Skip to main content

கிண்டிலில் எழுத்து


‘எழுத்து’ இதழ்களை அமேசான் கிண்டிலில் மின்னூலாகப் பதிவேற்றும் பணி இன்று அவ்விதழின் ஆசிரியர் சி. சு. செல்லப்பா அவர்களின் பிறந்தநாளில் ஆரம்பமாகிறது. இதற்காக இதழியலாளர் சு. அருண் பிரசாத் உதவியுடன் சி. சு. செல்லப்பாவின் மகன் திரு. சுப்ரமணியன் அவர்களை அணுகி அனுமதி கோரியபோது, மகிழ்ச்சியுடன் இசைவு தெரிவித்தார். இதழ்களைத் திரட்டவும் பெருமுயற்சி எடுத்துக்கொண்டவர் அவர்தான்.  
'எழுத்து' 11 ஆண்டுகளைக் கடந்து 112 இதழ்கள் வெளியானது. இரட்டை இதழ்களாக வந்தவை 7. இதனால் இதழ் எண் 119 வரை செல்கிறது. முதல் இதழ் ஜனவரி 1959ல் வெளியானது. 12ஆம் ஆண்டின் முதல் ஏடாக ஜனவரி 1970ல் வெளியான இதழே கடைசி இதழாகவும் அமைந்தது.

ஆரம்ப இதழ்கள் சிலவும் இடையிடையே சில இதழ்களும் தவிர்த்து, 83 ஏடுகள் தமிழிணையம் (https://www.tamildigitallibrary.in/) இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது.  அந்தத் தளத்தில் விடுபட்டிருக்கும் இதழ்களில் பெரும்பாலானவற்றை திரு. சுப்ரமணியன் அவர்களே தனது சேகரிப்பிலிருந்து எடுத்து அனுப்பினார். பைண்ட் செய்யப்பட்ட தொகுப்பைப் பிரித்து பக்கம் பக்கமாக பொறுமையாக ஸ்கேன் செய்து அனுப்பிவைத்தார். 21 மற்றும் 22வது இதழ்கள் அவரிடமும் சேதமடைந்திருந்தன. பலரிடம் விசாரித்து புதுச்சேரி பிரெஞ்சு இன்ஸ்டிட்யூட் நூலகத்திலிருந்து அந்த இதழ்களையும் பெற்றுத் தந்தார்.
விடுபடல் ஏதேனும் இருக்கிறதா என்று அறிய எல்லா இதழ்களையும் வரிசையாகப் பார்வையிட்டபோது தமிழிணையம் இணையதளத்திலிருந்து எடுத்துக்கொண்ட சில இதழ்களில் ஓரிரு பக்கங்கள் இல்லாமலிருப்பதும் சில பக்கங்களில் எழுத்து தெளிவில்லாமல் இருப்பதும் தெரிந்து, அவை சரிசெய்யப்பட்டன.
கணிசமான எண்ணிக்கையிலான இதழ்களை ஸ்கேன் செய்து பதிவேற்றி பேருதவி புரிந்திருக்கிறது தமிழிணையம் இணையதளம். இதழ்களில் விடுபட்டவற்றைப் பெறவும் சீர்செய்யவும் உதவியவை புதுச்சேரி பிரெஞ்சு இன்ஸ்டிட்யூட் நூலகமும் சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகமும். இவற்றின் நிர்வாகிகளுக்கும் எல்லா வகையிலும் துணை நிற்கும் சி. சு. செல்லப்பாவின் மகன் திரு. செ. சுப்ரமணியன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
-
அச்சில் வெளியான இதழை மின்னூல் வடிவில் தரும்போது அதன் அமைப்பில் சில மாற்றங்களைச் செய்யவேண்டியிருக்கிறது. அவை பற்றிய விளக்கங்கள் வருமாறு:
(1) அச்சில் பக்க அமைப்பு வசதிக்காக ஒரு படைப்பை வெவ்வேறு பக்கங்களில் பிரித்து அமைப்பது வழக்கம். மின்னூலாகத் தயாரிக்கும்போது ஒவ்வொரு படைப்பும் முடிவுற்ற பிறகே அடுத்த படைப்பு இடம்பெறும் வகையில் அமைக்கப்படும். (2) ஒரு படைப்பிற்குள் இடையில் கவிதையோ அறிவிப்போ விளம்பரமோ வேறு ஏதேனும் குறிப்போ இடம்பெற்றிருந்தால் அவையும் அந்தக் குறிப்பிட்ட படைப்பு நிறைவுற்ற பின், அதற்கு அடுத்த இடத்தில் வைக்கப்படும். (3) விளம்பரங்கள் பெரும்பாலும் எழுத்துரு வடிவுக்கு மாற்றப்படாது. இதழில் இடம்பெற்ற வடிவத்திலேயே சேர்க்கப்படும். (4) அச்சுப்பிழை போன்ற சிறிய பிழைதிருந்தக் குறிப்பு ஏதேனும் இருந்தால், தேவையான திருந்தம் செய்யப்பட்டு அந்தக் குறிப்பு நீக்கப்படும்.
-
ஒவ்வொரு இதழும் 49 ரூபாய். அக்டோபர் 2ஆம் தேதியிலிருந்து ஒவ்வொரு இதழும் 3 நாட்கள் இலவசமாகக் கிடைக்கும். வாசகர்கள் தங்கள் கருத்துகளை எழுதியும் இதழ்களின் சுட்டிகளைப் பகிர்ந்தும் துணை நிற்கவேண்டும்.
-
எழுத்து இதழ்த் தொகுப்பு 

