Skip to main content

மனமும் அதன் விளக்கமும் | மாறுபட்ட கருத்துகள் | பெ. தூரன்

ளவியல் என்பது ஒரு தனிப்பட்ட விஞ்ஞானத் துறையாக அண்மையில்தான் பிரிந்து வளர்ந்து வருகிறது. மனத்தின் தன்மைகளைப் பற்றியும் அதன் அமைப்பைப் பற்றியும் ஆராய்ச்சி செய்தவர் பலர். பொதுவாக அவர்கள் எல்லாரும் மனத்தை ஒரே இயல்புள்ள ஒரு முழுப் பொருளாகவே கருதி வந்தார்கள். முதன் முதலில் மனத்தில் வெளி மனம் (நனவு மனம்), மறை மனம் (நனவிலி மனம்) என இரு பகுதிகள் இருப்பதாக சிக்மண்ட் பிராய்டு என்பவரே தமது ஆராய்ச்சியின் பயனாகக் கண்டு கூறினார். அவ்விரண்டும் வேறுவேறாகப் பிரிக்கப்பட்ட இரண்டு பகுதிகள் அல்ல எனினும் அவற்றின் தன்மைகள் வேறுபட்டவை என்பது அவர் கருத்து.
மறைமனத்தில் பதிந்துள்ள எண்ணங்களைப் பற்றியும், அனுபவங்களைப் பற்றியும் அறிந்து, அவைகளின் மூலம் சில நோய்களை ஜோசர் ப்ரூயர் என்ற வியன்னா நகரத்து மருத்துவர் குணப்படுத்தினர். அவர் அறிந்தவற்றை நூல் வடிவமாகத் தொகுத்து வெளியிடும்படி பிராய்டு தூண்டினார். அவ்வாறு அவர் வெளியிட்ட போதிலும் பின்னால் அவர் தொடர்ந்து மறை மனத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்யவில்லை. சிக்மண்ட் பிராய்டுதான் தனியாக அதை நடத்தி வந்தார். தொடக்கத்தில் அவருடைய எண்ணங்களுக்கு வன்மையான எதிர்ப்பிருந்தது. ஒருவரும் அவருடன் சேர்ந்து ஒத்துழைக்க முன்வரவில்லை. ஆனால் 1902-ஆம் ஆண்டிற்குப் பிறகு சிலர் அவரோடு சேர்ந்து ஆராய்ச்சிகள் நடத்த முன்வந்தார்கள்.
மறைமனத்தைப் பற்றி விரிவாக ஆராயத் தொடங்கவே பல புதிய உண்மைகள் வெளியாயின. மறைமன ஆராய்ச்சியே தனிப் பகுதியாகப் பிரியத் தொடங்கியது. பிராய்டு அதற்கு உளப் பகுப்பியல் (Psychoanalysis) எனப் பெயரிட்டார்.
மறை மனத்தைப் பற்றிய உண்மை தெரிந்தது முதல் உளவியலுக்கு ஒரு தனி உயர்வு பிறந்திருக்கிறது. மனிதனுடைய நடத்தைக்கு முக்கிய காரணமாக இருப்பது இம் மறை மனமே என்பது சிலருடைய கருத்து. மனம் ஒரு பனிக்கட்டியாலான குன்று போன்றதென்று அவர்கள் கூறுகிறார்கள். பனிக்கட்டிக் குன்று கடலிலே மிதக்கும்போது அதன் ஒரு சிறு பகுதி மட்டுமே வெளியில் தோன்றும். மற்றப் பகுதியெல்லாம் நீர் மட்டத்திற்கு உள்ளே மறைந்திருக்கும். அது போலவே மனத்தின் ஒரு பகுதிதான் வெளிப்படையாகத் தோன்றி வெளி மனமாக இருக்கிறதென்றும், மற்றப் பகுதி மறைந்து நின்று மறை மனமாக இருக்கிறதென்றும் அவர்கள் விளக்கஞ் செய்கிறார்கள். இப்படி மனத்தின் பெரும் பகுதி மறைந்திருந்தாலும் அப்பகுதிதான் ஆதிக்கம் செலுத்துகிறதாம்.
சிக்மண்ட் பிராய்டும் அவரைப் பின்பற்றுவோரும் கூறுவதாவது:- வெளி மனத்தால் நினைப்பவையெல்லாம் மறை மனத்தால் பாதிக்கப்படுகின்றன; ஆனால் அவை எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதை அறிந்துகொள்வது மிக அரிது.
