Skip to main content

மனமும் அதன் விளக்கமும் | மனமே பொய்யா? | பெ. தூரன்


நுணுகி ஆராய்கின்றபோதுதான் பல ஐயங்கள் பிறக்கின்றன. மேற்போக்காகப் பார்க்கின்றபோது எளிதாகத் தோன்றியவை ஆழ்ந்து நோக்கும்போது மயக்கத்தைத் தருகின்றன; பலவகையான முரண்பட்ட கருத்துகளுக்குக் காரணமாகின்றன. மனத்தைப் பற்றிய ஆராய்ச்சியிலும் இதே தொல்லைதான். மனம் என்பது என்ன என்று ஆராயப் புகுந்த சிலர் மனம் என்பதே இல்லை என்று முடிவு கட்டியுள்ளார்கள். இவர்கள் கூறுவதை ஒத்துக்கொள்ள முடியாது என்று வேறு சிலர் சொல்லுகிறார்கள்.
நடத்தைக் கொள்கையர் கூறுவதுபோலப் புலன்களின் வழியாக மூளைக்குச் சென்ற புலன் உணர்வு (Sensation) களுக்குத் தக்கவாறு செயல் நிகழ்கின்றதென்றும் அச்செயலுக்குக் காரணமாக மனம் என்பதொன்று தேவையில்லை என்றும் கொள்வதிலேயும் பல ஐயங்கள் கிளம்புகின்றன. புலனுணர்வானது நரம்புகளின் வழியே மூளைக்குச் செல்கின்றது; அதற்குப் பொருத்தமான செயலுணர்வு வேறு சில நரம்புகளின் வழியாக உறுப்புகளுக்குச் செல்கின்றது. புலன் உணர்வைக்கொண்டு செல்லும் நரம்புகளுக்கும் செயல் உணர்வைக்கொண்டு செல்லும் நரம்புகளுக்குமிடையே தொடர்பை மூளையானது எந்திரம்போல உண்டாக்குகிறது என்று சொல்லும்போது எல்லாம் எளிதாகத்தான் காண்கிறது. இதைச் செய்ய மனமே தேவையில்லையென்றும் தோன்றுகிறது. ஆனால் இந்த ஆராய்ச்சி அவ்வளவு எளிதானதல்ல. மனத்தை அவ்வளவு எளிதாக ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. புலன் உணர்வால் மட்டும் செயல் நிகழ்கிறதென்றால் புலனுணர்விற்குக் காரணமாக ஏதாவதொன்று முன்னாலிருக்க வேண்டும். எதிர்காலத்திலே தோன்றக்கூடிய ஒன்று இன்று புலன் உணர்விற்குக் காரணமாக இருக்க முடியாது. எதிரில் ஒரு பழம் இருந்தால் அதைப் பற்றிய உணர்வு கண்களின் வழியாக மூளைக்குச் செல்லும். மூளையின் செய்கையால் அப்பழத்தை எடுத்துக்கொள்ள வேண்டுமென்ற செயல் உணர்வு கைகளுக்கு வரும். அதனால், பழத்தை எடுத்துக்கொள்ளும் செயல் நிகழும். மெய்தான். ஆனால் பழம் எதிரிலே இல்லாவிட்டால் அந்தச் செயல் நிகழ முடியாது.
உயிர்ப் பிராணிகள் இதுபோன்ற புலன் உணர்வின் விளைவாகவே செயல் புரிகிறதில்லை. பின்னால் ஏற்படப்போகும் ஒரு நிலைமையை எண்ணிப் பார்த்தும் அவைகள் செயல் புரிகின்றன. இனப் பெருக்கத்தை எடுத்துக்கொள்வோம். முட்டை இடுவதற்குப் பல நாட்களுக்கு முன்பே காக்கைகள் கூடு கட்டத் தொடங்குகின்றன. குயில்கள் கூடு கட்டாவிடினும், தாமிட்ட முட்டைகளைத் தந்திரமாகக் காக்கைக் கூடுகளிலே சேர்க்கின்றன. இதுபோன்ற செய்கைகள் எல்லாம் புலன் உணர்வால் ஏற்பட்டவையல்ல. இவை இயல்பூக்கமாகச் (Instinct) செய்தவையாகும்.
எதிர் காலத்தில் விளைவனவற்றை எண்ணிப் பார்த்து மனிதன் பல செயல்களைப் புரிகிறான், அவன் பல நூல்களைக் கற்றுத் தேர்ந்து பட்டம் பெற முயல்கிறான். அப்படிப் பட்டம் பெறுவதால் விளையப் போகும் நன்மையை எண்ணியே அவன் பெரு முயற்சி எடுத்துக்கொள்ளுகிறான். பின்னால் வரப்போவதை முன்னலேயே எதிர்பார்க்கும் தன்மையானது புலன் உணர்வால் ஏற்படும் செயலாகாது. அவ்வாறு எதிர் பார்க்கக்கூடிய திறமைக்கு மனமே காரணமாக இருக்க வேண்டுமென்று ஏற்படுகிறது.
இனிமேல் வரப்போவதை எதிர்பார்த்துச் செயல் புரிவது போலவே இறந்த காலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை நினைவில் கொண்டு செயல் புரிவதும் மனத்தின் தன்மையாகும். மனம் என்பதொன்றில்லா விட்டால் நினைவு ஆற்றல் எவ்வாறு உண்டாகிறதென்பதை எளிதாக விளக்க முடியாது. நடத்தைக் கொள்கையர் அதற்கும் ஒரு வகையான விளக்கம் கூறுகிறார்கள். ஆனால், அது முற்றிலும் பொருத்தமானதாகத் தோன்றவில்லை.
