Skip to main content

பல ரூபங்களில் காந்தி: தையல்காரர் | அனு பந்தோபாத்யாயா


தென் ஆப்பிரிக்காவில் காந்திஜி வசித்த காலத்தில் அவருக்கு இரண்டு தடவை கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. சில வாரங்கள் வரை அவர் நாள் ஒன்றுக்கு ஒன்பது மணி நேரம் கிழிந்த போர்வைகளையும், சட்டைகளுக்குப் பைகளையும் தைத்து வந்தார். அவருக்குத் தரப்பட்ட பணிகளை காலக்கெடுவுக்குள் முடித்துக் கொடுத்ததோடு அல்லாமல், மேலும் பணி வேண்டும் என்று கேட்பது அவரது வழக்கம். 
இந்தியச் சிறையில் சில நாட்களுக்கு ஸிங்கர் தையல் எந்திரத்தில் தையல் வேலை செய்தார். சிறைப் பணிகளை அவர் தாமாகவே ஏற்றுக்கொண்டு செய்து வந்தார். மனிதர்களுக்கு வேலை கிடைக்காமல் செய்து வரும் எந்திரங்களுக்கு மனிதன் அடிமையாகிவருவதை அவர் எதிர்த்தார். மனித உழைப்பை அகற்றித் தேவையற்றதாக்கிவிடும் எந்திரங்களை நாம் பயன்படுத்தக் கூடாது என்ற கருத்தை அவர் வலியுறுத்தி வந்தார். இந்தியாவைப் பொருத்தவரை கோடிக்கணக்கான மக்களுக்கு ஓய்வு நேரம் எப்போது கிடைக்கும் என்பது பிரச்சினை அல்ல; அவர்கள் பணி ஏதும் இன்றி ஓய்ந்து கிடக்கிறார்கள்; அந்த நேரத்தை எப்படிப் பயனுள்ள முறையில் செலவழிக்க முடியும் என்பதுதான் பிரச்சினை. தையல் எந்திரத்திற்கு மட்டும் காந்திஜி விதிவிலக்கு அளித்தார். ஏனெனில் அது ஒரு பயனுள்ள கண்டுபிடிப்பு என்று அவர் எண்ணினார். தனது மனைவி ஊசியையும் நூலையும் வைத்துக்கொண்டு மணிக்கணக்கில் போராடுவதைப் பார்த்து, “அவள்மீது கொண்டிருந்த அன்பு காரணமாக ஒரு தையல் எந்திரத்தை ஸிங்கர் கண்டுபிடித்தார். அந்த எந்திரத்தின் பின்னணியில் அன்பு உள்ளது" என்று காந்திஜி கூறுவார். 
காந்திஜி ஒரு தடவை ஒரு ஆசிரமவாசியான பெண்மணிக்கு எழுதிய கடிதத்தில் "உனது சல்வார் கமீஸ் தைப்பது பற்றிக் கவலை கொள்ள வேண்டாம். அவற்றை என்னால் தயார் செய்துவிடமுடியும். ஒரு ஸிங்கர் எந்திரத்தை நாம் இரவல் வாங்குவோம். சில மணி நேரங்களில் உடுப்புகள் தயாராகிவிடும்." தனது தையல் பணி பற்றி அவருக்கு மிகவும் பெருமை. அவரே துணியை வெட்டி தனது மனைவியின் ரவிக்கைகளைத் தைத்துவிடுவார். ராட்டையில் நூல் நூற்று, நூற்ற நூலைத் தறியில் நெய்து, அத்துணியைக் கொண்டு தனது சட்டையைத் தானே தைத்துக்கொள்வார். புகழ்பெற்ற தையல் வல்லுநர்களும், செருப்பு தயாரிப்பவர்களும் ஆசிரமவாசிகளுக்கு இலவசமாகப் பயிற்சி அளித்து வந்தனர். 
சம்பாரனில் விவசாயிகள் நியாயமற்ற, குறைந்த கூலியில் அவுரியைப் பயிரிடும்படி கட்டாயப்படுத்தப்பட்டபோது அதற்கெதிரான போராட்டத்தில் காந்திஜி ஈடுபட்டது நமக்குத் தெரிந்த விஷயம். அப்போது ஒரு ஆங்கிலேயப் பத்திரிகையாளர், “காந்திஜி, கிராமத்து விவசாயிகளைக் கவர்வதற்காகவே மேலை நாட்டு உடைகளைத் துறந்து இந்திய உடையை அணிந்துள்ளார்'' என்று கூறி அவரை அவமதித்தார். பதிலடியாக காந்திஜி, "சுதேசிக் கொள்கையை ஏற்று சபதம் எடுத்தபின் நான் கையினால் நூற்று கையினால் நெய்து, என்னாலோ என் சக ஊழியர்களாலோ தைக்கப்பட்ட துணியை மட்டுமே அணிவேன்" என்று பதில் கொடுத்தார். 
காந்திஜி சிறிது காலத்திற்குப்பின் சட்டையையும் துறந்துவிட்டார். இடுப்பில் ஒரு அரையாடையை மட்டுமே அணிந்தார். அப்போதும்கூட, தனது கைக்குட்டை, துண்டு, அரையாடை ஆகியவற்றின் மூலைகளை அவர் தைத்து வந்தார். துணிகளைத் தைத்த வண்ணம் தனது செயலாளருக்குக் கடிதங்களையும் 'டிக்டேட்' செய்வார் காந்திஜி. ஆகாகான் அரண்மனையில் சிறைவாசம் செய்த சமயத்தில் சிறையின் மேற்பார்வையாளருக்கு பிறந்த நாள் பரிசாகக் கதர்க் கைக்குட்டைகளை காந்திஜி வழங்கினார். 74 வயதான காந்திஜி ஒவ்வொரு கைக்குட்டையிலும் சிறையின் மேற்பார்வையாளரது இனிஷியல்களையும் பின்னல் (எம்ப்ராய்டரி) செய்திருந்தார். 
தனது மேற்பார்வையில் ஒரு பெண்மணியைத் தனது சால்வையைப் பல துண்டுக் கதர்த்துணிகளை இணைத்துத் தயாரித்து அளிக்கும்படி காந்திஜி கோரினார். பாரத நாட்டின் ஏழைப் பங்காளர் என்ற முறையில் அந்தச் சால்வையை அணிந்து வட்டமேஜை மகாநாட்டிற்குப்பின் இங்கிலாந்து அரசி அளித்த விருந்தில் காந்திஜி கலந்துகொண்டார். அவருக்கு ஆடம்பரம் அறவே பிடிக்காது. அதே சமயம், கசங்கிய அல்லது கிழிந்த உடைகளை யாராவது அணிவதும் அவருக்குப் பிடிக்காது. ஒரு தடவை அவர் கலந்துகொண்ட கூட்டத்தில் அவரது சகாவின் மேலாடையில் ஓர் ஓட்டை காணப்பட்டது. அதைப் பார்த்த காந்திஜி அவருக்கு இப்படி ஒரு குறிப்பை அனுப்பினார்: கிழிந்த உடைகளை அணிவது சோம்பலுக்கு அடையாளம். வெட்கப்பட வேண்டிய விஷயம். மாறாக, ஒட்டுத் தையலுடன் கூடிய துணியை அணிவது எளிமை அல்லது தியாகத்திற்கு உதாரணம். உங்களது மேலாடையில் உள்ள ஓட்டை அருவருப்பாக உள்ளது. அது ஏழ்மையையோ எளிமையையோ காட்டவில்லை. மாறாக, அது காட்டுவது என்னவென்றால் உங்களுக்கு மனைவி இல்லை; அல்லது உங்கள் மனைவி மோசமானவள் அல்லது நீங்கள் ஒரு சோம்பேறி"
- தமிழில்: எம். ஆர். ராஜகோபாலன்

