Skip to main content

சிறுவனின் அன்புப் பரிசு | தி. ஜ. ரங்கநாதன்


காங்கிரஸ் மகாசபை கூடியிருந்தது.
காந்தி தமது கூடாரத்தில் இருந்தார். ஏதோ தேடிக்கொண்டிருந்தார். வெகு கவலையோடு தேடினார். பரபர என்று தேடினார்.
காகா காலேல்கர் அங்கே வந்தார். அவர் ஒரு பேராசிரியர்; பெரிய படிப்பாளி. ஆசார்ய காலேல்கர் என்று அவரைச் சொல்வார்கள்.
"பாபு, என்ன தேடுகிறீர்கள்?" என்று ஆசார்யா கேட்டார்.
"ஒரு சிறு பென்சிலை தேடுகிறேன்" என்றார் காந்தி.
காலேல்கர் தமது கைப்பையைத் திறந்தார். ஒரு பெரிய பென்ஸிலை எடுத்து."இந்தாருங்கள். இதை வைத்துக்கொள்ளுங்கள். அந்தச் சிறு பென்சில் போனால் போகிறது" என்றார். பென்சிலைக் காந்தியிடம் கொடுத்தார்.
"இல்லை, இல்லை. எனக்கு இது வேண்டாம். அந்தச் சின்ன பென்சில்தான் வேண்டும்" என்று காந்தி சொன்னார்.
"இப்போது அதை உபயோகியுங்கள் பாபு. அப்புறம் அதை நான் தேடி எடுத்துத் தருகிறேன் " என்று காலேல்கர் சொன்னார்.
"இல்லை, காகா. அந்தப் பென்சில் எவ்வளவு முக்கியமானது, தெரியுமா? உங்களுக்குத் தெரியாது. அது காணாமற்போகக் கூடாது" என்றார் காந்தி.
காலேல்கர் கேட்டார்: "என்ன அப்படி முக்கியம் அந்தப் பென்சிலில்?"
காந்தி சொன்னார்: "நான் சென்னைக்குப் போயிருந்தேனே; அப்போது கிடைத்தது அது. ஜி. ஏ. நடேசன் என்ற தலைவரை உங்களுக்குத் தெரியுமே. அவருக்கு ஒரு மகன் இருக்கிறான்; சிறுவன். எனக்கு ஒரு பென்சில் வேண்டியிருந்தது. அவன் ஓட்டமாய் ஓடினான்; ஒரு பென்சிலைக் கொண்டுவந்தான்; எனக்குக் கொடுத்தான். அதுதான் நான் தேடுகிற பென்ஸில். அடடா! என்ன அன்போடு கொடுத்தான்! அதை நான் தொலைக்கலாமா? கூடாது. கூடாது."
"அப்படியானால் நானும் தேடுகிறேன்" என்றார் ஆசார்யா.
அந்தப் பொல்லாத பென்சிலை இருவரும் தேடினார்கள். கடைசியில் அது அகப்பட்டது. காந்திக்கு அப்போதுதான் மனநிம்மதி ஏற்பட்டது. அவர் மிக்க மகிழ்ச்சி அடைந்தார்.
ஆனால், அந்தப் பென்சிலின் நீளம் என்ன தெரியுமா? ஒரே ஓர் அங்குலந்தான் !
அதன் நீளமா முக்கியம்? அதைத் தந்தானே சிறுவன், அவனுடைய அன்புதான் முக்கியம். அது அவனுடைய அன்புப்பரிசு. அதை அசட்டை செய்யலாமா? கூடாது என்று காந்தி எண்ணினார்.
அன்பை காந்தி போற்றினார். எல்லார் மீதும் அன்பு செலுத்தினார். யார் எப்படி அன்பைக் காட்டினாலும் கொண்டாடினார்.

அடுத்தக் கதை: சிறுமியின் தங்க நகை

Comments

Most Popular

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு , https://tinyurl.

உறையூர் மறைந்த வரலாறு - மயிலை சீனி. வேங்கடசாமி

ஊர்களும் நகரங்களும் சிற்சில காரணங்களால் அழிந்து படுவதுண்டு. எரிமலைகளாலும், ஆறுகளாலும், மண்காற்றி னாலும், கடற்பெருக்காலும் ஊர்கள் அழிகின்றன. இவ்வாறு அழிந்துபோன ஊர்கள் பலப்பல. கி.பி. முதலாம் நூற்றாண்டிலே கிரேக்க நாட்டிலே இருந்த பாம்பி என்னும் நகரம், வெசூவியஸ் என்னும் எரிமலை கக்கிய நெருப்பினாலும் சாம்பலினாலும் மூடுண்டு அழிந்துவிட்டது. அழிந்துபோன அந்நகரத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் தோண்டியபோது, புதையுண்ட வீதிகளையும், மனைகளையும், மக்களின் எலும்புக் கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். சிந்து நதிக்கரையிலே இருந்த ஹரப்பா, மொகஞ்சதரோ என்னும் நகரங்கள் வெள்ளப் பெருக்கினால் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்துவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன்னர் அவ்விடங்களை அகழ்ந்து பார்த்தபோது, அக் காலத்துக் கட்டடங்களையும், தெருக்களையும், பாண்டங் களையும், எலும்புக்கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். புதுச்சேரிக்குத் தெற்கே பத்து மைல் தொலைவில் உள்ள அரிக்கமேடு என்னும் கடற்கரைப் பட்டினம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தமிழ் நாட்டில் பேர்பெற்ற துறைமுகமாக இருந்தது. யவனர் முதலிய வெ

மனமும் அதன் விளக்கமும் - மனமெனும் மாயம் | பெ. தூரன்

ம னம் என்பதென்ன? அது எங்கே இருக்கிறது? கை, கால், கண், இதயம் என்றால் உடம்பில் உள்ள உறுப்புகள் என்று உடனே தெரிகிறது. அவைகளுக்கு வடிவம் உண்டு. பருமன் உண்டு. ஆதலால் அவைகளை எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மனம் என்பது எது? அதற்கு வடிவம் உண்டா? பருமன் உண்டா? தொட்டுப் பார்த்து அறிந்துகொள்ள முடியுமா? இவ்வாறு எண்ணிப் பார்த்தால் ஒன்றும் விளங்குவதில்லை. இவ்வாறு எண்ணுவதற்கு அந்த மனமே காரணமாக இருக்கிறதென்று தோன்றுகிறது. ஆனால் அது என்ன என்று மட்டும் எளிதில் அறிந்துகொள்ள முடிகிறதில்லை. மனத்திற்கு உருவமில்லை; கன பரிமாணமும் இல்லை. மனம் என்பது தசை, நரம்பு முதலியவைகளால் ஆக்கப்பட்டதன்று. அது சடப் பொருள் அன்று; அது சூக்குமப் பொருள், சடப் பொருள் என்றால் அது உடம்பைச் சேர்ந்த ஒர் உறுப்பாகிவிடும்; எளிதாக அதை அறிந்துகொள்ளவும் முடியும். சிலர் மூளைதான் மனம் என்று தவறாகக் கருதுகிறார்கள். மூளை என்பது உடம்போடு சேர்ந்த ஒரு பருப்பொருளான உறுப்பு. அது மனம் அல்ல. சூக்குமப் பொருளாக மனம் இருக்கிறதென்று மட்டும் நமக்குப் புலனாகிறது. அந்த மனந்தான் ஆசைகள், எண்ணங்கள், நோக்கங்கள், நம்பிக்கைகள் முதலியவற்றிற்கு இடமாயிரு