Skip to main content

முதல் சிறைவாசம் | தி. ஜ. ரங்கநாதன்

காந்தி எப்போதும் அநீதியை எதிர்த்தார். அதனால் பல முறை சிறை புகுந்தார். தென் ஆப்பிரிக்காவில்தான் அவரது முதல் சிறைவாசம்; அப்புறம் இந்தியாவில். இங்கே முதல் முறை ஆறாண்டு சிறைத்தண்டனை பெற்றார். எரவாடா சிறையில் அவரை வைத்தார்கள்.
சிறை அதிகாரி அவரிடம் முரட்டுத்தனமாய் நடந்தார். இடுப்புத்துணிதான் காந்தி உடுத்திருந்தார். ஆனால், அவரைத் தினமும் அதிகாரி சோதிப்பார். அவருடைய இடுப்பைத் தடவிப் பார்ப்பார்; கம்பளிகளை உதறுவார்; மலஜலப் பானையைப் பூட்ஸால் உதைப்பார்.
இவற்றையெல்லாம் பார்த்துக் காந்தி வருத்தப்பட்டார். அதிகாரியோடு வாதித்தார். "இவையெல்லாம் நியாயம் இல்லை" என்றார். நயமாகவே எடுத்துரைத்தார்.
அதிகாரி சிறிது மனம் மாறினார். காந்தியைக் கொஞ்சம் மரியாதையாக நடத்தினார். மற்ற கைதிகளும் சற்று வசதி பெற்றார்கள்.
சிறை கட்டுப்பாடுகளை காந்தி ஒருபோதும் மீறமாட்டார். அவற்றுக்குத் தாமாக உட்படுவார்.
முதல் முதல் ராஜாஜி, காந்தியின் முதல்வர் தேவதாஸ் - இந்த இருவரும் காந்தியைப் பேட்டி கண்டார்கள்.
சிறை அதிகாரியும் கூடவே இருந்தார். அவர் காந்திக்கு ஆசனம் அளிக்கவில்லை. காந்தி நின்றுகொண்டே பேசினார். தேவதாஸுக்கு இது வருத்தமாக இருந்தது.
காந்தி சொன்னார்: "மகனே! சிறையை ஒழிப்பதா நம் நோக்கம்? இல்லையே! சுயராஜ்ஜியம் நமக்கு வரும். அப்போது நாமே சிறையை நடத்த வேண்டியிருக்கும். குற்றவாளிகளை அதில் அடைப்போம். அவர்களைச் சீர்திருத்துவோம்; ஒழுங்காக இருக்கச் செய்யவோம். ஒழுங்கீனம் கூடாது; கட்டுப்பாட்டை மீறலாகாது. பண்பாடு உள்ள மக்களுக்கு அதுதான் அழகு. நாம் அநீதியான சட்டங்களையே மீறுகிறோம். அதற்குக் கிடைக்கும் தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன். கஷ்டங்களை அனுபவிப்போம். நியாயமான சட்டங்களை மீறமாட்டோம். இதுதான் சத்தியாக்கிரகம்.''

அடுத்தக் கதை: அறுவை சிகிச்சை

Comments

Most Popular

இலக்கியத்தில் உருவங்கள் | க. நா. சுப்ரமண்யம்

இலக்கியத்தில் பல பல உருவங்கள் உண்டு. அவை முதல் முதலாகப் பல பல மொழிகளில் தோன்றி இலக்கிய உருவம் பெற்று சிறப்பாகச் சில மொழிகளில் பிரமாதமான இலக்கிய அந்தஸ்து பெற்றவை. இந்த உருவம் இந்த மொழியைச் சேர்ந்தது என்று யாரும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. அப்படிச் சொல்லவேண்டிய அவசியமும் இல்லை. கிணற்றுத் தவளைகள்தான் இந்த மாதிரிப் பெருமை தேடிக்கொண்டு, தங்கள் தங்கள் மொழியே உலகிலுள்ள எல்லா இலக்கியத்துக்கும் ஆதாரம் என்று கட்சி கட்டிக்கொண்டு பெருமை பாராட்டிக்கொண்டிருக்க முடியும். இன்றைய தமிழ் இலக்கியாசிரியன் உலகிலுள்ள எல்லா மொழி இலக்கியங்களுக்கும் உருவங்களுக்கும் வாரிசு. தெரிந்தோ தெரியாமலோ அவன் தமிழ்ப் பழமைக்கெல்லாம் வாரிசாகிறான். - சிலப்பதிகாரத்தையும், சங்க நூல்களையும், கம்பராமாயணத்தையும், தேவாரம் திருவாச கத்தையும் அறிந்தோ அறியாமலோ, அவன் மனம் அந்த மரபிலேதான் சமைகிறது. தமிழனாகப் பிறந்த தோஷத்தினால் அவன் விடுகிற மூச்சே தமிழ் மரபு மூச்சு என்றுதான் சொல்லவேண்டும். இதிலே பிற மொழிகளின் மரபு எங்கே எப்படி வருகிறது என்று கேட்கலாம். சம்ஸ்கிருத முதல் நூலை அறிந்ததாகக் காட்டிக்கொள்கிற கம்பனும், ஐரோப்பிய நாவ...

