Skip to main content

அக்னி நதி | அத்தியாயம் 2 | குர் அதுல் ஐன் ஹைதர் | தமிழில், சௌரி

சிராவஸ்தி அழகான நகரம்; ராப்தி நதியின் தெற்குக்கரையில் வெகுதூரத்திற்குப் பரவியிருந்தது. வடபகுதியில் இமயமலைக் கண்டங்களாக ஊதாவும் நீலமுமாக மலைத்தொடர்கள் . தாழ்வரைகளில் விளை நிலங்கள், பயிர்கள் வளர்ந்து மண்டியிருந்தன. மலைச்சாரல்களில் இருந்த அடர்ந்த காடுகளில் புலிகளும் சிறுத்தைகளும் திரிந்து கொண்டிருந்தன.

வடகோசல நாட்டில் நகரங்கள், புரங்கள், நகரிகள் எனும் பேரூர் , சிற்றூர், கோட்டம் யாவும் நதிக்கரையில் வளமான இடங்களில் அமைந்திருந்தன. மக்கள் தொகை பெருகப் பெருக, காடுகள் அழிக்கப் பெற்றுக் குடியிருப்புப் பகுதிகளாக மாறலாயின.

சிராவஸ்தி, மக்கள் பெருக்கம் கொண்ட கலகலப்பான நகரம். தொலைதூர நாடுகளிலிருந்தெல்லாம் ஜனங்கள் அங்கே வந்து குடியேறியிருந்தார்கள். சிற்பிகள், பொற்கொல்லர்கள், துணி வியாபாரிகள், மளிகை வியாபாரிகள், கொல்லர், கருமார், தச்சர் ஆகிய யாவரும் தனித்தனிப் பேட்டைகளில் வசித்து வந்தார்கள். வண்டிக்காரர்கள், குயவர்கள், மதுபானக் கடைக்காரர்கள், பிரம்புக் கூடை முதலியவை பின்னும் குறவர்கள், நகரத்திற்கு வெளியே குடியிருந்தார்கள். இவர்களுக்கும் அப்பால் ஒதுக்குப்புறமாகப் புலையர்களின் சேரிப்பகுதி இருந்தது. நாலுவகை இனத்தில் சேராத அவர்கள் ஐந்தாவது இனத்தைச் சேர்ந்த தாழ்ந்த மக்கள். சவத்தைத் தூக்கிச் செல்வதும், சடலத்தை எரிப்பதும் அவர்களுடைய தொழில். பிணத்திற்குப் போர்த்திய துணிகளைத்தான் அவர்கள் உடுத்த வேண்டும். சமூக நியதிப்படி அவர்களுக்கு இட்டிருந்த ஆணை : உடைந்த மண் கலயங்களில்தான் அவர்கள் உணவு கொள்ளவேண்டும்; செப்பு நகைகளைத்தான் அணிய வேண்டும்.

ஆனால் எண்பது ஆண்டுகளுக்கு முன்பு கபிலவஸ்துவின் இளவரசர் சாக்கிய முனிவர் (புத்தர்) சிராவஸ்தி நகரில் வந்து தங்கி யிருக்கிறார். அப்போது அவரும் அவருடைய சீடர்களும் தார்மிகப் பொதுக் கூட்டங்களில் உபதேசம் செய்திருக்கிறார்கள்: "மனிதர்கள் பிறவியால் மிலேச்சர்களோ, சண்டாளர்களோ, புலையர்களோ ஆவதில்லை ; செயல் வகையால்தான் அப்படி ஆகிறார்கள்.'' இப்போதுங்கூட காவியுடை தரித்தவர்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று புலையர்களையும், கீழ்ச்சாதிக்காரக்ளையும் நல்வழிப்படுத்தி மேன்மையுற உபதேசம் செய்திருக்கிறார்கள்! குப்பை மேட்டைக் கோபுரமாக்க முனைந்திருக்கிறார்கள்!

மெளன விரதமிருக்கும் அந்தணர்களைப்போல், பல மாதங் களாக வாளாவிருந்த தவளைகள் மழைத்தாரைகளைக் கண்டதும், மேலும் உயிரூட்டம் கொடுக்க வருண பகவானைத் துதித்து, கத்தித் தீர்த்தன. குரு ஓதுவதைச் சீடர்கள் அடியொற்றித் திருப்பி ஒப்பு விப்பதுபோல் தவளைகள் முதல் குரலுக்கு மறுகுரல் கொடுத்துக் கத்தின் எல்லாத் தவளைகளும் மாரிக்காலப் பண்ணில் ஒருங்கே இசை பாடின.

கெளதமன் சுவடியை மூடி வைத்தான். நிமிர்ந்து எதிர்ப்புறம் பார்த்தான். மழை உக்கிரமாகப் பொழிந்து கொண்டிருந்தது. தவளைகளின் கத்தல், மயில்களின் அகவுதல். சாதகப் பறவைகளின் கலவர ஒலிகள், ஆவணி மாதத்துக் கருமுகில்களின் முழக்கம். ரிக்வேதத்தில் பல்லாண்டுகளுக்கு முன்பு மாரிக்காலத்தை எப்படி யெல்லாம் ரிஷிகள் வர்ணித்திருக்கிறார்களோ, அந்த வர்ணிப்புகளைக் காட்சியாக வெளிப்படுத்துவது போல் இருந்தது அந்த அடர்மழை. கெளதமன் ஒப்பு நோக்கி ரசித்துக் கொண்டிருந்தான். குடிலுக்கு வெளியே அமர்ந்து மழை இசைக்கும் நாதகீதத்தைச் செவிமடுத்தான். அவனுக்குத் தன் ஆசானின் நினைவு வந்தது.