Comments

Most Popular

குலாப்ஜான் காதல் | புதுமைப்பித்தன்

‘ காதலாவது உருளைக்கிழங்காவது ’ - சி . சுப்பிரமணிய பாரதி நான் ஆராய்ச்சிப் பிரியன் . அதிலும் தர்க்கரீதியாக புத்தியை வசீகரிக்கக்கூடிய ஆராய்ச்சியென்றால் , அதுதான் எனது தெய்வம் . கம்பனுடைய காவியங்கள் முதல் , நாணயச் செலாவணி , தீண்டாதார் ஆலயப் பிரவேசம் ஈறாக , எல்லாம் தர்க்க முறையில் அடைபட்டு ஒத்து இருந்தால்தான் எனது கொள்கை . இல்லாவிடில் அதற்கும் நமக்கும் வெகுதூரம் . இந்தக் காதல் விஷயத்தை நன்றாக ஆராய்ந்து கவனித்ததில் , சாதாரணமாக அல்ல , அபரிமிதமாக , காவியங்கள் , நாவல்கள் என்ற கற்பனைப் பிரதேசங்களில்தான் விளைகின்றன . இல்லாவிட்டால் அவை நமது பொருள்காட்சி சாலைகளைத் தப்பி இருக்க முடியுமா ? அகப்பொருள் இலக்கணக்காரர் கூறுவதைப் பார்த்தால் அசல் , கலப்பில்லாத பழம் பெருந்தமிழ் மக்களுடனிருந்து அவர்கள் தங்களுடைய ஏடுகளுடன் கடலால் கொள்ளப்பட்ட பொழுது , அவர்களுடன் சங்கமமாயிற்றென்று நினைக்க ஏதுவிருக்கிறது . ஆழ்ந்து யோசிக்குந்தோறும் , தர்க்க ஆராய்ச்சியை வழிபடும் எனக்கு , அதன் கூற்றுக்கள் வெகு வினோதமாகவே காணப்படுகின்றன . எனது ஆர

பெரியம்மை | சுரேஷ்குமார இந்திரஜித்

பெரியப்பா அருமையாகப் பாடுவார். ‘முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே’ என்ற டி.எம்.எஸ். பாட்டை ஏற்ற இறக்கங்கள், பிர்காக்கள் பிசகாமல் பாடுவார். அப்போது பெரியம்மை முகத்தைப் பார்க்கவேண்டுமே. அவர் முகம் பெருமிதத்தோடும் பரவசத்தோடும் இருக்கும். பெரியம்மா முருங்கைக்காய் குழம்பு வைத்தால் நிறைய சாப்பிடவேண்டியிருக்கும். குழம்புகள் ருசியாகச் செய்வதற்கென்றே அவள் பிறந்திருக்கிறாள். கத்தரிக்காய் புளிக்குழம்பும் அப்படித்தான் அவ்வளவு ருசியாக இருக்கும். என் அம்மைக்கு இந்தக் குழம்புகள் ருசி கூடி வராது. சப்பென்று இருக்கும். நான் வேலை பார்க்கும் ஊரிலிருந்து வீட்டுக்கு வந்திருந்தேன். பெரியப்பாவைப் பார்ப்பதற்கும், அவர் பாட்டைக் கேட்பதற்கும் அவர் வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன். இது மார்கழி மாதம். வாசல்களில் கோலம் போட்டு பூசணிப்பூவை மையமாக வைத்திருந்தார்கள். அநேகமாக சில வீடுகள் நீங்கலாக எல்லா வீட்டு வாசல்களிலும் பூசணிப்பூவை வைத்திருந்தார்கள். செண்பகவல்லி மதினி வீட்டைக் கடக்கும்போது மல்லிகைப்பூ வாசம் வந்தது. மதினி வீட்டுக் காம்பவுண்டுக்குள் மல்லிகைப்பூ கொடிக்குப் பந்தல் போட்டிருந்ததைப் பார்த்தேன். வேல

மனமும் அதன் விளக்கமும் - மனமெனும் மாயம் | பெ. தூரன்

ம னம் என்பதென்ன? அது எங்கே இருக்கிறது? கை, கால், கண், இதயம் என்றால் உடம்பில் உள்ள உறுப்புகள் என்று உடனே தெரிகிறது. அவைகளுக்கு வடிவம் உண்டு. பருமன் உண்டு. ஆதலால் அவைகளை எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மனம் என்பது எது? அதற்கு வடிவம் உண்டா? பருமன் உண்டா? தொட்டுப் பார்த்து அறிந்துகொள்ள முடியுமா? இவ்வாறு எண்ணிப் பார்த்தால் ஒன்றும் விளங்குவதில்லை. இவ்வாறு எண்ணுவதற்கு அந்த மனமே காரணமாக இருக்கிறதென்று தோன்றுகிறது. ஆனால் அது என்ன என்று மட்டும் எளிதில் அறிந்துகொள்ள முடிகிறதில்லை. மனத்திற்கு உருவமில்லை; கன பரிமாணமும் இல்லை. மனம் என்பது தசை, நரம்பு முதலியவைகளால் ஆக்கப்பட்டதன்று. அது சடப் பொருள் அன்று; அது சூக்குமப் பொருள், சடப் பொருள் என்றால் அது உடம்பைச் சேர்ந்த ஒர் உறுப்பாகிவிடும்; எளிதாக அதை அறிந்துகொள்ளவும் முடியும். சிலர் மூளைதான் மனம் என்று தவறாகக் கருதுகிறார்கள். மூளை என்பது உடம்போடு சேர்ந்த ஒரு பருப்பொருளான உறுப்பு. அது மனம் அல்ல. சூக்குமப் பொருளாக மனம் இருக்கிறதென்று மட்டும் நமக்குப் புலனாகிறது. அந்த மனந்தான் ஆசைகள், எண்ணங்கள், நோக்கங்கள், நம்பிக்கைகள் முதலியவற்றிற்கு இடமாயிரு