மனமும் அதன் விளக்கமும் | கனவின் பொருள் | பெ. தூரன்

ப ல கனவுகள் சிக்கல் நிறைந்திருக்கின்றன; அவற்றில் தோன்றும் நிகழ்ச்சிகள் மேலாகப் பார்க்கும்போது பொருளற்றவைகளாகவும் இருக்கின்றன. கோ. என்பவர் கண்ட ஒரு கனவை இங்கே ஆராய்வோம். “ஏதோ ஒரு பெரிய கோயில். அங்கே நானும் என் நண்பர்கள் சி. வே. மா. ஆகிய மூவரும் சேர்ந்து ஒருவனைக் கொலை செய்தோம். அவனுடைய மூக்கை மாத்திரம் அறுத்துச் சந்தனத்தில் வைத்துச் சாமிக்கு வைத்தோம். பிணம் வெளியிலேயே கிடந்தது. சி. தான் மூக்கை அறுத்தவர். கடவுளைத் தொழுவதற்காகப் பலர் ஒரு மோட்டார்க் காரில் வந்தார்கள். உடனே நான் பிணத்தைத் துரக்கிக் கோபுரத்தின் மேல் வீசினேன். இதை எனது ஆசிரியர் ஒருவர் பார்த்துக் கொண்டார்.” “நான் ஒடி வந்துவிட்டேன். வழியில் என் நண்பர் வீ. யைச் சந்தித்து வேறொருவனிடம் சைக்கிள் வாங்கி இருவரும் ஏறிக்கொண்டு ஊருக்குச் சென்றோம். வழியில் சி. தம் அண்ணனிடம் ஒன்றும் நடக்காதது போல் வந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கொலை செய்துவிட்டு இவர் இவ்வளவு தாராளமாக வெளியில் நடமாடுகிறாரே என்று வியந்தேன்.” "நாங்கள் ஒரு சத்திரத்தில் புகுந்துகொண்டிருந்தோம். ஆனால் சி. வேறு சில நண்பர்களிடம் சாலையில் சென்றுகொண்டிருந்தார்.” ...

மனமும் அதன் விளக்கமும் | இன நனவிலி மனம் | பெ. தூரன்

பி ராய்டு என்ற உளவியலார் நனவிலி மனத்தைப் பற்றி ஆராய்ந்து உளப் பகுப்பியல் முறையைத் தோற்றுவித்தார் என்று கண்டோம். உளப்பகுப்பியலின் தந்தை அவரே. அவரோடு ஆட்லரும், யுங் என்பவரும் மாணவராகப் பல ஆண்டுகள் வேலை செய்தனர். பிறகு இருவரும் கொள்கை வேறுபாடுகளால் வேறு வேறாகப் பிரிந்தனர். ஆட்லரின் பிற்காலக் கருத்தைப் பற்றி முன்பே கூறப்பட்டுள்ளது. இங்கு யுங்கின் கொள்கையைச் சுருக்கமாக ஆராய்வோம். நனவிலி மனத்தைப் பிற்காலத்தில் பிராய்டு ‘இத்’ என்றும், அதில் எழும் ஆற்றலை ‘லிபிடோ’ (Libido) என்றும் குறிப்பிட்டார். லிபிடோ பாலியல்பு வாய்ந்தது என்றும், மனக் கோளாறுகளெல்லாம் இது ஒழுங்காக அமையாததால் ஏற்படுகின்றன என்றும், இந்தப் பாலியல்பு குழவிப் பருவ முதற்கொண்டே தொடங்குகிறதென்றும் கருதினார். நனவிலி மனம் குழவிப் பருவத்தில் சிறிதாக இருந்தபோதும், வயது ஆக ஆக அக்குழந்தைக்குத் தடைகளும் விதிகளும் பெருகுகின்ற காரணத்தினால் நனவிலி மனத்தில் பல விதமான இச்சைகளும் ஆர்வங்களும் மிகுதியாகி நனவிலி மனம் விரிவடைகின்றது. அதனால்தான் நனவிலி மனம் நனவு மனத்தினின்றும் வளர்ந்ததேயாகும் என்று பொதுப்படையாகக் கூறுவதுண்டு. இக் கருத்தைப் பல ந...