கெளதமனின் குரு ஆசார்யபாதர் என்று சிறப்புத் தகுதி பெற்றவர். அவரிடம் பல ஆண்டுகள் கல்வி பயின்றான். கூடவே ஓவியம் வரையவும் நாடகம் எழுதவும் நன்கு கற்றுக்கொண்டான். அவன் பிறவிக்கவிஞனாகத் திகழ்பவனானால், அவனைப் புரோகித னாக்குவதில் என்ன பிரயோஜனம் குரு இதை உணர்ந்திருந்தார். கெளதமனுக்குப் படிப்பு ஏறவில்லை என்றாலும் அவன் உதவாக் கரையாகி விடமாட்டான். இந்திரப்பிரஸ்த நகருக்குச் சென்று, பாஞ்சாலர்களின் படையணியில் சேர்ந்து பணிபுரிவான். அதற்கேற்ற தகுதி அவனிடம் இருந்தது. இருந்தாலும், அவன் அந்த வழியைத் தேர்ந்தெடுக்கவில்லை. நாடகம் எழுதவே விரும்பினான்; முயன்றான்; முனைந்தான். கலைகள் பற்றிய நூல்கள் எழுதவேண்டும்; தன்னுடைய முடிவுகளை அவற்றில் ஆய்வுத் திறனோடு விளக்கவேண்டும்; சித்திரங்களையும் சிற்பங்களையும் புதுப்புது சாதனைகளாகப் படைத்துக்காட்ட வேண்டும் என்கிற வேட்கை அவனுக்கு.

இன்று மாலை கெளதமனின் குடிலில் விறுவிறுப்பான கருத் தரங்கமே நிகழ்ந்தது. தக்ஷசிலாவிலிருந்து அவன் நண்பன் அகிலேசன் வந்திருந்தான். அவன் அரசியல் பயிற்சி உள்ளவன். அரச நீதி அவனுக்குப் பாடப்பகுதி. மேலும் சில வாலிபர்களும் பேச்சில் கலந்து கொண்டார்கள்.

"பெரிய குழப்பமெல்லாம் வரப்போகிறது.” அகிலேசன் பீடிகை யுடன் தொடர்ந்தான். சிராவஸ்தியைச் சேர்ந்த யோகேந்திரன் குறுக் கிட்டான்; "பாடலிபுத்திரத்து அரசு உணவுப்பண்டம் எதையும் விட்டுவைக்கவில்லையே ! வாரிக் குவிக்கிறது.''

"இவ்வளவும் படை முகாம்களுக்கு வேண்டியிருக்கிறது. தேசமே வறட்சியாகிக் கொண்டிருக்கிறது. பொதுமக்கள் எத்தனை நாள்தான் பொறுத்திருப்பார்கள்?'' குணவர்மா தன் கருத்தைத் தெரிவித்தான்.

"அரசர் பெருமான் கனநந்தர் எரிமலை வாயிலில் அமர்ந்திருக் கிறார். விமலேஸ்வரன் வருத்தத்துடன் சொன்னான். பிறகு அகிலேசனைப் பார்த்து, ''சாணக்கியரைப் பற்றி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாயே?" என்று கேட்டான். அவன் சிராவஸ்தியைச் சேர்ந்த சிற்பி. "நீ அவரைச் சந்தித்தாயா?''

"தக்ஷசிலாவில் பலமுறை சந்தித்தேன்.” அகிலேசனின் பதிலைக் கேட்டதும், மற்றவர்கள் அவனை வியப்போடு பார்த்தார்கள். யோகேந்திரனையும் மதிப்போடு பார்த்தார்கள். அகிலேசன் சாணக்கியரைப் பற்றிப் பேசத் தொடங்கினான். சாணக்கியர் அதிசய மேதாவிலாஸம் படைத்தவர்; அரசியல் வித்தையில் அவர் கொடுத்ததுதான் பிச்சை. நினைத்ததைத் திண்மையுடன் முடித்துக் காட்டும் அசகாய சூரர். யோகேந்திரனின் தகவலின்படி இப்போது அவர் பாடலிபுத்திரம் சென்றிருக்கிறார். அங்கு என்ன என்னவோ நடக்கப் போகிறதாம். யார் எவர் என்று கண்டுபிடிக்க முடியாமல் காரியங்கள் ரகசியமாக நடந்து கொண்டிருக்கின்றனவாம்.

இந்தப் பேச்சில் கலந்து கொண்டவன் போல் தோன்றினாலும், தொடர்பில்லாதவனாக மூலையில் ஒதுங்கி உட்கார்ந்திருந்தான் கெளதமன்.

"மகத நாட்டுக்காரர்கள் என்றைக்குமே வம்புக்காரர்கள்தாம். ராஜாஜராஸந்தனை மறக்க முடியுமா?" யோகேந்திரன் சொன்னான்.

"மகதத்தோடு நமக்கு உடன்படிக்கை - ஒற்றுமை எதுவும் எக்காலத்திலும் நடவாதது." விமலேஸ்வரன் சொன்னான்.

"தம்பி! இதெல்லாம் சாதிப்பிரச்சினை.” அகிலேசன் சப்பண மிட்டிருந்த நிலையை மாற்றிக்கொண்டே பேசத்தொடங்கினான். மற்றவர்கள் அவன் பேச்சைக் கவனத்துடன் கேட்கத் தொடங் கினார்கள்.

''நாடு முழுவதிலும் பிராமணர்களும் க்ஷத்திரியர்களுமே ஆட்சி செலுத்துகிறார்கள். வெகுதூரத்திலுள்ள சிந்துவெளி வரையிலும் பிராமணர்களின் அரசாட்சிதான் நடக்கிறது. மகதம்தான் முழு மையாக அவர்கள் ஆதிக்கத்திற்கு உட்படவில்லை. கோசல நாட்டவர் களான நாங்கள் மகதநாட்டின் மதிப்புமிக்க உயர் ஜாதிக்காரர்களைக் கூட உயர்வாக மதித்ததில்லை . மேலும், அஜாதசத்ருவின் பேரன் மறைந்த பிறகு, மகதத்தில் கீழ் சாதிக்காரர்களின் செல்வாக்கு - வளர்ந்திருப்பதை நாம் மறந்துவிட முடியுமா? கனவம்சம் கீழ் சாதிக் காரர்களின் வம்சம். ஆகையால் மகதநாடு கீழ் சாதிக்காரர்களான கொள்ளைக்காரர்களின் நாடாகி விட்டது.'' எதிரேயிருந்த வாலிபர் களைப் பார்த்தவாறு உணர்ச்சியுடன் சொன்னான்.

குணவர்மன் குறுக்கிட்டான் : மகதத்தின் புதிய தலைநகர் இப்போது சிறப்படைந்து வருகிறது. மற்ற தலைநகர்களான கிரிவிரஜம், ராஜகிரி இவற்றைவிடப் பிரபலமாகிக் கொண்டிருக்கிறது இந்தப் பாடலிபுத்திரம்.

அண்மையில் தானே குசீ நகரம், வைசாலி , சிராவஸ்தி யாவும் கோசலத்துடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு அஜாதசத்ருவை எதிர்க்கத் திரண்டு வந்தன. அப்போது மகதநாட்டின் அமைச்சர்கள் ஆக்கிர மிப்பைத் தடுத்து நிறுத்த, பாடலி கிராமத்தைச் சுற்றிலும் மதில் எடுத்தார்கள். இன்றைக்கு நிகழ்ந்திருப்பதுபோல் இருக்கிறது. அஜாதசத்துருவின் பேரன் உதயன் குஸ்மாபுரத்தை நிர்மாணிக்க கல்கோள் விழா நடத்தினானே, இன்று அதே குஸ்மாபுரம் பிரதாபம் மிகுந்த தலைநகரமாகத் திகழ்கிறது. பல காதங்களுக்கு அப்பால் இங்கு இருந்துகொண்டு நாம் இப்போதும் அந்த நகரத்தைக் கண்டு பயப்படுகிறோம். விமலேஸ்வரன் பேசினான்.

கெளதமன் விளக்கு வெளிச்சத்தில் நண்பர்களின் முகங்களைப் பார்த்தான். அவனுக்கு நினைவு வந்தது: 'இந்த நகரமும் தீ, வெள்ளம், போர் - இந்த மூன்றின் உற்பாதங்களால் அழிந்துபோகும் என்று சித்தார்த்தர் முன்னறிவிப்புச் செய்திருந்தார். குடியிருப்புப் பகுதிகள், ஊர்கள், நகர்கள் யாவும் இப்படித்தான் எழும்புகின்றன; என்றாவது ஒருநாள் அழியவும் செய்கின்றன. உள்ளத்தின் உறைவிடங்கள், மனிதர்கள் உறையும் இடங்கள் - எல்லாவற்றிற்குமே இந்தக் கதிதான். நான் தன்னந் தனியனாக இருக்கிறேன்...'

அகிலேசன் மூலையில் அமர்ந்திருந்த இளைஞனிடம் சாணக் கியரைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தவன், இப்போது விமலேசு வரனைப் பார்த்து உரக்கச் சொன்னான்: "ஏனப்பா! நீதானே இப்போது மகதப் பேரரசர் உதயனைப்பற்றிச் சொன்னாய்? அவர் ஈரானைச் சேர்ந்த மொகல் மன்னன் முதலாவது தாராவின் சமகாலத்தவர் என்பது ஞாபகமிருக்கட்டும்!" பிறகு முன்போலவே மூலையிலிருந்த வாலிபனைப் பார்த்து, "நான் இப்போது சாணக் கியரைப் பற்றி, அவருடைய அரசியல் நோக்கம், சாம்ராஜ்யத் திட்டம் குறித்துப் பேசிக் கொண்டிருந்தேன் இல்லையா? தாரா ஆட்சிபுரியும் ஈரானும் ஒரு சாம்ராஜ்யம்தான். அதன் ஆட்சிச் சக்கரம் இப்போது நாலாபக்கமும் சுற்றிக்கொண்டிருக்கிற விஷயம் உனக்கெல்லாம் தெரிந்திருக்காது."

"ஆட்சிச் சக்கரம்...?" மூலையில் அமர்ந்திருந்த இளைஞன் வினவினான்.

''ஈரானியர்கள் காந்தாரத்தின் மீது படையெடுத்தபோது, மகாராஜா பிம்பஸாரனிடம் தன் தூதனை அனுப்பி வைத்தார்கள். ஆனால் இன்றைக்கு? ஈரானியப் பேரரசு ஸப்தஸிந்து பிரதேசத்தின் வடமேற்குப் பகுதிகளிடமிருந்து கப்பம், வரி என்று வசூலித்துக் கொண்டிருக்கிறது. தாரா அறிவித்தான்: 'நான் தார்யூஷ்! நான் பேரரசன், சாம்ராட், இந்த நாடுகளுக்கெல்லாம் ஷாயின்ஷா! இந்த நாடுகள் - அதாவது ஈரானியர், ஆரியர், வந்தேறிகள் யாவரும் வாழ்கின்ற நாடுகள் ! அவனுடைய போர்க்கலன்கள் சிந்து நதியில் மிதந்தன. " தாராவின் குரலில் தனி ஆவேசம் ஒலித்தது. அது அந்தக் குடில் முழுவதிலும் ஒலித்தது.

"ஷாயின்ஷா..! ஷாயின்ஷா!" கௌதமன் அப்பெயரை உச்சரித்துப் பார்த்தான். "இது பாரசீகர்களின் மொழியாயிற்றே!'' என்றான்.

"ஆம்! தாரயூஷின் மூத்த மகன் அர்த்தாஷஜ் வடபுலத்தில் தாம் வசப்படுத்திக்கொண்ட பிரதேசங்களைக் குறித்துச் செருக்குடன் சொன்னான். 'இந்துத் தெய்வங்கள் கோவில் கொண்டிருந்த இந்தப் பிரதேசங்களை நான் அஹமுஜ்த் அவர்களின் அருளால் சீர் குலைத்தேன். எல்லாக் கோவில்களையும் அழித்தேன். எப்படி அவனுடைய சூளுரை?” அகிலேசன் கத்தினான்.

கெளதமனுக்கு உடல் விதிர்த்தது. மனிதர்கள் தமக்குள் போர் வெறிகொண்டு ஒருவரை மற்றவர் அழித்துக் கொண்டிருக்கிறார்களே! 'எல்லாக் கோவில்களையும் அழித்தேன்!' எப்படி இறுமாந்து பேசுகிறான்!

"அஹர்முஜ்த் யார்?'' அகிலேசன். ''கடவுளைக் குறிக்கும் ஈரானிய மொழிச்சொல்" ''இந்த அர்தக்ஷஜ் என்ன சொன்னான்? கடவுள் பெயரால்.."

"இதெல்லாம் அரசியல் கெளதமா! தெரிந்துகொள்." அகிலேசன் எரிச்சலுடன் சொன்னான். பிறகு மற்ற நண்பர்களைப் பார்த்து, "சில நாட்களுக்கு முன்பு, பார்ஸி பொலிஸ் நகரிலிருந்து தப்பிப் பிழைத்து வந்து சில வணிகர்கள் தக்ஷசிலாவிற்கு வந்திருந்தார்கள். அவர்கள் சொன்னார்கள். ஈரானில் பெரும்போர் மூண்டதாம். யவனர்கள் ஈரானியரின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட்டார்கள். அடிமைத் தளையிலிருந்து விடுபட்டார்கள். ஈரானியப் பேரரசு பலவீனமடைந்து கொண்டிருக்கிறது. கெளதமா! உனக்கு ஒரு செய்தி சொல்லுகிறேன் கேள். விஷ்ணுகுப்தர்(சாணக்கியர்) என்னிடம் நம் நாட்டிற்கும் இப்படி யொரு மாபெரும் வலுவான சாம்ராஜ்யம் அவசியம் என்று சொன்னார். பார்ஸி பொலிஸ் நகரத்திலிருந்து வந்த வியாபாரிகள் கூறினார்கள்: ஈரானைச் சேர்ந்த மூன்றாம் தார்யூஷ் மிகப் பராக்கிரம் சாலியான பேரரசனாம்! அவனைக்கூட யவனர்களின் (யூனான் வாசிகள்) தளபதி அலெக்ஸாந்தர் தோற்கடித்து விட்டானாம். அவன் மேற்கத்தியப் பகுதியிலிருந்து பெரும்படையுடன் வந்து ஆக்கிரமித்தானாம். அவன் நுழையும் நாடு அவன் வசமாகாமல் போவதில்லை ."

கெளதமன் திகைப்புடன் கேட்டுக்கொண்டிருந்தான். "இப்போது ஈரான் முழுவதும் அலெக்ஸாந்தர் கைக்கு வந்துவிட்டது'' அகிலேசன் தன் பேச்சை முடித்தான்.

''அப்படியானால், பாரசீகர்களின் பரந்த சாம்ராஜ்யத்திற்கு உரியவன் இப்போது அலெக்ஸாந்தரா?” கெளதமன் ஆச்சரிய மடைந்தான்.

"ஆமாம், அவனேதான்"

"அகிலேசா! நீ க்ஷத்திரியன். ராஜ்யத்தை உருவாக்குவதும், உருக்குலைத்து அழிப்பதும் உன் போன்றவரின் தொழில். நான் உனக்கு என்ன போதனை செய்ய முடியும்? கெளதமன் கேட்டான்.

"கெளதமா!" அகிலேசன் எழுந்து விளக்கிற்கு எண்ணெய் வார்த்து, அதைத் தூண்டிவிட்டு, நடுவில் எடுத்து வைத்தான். பிறகு தொடர்ந்தான்: " நீ போரில் ஈடுபட வேண்டி வந்தால் போராட மறுத்துவிடுவாயா?"

"நாட்டின் குடிமகன் ஒதுங்கி நிற்பான் என்று நினைக்கிறாயா?" குடிலின் மூலையில் அமர்ந்திருந்த யோகேந்திரன் சூளுரைப்பது போல் கேட்டான். கெளதமன் கலவரத்துடன் அவனைத் திரும்பிப் பார்த்தான்.

மற்றவர்கள் தொடர்ந்து மகத நாட்டு அரசியல் பற்றிக் காரசாரமாக விவாதிக்கத் தொடங்கினார்கள்.

இரண்டாம் நாள் மாலையில், கெளதமன் சாளரத்தின் பக்கம் அமர்ந்து, பூர்ஜ பத்திரத்தில் எழுதி வைத்திருந்ததைப் படித்துக் கொண்டிருந்தான். ஹரிசங்கர் வாயில் பக்கம் வந்து நின்றான்.

"பிரும்மச்சாரி! உன் புனிதமான குடிலுக்குள் நான் வரலாமா?''

"வரவேண்டும். வரவேண்டும். எங்கே இவ்வளவு தூரம்?'' கெளதமன் பூர்ஜ பத்திரங்களை அடுக்கி எடுத்து வைத்துவிட்டு, ''நான் நினைத்தேன். நீ நிரந்தரமாகத் தலைமறைவாகி விட்டாய் என்று சொல்லிக்கொண்டே, பாயை உதறிப் போட்டான்.

"கெளதமா! ஆசைகள் உன்னைச் சிரமப்படுத்துகின்றனவா?'' "அப்படியானால்?'' ''எடுத்துக்காட்டாக புலால் உண்ணும் ஆசை?''

''ஹரிசங்கர்! நான் இப்போது உன்னிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். என்னைச் சுற்றிலும் ரத்தக்களரிகள் நடக்கும்போது, நான் அவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கிற நிலைமையில் என்னால் என்ன செய்ய முடியும்? சகலத்திற்கும் நான் கழுவாய் செய்து விட முடியுமா? என் நண்பர்கள் போர் - படுகொலை - ரணகளம் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள். நான் அதையெல்லாம் விரும்பாதவன்."

"ஆனால், நீ அதையெல்லாம் எதிர்த்துப் போராட வேண்டும்!'' ஹரிசங்கர் பதிலளித்துவிட்டு, எதையோ படிக்கத் தொடங்கினான். வெளியே பலாச மரத்தின் நிழல் நீண்டு படியத் தொடங்கியது. இந்தப் பௌத்த பிக்கு ஏதாவது பேசமாட்டானா என்று கௌதமன் காத்திருந்தான். அவன் ஏதும் பேசவில்லை . விசித்திரமான துறவி! மாலைப்பொழுது தொடங்கிவிட்டது. இரு வாலிபர்களும் சாளரத்திற்கு எதிரே போய் நின்று, வெளிப்புறத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

கெளதமனால் அதிக நேரம் வாளாவிருக்க முடியவில்லை . "வாழ்க்கையைப் பற்றி ஏதாவது தகவல் சொல்லேன்.''

"உன் வாழ்க்கை உனக்கே உரியது. அது என் வாழ்க்கையிலிருந்து வேறுபட்டது. நான் உனக்குச் சொல்ல என்ன இருக்கிறது? ஏதுமில்லை .''

கெளதமன் மூலைப்பக்கம் சென்று பனையோலையை எடுத்து வந்தான். "நீ சாந்தி பற்றி எடுத்துக்காட்டுகளுடன் சொல். நான் குறிப்பு எடுத்துக்கொள்ளுகிறேன், அல்லது அப்படியே எழுதிக் கொள்ளுகிறேன்." எழுதுகோலை வைத்துக்கொண்டு, சப்பணமிட்டு உட்கார்ந்தான். "நான் என் புத்தகத்தின் இரண்டாம் பகுதியை இனிமேல் தான் எழுதப் போகிறேன்."

"அதுசரி, உன் புத்தகத்தின் இறுதிப்பகுதியை எழுதுவது யார்?'' ''முழு வரலாறும் ஆழங்காண முடியாத கடல். அதில் நானும் நீயும் இலைகளைப் போல் அல்லாடிக் கொண்டிருக்கிறோம். எனக்கு முன்னால் அறியப்பட்டுள்ள தகவல்களுக்கு நான் பொறுப்பாளியா? சொல்லேன், நான் என்ன எழுத வேண்டும்?' கெளதமனுக்கு ஐயப்பாடு.

"கால நிர்ணயம் தேவையில்லை. எல்லாமே கனவுபோல் கடந்து போய்க்கொண்டிருக்கின்றன. இனிமேலும் அப்படித்தான் கடந்து போகும்.''
"கடந்து போகுமா அல்லது கடந்து போய்க்கொண்டே இருக்குமா?” கெளதமன் தெளிவு பெற விரும்பினான்.

"இது உன் சொந்தப் பிரச்சினை."

''எனக்கு அஹிம்ஸையைப் பற்றி விளக்கிச் சொல்லேன்." சிறுவன் பிடிவாதம் பிடிப்பானே அப்படியிருந்தது கெளதமன் கோரியது.

"பிராமணனாகப் பிறந்து விட்டு, அஹிம்ஸை நெறியை அறிய விரும்புகிறாயே!" ஹரிசங்கர் சிரித்துக்கொண்டே சொன்னான்.

"உனக்கு நினைவிருக்கிறதா? ஆலாரகாலாம் வரப்போகிற புத்தரிடம் என்ன சொன்னார், தெரியுமா?''

"சொல்லேன்.''

"ஆலாரகாலாம் புத்தரிடம் சொன்னார்: 'நண்பனே! உன் போன்ற ஞானிகளுடன் உறவாடுவதில் எனக்கு மிக மகிழ்ச்சி. நான் அறிந்த சித்தாந்தங்களையும், கல்வி கேள்விகளையும் நீயும் அறிந் திருக்கிறாய். அதேபோல், நீ கற்றறிந்தவற்றை நானும் தெரிந்து கொண்டிருக்கிறேன். நான் எந்த நிலையில் இருக்கிறேனோ, அதே நிலையில்தான் நீயும் இருக்கிறாய். உன்னைப்போலவே நானும் இருக்கிறேன். ஆதலால் நாம் இருவரும் கூடி பெளத்த சங்கத்தைப் பாதுகாப்போம், வளர்ப்போம், இது என் கோரிக்கை. இந்தப் பேச்சை நான் என்றும் மறந்ததில்லை." கௌதமன் தன் பேச்சை முடித்துக் கொண்டான். இருவரும் ஓய்வு கொள்ளப் பிரிந்தார்கள் .

வயல்வெளிகளுக்கு அப்பால் குளிர்காலத் தீமூட்டங்கள் கனன்று கொண்டிருந்தன. கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் பட்டிமன்றத்திடலில் அரங்கமேடையில் மாகாபாரதக் கதை நடந்து கொண்டிருந்தது. கதை கூறும் பாட்' இனத்துப் பாடகன் நிகழ்த்துவது. அந்திவேளையில் அவனுடைய உரத்த குரல் காற்றில் கலந்து கெளதமனின் குடிலிலும் ஒலித்தது. இடையிடையே கதை கேட்பவர்களின் ரசனைக்குரல்களும் கலந்து வந்தன. மிருதங்கத் தொனியுடன் கதை பாடுபவனின் குரல் கலந்து பரவியது. அந்த ஒலிக்கு எதிரொலிபோல், கௌதமனின் இதயம் படபடத்தது. பிறகு காற்றின் ஓசை மேலோங்கவே, அமைதி படர ஆரம்பித்தது.

"இந்த அமைதியே எனக்குப் பல கதைகளைத் தெரிவிக்கின்றது.

சொற்கள் முடங்கிவிட்ட நிலையிலும் என் உணர்வுக்கு ஒடுக்கம் ஏற்படுவதில்லை . இப்படியொரு அனுபவம்!" கெளதமன் தனக்குள் சொல்லிக்கொண்டான், கூடவே பக்கத்தில் இருந்த ஹரிசங்கரையும் பார்த்தான். இதற்கெல்லாம் முடிவுதான் என்ன? யார் தீர்மானிப்பது? யார் யாரைவிடச் சிறந்தவர்? யார் யாரை வெற்றி கண்டார்? கெளரவரா, பாண்டவரா?

"மகத நாட்டுடன் போர் தொடுக்கப்பட்டால், நீ சண்டையில் கலந்து கொள்வாயா?'' கெளதமன் உரத்த குரலில் கேட்டான்.

"நாங்கள் எங்களுடைய சொந்தக் கருத்துக்களால் உருவாக்கப் பட்டவர்கள். ஒவ்வொரு மனிதனுக்கும், அவனுடைய செயல்கள், தேவைகள், அல்லது விபத்துகள் யாவுமே அவரவர் இயல்புக்கு ஏற்பவே சம்பவிக்கின்றன. மனிதன் சுதந்திரமானவனல்ல, அவனது சக்தியால் மட்டும் ஏதும் நிகழ்ந்து விடுவதில்லை. பொறுப்புரிமை என்பதெல்லாம் பொருளற்றது " ஹரிசங்கர் தெளிவாகச் சொன்னான்.

நதியில் ஒளிச்சுடர்கள் நிறையத் தெரிந்தன.

"திருமணக்குழு ஏதோ விமரிசையாக வருகிறது போலும்.'' கெளதமன் தன் ஊகத்தைச் சொன்னான்.

"ஊம்...''

