Skip to main content

அவரவருக்கு வேண்டிய மகாத்மா | ராமாநுஜம்


சந்நியாசம் ஏற்காமல் ஆதி சங்கரன் அத்வைதம் பேசியிருக்க முடியாது. துறவறம் ஏற்காமல் புத்தன் சாத்தியமில்லை. நிர்வாணத்தைக் கொண்டாடாமல் மகாவீரர் அகிம்சையை முன்நிறுத்தியிருக்க முடியாது. மேற்கத்திய உடையை விட்டெறியாமல் காந்தி மகாத்மாவாகியிருக்க முடியாது. மேற்கத்திய உடையை அணியாமல் அம்பேத்கர் ஜாதி நிறுவனத்திற்கு எதிராகப் போராடி இருக்க முடியாது. கலாசாரத்தில் ஒதுக்கப்பட்ட கறுப்பு நிறத்தைக் கொண்டாடாமல் பெரியாரியம் சாத்தியமில்லை.
இதை வைத்து நாம் சூத்திரங்களை உருவாக்க முடியாது என்றாலும் உள்ளடக்கத்திற்கும், வடிவத்திற்கும் உள்ள இணைவை நாம் போற்ற முடியும். இந்த உள்ளடக்கத்திற்கும் வடிவத்திற்குமான உறவைக் காந்தி ஒரு புதிய தளத்திற்கு எடுத்துச் சென்றார். உடலின் சாத்தியங்களை இதற்குமுன் வரலாற்றில் காணாத அளவிற்கு விரிவுபடுத்தினார்.
அரசியல் போராட்டம் ஆகட்டும், ஆன்மீகச் சிந்தனையாகட்டும், சமூகச் சீர்திருத்தங்கள் ஆகட்டும், அறிவியல் விஞ்ஞான தொழில்நுட்பச் சிந்தனையாகட்டும் எல்லாவற்றிற்கும் அடிப்படையாகத் தன் உடலையே காந்தி மையப்படுத்தினார். காந்தி முன்வைத்த உடல் என்பது மதங்கள் போற்றிய வரையறைகளுக்கு வெளியே இருந்தது. அது காலனியம் முன்வைத்த உடலை நிராகரித்தது. இந்தியத் தேசிய எழுச்சி முன்வைத்த ஆண்- மைய உடலை மறுத்தது. காந்தியின் உடல் வரலாற்றிலிருந்தும், கருத்தாக்கத் தளத்திலிருந்தும் தனி மனிதனின் உடலை விடுதலை செய்ய முயற்சித்தது. காந்தி உடலின் சாத்தியங்களை விரிவுபடுத்த முயற்சித்த அதே வேளையில் அதன் எல்லையும் அவரால் ஏற்றுக்கொள்ள முடிந்தது.
காந்தியின் உடலை நாம் இரண்டு தளங்களில் வைத்துப் புரிந்துகொள்ள முயற்சிப்போம்.
1. சமூக, கலாச்சார அரசியல் தளத்தில் காந்தியின் உடல் (காலனிய எதிர்ப்பும் தேசியக் கட்டமைப்பும்)
2. பிரம்மச்சரிய பரிசோதனைகளில் காந்தியின் உடல்
காந்தியை முழுவதுமாக ஏற்பதும் சாத்தியமில்லை, நிராகரிப்பதும் சாத்தியமில்லை. நேரு, அம்பேத்கர், பெரியார் போன்ற தலைவர்களை ஒரு சாரார் முழுமையாக ஏற்பதும் மற்றொரு சாரார் முழுமையாக நிராகரிப்பதும் சாத்தியப்படுகிறது. காந்தியைப் பொறுத்த மட்டில் இது சாத்தியப்படாமலே போகிறது. காந்தியின் அரசியல் அறத்தைப் போற்றியவர்கள் அவருடைய பிரம்மச்சரியப் பரிசோதனையை ஏற்க மறுத்தார்கள். அவருடைய சமூகப் பார்வையை விமர்சித்தவர்கள் அறத்தை மையமாக வைத்த அவருடைய அரசியலைப் போற்றினார்கள். காந்தியின் மத நல்லிணக்கத்தை ஏற்றுக்கொண்டவர்கள் அவருடைய சாதி நிறுவனத்திற்கு எதிரான கருத்துகளை விமர்சித்தார்கள். மறைந்த எழுத்தாளர் ராஜாராவ் காந்தியைப் பற்றிக் குறிப்பிடும்போது 'இஸ்லாமை எதிர்ப்பதற்காக அவர் இஸ்லாமியர்களை ஆதரித்தார்' என்று எழுதியுள்ளார். தோழர் அ.மார்க்ஸ் அண்மையில் எழுதிய புத்தகத்தில், ‘சாதி நிறுவனத்தால் பயன் அடைந்தவர்களுக்கிடையே காந்தி சனாதன எதிர்ப்புப் பற்றி பேச வேண்டியிருந்தது என்றால் அம்பேத்கர், பெரியார் போன்றவர்கள் சனாதனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் பேச வேண்டியிருந்தது. அதனால் காந்தியின் மொழி, அம்பேத்கர் மற்றும் பெரியார் பேசிய மொழியிலிருந்து வேறுபட்டுத்தான் இருக்கும்என்கிறார். அதே சமயத்தில் வைதீக சனாதனிகளிடமிருந்து காந்தியைப் பிரித்தெடுக்கவும் முயற்சிக்கிறார். பெரியார் பற்றி பல புத்தகங்களைத் தோழர் எஸ். வி. ஆருடன் இணைந்து எழுதிய வ.கீதா அவர்கள் ஆங்கிலத்தில் 'Soul Force' என்று காந்தியின் அறம் பற்றி ஒரு புத்தகத்தைத் தொகுத்துள்ளார். எப்படிப் பார்த்தாலும் காந்தி சிக்கலான மனிதர்தான். புரிந்துகொள்ள முடியாத மகாத்மாதான். அவரவருக்கு வேண்டிய மகாத்மாவைக் காந்தியிடமிருந்து அவரவர் உருவாக்கிக் கொள்ள முடியும் என்றே தோன்றுகிறது.
'காந்தியின் உடலரசியல்: பிரம்மச்சரியமும்காலனிய எதிர்ப்பும்' நூலின் முன்னுரை (கருப்புப் பிரதிகள் வெளியீடு, 2007)

