Skip to main content

கணக்கும், கண்டிப்பும் | ஜி.டி. பிர்லா


காந்தியடிகள் இருக்குமிடத்தில் ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு வைத்துக்கொள்ளப்படுகிறது. சிறு பிராயம் முதலே ரூபாயின் கணக்கு ஜாக்கிரதையாக வைத்துக்கொள்வது காந்தியடிகளுடைய பழக்கம். அவருக்கு ஒழுங்கில் மிக்க பற்றுண்டு. ஆகையால் அவருடைய குடில் சுத்தமாக மெழுகிப் பூசி ஒழுங்காக வைக்கப்பட்டிருக்கிறது. இடுப்பிலுள்ள கச்சமும் கச்சிதமாகத்தான் கட்டப்பட்டிருக்கிறது. காந்தியடிகள் கிழவர்தான். ஆயினும், அவருடைய சரீரம் பளபளவென்று வாலிபர்களுடையது போல் இருக்கிறதென்று ஒரு ராஜப்பிரதிநிதி கூறினார். அவர் தேக ஆரோக்கியத்தை நன்றாகக் கவனித்துக்கொள்கிறார் என்பது உண்மை. ஒவ்வொரு விஷயத்திலும் செட்டு செய்யப்படுகிறது. கடிதங்களில் குண்டூசி குத்தியிருந்தால் அதையும் ஜாக்கிரதையாக எடுத்து வைத்துக்கொள்வார்.
லண்டனுக்குப் போகும்பொழுது கப்பலில் ஒரு வெள்ளைக்காரன் தினந்தோறும் வந்து காந்தியடிகளைத் திட்டிவிட்டுப் போவது வழக்கம். ஒருநாள் அவன் காந்தியடிகளைப் பற்றிச் சில விநோதமான கவிதைகள் எழுதி அவரிடம் எடுத்து வந்தான். அவைகளை அவரிடம் கொடுத்தவுடன் அவர் அவைகளைக் கிழித்துக் குப்பைக் கூடையில் எறிந்துவிட்டார். ஆனால் அவைகளில் குத்தப்பட்டிருந்த குண்டூசியை ஜாக்கிரதையாக எடுத்துத் தம் டப்பியில் வைத்துக்கொண்டார். அவன் "காந்தி, படித்துப் பாரேன். இதில் ஒன்றும் சாரமில்லையா?'' என்றான். ''ஆமாம்! இருந்த சாரத்தை எடுத்து டப்பியில் வைத்துவிட்டேனே!'' என்று பதிலளித்தார். இதைக் கேட்டு எல்லோரும் சிரித்தனர். அவன் வெட்கிப்போனான்.
காந்தியடிகள் சிறிய உபயோகமுள்ள பொருளையும் கெட்டுப்போக விடுவதில்லை. ஒரு கெஜம், இரண்டு கெஜம் நீளமுள்ள சணற் கயிறுகளை ஜாக்கிரதையாய் வைத்திருந்து மாதங்கள் சென்ற பிறகும், அவசியம் நேரும் பொழுது நினைவாக எடுத்துத் தருவார். அவருடைய ராட்டையின் கீழே வைக்கப்பட்டிருக்கும் கருப்புத்துணியின் சிறு துண்டு 12 வருஷங்களாக ஒன்றே இருந்து வருகிறதைப் பார்க்கிறேன். வரும் கடிதங்களிலுள்ள எழுதாத பாகங்களைக் கிழித்து பை செய்து உபயோகிக்கிறார். இந்தக் காரியங்கள் முதல் தரமான கருமியையும் தோற்கடிப்பவையாயிருக்கின்றன.
லண்டனில் நடந்த விஷயம். காந்தியடிகள் தங்குமிடம் நகரத்திலிருந்து வெகு தூரத்தில் கிழக்குப் பக்கத்திலிருந்தது. அதிலிருந்து மேற்கே ஏழெட்டு மைல் தூரத்தில் ஆபீஸிருந்தது. பகல் போஜனம் ஆபீஸிலேயே நடந்து வந்தது. தங்குமிடத்திலிருந்து தினமும் ஆகாரங்கள் ஆபீஸுக்குக் கொண்டுவரப்பட்டு வந்தன.
சாப்பாடுடன் காந்தியடிகள் சில சமயங்களில் தேனும் சேர்த்துக்கொள்வதுண்டு. நாங்கள் இங்கிலாந்துக்குச் செல்லும் வழியில், எகிப்தில் தங்கிய பொழுது, எகிப்தியர் ஒரு ஜாடி நிறையத் தேன் கொடுத்தனர். அதிலிருந்து சிறிது தேன் தினந்தோறும் சாப்பிட்டு வந்தார். அன்றைய தினம் சாப்பாடுடன் தேன் கொண்டுவர மறந்துவிட்டதால், ஸ்ரீமதி மீராபாய் நான்கணாக் கொடுத்து ஒரு சீசா தேன் வாங்கி வந்து, உணவுடன் வைத்திருந்தார். காந்தியடிகள் சாப்பிட உட்கார்ந்ததும் தேன் சீசாவைக் கண்டார். ''இந்த சீசா ஏது?'' என்று கேட்டார். தேன் வாங்க நேர்ந்த விஷயம் தெரிவிக்கப்பட்டது. அவ்வளவுதான்; புயலைப்போல் கோபம் பொங்கி எழுந்தது. "ஏன் இப்படிக் காசை வீணாக்குகிறீர்கள்? ஜனங்கள் கொடுக்கும் பொருளை நாம் இப்படியா வீண் செலவு செய்வது? ஒருநாள் தேன் இல்லையானால் நான் பட்டினியாயிருந்து விடுவேனா?” என்றார்.
இந்தியாவைப் பற்றிய பெரிய சிக்கலான பிரச்சினைகள் முன்னால் இருந்தன. அவைகளை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு, தேனைப் பற்றி வெகுநேரம் வரை உபந்நியாஸமும், கண்டனமும் நடந்துகொண்டிருந்தன. பக்கத்திலிருந்தவர்களுக்கு அருவருப்பாயிருந்தது. ஆனால் காந்தியடிகளுக்கோ பெரிய விஷயங்களைப் போன்றே சிறியவையும் முக்கியமானவையே. இதில் சில சமயங்களில் அவருக்குப் பெரிது சிறிது என்ற வித்தியாசமே தெரியவில்லை போலத் தோன்றும். பக்கத்திலிருப்பவர்களுக்கு ஆத்திரம் வரும். ஆனால் காந்தியடிகள் இவைகளிலொன்றையும் பொருட்படுத்துவதில்லை.
துணிகளை மிகவும் ஜாக்கிரதையாக வைத்துக்கொள்கிறார். சிறிது கிழிந்ததும் ஒட்டுப்போட்டுவிடுகிறார். ஒவ்வொரு பொருளையும் சுத்தமாய் வைத்திருக்கிறார். செட்டோ சொல்ல வேண்டியதில்லை. தண்ணீரைக்கூட வீண் செலவு செய்யமாட்டார். முகம், கை கழுவுவதற்கு மிகவும் கொஞ்சம் தண்ணீரே உபயோகிக்கிறார். குடிப்பதற்குக் காய்ச்சின தண்ணீர் ஒரு சீசாவில் வைத்திருக்கிறார். அதையே அவசியமேற்படும் பொழுது குடிக்கவும், முகம் கழுவவும் உபயோகிக்கிறார்.
(கன்ஷ்யாம் தாஸ் பிர்லா எழுதிய 'பாபூ அல்லது நானறிந்த காந்தி' நூலிலிருந்து. மின்னூலை வாசிக்க, )


பாபூ அல்லது நானறிந்த காந்தி


Comments

Most Popular

கு. ப. ராஜகோபாலன் என்கிற முழுமை | க. நா. சுப்ரமண்யம்

கு. ப. ராஜகோபாலனின் கதைகளை , அவை எழுதப்பட்டு சற்றேறக் குறைய ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு இன்று படித்துப் பார்க்கும்போது கூட அவர் லாகவமும் , கதை நடத்தும் திறனும் , உருவ , கருத்து அமைதியுடன் மிகவும் சிறப்பாகவே உள்ளத்தில் தட்டுகின்றன. வாழ்க்கையை முழுப்பார்வையுடன் பார்ப்பது அவர்க்கு மிகவும் சிறிய கதைகளிலும் கூடச் சாத்தியமாக இருந்திருக்கிறது. ஆண் , பெண் உறவுகளை , பால் உணர்ச்சிகளை அப்பட்டமாக , உரக்க , மனத்தையும் கண்ணையும் ஒருங்கே உறுத்துகிற மாதிரிச் சொல்வது இன்று பலருக்கும் கைவந்த கலையாக இருக்கிறது. ஆனால் , அதையே சூக்ஷ்மமாகச் செய்கிற காரியம் , கலையுணர்ச்சியுடன் முழுவதும் சொல்லாமல் சொல்லிவிடுகிற காரியம் கு.ப.ரா . வுக்கு மிகவும் சிறப்பாக கைவந்திருந்ததை இன்று படிக்கும்போதும் உணர முடிகிறது. இந்த மென்மையும் , கலை உணர்ச்சியும் பக்கம் பக்கமாக பச்சையாக எதை எதையோ எழுதுகிற தமிழ் எழுத்தாளர்களுக்கு எட்டாத ஒரு விஷயம். அவர்கள் கு.ப.ரா . விடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். புத்தனுடைய துறவுக்கு அசுவகோஷன் முதல் எத்தனையோ இலக்கியாசிரியர்கள் பலர் காரணங்கள் கண்டு சொல்லிவிட்டார்கள். மூப்பு , நோய் , சாவு...

