Skip to main content

சிறுவனின் அன்புப் பரிசு | தி. ஜ. ரங்கநாதன்


காங்கிரஸ் மகாசபை கூடியிருந்தது.
காந்தி தமது கூடாரத்தில் இருந்தார். ஏதோ தேடிக்கொண்டிருந்தார். வெகு கவலையோடு தேடினார். பரபர என்று தேடினார்.
காகா காலேல்கர் அங்கே வந்தார். அவர் ஒரு பேராசிரியர்; பெரிய படிப்பாளி. ஆசார்ய காலேல்கர் என்று அவரைச் சொல்வார்கள்.
"பாபு, என்ன தேடுகிறீர்கள்?" என்று ஆசார்யா கேட்டார்.
"ஒரு சிறு பென்சிலை தேடுகிறேன்" என்றார் காந்தி.
காலேல்கர் தமது கைப்பையைத் திறந்தார். ஒரு பெரிய பென்ஸிலை எடுத்து."இந்தாருங்கள். இதை வைத்துக்கொள்ளுங்கள். அந்தச் சிறு பென்சில் போனால் போகிறது" என்றார். பென்சிலைக் காந்தியிடம் கொடுத்தார்.
"இல்லை, இல்லை. எனக்கு இது வேண்டாம். அந்தச் சின்ன பென்சில்தான் வேண்டும்" என்று காந்தி சொன்னார்.
"இப்போது அதை உபயோகியுங்கள் பாபு. அப்புறம் அதை நான் தேடி எடுத்துத் தருகிறேன் " என்று காலேல்கர் சொன்னார்.
"இல்லை, காகா. அந்தப் பென்சில் எவ்வளவு முக்கியமானது, தெரியுமா? உங்களுக்குத் தெரியாது. அது காணாமற்போகக் கூடாது" என்றார் காந்தி.
காலேல்கர் கேட்டார்: "என்ன அப்படி முக்கியம் அந்தப் பென்சிலில்?"
காந்தி சொன்னார்: "நான் சென்னைக்குப் போயிருந்தேனே; அப்போது கிடைத்தது அது. ஜி. ஏ. நடேசன் என்ற தலைவரை உங்களுக்குத் தெரியுமே. அவருக்கு ஒரு மகன் இருக்கிறான்; சிறுவன். எனக்கு ஒரு பென்சில் வேண்டியிருந்தது. அவன் ஓட்டமாய் ஓடினான்; ஒரு பென்சிலைக் கொண்டுவந்தான்; எனக்குக் கொடுத்தான். அதுதான் நான் தேடுகிற பென்ஸில். அடடா! என்ன அன்போடு கொடுத்தான்! அதை நான் தொலைக்கலாமா? கூடாது. கூடாது."
"அப்படியானால் நானும் தேடுகிறேன்" என்றார் ஆசார்யா.
அந்தப் பொல்லாத பென்சிலை இருவரும் தேடினார்கள். கடைசியில் அது அகப்பட்டது. காந்திக்கு அப்போதுதான் மனநிம்மதி ஏற்பட்டது. அவர் மிக்க மகிழ்ச்சி அடைந்தார்.
ஆனால், அந்தப் பென்சிலின் நீளம் என்ன தெரியுமா? ஒரே ஓர் அங்குலந்தான் !
அதன் நீளமா முக்கியம்? அதைத் தந்தானே சிறுவன், அவனுடைய அன்புதான் முக்கியம். அது அவனுடைய அன்புப்பரிசு. அதை அசட்டை செய்யலாமா? கூடாது என்று காந்தி எண்ணினார்.
அன்பை காந்தி போற்றினார். எல்லார் மீதும் அன்பு செலுத்தினார். யார் எப்படி அன்பைக் காட்டினாலும் கொண்டாடினார்.

அடுத்தக் கதை: சிறுமியின் தங்க நகை

Comments

Most Popular

உறையூர் மறைந்த வரலாறு - மயிலை சீனி. வேங்கடசாமி

ஊர்களும் நகரங்களும் சிற்சில காரணங்களால் அழிந்து படுவதுண்டு. எரிமலைகளாலும், ஆறுகளாலும், மண்காற்றி னாலும், கடற்பெருக்காலும் ஊர்கள் அழிகின்றன. இவ்வாறு அழிந்துபோன ஊர்கள் பலப்பல. கி.பி. முதலாம் நூற்றாண்டிலே கிரேக்க நாட்டிலே இருந்த பாம்பி என்னும் நகரம், வெசூவியஸ் என்னும் எரிமலை கக்கிய நெருப்பினாலும் சாம்பலினாலும் மூடுண்டு அழிந்துவிட்டது. அழிந்துபோன அந்நகரத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் தோண்டியபோது, புதையுண்ட வீதிகளையும், மனைகளையும், மக்களின் எலும்புக் கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். சிந்து நதிக்கரையிலே இருந்த ஹரப்பா, மொகஞ்சதரோ என்னும் நகரங்கள் வெள்ளப் பெருக்கினால் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்துவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன்னர் அவ்விடங்களை அகழ்ந்து பார்த்தபோது, அக் காலத்துக் கட்டடங்களையும், தெருக்களையும், பாண்டங் களையும், எலும்புக்கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். புதுச்சேரிக்குத் தெற்கே பத்து மைல் தொலைவில் உள்ள அரிக்கமேடு என்னும் கடற்கரைப் பட்டினம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தமிழ் நாட்டில் பேர்பெற்ற துறைமுகமாக இருந்தது. யவனர் முதலிய வெ...

