Skip to main content

புதுமையும் பித்தமும் - 1 | க. நா. சுப்ரமண்யம்

புதுமைப்பித்தன் கதைகள் எல்லாவற்றையும் ஒரே நூலாக வெளியிட்டுப் பார்க்க வேண்டும் என்கிற ஆசையில் வெளிவருகிற புஸ்தகம் இது. அவர் எழுதிய கதைகளில் மிகச் சிறந்தவையெல்லாம் இதில் அடங்கியிருக்கின்றன. தொண்ணூற்றுச் சொச்சம் கதைகளில் ஒரு முப்பதுக்கும் அதிகமாகவே சிறந்த கதைகளாகவும், இன்னும் 30 கதைகளுக்கு அதிகமாக நல்ல கதைகளாகவும், மற்றவை சாதாரண தரத்தில் அமைந்தவை என்றும் பொதுவாகச் சொல்லலாம். இந்தப் புத்தகத்தில் அடங்காமல் விட்டுப்போன புதுமைப்பித்தன் எழுதிய சிறுகதைகள் சில - ஒன்றிரண்டு இருக்கலாம். அதிகம் போனால் நாலைந்தும் இருக்கலாம் - அவை கிடைத்தால் அவற்றையும் மறுபதிப்பில் சேர்த்துக்கொள்வார்கள் பிரசுரகர்த்தாக்கள் என்று நாம் நம்பலாம்.

சிறுகதைகள் மட்டும் எழுதவில்லை புதுமைப்பித்தன். சில ஓரங்க நாடகங்கள், மற்றும் இலக்கியப் பொதுக்கட்டுரைகள், வேளூர் வெ. கந்தசாமிப்பிள்ளை என்ற புனைபெயரில் சில கவிதைகள், இவை தவிர பல மொழிபெயர்ப்புகள் (அனேகமாகச் சிறுகதைகள், ‘பிரேத மனிதன்’ என்கிற மேரி ஷெல்லியின் விஞ்ஞான நாவல், குப்ரினின் ‘யாமா’வில் ஒரு பகுதி. இவற்றை மொழிபெயர்த்தார். அவருக்கு ஆங்கிலம் தவிர வேறு ஐரோப்பிய மொழிகள் தெரியாது என்பதனால் இவற்றையெல்லாம் ஆங்கில மொழி மூலம்தான் மொழிபெயர்த்தார்.) இவை தவிர ‘ஃபாஸிஸ்ட் ஜடாமுனி’ என்று முஸ்ஸாலோனி என்கிற இத்தாலிய சர்வாதிகாரியைப் பற்றி ஒரு ஜீவிய சரித்திரம், மற்றும் பல சந்தர்ப்பங்களில் பல அரசியல் கட்டுரைகள் (‘சூறாவளி’யில் இரண்டாவது உலகப்போர் வருமுன் வாராவாரம் ஐந்து மாதங்களுக்கு மேல் எழுதிய ‘அங்கே’ என்கிற ஐரோப்பிய அரசியல் அரங்கக் கட்டுரைகள் குறிப்பிடத்தக்கன.) மற்றும் பல புது நூல்கள் பற்றித் ‘தினமணி’ மற்றும் சில பத்திரிகைகளில் அவ்வப்போது ஆணித்தரமான மதிப்புரைகள்! ‘ரசமட்டம்’ என்ற பெயரில் கல்கி கண்டனக் கட்டுரைகள், ஷேக்ஸ்பியர் நாடகக் கதைகள் (‘உலக அரங்கு’ என்கிற பெயரில்), பல நண்பர்களுக்கு எழுதிய இலக்கியத்தரமான கடிதங்கள் முதலியவற்றை அவர் எழுதியிருக்கிறார்.

‘மேன் ஆப் லெட்டர்ஸ்’ என்று குறிப்பிடத்தக்க அளவில் அவர் பல துறைகளிலும் செயல்பட்டிருக்கிறார். கொஞ்ச காலம்தான் உயிர் வாழ்ந்தார். நாற்பத்தியிரண்டு வருஷங்களே உயிர் வாழ்ந்த அவர் இலக்கியத்தில் செயல்பட்ட காலம் பதினைந்தே ஆண்டுகள்தான் என்றாலும் அவர் எழுத்துகள் சாதனையிலும், விஸ்தீரணத்திலும், ஆழத்திலும் அதிகமானவைதான். உத்தியோக வாழ்க்கையில் பெரும்பகுதியும், தினசரிச் செய்திகளை மொழிபெயர்ப்பது, அதற்காக அந்த நாட்களில் பொதுவாகப் பலருக்கும் கிடைத்தது போல 30, 40 என்ற மாதச் சம்பளம், கிடைத்த தேதியில் பெறுவது - இதுதான் வாழ்க்கை முறையாக அவருக்கு அமைந்தது. காரைக்குடியில்
‘ஊழிய’னில் சில காலம் சேவைக்குப் பிறகு சென்னை வந்து டி. எஸ். சொக்கலிங்கம் கோஷ்டியில் சேர்ந்து பல ஆண்டுகள் ‘தினமணி’யிலும்
, சில ஆண்டுகள் ‘தினசரி’யிலும் பணி செய்தார். கடைசி நாலைந்து ஆண்டுகளில் செய்திப் பத்திரிகை வேலையிலிருந்து விடுதலை பெற்று ‘சோதனை’ என்று இலக்கியத்திற்கு ஒரு பத்திரிகை நடத்தவேண்டுமென்றும், சினிமாவில் சேர்ந்து சாதனைகள் புரியவேண்டுமென்றும் கனவுகள் கண்டார். ‘பர்வதகுமாரி புரொடக்ஷன்ஸ்’ என்று அவரே சினிமா எடுப்பதாக ஆரம்பித்து சரிப்பட்டு வராமல், எம். கே. தியாகராஜ பாகவதர் நடித்த கடைசிப் படமான ‘ராஜமுக்தி’க்கு வசனம் எழுதினார். பத்திரிகை வேலையைவிட அதிலும் அதிகமாகப் பணம் வந்ததாகத் தெரியவில்லை.

‘ராஜமுக்தி’ படத்திற்காகப் புனா போய்விட்டுத் திரும்பித் தமிழ்நாட்டுக்கு வந்தபோது, உடல்நிலை ஏற்கெனவே மோசமானது மிகவும் கெட்டுவிட்டது. திருவனந்தபுரத்தில் அவர் கடைசி நாட்கள் ஆஸ்பத்திரியில் கழிந்தன. சிதம்பரம் என்ற ஒரு திருவனந்தபுரம் நண்பரும், சிதம்பர ரகுநாதனும் உடனிருந்து கடைசிவரை உதவியதாகத் தெரிகிறது. இடையில் ஜெமினி ஸ்டூடியோ வாசனுக்காக எழுதிய ‘ஒளவையார்’ சினிமா ஸ்கிரிப்ட் இலக்கியத்தரமாக அமைந்தும் ஏற்றுக்கொள்ளப்படாததைக் குறிப்பிட வேண்டும். சினிமாவில் அசாதாரணமானது, மேன்மையானது எதுவும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது என்பது அன்றுமுதல் இன்றுவரை தொடருகிற ஒரு நிலைமை.

இப்படியெல்லாம் பார்க்கும்போது, தன் நாற்பத்தியிரண்டாவது வயதில், 1948இல் இறந்துவிட்ட சொ. விருத்தாசலம் என்பவர் - ஒல்லியான மனிதர், பற்களும், மார்பு எலும்புகளும் எண்ணிவிடக்கூடிய அளவில் வெளியில் தெரியும். குழந்தைப் பிள்ளைத்தனமாக, காரணமில்லாமலேகூட கடகடவென்று சிரிக்கும் சுபாவம் படைத்த இந்த மனிதர் - முழுவாழ்வு வாழ்ந்தவர் என்றுதான் சொல்லவேண்டும். ஆண்டுகள் கணக்கில் இல்லாவிட்டாலும், நிறைவில், சாதனைகளில், தெரிந்த நண்பர்கள் மனங்களில், அவரை வாசித்த வாசகர்கள் உள்ளங்களில், புரிந்துகொண்டவர்கள் நினைப்பில் பூரண வாழ்வு வாழ்ந்தவர் என்றே சொல்லவேண்டும். (புதுமைப்பித்தன் செய்த காரியங்களில் ஒன்றை மேலே சொன்ன பட்டியலில் குறிப்பிட விட்டுவிட்டேன். மூன்று ஆண்டுகள் பொறுப்பேற்று அவர் ‘தினமணி’யில் ஆண்டு மலர்கள் தயாரித்தார். வளரும் தமிழ் இலக்கியத்திற்கு வழிகாட்டிய மலர்கள் அவை. அவையும் புதுமைப்பித்தன் சாதனைகளில் குறிப்பிடப்படவேண்டியவை.)