"அரண்மனையைச் சேர்ந்த அலங்கார ஓடம் இந்தப்பக்கமாக வருகிறது என்று நினைக்கிறேன்.''

"நாம் வெளியே போகலாம்!''ஹரிசங்கரின் குரலில் கலவரம் மேலிட்டது. இருவரும் குடிலைவிட்டுப் புறப்பட்டு, தோட்டத்தைக் கடந்து கிராமப்புறப் பாதைக்கு வந்து சேர்ந்தார்கள். கௌதமன் பேசாமல் ஹரிசங்கரைப் பின்தொடர்ந்தான். ஓரிடத்தில் சட்டென்று நின்றான். ஹரிசங்கரைப் பார்த்து, "நீ ஒரு அகம்பாவி. உனக்குப் பிறரைப் பற்றிக் கவலையே கிடையாது. தன் புத்தி போகிற போக்கில் சென்று தவறான - தீயதான நிலைக்குத் தன்னைக் கொண்டு சேர்ப்பதில் உனக்கென்ன பெருமை? பிறருடைய மனநிலை பாதிப்பு பற்றி உனக்கென்ன கவலை?" என்றான்.

"பிறர் எப்படி பாதிக்கப்படுகிறார் என்பது பற்றி நான் நன்கு தெரிந்து கொண்டிருக்கிறேன். சரி, வா! நாம் அங்கே போய் வேடிக்கை பார்க்கலாம்."

கெளதமன் பேச்சிழந்தான்.

தீப அலங்காரங்களுடன் ஒளிர்ந்த ஓடங்கள் நதியைக் கடந்தன. நதித்துறையில் கலகலப்பு பரவியது. கெளதமன் ஒரு வழிப் போக்கனிடம், "இது யார் வீட்டுக் கலியாண ஊர்வலம்?" என்று கேட்டான்.

"அயோத்தியிலிருந்து ராஜா பரிவாரங்களோடு வருகிறார்" என்றான்.

கெளதனுக்கு இது எதிர்பாராத பதில். ஹரிசங்கரை அருகில் அழைத்தான். அவனைக் காணவில்லை. கிராம மக்கள் குழுமியிருந்த கூட்டத்துள் ஹரிசங்கர் மறைந்து போனான். இனி அவனைத் தேடிக் கண்டுபிடிப்பது இயலாது. கெளதமன் போர்வையை ஒழுங்குபடுத்திக் கொண்டு நகர்ப்புறத்தை நோக்கி நடந்தான்.

நகரத்துப் பிரதான வீதியொன்றில் அவன் வீடு. அந்தப் பக்கமாகச் சென்றான். அந்த வீட்டிலிருந்து வெளிச்சம் வீதியில் படர்வதைக் கண்டு, அதைக் கடந்து செல்ல விரும்பாமல், பக்கத்து சந்தில் நுழைந்து சென்றான். நடையில் வேகம், விரைவிலேயே நகரத்தின் எல்லைக்கு வந்து சேர்ந்தான்.

அங்கே ஒரு மாந்தோப்பு ; அதனுள் அழகிய மாளிகை மறைந் திருந்தது. இந்த மாளிகையில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு சாக்கிய முனிவர் புத்தர் வந்து தங்கினார். கௌதமன் சற்றுத் தொலைவில் நின்ற வண்ணம் அந்த மாளிகையைக் கண்டான். வேறொரு ஒற்றை யடிப்பாதை வழியாகத் திரும்பி, நேரே தன் குடிலுக்கு வந்து சேர்ந்தான். அவன் உள்ளத்தில் தீவிர உளைச்சல் : 'சுதந்திரமே இல்லை ; எதிலும் இல்லை ; பரந்த சூழ்நிலையில், ஒலிக்கடலின் அலை வரிசைகளில், அறிவின் பரப்பில் - எதுவுமே சுதந்திரம் கிடையாது.' என்றோ ஒருநாள் வரலாறு, பெயர் வரிசை, தேசம், காலம் இவை என்னை விழுங்கிவிடப் போகின்றன.

கெளதமன் நதிக்கரைக்கு வந்து, புல்தரையில் வெறும் உடம்போடு படுத்துப் புரண்டான். கொதிப்பு கொஞ்சம் அடங்கியது. உபநிஷத்தின் ஒரு கருத்து அவனுக்கு நினைவு வந்தது: 'தன் ஆத்மாவை மட்டுமே நாடுபவன் - அறிந்து கொள்ள விரும்புபவன் வேறு எதையும் நாட வேண்டியதில்லை ; அவனுக்குத் தாய், தந்தை, உலகம் , தெய்வம், நல்லவர் - கெட்டவர், திருடர், கொலையாளி, நன்மை - தீமை, கவலை - மகிழ்ச்சி, நிறை - குறை என்று ஏதுமே கிடையாது. ஏனென்றால், அவன் மனக்கிலேசங்கள், சள்ளைகள் யாவற்றையும் வெற்றி கண்டு விட்டான்.'

மேலும் சாக்கிய முனிவர் கூறியிருக்கிறார்:

"தெய்வம் என்று ஒன்று இருக்கிறதோ இல்லையோ, ஒன்று மட்டும் உண்மை துயரம் யாவர்க்கும் உள்ளது; தவிர்க்க முடியாதது. நாம் தனித்தன்மையுடன் வாழ்கிறோம் என்று பொய்யாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். நாம் சார்புடன் தொடர்புச் சிக்கலுடன் உழன்று வாழ்கிறோம். ஒவ்வொரு பொருளும் துக்கமயம்தான். மனிதன் ஒருநாள் அழிய வேண்டியவனே; விளக்கை எவ்விதம் ஊதி அணைக்கிறோம். அதுபோலத்தான் மனித வாழ்வும் நிகழ்ச்சிகளின் வரிசையும், அனுபவங்களின் தொடர்ச்சியும் மட்டுமே இடையறாது இருந்து வரும்.”

நதியின் இளம் அலைகள் கரைவரைக்கும் வந்து கொண்டிருந்தன. கெளதமன் தீயைப் பார்ப்பதை விடுத்து, அமைதியாக வழியும் நதியை நோக்கினான்.

நான் துன்பத்தை சகித்துக்கொள்ள விரும்புகிறேன்; நான் பலவீனனாகவே ஆசைப்படுகிறேன். என் மடமை - பேதைமைகளை நானே கண்டுகொள்வேன். நான் துக்கத்தை அனுபவிப்பேன்...'

இதயத்திற்கும் புத்திக்கும் ஏற்படும் கிலேசங்கள் புதிய சோதனைகள் தாம். பலப்பரீட்சைதான்! நான் முக்தியை விரும்ப வில்லை. கருணை என்பது மிகப்பெரிய தத்துவம். சாக்கிய முனிவா! சித்தார்த்தரே! போதப் பசிகொண்ட மாதவரே! எனக்கு உம்மிடத்தில் கருணை பிறக்கிறது. ஆம், யார் யாரிடம் கருணை காட்டுவது என்பதும் ஒரு பிரச்சினைதான்.

Comments

Most Popular

மணிபல்லவம் - ஜம்பு கொல பட்டினம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்ககாலத்து நூலாகிய மணிமேகலையிலே, இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப்பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள பழைய பௌத்த நூல்களிலேயும் இலங்கைத்தீவின் வடகோடியில் இருந்த ஜம்புகோல் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. தமிழ் நூலில் கூறப்படும் குறிப்பு களைக் கொண்டும் பாலி மொழி நூல்களில் கூறப்படும் குறிப்புகளைக் கொண்டும் மணிபல்லவமும் ஜம்புகொல பட்டினமும் ஒரே இடம் என்று துணியலாம். பெயர் வேறுபடு வதிலிருந்து இரண்டும் வெவ்வேறிடங்கள் எனக் கருதும்படி இருந்தாலும், இவைகளைப்பற்றிக் கூறப்படும் செய்திகளை உற்றுநோக்கினால், இரண்டும் ஒன்றே என்பது ஐயமற விளங்குகிறது. இதனை ஈண்டு ஆராய்வோம். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலேதான் மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்தது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை கூறுவது காண்க. சோழ நாட்டின் துறைமுகப்பட்டினமாகிய புகார்ப்பட்டினத்தில் இருந்து தெற்கே 30 யோசனை தொலைவில் மணிபல்லவம் இருந்தது (

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு , https://tinyurl.

சிறுகதை என்றால் என்ன? | க. நா. சுப்ரமண்யம்

சி றுகதை என்றால் என்ன ? உருவத்தால் சிறியதாக இருக்கவேண்டும் என்றும் , கதையாக இருக்கவேண்டும் என்றும் சட்டென்று பதில் கூறிவிடலாம். ஓரளவு திருப்தி தருகிற பதில் மாதிரித்தான் இருக்கிறது. ஆனால் யோசித்துப் பார்க்கும்போது தோன்றுகிறது - உருவத்தில் சிறியது என்றால் எவ்வளவு சிறியது என்றும் , கதை என்றால் என்ன என்றும் கேள்விகள் தோன்றுகின்றன. இரண்டாவது கேள்விக்குப் பதில் முதலில் சொல்லிப் பார்க்கலாம். அத்தைப் பாட்டி கதையிலிருந்து , கம்பராமாயணத்தின் கருப்பொருள் வரையில் , ஏசாப்புக் கதைகளிலிருந்து மஹாபாரதத்து குருக்ஷேத்திரம் வரையில் , எல்லாமே கதையை ஆதாரமாகக் கொண்டவைதான். நாவல் , நாடகம் என்கிற இலக்கியத் துறைக்கும் ஆதாரமான விஷயம் கதைகள்தான். சிறுகதைக்கு ஆதாரமான கதை என்ன ? எப்படியிருக்க வேண்டும் ? ஓ. ஹென்றியின் கதைகளிலே பல சம்பவங்கள் அடுக்கடுக்காக வந்து கடைசியில் ஒரு திருப்பம் திரும்பி ஒடித்து வக்கிரமாக நிற்கும். மோபஸான் கதைகளிலே அடுக்கடுக்காகப் பல விஷயங்கள் சொல்லப்பட்டு , ஒரு சம்பவத்தைச் செயற்கை முத்தைப்போல உருட்டித் திரட்டித் தரும். சம்பவங்களை நம்புகிற இந்த இரண்டு கதைகளுக்கும் அப