Skip to main content

மனமும் அதன் விளக்கமும் | மனமே பொய்யா? | பெ. தூரன்


நுணுகி ஆராய்கின்றபோதுதான் பல ஐயங்கள் பிறக்கின்றன. மேற்போக்காகப் பார்க்கின்றபோது எளிதாகத் தோன்றியவை ஆழ்ந்து நோக்கும்போது மயக்கத்தைத் தருகின்றன; பலவகையான முரண்பட்ட கருத்துகளுக்குக் காரணமாகின்றன. மனத்தைப் பற்றிய ஆராய்ச்சியிலும் இதே தொல்லைதான். மனம் என்பது என்ன என்று ஆராயப் புகுந்த சிலர் மனம் என்பதே இல்லை என்று முடிவு கட்டியுள்ளார்கள். இவர்கள் கூறுவதை ஒத்துக்கொள்ள முடியாது என்று வேறு சிலர் சொல்லுகிறார்கள்.
நடத்தைக் கொள்கையர் கூறுவதுபோலப் புலன்களின் வழியாக மூளைக்குச் சென்ற புலன் உணர்வு (Sensation) களுக்குத் தக்கவாறு செயல் நிகழ்கின்றதென்றும் அச்செயலுக்குக் காரணமாக மனம் என்பதொன்று தேவையில்லை என்றும் கொள்வதிலேயும் பல ஐயங்கள் கிளம்புகின்றன. புலனுணர்வானது நரம்புகளின் வழியே மூளைக்குச் செல்கின்றது; அதற்குப் பொருத்தமான செயலுணர்வு வேறு சில நரம்புகளின் வழியாக உறுப்புகளுக்குச் செல்கின்றது. புலன் உணர்வைக்கொண்டு செல்லும் நரம்புகளுக்கும் செயல் உணர்வைக்கொண்டு செல்லும் நரம்புகளுக்குமிடையே தொடர்பை மூளையானது எந்திரம்போல உண்டாக்குகிறது என்று சொல்லும்போது எல்லாம் எளிதாகத்தான் காண்கிறது. இதைச் செய்ய மனமே தேவையில்லையென்றும் தோன்றுகிறது. ஆனால் இந்த ஆராய்ச்சி அவ்வளவு எளிதானதல்ல. மனத்தை அவ்வளவு எளிதாக ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. புலன் உணர்வால் மட்டும் செயல் நிகழ்கிறதென்றால் புலனுணர்விற்குக் காரணமாக ஏதாவதொன்று முன்னாலிருக்க வேண்டும். எதிர்காலத்திலே தோன்றக்கூடிய ஒன்று இன்று புலன் உணர்விற்குக் காரணமாக இருக்க முடியாது. எதிரில் ஒரு பழம் இருந்தால் அதைப் பற்றிய உணர்வு கண்களின் வழியாக மூளைக்குச் செல்லும். மூளையின் செய்கையால் அப்பழத்தை எடுத்துக்கொள்ள வேண்டுமென்ற செயல் உணர்வு கைகளுக்கு வரும். அதனால், பழத்தை எடுத்துக்கொள்ளும் செயல் நிகழும். மெய்தான். ஆனால் பழம் எதிரிலே இல்லாவிட்டால் அந்தச் செயல் நிகழ முடியாது.
உயிர்ப் பிராணிகள் இதுபோன்ற புலன் உணர்வின் விளைவாகவே செயல் புரிகிறதில்லை. பின்னால் ஏற்படப்போகும் ஒரு நிலைமையை எண்ணிப் பார்த்தும் அவைகள் செயல் புரிகின்றன. இனப் பெருக்கத்தை எடுத்துக்கொள்வோம். முட்டை இடுவதற்குப் பல நாட்களுக்கு முன்பே காக்கைகள் கூடு கட்டத் தொடங்குகின்றன. குயில்கள் கூடு கட்டாவிடினும், தாமிட்ட முட்டைகளைத் தந்திரமாகக் காக்கைக் கூடுகளிலே சேர்க்கின்றன. இதுபோன்ற செய்கைகள் எல்லாம் புலன் உணர்வால் ஏற்பட்டவையல்ல. இவை இயல்பூக்கமாகச் (Instinct) செய்தவையாகும்.
எதிர் காலத்தில் விளைவனவற்றை எண்ணிப் பார்த்து மனிதன் பல செயல்களைப் புரிகிறான், அவன் பல நூல்களைக் கற்றுத் தேர்ந்து பட்டம் பெற முயல்கிறான். அப்படிப் பட்டம் பெறுவதால் விளையப் போகும் நன்மையை எண்ணியே அவன் பெரு முயற்சி எடுத்துக்கொள்ளுகிறான். பின்னால் வரப்போவதை முன்னலேயே எதிர்பார்க்கும் தன்மையானது புலன் உணர்வால் ஏற்படும் செயலாகாது. அவ்வாறு எதிர் பார்க்கக்கூடிய திறமைக்கு மனமே காரணமாக இருக்க வேண்டுமென்று ஏற்படுகிறது.
இனிமேல் வரப்போவதை எதிர்பார்த்துச் செயல் புரிவது போலவே இறந்த காலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை நினைவில் கொண்டு செயல் புரிவதும் மனத்தின் தன்மையாகும். மனம் என்பதொன்றில்லா விட்டால் நினைவு ஆற்றல் எவ்வாறு உண்டாகிறதென்பதை எளிதாக விளக்க முடியாது. நடத்தைக் கொள்கையர் அதற்கும் ஒரு வகையான விளக்கம் கூறுகிறார்கள். ஆனால், அது முற்றிலும் பொருத்தமானதாகத் தோன்றவில்லை.
