Skip to main content

பல ரூபங்களில் காந்தி: தையல்காரர் | அனு பந்தோபாத்யாயா


தென் ஆப்பிரிக்காவில் காந்திஜி வசித்த காலத்தில் அவருக்கு இரண்டு தடவை கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. சில வாரங்கள் வரை அவர் நாள் ஒன்றுக்கு ஒன்பது மணி நேரம் கிழிந்த போர்வைகளையும், சட்டைகளுக்குப் பைகளையும் தைத்து வந்தார். அவருக்குத் தரப்பட்ட பணிகளை காலக்கெடுவுக்குள் முடித்துக் கொடுத்ததோடு அல்லாமல், மேலும் பணி வேண்டும் என்று கேட்பது அவரது வழக்கம். 
இந்தியச் சிறையில் சில நாட்களுக்கு ஸிங்கர் தையல் எந்திரத்தில் தையல் வேலை செய்தார். சிறைப் பணிகளை அவர் தாமாகவே ஏற்றுக்கொண்டு செய்து வந்தார். மனிதர்களுக்கு வேலை கிடைக்காமல் செய்து வரும் எந்திரங்களுக்கு மனிதன் அடிமையாகிவருவதை அவர் எதிர்த்தார். மனித உழைப்பை அகற்றித் தேவையற்றதாக்கிவிடும் எந்திரங்களை நாம் பயன்படுத்தக் கூடாது என்ற கருத்தை அவர் வலியுறுத்தி வந்தார். இந்தியாவைப் பொருத்தவரை கோடிக்கணக்கான மக்களுக்கு ஓய்வு நேரம் எப்போது கிடைக்கும் என்பது பிரச்சினை அல்ல; அவர்கள் பணி ஏதும் இன்றி ஓய்ந்து கிடக்கிறார்கள்; அந்த நேரத்தை எப்படிப் பயனுள்ள முறையில் செலவழிக்க முடியும் என்பதுதான் பிரச்சினை. தையல் எந்திரத்திற்கு மட்டும் காந்திஜி விதிவிலக்கு அளித்தார். ஏனெனில் அது ஒரு பயனுள்ள கண்டுபிடிப்பு என்று அவர் எண்ணினார். தனது மனைவி ஊசியையும் நூலையும் வைத்துக்கொண்டு மணிக்கணக்கில் போராடுவதைப் பார்த்து, “அவள்மீது கொண்டிருந்த அன்பு காரணமாக ஒரு தையல் எந்திரத்தை ஸிங்கர் கண்டுபிடித்தார். அந்த எந்திரத்தின் பின்னணியில் அன்பு உள்ளது" என்று காந்திஜி கூறுவார். 
காந்திஜி ஒரு தடவை ஒரு ஆசிரமவாசியான பெண்மணிக்கு எழுதிய கடிதத்தில் "உனது சல்வார் கமீஸ் தைப்பது பற்றிக் கவலை கொள்ள வேண்டாம். அவற்றை என்னால் தயார் செய்துவிடமுடியும். ஒரு ஸிங்கர் எந்திரத்தை நாம் இரவல் வாங்குவோம். சில மணி நேரங்களில் உடுப்புகள் தயாராகிவிடும்." தனது தையல் பணி பற்றி அவருக்கு மிகவும் பெருமை. அவரே துணியை வெட்டி தனது மனைவியின் ரவிக்கைகளைத் தைத்துவிடுவார். ராட்டையில் நூல் நூற்று, நூற்ற நூலைத் தறியில் நெய்து, அத்துணியைக் கொண்டு தனது சட்டையைத் தானே தைத்துக்கொள்வார். புகழ்பெற்ற தையல் வல்லுநர்களும், செருப்பு தயாரிப்பவர்களும் ஆசிரமவாசிகளுக்கு இலவசமாகப் பயிற்சி அளித்து வந்தனர். 
சம்பாரனில் விவசாயிகள் நியாயமற்ற, குறைந்த கூலியில் அவுரியைப் பயிரிடும்படி கட்டாயப்படுத்தப்பட்டபோது அதற்கெதிரான போராட்டத்தில் காந்திஜி ஈடுபட்டது நமக்குத் தெரிந்த விஷயம். அப்போது ஒரு ஆங்கிலேயப் பத்திரிகையாளர், “காந்திஜி, கிராமத்து விவசாயிகளைக் கவர்வதற்காகவே மேலை நாட்டு உடைகளைத் துறந்து இந்திய உடையை அணிந்துள்ளார்'' என்று கூறி அவரை அவமதித்தார். பதிலடியாக காந்திஜி, "சுதேசிக் கொள்கையை ஏற்று சபதம் எடுத்தபின் நான் கையினால் நூற்று கையினால் நெய்து, என்னாலோ என் சக ஊழியர்களாலோ தைக்கப்பட்ட துணியை மட்டுமே அணிவேன்" என்று பதில் கொடுத்தார். 
காந்திஜி சிறிது காலத்திற்குப்பின் சட்டையையும் துறந்துவிட்டார். இடுப்பில் ஒரு அரையாடையை மட்டுமே அணிந்தார். அப்போதும்கூட, தனது கைக்குட்டை, துண்டு, அரையாடை ஆகியவற்றின் மூலைகளை அவர் தைத்து வந்தார். துணிகளைத் தைத்த வண்ணம் தனது செயலாளருக்குக் கடிதங்களையும் 'டிக்டேட்' செய்வார் காந்திஜி. ஆகாகான் அரண்மனையில் சிறைவாசம் செய்த சமயத்தில் சிறையின் மேற்பார்வையாளருக்கு பிறந்த நாள் பரிசாகக் கதர்க் கைக்குட்டைகளை காந்திஜி வழங்கினார். 74 வயதான காந்திஜி ஒவ்வொரு கைக்குட்டையிலும் சிறையின் மேற்பார்வையாளரது இனிஷியல்களையும் பின்னல் (எம்ப்ராய்டரி) செய்திருந்தார். 
தனது மேற்பார்வையில் ஒரு பெண்மணியைத் தனது சால்வையைப் பல துண்டுக் கதர்த்துணிகளை இணைத்துத் தயாரித்து அளிக்கும்படி காந்திஜி கோரினார். பாரத நாட்டின் ஏழைப் பங்காளர் என்ற முறையில் அந்தச் சால்வையை அணிந்து வட்டமேஜை மகாநாட்டிற்குப்பின் இங்கிலாந்து அரசி அளித்த விருந்தில் காந்திஜி கலந்துகொண்டார். அவருக்கு ஆடம்பரம் அறவே பிடிக்காது. அதே சமயம், கசங்கிய அல்லது கிழிந்த உடைகளை யாராவது அணிவதும் அவருக்குப் பிடிக்காது. ஒரு தடவை அவர் கலந்துகொண்ட கூட்டத்தில் அவரது சகாவின் மேலாடையில் ஓர் ஓட்டை காணப்பட்டது. அதைப் பார்த்த காந்திஜி அவருக்கு இப்படி ஒரு குறிப்பை அனுப்பினார்: கிழிந்த உடைகளை அணிவது சோம்பலுக்கு அடையாளம். வெட்கப்பட வேண்டிய விஷயம். மாறாக, ஒட்டுத் தையலுடன் கூடிய துணியை அணிவது எளிமை அல்லது தியாகத்திற்கு உதாரணம். உங்களது மேலாடையில் உள்ள ஓட்டை அருவருப்பாக உள்ளது. அது ஏழ்மையையோ எளிமையையோ காட்டவில்லை. மாறாக, அது காட்டுவது என்னவென்றால் உங்களுக்கு மனைவி இல்லை; அல்லது உங்கள் மனைவி மோசமானவள் அல்லது நீங்கள் ஒரு சோம்பேறி"
- தமிழில்: எம். ஆர். ராஜகோபாலன்

Comments

Most Popular

மணிபல்லவம் - ஜம்பு கொல பட்டினம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்ககாலத்து நூலாகிய மணிமேகலையிலே, இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப்பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள பழைய பௌத்த நூல்களிலேயும் இலங்கைத்தீவின் வடகோடியில் இருந்த ஜம்புகோல் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. தமிழ் நூலில் கூறப்படும் குறிப்பு களைக் கொண்டும் பாலி மொழி நூல்களில் கூறப்படும் குறிப்புகளைக் கொண்டும் மணிபல்லவமும் ஜம்புகொல பட்டினமும் ஒரே இடம் என்று துணியலாம். பெயர் வேறுபடு வதிலிருந்து இரண்டும் வெவ்வேறிடங்கள் எனக் கருதும்படி இருந்தாலும், இவைகளைப்பற்றிக் கூறப்படும் செய்திகளை உற்றுநோக்கினால், இரண்டும் ஒன்றே என்பது ஐயமற விளங்குகிறது. இதனை ஈண்டு ஆராய்வோம். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலேதான் மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்தது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை கூறுவது காண்க. சோழ நாட்டின் துறைமுகப்பட்டினமாகிய புகார்ப்பட்டினத்தில் இருந்து தெற்கே 30 யோசனை தொலைவில் மணிபல்லவம் இருந்தது (

மனமும் அதன் விளக்கமும் | இன நனவிலி மனம் | பெ. தூரன்

பி ராய்டு என்ற உளவியலார் நனவிலி மனத்தைப் பற்றி ஆராய்ந்து உளப் பகுப்பியல் முறையைத் தோற்றுவித்தார் என்று கண்டோம். உளப்பகுப்பியலின் தந்தை அவரே. அவரோடு ஆட்லரும், யுங் என்பவரும் மாணவராகப் பல ஆண்டுகள் வேலை செய்தனர். பிறகு இருவரும் கொள்கை வேறுபாடுகளால் வேறு வேறாகப் பிரிந்தனர். ஆட்லரின் பிற்காலக் கருத்தைப் பற்றி முன்பே கூறப்பட்டுள்ளது. இங்கு யுங்கின் கொள்கையைச் சுருக்கமாக ஆராய்வோம். நனவிலி மனத்தைப் பிற்காலத்தில் பிராய்டு ‘இத்’ என்றும், அதில் எழும் ஆற்றலை ‘லிபிடோ’ (Libido) என்றும் குறிப்பிட்டார். லிபிடோ பாலியல்பு வாய்ந்தது என்றும், மனக் கோளாறுகளெல்லாம் இது ஒழுங்காக அமையாததால் ஏற்படுகின்றன என்றும், இந்தப் பாலியல்பு குழவிப் பருவ முதற்கொண்டே தொடங்குகிறதென்றும் கருதினார். நனவிலி மனம் குழவிப் பருவத்தில் சிறிதாக இருந்தபோதும், வயது ஆக ஆக அக்குழந்தைக்குத் தடைகளும் விதிகளும் பெருகுகின்ற காரணத்தினால் நனவிலி மனத்தில் பல விதமான இச்சைகளும் ஆர்வங்களும் மிகுதியாகி நனவிலி மனம் விரிவடைகின்றது. அதனால்தான் நனவிலி மனம் நனவு மனத்தினின்றும் வளர்ந்ததேயாகும் என்று பொதுப்படையாகக் கூறுவதுண்டு. இக் கருத்தைப் பல ந

இலங்கைத் தீவில் வருணன் வணக்கம் | மயிலை சீனி. வேங்கடசாமி

பழந்தமிழ் நாட்டிலே நெய்தல் நிலப்பகுதியில் வாழ்ந்த மக்கள் கடல் தெய்வமாகிய வருணனை வழிபட்டார்கள் என்றும் அவ்வருணன் வழிபாடு தமிழ்நாட்டிலிருந்து இலங்கைத் தீவிலும் பரவியிருந்தது என்றும் சென்ற திங்கள் தமிழ்ப் பொழிலில் எழுதியிருந்தோம். இலங்கைத் தீவில் , வருணனைச் சிங்களவர் தமது மொழியில் உபுல்வன் என்று அழைத்தனர் என்றும் , உதகபால வருணன் என்னும் சொல் உபுல்வன் என்று சிங்கள மொழியில் திரிந்து வழங்கிற்று என்றும் எழுதியிருந்தோம். உபுல்வன் என்னும் சிங்கள மொழிச் சொல்லினைப் பாலி மொழியில் உப்பலவண்ணன் என்றும் , வடமொழியில் உத்பலவர்ணன் என்றும் மாற்றிப் பிற்காலத்தவர் வழங்கினார்கள். வழங்கியது மட்டுமல்ல , உபுல்வனை (வருணனை) விஷ்ணுவாகவும் மாற்றிவிட்டார்கள். இது பிற்காலத்தில் உண்டான மாறுபாடு.   ஒரே பொருளுடைய இரண்டு சொற்கள் சேர்ந்தது உதகபால வருணன் என்பது. உதகபாலன் என்றால் நீரை ஆள்பவன் என்பது பொருள். வருணன் என்றாலும் நீர்க்கடவுள் என்பது பொருள். சிங்களவர் முருகனைக் கந்த குமரன் என்றும் கூறுகின்றனர். கந்தன் என்றாலும் முருகன் , குமரன் என்றாலும் முருகன். ஒரே பொருள் உள்ள இரண்டு சொற்களை இணைத்துக் கந்தகுமரன் என்று கூறுவத