Skip to main content

கணக்கும், கண்டிப்பும் | ஜி.டி. பிர்லா


காந்தியடிகள் இருக்குமிடத்தில் ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு வைத்துக்கொள்ளப்படுகிறது. சிறு பிராயம் முதலே ரூபாயின் கணக்கு ஜாக்கிரதையாக வைத்துக்கொள்வது காந்தியடிகளுடைய பழக்கம். அவருக்கு ஒழுங்கில் மிக்க பற்றுண்டு. ஆகையால் அவருடைய குடில் சுத்தமாக மெழுகிப் பூசி ஒழுங்காக வைக்கப்பட்டிருக்கிறது. இடுப்பிலுள்ள கச்சமும் கச்சிதமாகத்தான் கட்டப்பட்டிருக்கிறது. காந்தியடிகள் கிழவர்தான். ஆயினும், அவருடைய சரீரம் பளபளவென்று வாலிபர்களுடையது போல் இருக்கிறதென்று ஒரு ராஜப்பிரதிநிதி கூறினார். அவர் தேக ஆரோக்கியத்தை நன்றாகக் கவனித்துக்கொள்கிறார் என்பது உண்மை. ஒவ்வொரு விஷயத்திலும் செட்டு செய்யப்படுகிறது. கடிதங்களில் குண்டூசி குத்தியிருந்தால் அதையும் ஜாக்கிரதையாக எடுத்து வைத்துக்கொள்வார்.
லண்டனுக்குப் போகும்பொழுது கப்பலில் ஒரு வெள்ளைக்காரன் தினந்தோறும் வந்து காந்தியடிகளைத் திட்டிவிட்டுப் போவது வழக்கம். ஒருநாள் அவன் காந்தியடிகளைப் பற்றிச் சில விநோதமான கவிதைகள் எழுதி அவரிடம் எடுத்து வந்தான். அவைகளை அவரிடம் கொடுத்தவுடன் அவர் அவைகளைக் கிழித்துக் குப்பைக் கூடையில் எறிந்துவிட்டார். ஆனால் அவைகளில் குத்தப்பட்டிருந்த குண்டூசியை ஜாக்கிரதையாக எடுத்துத் தம் டப்பியில் வைத்துக்கொண்டார். அவன் "காந்தி, படித்துப் பாரேன். இதில் ஒன்றும் சாரமில்லையா?'' என்றான். ''ஆமாம்! இருந்த சாரத்தை எடுத்து டப்பியில் வைத்துவிட்டேனே!'' என்று பதிலளித்தார். இதைக் கேட்டு எல்லோரும் சிரித்தனர். அவன் வெட்கிப்போனான்.
காந்தியடிகள் சிறிய உபயோகமுள்ள பொருளையும் கெட்டுப்போக விடுவதில்லை. ஒரு கெஜம், இரண்டு கெஜம் நீளமுள்ள சணற் கயிறுகளை ஜாக்கிரதையாய் வைத்திருந்து மாதங்கள் சென்ற பிறகும், அவசியம் நேரும் பொழுது நினைவாக எடுத்துத் தருவார். அவருடைய ராட்டையின் கீழே வைக்கப்பட்டிருக்கும் கருப்புத்துணியின் சிறு துண்டு 12 வருஷங்களாக ஒன்றே இருந்து வருகிறதைப் பார்க்கிறேன். வரும் கடிதங்களிலுள்ள எழுதாத பாகங்களைக் கிழித்து பை செய்து உபயோகிக்கிறார். இந்தக் காரியங்கள் முதல் தரமான கருமியையும் தோற்கடிப்பவையாயிருக்கின்றன.
லண்டனில் நடந்த விஷயம். காந்தியடிகள் தங்குமிடம் நகரத்திலிருந்து வெகு தூரத்தில் கிழக்குப் பக்கத்திலிருந்தது. அதிலிருந்து மேற்கே ஏழெட்டு மைல் தூரத்தில் ஆபீஸிருந்தது. பகல் போஜனம் ஆபீஸிலேயே நடந்து வந்தது. தங்குமிடத்திலிருந்து தினமும் ஆகாரங்கள் ஆபீஸுக்குக் கொண்டுவரப்பட்டு வந்தன.
சாப்பாடுடன் காந்தியடிகள் சில சமயங்களில் தேனும் சேர்த்துக்கொள்வதுண்டு. நாங்கள் இங்கிலாந்துக்குச் செல்லும் வழியில், எகிப்தில் தங்கிய பொழுது, எகிப்தியர் ஒரு ஜாடி நிறையத் தேன் கொடுத்தனர். அதிலிருந்து சிறிது தேன் தினந்தோறும் சாப்பிட்டு வந்தார். அன்றைய தினம் சாப்பாடுடன் தேன் கொண்டுவர மறந்துவிட்டதால், ஸ்ரீமதி மீராபாய் நான்கணாக் கொடுத்து ஒரு சீசா தேன் வாங்கி வந்து, உணவுடன் வைத்திருந்தார். காந்தியடிகள் சாப்பிட உட்கார்ந்ததும் தேன் சீசாவைக் கண்டார். ''இந்த சீசா ஏது?'' என்று கேட்டார். தேன் வாங்க நேர்ந்த விஷயம் தெரிவிக்கப்பட்டது. அவ்வளவுதான்; புயலைப்போல் கோபம் பொங்கி எழுந்தது. "ஏன் இப்படிக் காசை வீணாக்குகிறீர்கள்? ஜனங்கள் கொடுக்கும் பொருளை நாம் இப்படியா வீண் செலவு செய்வது? ஒருநாள் தேன் இல்லையானால் நான் பட்டினியாயிருந்து விடுவேனா?” என்றார்.
இந்தியாவைப் பற்றிய பெரிய சிக்கலான பிரச்சினைகள் முன்னால் இருந்தன. அவைகளை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு, தேனைப் பற்றி வெகுநேரம் வரை உபந்நியாஸமும், கண்டனமும் நடந்துகொண்டிருந்தன. பக்கத்திலிருந்தவர்களுக்கு அருவருப்பாயிருந்தது. ஆனால் காந்தியடிகளுக்கோ பெரிய விஷயங்களைப் போன்றே சிறியவையும் முக்கியமானவையே. இதில் சில சமயங்களில் அவருக்குப் பெரிது சிறிது என்ற வித்தியாசமே தெரியவில்லை போலத் தோன்றும். பக்கத்திலிருப்பவர்களுக்கு ஆத்திரம் வரும். ஆனால் காந்தியடிகள் இவைகளிலொன்றையும் பொருட்படுத்துவதில்லை.
துணிகளை மிகவும் ஜாக்கிரதையாக வைத்துக்கொள்கிறார். சிறிது கிழிந்ததும் ஒட்டுப்போட்டுவிடுகிறார். ஒவ்வொரு பொருளையும் சுத்தமாய் வைத்திருக்கிறார். செட்டோ சொல்ல வேண்டியதில்லை. தண்ணீரைக்கூட வீண் செலவு செய்யமாட்டார். முகம், கை கழுவுவதற்கு மிகவும் கொஞ்சம் தண்ணீரே உபயோகிக்கிறார். குடிப்பதற்குக் காய்ச்சின தண்ணீர் ஒரு சீசாவில் வைத்திருக்கிறார். அதையே அவசியமேற்படும் பொழுது குடிக்கவும், முகம் கழுவவும் உபயோகிக்கிறார்.
(கன்ஷ்யாம் தாஸ் பிர்லா எழுதிய 'பாபூ அல்லது நானறிந்த காந்தி' நூலிலிருந்து. மின்னூலை வாசிக்க, )


