Skip to main content

மனமும் அதன் விளக்கமும் | மாறுபட்ட கருத்துகள் | பெ. தூரன்

ளவியல் என்பது ஒரு தனிப்பட்ட விஞ்ஞானத் துறையாக அண்மையில்தான் பிரிந்து வளர்ந்து வருகிறது. மனத்தின் தன்மைகளைப் பற்றியும் அதன் அமைப்பைப் பற்றியும் ஆராய்ச்சி செய்தவர் பலர். பொதுவாக அவர்கள் எல்லாரும் மனத்தை ஒரே இயல்புள்ள ஒரு முழுப் பொருளாகவே கருதி வந்தார்கள். முதன் முதலில் மனத்தில் வெளி மனம் (நனவு மனம்), மறை மனம் (நனவிலி மனம்) என இரு பகுதிகள் இருப்பதாக சிக்மண்ட் பிராய்டு என்பவரே தமது ஆராய்ச்சியின் பயனாகக் கண்டு கூறினார். அவ்விரண்டும் வேறுவேறாகப் பிரிக்கப்பட்ட இரண்டு பகுதிகள் அல்ல எனினும் அவற்றின் தன்மைகள் வேறுபட்டவை என்பது அவர் கருத்து.
மறைமனத்தில் பதிந்துள்ள எண்ணங்களைப் பற்றியும், அனுபவங்களைப் பற்றியும் அறிந்து, அவைகளின் மூலம் சில நோய்களை ஜோசர் ப்ரூயர் என்ற வியன்னா நகரத்து மருத்துவர் குணப்படுத்தினர். அவர் அறிந்தவற்றை நூல் வடிவமாகத் தொகுத்து வெளியிடும்படி பிராய்டு தூண்டினார். அவ்வாறு அவர் வெளியிட்ட போதிலும் பின்னால் அவர் தொடர்ந்து மறை மனத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்யவில்லை. சிக்மண்ட் பிராய்டுதான் தனியாக அதை நடத்தி வந்தார். தொடக்கத்தில் அவருடைய எண்ணங்களுக்கு வன்மையான எதிர்ப்பிருந்தது. ஒருவரும் அவருடன் சேர்ந்து ஒத்துழைக்க முன்வரவில்லை. ஆனால் 1902-ஆம் ஆண்டிற்குப் பிறகு சிலர் அவரோடு சேர்ந்து ஆராய்ச்சிகள் நடத்த முன்வந்தார்கள்.
மறைமனத்தைப் பற்றி விரிவாக ஆராயத் தொடங்கவே பல புதிய உண்மைகள் வெளியாயின. மறைமன ஆராய்ச்சியே தனிப் பகுதியாகப் பிரியத் தொடங்கியது. பிராய்டு அதற்கு உளப் பகுப்பியல் (Psychoanalysis) எனப் பெயரிட்டார்.
மறை மனத்தைப் பற்றிய உண்மை தெரிந்தது முதல் உளவியலுக்கு ஒரு தனி உயர்வு பிறந்திருக்கிறது. மனிதனுடைய நடத்தைக்கு முக்கிய காரணமாக இருப்பது இம் மறை மனமே என்பது சிலருடைய கருத்து. மனம் ஒரு பனிக்கட்டியாலான குன்று போன்றதென்று அவர்கள் கூறுகிறார்கள். பனிக்கட்டிக் குன்று கடலிலே மிதக்கும்போது அதன் ஒரு சிறு பகுதி மட்டுமே வெளியில் தோன்றும். மற்றப் பகுதியெல்லாம் நீர் மட்டத்திற்கு உள்ளே மறைந்திருக்கும். அது போலவே மனத்தின் ஒரு பகுதிதான் வெளிப்படையாகத் தோன்றி வெளி மனமாக இருக்கிறதென்றும், மற்றப் பகுதி மறைந்து நின்று மறை மனமாக இருக்கிறதென்றும் அவர்கள் விளக்கஞ் செய்கிறார்கள். இப்படி மனத்தின் பெரும் பகுதி மறைந்திருந்தாலும் அப்பகுதிதான் ஆதிக்கம் செலுத்துகிறதாம்.
சிக்மண்ட் பிராய்டும் அவரைப் பின்பற்றுவோரும் கூறுவதாவது:- வெளி மனத்தால் நினைப்பவையெல்லாம் மறை மனத்தால் பாதிக்கப்படுகின்றன; ஆனால் அவை எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதை அறிந்துகொள்வது மிக அரிது.