நான் 1935 - 36இல் தமிழில் எழுதத் தொடங்கலாமா என்று தயங்கிக்கொண்டிருந்த காலத்தில் எனக்கு எழுதத் தெம்பு கொடுத்தது புதுமைப்பித்தனும், அவர் கதைகளும்தான் என்று சொல்வது மிகையே ஆகாது. தமிழில் நான் முதன்முதல் படித்த சிறுகதை வத்தலகுண்டு எஸ். ராமையா என்பவர் ‘காந்தி’ பத்திரிகையில் எழுதிய ‘வார்ப்படம்’ என்ற கதை. அப்போது வத்தலகுண்டு என்கிற கிராமம் தமிழ்நாட்டில் இருப்பது எனக்குத் தெரியாது. ராமையா என்பதும் தெலுங்குப் பெயரோ என்று எனக்குச் சந்தேகம். அந்தக் கதையைப்போல என்னாலும் தமிழில் எழுத இயலும் என்று தோன்றியது. இரண்டாவது படித்த கதை புதுமைப்பித்தனின் ‘சிற்பியின் நரகம்’தான் என்று நினைக்கிறேன். ராமையாவின் ‘மணிக்கொடி’யில் 1935இல் வெளிவந்தது. அதைப்போன்ற கதை உலகத்துச் சிறுகதைகளிலேயே வெகுசிலதான் தேடினாலும் கிடைக்கும் என்று எனக்குத் தோன்றியது. நான் ராமையாவைத் தேடிக்கொண்டு போய் டக்கர்ஸ் லேனில் ‘மணிக்கொடி’ ஆபீஸில் அவரைச் சந்தித்தபோது அவர் ‘சிற்பியின் நரகம்சிறுகதை வந்திருந்த ‘மணிக்கொடிஇதழ் ஒன்றை எனக்குப் படிக்கத் தந்தார். கலையென்பது மத விஷயத்துக்கு ஆதாரமாக உபயோகப்பட வேண்டும் என்கிற மரபுக் கருத்தைக் கண்டித்தும், கண்டிக்காமலும், ஓரளவுக்கு இரண்டு சித்தாந்தங்களுமே சரி என்று சொல்லுகிற மாதிரியும் அமைந்திருந்தது கதை. மேலெழுந்தவாரியாகப் படிக்கும்போது மதத்துக்கு அனுசரணையாகக் கலை இருப்பது சரியல்ல என்று ஆசிரியர் சொல்வது போலவும் இருந்தது. இதை மறுத்து நான் ஒரு கதை எழுதவேண்டுமென்று எண்ணினேன். ஆனால் ஏழாண்டுகளுக்குப் பிறகுதான் (‘தெய்வ ஜனனம்’) 1942இல் எழுத முடிந்தது. அதில் புதுமைப்பித்தனிலிருந்த பூரணத்துவம் வரவில்லை; த்வனியும் வரவில்லை என்பது எனக்குத் தெரிகிறது.

முதல் முதலாக நான் புதுமைப்பித்தனைச் சந்தித்தது எனக்கு நினைவிருக்கிறது. 1936இல் ஜனவரி மாதத்தில் ஒருநாள் கடைசி வாரம் என்று நினைக்கிறேன் - பல்லும் பவிஷுமாக, திருநெல்வேலி ஜிப்பா (?) - அது திருநெல்வேலி ஜிப்பாதானா என்று எனக்கு நிச்சயமாகத் தெரியாது. இப்போது சிதம்பர ரகுநாதனும் அதேமாதிரி ஜிப்பா அணிவதை நான் பார்க்கிறேன் - கடகடவென்று கல்லை ஏதோ பித்தளைப் பாத்திரத்தில் உருட்டிவிட்டது போன்ற அடித்தொண்டையிலிருந்து வந்த ஒரு சிரிப்பு. “உங்கள் கதை ‘சிற்பியின் நரகம்’ நன்றாக இருக்கிறது” என்று நான் சொன்னவுடன், “அப்படித்தான் இருக்கும் ராசாவே! என் கதைகள் எல்லாமே நன்றாகத்தான் இருக்கும்” என்று அகங்காரமில்லாத ஒரு நிச்சயத்துடன் அவர் சொன்னது எனக்குப் பிடித்திருந்தது. என் கையில் காரல் சப்பக் [Karel Capek] என்கிற ஸெக்கோஸ்லோவேக்கிய நாவலாசிரியர் எழுதிய நாவல் இருந்தது. ‘அப்சலூட் அட் லார்ஜ்’ [Absolute at Large] என்கிற நாவல் என்று எண்ணுகிறேன். ‘நான் படித்துப் பார்க்கிறேன்’ என்று என் அனுமதியைக் கேட்காமலே என் புஸ்தகத்தை எடுத்துக்கொண்டுவிட்ட அவருடைய நெருக்கமும் எனக்குப் பிடித்திருந்தது என்றுதான் சொல்லவேண்டும்.

அந்த முதல் சந்திப்புக்குப் பிறகு ஒரு நூறு தடவைகளாவது ‘சொ.வி’.யைச் சந்தித்திருப்பேன் என்று தோன்றுகிறது. சந்திப்புகள் குறுகிய கால அளவிலும், சில சந்திப்புகள் மணிக்கணக்கான நேரமும், சில நாட்கள் கணக்கிலும் இருக்கும். இடையில் ஒரு மூன்று மாதங்கள் 222, அங்கப்ப நாயக்கன் தெருவில் நானும், அவரும், கி.ரா.வும் ஒரே அறையில் வசித்தோம். வாசுதேவபுரத்தில் (திருவல்லிக்கேணி) அவர் குடியிருக்கும்போது இருபது, முப்பது நாட்கள் அவர் வீட்டிலே சாப்பிட்டுக்கொண்டு சென்னையில் தங்கியிருந்திருக்கிறேன். நடுவில் ஒரு தடவை தஞ்சாவூரில் நான் இருக்கும்போது இரண்டு, மூன்று தினங்கள் என் மேலவீதி வீட்டில் அவர் வந்து தங்கியிருந்தார். அந்தச் சந்தர்ப்பம் அவர் திருவனந்தபுரம் போய்விட்டுச் சென்னை திரும்புகிற வழியில். சாப்பிடும்போது “பருப்பும், சாதமும் போதும்” என்று அவர் சொன்னது பற்றி என் மனைவி இன்னமும் ஆச்சரியப்பட்டுச் சொல்வதுண்டு. இடையில் ராமசாமி (மண்ணடித்) தெருவில், ராயப்பேட்டை ஹைரோடில் என்று அவர் குடியிருந்த பல வீடுகளிலும் சென்று அவரைச் சந்தித்திருக்கிறேன். புரசைவாக்கம் ஹைரோடில் 45, 46இல் ‘சந்திரோதயம்நடந்துகொண்டிருந்தபோது பழைய ‘மணிக்கொடிபகைப்புலத்தை மீண்டும் கொண்டுவர முடியுமா என்று பார்ப்பதற்காக, புதுமைப்பித்தன், பி. எஸ். ராமையா, பெரிய கிட்டப்பா, கணேச சாஸ்திரி, ராமரத்னம் முதலியவர்களைக் கூப்பிட்டு ஒரு விருந்திற்குப் பிறகு பேசிக்கொண்டிருந்தது ஞாபகமிருக்கிறது. இந்த விருந்திற்கு ஆர்யாவும், கி.ரா.வும் வராதது ஒரு குறை என்று புதுமைப்பித்தன் சொன்னது நினைவிற்கு வருகிறது.

நான் கடைசியாக அவரைச் சந்தித்ததை நினைவுபடுத்திப் பார்த்துக்கொள்ள முயலுகிறேன். ‘சந்திரோதயம்பத்திரிகை நின்றுபோன பிறகு 1947இல் ராயப்பேட்டை ஹைரோடில் அவருடன் பேசிக்கொண்டு உட்கார்ந்திருக்கும்போது அவர் மனைவி கமலாம்பாள் ஊரிலில்லை. ஒய்.எம்.ஐ.ஏ. ரெஸ்டாரண்டில் (சமீப காலத்தில்தான் அது ராயப்பேட்டை ஹைரோடில் புதுக்கிளை திறந்திருந்தது என்று எண்ணுகிறேன்) காபி சாப்பிட்டுவிட்டுத் திரும்பி வீட்டுக்கு வந்து பேசிக்கொண்டிருந்தோம். தன் மனைவியை அழைத்துக்கொண்டு வர திருவனந்தபுரத்திற்கு அன்று மாலை கிளம்பப்போவதாகச் சொல்லிக்கொண்டிருந்தார். அதற்குள் கமலாம்பாளே ஊரிலிருந்து வந்துவிடவே நான் அரைமணிநேரம் இருந்துவிட்டு விடைபெற்றுக்கொண்டு போய்விட்டேன். அதற்குப் பிறகு இரண்டு வருஷத்திற்குள் அவர் இறந்துவிட்டார். புனேயிலிருந்து உடல்நலம் மோசமாகி அவர் திரும்பியதும், திருவனந்தபுரம் போனதும், நண்பர்கள் பி. வி. லோகநாதனும், சிதம்பர ரகுநாதனும் சொல்லி, எழுதித் தெரிந்துகொண்டதுதான்.

1936 முதல் 1947 வரையில் பழக்கம். சற்று நெருங்கிய பழக்கம் என்றுதான் சொல்லவேண்டும். இலக்கிய நண்பர்கள் என்கிற அளவில் நெருங்கிப் பழகினோம் என்று சொல்லலாம். அப்போதைய தமிழ் எழுத்தாளர்கள் பலருடனும் எனக்கு ஏற்பட்ட பழக்கத்தைவிட அதிக நெருக்கமானதாகத்தான் புதுமைப்பித்தனுடன் நான் பழக நேர்ந்தது. இந்த அளவிற்கு நெருக்கமான பழக்கம் எனக்கு 1942க்குப் பிறகு மௌனியுடனும் ஏற்பட்டது. எங்கள் பேச்சு அனேகமாக படித்த நூல்களையும், எழுதிய விஷயங்களைப் பற்றியும்தான் இருக்கும். சக எழுத்தாளர்களைப்பற்றி அதிகமாகப் பேச்சோ, வம்போ வளர்த்ததாக ஞாபகமில்லை. எங்களிடையே இலக்கிய உலக வம்பு மட்டும் போதுமான அளவு இருக்கும். 1937-38இலேயே மௌனியை, ‘சுவாரஸ்யமான மனிதர்; நீங்கள் சந்திக்க வேண்டும்’ என்று அவர் சொன்னது நினைவிருக்கிறது.

புஸ்தகங்கள் படிப்பதில் எங்கள் இருவருக்கும் ஆர்வம் அதிகம். ஆனால், புதுமைப்பித்தன் படிக்கிற முறையே அலாதியானது. நான் எந்தப் புஸ்தகத்தையும் வரிவிடாமல், ஒரே மூச்சில், ஆரம்ப முதல் இரவு எத்தனை நேரமானாலும் படித்து முடித்துவிட்டுத்தான் படுக்கப் போவேன். சொ.வி. எந்தப் புத்தகத்தையும் முழுதுமாகப் படித்ததாக எனக்கு நினைவில்லை. முதலில் கொஞ்சம், நடுவில் கொஞ்சம், கடைசியில் கொஞ்சம் என்று படித்துவிட்டு நூலின் விஷயத்தைப் பூரணமாகக் கிரஹித்துக்கொண்டுவிடுவார். எனக்கு எந்த நூலையும் முடிக்க நாலு மணிநேரமாவது ஆகும். அவர் ஒரு மணிநேரத்தில் படித்துவிடுவார். ஆனால் படித்த நூலைப்பற்றி அவர் என்னைவிடவும் அதிகமாக விஷயத்தைச் சொல்லுவார் என்பதை நான் கவனித்திருக்கிறேன். இந்தமாதிரிப் படித்துப் புரிந்துகொள்வதற்கும் ஒரு தனி லாவகம், பழக்கம் தேவை என்று எனக்குத் தோன்றும்.

