Skip to main content

தன் வழிச்சேரல் - முன்னுரை: சுரேஷ் பிரதீப்



2016-ஆம் ஆண்டு வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டது. அவ்விழாவுக்கு நானும் சென்றிருந்தேன். நான் கலந்து கொள்ளும் முதற்பெரும் இலக்கிய விழா. ஒளிர்நிழலில் முதல் சில அத்தியாயங்களை அப்போது எழுதியிருந்தேன். இரண்டு நாட்களில் நான் அதிகமாக யாருடனும் பேசவில்லை எனினும் jeyamohan.in தளத்தில் வெளியாகி இருந்த என்னுடைய சில கட்டுரைகளைப் படித்துவிட்டு நண்பர்கள் சிலர் அறிமுகம் செய்து கொண்டனர். விழாவின் முதல் நாள் மாலை ஒரு "இலக்கிய வினாடி வினா" நிகழ்ந்தது. பெரும்பாலும் மிகக் கடினமான வினாக்கள். எனக்கு பதில் தெரிந்தது ஒரு சில கேள்விகளுக்கு மட்டுமே. அந்த நிகழ்வு முடிந்த பிறகு மனதில் ஒரு சோர்வும் சோர்வுக்கு பின்னர் வரக்கூடிய தீவிரமும் கூடியிருந்தது.


என்னுடைய வாசிப்பு எந்தப் புள்ளியில் நிற்கிறது என்று பரிசோதித்துக் கொள்ள அப்போது எண்ணியிருந்தேன். அந்த எண்ணத்திற்கு வடிவமளிக்கும் வகையில் அடுத்த சில வாரங்களில் jeyamohan.in-ல் எழுத்தாளர் சு.வேணுகோபால் குறித்த ஒரு கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டது. அதன் விதிமுறைகள் சற்று சிக்கலானவை. ஏற்கனவே எழுதப்பட்ட ஒரு கட்டுரையின் நீட்சியாக அமைய வேண்டும். இறுதி நாள் கெடுவைத் தாண்டிய பிறகு மிகுந்த தயக்கத்துக்கு பின் ஜெயமோகனுக்கு என்னுடைய கட்டுரையை இரண்டு பகுதிகளாக ஒரு வார இடைவெளியில் அனுப்பினேன். இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள தீமையும் மானுடமும் என்ற கட்டுரை அது. அக்கட்டுரையை வாசித்த பல நண்பர்கள் என்னை அக்கட்டுரை எழுதியவனாகவே நினைவில் வைத்திருப்பதை பின்னர் அறிந்தேன்.

விமர்சனக் கட்டுரைகளின் நோக்கம் ஒருவறாக எனக்கு பிடிபடத் தொடங்கியது அதன்பிறகு தான். இலக்கிய விமர்சனத்தின் அதிகபட்ச பயன் ஒரு படைப்பினை வாசிக்கச் செய்வது தான் என்பதைக் கண்டு கொண்டேன். பிடித்த எழுத்தாளர் பிடித்த மாதிரியான எழுத்து என்று வெறும் சிலாகிப்புகளில் நின்று விடும் வாசிப்பனுபவக் குறிப்புகளும் புரியாத மொழியில் பண்ணிப் பண்ணி எழுதப்படும் விமர்சனக் கட்டுரைகளும் இலக்கிய வாசகனுக்கு எவ்வகையிலும் பயன் தராதவை என்று அவ்வகை விமர்சனங்களை தொடர்ந்து வாசிக்கிறவனாக என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

அவ்வகையில் இக்கட்டுரைகள் விவாதிக்கப்படும் படைப்புகளை நோக்கி வாசகர்களை கொண்டு செல்லும் என்று உறுதியாகத் தெரிகிறது. கடந்த இரண்டரை வருடங்களில் என்னை பாதித்த எல்லாப் படைப்புகளையும் குறித்து எழுதியிருந்தாலும் அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டே இந்த பதினேழு கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன.

கட்டுரைகளை வெளியிட்ட jeyamohan.in, சொல்வனம், பதாகை, வல்லினம் தளங்களுக்கும், நூலின் மென்பிரதியை செம்மை செய்து முகப்புப் படத்தினை வடிவமைத்துத் தந்த நண்பர் ஸ்ரீநிவாச கோபாலனுக்கும் நன்றி.

சுரேஷ் பிரதீப்
23.07.2018

தன் வழிச்சேரல் அமேசான் கிண்டில் பதிப்பு வாங்க... bit.ly/ThanVazhichcheral

Comments

Most Popular

மணிபல்லவம் - ஜம்பு கொல பட்டினம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்ககாலத்து நூலாகிய மணிமேகலையிலே, இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப்பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள பழைய பௌத்த நூல்களிலேயும் இலங்கைத்தீவின் வடகோடியில் இருந்த ஜம்புகோல் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. தமிழ் நூலில் கூறப்படும் குறிப்பு களைக் கொண்டும் பாலி மொழி நூல்களில் கூறப்படும் குறிப்புகளைக் கொண்டும் மணிபல்லவமும் ஜம்புகொல பட்டினமும் ஒரே இடம் என்று துணியலாம். பெயர் வேறுபடு வதிலிருந்து இரண்டும் வெவ்வேறிடங்கள் எனக் கருதும்படி இருந்தாலும், இவைகளைப்பற்றிக் கூறப்படும் செய்திகளை உற்றுநோக்கினால், இரண்டும் ஒன்றே என்பது ஐயமற விளங்குகிறது. இதனை ஈண்டு ஆராய்வோம். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலேதான் மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்தது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை கூறுவது காண்க. சோழ நாட்டின் துறைமுகப்பட்டினமாகிய புகார்ப்பட்டினத்தில் இருந்து தெற்கே 30 யோசனை தொலைவில் மணிபல்லவம் இருந்தது (...

‘எழுத்து’ - 119 இதழ்களின் பொருளடக்கம்

எழுத்து 1: ஜனவரி 1959 எழுத்து வளர - தலையங்கம் சாகித்ய அகாடமி தமிழ்ப் பரிசு – க.நா.சு. பெட்டிக்கடை நாரணன் – ந. பிச்சமூர்த்தி கவிதை - மயன் சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்: ஒரு தொகுப்புக்கான சில குறிப்புகள் – க. நா. சுப்ரமண்யம் எழுதுவதெல்லாம்… - சிட்டி தாழை பூத்தது – பெ. கோ. சுந்தர்ராஜன் பாரதிக்குப்பின்-1: டாக்டர் சாமிநாதையர் – க.நா.சு. கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா விண்ணும் மண்ணும் – ந. சிதம்பரசுப்ரமண்யன் இன்றைய தமிழ் இலக்கிய விமர்சன தோரணை – சி. சு. செல்லப்பா வானம் - மயன் கெளமாரி – சாலிவாஹனன் உண்மைதேடியின் அனுபவ இலக்கிய வடிவங்கள் – தி. ஜானகிராமன்   எழுத்து 2: பிப்ரவரி 1959 வாடைக் காற்று - அசுவதி எழுத்தும் அதன் வாசகர்களும் இலக்கியமும் குழுவும் எஸ். வையாபுரிப்பிள்ளை – க. நா. சுப்ரமண்யம் திறனாய்வு - வில்லி அருளும் பொருளும் – ந. சிதம்பர சுப்ரமண்யன் கவி – வேதனை – தி. சோ. வேணுகோபாலன் தர்க்கம் - ஜெயகாந்தன் அன்று வருவாரோ ? – கு. அழகிரிசாமி வெற்றியின் பண்பு - பராங்குசம் தரிசனம் - மயன் கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா ...

தமிழில் வசனநடை | க. நா. சுப்ரமண்யம்

எல்லா மொழிகளிலுமே இலக்கிய ரீதியாகக் கவனிக்கும்போது கவிதை என்பதை ஒட்டிப் பின்னர்தான் வசன நடை என்பது எழுந்திருக்கிறது என்பது வெளிப்படை . தமிழும் அதற்கு விலக்கல்ல . தமிழ்க் கவிதை கி . மு . ஐந்தாயிரத்தில் தோன்றியது என்று வைத்துக்கொண்டால் , கவிதை தோன்றி ஆறாயிரத்து எழுநூற்றிருபது வருஷங்களுக்குப் பிறகுதான் வசன நடை தோற்றிற்று . தமிழ்க் கவிதை தோன்றியது கி . பி . மூன்றாம் நூற்றாண்டை ஒட்டியே என்று ஏற்றுக்கொண்டால் , வசனம் தோன்றியது ஒரு ஆயிரத்தி நானூறு வருஷங்களுக்குப் பிறகு என்றுதான் சொல்ல வேண்டும் . நான் இந்த இரண்டாவது காலவரையே நியாயமானது என்று எண்ணுபவன் . எஸ் . வையாபுரிப் பிள்ளை அவர்களின் ஆராய்ச்சிகளும் இதையே வற்புறுத்துகின்றன என்று தான் சொல்லவேண்டும் . உரை என்று சொல்லப்படுவதும் வசனமும் ஒன்றுதான் என்று அபிப்பிராயம் தெரிவித்துக்கொண்டிருப்பதில் சாரமில்லை . உரை இருந்திருக்கிறது . தமிழர்கள் ஊமைகள் அல்ல , ஆரம்ப காலத்திலிருந்தே உரையாடிக்கொண்டுதான் வந்திருக்கிறார்கள் என்று சொல்வது ஹாஸ்யமாகப் பொருத்தமாக இருக்கும் . உ...