாவற்றையும் என்னளவில் உண்மையென்று நம்பித்தான் சொல்கிறேன் . என்னளவில் உண்மைதான் . அதனால் உங்களுக்கும் உண்மையாகத்தானே இருக்கவேண்டும் ? இலக்கிய விமரிசனத்தின் அவசியத்தைப்பற்றிப் பலரும் சொல்லிவிட்டார்கள் . அவசியம் என்று ஏற்றுக்கொள்ளுபவர்களும்கூட இன்று தமிழில் இலக்கியம் சரியானபடி வளர்ச்சியடையாத தோஷத்தினால் இலக்கிய விமரிசனத்துக்கு அவ்வளவாக அவசியமில்லை ...