Skip to main content

பூதான உதயம் - 3 | வினோபா பாவே

என் பணி சமமாக்குவதே
ஒரு விஷயம் நினைவிலிருக்க வேண்டும். நாம் ஏற்றுள்ள பணி எவரையும் எதிர்ப்பதற்காகவல்ல. சர்வேஷாம் அபி ரோதேன பிர்ம கர்ம ஸமாரபே’ (பிர்ம்மகர்மம் அல்லது கடவுளின் பணி எவரையும் எதிர்த்துத் தோன்றாது). நாம் ஏற்றுள்ளது கடவுள் பணியாகையால் இதில் எவரையும் நாம் எதிர்க்கவில்லை. இதில் அனைவரின் நன்மையும் பொருந்தியிருக்கிறது. இதில் ஒவ்வொருவர் மனத்தையும் மற்றவர் மனங்களுடன் இணைக்கும் முயற்சியுள்ளது. ஆகையால் இதில் எல்லா அரசியல் கட்சியினரும் கலந்துகொள்வார்களென்பது என் நம்பிக்கை. மக்களனைவரின் நன்மைக்காகவே இவ்வேலை நடக்கிறதென்று எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு இடத்தில் கம்யூனிஸ்டுகள் பாபா செய்யும் இந்த வேலை பணக்காரர்களின் நன்மைக்காக நடக்கிறதென்று சொன்னார்கள். இது நடந்தது மூன்று வருஷங்களுக்கு முன்பாகும். இப்பொழுதோ கம்யூனிஸ்டுகளின் மனமும் நமக்குச் சாதகமாய் மாறியுள்ளது. நாம் ஏழைகளுக்காக வேலை செய்வதால் அனைவரின் மனமும் நமக்கு அனுகூலமாயிருக்குமென்று நான் முதலிலிருந்தே சொல்லிவந்தவன். ஆனால் பாபா பணக்காரர்களின் ஏஜெண்ட் என்ற இந்தப் புதிய குற்றச்சாட்டு என் காதில் விழவே எனக்குப் பெருமகிழ்ச்சியுண்டாயிற்று. ஆனால் நான் எத்தகைய ஏஜெண்ட்? இந்த ஏஜெண்டின் ஒரு கையில் பணக்காரர்களின் நன்மையிருந்தால் மறு கையில் அவன் ஏழைகளின் நன்மையையும் வைத்திருக்கிறான். இவன் இருவரையும் இணைக்கும் பாலம் போன்றவன். பாலம் இக்கரையிலுள்ளவர்களை அக்கரையிலும் அக்கரையிலுள்ளவர்களை இக்கரையிலும் கொண்டு சேர்ப்பதைப் போல பாபா ஏழைகளைத் தனவான்களாகவும் பொருள் படைத்தவர்களை எளியோராகவும் செய்வான். இருவரையும் ஒரே தளத்தில் கொணர்ந்து நிறுத்தி பரஸ்பரம் அன்புகொள்ளச் செய்து தான் புரோகிதனாயிருந்து இருவருக்கும் மணம் முடித்து வைத்துவிட்டு அவன் நடையைக் கட்டிவிடுவான். பிறகு அவன் அவர்களிடம் இனி நீங்கள் அன்புடன் உங்கள் காரியங்களை நடத்திக்கொண்டு போங்களென்று சொல்லுவான். இவ்வாறு இந்த இயக்கம் மக்களின் மனத்தை இணைப்பதற்கெனத் தோன்றியதாகும். 
எனது என்ற பற்றை விடுங்கள்
இந்தியா மிகவும் பெரிய தேசம், இதன் சக்தி ஒற்றுமையிலேயே அமைந்திருக்கிறது. நாம் முழு மனதுடன் ஒன்றுசேர்ந்துவிடுவோமாயின் நம் சக்தி பெரிதும் வளர, நம்மை யாரும் அசைக்க முடியாத நிலையை எய்துவோம். ஆனால் நம் மனம் ஒன்றுசேராவிடில் நம் ஜனத்தொகையின் பெருக்கமும் நிலத்தின் பெரும் பரப்புமே நமக்கு யமனாகிவிடும். நான் பணக்காரர்களிடம் நிலம் பெறுகிறேனென்றால் அவர்களுக்கு உதவுவதாகவும் பெற்ற நிலத்தை எளியோருக்கு வழங்கும்பொழுது அவர்களுக்கு உதவுவதாகவும் எண்ணுகிறேன். ஏழைக்கும் தன் கையகலக் கோவணத்தில் பற்றுண்டு. உடைமை உணர்ச்சி