பிராய்டின் கருத்துகளை எல்லா உளவியலறிஞர்களும் ஏற்றுக்கொள்வதில்லை. உளப் பகுப்பியலார்களிலும் சிலர் அவற்றை முழுமையாக ஒத்துக்கொள்வதில்லை. ஆல்பிரடு ஆட்லர், டாக்டர் யுங் என்பவர்கள் அவர்களில் முக்கியமானவர்கள்.
பொதுவாக, சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத உணர்ச்சிகளும், காம இச்சைகளுமே மறை மனத்தில் அழுந்திக் கிடப்பதாக பிராய்டு கூறுகிறார். அவ்வுணர்ச்சிகள் மேலெழுந்து ஆதிக்கம் செலுத்த முயல்கின்றனவென்றும் மனிதன் அவற்றை அடக்க முயல்வதால் மனத்தில் ஒரு போராட்டம் நிகழ்கின்றதென்றும் அதன் விளைவின்படி அவனுடைய தன்மையும் நடத்தையும் அமைகின்றனவென்றும் அவர் விளக்கம் செய்கிறார். ஆட்லர் கூறுவது வேறு. அவர் கூறுவதாவது:- ஒவ்வொரு மனிதனுக்கும் தான் ஏதாவதொரு துறையில் தலைமைப் பதவி வகிக்கவேண்டுமென்ற ஆர்வம் இருக்கின்றது. அந்த ஆர்வமே அவனுடைய குறைபாடுகளை நீக்கிக்கொள்வதற்கு வேண்டிய ஆற்றலைக் கொடுக்கின்றது. அந்த ஆற்றலின் விளைவாக அவனுடைய தன்மையும் நடத்தையும் அமைகின்றன. டெமாஸ்தனிஸ் முதலில் திக்குவாயாக இருந்தார். ஆனால் பெரிய பேச்சாளராக வேண்டும் என்று உறுதியோடு முனைந்து அதில் வெற்றியுமடைந்தார் என்பது யாவரும் அறிந்த உண்மை. இவருடைய வரலாறு ஆட்லரின் கருத்தை மெய்ப்பிக்கத்தக்க சான்றாக இருக்கிறது. மனிதனுக்கு ஒரளவு அதிகாரம் செலுத்தக்கூடிய வாய்ப்பில்லாவிட்டால் அவன் தாழ்மை உணர்ச்சியால் பீடிக்கப்படுகிறான் என்பது ஆட்லரின் கருத்து.
மனிதனுக்குள்ளே விவரிக்க முடியாத ஓர் உயிர் வேகம் இருக்கிறது. அதிலிருந்துதான் பல இயல்புகள் பிறக்கின்றன என்பது டாக்டர் யுங்கின் எண்ணம். எல்லாத் துறைகளிலும் மனம் விரிவடையாமல் ஏதாவது ஒரு துறையில் மட்டும் அது வளர்வதாலேயே மறை மனக் கோளாறுகள் ஏற்படுவதாக அவர் கருதுகிறார். மக்களை இரு வகையாகப் பிரிக்கலாம். உள்ளக் கிளர்ச்சி மிகுந்தவர்கள் ஒரு வகை, சிந்தனை ஆற்றல் மிகுந்தவர்கள் மற்றொரு வகை. உலகத்திலே ஒரு வகையான செயல் புரிய உள்ளக் கிளர்ச்சி மிகுதியாக வேண்டியிருக்கும்; மற்றொரு வகையான செயல் புரிய சிந்தனை மிகுதியாக வேண்டியிருக்கும். ஆதலால் அவற்றிற்கு ஏற்றவாறு தன்மை அமைந்த மனிதர்கள் அச்செயல்களைச் செய்யவேண்டும். ஆனால் பல சமயங்களில் மனிதன் தன் இயல்புக்கு ஒவ்வாத பணியைச் செய்யவேண்டி நேரிடுகிறது. அப்பொழுதுதான் அவன் மனத்தில் போராட்டம் நேர்ந்து மறை மனக் கோளாறுகள் உண்டாகின்றன. மேலும் மறை மனம் தனிப்பட்ட மனிதனுடைய செய்கைகளால் மட்டும் அமைவதில்லை என்று யுங் கருதுகிறார். வழிவழியாக வந்த பாரம்பரியத்தாலும் மறைமனக் கோளாறுகள் உண்டாகின்றன என்று அவர் சொல்லுகிறார்.
உளப் பகுப்பியலார்களுக்குள்ளே சிறுசிறு கருத்துகளில் மாறுபாடுடைய வேறு சிலரும் இருக்கிறார்கள். இப்படிக் கருத்து வேறுபாடுகள் இருப்பினும் உளவியல் ஆராய்ச்சியிலே உளப் பகுப்பியல் ஒரு முக்கியமான முன்னேற்றத்திற்குக் காரணமாக இருக்கிறதென்பதை யாரும் மறுக்கமுடியாது, உளப் பகுப்பியலின் அடிப்படையாகவுள்ள கொள்கைகள் உண்மையானவையென்பதில் யாதொரு ஐயமுமில்லை.

