Skip to main content

கிண்டிலில் எழுத்து


‘எழுத்து’ இதழ்களை அமேசான் கிண்டிலில் மின்னூலாகப் பதிவேற்றும் பணி இன்று அவ்விதழின் ஆசிரியர் சி. சு. செல்லப்பா அவர்களின் பிறந்தநாளில் ஆரம்பமாகிறது. இதற்காக இதழியலாளர் சு. அருண் பிரசாத் உதவியுடன் சி. சு. செல்லப்பாவின் மகன் திரு. சுப்ரமணியன் அவர்களை அணுகி அனுமதி கோரியபோது, மகிழ்ச்சியுடன் இசைவு தெரிவித்தார். இதழ்களைத் திரட்டவும் பெருமுயற்சி எடுத்துக்கொண்டவர் அவர்தான்.  
'எழுத்து' 11 ஆண்டுகளைக் கடந்து 112 இதழ்கள் வெளியானது. இரட்டை இதழ்களாக வந்தவை 7. இதனால் இதழ் எண் 119 வரை செல்கிறது. முதல் இதழ் ஜனவரி 1959ல் வெளியானது. 12ஆம் ஆண்டின் முதல் ஏடாக ஜனவரி 1970ல் வெளியான இதழே கடைசி இதழாகவும் அமைந்தது.

ஆரம்ப இதழ்கள் சிலவும் இடையிடையே சில இதழ்களும் தவிர்த்து, 83 ஏடுகள் தமிழிணையம் (https://www.tamildigitallibrary.in/) இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது.  அந்தத் தளத்தில் விடுபட்டிருக்கும் இதழ்களில் பெரும்பாலானவற்றை திரு. சுப்ரமணியன் அவர்களே தனது சேகரிப்பிலிருந்து எடுத்து அனுப்பினார். பைண்ட் செய்யப்பட்ட தொகுப்பைப் பிரித்து பக்கம் பக்கமாக பொறுமையாக ஸ்கேன் செய்து அனுப்பிவைத்தார். 21 மற்றும் 22வது இதழ்கள் அவரிடமும் சேதமடைந்திருந்தன. பலரிடம் விசாரித்து புதுச்சேரி பிரெஞ்சு இன்ஸ்டிட்யூட் நூலகத்திலிருந்து அந்த இதழ்களையும் பெற்றுத் தந்தார்.
விடுபடல் ஏதேனும் இருக்கிறதா என்று அறிய எல்லா இதழ்களையும் வரிசையாகப் பார்வையிட்டபோது தமிழிணையம் இணையதளத்திலிருந்து எடுத்துக்கொண்ட சில இதழ்களில் ஓரிரு பக்கங்கள் இல்லாமலிருப்பதும் சில பக்கங்களில் எழுத்து தெளிவில்லாமல் இருப்பதும் தெரிந்து, அவை சரிசெய்யப்பட்டன.
கணிசமான எண்ணிக்கையிலான இதழ்களை ஸ்கேன் செய்து பதிவேற்றி பேருதவி புரிந்திருக்கிறது தமிழிணையம் இணையதளம். இதழ்களில் விடுபட்டவற்றைப் பெறவும் சீர்செய்யவும் உதவியவை புதுச்சேரி பிரெஞ்சு இன்ஸ்டிட்யூட் நூலகமும் சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகமும். இவற்றின் நிர்வாகிகளுக்கும் எல்லா வகையிலும் துணை நிற்கும் சி. சு. செல்லப்பாவின் மகன் திரு. செ. சுப்ரமணியன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
-
அச்சில் வெளியான இதழை மின்னூல் வடிவில் தரும்போது அதன் அமைப்பில் சில மாற்றங்களைச் செய்யவேண்டியிருக்கிறது. அவை பற்றிய விளக்கங்கள் வருமாறு:
(1) அச்சில் பக்க அமைப்பு வசதிக்காக ஒரு படைப்பை வெவ்வேறு பக்கங்களில் பிரித்து அமைப்பது வழக்கம். மின்னூலாகத் தயாரிக்கும்போது ஒவ்வொரு படைப்பும் முடிவுற்ற பிறகே அடுத்த படைப்பு இடம்பெறும் வகையில் அமைக்கப்படும். (2) ஒரு படைப்பிற்குள் இடையில் கவிதையோ அறிவிப்போ விளம்பரமோ வேறு ஏதேனும் குறிப்போ இடம்பெற்றிருந்தால் அவையும் அந்தக் குறிப்பிட்ட படைப்பு நிறைவுற்ற பின், அதற்கு அடுத்த இடத்தில் வைக்கப்படும். (3) விளம்பரங்கள் பெரும்பாலும் எழுத்துரு வடிவுக்கு மாற்றப்படாது. இதழில் இடம்பெற்ற வடிவத்திலேயே சேர்க்கப்படும். (4) அச்சுப்பிழை போன்ற சிறிய பிழைத்திருந்தக் குறிப்பு ஏதேனும் இருந்தால், தேவையான திருந்தம் செய்யப்பட்டு அந்தக் குறிப்பு நீக்கப்படும்.
-
ஒவ்வொரு இதழும் 49 ரூபாய். அக்டோபர் 2ஆம் தேதியிலிருந்து ஒவ்வொரு இதழும் 3 நாட்கள் இலவசமாகக் கிடைக்கும். வாசகர்கள் தங்கள் கருத்துகளை எழுதியும் இதழ்களின் சுட்டிகளைப் பகிர்ந்தும் துணை நிற்கவேண்டும்.
-
எழுத்து இதழ்த் தொகுப்பு 

Comments

Most Popular

மணிபல்லவம் - ஜம்பு கொல பட்டினம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்ககாலத்து நூலாகிய மணிமேகலையிலே, இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப்பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள பழைய பௌத்த நூல்களிலேயும் இலங்கைத்தீவின் வடகோடியில் இருந்த ஜம்புகோல் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. தமிழ் நூலில் கூறப்படும் குறிப்பு களைக் கொண்டும் பாலி மொழி நூல்களில் கூறப்படும் குறிப்புகளைக் கொண்டும் மணிபல்லவமும் ஜம்புகொல பட்டினமும் ஒரே இடம் என்று துணியலாம். பெயர் வேறுபடு வதிலிருந்து இரண்டும் வெவ்வேறிடங்கள் எனக் கருதும்படி இருந்தாலும், இவைகளைப்பற்றிக் கூறப்படும் செய்திகளை உற்றுநோக்கினால், இரண்டும் ஒன்றே என்பது ஐயமற விளங்குகிறது. இதனை ஈண்டு ஆராய்வோம். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலேதான் மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்தது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை கூறுவது காண்க. சோழ நாட்டின் துறைமுகப்பட்டினமாகிய புகார்ப்பட்டினத்தில் இருந்து தெற்கே 30 யோசனை தொலைவில் மணிபல்லவம் இருந்தது (

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு , https://tinyurl.

சிறுகதை என்றால் என்ன? | க. நா. சுப்ரமண்யம்

சி றுகதை என்றால் என்ன ? உருவத்தால் சிறியதாக இருக்கவேண்டும் என்றும் , கதையாக இருக்கவேண்டும் என்றும் சட்டென்று பதில் கூறிவிடலாம். ஓரளவு திருப்தி தருகிற பதில் மாதிரித்தான் இருக்கிறது. ஆனால் யோசித்துப் பார்க்கும்போது தோன்றுகிறது - உருவத்தில் சிறியது என்றால் எவ்வளவு சிறியது என்றும் , கதை என்றால் என்ன என்றும் கேள்விகள் தோன்றுகின்றன. இரண்டாவது கேள்விக்குப் பதில் முதலில் சொல்லிப் பார்க்கலாம். அத்தைப் பாட்டி கதையிலிருந்து , கம்பராமாயணத்தின் கருப்பொருள் வரையில் , ஏசாப்புக் கதைகளிலிருந்து மஹாபாரதத்து குருக்ஷேத்திரம் வரையில் , எல்லாமே கதையை ஆதாரமாகக் கொண்டவைதான். நாவல் , நாடகம் என்கிற இலக்கியத் துறைக்கும் ஆதாரமான விஷயம் கதைகள்தான். சிறுகதைக்கு ஆதாரமான கதை என்ன ? எப்படியிருக்க வேண்டும் ? ஓ. ஹென்றியின் கதைகளிலே பல சம்பவங்கள் அடுக்கடுக்காக வந்து கடைசியில் ஒரு திருப்பம் திரும்பி ஒடித்து வக்கிரமாக நிற்கும். மோபஸான் கதைகளிலே அடுக்கடுக்காகப் பல விஷயங்கள் சொல்லப்பட்டு , ஒரு சம்பவத்தைச் செயற்கை முத்தைப்போல உருட்டித் திரட்டித் தரும். சம்பவங்களை நம்புகிற இந்த இரண்டு கதைகளுக்கும் அப