புதுமைப்பித்தன் எழுதுவதும் கனவேகம்தான். இரண்டு மூன்று நீளக்கதைகள் எழுதும்போது நான் கூட இருந்து பார்த்திருக்கிறேன். எழுத்து அவர் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் படிப்பதற்குச் சிரமமாகத்தான் இருக்கும். அவர் எழுத்தில் நீளக்கோடு போட்டாரானால் ‘தஎன்று அர்த்தம். சின்னக்கோடு போட்டாரானால் ‘கஎன்று அர்த்தம். எழுதியதைத் திருப்பிப் படிக்கமாட்டார். ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’, ‘காஞ்சனை’, ‘அன்று இரவுபோன்ற கதைகளை ஒரு மணி, ஒன்றரை மணிநேரத்தில் அவர் எழுதி முடித்துவிடுவதை நான் பார்த்திருக்கிறேன். படித்துப் பார்க்கிறேன் என்று கேட்டால் தரமாட்டார். அவரும் திருப்பிப் படித்துப் பார்க்கமாட்டார். ஏதோ ஓர் இடத்தில், ‘என் கதையை முதலில் படிக்கும் வாசகன் நான்தான். அவசரமாக எழுதியதனால் எனக்கே அதில் பல விஷயங்கள் புதுமையாக இருக்கும்’ என்று அவர் எழுதியிருக்கிறார். அவருக்கு மட்டுமல்ல, வாசகர்களுக்கும் பலதும் புதுமையாகவும், உன்னதமான கலையாகவும் இருந்தது என்பதுதான் விசேஷம்.

***

(தொடர்ச்சி...)

'புதுமையும் பித்தமும்' (மின்னூல்)

https://amzn.to/444IAaD

புதுமையும் பித்தமும் (அச்சு நூல்)

https://tinyurl.com/mrzx48by

Comments

Most Popular

குலாப்ஜான் காதல் | புதுமைப்பித்தன்

‘ காதலாவது உருளைக்கிழங்காவது ’ - சி . சுப்பிரமணிய பாரதி நான் ஆராய்ச்சிப் பிரியன் . அதிலும் தர்க்கரீதியாக புத்தியை வசீகரிக்கக்கூடிய ஆராய்ச்சியென்றால் , அதுதான் எனது தெய்வம் . கம்பனுடைய காவியங்கள் முதல் , நாணயச் செலாவணி , தீண்டாதார் ஆலயப் பிரவேசம் ஈறாக , எல்லாம் தர்க்க முறையில் அடைபட்டு ஒத்து இருந்தால்தான் எனது கொள்கை . இல்லாவிடில் அதற்கும் நமக்கும் வெகுதூரம் . இந்தக் காதல் விஷயத்தை நன்றாக ஆராய்ந்து கவனித்ததில் , சாதாரணமாக அல்ல , அபரிமிதமாக , காவியங்கள் , நாவல்கள் என்ற கற்பனைப் பிரதேசங்களில்தான் விளைகின்றன . இல்லாவிட்டால் அவை நமது பொருள்காட்சி சாலைகளைத் தப்பி இருக்க முடியுமா ? அகப்பொருள் இலக்கணக்காரர் கூறுவதைப் பார்த்தால் அசல் , கலப்பில்லாத பழம் பெருந்தமிழ் மக்களுடனிருந்து அவர்கள் தங்களுடைய ஏடுகளுடன் கடலால் கொள்ளப்பட்ட பொழுது , அவர்களுடன் சங்கமமாயிற்றென்று நினைக்க ஏதுவிருக்கிறது . ஆழ்ந்து யோசிக்குந்தோறும் , தர்க்க ஆராய்ச்சியை வழிபடும் எனக்கு , அதன் கூற்றுக்கள் வெகு வினோதமாகவே காணப்படுகின்றன . எனது ஆர

பெரியம்மை | சுரேஷ்குமார இந்திரஜித்

பெரியப்பா அருமையாகப் பாடுவார். ‘முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே’ என்ற டி.எம்.எஸ். பாட்டை ஏற்ற இறக்கங்கள், பிர்காக்கள் பிசகாமல் பாடுவார். அப்போது பெரியம்மை முகத்தைப் பார்க்கவேண்டுமே. அவர் முகம் பெருமிதத்தோடும் பரவசத்தோடும் இருக்கும். பெரியம்மா முருங்கைக்காய் குழம்பு வைத்தால் நிறைய சாப்பிடவேண்டியிருக்கும். குழம்புகள் ருசியாகச் செய்வதற்கென்றே அவள் பிறந்திருக்கிறாள். கத்தரிக்காய் புளிக்குழம்பும் அப்படித்தான் அவ்வளவு ருசியாக இருக்கும். என் அம்மைக்கு இந்தக் குழம்புகள் ருசி கூடி வராது. சப்பென்று இருக்கும். நான் வேலை பார்க்கும் ஊரிலிருந்து வீட்டுக்கு வந்திருந்தேன். பெரியப்பாவைப் பார்ப்பதற்கும், அவர் பாட்டைக் கேட்பதற்கும் அவர் வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன். இது மார்கழி மாதம். வாசல்களில் கோலம் போட்டு பூசணிப்பூவை மையமாக வைத்திருந்தார்கள். அநேகமாக சில வீடுகள் நீங்கலாக எல்லா வீட்டு வாசல்களிலும் பூசணிப்பூவை வைத்திருந்தார்கள். செண்பகவல்லி மதினி வீட்டைக் கடக்கும்போது மல்லிகைப்பூ வாசம் வந்தது. மதினி வீட்டுக் காம்பவுண்டுக்குள் மல்லிகைப்பூ கொடிக்குப் பந்தல் போட்டிருந்ததைப் பார்த்தேன். வேல

மனமும் அதன் விளக்கமும் - மனமெனும் மாயம் | பெ. தூரன்

ம னம் என்பதென்ன? அது எங்கே இருக்கிறது? கை, கால், கண், இதயம் என்றால் உடம்பில் உள்ள உறுப்புகள் என்று உடனே தெரிகிறது. அவைகளுக்கு வடிவம் உண்டு. பருமன் உண்டு. ஆதலால் அவைகளை எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மனம் என்பது எது? அதற்கு வடிவம் உண்டா? பருமன் உண்டா? தொட்டுப் பார்த்து அறிந்துகொள்ள முடியுமா? இவ்வாறு எண்ணிப் பார்த்தால் ஒன்றும் விளங்குவதில்லை. இவ்வாறு எண்ணுவதற்கு அந்த மனமே காரணமாக இருக்கிறதென்று தோன்றுகிறது. ஆனால் அது என்ன என்று மட்டும் எளிதில் அறிந்துகொள்ள முடிகிறதில்லை. மனத்திற்கு உருவமில்லை; கன பரிமாணமும் இல்லை. மனம் என்பது தசை, நரம்பு முதலியவைகளால் ஆக்கப்பட்டதன்று. அது சடப் பொருள் அன்று; அது சூக்குமப் பொருள், சடப் பொருள் என்றால் அது உடம்பைச் சேர்ந்த ஒர் உறுப்பாகிவிடும்; எளிதாக அதை அறிந்துகொள்ளவும் முடியும். சிலர் மூளைதான் மனம் என்று தவறாகக் கருதுகிறார்கள். மூளை என்பது உடம்போடு சேர்ந்த ஒரு பருப்பொருளான உறுப்பு. அது மனம் அல்ல. சூக்குமப் பொருளாக மனம் இருக்கிறதென்று மட்டும் நமக்குப் புலனாகிறது. அந்த மனந்தான் ஆசைகள், எண்ணங்கள், நோக்கங்கள், நம்பிக்கைகள் முதலியவற்றிற்கு இடமாயிரு