அவனுக்கும் இல்லாமலில்லை. இதனால் நான் ஏழை எளியோரிடமும் நீங்கள் உங்கள் குடிசைகளிடம் கொண்டுள்ள பற்றைத் துறந்துவிடுங்களென்கிறேன். தனவான்களும் தம் மாட மாளிகைகளிடம் கொண்டுள்ள பற்றை விடவேண்டிவரும். ஆனால் ஏழைகளாகிய நீங்கள் உங்கள் குடிசைகளின் பற்றை விட மறுத்தால் அவர்களும் தம் மாளிகைகளைப் பற்றிக்கொண்டுதானிருப்பார்கள். ஏழை, பணக்காரரென்று இரண்டு இனங்கள் இல்லை என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். இருவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களே. தன் உடைமையென்று ஒன்றைக் கொண்டு விடாப்பிடியாய் அதைப் பற்றிக்கொண்டிருப்பவர்பெரியவர்களோ சிறியவர்களோ பணக்காரரோ ஏழையோஅனைவரும் ஒரே இனத்தவரே.
கடவுள் காற்றையும் நீரையும் சூரிய வெளிச்சத்தையும் அனைவருக்குமென உண்டாக்கியிருப்பதைப் போல நிலத்தையும் எல்லோருக்குமென்றே சிருஷ்டித்திருக்கிறார் என்று நான் சொல்லுகிறேன். எனக்கு நல்ல காற்று கிடைக்கிறது; அதனால் உங்களுக்கும் ஒன்றும் கேடு நேருவதில்லை. உங்களுக்கு நல்ல காற்று கிடைப்பதனாலும் எனக்குக் கேடில்லை. ஆனால் ஒருவருக்கு நல்ல காற்று கிடைக்கும் காரணத்தால் இன்னொருவன் தீய காற்றில் இருக்க நேர்ந்தாலும் ஒருவனுக்கு நல்ல நீர் கிடைக்கவேண்டி இன்னொருவன் அழுக்கு நீரைப் பருக நேர்ந்தாலும் பேராபத்தாய்விடும். ஆகையால் சிருஷ்டியிலுள்ள சக்திகளனைத்தும் அனைவருக்குமென அமைந்தவையாகையால் அதற்கேற்ப நாம் நம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும்.
மறுபடியும் ஆந்திரம் வருவேன். இவ்விரண்டு மாதங்களுள் நீங்களனைவரும் ஒன்றுசேர்ந்து பூமிதானப் பணியில் முனைந்து இறங்கி இந்த கோவர்த்தன மலையைத் தூக்கவேண்டுமென்பது என் விருப்பம். கோவர்த்தன மலையைத் தூக்குகிறவன் தூக்கப்போகிறான், நாம் தூக்கப்போவதில்லை. ஆனால் நம் அனைவரின் கோல்களும் அதைத் தாங்கும் பொழுதுதான் கிருஷ்ண பகவான் அதைத் தூக்கிப்பிடிப்பார். ஆகையால் ஆந்திர தேசத்தில் பூமிதான யக்ஞத்திற்கு நிலமளிக்காதவர்களோ சம்பத்து தான யக்ஞத்திற்குப் பொருள் தராதவர்களோ எவரும் இருக்கலாகாது என்பது என் விருப்பம். உங்களிடமிருந்து தொடங்கி, அண்டை அயலில் உள்ளவர்களை அன்புடன் அணுகிக் கேட்பீர்களாயின் அவர்கள் கொடுத்துக்கொண்டு வருவார்கள். யாரையும் எவ்வகையிலும் நிர்ப்பந்தப்படுத்தத் தேவையில்லை. நிர்ப்பந்தம் அறவே கூடாது. இனிமையுள்ளதும் நல்ல விளைவுள்ளதுமான பொருளைப் பற்றி நாம் மக்களுக்கு விளக்கி மட்டும் சொல்லுவோமாயின் அவர்கள் அதைப் புரிந்துகொள்ளுகிறார்கள்
சர்வோதய நூல்களை நீங்கள் அனைவரும் படிக்கவேண்டுமென்பது என் விருப்பம். சர்வோதய தத்துவங்களை நீங்கள் நன்கு சிந்திக்கவும் ஆராயவும் வேண்டும். ஒவ்வொரு நகரிலும் கிராமத்திலும் படிக்கவும், படித்து விளக்கவும் ஏற்பாடு இருக்கவேண்டும்.

- நிறைவு

Comments

Most Popular

இராவணன் இலங்கை - மயிலை சீனி. வேங்கடசாமி

தமிழ் நாட்டை அடுத்துள்ள இலங்கைத் தீவினை, இராவணன் ஆண்ட இலங்கை என்று மக்கள் கருதி வந்தனர்; வருகின்றனர். ஆழ்வார்களும் ஏனையோரும் இலங்கையைத் தென் இலங்கை என்று கூறியிருக்கிறபடியால், சிங்களத் தீவாகிய இலங்கைதான் இராவணன் ஆண்ட இலங்கை என மக்கள் தவறாகக் கருதி வருகின்றனர் போலும். 'தென் இலங்கை' என்பதற்குத் தமிழ் நாட்டிற்குத் தெற்கிலுள்ள இலங்கை என்று பொருள் கூறுவது சரித்திரத்துக்கு முரண்பட்டது. தென் இலங்கை என்பதற்கு, 'அயோத்திக்குத் தெற்கிலுள்ள இலங்கை' என்று பொருள் கொள்வதுதான் சரித்திரத்திற்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்தமானது. ஆனால், தமிழ் நாட்டை அடுத்துள்ள சிங்களத் தீவாகிய இலங்கைதான் இராவணன் ஆண்ட இலங்கை என்று பல நூற்றாண்டுகளாகக் கருதப்பட்டு வருகிறது. இத்தவறான கருத்து சங்க நூல்களிலும் இடம் பெற்றுவிட்டது. சங்க நூல்கள் கூறுவன தமிழ் நாட்டிலுள்ள கோடிக்கரை (தனுஷ்கோடி) என்னும் கடற்கரையருகில், ஓர் ஆலமரத்தின்கீழ் இராமர் தங்கி, சீதையை மீட்கும் வழியை வானர வீரர்களுடன் கலந்து யோசித்தார் என்று கடுவன் மள்ளனார் என்னும் புலவர் கூறுகிறார். "வென்வேற் கவுரியர் தொன்முது கோடி, முழங்கிரும் பெளவம...

மனமும் அதன் விளக்கமும் | கனவின் பொருள் | பெ. தூரன்

ப ல கனவுகள் சிக்கல் நிறைந்திருக்கின்றன; அவற்றில் தோன்றும் நிகழ்ச்சிகள் மேலாகப் பார்க்கும்போது பொருளற்றவைகளாகவும் இருக்கின்றன. கோ. என்பவர் கண்ட ஒரு கனவை இங்கே ஆராய்வோம். “ஏதோ ஒரு பெரிய கோயில். அங்கே நானும் என் நண்பர்கள் சி. வே. மா. ஆகிய மூவரும் சேர்ந்து ஒருவனைக் கொலை செய்தோம். அவனுடைய மூக்கை மாத்திரம் அறுத்துச் சந்தனத்தில் வைத்துச் சாமிக்கு வைத்தோம். பிணம் வெளியிலேயே கிடந்தது. சி. தான் மூக்கை அறுத்தவர். கடவுளைத் தொழுவதற்காகப் பலர் ஒரு மோட்டார்க் காரில் வந்தார்கள். உடனே நான் பிணத்தைத் துரக்கிக் கோபுரத்தின் மேல் வீசினேன். இதை எனது ஆசிரியர் ஒருவர் பார்த்துக் கொண்டார்.” “நான் ஒடி வந்துவிட்டேன். வழியில் என் நண்பர் வீ. யைச் சந்தித்து வேறொருவனிடம் சைக்கிள் வாங்கி இருவரும் ஏறிக்கொண்டு ஊருக்குச் சென்றோம். வழியில் சி. தம் அண்ணனிடம் ஒன்றும் நடக்காதது போல் வந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கொலை செய்துவிட்டு இவர் இவ்வளவு தாராளமாக வெளியில் நடமாடுகிறாரே என்று வியந்தேன்.” "நாங்கள் ஒரு சத்திரத்தில் புகுந்துகொண்டிருந்தோம். ஆனால் சி. வேறு சில நண்பர்களிடம் சாலையில் சென்றுகொண்டிருந்தார்.” ...

இலக்கிய விமரிசனம் - சில சிந்தனைகள் | க. நா. சுப்ரமண்யம்

எனக்கு இலக்கிய விமரிசனம் செய்வதிலே அவ்வளவாக நம்பிக்கை கிடையாது . இலக்கியத் துறைகளிலே சிலருக்குச் சில துறைகளில்தான் ஈடுபாடிருக்க முடியும் . எனக்குச் சிறுகதை , நாடகம் , நாவல் , கதை என்கிற துறைகளிலே ஈடுபாடு உண்டு . விமரிசனம் , கட்டுரை போன்ற துறைகளில் அவ்வளவாக ஈடுபாடு கிடையாதுதான் . எனினும் ஒரு இருபத்தைந்து வருஷங்களாகவே நான் இலக்கிய விமரிசனம் செய்துகொண்டு வரவேண்டியதாக இருந்திருக்கிறது . இஷ்டமில்லாமலேதான் நான் இலக்கிய விமரிசனம் செய்து கொண்டு வருகிறேன் - தவிர்க்க முடியாத நிர்ப்பந்தத்தினால் . சில சமயம் நான் ஆழந்தெரியாமல் காலை விட்டுவிடுவதும் உண்டு - ஆனால் நான் சொல்வதெல்லாவற்றையும் என்னளவில் உண்மையென்று நம்பித்தான் சொல்கிறேன் . என்னளவில் உண்மைதான் . அதனால் உங்களுக்கும் உண்மையாகத்தானே இருக்கவேண்டும் ? இலக்கிய விமரிசனத்தின் அவசியத்தைப்பற்றிப் பலரும் சொல்லிவிட்டார்கள் . அவசியம் என்று ஏற்றுக்கொள்ளுபவர்களும்கூட இன்று தமிழில் இலக்கியம் சரியானபடி வளர்ச்சியடையாத தோஷத்தினால் இலக்கிய விமரிசனத்துக்கு அவ்வளவாக அவசியமில்லை ...