Comments

Most Popular

மனமும் அதன் விளக்கமும் | கனவின் பொருள் | பெ. தூரன்

ப ல கனவுகள் சிக்கல் நிறைந்திருக்கின்றன; அவற்றில் தோன்றும் நிகழ்ச்சிகள் மேலாகப் பார்க்கும்போது பொருளற்றவைகளாகவும் இருக்கின்றன. கோ. என்பவர் கண்ட ஒரு கனவை இங்கே ஆராய்வோம். “ஏதோ ஒரு பெரிய கோயில். அங்கே நானும் என் நண்பர்கள் சி. வே. மா. ஆகிய மூவரும் சேர்ந்து ஒருவனைக் கொலை செய்தோம். அவனுடைய மூக்கை மாத்திரம் அறுத்துச் சந்தனத்தில் வைத்துச் சாமிக்கு வைத்தோம். பிணம் வெளியிலேயே கிடந்தது. சி. தான் மூக்கை அறுத்தவர். கடவுளைத் தொழுவதற்காகப் பலர் ஒரு மோட்டார்க் காரில் வந்தார்கள். உடனே நான் பிணத்தைத் துரக்கிக் கோபுரத்தின் மேல் வீசினேன். இதை எனது ஆசிரியர் ஒருவர் பார்த்துக் கொண்டார்.” “நான் ஒடி வந்துவிட்டேன். வழியில் என் நண்பர் வீ. யைச் சந்தித்து வேறொருவனிடம் சைக்கிள் வாங்கி இருவரும் ஏறிக்கொண்டு ஊருக்குச் சென்றோம். வழியில் சி. தம் அண்ணனிடம் ஒன்றும் நடக்காதது போல் வந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கொலை செய்துவிட்டு இவர் இவ்வளவு தாராளமாக வெளியில் நடமாடுகிறாரே என்று வியந்தேன்.” "நாங்கள் ஒரு சத்திரத்தில் புகுந்துகொண்டிருந்தோம். ஆனால் சி. வேறு சில நண்பர்களிடம் சாலையில் சென்றுகொண்டிருந்தார்.” ...

பாண்டியர் நிறுவிய தமிழ்ச் சங்கம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்க காலத்திலே, மதுரை மாநகரத்திலே பாண்டிய மன்னர் மூன்று தமிழ்ச் சங்கங்களை நிறுவித் தமிழை ஆராய்ந்தார்கள் என்று இறையனார் அகப்பொருள் உரை முதலிய நூல்கள் கூறுகின்றன. அச்சங்கங்களில் இயல், இசை, நாடகம், என்னும் முத்தமிழ்கள் ஆராயப்பட்டன. பத்துப் பாட்டு, எட்டுத் தொகை முதலிய செய்யுள்கள் கடைச் சங்கப் புலவர்களால் பாடப்பட்டன. கடைச் சங்கம் கி.பி. 300க்கு முன்பு இருந்தது என்று சரித்திரம் கூறுகிறது. ஆனால், இக்காலத்தில் சிலர், தமிழ் வரலாற்றினையும், நாட்டு வரலாற்றினையும் நேர்மையாகவும் சரியாகவும் ஆராய்ந்து பாராமல், தமிழ்ச் சங்கம் கி.பி. 5ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டது என்றும், அந்தத் தமிழ்ச் சங்கத்தில் தொல்காப்பியம் தோன்றியது என்றும் கூறுகின்றனர்; எழுதுகின்றனர். இவ்வாறு பிழைபட்ட ஆராய்ச்சியைக் கூறுகிறவர்களில் முதன்மை யானவர் அண்மையில் காலஞ்சென்ற திரு. எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்கள். வையாபுரிப் பிள்ளையவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழாராய்ச்சித் துறைத் தலைவராக இருந்தபடியால், அவர் கூறுவன எல்லாம் உண்மை என்று பாமர மக்கள் நினைக்கிறார்கள். பாமர மக்கள் மட்டும் அல்லாமல் படித்தவர்கள் கூட, ஆராய்ந்து பார்த்...

பல ரூபங்களில் காந்தி: நூற்பவர் | அனு பந்தோபாத்யாயா

காந்திஜி முதலில் பழகியது துணி நெசவுதான். கைத்தறியில் நெய்வதற்கு அவர் மில் நூலையே பயன்படுத்தினார். அதில் அவருக்கு திருப்தி ஏற்படவில்லை. காரணம் , அதை சுயதேவைப் பூர்த்தி என்று சொல்ல முடியாது. அவர் துணி தயாரிக்கும் தொழிலில் முதல் படியில் தொடங்கி முற்றிலுமாக நிபுணத்துவம் பெற விரும்பினார். முதலில் பருத்தி பயிரிட வேண்டும். பருத்தியிலிருந்து பஞ்சுக் காய்களைப் பறித்து சுத்தம் செய்து , பட்டை தயார் செய்து , நூல் நூற்று நெசவும் செய்ய வேண்டும். நூல் நூற்பதற்கான சர்க்கா அவருக்கு எளிதில் கிடைக்கவில்லை. அதனால் பயன் ஏதும் இல்லை என்ற காரணத்தினால் கிராம மக்கள் சர்க்காக்களை எப்போதோ தூக்கி எறிந்துவிட்டிருந்தனர். பல கிராமங்களில் தேடிய பின்பு ஒரு கிராமத்தில் ஒரு பெண்மணி இன்னமும் ராட்டையில் நூற்றுக்கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நூற்பில் தேர்ச்சி பெற்ற ஒருவர் மூலமாக ஆசிரமவாசிகளுக்கு சர்க்காவில் எப்படி நூற்க வேண்டும் என்று சொல்லித்தரப்பட்டது. ஒரு முறை அவர் நோயிலிருந்து மீண்டுகொண்டிருந்த தருணத்தில் ராட்டைகளின் ஒலி அவருக்கு சங்கீதம் போல் கேட்டது. அவரும் விரைவில் ராட்டையில் நூல் நூற்கப் பழகிவிட்டார். தி...