பிராய்டின் கருத்துகளை எல்லா உளவியலறிஞர்களும் ஏற்றுக்கொள்வதில்லை. உளப் பகுப்பியலார்களிலும் சிலர் அவற்றை முழுமையாக ஒத்துக்கொள்வதில்லை. ஆல்பிரடு ஆட்லர், டாக்டர் யுங் என்பவர்கள் அவர்களில் முக்கியமானவர்கள்.
பொதுவாக, சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத உணர்ச்சிகளும், காம இச்சைகளுமே மறை மனத்தில் அழுந்திக் கிடப்பதாக பிராய்டு கூறுகிறார். அவ்வுணர்ச்சிகள் மேலெழுந்து ஆதிக்கம் செலுத்த முயல்கின்றனவென்றும் மனிதன் அவற்றை அடக்க முயல்வதால் மனத்தில் ஒரு போராட்டம் நிகழ்கின்றதென்றும் அதன் விளைவின்படி அவனுடைய தன்மையும் நடத்தையும் அமைகின்றனவென்றும் அவர் விளக்கம் செய்கிறார். ஆட்லர் கூறுவது வேறு. அவர் கூறுவதாவது:- ஒவ்வொரு மனிதனுக்கும் தான் ஏதாவதொரு துறையில் தலைமைப் பதவி வகிக்கவேண்டுமென்ற ஆர்வம் இருக்கின்றது. அந்த ஆர்வமே அவனுடைய குறைபாடுகளை நீக்கிக்கொள்வதற்கு வேண்டிய ஆற்றலைக் கொடுக்கின்றது. அந்த ஆற்றலின் விளைவாக அவனுடைய தன்மையும் நடத்தையும் அமைகின்றன. டெமாஸ்தனிஸ் முதலில் திக்குவாயாக இருந்தார். ஆனால் பெரிய பேச்சாளராக வேண்டும் என்று உறுதியோடு முனைந்து அதில் வெற்றியுமடைந்தார் என்பது யாவரும் அறிந்த உண்மை. இவருடைய வரலாறு ஆட்லரின் கருத்தை மெய்ப்பிக்கத்தக்க சான்றாக இருக்கிறது. மனிதனுக்கு ஒரளவு அதிகாரம் செலுத்தக்கூடிய வாய்ப்பில்லாவிட்டால் அவன் தாழ்மை உணர்ச்சியால் பீடிக்கப்படுகிறான் என்பது ஆட்லரின் கருத்து.
மனிதனுக்குள்ளே விவரிக்க முடியாத ஓர் உயிர் வேகம் இருக்கிறது. அதிலிருந்துதான் பல இயல்புகள் பிறக்கின்றன என்பது டாக்டர் யுங்கின் எண்ணம். எல்லாத் துறைகளிலும் மனம் விரிவடையாமல் ஏதாவது ஒரு துறையில் மட்டும் அது வளர்வதாலேயே மறை மனக் கோளாறுகள் ஏற்படுவதாக அவர் கருதுகிறார். மக்களை இரு வகையாகப் பிரிக்கலாம். உள்ளக் கிளர்ச்சி மிகுந்தவர்கள் ஒரு வகை, சிந்தனை ஆற்றல் மிகுந்தவர்கள் மற்றொரு வகை. உலகத்திலே ஒரு வகையான செயல் புரிய உள்ளக் கிளர்ச்சி மிகுதியாக வேண்டியிருக்கும்; மற்றொரு வகையான செயல் புரிய சிந்தனை மிகுதியாக வேண்டியிருக்கும். ஆதலால் அவற்றிற்கு ஏற்றவாறு தன்மை அமைந்த மனிதர்கள் அச்செயல்களைச் செய்யவேண்டும். ஆனால் பல சமயங்களில் மனிதன் தன் இயல்புக்கு ஒவ்வாத பணியைச் செய்யவேண்டி நேரிடுகிறது. அப்பொழுதுதான் அவன் மனத்தில் போராட்டம் நேர்ந்து மறை மனக் கோளாறுகள் உண்டாகின்றன. மேலும் மறை மனம் தனிப்பட்ட மனிதனுடைய செய்கைகளால் மட்டும் அமைவதில்லை என்று யுங் கருதுகிறார். வழிவழியாக வந்த பாரம்பரியத்தாலும் மறைமனக் கோளாறுகள் உண்டாகின்றன என்று அவர் சொல்லுகிறார்.
உளப் பகுப்பியலார்களுக்குள்ளே சிறுசிறு கருத்துகளில் மாறுபாடுடைய வேறு சிலரும் இருக்கிறார்கள். இப்படிக் கருத்து வேறுபாடுகள் இருப்பினும் உளவியல் ஆராய்ச்சியிலே உளப் பகுப்பியல் ஒரு முக்கியமான முன்னேற்றத்திற்குக் காரணமாக இருக்கிறதென்பதை யாரும் மறுக்கமுடியாது, உளப் பகுப்பியலின் அடிப்படையாகவுள்ள கொள்கைகள் உண்மையானவையென்பதில் யாதொரு ஐயமுமில்லை.