திடீரென்று ஒரு புலி எதிர்ப்பட்டால் அச்சமெனும் உள்ளக் கிளர்ச்சி (Emotion) உண்டாகிறது. அந்த உள்ளக் கிளர்ச்சிக்கு, எதிரே தோன்றும் புலியே காரணம். நடத்தைக் கொள்கையர் கொள்கைப்படி மனமென்பதொன்றில்லாமலேயே இதை நாம் புரிந்து கொள்ளலாம். ஆனால் அச்சக் கிளர்ச்சிக்குக் காரணமாக எதிரிலே ஒன்றுமில்லாதபோதும் பல சமயங்களில் அச்சம் உண்டாகிறது. சிறந்த பண்டிதர்கள் அடங்கிய சபையிலே அடுத்த வாரம் நான் பேச ஏற்பாடாகியுள்ளது என்று வைத்துக்கொள்வோம்; எனக்கு இப்பொழுதே அச்சம் உண்டாகிறது. கவலை பிறக்கிறது. அந்தச் சபையிலே பண்டிதர்களில்லாமல் இளம் மாணவர்கள் மட்டும் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுவோம். எனக்கு அச்சக் கிளர்ச்சியே தோன்றுவதில்லை. மகிழ்ச்சியே பிறக்கிறது. பின்னும் வரப்போகும் இந்த நிலைமை இப்பொழுதே எனக்கு அச்சத் தையோ மகிழ்ச்சியையோ அளிக்கின்றது. மனம் என்பதொன்றில்லாவிட்டால் இது இயலாதென்று நிச்சயமாகக் கூறலாம்.
மெக்டூகல் (McDougall) என்ற உளவியலறிஞர் மனம் என்பதொன்றுண்டு என்பதை விளக்க ஒரு அழகான சான்று காட்டுகிறார்: ஒருவருக்கு, ‘உமது மகன் இறந்துவிட்டான்' என்று தந்தி வருகிறது. உடனே அவர் மூர்ச்சித்து விழுகிறார். பிறகு ஒருவாறு தன் உணர்வு பெற்று எழுந்திருந்தாலும் அவருடைய பிற்கால வாழ்க்கையே மாறுபட்டுவிடுகிறது. ஆனால் அதே வேளையில் அருகிலிருந்து அந்தத் தந்தியைப் படித்த மற்றொருவருக்கு இவ்வித மாறுதல்கள் ஏற்படுவதில்லை. முன்னவரிடம் சிறிது பரிவு காட்டுவதோடு அவர் உள்ளக் கிளர்ச்சி நின்றுவிடுகிறது. ஒரே தந்தி வேறுவேறான உள்ளக் கிளர்ச்சிக்குக் காரணமாக இருக்க வேண்டுமானால் அத்தந்தியில் கண்டுள்ள சொற்களில் பொருளை வேறுவேறாக அறிந்துகொள்ளக்கூடிய ஒரு ஆற்றல் இருக்கவேண்டும். அந்த ஆற்றலுக்கு நிலைக்களனாக இருப்பதுதான் மனம்.
எதிரிலே ஒரு திரையும் பல வண்ணங்களும் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அவைகள் ஒரு வகையான உணர்ச்சியை நமக்குத் தருகின்றன. ஆனால் திரையிலே வண்ணங்களை ஏற்றவாறு தீட்டிவிட்ட பிறகு வண்ணங்கள் என்றும் திரை என்றும் தனித்தனி உணர்ச்சி மறைந்து ஒரு அழகிய நங்கையின் உருவம் தென்படுகிறது. அவளுடைய உணர்ச்சிகளும் தோன்றுகின்றன.
முன்பு கண்ட வண்ணங்களே அந்த ஒவியத்தில் இருக்கின்றன. இவ்வாறு வண்ணங்களை ஒருங்கு சேர்த்து ஒரே பொருளாகப் பார்க்கும் ஆற்றல் நமக்கிருக்கின்றது. அந்த ஆற்றலைப் பற்றி எண்ணும் பொழுது மனம் என்பதொன்று இருக்க வேண்டுமென்று தோன்றுகிறது.
மேலே கூறியவற்றிலிருந்து உடலும் மூளையும் அல்லாமல் சூக்குமமாக மனம் ஒன்று இருக்கிறதென்று தெளிவாகும். மூளைக்கும் மனத்திற்கும் நெருங்கிய தொடர்பிருந்தாலும் மூளை வேறு; மனம் வேறு. மூளைக்கு அடங்காமல் வேலை செய்வது மனம். விமானத்தின் சாரதி எவ்வாறு அதன் எந்திரங்களைத் தன் விருப்பப்படி இயக்குவானோ அது போலவே உடலிலுள்ள உறுப்புகளைப் பெரியதோர் அளவிற்கு மனம் இயக்குகின்றது. மனம் வேகம் நிறைந்தது; ஒன்றாக இணைத்து நோக்கவல்லது எதிரே உள்ள நிலைமையால் ஏற்பட்ட உணர்விற்கேற்பச் செயல் புரிவதோடு எதிர் காலத்தையும் இறந்த காலத்தையும் எண்ணிச் செயல் புரியக்கூடியது. மனம் கற்பனை செய்யும் ஆற்றலும் வாய்ந்தது. இம்மனமே மனிதனுக்குத் தனிச் சிறப்பை அளிக்கின்றது.

