Skip to main content

பசுப் பாதுகாப்பைப் பற்றி | மகாத்மா காந்தி


வாசகர்: பசுப் பாதுகாப்பைப்பற்றி இப்பொழுது உங்கள் கருத்தை அறிந்துகொள்ள விரும்புகிறேன்.

ஆசிரியர்: நானே பசுவுக்கு மரியாதை செலுத்துகிறேன். அதாவது, அதனிடம் அன்பு கலந்த ஒரு மதிப்பு வைத்திருக்கிறேன். இந்தியாவைப் பாதுகாப்பது பசு. ஏனெனில், இந்திய நாடு விவசாய நாடாக இருப்பதால் அது பசுவை நம்பி வாழ வேண்டியிருக்கிறது. நூற்றுக்கணக்கான வழிகளில் பசு மிகவும் பயன் அளிக்கும் மிருகம். நம் முஸ்லிம் சகோதரர்களும் இதை ஒப்புக்கொள்வார்கள்.

ஆனால், நான் பசுவுக்கு மதிப்பளிப்பதைப் போலவே என் நாட்டிலுள்ள சகோதரர்களுக்கும் மதிப்பளிக்கிறேன். ஒருவர் ஹிந்துவானாலும் சரி, முஸ்லிமாகயிருந்தாலும் சரி, பசுவைப் போன்றே மனிதரும் பயன் உள்ளவரே. அப்படி இருக்கும்போது ஒரு பசுவைப் பாதுகாப்பதற்காக ஒரு முஸ்லிமுடன் சண்டையிடுவதோ அல்லது அவரைக் கொல்வதோ சரியா? அப்படிச் செய்வதனால் ஒரு முஸ்லிமுக்கும் ஒரு பசுவுக்கும் விரோதியாவேன். ஆகையால், பசுவைப் பாதுகாப்பதற்கு எனக்குத் தெரிந்த ஒரே வழி, நாட்டின் நன்மையை முன்னிட்டு அதைப் பாதுகாப்பதற்கு என்னுடன் ஒத்துழைக்கும்படி என் முஸ்லிம் சகோதரர்களைக் கேட்டுக்கொள்வதேயாகும். நான் கூறுவதற்கு அவர் இணங்கவில்லையாயின், இவ்விஷயம் என் சக்திக்குப் புறம்பானது என்ற காரணத்தினால் பசு எப்படியாவது போகட்டும் என்று நான் விட்டுவிட வேண்டும். பசுவிடம் பச்சாத்தாபம் எனக்கு மிக அதிகமாக இருக்குமானால், அதைக் காப்பாற்ற நான் என் உயிரையே தியாகம் செய்யவேண்டுமேயல்லாமல் என் சகோதரனின் உயிரைப் போக்கிவிடக்கூடாது. இதுவே நமது தர்மம் என்று நான் கொள்கிறேன்.

மனிதர் பிடிவாதக்காரர்கள் ஆகிவிடும்போது நிலைமை சங்கடமானதாகிவிடும். நான் ஒரு வழிக்கு இழுத்தால், என் முஸ்லிம் சகோதரர் வேறு வழிக்கு இழுப்பார். நான் உயர்ந்தவன் என்ற அகம்பாவத்துடன் இருந்தால் அவரும் பதிலுக்கு அப்படியே செய்வார். நான் கௌரவமாக அவருக்குப் பணிந்தால், அவர் மேலும் அப்படியே பணிந்துவிடுவார். அவர் அப்படிச் செய்யாது போனாலும், நான் பணிந்து போனதில் நான் தவறு செய்துவிட்டதாகக் கருத முடியாது. ஹிந்துக்கள் பிடிவாதம் காட்டக்காட்டப் பசுக்களைக் கொல்வதும் அதிகமாகிறது. பசுப் பாதுகாப்பு சங்கங்களைப் பசுக்கொலைச் சங்கங்கள் என்று சொல்லலாம் என்று நான் கருதுகிறேன். இத்தகைய சங்கங்கள் நமக்குத் தேவைப்படும் என்பதே வெட்கக்கேடானதாகும். பசுக்களை எப்படிப் பாதுகாப்பது என்பதை நாம் மறந்துவிட்டபோதே இத்தகைய சங்கங்கள் அவசியமாயின என எண்ணுகிறேன்.

ரத்தக் கலப்புள்ள ஒரு சகோதரன், ஒரு பசுவைக் கொல்லும் தறுவாயில் இருக்கும்போது நான் என்ன செய்வது? நான் அவனைக் கொன்றுவிடுவதா அல்லது அவன் காலில் விழுந்து கொல்ல வேண்டாம் என்று மன்றாடிக் கேட்டுக்கொள்வதா? பிந்திய முறையையே நான் கைக்கொள்ளவேண்டும் என்று நீங்கள் ஒப்புக்கொண்டால், எனது முஸ்லிம் சகோதரனிடமும் நான் அதையேதான் செய்யவேண்டும்.

ஹிந்துக்கள் பசுக்களைக் கொடுமையாக நடத்தும்போது அவை அழியாமல் பாதுகாக்கிறவர் யார்? பசு வமிசத்தை ஹிந்துக்கள் தடிகளால் போட்டு அடிக்கும்போது அது நியாயமல்ல என்று அவர்களிடம் யார் தாம் வாதாடுகிறார்கள்? ஆனால் இவையெல்லாம் நாம் ஒரே தேசீயச் சமுதாயமாக இருப்பதைத் தடுக்கவில்லை.

கடைசியாக, ஹிந்துக்கள் கொல்லாமையில் நம்பிக்கையுள்ளவர்கள், முஸ்லிம்கள் அப்படியல்ல என்பது உண்மையாக இருக்குமானால், ஹிந்துக்களின் கடமை என்ன? கொல்லாமை மதத்தைப் பின்பற்றும் ஒருவர், இன்னொருவரைக் கொல்லலாம் என்று விதிக்கப்பட்டிருக்கவில்லை. அவர் செய்ய வேண்டிய காரியம் நேரானது. ஓர் உயிரைக் காப்பதற்காக இன்னொருவரைக் கொன்றுவிடக்கூடாது. கொல்ல வேண்டாம் என்று வேண்டிக்கொள்ளலாம்; அவருடைய முழுக் கடமையும் அவ்வளவுதான்.

ஆனால் ஒவ்வொரு ஹிந்துவுக்கும் அகிம்சையில் நம்பிக்கை இருக்கிறதா? விஷயத்தை ஆழ்ந்து கவனித்தால், இந்த அகிம்சைக் கொள்கையை ஒருவர்கூட அனுசரிக்கவில்லை; உயிரினங்களை அழித்துக்கொண்டுதான் வருகிறோம். ஓர் உயிரைக் கொல்லும் பாபத்திலிருந்து தப்பவே இந்தக் கொள்கையைப் பின்பற்றுகிறோம் என்று சொல்லப்படுகிறது. பொதுவாகப் பார்த்தால் ஹிந்துக்களில் பலர் மாமிசம் சாப்பிடுகிறார்கள். இதனால் அவர்கள் அகிம்சையைக் கடைப்பிடிக்கவில்லை என்றாகிறது. ஆகையால் அகிம்சையில் நம்பிக்கை வைக்கும் ஹிந்துக்களும், அந்த நம்பிக்கையில்லா முகம்மதியர்களும் ஒன்றாக வாழ முடியாது என்று சொல்வது அபத்தமானதாகும்.

சுயநலமிகளும் போலிகளுமான மதப்பிரசாரகர்கள் இத்தகைய எண்ணங்களையெல்லாம் நம் புத்தியில் உண்டாக்கியிருக்கிறார்கள். ஆங்கிலேயர்கள் இதற்கு மெருகு கொடுக்திருக்கிறார்கள். சரித்திரம் எழுதும் வழக்கம் அவர்களுக்கு இருக்கிறது. எல்லா மக்களின் பழக்க வழக்கங்களையும் ஆராய்வதாகவும் பாசாங்கு செய்கிறார்கள். கடவுள் நமக்கு ஓர் அளவுக்குத்தான் புத்தியைக் கொடுத்திருக்கிறார். ஆனால், அவர்களோ, தாங்களே கடவுளாக எண்ணிக்கொண்டு விசித்திரப் பரீட்சைகளிலெல்லாம் ஈடுபடுகிறார்கள். தங்களுடைய ஆராய்ச்சிகளையெல்லாம் உயர்வாகப் புகழ்ந்து, அவர்களை நம்பும்படியும் நம்மை மயக்குகிறார்கள். நாமும் நமது அறியாமையால் அவர்களுக்கு அடிபணிகிறோம்.

விஷயங்களைத் தவறாகப் புரிந்துகொள்ளாதிருக்க வேண்டும் என விரும்புகிறவர்கள் குரானைப் படிக்கலாம். அதில் நூற்றுக்கணக்கான விஷயங்கள் ஹிந்துக்கள் ஒப்புக்கொள்ளக்கூடியவையாக இருப்பதைக் காணலாம். எந்த ஒரு முஸ்லிமும் ஆட்சேபிக்க முடியாத உண்மைகளும் பகவத் கீதையில் உள்ளன. எனக்குப் புரியாதவையும், நான் விரும்பாதவையும் குரானில் இருக்கின்றன என்பதற்காக ஒரு முஸ்லிமை நான் வெறுப்பதா? இரண்டு பேர் சச்சரவுக்குத் தயாராக இருந்தால்தான் சச்சரவுக்கே இடம் ஏற்படுகிறது. ஒரு முஸ்லிமுடன் சண்டையிட நான் விரும்பவில்லையென்றால் என்னிடம் சண்டைக்கு வருவதற்கு அவருக்குச் சக்தியே இல்லாது போகும். அதே போல, என்னுடன் சச்சரவுக்கு வர ஒரு முஸ்லிம் மறுத்துவிடுவாரானால் நானும் சக்தியற்றவன் ஆகிவிடுவேன். வெறும் கையை ஓங்கினால் சுளிக்கிக்கொள்ளத்தான் செய்யும். ஒவ்வொருவரும் தங்களுடைய மதத்தின் தத்துவத்தை நன்கு அறிந்து அதைக் கடைப்பிடிப்பார்களானால்—போலிப் போதகர்கள் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்துவதற்கும் அனுமதி தராமல் இருந்தால்—சண்டை சச்சரவுக்கு இடமே இராது.

(மகாத்மா காந்தி எழுதிய ஹிந்த் ஸ்வராஜ் அல்லது இந்திய சுயராஜ்ஜியம் நூலிலிருந்து | தமிழில், ரா. வேங்கடராஜுலு )

Comments

Most Popular

மனமும் அதன் விளக்கமும் - மனமெனும் மாயம் | பெ. தூரன்

ம னம் என்பதென்ன? அது எங்கே இருக்கிறது? கை, கால், கண், இதயம் என்றால் உடம்பில் உள்ள உறுப்புகள் என்று உடனே தெரிகிறது. அவைகளுக்கு வடிவம் உண்டு. பருமன் உண்டு. ஆதலால் அவைகளை எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மனம் என்பது எது? அதற்கு வடிவம் உண்டா? பருமன் உண்டா? தொட்டுப் பார்த்து அறிந்துகொள்ள முடியுமா? இவ்வாறு எண்ணிப் பார்த்தால் ஒன்றும் விளங்குவதில்லை. இவ்வாறு எண்ணுவதற்கு அந்த மனமே காரணமாக இருக்கிறதென்று தோன்றுகிறது. ஆனால் அது என்ன என்று மட்டும் எளிதில் அறிந்துகொள்ள முடிகிறதில்லை. மனத்திற்கு உருவமில்லை; கன பரிமாணமும் இல்லை. மனம் என்பது தசை, நரம்பு முதலியவைகளால் ஆக்கப்பட்டதன்று. அது சடப் பொருள் அன்று; அது சூக்குமப் பொருள், சடப் பொருள் என்றால் அது உடம்பைச் சேர்ந்த ஒர் உறுப்பாகிவிடும்; எளிதாக அதை அறிந்துகொள்ளவும் முடியும். சிலர் மூளைதான் மனம் என்று தவறாகக் கருதுகிறார்கள். மூளை என்பது உடம்போடு சேர்ந்த ஒரு பருப்பொருளான உறுப்பு. அது மனம் அல்ல. சூக்குமப் பொருளாக மனம் இருக்கிறதென்று மட்டும் நமக்குப் புலனாகிறது. அந்த மனந்தான் ஆசைகள், எண்ணங்கள், நோக்கங்கள், நம்பிக்கைகள் முதலியவற்றிற்கு இடமாயிரு

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு , https://tinyurl.

மணிபல்லவம் - ஜம்பு கொல பட்டினம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்ககாலத்து நூலாகிய மணிமேகலையிலே, இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப்பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள பழைய பௌத்த நூல்களிலேயும் இலங்கைத்தீவின் வடகோடியில் இருந்த ஜம்புகோல் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. தமிழ் நூலில் கூறப்படும் குறிப்பு களைக் கொண்டும் பாலி மொழி நூல்களில் கூறப்படும் குறிப்புகளைக் கொண்டும் மணிபல்லவமும் ஜம்புகொல பட்டினமும் ஒரே இடம் என்று துணியலாம். பெயர் வேறுபடு வதிலிருந்து இரண்டும் வெவ்வேறிடங்கள் எனக் கருதும்படி இருந்தாலும், இவைகளைப்பற்றிக் கூறப்படும் செய்திகளை உற்றுநோக்கினால், இரண்டும் ஒன்றே என்பது ஐயமற விளங்குகிறது. இதனை ஈண்டு ஆராய்வோம். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலேதான் மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்தது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை கூறுவது காண்க. சோழ நாட்டின் துறைமுகப்பட்டினமாகிய புகார்ப்பட்டினத்தில் இருந்து தெற்கே 30 யோசனை தொலைவில் மணிபல்லவம் இருந்தது (