Skip to main content

சிறுவனின் அன்புப் பரிசு | தி. ஜ. ரங்கநாதன்


காங்கிரஸ் மகாசபை கூடியிருந்தது.
காந்தி தமது கூடாரத்தில் இருந்தார். ஏதோ தேடிக்கொண்டிருந்தார். வெகு கவலையோடு தேடினார். பரபர என்று தேடினார்.
காகா காலேல்கர் அங்கே வந்தார். அவர் ஒரு பேராசிரியர்; பெரிய படிப்பாளி. ஆசார்ய காலேல்கர் என்று அவரைச் சொல்வார்கள்.
"பாபு, என்ன தேடுகிறீர்கள்?" என்று ஆசார்யா கேட்டார்.
"ஒரு சிறு பென்சிலை தேடுகிறேன்" என்றார் காந்தி.
காலேல்கர் தமது கைப்பையைத் திறந்தார். ஒரு பெரிய பென்ஸிலை எடுத்து."இந்தாருங்கள். இதை வைத்துக்கொள்ளுங்கள். அந்தச் சிறு பென்சில் போனால் போகிறது" என்றார். பென்சிலைக் காந்தியிடம் கொடுத்தார்.
"இல்லை, இல்லை. எனக்கு இது வேண்டாம். அந்தச் சின்ன பென்சில்தான் வேண்டும்" என்று காந்தி சொன்னார்.
"இப்போது அதை உபயோகியுங்கள் பாபு. அப்புறம் அதை நான் தேடி எடுத்துத் தருகிறேன் " என்று காலேல்கர் சொன்னார்.
"இல்லை, காகா. அந்தப் பென்சில் எவ்வளவு முக்கியமானது, தெரியுமா? உங்களுக்குத் தெரியாது. அது காணாமற்போகக் கூடாது" என்றார் காந்தி.
காலேல்கர் கேட்டார்: "என்ன அப்படி முக்கியம் அந்தப் பென்சிலில்?"
காந்தி சொன்னார்: "நான் சென்னைக்குப் போயிருந்தேனே; அப்போது கிடைத்தது அது. ஜி. ஏ. நடேசன் என்ற தலைவரை உங்களுக்குத் தெரியுமே. அவருக்கு ஒரு மகன் இருக்கிறான்; சிறுவன். எனக்கு ஒரு பென்சில் வேண்டியிருந்தது. அவன் ஓட்டமாய் ஓடினான்; ஒரு பென்சிலைக் கொண்டுவந்தான்; எனக்குக் கொடுத்தான். அதுதான் நான் தேடுகிற பென்ஸில். அடடா! என்ன அன்போடு கொடுத்தான்! அதை நான் தொலைக்கலாமா? கூடாது. கூடாது."
"அப்படியானால் நானும் தேடுகிறேன்" என்றார் ஆசார்யா.
அந்தப் பொல்லாத பென்சிலை இருவரும் தேடினார்கள். கடைசியில் அது அகப்பட்டது. காந்திக்கு அப்போதுதான் மனநிம்மதி ஏற்பட்டது. அவர் மிக்க மகிழ்ச்சி அடைந்தார்.
ஆனால், அந்தப் பென்சிலின் நீளம் என்ன தெரியுமா? ஒரே ஓர் அங்குலந்தான் !
அதன் நீளமா முக்கியம்? அதைத் தந்தானே சிறுவன், அவனுடைய அன்புதான் முக்கியம். அது அவனுடைய அன்புப்பரிசு. அதை அசட்டை செய்யலாமா? கூடாது என்று காந்தி எண்ணினார்.
அன்பை காந்தி போற்றினார். எல்லார் மீதும் அன்பு செலுத்தினார். யார் எப்படி அன்பைக் காட்டினாலும் கொண்டாடினார்.

அடுத்தக் கதை: சிறுமியின் தங்க நகை

Comments

Most Popular

இலக்கியத்தில் உருவங்கள் | க. நா. சுப்ரமண்யம்

இலக்கியத்தில் பல பல உருவங்கள் உண்டு. அவை முதல் முதலாகப் பல பல மொழிகளில் தோன்றி இலக்கிய உருவம் பெற்று சிறப்பாகச் சில மொழிகளில் பிரமாதமான இலக்கிய அந்தஸ்து பெற்றவை. இந்த உருவம் இந்த மொழியைச் சேர்ந்தது என்று யாரும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. அப்படிச் சொல்லவேண்டிய அவசியமும் இல்லை. கிணற்றுத் தவளைகள்தான் இந்த மாதிரிப் பெருமை தேடிக்கொண்டு, தங்கள் தங்கள் மொழியே உலகிலுள்ள எல்லா இலக்கியத்துக்கும் ஆதாரம் என்று கட்சி கட்டிக்கொண்டு பெருமை பாராட்டிக்கொண்டிருக்க முடியும். இன்றைய தமிழ் இலக்கியாசிரியன் உலகிலுள்ள எல்லா மொழி இலக்கியங்களுக்கும் உருவங்களுக்கும் வாரிசு. தெரிந்தோ தெரியாமலோ அவன் தமிழ்ப் பழமைக்கெல்லாம் வாரிசாகிறான். - சிலப்பதிகாரத்தையும், சங்க நூல்களையும், கம்பராமாயணத்தையும், தேவாரம் திருவாச கத்தையும் அறிந்தோ அறியாமலோ, அவன் மனம் அந்த மரபிலேதான் சமைகிறது. தமிழனாகப் பிறந்த தோஷத்தினால் அவன் விடுகிற மூச்சே தமிழ் மரபு மூச்சு என்றுதான் சொல்லவேண்டும். இதிலே பிற மொழிகளின் மரபு எங்கே எப்படி வருகிறது என்று கேட்கலாம். சம்ஸ்கிருத முதல் நூலை அறிந்ததாகக் காட்டிக்கொள்கிற கம்பனும், ஐரோப்பிய நாவ...

மனமும் அதன் விளக்கமும் | இன நனவிலி மனம் | பெ. தூரன்

பி ராய்டு என்ற உளவியலார் நனவிலி மனத்தைப் பற்றி ஆராய்ந்து உளப் பகுப்பியல் முறையைத் தோற்றுவித்தார் என்று கண்டோம். உளப்பகுப்பியலின் தந்தை அவரே. அவரோடு ஆட்லரும், யுங் என்பவரும் மாணவராகப் பல ஆண்டுகள் வேலை செய்தனர். பிறகு இருவரும் கொள்கை வேறுபாடுகளால் வேறு வேறாகப் பிரிந்தனர். ஆட்லரின் பிற்காலக் கருத்தைப் பற்றி முன்பே கூறப்பட்டுள்ளது. இங்கு யுங்கின் கொள்கையைச் சுருக்கமாக ஆராய்வோம். நனவிலி மனத்தைப் பிற்காலத்தில் பிராய்டு ‘இத்’ என்றும், அதில் எழும் ஆற்றலை ‘லிபிடோ’ (Libido) என்றும் குறிப்பிட்டார். லிபிடோ பாலியல்பு வாய்ந்தது என்றும், மனக் கோளாறுகளெல்லாம் இது ஒழுங்காக அமையாததால் ஏற்படுகின்றன என்றும், இந்தப் பாலியல்பு குழவிப் பருவ முதற்கொண்டே தொடங்குகிறதென்றும் கருதினார். நனவிலி மனம் குழவிப் பருவத்தில் சிறிதாக இருந்தபோதும், வயது ஆக ஆக அக்குழந்தைக்குத் தடைகளும் விதிகளும் பெருகுகின்ற காரணத்தினால் நனவிலி மனத்தில் பல விதமான இச்சைகளும் ஆர்வங்களும் மிகுதியாகி நனவிலி மனம் விரிவடைகின்றது. அதனால்தான் நனவிலி மனம் நனவு மனத்தினின்றும் வளர்ந்ததேயாகும் என்று பொதுப்படையாகக் கூறுவதுண்டு. இக் கருத்தைப் பல ந...

மனமும் அதன் விளக்கமும் | கனவின் பொருள் | பெ. தூரன்

ப ல கனவுகள் சிக்கல் நிறைந்திருக்கின்றன; அவற்றில் தோன்றும் நிகழ்ச்சிகள் மேலாகப் பார்க்கும்போது பொருளற்றவைகளாகவும் இருக்கின்றன. கோ. என்பவர் கண்ட ஒரு கனவை இங்கே ஆராய்வோம். “ஏதோ ஒரு பெரிய கோயில். அங்கே நானும் என் நண்பர்கள் சி. வே. மா. ஆகிய மூவரும் சேர்ந்து ஒருவனைக் கொலை செய்தோம். அவனுடைய மூக்கை மாத்திரம் அறுத்துச் சந்தனத்தில் வைத்துச் சாமிக்கு வைத்தோம். பிணம் வெளியிலேயே கிடந்தது. சி. தான் மூக்கை அறுத்தவர். கடவுளைத் தொழுவதற்காகப் பலர் ஒரு மோட்டார்க் காரில் வந்தார்கள். உடனே நான் பிணத்தைத் துரக்கிக் கோபுரத்தின் மேல் வீசினேன். இதை எனது ஆசிரியர் ஒருவர் பார்த்துக் கொண்டார்.” “நான் ஒடி வந்துவிட்டேன். வழியில் என் நண்பர் வீ. யைச் சந்தித்து வேறொருவனிடம் சைக்கிள் வாங்கி இருவரும் ஏறிக்கொண்டு ஊருக்குச் சென்றோம். வழியில் சி. தம் அண்ணனிடம் ஒன்றும் நடக்காதது போல் வந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கொலை செய்துவிட்டு இவர் இவ்வளவு தாராளமாக வெளியில் நடமாடுகிறாரே என்று வியந்தேன்.” "நாங்கள் ஒரு சத்திரத்தில் புகுந்துகொண்டிருந்தோம். ஆனால் சி. வேறு சில நண்பர்களிடம் சாலையில் சென்றுகொண்டிருந்தார்.” ...