Skip to main content

மனமும் அதன் விளக்கமும் | கிலி | பெ. தூரன்

ரு நாள் இரவு எட்டு மணியிருக்கும். புதிதாக வந்த நண்பரொருவரோடு வெளித் திண்ணையிலமர்ந்து உரையாடிக்கொண்டிருந்தேன். சந்தித்துப் பல ஆண்டுகளாகிவிட்டபடியால் அவர் குதுாகலத்தோடு தமது வாழ்க்கையைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். அவர் முகத்திலே மகிழ்ச்சி பொங்கிக்கொண்டிருந்தது.
அது கார் காலம். வானத்திற்குப் போர்வையிட்டது போல எங்கும் கருமேகக் கூட்டம். திடீரென்று இடியின் பெருமுழக்கம் கேட்டது. மின்னல் பளிச்சிட்டது. அது வரைக்கும் சிரித்துப் பேசிக்கொண்டிருந்த நண்பர் இடிக்குரலைக் கேட்டு அலறி நடுங்கலானர். இடியோசை கேட்கும் ஒவ்வொரு தடவையும் அவர் துள்ளியெழுந்தார். மருண்டு மருண்டு அச்சத்தோடு சுற்றுமுற்றும் பார்த்தார். எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. இடியிடிப்பதைக் கண்டு அவர் இப்படி அஞ்சுவானேன்; கார்காலத்திலே இடியும் மின்னலும் இயல்புதானே என்று நான் உள்ளுக்குள்ளேயே எண்ணிக்கொண்டிருந்தேன்.
“வீட்டிற்குள்ளே போய்விடலாமா?” என்று அந்த நண்பர் விரைவாகக் கேட்டுக்கொண்டே எழுந்து நடந்தார். வீட்டிற்குள்ளே சென்று அமர்ந்த பிறகும் அவருடைய பேரச்சம் தணியவில்லை. இடிக்குரல் கேட்கும் போதெல்லாம் அவர் திடுக்கிட்டெழுந்தார்.
“கார்காலத்திலே எங்கள் ஊரில் இப்படி இடியிடிப்பதுண்டு. ஆனால் எங்கேயாவது இடி விழுந்ததாகவே காணோம். சும்மா வெறும் உருட்டலும் முழக்கமும்தான்” என்று மெதுவாக நான் கூறினேன்.
என் பேச்சு அவருடைய உள்ளத்திலே அமைதியை உண்டாக்கவில்லை, வீண் அச்சங்கொண்டு அவர் தொல்லைபட்டுக்கொண்டிருந்தார். “எனக்கென்னவோ இடியிடிப்பதைக் கேட்டால் ஒரே பயமாக இருக்கிறது" என்று அவர் நெற்றி வியர்வையைத் துடைத்துக்கொண்டே கூறினார்.
அந்த அச்சத்திற்கு அவரால் ஒரு காரணமும் கூறமுடியவில்லை; "என்னவோ அச்சமாக இருக்கிறது" என்று சொல்லிவிட்டுச் சுருண்டு படுத்துக்கொண்டார். விரிப்பை எடுத்துப் போர்த்துக் கொள்ளவும் செய்தார்.
"இப்படி இழுத்துப் போர்த்துக்கொண்டால் இடி விழாதோ?” என்று கேலியாகக் கேட்டேன். அவர் பதில் பேசவேயில்லை. இவரைப் போல வீண் அச்சங்கொள்கின்றவர்கள் பலருண்டு. சிலருக்குப் பூனையைக் கண்டால் ஒரே நடுக்கம். சிலருக்கு இருட்டைக் கண்டால் ஒரே நடுக்கம்; கோழியைக் கண்டு அலறி ஓடுபவர்களும் உண்டு. ஏன் அவ்வாறு அச்சங்கொள்ளுகிறார்கள் என்று கேட்டால் காரணம் அவர்களுக்கே தெரியாது. சொல்லமுடியாத பேரச்சம் ஏனோ உண்டாகிறது.
சிங்கத்தையோ புலியையோ கண்டால் பொதுவாக அனைவருக்கும் அச்சம் உண்டாகும். அவை கொடியவை என்ற காரணத்தினால் அஞ்சுகிறோம். அதை நாம் புரிந்துகொள்ள முடியும். அது தற்காப்பு உணர்ச்சியால் பிறக்கிறது. ஆனால், கோழியைக் கண்டாலும் மின்னலைக் கண்டாலும் உண்டாகின்ற அச்சந்தான், விந்தையாக இருக்கிறது. இருட்டிலே தற்காப்புணர்ச்சியினால் ஓரளவு எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்ற எண்ணம் உண்டாக வேண்டுமே ஒழிய, பேரச்சம் ஏற்பட வேண்டியதில்லை. இருட்டிலே சாதாரணமாகப் பலர் நடமாடுகின்றார்கள். அதனல் தீங்கு ஏற்படுவதில்லை. அவ்வாறு சாதாரணமாக அச்சமடைய வேண்டாதவற்றைக் கண்டு காரணமின்றி ஏற்படும் பேரச்சத்தை ஒரு வகையான கிலி (Phobia) என்று உளவியலறிஞர்கள் கூறுகிறார்கள்.
பல ஆண்டுகளுக்கு முன், சிறு வயதில் ஏற்பட்ட ஆழ்ந்த உள்ளக் கிளர்ச்சிதான் இதுபோன்ற கிலிக்குக் காரணமாக இருக்கிறது. அம்மனக் கிளர்ச்சியும், அது எதனால் உண்டானதென்பதும் மறந்து போய்விடும். ஆனால், அதன் விளைவாகத் தோன்றிய கிலி மட்டும் நிலைத்திருக்கும். என்னுடன் கல்லூரியில் படித்த ஒரு மாணவன் காற்று சற்று வேகமாக அடித்தால் கிலியடைவான். அதற்குக் காரணம் அவன் சிறுவனாக இருந்தபொழுது தனது சொந்த ஊராகிய நெல்லூரில் வீசிய பெரும் புயலையும் அதன் காரணமாக விளைந்த உயிர்ச் சேதத்தையும் கண்டு அஞ்சியதே என்று பின்னால் தெரிந்துகொண்டேன். இதுபோலவே ஒவ்வொரு வகையான கிலிக்கும் ஏதாவது காரணமிருக்கும். இயல்பாக எழுகின்ற ஆசைகள் நிறைவேறாமல் போவதாலும், அடிப்படையான உள்ளக் கிளர்ச்சிகளிலே தடுமாற்ற மேற்படுவதாலும் கிலி பிறப்பதுண்டு.
என்னிடம் படித்த மாணவன் ஒருவனுக்குச் சுமார் 12 வயதிருக்கும். அவன் இருட்டறைக்குள் செல்லவேமாட்டான். அவனைக் கேலி செய்யவேண்டுமெனச் சில மாணவர்கள் ஒரு நாள் சூழ்ச்சி செய்தார்கள். ஓர் அறைக்குள்ளே போய் ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்துவரும்படி அவனை ஏவினர்கள். அவன் உள்ளே சென்றதும் மின்சார விளக்கைச் சட்டென்று அணைத்துவிட்டார்கள். அவன் வீரிட்டு அலறிக்கொண்டு வெளியே ஓடி வந்தான். எல்லாருக்கும் அது விளையாட்டாக இருந்தாலும் அவனுக்கு அது ஒரு பெரிய கிலியாக இருந்தது. பிறகு அவனை நிதானமாக ஆராய்ந்து பார்த்ததில் குழந்தையாக இருந்தபோது இருட்டறையில் பேயிருப்பதாக யாரோ கூறி அச்சமுறுத்தியதுதான் அந்தக் கிலிக்குக் காரணமென்று தெரியவந்தது.
பிராணிகளைக் கண்டு ஏற்படும் கிலிக்கு சிக்மண்ட் பிராய்டு வேறொரு காரணமும் கூறுகிறார். பெற்றோரிடம் குழந்தைகளுக்குண்டாகும் அச்ச உணர்ச்சியானது விலங்குகளிடம் அக்குழந்தைகளுக்குக் கிலியாக மாறுகிறதாம். “விலங்குகளைக் கண்டு பிறக்கும் கிலிகளில் பலவற்றை ஆராய்ந்தபோது அவை பெற்றோரிடமுள்ள அச்சத்தால் பிறந்தவை எனத் தெரியவந்தது” என அவர் கூறுகிறார்.
பொதுவாக நோக்கும்போது நிலைமைக்கும் அனுபவத்திற்கும் ஏற்றவாறு பல வகையான கிலிகள் பிறக்கின்றன. மூடப்பட்டுள்ள இடத்தைக் கண்டு கிலி, திறந்த வெளியில் கிலி, செங்குத்தான இடக் கிலி, நெருப்புக் கிலி, இருட்டுக் கிலி, தூசு பட்டு நோய் பிடிக்கும் எனக் கிலி, பூனைக் கிலி, அச்சத்தைப் பற்றிய கிலி என்பன போன்ற பல கிலிகளால் மக்களில் பலர் வருந்துவதை நாம் காணலாம். பரபரப்பும் மன அதிர்ச்சிகளும் நிறைந்த இக்கால வாழ்க்கையிலே பலர் பல வகைப்பட்ட கிலிகளால் பீடிக்கப்பட்டிருக்கின்றனர்.
அவ்வாறு கிலி பிடித்து இடர்ப்படுவது முட்டாள்தனம் என்று கூறுவதாலும் அக்கிலிக்கு ஒரு காரணமும் இல்லையென்று எடுத்துக் காட்டுவதாலும் அதைப் போக்கிவிட முடியாது. இருட்டறையைக் கண்டு கிலி அடைபவனை அதற்குள்ளேயே வலுக்கட்டாயமாக இருக்கச் செய்து அதில் ஒரு தீங்கும் இல்லையெனக் காண்பித்து அக் கிலியைப் போக்கலாமெனச் சிலர் முயல்கின்றனர். அவ்வாறு செய்வதால் கிலி மறைவதே இல்லை.
அக்கிலியைப் போக்குவதற்கு ஒரே ஒரு வழிதானுண்டு. பொதுவாகக் கிலி பிடிப்பதற்கு இளமையில் நடந்த ஏதாவது ஒரு நிகழ்ச்சியோ அனுபவமோ காரணமாக இருக்குமென்று முன்பே கூறினேன். அந்நிகழ்ச்சியையும் நிலைமையையும், அனுபவத்தையும் மறுபடியும் நினைவிற்குக் கொண்டு வரும்படி செய்ய வேண்டும். மறை மனத்திலே அழுந்திக் கிடக்கும் அனுபவம் வாய்ந்த உளவியலறிஞரின் உதவியால் அவற்றை நனவு மனத்திற்குக் கொண்டுவந்துவிடலாம். அவ்வாறு கொண்டுவந்து அன்றடைந்த உள்ளக் கிளர்ச்சியைத் திரும்பவும் உணரும்படி செய்து விட்டால் அக்கிலி தானாகவே நீங்கிவிடும். கிலியென்பது காரணமின்றி ஏற்படும் ஒரு பேரச்சம். பொதுவாக அது ஒரு ஆழ்ந்த உள்ளக் கிளர்ச்சியால் உண்டாவது. அதைப் போக்குவதற்கு மனநோய் சிகிச்சை வல்லுனர்களே தகுதி வாய்ந்தவர்கள்.

Comments

Most Popular

மணிபல்லவம் - ஜம்பு கொல பட்டினம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்ககாலத்து நூலாகிய மணிமேகலையிலே, இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப்பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள பழைய பௌத்த நூல்களிலேயும் இலங்கைத்தீவின் வடகோடியில் இருந்த ஜம்புகோல் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. தமிழ் நூலில் கூறப்படும் குறிப்பு களைக் கொண்டும் பாலி மொழி நூல்களில் கூறப்படும் குறிப்புகளைக் கொண்டும் மணிபல்லவமும் ஜம்புகொல பட்டினமும் ஒரே இடம் என்று துணியலாம். பெயர் வேறுபடு வதிலிருந்து இரண்டும் வெவ்வேறிடங்கள் எனக் கருதும்படி இருந்தாலும், இவைகளைப்பற்றிக் கூறப்படும் செய்திகளை உற்றுநோக்கினால், இரண்டும் ஒன்றே என்பது ஐயமற விளங்குகிறது. இதனை ஈண்டு ஆராய்வோம். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலேதான் மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்தது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை கூறுவது காண்க. சோழ நாட்டின் துறைமுகப்பட்டினமாகிய புகார்ப்பட்டினத்தில் இருந்து தெற்கே 30 யோசனை தொலைவில் மணிபல்லவம் இருந்தது (

உறையூர் மறைந்த வரலாறு - மயிலை சீனி. வேங்கடசாமி

ஊர்களும் நகரங்களும் சிற்சில காரணங்களால் அழிந்து படுவதுண்டு. எரிமலைகளாலும், ஆறுகளாலும், மண்காற்றி னாலும், கடற்பெருக்காலும் ஊர்கள் அழிகின்றன. இவ்வாறு அழிந்துபோன ஊர்கள் பலப்பல. கி.பி. முதலாம் நூற்றாண்டிலே கிரேக்க நாட்டிலே இருந்த பாம்பி என்னும் நகரம், வெசூவியஸ் என்னும் எரிமலை கக்கிய நெருப்பினாலும் சாம்பலினாலும் மூடுண்டு அழிந்துவிட்டது. அழிந்துபோன அந்நகரத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் தோண்டியபோது, புதையுண்ட வீதிகளையும், மனைகளையும், மக்களின் எலும்புக் கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். சிந்து நதிக்கரையிலே இருந்த ஹரப்பா, மொகஞ்சதரோ என்னும் நகரங்கள் வெள்ளப் பெருக்கினால் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்துவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன்னர் அவ்விடங்களை அகழ்ந்து பார்த்தபோது, அக் காலத்துக் கட்டடங்களையும், தெருக்களையும், பாண்டங் களையும், எலும்புக்கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். புதுச்சேரிக்குத் தெற்கே பத்து மைல் தொலைவில் உள்ள அரிக்கமேடு என்னும் கடற்கரைப் பட்டினம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தமிழ் நாட்டில் பேர்பெற்ற துறைமுகமாக இருந்தது. யவனர் முதலிய வெ

குலாப்ஜான் காதல் | புதுமைப்பித்தன்

‘ காதலாவது உருளைக்கிழங்காவது ’ - சி . சுப்பிரமணிய பாரதி நான் ஆராய்ச்சிப் பிரியன் . அதிலும் தர்க்கரீதியாக புத்தியை வசீகரிக்கக்கூடிய ஆராய்ச்சியென்றால் , அதுதான் எனது தெய்வம் . கம்பனுடைய காவியங்கள் முதல் , நாணயச் செலாவணி , தீண்டாதார் ஆலயப் பிரவேசம் ஈறாக , எல்லாம் தர்க்க முறையில் அடைபட்டு ஒத்து இருந்தால்தான் எனது கொள்கை . இல்லாவிடில் அதற்கும் நமக்கும் வெகுதூரம் . இந்தக் காதல் விஷயத்தை நன்றாக ஆராய்ந்து கவனித்ததில் , சாதாரணமாக அல்ல , அபரிமிதமாக , காவியங்கள் , நாவல்கள் என்ற கற்பனைப் பிரதேசங்களில்தான் விளைகின்றன . இல்லாவிட்டால் அவை நமது பொருள்காட்சி சாலைகளைத் தப்பி இருக்க முடியுமா ? அகப்பொருள் இலக்கணக்காரர் கூறுவதைப் பார்த்தால் அசல் , கலப்பில்லாத பழம் பெருந்தமிழ் மக்களுடனிருந்து அவர்கள் தங்களுடைய ஏடுகளுடன் கடலால் கொள்ளப்பட்ட பொழுது , அவர்களுடன் சங்கமமாயிற்றென்று நினைக்க ஏதுவிருக்கிறது . ஆழ்ந்து யோசிக்குந்தோறும் , தர்க்க ஆராய்ச்சியை வழிபடும் எனக்கு , அதன் கூற்றுக்கள் வெகு வினோதமாகவே காணப்படுகின்றன . எனது ஆர