திடீரென்று ஒரு புலி எதிர்ப்பட்டால் அச்சமெனும் உள்ளக் கிளர்ச்சி (Emotion) உண்டாகிறது. அந்த உள்ளக் கிளர்ச்சிக்கு, எதிரே தோன்றும் புலியே காரணம். நடத்தைக் கொள்கையர் கொள்கைப்படி மனமென்பதொன்றில்லாமலேயே இதை நாம் புரிந்து கொள்ளலாம். ஆனால் அச்சக் கிளர்ச்சிக்குக் காரணமாக எதிரிலே ஒன்றுமில்லாதபோதும் பல சமயங்களில் அச்சம் உண்டாகிறது. சிறந்த பண்டிதர்கள் அடங்கிய சபையிலே அடுத்த வாரம் நான் பேச ஏற்பாடாகியுள்ளது என்று வைத்துக்கொள்வோம்; எனக்கு இப்பொழுதே அச்சம் உண்டாகிறது. கவலை பிறக்கிறது. அந்தச் சபையிலே பண்டிதர்களில்லாமல் இளம் மாணவர்கள் மட்டும் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுவோம். எனக்கு அச்சக் கிளர்ச்சியே தோன்றுவதில்லை. மகிழ்ச்சியே பிறக்கிறது. பின்னும் வரப்போகும் இந்த நிலைமை இப்பொழுதே எனக்கு அச்சத் தையோ மகிழ்ச்சியையோ அளிக்கின்றது. மனம் என்பதொன்றில்லாவிட்டால் இது இயலாதென்று நிச்சயமாகக் கூறலாம்.
மெக்டூகல் (McDougall) என்ற உளவியலறிஞர் மனம் என்பதொன்றுண்டு என்பதை விளக்க ஒரு அழகான சான்று காட்டுகிறார்: ஒருவருக்கு, ‘உமது மகன் இறந்துவிட்டான்' என்று தந்தி வருகிறது. உடனே அவர் மூர்ச்சித்து விழுகிறார். பிறகு ஒருவாறு தன் உணர்வு பெற்று எழுந்திருந்தாலும் அவருடைய பிற்கால வாழ்க்கையே மாறுபட்டுவிடுகிறது. ஆனால் அதே வேளையில் அருகிலிருந்து அந்தத் தந்தியைப் படித்த மற்றொருவருக்கு இவ்வித மாறுதல்கள் ஏற்படுவதில்லை. முன்னவரிடம் சிறிது பரிவு காட்டுவதோடு அவர் உள்ளக் கிளர்ச்சி நின்றுவிடுகிறது. ஒரே தந்தி வேறுவேறான உள்ளக் கிளர்ச்சிக்குக் காரணமாக இருக்க வேண்டுமானால் அத்தந்தியில் கண்டுள்ள சொற்களில் பொருளை வேறுவேறாக அறிந்துகொள்ளக்கூடிய ஒரு ஆற்றல் இருக்கவேண்டும். அந்த ஆற்றலுக்கு நிலைக்களனாக இருப்பதுதான் மனம்.
எதிரிலே ஒரு திரையும் பல வண்ணங்களும் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அவைகள் ஒரு வகையான உணர்ச்சியை நமக்குத் தருகின்றன. ஆனால் திரையிலே வண்ணங்களை ஏற்றவாறு தீட்டிவிட்ட பிறகு வண்ணங்கள் என்றும் திரை என்றும் தனித்தனி உணர்ச்சி மறைந்து ஒரு அழகிய நங்கையின் உருவம் தென்படுகிறது. அவளுடைய உணர்ச்சிகளும் தோன்றுகின்றன.
முன்பு கண்ட வண்ணங்களே அந்த ஒவியத்தில் இருக்கின்றன. இவ்வாறு வண்ணங்களை ஒருங்கு சேர்த்து ஒரே பொருளாகப் பார்க்கும் ஆற்றல் நமக்கிருக்கின்றது. அந்த ஆற்றலைப் பற்றி எண்ணும் பொழுது மனம் என்பதொன்று இருக்க வேண்டுமென்று தோன்றுகிறது.
மேலே கூறியவற்றிலிருந்து உடலும் மூளையும் அல்லாமல் சூக்குமமாக மனம் ஒன்று இருக்கிறதென்று தெளிவாகும். மூளைக்கும் மனத்திற்கும் நெருங்கிய தொடர்பிருந்தாலும் மூளை வேறு; மனம் வேறு. மூளைக்கு அடங்காமல் வேலை செய்வது மனம். விமானத்தின் சாரதி எவ்வாறு அதன் எந்திரங்களைத் தன் விருப்பப்படி இயக்குவானோ அது போலவே உடலிலுள்ள உறுப்புகளைப் பெரியதோர் அளவிற்கு மனம் இயக்குகின்றது. மனம் வேகம் நிறைந்தது; ஒன்றாக இணைத்து நோக்கவல்லது எதிரே உள்ள நிலைமையால் ஏற்பட்ட உணர்விற்கேற்பச் செயல் புரிவதோடு எதிர் காலத்தையும் இறந்த காலத்தையும் எண்ணிச் செயல் புரியக்கூடியது. மனம் கற்பனை செய்யும் ஆற்றலும் வாய்ந்தது. இம்மனமே மனிதனுக்குத் தனிச் சிறப்பை அளிக்கின்றது.