Comments

Most Popular

இரு சகோதரர்கள்

  [ அ. கி. கோபாலன், அ. கி. ஜயராமன் நேர்காணல் ] நேர்கண்டவர்: எஸ். குரு படங்கள்: திரு. சுதாகர் நோபல் பரிசு பெற்ற நாவல்களைப் பதிப்பித்த அ. கி. கோபாலன் நீங்கள் பதிப்பாளரானது எப்படி ? தென்னாற்காடு மேலக்குமாரமங்கலம் என் சொந்த ஊர். எங்கள் கிராமத்தில் நான்காவது வகுப்பு படித்தேன். கிராமத்தில் எங்கள் அப்பா விவசாயம் செய்துகொண்டிருந்தார். நிறைய நஞ்சை நிலம் இருந்தது. பங்காளிக் காய்ச்சலினால் எங்கள் சொத்துகள் பறிபோயின. முதலில் என் அண்ணன் அ. கி. ஜெயராமன் சென்னைக்கு வந்து ஒரு ஹோட்டலில் சர்வராகச் சேர்ந்துவிட்டு , அப்புறம் என்னை ஊரிலிருந்து வரவழைத்து , என்னையும் சர்வராகச் சேர்த்துவிட்டார். சைனா பஜார் பழைய ஆரிய பவனுக்கு எதிரே ஆனந்த லட்சுமி பவன் என்று இருந்தது. அங்குதான் சர்வராகச் சேர்ந்தோம். இட்லி அரையணா , காபி முக்காலணா , பீடா காலணா , ஸ்பெஷல் பீடா அரையணா விற்ற காலம் அது. ஹோட்டலுக்கு அருகில் ச. சு. சங்கரலிங்கக் கவிராயர் என்ற நாடகாசிரியர் தங்கியிருந்தார். சங்கரலிங்கக் கவிராயர் , சங்கரதாஸ் சுவாமிகளுக்கு இணையானவர். அவரிடம் நாடகப் பாடல்கள் கேட்டேன். ஹோட்டலில் சக ஊழியர்களிடம் சொல்லிவிட்டு , ஆ...