Comments

Most Popular

பழங்காலத்து எழுதுகருவிகள் - மயிலை சீனி. வேங்கடசாமி

இந்தக் காலத்திலே உலகம் முழுவதும் காகிதத்தாளும் பேனாவும் எழுதுகருவிகளாகப் பயன்பட்டுவருகின்றன. இவை எழுத்து வேலைக்குப் பெரிதும் வாய்ப்பாகவும் எளிதாகவும் அமைந்திருக்கின்றன. ஆனால், காகிதத்தாள் வருவதற்கு முன்பு, பண்டைக் காலத்திலே இவ்வளவு எளிதானவும் வாய்ப்பானவும் ஆன எழுதுகருவிகள் இல்லை. பண்டைக் காலத்திலே உலக மக்கள் எவ்விதமான எழுதுகருவிகளை வழங்கிவந்தார்கள் என்பது பற்றியும், பின்னர் காகிதத்தாள் எவ்வாறு நடைமுறையில் வந்தது என்பதைப் பற்றியும் ஈண்டுக் கூறுவோம். களிமண் சுவடிகள் சிறிய ஆசியா தேசத்தில் யூப்ரெடிஸ், டைகிரிஸ் ஆறுகள் பாய்கிற இடத்தில் இருந்த கால்டியா, ஸைரியா நாட்டு மக்கள் ஆதிகாலத்தில் களிமண்ணை எழுதுகருவியாகக் கொண்டிருந் தார்கள். களிமண்ணைப் பிசைந்து சிறுசிறு பலகைகளைப்போல் அமைத்து, அப்பலகை காய்ந்து போவதற்கு முன்னமே ஆணி போன்ற கருவியினால் எழுதி உலரவைத்துப் புத்தகமாக உபயோகித்தார்கள்; அவர்கள் எழுதிய எழுத்துகளுக்குக் கூனிபார்ம் எழுத்து என்று பெயர் கூறுவர். அவர்கள் எழுதிய களிமண் சுவடிகளைப் புத்தகசாலையில் வைத்துப் போற்றி னார்கள். அவ்வாறு போற்றி வைக்கப்பட்டிருந்த களிமண் சுவடிகள் பல, சமீப...

மனமும் அதன் விளக்கமும் | கனவின் பொருள் | பெ. தூரன்

ப ல கனவுகள் சிக்கல் நிறைந்திருக்கின்றன; அவற்றில் தோன்றும் நிகழ்ச்சிகள் மேலாகப் பார்க்கும்போது பொருளற்றவைகளாகவும் இருக்கின்றன. கோ. என்பவர் கண்ட ஒரு கனவை இங்கே ஆராய்வோம். “ஏதோ ஒரு பெரிய கோயில். அங்கே நானும் என் நண்பர்கள் சி. வே. மா. ஆகிய மூவரும் சேர்ந்து ஒருவனைக் கொலை செய்தோம். அவனுடைய மூக்கை மாத்திரம் அறுத்துச் சந்தனத்தில் வைத்துச் சாமிக்கு வைத்தோம். பிணம் வெளியிலேயே கிடந்தது. சி. தான் மூக்கை அறுத்தவர். கடவுளைத் தொழுவதற்காகப் பலர் ஒரு மோட்டார்க் காரில் வந்தார்கள். உடனே நான் பிணத்தைத் துரக்கிக் கோபுரத்தின் மேல் வீசினேன். இதை எனது ஆசிரியர் ஒருவர் பார்த்துக் கொண்டார்.” “நான் ஒடி வந்துவிட்டேன். வழியில் என் நண்பர் வீ. யைச் சந்தித்து வேறொருவனிடம் சைக்கிள் வாங்கி இருவரும் ஏறிக்கொண்டு ஊருக்குச் சென்றோம். வழியில் சி. தம் அண்ணனிடம் ஒன்றும் நடக்காதது போல் வந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கொலை செய்துவிட்டு இவர் இவ்வளவு தாராளமாக வெளியில் நடமாடுகிறாரே என்று வியந்தேன்.” "நாங்கள் ஒரு சத்திரத்தில் புகுந்துகொண்டிருந்தோம். ஆனால் சி. வேறு சில நண்பர்களிடம் சாலையில் சென்றுகொண்டிருந்தார்.” ...

ஐரோப்பியர் வருகை - மயிலை சீனி. வேங்கடசாமி

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே, மேல் நாட்டார் நமது இந்தியா தேசத்துடன், சிறப்பாகத் தென் இந்தியாவுடன், வர்த்தகத் தொடர்பு கொண்டிருந்ததாகத் தெரிகிறது. யவனர் (உரோமர், கிரேக்கர்) என்னும் ஐரோப்பிய ஜாதியார், சேர நாட்டின் கடற்கரைப் பட்டினங்களிற் பண்ட சாலைகள் அமைத்து, அவற்றில் நமது நாட்டுச் சரக்குகளைச் சேமித்து வைத்துக் கப்பல்கள் மூலமாக ஐரோப்பிய நாடுகளுக்குக் கொண்டு போனார்கள். மதுரை, புகார், (காவிரிப்பூம் பட்டினம்) முதலிய நகரங்களிலும் யவனர் வசித்து வந்ததாகத் தமிழ் நூல்களினால் அறிகிறோம். கி.மு. 22 இல் மதுரையில் அரசாண்டிருந்த பாண்டிய மன்னன், அகஸ்தஸ் ஸீஸர் (Augustus Ceasar) என்னும் யவன அரசனிடம் தூதுவர்களை அனுப்பினான் என்று ஸ்த்ராபோ (Starbo) என்னும் மேல் நாட்டாசிரியர் எழுதியிருக்கிறார். தமிழருக்கும் யவனருக்கும் இருந்த இவ்வர்த்தகத் தொடர்பு, கி.பி. 47 முதல் மேன்மேலும் அதிகப்பட்டது. ஏனென்றால், அந்த ஆண்டில் ஹிப்பலஸ் (Hippalus) என்பவர், இந்து சமுத்திரத்தில் வீசுகிற வட கிழக்கு தென் மேற்குப் பருவக் காற்றைக் கண்டுபிடித்தார். இப்பருவக் காற்று வீசுகிற காலங்களில் பிரயாணம் செய்வதால் மாலுமிகள் விரைவாகக் க...