பாபூ அல்லது நானறிந்த காந்தி


Comments

Most Popular

மனமும் அதன் விளக்கமும் - மனமெனும் மாயம் | பெ. தூரன்

ம னம் என்பதென்ன? அது எங்கே இருக்கிறது? கை, கால், கண், இதயம் என்றால் உடம்பில் உள்ள உறுப்புகள் என்று உடனே தெரிகிறது. அவைகளுக்கு வடிவம் உண்டு. பருமன் உண்டு. ஆதலால் அவைகளை எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மனம் என்பது எது? அதற்கு வடிவம் உண்டா? பருமன் உண்டா? தொட்டுப் பார்த்து அறிந்துகொள்ள முடியுமா? இவ்வாறு எண்ணிப் பார்த்தால் ஒன்றும் விளங்குவதில்லை. இவ்வாறு எண்ணுவதற்கு அந்த மனமே காரணமாக இருக்கிறதென்று தோன்றுகிறது. ஆனால் அது என்ன என்று மட்டும் எளிதில் அறிந்துகொள்ள முடிகிறதில்லை. மனத்திற்கு உருவமில்லை; கன பரிமாணமும் இல்லை. மனம் என்பது தசை, நரம்பு முதலியவைகளால் ஆக்கப்பட்டதன்று. அது சடப் பொருள் அன்று; அது சூக்குமப் பொருள், சடப் பொருள் என்றால் அது உடம்பைச் சேர்ந்த ஒர் உறுப்பாகிவிடும்; எளிதாக அதை அறிந்துகொள்ளவும் முடியும். சிலர் மூளைதான் மனம் என்று தவறாகக் கருதுகிறார்கள். மூளை என்பது உடம்போடு சேர்ந்த ஒரு பருப்பொருளான உறுப்பு. அது மனம் அல்ல. சூக்குமப் பொருளாக மனம் இருக்கிறதென்று மட்டும் நமக்குப் புலனாகிறது. அந்த மனந்தான் ஆசைகள், எண்ணங்கள், நோக்கங்கள், நம்பிக்கைகள் முதலியவற்றிற்கு இடமாயிரு