மனமும் அதன் விளக்கமும் | கனவின் பொருள் | பெ. தூரன்

ப ல கனவுகள் சிக்கல் நிறைந்திருக்கின்றன; அவற்றில் தோன்றும் நிகழ்ச்சிகள் மேலாகப் பார்க்கும்போது பொருளற்றவைகளாகவும் இருக்கின்றன. கோ. என்பவர் கண்ட ஒரு கனவை இங்கே ஆராய்வோம். “ஏதோ ஒரு பெரிய கோயில். அங்கே நானும் என் நண்பர்கள் சி. வே. மா. ஆகிய மூவரும் சேர்ந்து ஒருவனைக் கொலை செய்தோம். அவனுடைய மூக்கை மாத்திரம் அறுத்துச் சந்தனத்தில் வைத்துச் சாமிக்கு வைத்தோம். பிணம் வெளியிலேயே கிடந்தது. சி. தான் மூக்கை அறுத்தவர். கடவுளைத் தொழுவதற்காகப் பலர் ஒரு மோட்டார்க் காரில் வந்தார்கள். உடனே நான் பிணத்தைத் துரக்கிக் கோபுரத்தின் மேல் வீசினேன். இதை எனது ஆசிரியர் ஒருவர் பார்த்துக் கொண்டார்.” “நான் ஒடி வந்துவிட்டேன். வழியில் என் நண்பர் வீ. யைச் சந்தித்து வேறொருவனிடம் சைக்கிள் வாங்கி இருவரும் ஏறிக்கொண்டு ஊருக்குச் சென்றோம். வழியில் சி. தம் அண்ணனிடம் ஒன்றும் நடக்காதது போல் வந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கொலை செய்துவிட்டு இவர் இவ்வளவு தாராளமாக வெளியில் நடமாடுகிறாரே என்று வியந்தேன்.” "நாங்கள் ஒரு சத்திரத்தில் புகுந்துகொண்டிருந்தோம். ஆனால் சி. வேறு சில நண்பர்களிடம் சாலையில் சென்றுகொண்டிருந்தார்.” ...

ஐரோப்பியர் வருகை - மயிலை சீனி. வேங்கடசாமி

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே, மேல் நாட்டார் நமது இந்தியா தேசத்துடன், சிறப்பாகத் தென் இந்தியாவுடன், வர்த்தகத் தொடர்பு கொண்டிருந்ததாகத் தெரிகிறது. யவனர் (உரோமர், கிரேக்கர்) என்னும் ஐரோப்பிய ஜாதியார், சேர நாட்டின் கடற்கரைப் பட்டினங்களிற் பண்ட சாலைகள் அமைத்து, அவற்றில் நமது நாட்டுச் சரக்குகளைச் சேமித்து வைத்துக் கப்பல்கள் மூலமாக ஐரோப்பிய நாடுகளுக்குக் கொண்டு போனார்கள். மதுரை, புகார், (காவிரிப்பூம் பட்டினம்) முதலிய நகரங்களிலும் யவனர் வசித்து வந்ததாகத் தமிழ் நூல்களினால் அறிகிறோம். கி.மு. 22 இல் மதுரையில் அரசாண்டிருந்த பாண்டிய மன்னன், அகஸ்தஸ் ஸீஸர் (Augustus Ceasar) என்னும் யவன அரசனிடம் தூதுவர்களை அனுப்பினான் என்று ஸ்த்ராபோ (Starbo) என்னும் மேல் நாட்டாசிரியர் எழுதியிருக்கிறார். தமிழருக்கும் யவனருக்கும் இருந்த இவ்வர்த்தகத் தொடர்பு, கி.பி. 47 முதல் மேன்மேலும் அதிகப்பட்டது. ஏனென்றால், அந்த ஆண்டில் ஹிப்பலஸ் (Hippalus) என்பவர், இந்து சமுத்திரத்தில் வீசுகிற வட கிழக்கு தென் மேற்குப் பருவக் காற்றைக் கண்டுபிடித்தார். இப்பருவக் காற்று வீசுகிற காலங்களில் பிரயாணம் செய்வதால் மாலுமிகள் விரைவாகக் க...