Comments

Most Popular

உறையூர் மறைந்த வரலாறு - மயிலை சீனி. வேங்கடசாமி

ஊர்களும் நகரங்களும் சிற்சில காரணங்களால் அழிந்து படுவதுண்டு. எரிமலைகளாலும், ஆறுகளாலும், மண்காற்றி னாலும், கடற்பெருக்காலும் ஊர்கள் அழிகின்றன. இவ்வாறு அழிந்துபோன ஊர்கள் பலப்பல. கி.பி. முதலாம் நூற்றாண்டிலே கிரேக்க நாட்டிலே இருந்த பாம்பி என்னும் நகரம், வெசூவியஸ் என்னும் எரிமலை கக்கிய நெருப்பினாலும் சாம்பலினாலும் மூடுண்டு அழிந்துவிட்டது. அழிந்துபோன அந்நகரத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் தோண்டியபோது, புதையுண்ட வீதிகளையும், மனைகளையும், மக்களின் எலும்புக் கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். சிந்து நதிக்கரையிலே இருந்த ஹரப்பா, மொகஞ்சதரோ என்னும் நகரங்கள் வெள்ளப் பெருக்கினால் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்துவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன்னர் அவ்விடங்களை அகழ்ந்து பார்த்தபோது, அக் காலத்துக் கட்டடங்களையும், தெருக்களையும், பாண்டங் களையும், எலும்புக்கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். புதுச்சேரிக்குத் தெற்கே பத்து மைல் தொலைவில் உள்ள அரிக்கமேடு என்னும் கடற்கரைப் பட்டினம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தமிழ் நாட்டில் பேர்பெற்ற துறைமுகமாக இருந்தது. யவனர் முதலிய வெ...

மனமும் அதன் விளக்கமும் | இன நனவிலி மனம் | பெ. தூரன்

பி ராய்டு என்ற உளவியலார் நனவிலி மனத்தைப் பற்றி ஆராய்ந்து உளப் பகுப்பியல் முறையைத் தோற்றுவித்தார் என்று கண்டோம். உளப்பகுப்பியலின் தந்தை அவரே. அவரோடு ஆட்லரும், யுங் என்பவரும் மாணவராகப் பல ஆண்டுகள் வேலை செய்தனர். பிறகு இருவரும் கொள்கை வேறுபாடுகளால் வேறு வேறாகப் பிரிந்தனர். ஆட்லரின் பிற்காலக் கருத்தைப் பற்றி முன்பே கூறப்பட்டுள்ளது. இங்கு யுங்கின் கொள்கையைச் சுருக்கமாக ஆராய்வோம். நனவிலி மனத்தைப் பிற்காலத்தில் பிராய்டு ‘இத்’ என்றும், அதில் எழும் ஆற்றலை ‘லிபிடோ’ (Libido) என்றும் குறிப்பிட்டார். லிபிடோ பாலியல்பு வாய்ந்தது என்றும், மனக் கோளாறுகளெல்லாம் இது ஒழுங்காக அமையாததால் ஏற்படுகின்றன என்றும், இந்தப் பாலியல்பு குழவிப் பருவ முதற்கொண்டே தொடங்குகிறதென்றும் கருதினார். நனவிலி மனம் குழவிப் பருவத்தில் சிறிதாக இருந்தபோதும், வயது ஆக ஆக அக்குழந்தைக்குத் தடைகளும் விதிகளும் பெருகுகின்ற காரணத்தினால் நனவிலி மனத்தில் பல விதமான இச்சைகளும் ஆர்வங்களும் மிகுதியாகி நனவிலி மனம் விரிவடைகின்றது. அதனால்தான் நனவிலி மனம் நனவு மனத்தினின்றும் வளர்ந்ததேயாகும் என்று பொதுப்படையாகக் கூறுவதுண்டு. இக் கருத்தைப் பல ந...

பழங்காலத்து எழுதுகருவிகள் - மயிலை சீனி. வேங்கடசாமி

இந்தக் காலத்திலே உலகம் முழுவதும் காகிதத்தாளும் பேனாவும் எழுதுகருவிகளாகப் பயன்பட்டுவருகின்றன. இவை எழுத்து வேலைக்குப் பெரிதும் வாய்ப்பாகவும் எளிதாகவும் அமைந்திருக்கின்றன. ஆனால், காகிதத்தாள் வருவதற்கு முன்பு, பண்டைக் காலத்திலே இவ்வளவு எளிதானவும் வாய்ப்பானவும் ஆன எழுதுகருவிகள் இல்லை. பண்டைக் காலத்திலே உலக மக்கள் எவ்விதமான எழுதுகருவிகளை வழங்கிவந்தார்கள் என்பது பற்றியும், பின்னர் காகிதத்தாள் எவ்வாறு நடைமுறையில் வந்தது என்பதைப் பற்றியும் ஈண்டுக் கூறுவோம். களிமண் சுவடிகள் சிறிய ஆசியா தேசத்தில் யூப்ரெடிஸ், டைகிரிஸ் ஆறுகள் பாய்கிற இடத்தில் இருந்த கால்டியா, ஸைரியா நாட்டு மக்கள் ஆதிகாலத்தில் களிமண்ணை எழுதுகருவியாகக் கொண்டிருந் தார்கள். களிமண்ணைப் பிசைந்து சிறுசிறு பலகைகளைப்போல் அமைத்து, அப்பலகை காய்ந்து போவதற்கு முன்னமே ஆணி போன்ற கருவியினால் எழுதி உலரவைத்துப் புத்தகமாக உபயோகித்தார்கள்; அவர்கள் எழுதிய எழுத்துகளுக்குக் கூனிபார்ம் எழுத்து என்று பெயர் கூறுவர். அவர்கள் எழுதிய களிமண் சுவடிகளைப் புத்தகசாலையில் வைத்துப் போற்றி னார்கள். அவ்வாறு போற்றி வைக்கப்பட்டிருந்த களிமண் சுவடிகள் பல, சமீப...