எழுத்தாளர்களும் மின்னூல்களும்

இது குறைந்தது இரண்டு மின்னூல்களாவது வெளியிட்டுள்ள தமிழ் எழுத்தாளர்களின் அகரவரிசை தொகுப்பு. அவ்வப்போது புதிய இணைப்புகள் சேர்க்கப்படுகின்றன. இணைப்புகளில் அந்தந்த எழுத்தாளர்களின் இனி வரும் நூல்களும் தொகுக்கப்படும். கடைசியாக செப்டம்பர் 03, 2020 அன்று புதுப்பிக்கப்பட்டது.) அசோகமித்திரன் https://amzn.to/3cIKLFC |  https://amzn.to/3avBTS4 |  https://amzn.to/2zqxsLz அம்பை  https://amzn.to/3eIsOsl அருட்செல்வப்பேரரசன்  https://amzn.to/3eOosQr அருண் நரசிம்மன்  https://amzn.to/2VRkUV4 அழ. வள்ளியப்பா  https://amzn.to/2ZcvybO அழகிய பெரியவன்  https://cutt.ly/Lft1hhC அழகுநிலா  https://amzn.to/37bgFc5 அனோஜன் பாலகிருஷ்ணன்  https://amzn.to/2KvZM1n அஜயன் பாலா  https://amzn.to/2xJFC1e அ. கா. பெருமாள்  https://cutt.ly/pfs2w5j அ. வெண்ணிலா  https://cutt.ly/9fhYybK ஆரணி குப்புசாமி முதலியார்  https://amzn.to/2V1OWWD ஆ. இரா. வேங்கடாசலபதி  https://amzn.to/2RZQrD0 ஆ. சிவசுப்பிரமணியன் https://amzn.to/2xHVVvp ஆத்மார்த்தி  https://amzn.to/3eOnx2r ஆனந்த்  https://cutt.ly/LaTpEs7 ஆர். சிவகும

மொழிபெயர்ப்பு | க. நா. சுப்ரமண்யம்

மொழிபெயர்ப்பு என்பதைச் சாதாரணமாக ஒரு கலை என்று சொல்வது வழக்கமில்லை. கலையோ , தொழிலோ - மொழிபெயர்ப்பு என்பது இலக்கியத்திலே ஒரு தனித் துறை. அது மிகவும் அவசியமானது. இலக்கிய வளர்ச்சியின் அடிப்படையான காரியங்களிலே மொழிபெயர்ப்பும் ஒன்று. மொழிபெயர்ப்புகள் அதிகம் இல்லாத காலத்திலே இலக்கிய வளர்ச்சி வேகமாக நடைபெறுவதில்லை என்பது சரித்திரபூர்வமாக நமக்குத் தெரிகிற உண்மை. தமிழிலே மொழிபெயர்ப்புகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தோன்றிவிட்டன. கம்பனை மொழிபெயர்ப்பு நூல் என்று சொல்லமுடியாது ; ஆனால் திருக்குறளின் ஒரு பகுதி மொழிபெயர்ப்பு நூல் என்று திடமாகச் சொல்லலாம். மனு , பரதர் , கெளடில்யர் முதலியவர்களின் சம்ஸ்கிருத சூத்திரங்களைக் குறளாசிரியர் மொழிபெயர்த்துத் தமிழாக்கித் தந்திருக்கிறார். தமிழாக்கி என்று சொல்வதிலே ஒரு விஷயம் அடங்கியிருக்கிறது. தமிழிலே வெளிவருகிற மொழிபெயர்ப்புகள் தமிழாகத்தான் இருக்கவேண்டுமா என்று என்னை யாராவது கேட்டால் , வேண்டாம் இருக்கக்கூடாது என்றே நான் பதில் சொல்லுவேன். எந்த மொழிபெயர்ப்புமே முதல் நூல் போலாகிவிடக்கூடாது - முழுதும் தமிழாகிவிடக்கூடாது. மொழிபெயர்ப்பாசிரியன் முத