Skip to main content

தன் வழிச்சேரல் - முன்னுரை: சுரேஷ் பிரதீப்



2016-ஆம் ஆண்டு வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டது. அவ்விழாவுக்கு நானும் சென்றிருந்தேன். நான் கலந்து கொள்ளும் முதற்பெரும் இலக்கிய விழா. ஒளிர்நிழலில் முதல் சில அத்தியாயங்களை அப்போது எழுதியிருந்தேன். இரண்டு நாட்களில் நான் அதிகமாக யாருடனும் பேசவில்லை எனினும் jeyamohan.in தளத்தில் வெளியாகி இருந்த என்னுடைய சில கட்டுரைகளைப் படித்துவிட்டு நண்பர்கள் சிலர் அறிமுகம் செய்து கொண்டனர். விழாவின் முதல் நாள் மாலை ஒரு "இலக்கிய வினாடி வினா" நிகழ்ந்தது. பெரும்பாலும் மிகக் கடினமான வினாக்கள். எனக்கு பதில் தெரிந்தது ஒரு சில கேள்விகளுக்கு மட்டுமே. அந்த நிகழ்வு முடிந்த பிறகு மனதில் ஒரு சோர்வும் சோர்வுக்கு பின்னர் வரக்கூடிய தீவிரமும் கூடியிருந்தது.


என்னுடைய வாசிப்பு எந்தப் புள்ளியில் நிற்கிறது என்று பரிசோதித்துக் கொள்ள அப்போது எண்ணியிருந்தேன். அந்த எண்ணத்திற்கு வடிவமளிக்கும் வகையில் அடுத்த சில வாரங்களில் jeyamohan.in-ல் எழுத்தாளர் சு.வேணுகோபால் குறித்த ஒரு கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டது. அதன் விதிமுறைகள் சற்று சிக்கலானவை. ஏற்கனவே எழுதப்பட்ட ஒரு கட்டுரையின் நீட்சியாக அமைய வேண்டும். இறுதி நாள் கெடுவைத் தாண்டிய பிறகு மிகுந்த தயக்கத்துக்கு பின் ஜெயமோகனுக்கு என்னுடைய கட்டுரையை இரண்டு பகுதிகளாக ஒரு வார இடைவெளியில் அனுப்பினேன். இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள தீமையும் மானுடமும் என்ற கட்டுரை அது. அக்கட்டுரையை வாசித்த பல நண்பர்கள் என்னை அக்கட்டுரை எழுதியவனாகவே நினைவில் வைத்திருப்பதை பின்னர் அறிந்தேன்.

விமர்சனக் கட்டுரைகளின் நோக்கம் ஒருவறாக எனக்கு பிடிபடத் தொடங்கியது அதன்பிறகு தான். இலக்கிய விமர்சனத்தின் அதிகபட்ச பயன் ஒரு படைப்பினை வாசிக்கச் செய்வது தான் என்பதைக் கண்டு கொண்டேன். பிடித்த எழுத்தாளர் பிடித்த மாதிரியான எழுத்து என்று வெறும் சிலாகிப்புகளில் நின்று விடும் வாசிப்பனுபவக் குறிப்புகளும் புரியாத மொழியில் பண்ணிப் பண்ணி எழுதப்படும் விமர்சனக் கட்டுரைகளும் இலக்கிய வாசகனுக்கு எவ்வகையிலும் பயன் தராதவை என்று அவ்வகை விமர்சனங்களை தொடர்ந்து வாசிக்கிறவனாக என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

அவ்வகையில் இக்கட்டுரைகள் விவாதிக்கப்படும் படைப்புகளை நோக்கி வாசகர்களை கொண்டு செல்லும் என்று உறுதியாகத் தெரிகிறது. கடந்த இரண்டரை வருடங்களில் என்னை பாதித்த எல்லாப் படைப்புகளையும் குறித்து எழுதியிருந்தாலும் அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டே இந்த பதினேழு கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன.

கட்டுரைகளை வெளியிட்ட jeyamohan.in, சொல்வனம், பதாகை, வல்லினம் தளங்களுக்கும், நூலின் மென்பிரதியை செம்மை செய்து முகப்புப் படத்தினை வடிவமைத்துத் தந்த நண்பர் ஸ்ரீநிவாச கோபாலனுக்கும் நன்றி.