Comments

Most Popular

புதுமையும் பித்தமும் - 3 | க. நா. சுப்ரமண்யம்

புதுமையும் பித்தமும் - 2 | க. நா. சுப்ரமண்யம் இந்தப் பகுதியில் பொதுவாக இலக்கியத்தைப் பற்றியும் , சிறப்பாகத் தமிழ்ச் சிறுகதை பற்றியும் புதுமைப்பித்தன் சொல்லிப் போயிருக்கிற சில விஷயங்களைப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. அவர் படைப்புகளில் ஆட்சி செலுத்திய கொள்கைகள் , சித்தாந்தங்கள் முதலியவற்றையும் , அவருக்கிருந்த இலக்கிய நோக்கம் , வாழ்க்கை லட்சியங்கள் இவற்றையும் ஓரளவுக்குத் தெரிந்துகொள்ள இது உபயோகமாக இருக்கும். இலக்கியம் என்றால் என்ன என்கிற கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்கிற மாதிரி தன் கட்டுரைத் தொகுப்பிற்கு அவர் முன்னுரை எழுதுகிறபோது சில விஷயங்களைச் சொல்லியிருக்கிறார். ‘வாழ்வு , வாழ்க்கை என்று இரண்டு பதங்கள் உண்டு. இவற்றிடையே உள்ள தொடர்பையோ தொடர்பற்ற தன்மையையோ விளக்குவது , மனித சிந்தனையின் சாரம். வாழ்வு எனில் தோற்றம் , ஸ்திதி , மறைவு என முக்கூறாகத் தோன்றும் பிரபஞ்சத்தன்மை. வாழ்க்கை என்பது தனிப்பட்ட ஜீவராசியின் உயிர்ப் பாசத்தினால் நிகழும் அவஸ்தை. இவ்விரண்டுக்கும் உள்ள தொடர்பைக் காட்டுவது மனித சிந்தனையின் சாரம். அது தத்துவமாக உருவாகிறது. வாழ்வின் நியதி ஒன்று , சூத்திரம் ஒன்று என்று வற்பு...

மனமும் அதன் விளக்கமும் | கனவின் பொருள் | பெ. தூரன்

ப ல கனவுகள் சிக்கல் நிறைந்திருக்கின்றன; அவற்றில் தோன்றும் நிகழ்ச்சிகள் மேலாகப் பார்க்கும்போது பொருளற்றவைகளாகவும் இருக்கின்றன. கோ. என்பவர் கண்ட ஒரு கனவை இங்கே ஆராய்வோம். “ஏதோ ஒரு பெரிய கோயில். அங்கே நானும் என் நண்பர்கள் சி. வே. மா. ஆகிய மூவரும் சேர்ந்து ஒருவனைக் கொலை செய்தோம். அவனுடைய மூக்கை மாத்திரம் அறுத்துச் சந்தனத்தில் வைத்துச் சாமிக்கு வைத்தோம். பிணம் வெளியிலேயே கிடந்தது. சி. தான் மூக்கை அறுத்தவர். கடவுளைத் தொழுவதற்காகப் பலர் ஒரு மோட்டார்க் காரில் வந்தார்கள். உடனே நான் பிணத்தைத் துரக்கிக் கோபுரத்தின் மேல் வீசினேன். இதை எனது ஆசிரியர் ஒருவர் பார்த்துக் கொண்டார்.” “நான் ஒடி வந்துவிட்டேன். வழியில் என் நண்பர் வீ. யைச் சந்தித்து வேறொருவனிடம் சைக்கிள் வாங்கி இருவரும் ஏறிக்கொண்டு ஊருக்குச் சென்றோம். வழியில் சி. தம் அண்ணனிடம் ஒன்றும் நடக்காதது போல் வந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கொலை செய்துவிட்டு இவர் இவ்வளவு தாராளமாக வெளியில் நடமாடுகிறாரே என்று வியந்தேன்.” "நாங்கள் ஒரு சத்திரத்தில் புகுந்துகொண்டிருந்தோம். ஆனால் சி. வேறு சில நண்பர்களிடம் சாலையில் சென்றுகொண்டிருந்தார்.” ...

மணிபல்லவம் - ஜம்பு கொல பட்டினம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்ககாலத்து நூலாகிய மணிமேகலையிலே, இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப்பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள பழைய பௌத்த நூல்களிலேயும் இலங்கைத்தீவின் வடகோடியில் இருந்த ஜம்புகோல் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. தமிழ் நூலில் கூறப்படும் குறிப்பு களைக் கொண்டும் பாலி மொழி நூல்களில் கூறப்படும் குறிப்புகளைக் கொண்டும் மணிபல்லவமும் ஜம்புகொல பட்டினமும் ஒரே இடம் என்று துணியலாம். பெயர் வேறுபடு வதிலிருந்து இரண்டும் வெவ்வேறிடங்கள் எனக் கருதும்படி இருந்தாலும், இவைகளைப்பற்றிக் கூறப்படும் செய்திகளை உற்றுநோக்கினால், இரண்டும் ஒன்றே என்பது ஐயமற விளங்குகிறது. இதனை ஈண்டு ஆராய்வோம். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலேதான் மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்தது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை கூறுவது காண்க. சோழ நாட்டின் துறைமுகப்பட்டினமாகிய புகார்ப்பட்டினத்தில் இருந்து தெற்கே 30 யோசனை தொலைவில் மணிபல்லவம் இருந்தது (...