சகுண - நிர்குண பக்தி | வினோபா பாவே

Photo Courtesy: Gautam Bajaj / Vinoba Darshan இராமனும் கிருஷ்ணனும் ஒருவனே. பரதனும் இலட்சுமணனும் போல்தான் உத்தவனும் அர்ஜுனனும். கிருஷ்ணன் இருக்குமிடத்தில் உத்தவன் இருக்கவே செய்கிறான். உத்தவனால் கிருஷ்ணனை விட்டு ஒரு கணமும் பிரிந்திருக்க முடிவதில்லை. அவன் எப்பொழுதும் கிருஷ்ணன் பணிவிடையிலேயே மூழ்கியிருப்பவன். கிருஷ்ணன் இல்லாத பொழுது அவனுக்கு உலகமே இரசமற்றதாய் சாரமில்லாததாய்த் தோன்றும். அர்ஜுனனும் கிருஷ்ணனுக்குத் தோழன். ஆனால் அவன் தொலைவில் அஸ்தினாபுரத்தி லி ருந்து வந்தான். அர்ஜுனன் கிருஷ்ணனுடைய காரியத்தைச் செய்பவனே. ஆனால் கிருஷ்ணன் துவாரகையிலிருக்க , அஸ்தினாபுரத்திலிருந்து வந்தான். இருவரின் சம்பந்தம் இத்தகையது. கிருஷ்ணனுக்குத் தன் உடலைத் துறத்தல் அவசியமென்று தோன்றிய பொழுது அவன் உத்தவனிடம் . “ இதோ , நான் போகிறேன் ” என்றான். அதற்கு உத்தவன் , “ என்னை உடன் அழைத்துப் போகமாட்டீரா ? நாம் இருவரும் சேர்ந்தே போவோமே ” என்றான். ஆனால் , கிருஷ்ணன் “ எனக்கு அது பிடித்தமில்லை. சூரியன் தன் ஒளியைத் தீயினிடம் வைத்துவிட்டுப் போவது போல் நான் என் ஒளியை உன்னிடம் விட்டுப்போகின்றேன் ” என்றான். இவ்வாறு பகவ...

‘எழுத்து’ - 119 இதழ்களின் பொருளடக்கம்

எழுத்து 1: ஜனவரி 1959 எழுத்து வளர - தலையங்கம் சாகித்ய அகாடமி தமிழ்ப் பரிசு – க.நா.சு. பெட்டிக்கடை நாரணன் – ந. பிச்சமூர்த்தி கவிதை - மயன் சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்: ஒரு தொகுப்புக்கான சில குறிப்புகள் – க. நா. சுப்ரமண்யம் எழுதுவதெல்லாம்… - சிட்டி தாழை பூத்தது – பெ. கோ. சுந்தர்ராஜன் பாரதிக்குப்பின்-1: டாக்டர் சாமிநாதையர் – க.நா.சு. கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா விண்ணும் மண்ணும் – ந. சிதம்பரசுப்ரமண்யன் இன்றைய தமிழ் இலக்கிய விமர்சன தோரணை – சி. சு. செல்லப்பா வானம் - மயன் கெளமாரி – சாலிவாஹனன் உண்மைதேடியின் அனுபவ இலக்கிய வடிவங்கள் – தி. ஜானகிராமன்   எழுத்து 2: பிப்ரவரி 1959 வாடைக் காற்று - அசுவதி எழுத்தும் அதன் வாசகர்களும் இலக்கியமும் குழுவும் எஸ். வையாபுரிப்பிள்ளை – க. நா. சுப்ரமண்யம் திறனாய்வு - வில்லி அருளும் பொருளும் – ந. சிதம்பர சுப்ரமண்யன் கவி – வேதனை – தி. சோ. வேணுகோபாலன் தர்க்கம் - ஜெயகாந்தன் அன்று வருவாரோ ? – கு. அழகிரிசாமி வெற்றியின் பண்பு - பராங்குசம் தரிசனம் - மயன் கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா ...