Skip to main content

தன் வழிச்சேரல் - முன்னுரை: சுரேஷ் பிரதீப்



2016-ஆம் ஆண்டு வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டது. அவ்விழாவுக்கு நானும் சென்றிருந்தேன். நான் கலந்து கொள்ளும் முதற்பெரும் இலக்கிய விழா. ஒளிர்நிழலில் முதல் சில அத்தியாயங்களை அப்போது எழுதியிருந்தேன். இரண்டு நாட்களில் நான் அதிகமாக யாருடனும் பேசவில்லை எனினும் jeyamohan.in தளத்தில் வெளியாகி இருந்த என்னுடைய சில கட்டுரைகளைப் படித்துவிட்டு நண்பர்கள் சிலர் அறிமுகம் செய்து கொண்டனர். விழாவின் முதல் நாள் மாலை ஒரு "இலக்கிய வினாடி வினா" நிகழ்ந்தது. பெரும்பாலும் மிகக் கடினமான வினாக்கள். எனக்கு பதில் தெரிந்தது ஒரு சில கேள்விகளுக்கு மட்டுமே. அந்த நிகழ்வு முடிந்த பிறகு மனதில் ஒரு சோர்வும் சோர்வுக்கு பின்னர் வரக்கூடிய தீவிரமும் கூடியிருந்தது.


என்னுடைய வாசிப்பு எந்தப் புள்ளியில் நிற்கிறது என்று பரிசோதித்துக் கொள்ள அப்போது எண்ணியிருந்தேன். அந்த எண்ணத்திற்கு வடிவமளிக்கும் வகையில் அடுத்த சில வாரங்களில் jeyamohan.in-ல் எழுத்தாளர் சு.வேணுகோபால் குறித்த ஒரு கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டது. அதன் விதிமுறைகள் சற்று சிக்கலானவை. ஏற்கனவே எழுதப்பட்ட ஒரு கட்டுரையின் நீட்சியாக அமைய வேண்டும். இறுதி நாள் கெடுவைத் தாண்டிய பிறகு மிகுந்த தயக்கத்துக்கு பின் ஜெயமோகனுக்கு என்னுடைய கட்டுரையை இரண்டு பகுதிகளாக ஒரு வார இடைவெளியில் அனுப்பினேன். இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள தீமையும் மானுடமும் என்ற கட்டுரை அது. அக்கட்டுரையை வாசித்த பல நண்பர்கள் என்னை அக்கட்டுரை எழுதியவனாகவே நினைவில் வைத்திருப்பதை பின்னர் அறிந்தேன்.

விமர்சனக் கட்டுரைகளின் நோக்கம் ஒருவறாக எனக்கு பிடிபடத் தொடங்கியது அதன்பிறகு தான். இலக்கிய விமர்சனத்தின் அதிகபட்ச பயன் ஒரு படைப்பினை வாசிக்கச் செய்வது தான் என்பதைக் கண்டு கொண்டேன். பிடித்த எழுத்தாளர் பிடித்த மாதிரியான எழுத்து என்று வெறும் சிலாகிப்புகளில் நின்று விடும் வாசிப்பனுபவக் குறிப்புகளும் புரியாத மொழியில் பண்ணிப் பண்ணி எழுதப்படும் விமர்சனக் கட்டுரைகளும் இலக்கிய வாசகனுக்கு எவ்வகையிலும் பயன் தராதவை என்று அவ்வகை விமர்சனங்களை தொடர்ந்து வாசிக்கிறவனாக என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

அவ்வகையில் இக்கட்டுரைகள் விவாதிக்கப்படும் படைப்புகளை நோக்கி வாசகர்களை கொண்டு செல்லும் என்று உறுதியாகத் தெரிகிறது. கடந்த இரண்டரை வருடங்களில் என்னை பாதித்த எல்லாப் படைப்புகளையும் குறித்து எழுதியிருந்தாலும் அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டே இந்த பதினேழு கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன.

கட்டுரைகளை வெளியிட்ட jeyamohan.in, சொல்வனம், பதாகை, வல்லினம் தளங்களுக்கும், நூலின் மென்பிரதியை செம்மை செய்து முகப்புப் படத்தினை வடிவமைத்துத் தந்த நண்பர் ஸ்ரீநிவாச கோபாலனுக்கும் நன்றி.

