Skip to main content

மனமும் அதன் விளக்கமும் | மாறுபட்ட கருத்துகள் | பெ. தூரன்

ளவியல் என்பது ஒரு தனிப்பட்ட விஞ்ஞானத் துறையாக அண்மையில்தான் பிரிந்து வளர்ந்து வருகிறது. மனத்தின் தன்மைகளைப் பற்றியும் அதன் அமைப்பைப் பற்றியும் ஆராய்ச்சி செய்தவர் பலர். பொதுவாக அவர்கள் எல்லாரும் மனத்தை ஒரே இயல்புள்ள ஒரு முழுப் பொருளாகவே கருதி வந்தார்கள். முதன் முதலில் மனத்தில் வெளி மனம் (நனவு மனம்), மறை மனம் (நனவிலி மனம்) என இரு பகுதிகள் இருப்பதாக சிக்மண்ட் பிராய்டு என்பவரே தமது ஆராய்ச்சியின் பயனாகக் கண்டு கூறினார். அவ்விரண்டும் வேறுவேறாகப் பிரிக்கப்பட்ட இரண்டு பகுதிகள் அல்ல எனினும் அவற்றின் தன்மைகள் வேறுபட்டவை என்பது அவர் கருத்து.
மறைமனத்தில் பதிந்துள்ள எண்ணங்களைப் பற்றியும், அனுபவங்களைப் பற்றியும் அறிந்து, அவைகளின் மூலம் சில நோய்களை ஜோசர் ப்ரூயர் என்ற வியன்னா நகரத்து மருத்துவர் குணப்படுத்தினர். அவர் அறிந்தவற்றை நூல் வடிவமாகத் தொகுத்து வெளியிடும்படி பிராய்டு தூண்டினார். அவ்வாறு அவர் வெளியிட்ட போதிலும் பின்னால் அவர் தொடர்ந்து மறை மனத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்யவில்லை. சிக்மண்ட் பிராய்டுதான் தனியாக அதை நடத்தி வந்தார். தொடக்கத்தில் அவருடைய எண்ணங்களுக்கு வன்மையான எதிர்ப்பிருந்தது. ஒருவரும் அவருடன் சேர்ந்து ஒத்துழைக்க முன்வரவில்லை. ஆனால் 1902-ஆம் ஆண்டிற்குப் பிறகு சிலர் அவரோடு சேர்ந்து ஆராய்ச்சிகள் நடத்த முன்வந்தார்கள்.
மறைமனத்தைப் பற்றி விரிவாக ஆராயத் தொடங்கவே பல புதிய உண்மைகள் வெளியாயின. மறைமன ஆராய்ச்சியே தனிப் பகுதியாகப் பிரியத் தொடங்கியது. பிராய்டு அதற்கு உளப் பகுப்பியல் (Psychoanalysis) எனப் பெயரிட்டார்.
மறை மனத்தைப் பற்றிய உண்மை தெரிந்தது முதல் உளவியலுக்கு ஒரு தனி உயர்வு பிறந்திருக்கிறது. மனிதனுடைய நடத்தைக்கு முக்கிய காரணமாக இருப்பது இம் மறை மனமே என்பது சிலருடைய கருத்து. மனம் ஒரு பனிக்கட்டியாலான குன்று போன்றதென்று அவர்கள் கூறுகிறார்கள். பனிக்கட்டிக் குன்று கடலிலே மிதக்கும்போது அதன் ஒரு சிறு பகுதி மட்டுமே வெளியில் தோன்றும். மற்றப் பகுதியெல்லாம் நீர் மட்டத்திற்கு உள்ளே மறைந்திருக்கும். அது போலவே மனத்தின் ஒரு பகுதிதான் வெளிப்படையாகத் தோன்றி வெளி மனமாக இருக்கிறதென்றும், மற்றப் பகுதி மறைந்து நின்று மறை மனமாக இருக்கிறதென்றும் அவர்கள் விளக்கஞ் செய்கிறார்கள். இப்படி மனத்தின் பெரும் பகுதி மறைந்திருந்தாலும் அப்பகுதிதான் ஆதிக்கம் செலுத்துகிறதாம்.
சிக்மண்ட் பிராய்டும் அவரைப் பின்பற்றுவோரும் கூறுவதாவது:- வெளி மனத்தால் நினைப்பவையெல்லாம் மறை மனத்தால் பாதிக்கப்படுகின்றன; ஆனால் அவை எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதை அறிந்துகொள்வது மிக அரிது.
பிராய்டின் கருத்துகளை எல்லா உளவியலறிஞர்களும் ஏற்றுக்கொள்வதில்லை. உளப் பகுப்பியலார்களிலும் சிலர் அவற்றை முழுமையாக ஒத்துக்கொள்வதில்லை. ஆல்பிரடு ஆட்லர், டாக்டர் யுங் என்பவர்கள் அவர்களில் முக்கியமானவர்கள்.
பொதுவாக, சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத உணர்ச்சிகளும், காம இச்சைகளுமே மறை மனத்தில் அழுந்திக் கிடப்பதாக பிராய்டு கூறுகிறார். அவ்வுணர்ச்சிகள் மேலெழுந்து ஆதிக்கம் செலுத்த முயல்கின்றனவென்றும் மனிதன் அவற்றை அடக்க முயல்வதால் மனத்தில் ஒரு போராட்டம் நிகழ்கின்றதென்றும் அதன் விளைவின்படி அவனுடைய தன்மையும் நடத்தையும் அமைகின்றனவென்றும் அவர் விளக்கம் செய்கிறார். ஆட்லர் கூறுவது வேறு. அவர் கூறுவதாவது:- ஒவ்வொரு மனிதனுக்கும் தான் ஏதாவதொரு துறையில் தலைமைப் பதவி வகிக்கவேண்டுமென்ற ஆர்வம் இருக்கின்றது. அந்த ஆர்வமே அவனுடைய குறைபாடுகளை நீக்கிக்கொள்வதற்கு வேண்டிய ஆற்றலைக் கொடுக்கின்றது. அந்த ஆற்றலின் விளைவாக அவனுடைய தன்மையும் நடத்தையும் அமைகின்றன. டெமாஸ்தனிஸ் முதலில் திக்குவாயாக இருந்தார். ஆனால் பெரிய பேச்சாளராக வேண்டும் என்று உறுதியோடு முனைந்து அதில் வெற்றியுமடைந்தார் என்பது யாவரும் அறிந்த உண்மை. இவருடைய வரலாறு ஆட்லரின் கருத்தை மெய்ப்பிக்கத்தக்க சான்றாக இருக்கிறது. மனிதனுக்கு ஒரளவு அதிகாரம் செலுத்தக்கூடிய வாய்ப்பில்லாவிட்டால் அவன் தாழ்மை உணர்ச்சியால் பீடிக்கப்படுகிறான் என்பது ஆட்லரின் கருத்து.
மனிதனுக்குள்ளே விவரிக்க முடியாத ஓர் உயிர் வேகம் இருக்கிறது. அதிலிருந்துதான் பல இயல்புகள் பிறக்கின்றன என்பது டாக்டர் யுங்கின் எண்ணம். எல்லாத் துறைகளிலும் மனம் விரிவடையாமல் ஏதாவது ஒரு துறையில் மட்டும் அது வளர்வதாலேயே மறை மனக் கோளாறுகள் ஏற்படுவதாக அவர் கருதுகிறார். மக்களை இரு வகையாகப் பிரிக்கலாம். உள்ளக் கிளர்ச்சி மிகுந்தவர்கள் ஒரு வகை, சிந்தனை ஆற்றல் மிகுந்தவர்கள் மற்றொரு வகை. உலகத்திலே ஒரு வகையான செயல் புரிய உள்ளக் கிளர்ச்சி மிகுதியாக வேண்டியிருக்கும்; மற்றொரு வகையான செயல் புரிய சிந்தனை மிகுதியாக வேண்டியிருக்கும். ஆதலால் அவற்றிற்கு ஏற்றவாறு தன்மை அமைந்த மனிதர்கள் அச்செயல்களைச் செய்யவேண்டும். ஆனால் பல சமயங்களில் மனிதன் தன் இயல்புக்கு ஒவ்வாத பணியைச் செய்யவேண்டி நேரிடுகிறது. அப்பொழுதுதான் அவன் மனத்தில் போராட்டம் நேர்ந்து மறை மனக் கோளாறுகள் உண்டாகின்றன. மேலும் மறை மனம் தனிப்பட்ட மனிதனுடைய செய்கைகளால் மட்டும் அமைவதில்லை என்று யுங் கருதுகிறார். வழிவழியாக வந்த பாரம்பரியத்தாலும் மறைமனக் கோளாறுகள் உண்டாகின்றன என்று அவர் சொல்லுகிறார்.
உளப் பகுப்பியலார்களுக்குள்ளே சிறுசிறு கருத்துகளில் மாறுபாடுடைய வேறு சிலரும் இருக்கிறார்கள். இப்படிக் கருத்து வேறுபாடுகள் இருப்பினும் உளவியல் ஆராய்ச்சியிலே உளப் பகுப்பியல் ஒரு முக்கியமான முன்னேற்றத்திற்குக் காரணமாக இருக்கிறதென்பதை யாரும் மறுக்கமுடியாது, உளப் பகுப்பியலின் அடிப்படையாகவுள்ள கொள்கைகள் உண்மையானவையென்பதில் யாதொரு ஐயமுமில்லை.

Comments

Most Popular

மனமும் அதன் விளக்கமும் | உள்ளக் கிளர்ச்சி | பெ. தூரன்

ம னம் என்பது மாயமாக இருந்தாலும் அதில் எத்தனை எத்தனை குமுறல்கள், கொந்தளிப்புகள், கிளர்ச்சிகள் தோன்றுகின்றன! சினம் பிறக்கிறது, அச்சம் உண்டாகிறது - இப்படி எத்தனை விதமான அனுபவங்கள்! சினம், அச்சம், காதல், காமம், துக்கம், வெறுப்பு முதலியவைகளுக்கு உள்ளக் கிளர்ச்சிகள் என்று பெயர். குழந்தை அழுகிறது; அடுத்த விநாடியிலே மகிழ்ச்சியால் சிரிக்கிறது. குழந்தைகள் தங்கள் உள்ளக் கிளர்ச்சிகளை உடனே வெளிப்படுத்திவிடுகின்றன. விரைவிலே அவை மறைந்தும் போகின்றன. கண்ணம்மா ஓடிவருகிருள். “அம்மா, அடுத்த வீட்டுக் கிட்டுவுக்கு மிட்டாய் கொடுக்க வேண்டாம்” என்று அவன் மேலே வெறுப்போடு பேசுகிறாள். ஆனால் சிறிது நேரத்திற்குள்ளே இரண்டு பேரும் சேர்ந்து விளையாடத் தொடங்கி விடுகிறார்கள். கண்ணம்மா தன்னிடமிருந்த் மிட்டாயை அவனுக்குக் கொடுக்கிறாள். கிட்டுவின் மேல் ஏற்பட்டிருந்த வெறுப்பை அவள் மறந்தே விடுகிறாள். இந்தக் குழந்தைகளைப் போல் உலக மக்கள் இருக்கக்கூடாதா என்றுகூடச் சொல்லத் தோன்றுகிறது. ஆனால் மனிதன் தனது உள்ளக் கிளர்ச்சிகள் அனைத்தையும் குழந்தைகளைப்போலத் திடீர் திடீரென்று உடனே வெளிப்படுத்தலாமா? சமூக வாழ்க்கையிலே அது முறையா...

சங்கரதாஸ் சுவாமிகள் வரலாறு - அவ்வை டி.கே. சண்முகம்

நாடகத் தமிழை வளர்த்த தந்தை அவர்; நாடகாசிரியர்கள் பலருக்குப் பேராசிரியர் அவர். சென்ற ஐம்பது ஆண்டுகளுக்கிடையே அவரது பாடல்களையோ வசனங்களையோ உபயோகிக்காத நடிக நடிகையர் தமிழ் நாடக உலகில் இல்லையென்றே சொல்லிவிடலாம். நாடக உலகம் அப்பெரியாரைத் தமிழ் நாடகத் தலைமையாசிரியர் எனப் போற்றியது. எளிமையும் இனிமையும் ததும்பும் பாடல்களாலும் தேன் சொட்டும் தீந்தமிழ் வசனங்களாலும் அப்பெருமகனார் இயற்றியருளிய நாடகங்கள்தாம் தமிழ் நாடகக் கலை வளர்ச்சிக்கு அடிப்படைச் செல்வம் என்று கூறினால் அது மிகையாகாது. முழுப்பெயரையும் சொல்ல வேண்டியதில்லை. சுவாமிகள் என்றாலே போதும். தமிழ் நாடக உலகில் அது சங்கரதாஸ் சுவாமிகள் ஒருவரைத்தான் குறிக்கும். சுவாமிகள் காலத்திலிருந்த மிகப்பெரிய புலவர்களும் நாடகாசிரியர்களுமான உடுமலைச் சரபம் முத்துசாமிக் கவிராயர், குடந்தை வீராசாமி வாத்தியார் முதலியோரெல்லாம் சுவாமிகளின் புலமைக்குத் தலை வணங்கிப் பாராட்டினர். ஆங்கில மோகத்தால் தாய்மொழியிற் பேசுவதுகூடக் கெளரவக் குறைவென்று கருதப்பட்ட காலத்தில் நாடக மேடையின் மூலம் தமிழை வளர்த்த பெரியார் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள். இசையரங்குகளிலே தெலு...

கு. ப. ராஜகோபாலன் என்கிற முழுமை | க. நா. சுப்ரமண்யம்

கு. ப. ராஜகோபாலனின் கதைகளை , அவை எழுதப்பட்டு சற்றேறக் குறைய ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு இன்று படித்துப் பார்க்கும்போது கூட அவர் லாகவமும் , கதை நடத்தும் திறனும் , உருவ , கருத்து அமைதியுடன் மிகவும் சிறப்பாகவே உள்ளத்தில் தட்டுகின்றன. வாழ்க்கையை முழுப்பார்வையுடன் பார்ப்பது அவர்க்கு மிகவும் சிறிய கதைகளிலும் கூடச் சாத்தியமாக இருந்திருக்கிறது. ஆண் , பெண் உறவுகளை , பால் உணர்ச்சிகளை அப்பட்டமாக , உரக்க , மனத்தையும் கண்ணையும் ஒருங்கே உறுத்துகிற மாதிரிச் சொல்வது இன்று பலருக்கும் கைவந்த கலையாக இருக்கிறது. ஆனால் , அதையே சூக்ஷ்மமாகச் செய்கிற காரியம் , கலையுணர்ச்சியுடன் முழுவதும் சொல்லாமல் சொல்லிவிடுகிற காரியம் கு.ப.ரா . வுக்கு மிகவும் சிறப்பாக கைவந்திருந்ததை இன்று படிக்கும்போதும் உணர முடிகிறது. இந்த மென்மையும் , கலை உணர்ச்சியும் பக்கம் பக்கமாக பச்சையாக எதை எதையோ எழுதுகிற தமிழ் எழுத்தாளர்களுக்கு எட்டாத ஒரு விஷயம். அவர்கள் கு.ப.ரா . விடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். புத்தனுடைய துறவுக்கு அசுவகோஷன் முதல் எத்தனையோ இலக்கியாசிரியர்கள் பலர் காரணங்கள் கண்டு சொல்லிவிட்டார்கள். மூப்பு , நோய் , சாவு...