Skip to main content

விமர்சனக் கட்டுரைப் போட்டி 2019


தமிழின் முன்னணி பதிப்பகங்கள் பல தங்கள் நூல்களை கிண்டிலில் வெளியிடத் தொடங்கியிருக்கின்றன. பல எழுத்தாளர்கள் தாமே தங்கள் நூல்களை நேரடியாக கிண்டிலில் வெளியிடுகின்றனர். சில எழுத்தாளர்களின் படைப்புகளில் பெரும்பாலானவை கிண்டில் மின்னூல்களாகவும் கிடைக்கின்றன. கடந்த சில ஆண்டுகளில் தமிழ் வாசகப் பரப்பில் மின்னூல் வாசிப்பு குறிப்பிடத்தகுந்த அளவு பாதிப்பினைச் செலுத்தியுள்ளது. வருங்காலங்களில் மின் புத்தகங்களுக்கான வாசகர்கள் பெருகுவதற்கான வாய்ப்பு தெளிவாகவே புலப்படுகிறது.

அழிசி நாட்டுடைமை ஆக்கப்பட்ட படைப்புகளையும் ஆசிரியரால் காப்புரிமை துறக்கப்பட்ட படைப்புகளையும் வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக அவற்றை அமேசானில் பதிவேற்றுகிறது. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. பல முக்கியமான நூல்கள் மின் புத்தகங்களாக மாறியுள்ளன. ஆயிரக்கணக்கான வாசகர்களால் அவை தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. அவ்வகையில் கிடைத்த தொகையை வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் பயன்படுத்தும் நோக்குடன், ஒவ்வொரு ஆண்டும் விமர்சனக் கட்டுரைப் போட்டி நடத்தப்படுகிறது.

2018ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட போட்டியில் இரண்டாயிரத்துக்குப் பின் வந்த நாவலைப் பற்றிய விமர்சனக் கட்டுரையைக் கோரி போட்டி அறிவிக்கப்பட்டது. சிறந்த கட்டுரையை எழுதிய கட்டுரையாளருக்கு 12,000 ரூபாய் மதிப்பிலான கிண்டில் பரிசாக வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு மூன்று கட்டுரைகளுக்கு பரிசு வழங்கப்படவுள்ளது. முதல் பரிசாக 12,999 ரூபாய் மதிப்புள்ள கிண்டில் (10th Gen Kindle Paperwhite) வழங்கப்படும். இரண்டாம் பரிசாக (இரண்டு பேருக்கு) 7,999 ரூபாய் மதிப்புள்ள கிண்டில் (10th Gen All New Kindle) அளிக்கப்படும்.

போட்டிக்கான நிபந்தனைகள்

1. இரண்டாயிரம் அல்லது அதற்குப் பிறகான வருடங்களில் முதல் நூல் வெளியிட்ட, தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளில் ஏதேனும் ஒரு நூலைப் பற்றிய விமர்சனக் கட்டுரையாக இருக்க வேண்டும்.

2. மொழிபெயர்ப்பு தவிர, நாவல், சிறுகதை, கவிதை என எந்த வகை புனைவு நூலைப் பற்றியும் எழுதலாம்.

3. கட்டுரை குறைந்தபட்சம் 1000 வார்த்தைகள் கொண்டதாக இருக்க வேண்டும். அதிகபட்ச வரம்பு கிடையாது.

4. ஒரு போட்டியாளர் ஒரு கட்டுரை மட்டுமே அனுப்ப வேண்டும். ஏற்கெனவே பிரசுரமாகாததாகவும் இருக்க வேண்டும்.

5. Unicode எழுத்துருவில் Word Document ஆக அனுப்பவும். கோப்பினுள் கட்டுரையாளரின் பெயர் உள்ளிட்ட விவரங்களைக் குறிப்பிடக் கூடாது. 

6. கட்டுரையை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி azhisiebooks@gmail.com. (கட்டுரையுடன் பெயர், முகவரி, அலைபேசி எண் போன்ற விபரங்களையும் மின்னஞ்சலில் குறிப்பிடவும். அலைபேசி எண் கட்டாயம் குறிப்பிட வேண்டும். Subject-ல் 'கட்டுரைப் போட்டி 2019' என்று குறிப்பிடவும்.)

7. கட்டுரையாளர் இந்தியாவில் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஆனால் பரிசு இந்திய முகவரிக்கே அனுப்பப்படும் என்பதால் கட்டுரையாளர் தவறாமல் இந்திய முகவரி ஒன்றை குறிப்பிட வேண்டும்.

