Skip to main content

பல ரூபங்களில் காந்தி: தையல்காரர் | அனு பந்தோபாத்யாயா


தென் ஆப்பிரிக்காவில் காந்திஜி வசித்த காலத்தில் அவருக்கு இரண்டு தடவை கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. சில வாரங்கள் வரை அவர் நாள் ஒன்றுக்கு ஒன்பது மணி நேரம் கிழிந்த போர்வைகளையும், சட்டைகளுக்குப் பைகளையும் தைத்து வந்தார். அவருக்குத் தரப்பட்ட பணிகளை காலக்கெடுவுக்குள் முடித்துக் கொடுத்ததோடு அல்லாமல், மேலும் பணி வேண்டும் என்று கேட்பது அவரது வழக்கம். 
இந்தியச் சிறையில் சில நாட்களுக்கு ஸிங்கர் தையல் எந்திரத்தில் தையல் வேலை செய்தார். சிறைப் பணிகளை அவர் தாமாகவே ஏற்றுக்கொண்டு செய்து வந்தார். மனிதர்களுக்கு வேலை கிடைக்காமல் செய்து வரும் எந்திரங்களுக்கு மனிதன் அடிமையாகிவருவதை அவர் எதிர்த்தார். மனித உழைப்பை அகற்றித் தேவையற்றதாக்கிவிடும் எந்திரங்களை நாம் பயன்படுத்தக் கூடாது என்ற கருத்தை அவர் வலியுறுத்தி வந்தார். இந்தியாவைப் பொருத்தவரை கோடிக்கணக்கான மக்களுக்கு ஓய்வு நேரம் எப்போது கிடைக்கும் என்பது பிரச்சினை அல்ல; அவர்கள் பணி ஏதும் இன்றி ஓய்ந்து கிடக்கிறார்கள்; அந்த நேரத்தை எப்படிப் பயனுள்ள முறையில் செலவழிக்க முடியும் என்பதுதான் பிரச்சினை. தையல் எந்திரத்திற்கு மட்டும் காந்திஜி விதிவிலக்கு அளித்தார். ஏனெனில் அது ஒரு பயனுள்ள கண்டுபிடிப்பு என்று அவர் எண்ணினார். தனது மனைவி ஊசியையும் நூலையும் வைத்துக்கொண்டு மணிக்கணக்கில் போராடுவதைப் பார்த்து, “அவள்மீது கொண்டிருந்த அன்பு காரணமாக ஒரு தையல் எந்திரத்தை ஸிங்கர் கண்டுபிடித்தார். அந்த எந்திரத்தின் பின்னணியில் அன்பு உள்ளது" என்று காந்திஜி கூறுவார். 
காந்திஜி ஒரு தடவை ஒரு ஆசிரமவாசியான பெண்மணிக்கு எழுதிய கடிதத்தில் "உனது சல்வார் கமீஸ் தைப்பது பற்றிக் கவலை கொள்ள வேண்டாம். அவற்றை என்னால் தயார் செய்துவிடமுடியும். ஒரு ஸிங்கர் எந்திரத்தை நாம் இரவல் வாங்குவோம். சில மணி நேரங்களில் உடுப்புகள் தயாராகிவிடும்." தனது தையல் பணி பற்றி அவருக்கு மிகவும் பெருமை. அவரே துணியை வெட்டி தனது மனைவியின் ரவிக்கைகளைத் தைத்துவிடுவார். ராட்டையில் நூல் நூற்று, நூற்ற நூலைத் தறியில் நெய்து, அத்துணியைக் கொண்டு தனது சட்டையைத் தானே தைத்துக்கொள்வார். புகழ்பெற்ற தையல் வல்லுநர்களும், செருப்பு தயாரிப்பவர்களும் ஆசிரமவாசிகளுக்கு இலவசமாகப் பயிற்சி அளித்து வந்தனர். 
சம்பாரனில் விவசாயிகள் நியாயமற்ற, குறைந்த கூலியில் அவுரியைப் பயிரிடும்படி கட்டாயப்படுத்தப்பட்டபோது அதற்கெதிரான போராட்டத்தில் காந்திஜி ஈடுபட்டது நமக்குத் தெரிந்த விஷயம். அப்போது ஒரு ஆங்கிலேயப் பத்திரிகையாளர், “காந்திஜி, கிராமத்து விவசாயிகளைக் கவர்வதற்காகவே மேலை நாட்டு உடைகளைத் துறந்து இந்திய உடையை அணிந்துள்ளார்'' என்று கூறி அவரை அவமதித்தார். பதிலடியாக காந்திஜி, "சுதேசிக் கொள்கையை ஏற்று சபதம் எடுத்தபின் நான் கையினால் நூற்று கையினால் நெய்து, என்னாலோ என் சக ஊழியர்களாலோ தைக்கப்பட்ட துணியை மட்டுமே அணிவேன்" என்று பதில் கொடுத்தார். 
காந்திஜி சிறிது காலத்திற்குப்பின் சட்டையையும் துறந்துவிட்டார். இடுப்பில் ஒரு அரையாடையை மட்டுமே அணிந்தார். அப்போதும்கூட, தனது கைக்குட்டை, துண்டு, அரையாடை ஆகியவற்றின் மூலைகளை அவர் தைத்து வந்தார். துணிகளைத் தைத்த வண்ணம் தனது செயலாளருக்குக் கடிதங்களையும் 'டிக்டேட்' செய்வார் காந்திஜி. ஆகாகான் அரண்மனையில் சிறைவாசம் செய்த சமயத்தில் சிறையின் மேற்பார்வையாளருக்கு பிறந்த நாள் பரிசாகக் கதர்க் கைக்குட்டைகளை காந்திஜி வழங்கினார். 74 வயதான காந்திஜி ஒவ்வொரு கைக்குட்டையிலும் சிறையின் மேற்பார்வையாளரது இனிஷியல்களையும் பின்னல் (எம்ப்ராய்டரி) செய்திருந்தார். 
தனது மேற்பார்வையில் ஒரு பெண்மணியைத் தனது சால்வையைப் பல துண்டுக் கதர்த்துணிகளை இணைத்துத் தயாரித்து அளிக்கும்படி காந்திஜி கோரினார். பாரத நாட்டின் ஏழைப் பங்காளர் என்ற முறையில் அந்தச் சால்வையை அணிந்து வட்டமேஜை மகாநாட்டிற்குப்பின் இங்கிலாந்து அரசி அளித்த விருந்தில் காந்திஜி கலந்துகொண்டார். அவருக்கு ஆடம்பரம் அறவே பிடிக்காது. அதே சமயம், கசங்கிய அல்லது கிழிந்த உடைகளை யாராவது அணிவதும் அவருக்குப் பிடிக்காது. ஒரு தடவை அவர் கலந்துகொண்ட கூட்டத்தில் அவரது சகாவின் மேலாடையில் ஓர் ஓட்டை காணப்பட்டது. அதைப் பார்த்த காந்திஜி அவருக்கு இப்படி ஒரு குறிப்பை அனுப்பினார்: கிழிந்த உடைகளை அணிவது சோம்பலுக்கு அடையாளம். வெட்கப்பட வேண்டிய விஷயம். மாறாக, ஒட்டுத் தையலுடன் கூடிய துணியை அணிவது எளிமை அல்லது தியாகத்திற்கு உதாரணம். உங்களது மேலாடையில் உள்ள ஓட்டை அருவருப்பாக உள்ளது. அது ஏழ்மையையோ எளிமையையோ காட்டவில்லை. மாறாக, அது காட்டுவது என்னவென்றால் உங்களுக்கு மனைவி இல்லை; அல்லது உங்கள் மனைவி மோசமானவள் அல்லது நீங்கள் ஒரு சோம்பேறி"
- தமிழில்: எம். ஆர். ராஜகோபாலன்

Comments

Most Popular

மனமும் அதன் விளக்கமும் | இன நனவிலி மனம் | பெ. தூரன்

பி ராய்டு என்ற உளவியலார் நனவிலி மனத்தைப் பற்றி ஆராய்ந்து உளப் பகுப்பியல் முறையைத் தோற்றுவித்தார் என்று கண்டோம். உளப்பகுப்பியலின் தந்தை அவரே. அவரோடு ஆட்லரும், யுங் என்பவரும் மாணவராகப் பல ஆண்டுகள் வேலை செய்தனர். பிறகு இருவரும் கொள்கை வேறுபாடுகளால் வேறு வேறாகப் பிரிந்தனர். ஆட்லரின் பிற்காலக் கருத்தைப் பற்றி முன்பே கூறப்பட்டுள்ளது. இங்கு யுங்கின் கொள்கையைச் சுருக்கமாக ஆராய்வோம். நனவிலி மனத்தைப் பிற்காலத்தில் பிராய்டு ‘இத்’ என்றும், அதில் எழும் ஆற்றலை ‘லிபிடோ’ (Libido) என்றும் குறிப்பிட்டார். லிபிடோ பாலியல்பு வாய்ந்தது என்றும், மனக் கோளாறுகளெல்லாம் இது ஒழுங்காக அமையாததால் ஏற்படுகின்றன என்றும், இந்தப் பாலியல்பு குழவிப் பருவ முதற்கொண்டே தொடங்குகிறதென்றும் கருதினார். நனவிலி மனம் குழவிப் பருவத்தில் சிறிதாக இருந்தபோதும், வயது ஆக ஆக அக்குழந்தைக்குத் தடைகளும் விதிகளும் பெருகுகின்ற காரணத்தினால் நனவிலி மனத்தில் பல விதமான இச்சைகளும் ஆர்வங்களும் மிகுதியாகி நனவிலி மனம் விரிவடைகின்றது. அதனால்தான் நனவிலி மனம் நனவு மனத்தினின்றும் வளர்ந்ததேயாகும் என்று பொதுப்படையாகக் கூறுவதுண்டு. இக் கருத்தைப் பல ந...

மனமும் அதன் விளக்கமும் | கனவின் பொருள் | பெ. தூரன்

ப ல கனவுகள் சிக்கல் நிறைந்திருக்கின்றன; அவற்றில் தோன்றும் நிகழ்ச்சிகள் மேலாகப் பார்க்கும்போது பொருளற்றவைகளாகவும் இருக்கின்றன. கோ. என்பவர் கண்ட ஒரு கனவை இங்கே ஆராய்வோம். “ஏதோ ஒரு பெரிய கோயில். அங்கே நானும் என் நண்பர்கள் சி. வே. மா. ஆகிய மூவரும் சேர்ந்து ஒருவனைக் கொலை செய்தோம். அவனுடைய மூக்கை மாத்திரம் அறுத்துச் சந்தனத்தில் வைத்துச் சாமிக்கு வைத்தோம். பிணம் வெளியிலேயே கிடந்தது. சி. தான் மூக்கை அறுத்தவர். கடவுளைத் தொழுவதற்காகப் பலர் ஒரு மோட்டார்க் காரில் வந்தார்கள். உடனே நான் பிணத்தைத் துரக்கிக் கோபுரத்தின் மேல் வீசினேன். இதை எனது ஆசிரியர் ஒருவர் பார்த்துக் கொண்டார்.” “நான் ஒடி வந்துவிட்டேன். வழியில் என் நண்பர் வீ. யைச் சந்தித்து வேறொருவனிடம் சைக்கிள் வாங்கி இருவரும் ஏறிக்கொண்டு ஊருக்குச் சென்றோம். வழியில் சி. தம் அண்ணனிடம் ஒன்றும் நடக்காதது போல் வந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கொலை செய்துவிட்டு இவர் இவ்வளவு தாராளமாக வெளியில் நடமாடுகிறாரே என்று வியந்தேன்.” "நாங்கள் ஒரு சத்திரத்தில் புகுந்துகொண்டிருந்தோம். ஆனால் சி. வேறு சில நண்பர்களிடம் சாலையில் சென்றுகொண்டிருந்தார்.” ...

கிராமதானத்திற்கு உகந்த தமிழ்நாடு | வினோபா பாவே

Photo Courtesy: Gautam Bajaj / Vinoba Darshan தமிழ்நாட்டில் பாபாவின் யாத்திரை ஒன்றே முக்கால் மாதமாக நடைபெற்றுக்கொண்டு வருகிறது. ஊழியர்களுக்கு ஒருமுறை என்னுடைய கருத்துக்களைக் கூற விரும்புகிறேன். ஏனெனில் உங்களுடைய ஒத்துழைப்பும் , உதவியுமில்லாமல் பூதான இயக்கப் பணி இங்கே நடைபெற முடியாது. திருச்சியில் நடைபெற்ற கூட்டத்திலும் தமிழகத்தில் நடைபெறுகின்ற செயல் சமக்கிரகமாகவும் , பரிபூரணமாகவும் நடக்கவேண்டும் என்று கூறியுள்ளேன். சமக்கிரக என்று சொன்னால் பூதான இயக்கத்தோடு எல்லா நிர்மாணப் பணிகளையும் சேர்ந்தது என்று பொருள் கொள்ள வேண்டும். தமிழகத்தில் எந்த அளவிற்குக் காரியம் செய்ய முடியுமோ அந்த அளவிற்குச் செய்யவேண்டும்.   தெலுங்கானாவில் பூதான உதயம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் இயக்கம் தெலுங்கானாவில் தோன்றியது என்பதை அறிவீர்கள். இயக்கம் ஆரம்பிக்க வேண்டுமென்ற எண்ணமோ , சங்கல்பமோ அதற்கு முன்னால் இதயத்தில் தோன்றவேயில்லை. தெலுங்கானாவில் காணப்பட்ட நிலையில் , அச்சூழ்நிலையில் பூமிதான இயக்கம் இயற்கையாகவே தோன்றியது. இரு கிராமத்திலுள்ள நிலமில்லாத மக்களுக்கு 80 ஏக்கரா வேண்டுமென்று கேட்டேன். ஒருவர் மு...