சுரேஷ் பிரதீப்
23.07.2018

தன் வழிச்சேரல் அமேசான் கிண்டில் பதிப்பு வாங்க... bit.ly/ThanVazhichcheral

Comments

Most Popular

மனமும் அதன் விளக்கமும் | கனவின் பொருள் | பெ. தூரன்

ப ல கனவுகள் சிக்கல் நிறைந்திருக்கின்றன; அவற்றில் தோன்றும் நிகழ்ச்சிகள் மேலாகப் பார்க்கும்போது பொருளற்றவைகளாகவும் இருக்கின்றன. கோ. என்பவர் கண்ட ஒரு கனவை இங்கே ஆராய்வோம். “ஏதோ ஒரு பெரிய கோயில். அங்கே நானும் என் நண்பர்கள் சி. வே. மா. ஆகிய மூவரும் சேர்ந்து ஒருவனைக் கொலை செய்தோம். அவனுடைய மூக்கை மாத்திரம் அறுத்துச் சந்தனத்தில் வைத்துச் சாமிக்கு வைத்தோம். பிணம் வெளியிலேயே கிடந்தது. சி. தான் மூக்கை அறுத்தவர். கடவுளைத் தொழுவதற்காகப் பலர் ஒரு மோட்டார்க் காரில் வந்தார்கள். உடனே நான் பிணத்தைத் துரக்கிக் கோபுரத்தின் மேல் வீசினேன். இதை எனது ஆசிரியர் ஒருவர் பார்த்துக் கொண்டார்.” “நான் ஒடி வந்துவிட்டேன். வழியில் என் நண்பர் வீ. யைச் சந்தித்து வேறொருவனிடம் சைக்கிள் வாங்கி இருவரும் ஏறிக்கொண்டு ஊருக்குச் சென்றோம். வழியில் சி. தம் அண்ணனிடம் ஒன்றும் நடக்காதது போல் வந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கொலை செய்துவிட்டு இவர் இவ்வளவு தாராளமாக வெளியில் நடமாடுகிறாரே என்று வியந்தேன்.” "நாங்கள் ஒரு சத்திரத்தில் புகுந்துகொண்டிருந்தோம். ஆனால் சி. வேறு சில நண்பர்களிடம் சாலையில் சென்றுகொண்டிருந்தார்.” ...

அண்ணய்யனின் மனத்தத்துவம் | ஏ. கே. ராமானுஜன்

அவனுக்கு ஆச்சரியம். மிகுந்த ஆச்சரியம். இந்த அமெரிக்க மானிட இயல் அறிஞன், இந்த ஃபர்கூசனைப் பாருங்கள். மனு நீதியைப் படித்திருக்கிறான். இவனுக்கு நம்முடைய சூதகங்களைப் பற்றி எவ்வளவு தெரிந்திருக்கிறது, தான் பிராமணன். தனக்கு இதெல்லாம் தெரியவில்லை. அமெரிக்காவுக்கு வர வேண்டும் ஆன்ம ஞானத்துக்கு மகாத்மாக்கள் சிறையில் உட்கார்ந்து கம்பிகளுக்கிடையில் சுயசரிதம் எழுதியதைப் போலே. நேரு இங்கிலாந்துக்குப் போய் சொந்த நாட்டைப் பற்றித் தெரிந்து கொண்டதைப் போலே. தூரத்திலிருந்தால் பச்சை. நம் உடம்பின் பன்னிரெண்டு திரவங்களிலிருந்து நமக்கு நோய்கள் ஏற்படுகின்றன. உடம்பின் அழுக்கு, வீரியம், இரத்தம், மூளையின் நிணநீர், சிறுநீர், மலம், கொழுப்பு, காதுக்குறும்பி, கண்ணீர், கண்ணில் பீளை, தோலின் வியர்வை (மனு 5. 135) சிகாகோவிலிருந்தாலும் நினைப்பதெல்லாம் கன்னடத்தில்தான். ஒன்று, இரண்டு, மூன்று, நாலு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து, பதினொன்று, பதினொன்று, பதினொன்று. முதல் தடவை எண்ணியபோது பதினொரு மலங்களே கிடைத்தன. திரும்பவும் எண்ணும்போது பன்னிரண்டு, சரியாகப் பன்னிரண்டு. அவனுக்குத் தெரிந்த இந்தப் பன்னிரெண்டில் எச்...

ஐரோப்பியர் வருகை - மயிலை சீனி. வேங்கடசாமி

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே, மேல் நாட்டார் நமது இந்தியா தேசத்துடன், சிறப்பாகத் தென் இந்தியாவுடன், வர்த்தகத் தொடர்பு கொண்டிருந்ததாகத் தெரிகிறது. யவனர் (உரோமர், கிரேக்கர்) என்னும் ஐரோப்பிய ஜாதியார், சேர நாட்டின் கடற்கரைப் பட்டினங்களிற் பண்ட சாலைகள் அமைத்து, அவற்றில் நமது நாட்டுச் சரக்குகளைச் சேமித்து வைத்துக் கப்பல்கள் மூலமாக ஐரோப்பிய நாடுகளுக்குக் கொண்டு போனார்கள். மதுரை, புகார், (காவிரிப்பூம் பட்டினம்) முதலிய நகரங்களிலும் யவனர் வசித்து வந்ததாகத் தமிழ் நூல்களினால் அறிகிறோம். கி.மு. 22 இல் மதுரையில் அரசாண்டிருந்த பாண்டிய மன்னன், அகஸ்தஸ் ஸீஸர் (Augustus Ceasar) என்னும் யவன அரசனிடம் தூதுவர்களை அனுப்பினான் என்று ஸ்த்ராபோ (Starbo) என்னும் மேல் நாட்டாசிரியர் எழுதியிருக்கிறார். தமிழருக்கும் யவனருக்கும் இருந்த இவ்வர்த்தகத் தொடர்பு, கி.பி. 47 முதல் மேன்மேலும் அதிகப்பட்டது. ஏனென்றால், அந்த ஆண்டில் ஹிப்பலஸ் (Hippalus) என்பவர், இந்து சமுத்திரத்தில் வீசுகிற வட கிழக்கு தென் மேற்குப் பருவக் காற்றைக் கண்டுபிடித்தார். இப்பருவக் காற்று வீசுகிற காலங்களில் பிரயாணம் செய்வதால் மாலுமிகள் விரைவாகக் க...