8. கட்டுரை வந்து சேரவேண்டிய கடைசி நாள் 30.11.2019



Comments

Most Popular

உறையூர் மறைந்த வரலாறு - மயிலை சீனி. வேங்கடசாமி

ஊர்களும் நகரங்களும் சிற்சில காரணங்களால் அழிந்து படுவதுண்டு. எரிமலைகளாலும், ஆறுகளாலும், மண்காற்றி னாலும், கடற்பெருக்காலும் ஊர்கள் அழிகின்றன. இவ்வாறு அழிந்துபோன ஊர்கள் பலப்பல. கி.பி. முதலாம் நூற்றாண்டிலே கிரேக்க நாட்டிலே இருந்த பாம்பி என்னும் நகரம், வெசூவியஸ் என்னும் எரிமலை கக்கிய நெருப்பினாலும் சாம்பலினாலும் மூடுண்டு அழிந்துவிட்டது. அழிந்துபோன அந்நகரத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் தோண்டியபோது, புதையுண்ட வீதிகளையும், மனைகளையும், மக்களின் எலும்புக் கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். சிந்து நதிக்கரையிலே இருந்த ஹரப்பா, மொகஞ்சதரோ என்னும் நகரங்கள் வெள்ளப் பெருக்கினால் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்துவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன்னர் அவ்விடங்களை அகழ்ந்து பார்த்தபோது, அக் காலத்துக் கட்டடங்களையும், தெருக்களையும், பாண்டங் களையும், எலும்புக்கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். புதுச்சேரிக்குத் தெற்கே பத்து மைல் தொலைவில் உள்ள அரிக்கமேடு என்னும் கடற்கரைப் பட்டினம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தமிழ் நாட்டில் பேர்பெற்ற துறைமுகமாக இருந்தது. யவனர் முதலிய வெ...

மணிபல்லவம் - ஜம்பு கொல பட்டினம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்ககாலத்து நூலாகிய மணிமேகலையிலே, இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப்பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள பழைய பௌத்த நூல்களிலேயும் இலங்கைத்தீவின் வடகோடியில் இருந்த ஜம்புகோல் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. தமிழ் நூலில் கூறப்படும் குறிப்பு களைக் கொண்டும் பாலி மொழி நூல்களில் கூறப்படும் குறிப்புகளைக் கொண்டும் மணிபல்லவமும் ஜம்புகொல பட்டினமும் ஒரே இடம் என்று துணியலாம். பெயர் வேறுபடு வதிலிருந்து இரண்டும் வெவ்வேறிடங்கள் எனக் கருதும்படி இருந்தாலும், இவைகளைப்பற்றிக் கூறப்படும் செய்திகளை உற்றுநோக்கினால், இரண்டும் ஒன்றே என்பது ஐயமற விளங்குகிறது. இதனை ஈண்டு ஆராய்வோம். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலேதான் மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்தது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை கூறுவது காண்க. சோழ நாட்டின் துறைமுகப்பட்டினமாகிய புகார்ப்பட்டினத்தில் இருந்து தெற்கே 30 யோசனை தொலைவில் மணிபல்லவம் இருந்தது (...

மனமும் அதன் விளக்கமும் | கனவின் பொருள் | பெ. தூரன்

ப ல கனவுகள் சிக்கல் நிறைந்திருக்கின்றன; அவற்றில் தோன்றும் நிகழ்ச்சிகள் மேலாகப் பார்க்கும்போது பொருளற்றவைகளாகவும் இருக்கின்றன. கோ. என்பவர் கண்ட ஒரு கனவை இங்கே ஆராய்வோம். “ஏதோ ஒரு பெரிய கோயில். அங்கே நானும் என் நண்பர்கள் சி. வே. மா. ஆகிய மூவரும் சேர்ந்து ஒருவனைக் கொலை செய்தோம். அவனுடைய மூக்கை மாத்திரம் அறுத்துச் சந்தனத்தில் வைத்துச் சாமிக்கு வைத்தோம். பிணம் வெளியிலேயே கிடந்தது. சி. தான் மூக்கை அறுத்தவர். கடவுளைத் தொழுவதற்காகப் பலர் ஒரு மோட்டார்க் காரில் வந்தார்கள். உடனே நான் பிணத்தைத் துரக்கிக் கோபுரத்தின் மேல் வீசினேன். இதை எனது ஆசிரியர் ஒருவர் பார்த்துக் கொண்டார்.” “நான் ஒடி வந்துவிட்டேன். வழியில் என் நண்பர் வீ. யைச் சந்தித்து வேறொருவனிடம் சைக்கிள் வாங்கி இருவரும் ஏறிக்கொண்டு ஊருக்குச் சென்றோம். வழியில் சி. தம் அண்ணனிடம் ஒன்றும் நடக்காதது போல் வந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கொலை செய்துவிட்டு இவர் இவ்வளவு தாராளமாக வெளியில் நடமாடுகிறாரே என்று வியந்தேன்.” "நாங்கள் ஒரு சத்திரத்தில் புகுந்துகொண்டிருந்தோம். ஆனால் சி. வேறு சில நண்பர்களிடம் சாலையில் சென்றுகொண்டிருந்தார்.” ...