எழுத்து ஆக்கம் - மயிலை சீனி. வேங்கடசாமி

பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னே மனிதன் பேசக் கற்றுக்கொண்டான். அஃதாவது, தன் எண்ணங்களைப் பேச்சின் மூலமாகப் பிறருக்குத் தெரிவிக்கக் கற்றுக் கொண்டான். மனிதன் கற்றுக்கொண்ட பேச்சு அவனை மிருகத் தன்மையிலிருந்து மனிதத் தன்மைக்கு உயர்த்திவிட்டது. பின்னும், பல காலம் சென்ற பிறகு மனிதன், தன் எண்ணங் களையும் கருத்துக்களையும், எழுத்து மூலமாகப் பிறருக்குத் தெரிவிக்க முயற்சி செய்தான், முயற்சி செய்து அதில் வெற்றி அடைந்தான். எழுத்துக்களைக் கண்டுபிடித்து அதன் மூலமாகத் தன் கருத்துக்களை மற்றவர்களுக்குத் தெரிவிக்கக் கற்றுக்கொண்ட வித்தையானது, மனிதனை மிக உயர்ந்த நாகரிகத்தை அடையச் செய்துவிட்டது. எழுதப் படிக்கக் கற்றுக்கொள்ளாமல், வெறும் பேச்சோடு மட்டும் நின்று விட்டிருந்தால், இப்போது மனிதன் அடைந்திருக்கிற உயர்ந்த நாகரிக நிலையை அடைந்திருக்க முடியாது. எழுத்தைக் கண்டுபிடித்த ஆதிகாலத்து மனிதர், இப்போது உலகத்திலே வழங்குகிற ஒலி எழுத்துக்களைக் கண்டுபிடிக்கவில்லை. அஃதாவது, தனித்தனியாக ஒவ்வொரு ஒலிக்கும் ஒவ்வொரு எழுத்தைக் கண்டுபிடிக்கவில்லை. உருவங்களைச் சித்திரம் வரைவதுபோல் வரைந்து அவற்றின் மூலமாக அக்காலத்து மனிதர் ...

புதுமையும் பித்தமும் - 1 | க. நா. சுப்ரமண்யம்

புதுமைப்பித்தன் கதைகள் எல்லாவற்றையும் ஒரே நூலாக வெளியிட்டுப் பார்க்க வேண்டும் என்கிற ஆசையில் வெளிவருகிற புஸ்தகம் இது. அவர் எழுதிய கதைகளில் மிகச் சிறந்தவையெல்லாம் இதில் அடங்கியிருக்கின்றன. தொண்ணூற்றுச் சொச்சம் கதைகளில் ஒரு முப்பதுக்கும் அதிகமாகவே சிறந்த கதைகளாகவும் , இன்னும் 30 கதைகளுக்கு அதிகமாக நல்ல கதைகளாகவும் , மற்றவை சாதாரண தரத்தில் அமைந்தவை என்றும் பொதுவாகச் சொல்லலாம். இந்தப் புத்தகத்தில் அடங்காமல் விட்டுப்போன புதுமைப்பித்தன் எழுதிய சிறுகதைகள் சில - ஒன்றிரண்டு இருக்கலாம். அதிகம் போனால் நாலைந்தும் இருக்கலாம் - அவை கிடைத்தால் அவற்றையும் மறுபதிப்பில் சேர்த்துக்கொள்வார்கள் பிரசுரகர்த்தாக்கள் என்று நாம் நம்பலாம். சிறுகதைகள் மட்டும் எழுதவில்லை புதுமைப்பித்தன். சில ஓரங்க நாடகங்கள் , மற்றும் இலக்கியப் பொதுக்கட்டுரைகள் , வேளூர் வெ. கந்தசாமிப்பிள்ளை என்ற புனைபெயரில் சில கவிதைகள் , இவை தவிர பல மொழிபெயர்ப்புகள் (அனேகமாகச் சிறுகதைகள் , ‘பிரேத மனிதன்’ என்கிற மேரி ஷெல்லியின் விஞ்ஞான நாவல் , குப்ரினின் ‘யாமா’வில் ஒரு பகுதி. இவற்றை மொழிபெயர்த்தார். அவருக்கு ஆங்கிலம் தவிர வேறு ஐரோப்பிய மொழிகள் த...