சுரேஷ் பிரதீப்
23.07.2018

தன் வழிச்சேரல் அமேசான் கிண்டில் பதிப்பு வாங்க... bit.ly/ThanVazhichcheral

Comments

Most Popular

கு. ப. ராஜகோபாலன் என்கிற முழுமை | க. நா. சுப்ரமண்யம்

கு. ப. ராஜகோபாலனின் கதைகளை , அவை எழுதப்பட்டு சற்றேறக் குறைய ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு இன்று படித்துப் பார்க்கும்போது கூட அவர் லாகவமும் , கதை நடத்தும் திறனும் , உருவ , கருத்து அமைதியுடன் மிகவும் சிறப்பாகவே உள்ளத்தில் தட்டுகின்றன. வாழ்க்கையை முழுப்பார்வையுடன் பார்ப்பது அவர்க்கு மிகவும் சிறிய கதைகளிலும் கூடச் சாத்தியமாக இருந்திருக்கிறது. ஆண் , பெண் உறவுகளை , பால் உணர்ச்சிகளை அப்பட்டமாக , உரக்க , மனத்தையும் கண்ணையும் ஒருங்கே உறுத்துகிற மாதிரிச் சொல்வது இன்று பலருக்கும் கைவந்த கலையாக இருக்கிறது. ஆனால் , அதையே சூக்ஷ்மமாகச் செய்கிற காரியம் , கலையுணர்ச்சியுடன் முழுவதும் சொல்லாமல் சொல்லிவிடுகிற காரியம் கு.ப.ரா . வுக்கு மிகவும் சிறப்பாக கைவந்திருந்ததை இன்று படிக்கும்போதும் உணர முடிகிறது. இந்த மென்மையும் , கலை உணர்ச்சியும் பக்கம் பக்கமாக பச்சையாக எதை எதையோ எழுதுகிற தமிழ் எழுத்தாளர்களுக்கு எட்டாத ஒரு விஷயம். அவர்கள் கு.ப.ரா . விடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். புத்தனுடைய துறவுக்கு அசுவகோஷன் முதல் எத்தனையோ இலக்கியாசிரியர்கள் பலர் காரணங்கள் கண்டு சொல்லிவிட்டார்கள். மூப்பு , நோய் , சாவு...

எழுத்து ஆக்கம் - மயிலை சீனி. வேங்கடசாமி

பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னே மனிதன் பேசக் கற்றுக்கொண்டான். அஃதாவது, தன் எண்ணங்களைப் பேச்சின் மூலமாகப் பிறருக்குத் தெரிவிக்கக் கற்றுக் கொண்டான். மனிதன் கற்றுக்கொண்ட பேச்சு அவனை மிருகத் தன்மையிலிருந்து மனிதத் தன்மைக்கு உயர்த்திவிட்டது. பின்னும், பல காலம் சென்ற பிறகு மனிதன், தன் எண்ணங் களையும் கருத்துக்களையும், எழுத்து மூலமாகப் பிறருக்குத் தெரிவிக்க முயற்சி செய்தான், முயற்சி செய்து அதில் வெற்றி அடைந்தான். எழுத்துக்களைக் கண்டுபிடித்து அதன் மூலமாகத் தன் கருத்துக்களை மற்றவர்களுக்குத் தெரிவிக்கக் கற்றுக்கொண்ட வித்தையானது, மனிதனை மிக உயர்ந்த நாகரிகத்தை அடையச் செய்துவிட்டது. எழுதப் படிக்கக் கற்றுக்கொள்ளாமல், வெறும் பேச்சோடு மட்டும் நின்று விட்டிருந்தால், இப்போது மனிதன் அடைந்திருக்கிற உயர்ந்த நாகரிக நிலையை அடைந்திருக்க முடியாது. எழுத்தைக் கண்டுபிடித்த ஆதிகாலத்து மனிதர், இப்போது உலகத்திலே வழங்குகிற ஒலி எழுத்துக்களைக் கண்டுபிடிக்கவில்லை. அஃதாவது, தனித்தனியாக ஒவ்வொரு ஒலிக்கும் ஒவ்வொரு எழுத்தைக் கண்டுபிடிக்கவில்லை. உருவங்களைச் சித்திரம் வரைவதுபோல் வரைந்து அவற்றின் மூலமாக அக்காலத்து மனிதர் ...

‘எழுத்து’ - 119 இதழ்களின் பொருளடக்கம்

எழுத்து 1: ஜனவரி 1959 எழுத்து வளர - தலையங்கம் சாகித்ய அகாடமி தமிழ்ப் பரிசு – க.நா.சு. பெட்டிக்கடை நாரணன் – ந. பிச்சமூர்த்தி கவிதை - மயன் சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்: ஒரு தொகுப்புக்கான சில குறிப்புகள் – க. நா. சுப்ரமண்யம் எழுதுவதெல்லாம்… - சிட்டி தாழை பூத்தது – பெ. கோ. சுந்தர்ராஜன் பாரதிக்குப்பின்-1: டாக்டர் சாமிநாதையர் – க.நா.சு. கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா விண்ணும் மண்ணும் – ந. சிதம்பரசுப்ரமண்யன் இன்றைய தமிழ் இலக்கிய விமர்சன தோரணை – சி. சு. செல்லப்பா வானம் - மயன் கெளமாரி – சாலிவாஹனன் உண்மைதேடியின் அனுபவ இலக்கிய வடிவங்கள் – தி. ஜானகிராமன்   எழுத்து 2: பிப்ரவரி 1959 வாடைக் காற்று - அசுவதி எழுத்தும் அதன் வாசகர்களும் இலக்கியமும் குழுவும் எஸ். வையாபுரிப்பிள்ளை – க. நா. சுப்ரமண்யம் திறனாய்வு - வில்லி அருளும் பொருளும் – ந. சிதம்பர சுப்ரமண்யன் கவி – வேதனை – தி. சோ. வேணுகோபாலன் தர்க்கம் - ஜெயகாந்தன் அன்று வருவாரோ ? – கு. அழகிரிசாமி வெற்றியின் பண்பு - பராங்குசம் தரிசனம் - மயன் கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா ...