Skip to main content

பூதான உதயம் - 3 | வினோபா பாவே

என் பணி சமமாக்குவதே
ஒரு விஷயம் நினைவிலிருக்க வேண்டும். நாம் ஏற்றுள்ள பணி எவரையும் எதிர்ப்பதற்காகவல்ல. சர்வேஷாம் அபி ரோதேன பிர்ம கர்ம ஸமாரபே’ (பிர்ம்மகர்மம் அல்லது கடவுளின் பணி எவரையும் எதிர்த்துத் தோன்றாது). நாம் ஏற்றுள்ளது கடவுள் பணியாகையால் இதில் எவரையும் நாம் எதிர்க்கவில்லை. இதில் அனைவரின் நன்மையும் பொருந்தியிருக்கிறது. இதில் ஒவ்வொருவர் மனத்தையும் மற்றவர் மனங்களுடன் இணைக்கும் முயற்சியுள்ளது. ஆகையால் இதில் எல்லா அரசியல் கட்சியினரும் கலந்துகொள்வார்களென்பது என் நம்பிக்கை. மக்களனைவரின் நன்மைக்காகவே இவ்வேலை நடக்கிறதென்று எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு இடத்தில் கம்யூனிஸ்டுகள் பாபா செய்யும் இந்த வேலை பணக்காரர்களின் நன்மைக்காக நடக்கிறதென்று சொன்னார்கள். இது நடந்தது மூன்று வருஷங்களுக்கு முன்பாகும். இப்பொழுதோ கம்யூனிஸ்டுகளின் மனமும் நமக்குச் சாதகமாய் மாறியுள்ளது. நாம் ஏழைகளுக்காக வேலை செய்வதால் அனைவரின் மனமும் நமக்கு அனுகூலமாயிருக்குமென்று நான் முதலிலிருந்தே சொல்லிவந்தவன். ஆனால் பாபா பணக்காரர்களின் ஏஜெண்ட் என்ற இந்தப் புதிய குற்றச்சாட்டு என் காதில் விழவே எனக்குப் பெருமகிழ்ச்சியுண்டாயிற்று. ஆனால் நான் எத்தகைய ஏஜெண்ட்? இந்த ஏஜெண்டின் ஒரு கையில் பணக்காரர்களின் நன்மையிருந்தால் மறு கையில் அவன் ஏழைகளின் நன்மையையும் வைத்திருக்கிறான். இவன் இருவரையும் இணைக்கும் பாலம் போன்றவன். பாலம் இக்கரையிலுள்ளவர்களை அக்கரையிலும் அக்கரையிலுள்ளவர்களை இக்கரையிலும் கொண்டு சேர்ப்பதைப் போல பாபா ஏழைகளைத் தனவான்களாகவும் பொருள் படைத்தவர்களை எளியோராகவும் செய்வான். இருவரையும் ஒரே தளத்தில் கொணர்ந்து நிறுத்தி பரஸ்பரம் அன்புகொள்ளச் செய்து தான் புரோகிதனாயிருந்து இருவருக்கும் மணம் முடித்து வைத்துவிட்டு அவன் நடையைக் கட்டிவிடுவான். பிறகு அவன் அவர்களிடம் இனி நீங்கள் அன்புடன் உங்கள் காரியங்களை நடத்திக்கொண்டு போங்களென்று சொல்லுவான். இவ்வாறு இந்த இயக்கம் மக்களின் மனத்தை இணைப்பதற்கெனத் தோன்றியதாகும். 
எனது என்ற பற்றை விடுங்கள்
இந்தியா மிகவும் பெரிய தேசம், இதன் சக்தி ஒற்றுமையிலேயே அமைந்திருக்கிறது. நாம் முழு மனதுடன் ஒன்றுசேர்ந்துவிடுவோமாயின் நம் சக்தி பெரிதும் வளர, நம்மை யாரும் அசைக்க முடியாத நிலையை எய்துவோம். ஆனால் நம் மனம் ஒன்றுசேராவிடில் நம் ஜனத்தொகையின் பெருக்கமும் நிலத்தின் பெரும் பரப்புமே நமக்கு யமனாகிவிடும். நான் பணக்காரர்களிடம் நிலம் பெறுகிறேனென்றால் அவர்களுக்கு உதவுவதாகவும் பெற்ற நிலத்தை எளியோருக்கு வழங்கும்பொழுது அவர்களுக்கு உதவுவதாகவும் எண்ணுகிறேன். ஏழைக்கும் தன் கையகலக் கோவணத்தில் பற்றுண்டு. உடைமை உணர்ச்சி அவனுக்கும் இல்லாமலில்லை. இதனால் நான் ஏழை எளியோரிடமும் நீங்கள் உங்கள் குடிசைகளிடம் கொண்டுள்ள பற்றைத் துறந்துவிடுங்களென்கிறேன். தனவான்களும் தம் மாட மாளிகைகளிடம் கொண்டுள்ள பற்றை விடவேண்டிவரும். ஆனால் ஏழைகளாகிய நீங்கள் உங்கள் குடிசைகளின் பற்றை விட மறுத்தால் அவர்களும் தம் மாளிகைகளைப் பற்றிக்கொண்டுதானிருப்பார்கள். ஏழை, பணக்காரரென்று இரண்டு இனங்கள் இல்லை என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். இருவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களே. தன் உடைமையென்று ஒன்றைக் கொண்டு விடாப்பிடியாய் அதைப் பற்றிக்கொண்டிருப்பவர்பெரியவர்களோ சிறியவர்களோ பணக்காரரோ ஏழையோஅனைவரும் ஒரே இனத்தவரே.
கடவுள் காற்றையும் நீரையும் சூரிய வெளிச்சத்தையும் அனைவருக்குமென உண்டாக்கியிருப்பதைப் போல நிலத்தையும் எல்லோருக்குமென்றே சிருஷ்டித்திருக்கிறார் என்று நான் சொல்லுகிறேன். எனக்கு நல்ல காற்று கிடைக்கிறது; அதனால் உங்களுக்கும் ஒன்றும் கேடு நேருவதில்லை. உங்களுக்கு நல்ல காற்று கிடைப்பதனாலும் எனக்குக் கேடில்லை. ஆனால் ஒருவருக்கு நல்ல காற்று கிடைக்கும் காரணத்தால் இன்னொருவன் தீய காற்றில் இருக்க நேர்ந்தாலும் ஒருவனுக்கு நல்ல நீர் கிடைக்கவேண்டி இன்னொருவன் அழுக்கு நீரைப் பருக நேர்ந்தாலும் பேராபத்தாய்விடும். ஆகையால் சிருஷ்டியிலுள்ள சக்திகளனைத்தும் அனைவருக்குமென அமைந்தவையாகையால் அதற்கேற்ப நாம் நம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும்.
மறுபடியும் ஆந்திரம் வருவேன். இவ்விரண்டு மாதங்களுள் நீங்களனைவரும் ஒன்றுசேர்ந்து பூமிதானப் பணியில் முனைந்து இறங்கி இந்த கோவர்த்தன மலையைத் தூக்கவேண்டுமென்பது என் விருப்பம். கோவர்த்தன மலையைத் தூக்குகிறவன் தூக்கப்போகிறான், நாம் தூக்கப்போவதில்லை. ஆனால் நம் அனைவரின் கோல்களும் அதைத் தாங்கும் பொழுதுதான் கிருஷ்ண பகவான் அதைத் தூக்கிப்பிடிப்பார். ஆகையால் ஆந்திர தேசத்தில் பூமிதான யக்ஞத்திற்கு நிலமளிக்காதவர்களோ சம்பத்து தான யக்ஞத்திற்குப் பொருள் தராதவர்களோ எவரும் இருக்கலாகாது என்பது என் விருப்பம். உங்களிடமிருந்து தொடங்கி, அண்டை அயலில் உள்ளவர்களை அன்புடன் அணுகிக் கேட்பீர்களாயின் அவர்கள் கொடுத்துக்கொண்டு வருவார்கள். யாரையும் எவ்வகையிலும் நிர்ப்பந்தப்படுத்தத் தேவையில்லை. நிர்ப்பந்தம் அறவே கூடாது. இனிமையுள்ளதும் நல்ல விளைவுள்ளதுமான பொருளைப் பற்றி நாம் மக்களுக்கு விளக்கி மட்டும் சொல்லுவோமாயின் அவர்கள் அதைப் புரிந்துகொள்ளுகிறார்கள்
சர்வோதய நூல்களை நீங்கள் அனைவரும் படிக்கவேண்டுமென்பது என் விருப்பம். சர்வோதய தத்துவங்களை நீங்கள் நன்கு சிந்திக்கவும் ஆராயவும் வேண்டும். ஒவ்வொரு நகரிலும் கிராமத்திலும் படிக்கவும், படித்து விளக்கவும் ஏற்பாடு இருக்கவேண்டும்.

- நிறைவு

Comments

Most Popular

மனமும் அதன் விளக்கமும் - மனமெனும் மாயம் | பெ. தூரன்

ம னம் என்பதென்ன? அது எங்கே இருக்கிறது? கை, கால், கண், இதயம் என்றால் உடம்பில் உள்ள உறுப்புகள் என்று உடனே தெரிகிறது. அவைகளுக்கு வடிவம் உண்டு. பருமன் உண்டு. ஆதலால் அவைகளை எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மனம் என்பது எது? அதற்கு வடிவம் உண்டா? பருமன் உண்டா? தொட்டுப் பார்த்து அறிந்துகொள்ள முடியுமா? இவ்வாறு எண்ணிப் பார்த்தால் ஒன்றும் விளங்குவதில்லை. இவ்வாறு எண்ணுவதற்கு அந்த மனமே காரணமாக இருக்கிறதென்று தோன்றுகிறது. ஆனால் அது என்ன என்று மட்டும் எளிதில் அறிந்துகொள்ள முடிகிறதில்லை. மனத்திற்கு உருவமில்லை; கன பரிமாணமும் இல்லை. மனம் என்பது தசை, நரம்பு முதலியவைகளால் ஆக்கப்பட்டதன்று. அது சடப் பொருள் அன்று; அது சூக்குமப் பொருள், சடப் பொருள் என்றால் அது உடம்பைச் சேர்ந்த ஒர் உறுப்பாகிவிடும்; எளிதாக அதை அறிந்துகொள்ளவும் முடியும். சிலர் மூளைதான் மனம் என்று தவறாகக் கருதுகிறார்கள். மூளை என்பது உடம்போடு சேர்ந்த ஒரு பருப்பொருளான உறுப்பு. அது மனம் அல்ல. சூக்குமப் பொருளாக மனம் இருக்கிறதென்று மட்டும் நமக்குப் புலனாகிறது. அந்த மனந்தான் ஆசைகள், எண்ணங்கள், நோக்கங்கள், நம்பிக்கைகள் முதலியவற்றிற்கு இடமாயிரு...

நிர்மாணத் திட்டம் | பெரியார்

அரசியல் வாழ்வில் தற்காலம் நிர்மாணத்  திட்டங்கள் என்று சொல்லப்படுவது கதர் , தீண்டாமை விலக்கு , மதுவிலக்கு ஆகிய இம் மூன்றையே குறித்துக்கொண்டு நிற்கிறது. இவற்றை ஏறக்குறைய இன்றைக்கு நான்கு ஐந்து வருடங்களாக மகாத்மா விடாமல் வலியுறுத்தி வந்தும் கோரிய அளவு நிறைவேற்றப்பட்டதாக நாம் சொல்ல முடியாது. அரசியல்வாதிகள் பலரால் இத்திட்டங்கள் ஊக்கமளிக்கவல்லதல்ல வென்றும் , சுயராஜ்யத்திற்கு அவைகளே போதியவை அல்லவென்றும் , இத்திட்டங்கள் அரசியல் துறைக்குச் சம்பந்தப்பட்டவையல்லவென்றும் , பலவாறாகப் பழிக்கப்பட்டும் , மக்களுக்கு இவற்றில் மனம் செல்லாதவாறு கலக்கப்பட்டு வருகின்றது. மகாத்மா அவர்கள் இத்திட்டங்களில் கதர்த் திட்டம் ஒன்றுக்கே தனது முழு பலத்தையும் உபயோகிக்கின்றார். இரவும் பகலும் அவ்வொரு கருமத்திலேயே கண்ணாயிருக்கின்றார். நாம் அதன் தத்துவம் என்ன என்று பார்க்கின்றோமா ? இல்லவே இல்லை. வருஷம் ஒன்றுக்கு 60, 70 கோடி ருபாய் நம் நாட்டிலிருந்து அன்னிய நாட்டிற்குப் போகக்கூடியதும் , லட்சக்கணக்கான நமது சகோதரிகளுக்கும் , சகோதரர் களுக்கும் உணவளிக்கக்கூடியதான இக்கதரை நாம் ஆதரிக்காவிட்டால் பிறகு நமக்கு என்ன தேசபக...

தமிழில் வசனநடை | க. நா. சுப்ரமண்யம்

எல்லா மொழிகளிலுமே இலக்கிய ரீதியாகக் கவனிக்கும்போது கவிதை என்பதை ஒட்டிப் பின்னர்தான் வசன நடை என்பது எழுந்திருக்கிறது என்பது வெளிப்படை . தமிழும் அதற்கு விலக்கல்ல . தமிழ்க் கவிதை கி . மு . ஐந்தாயிரத்தில் தோன்றியது என்று வைத்துக்கொண்டால் , கவிதை தோன்றி ஆறாயிரத்து எழுநூற்றிருபது வருஷங்களுக்குப் பிறகுதான் வசன நடை தோற்றிற்று . தமிழ்க் கவிதை தோன்றியது கி . பி . மூன்றாம் நூற்றாண்டை ஒட்டியே என்று ஏற்றுக்கொண்டால் , வசனம் தோன்றியது ஒரு ஆயிரத்தி நானூறு வருஷங்களுக்குப் பிறகு என்றுதான் சொல்ல வேண்டும் . நான் இந்த இரண்டாவது காலவரையே நியாயமானது என்று எண்ணுபவன் . எஸ் . வையாபுரிப் பிள்ளை அவர்களின் ஆராய்ச்சிகளும் இதையே வற்புறுத்துகின்றன என்று தான் சொல்லவேண்டும் . உரை என்று சொல்லப்படுவதும் வசனமும் ஒன்றுதான் என்று அபிப்பிராயம் தெரிவித்துக்கொண்டிருப்பதில் சாரமில்லை . உரை இருந்திருக்கிறது . தமிழர்கள் ஊமைகள் அல்ல , ஆரம்ப காலத்திலிருந்தே உரையாடிக்கொண்டுதான் வந்திருக்கிறார்கள் என்று சொல்வது ஹாஸ்யமாகப் பொருத்தமாக இருக்கும் . உ...