Skip to main content

மனமும் அதன் விளக்கமும் | நமக்குப் பெருமை | பெ. தூரன்


ண்மையிலே நான் ஒரு திரைப்படக் காட்சியைப் பார்த்தேன். மறைமனத்திலே ஏற்பட்டுள்ள சிக்கலை அடிப்படையாகக் கொண்டு, அந்தப் படம் உருவாகியிருக்கிறது. உள்ளத்தைக் கவரும் கதை அது. அதிலே ஓரிடத்திலே ஒன்றுக்குப் பின் ஒன்றாக எத்தனையோ கதவுகள் திறக்கப் படுவது போல ஒரு காட்சியைக் கற்பனை செய்திருக்கிறார்கள். முதலில் ஒரே கதவுதான் முன்னால் தோன்றுகிறது; அது திறக்கவில்லை. உள்ளே மற்றொரு கதவு. அது திறந்ததும் மற்றொரு கதவு. இப்படியே கதவுகள் ஒன்றுக்குப் பின் ஒன்றாகத் தோன்றுகின்றன. அவற்றிற்கு முடிவே இல்லை போலக் காண்கிறது.
மனத்தின் பல நிலைகளையும், ஆழத்தையும் இவ்வாறு உருவப்படுத்தி அந்தக் காட்சியிலே காட்டியிருக்கிறார்கள். மனம் அத்தனை மாயமானது. அதன் விந்தைச் செயல்களையெல்லாம் பொதுப்படையாக இதுவரை ஆராய்ந்தோம். மனம் என்றால் என்ன என்று திட்டமாக எடுத்துச் சொல்ல முடியாவிட்டாலும் அதன் செயல்களை ஒருவாறு தெரிந்துகொள்ள முடிந்தது. அதன் முக்கிய பகுதிகளாகிய நனவு மனம், நனவிலி மனம், நனவடி மனம் (வெளி மனம், மறை மனம், இடை மனம்) எவ்வாறு வேலை செய்கின்றன என்றும் பார்த்தோம். பகுதிகள் என்று கூறும்போது உண்மையில் இப்படிப் பகுதிகள் இல்லை என்றும் மனம் முழுமையானது என்றும் கண்டோம்.
இந்த மனத்தின் பெருமையைப் பற்றியும், மாயத்தைப் பற்றியும் எடுத்து விளக்கிக் கவிஞர்கள் கவிதை புனைந்திருக்கிறார்கள்; அடியார்கள் பாடியிருக்கிறார்கள். மனக்குரங்கு என்றுகூடப் பழித்துக் கூறியிருக்கிறார்கள். தத்துவப் பெரியார்களும் மனத்தை அடக்க முடியவில்லையே என்று வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார்கள்.
மனத்தினலேயே மனிதனுக்குத் தனிப்பட்ட பெருமை ஏற்பட்டிருக்கிறது. மனம் என்பதொன்றில்லாவிட்டால் அவனுக்குப் பெருமையே இல்லையென்று கூறலாம். அதன் உதவியாலேயே அவன் எத்தனையோ வியப்புக்குரிய செயல்களையெல்லாம் சாதித்திருக்கிறான். ஆனால், அது அவனைக் குழியில் தள்ளிவிடவும் செய்யும். மறை மனத்திலே மறைந்து கிடக்கும் இச்சைகள் பகுத்தறிவையும், மனச் சான்றையும் ஏமாற்றிவிட்டு மேலெழுந்து ஆதிக்கம் செய்யத் தொடங்கிவிடலாம். அதை உணர்ந்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும். நமது செயல்களையும், நோக்கங்களையும் அடிக்கடி அலசி ஆராய்ந்து மதிப்பிடப் பழகிக்கொள்ள வேண்டும். இது எளிதன்று; ஏனெனில் அதற்கும் அந்த மனத்தையே நம்ப வேண்டியிருக்கிறது. அதற்குத்தான் மனத்தைப் பற்றிய அறிவு தேவைப்படுகின்றது.
மனத்தின் தன்மைகளை உணர்ந்துகொண்டு அதைச் சரிவரப் பயன்படுத்தி நடந்தால் வாழ்க்கையிலே வெற்றியடையலாம். கனவும், பகற்கனவும் மனத்தின் தன்மைகளை அறிய உதவுகின்றன. இயல் பூக்கங்கள், உள்ளக் கிளர்ச்சிகள், நினைவாற்றல், கற்பனை ஆற்றல் ஆகியவற்றின் இயல்புகள், பயன்கள் ஆகியவற்றை அறிந்துகொள்வதாலும் மனத்தின் தன்மைகள் தெளிவாகின்றன.
மனத்தைப் பற்றி இன்னும் எவ்வளவோ விரிவான ஆராய்ச்சிகள் செய்யலாம். அவற்றிற்கெல்லாம் இங்கு இடமில்லை. பொதுப்படையாக எல்லாருக்கும் தெரிய வேண்டிய அடிப்படையான சில முக்கிய விஷயங்களையே இங்கு எடுத்துக்கூற விரும்பினேன்.
பிறக்கும்போது மனம் என்று ஒன்று தனிப்பட இல்லை என்று சிலர் கூறுகிறார்கள். சில மறிவினைகளை மட்டும் உடையவனாக மனிதன் உலகத்திலே தோன்றுகிறான்; அனுபவங்களின் மூலமாக மனம் சிறிது சிறிதாக உருவாகிறது என்பது அவர்களுடைய வாதம்.
இக் கொள்கைக்கு எதிராக வேறொரு கொள்கையுண்டு. மனம் என்பது பல வகையான திறமைகளுடன் பிறப்பிலே இருக்கிறது என்றும் அது அனுபவத்தால் மலர்ச்சியடைகிறது என்றும் அக்கொள்கையினர் கூறுகின்றனர்.
ஒவ்வொரு செங்கல்லாக அடுக்கிக் கட்டி ஒரு கட்டடம் உருவானது போல மனம் உருவாகிறது என்பது ஒரு கொள்கை.
ஆலமரத்தின் சிறு விதைக்குள்ளேயே அந்தப் பெரிய மரம் முழுவதும் மறைந்திருந்து பின்னால் வெளிப்படுவதுபோல மனம் மலர்ச்சியடைகிறது என்பது வேறொரு கொள்கை.
ஏதாவதொரு உயிரினத்தின் மறிவினைகளெல்லாம் ஒரே தன்மையில் அமைந்திருக்கின்றன என்று கண்டோம். மனித இடத்து மறிவினைகளும் அவ்வாறுதானிருக்கின்றன. அவ்வாறிருக்கும்போது ஒரே விதமான சூழ்நிலையில் ஒரே விதமான அனுபவங்களைப் பெறும் குழந்தைகள் வெவ்வேறு விதமாகச் செயல் புரிவதற்கும், மனப்போக்குக் கொண்டிருப்பதற்கும் காரணம் என்ன? வெவ்வேறு வகையான இயல்புகளுடன் மனம் அமைந்திராவிடில் வேறுவேறான செயல்கள் நிகழ முடியாதென்பது இக்கொள்கையாரின் முடிபாகும். பெற்றோர்களின் வழியாக வரும் பாரம்பரிய அமைப்பினால் வெவ்வேறான இயல்புகள் காணப்படுகின்றன என்றும், இவற்றிற்கெல்லாம் மூல காரணமாக முற்பிறவி வினைகள் நிற்கின்றன என்ற தத்துவக் கருத்தும் கூறப்படுகின்றன. பல பிறப்புகள் உண்டு என்ற கொள்கையை ஏற்றுக்கொள்ளாதவர்களும் உண்டு.
இவ்வாறு அடிப்படைக் கருத்துகளில் மாறுபாடுகள் இருந்தாலும் குழந்தையின் ஐந்து அல்லது ஏழு வயதிற்குள்ளாகவே அதன் பிற்கால வாழ்க்கையின் போக்கிற்கு வேண்டிய பொதுவான மன அமைப்பு ஏற்பட்டு விடுகிறது என்பதில் பெரும்பாலும் கருத்தொருமை காணப்படுகிறது. மனம் எவ்வாறு உருவாகியுள்ளது என்பதை முடிவாக அறுதியிட்டுக் கூற முடியாத நிலைமையிலும் இக்கருத்தை ஏற்றுக்கொள்வதில் தடையொன்றுமில்லை. அனுபவங்களின் மூலமும் சூழ்நிலையின் மூலமும் மனம் என்பது சிறிது சிறிதாகச் சேர்ந்து புதிதாக உருவெடுத்தாலும் அல்லது அவற்றின் மூலமாக மனம் மலர்ச்சியடைந்தாலும் விளைவொன்றுதான். ஆதலால் மனத்தின் தோற்றத்தைப் பற்றிய விவாதங்களில் தலையிடாமல் அதன் தன்மைகளை அறிந்துகொள்ள முயல்வது இன்றியமையாததாகும்.
மனம் நமக்குத் தனிப்பெருமை என்று மீண்டும் கூறுகிறேன். மற்ற உயிரினங்களுக்கு மனம் உண்டு என்று வைத்துக்கொண்டாலும் அது மனிதனுக்குள்ள மனத்தைப்போல அத்தனை நுட்பமாகத் தொழில் செய்வதில்லை. மனிதனுடைய மனம் அத்தனை நுட்பமானது; பரிணாம ஏணியிலே ஏறி ஏறி, நுண்மை பெற்றுப் பெற்று அது விரிவடைந்திருக்கிறது என்று கூறலாம். மனிதனுடைய மனம் ஒரு பெரிய விந்தை. அதை முற்றிலும் அறிந்துகொள்வது மிகவும் அரிது. அறிந்துகொண்ட அளவிற்கு நல்லது.


Click On the image to buy the ebook
மின் நூலாக...

Comments

Most Popular

புதுமையும் பித்தமும் - 3 | க. நா. சுப்ரமண்யம்

புதுமையும் பித்தமும் - 2 | க. நா. சுப்ரமண்யம் இந்தப் பகுதியில் பொதுவாக இலக்கியத்தைப் பற்றியும் , சிறப்பாகத் தமிழ்ச் சிறுகதை பற்றியும் புதுமைப்பித்தன் சொல்லிப் போயிருக்கிற சில விஷயங்களைப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. அவர் படைப்புகளில் ஆட்சி செலுத்திய கொள்கைகள் , சித்தாந்தங்கள் முதலியவற்றையும் , அவருக்கிருந்த இலக்கிய நோக்கம் , வாழ்க்கை லட்சியங்கள் இவற்றையும் ஓரளவுக்குத் தெரிந்துகொள்ள இது உபயோகமாக இருக்கும். இலக்கியம் என்றால் என்ன என்கிற கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்கிற மாதிரி தன் கட்டுரைத் தொகுப்பிற்கு அவர் முன்னுரை எழுதுகிறபோது சில விஷயங்களைச் சொல்லியிருக்கிறார். ‘வாழ்வு , வாழ்க்கை என்று இரண்டு பதங்கள் உண்டு. இவற்றிடையே உள்ள தொடர்பையோ தொடர்பற்ற தன்மையையோ விளக்குவது , மனித சிந்தனையின் சாரம். வாழ்வு எனில் தோற்றம் , ஸ்திதி , மறைவு என முக்கூறாகத் தோன்றும் பிரபஞ்சத்தன்மை. வாழ்க்கை என்பது தனிப்பட்ட ஜீவராசியின் உயிர்ப் பாசத்தினால் நிகழும் அவஸ்தை. இவ்விரண்டுக்கும் உள்ள தொடர்பைக் காட்டுவது மனித சிந்தனையின் சாரம். அது தத்துவமாக உருவாகிறது. வாழ்வின் நியதி ஒன்று , சூத்திரம் ஒன்று என்று வற்பு...

மனமும் அதன் விளக்கமும் | கனவின் பொருள் | பெ. தூரன்

ப ல கனவுகள் சிக்கல் நிறைந்திருக்கின்றன; அவற்றில் தோன்றும் நிகழ்ச்சிகள் மேலாகப் பார்க்கும்போது பொருளற்றவைகளாகவும் இருக்கின்றன. கோ. என்பவர் கண்ட ஒரு கனவை இங்கே ஆராய்வோம். “ஏதோ ஒரு பெரிய கோயில். அங்கே நானும் என் நண்பர்கள் சி. வே. மா. ஆகிய மூவரும் சேர்ந்து ஒருவனைக் கொலை செய்தோம். அவனுடைய மூக்கை மாத்திரம் அறுத்துச் சந்தனத்தில் வைத்துச் சாமிக்கு வைத்தோம். பிணம் வெளியிலேயே கிடந்தது. சி. தான் மூக்கை அறுத்தவர். கடவுளைத் தொழுவதற்காகப் பலர் ஒரு மோட்டார்க் காரில் வந்தார்கள். உடனே நான் பிணத்தைத் துரக்கிக் கோபுரத்தின் மேல் வீசினேன். இதை எனது ஆசிரியர் ஒருவர் பார்த்துக் கொண்டார்.” “நான் ஒடி வந்துவிட்டேன். வழியில் என் நண்பர் வீ. யைச் சந்தித்து வேறொருவனிடம் சைக்கிள் வாங்கி இருவரும் ஏறிக்கொண்டு ஊருக்குச் சென்றோம். வழியில் சி. தம் அண்ணனிடம் ஒன்றும் நடக்காதது போல் வந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கொலை செய்துவிட்டு இவர் இவ்வளவு தாராளமாக வெளியில் நடமாடுகிறாரே என்று வியந்தேன்.” "நாங்கள் ஒரு சத்திரத்தில் புகுந்துகொண்டிருந்தோம். ஆனால் சி. வேறு சில நண்பர்களிடம் சாலையில் சென்றுகொண்டிருந்தார்.” ...

மணிபல்லவம் - ஜம்பு கொல பட்டினம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்ககாலத்து நூலாகிய மணிமேகலையிலே, இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப்பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள பழைய பௌத்த நூல்களிலேயும் இலங்கைத்தீவின் வடகோடியில் இருந்த ஜம்புகோல் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. தமிழ் நூலில் கூறப்படும் குறிப்பு களைக் கொண்டும் பாலி மொழி நூல்களில் கூறப்படும் குறிப்புகளைக் கொண்டும் மணிபல்லவமும் ஜம்புகொல பட்டினமும் ஒரே இடம் என்று துணியலாம். பெயர் வேறுபடு வதிலிருந்து இரண்டும் வெவ்வேறிடங்கள் எனக் கருதும்படி இருந்தாலும், இவைகளைப்பற்றிக் கூறப்படும் செய்திகளை உற்றுநோக்கினால், இரண்டும் ஒன்றே என்பது ஐயமற விளங்குகிறது. இதனை ஈண்டு ஆராய்வோம். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலேதான் மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்தது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை கூறுவது காண்க. சோழ நாட்டின் துறைமுகப்பட்டினமாகிய புகார்ப்பட்டினத்தில் இருந்து தெற்கே 30 யோசனை தொலைவில் மணிபல்லவம் இருந்தது (...