Comments

Most Popular

மணிபல்லவம் - ஜம்பு கொல பட்டினம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்ககாலத்து நூலாகிய மணிமேகலையிலே, இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப்பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள பழைய பௌத்த நூல்களிலேயும் இலங்கைத்தீவின் வடகோடியில் இருந்த ஜம்புகோல் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. தமிழ் நூலில் கூறப்படும் குறிப்பு களைக் கொண்டும் பாலி மொழி நூல்களில் கூறப்படும் குறிப்புகளைக் கொண்டும் மணிபல்லவமும் ஜம்புகொல பட்டினமும் ஒரே இடம் என்று துணியலாம். பெயர் வேறுபடு வதிலிருந்து இரண்டும் வெவ்வேறிடங்கள் எனக் கருதும்படி இருந்தாலும், இவைகளைப்பற்றிக் கூறப்படும் செய்திகளை உற்றுநோக்கினால், இரண்டும் ஒன்றே என்பது ஐயமற விளங்குகிறது. இதனை ஈண்டு ஆராய்வோம். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலேதான் மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்தது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை கூறுவது காண்க. சோழ நாட்டின் துறைமுகப்பட்டினமாகிய புகார்ப்பட்டினத்தில் இருந்து தெற்கே 30 யோசனை தொலைவில் மணிபல்லவம் இருந்தது (

மனமும் அதன் விளக்கமும் | இன நனவிலி மனம் | பெ. தூரன்

பி ராய்டு என்ற உளவியலார் நனவிலி மனத்தைப் பற்றி ஆராய்ந்து உளப் பகுப்பியல் முறையைத் தோற்றுவித்தார் என்று கண்டோம். உளப்பகுப்பியலின் தந்தை அவரே. அவரோடு ஆட்லரும், யுங் என்பவரும் மாணவராகப் பல ஆண்டுகள் வேலை செய்தனர். பிறகு இருவரும் கொள்கை வேறுபாடுகளால் வேறு வேறாகப் பிரிந்தனர். ஆட்லரின் பிற்காலக் கருத்தைப் பற்றி முன்பே கூறப்பட்டுள்ளது. இங்கு யுங்கின் கொள்கையைச் சுருக்கமாக ஆராய்வோம். நனவிலி மனத்தைப் பிற்காலத்தில் பிராய்டு ‘இத்’ என்றும், அதில் எழும் ஆற்றலை ‘லிபிடோ’ (Libido) என்றும் குறிப்பிட்டார். லிபிடோ பாலியல்பு வாய்ந்தது என்றும், மனக் கோளாறுகளெல்லாம் இது ஒழுங்காக அமையாததால் ஏற்படுகின்றன என்றும், இந்தப் பாலியல்பு குழவிப் பருவ முதற்கொண்டே தொடங்குகிறதென்றும் கருதினார். நனவிலி மனம் குழவிப் பருவத்தில் சிறிதாக இருந்தபோதும், வயது ஆக ஆக அக்குழந்தைக்குத் தடைகளும் விதிகளும் பெருகுகின்ற காரணத்தினால் நனவிலி மனத்தில் பல விதமான இச்சைகளும் ஆர்வங்களும் மிகுதியாகி நனவிலி மனம் விரிவடைகின்றது. அதனால்தான் நனவிலி மனம் நனவு மனத்தினின்றும் வளர்ந்ததேயாகும் என்று பொதுப்படையாகக் கூறுவதுண்டு. இக் கருத்தைப் பல ந

இலங்கைத் தீவில் வருணன் வணக்கம் | மயிலை சீனி. வேங்கடசாமி

பழந்தமிழ் நாட்டிலே நெய்தல் நிலப்பகுதியில் வாழ்ந்த மக்கள் கடல் தெய்வமாகிய வருணனை வழிபட்டார்கள் என்றும் அவ்வருணன் வழிபாடு தமிழ்நாட்டிலிருந்து இலங்கைத் தீவிலும் பரவியிருந்தது என்றும் சென்ற திங்கள் தமிழ்ப் பொழிலில் எழுதியிருந்தோம். இலங்கைத் தீவில் , வருணனைச் சிங்களவர் தமது மொழியில் உபுல்வன் என்று அழைத்தனர் என்றும் , உதகபால வருணன் என்னும் சொல் உபுல்வன் என்று சிங்கள மொழியில் திரிந்து வழங்கிற்று என்றும் எழுதியிருந்தோம். உபுல்வன் என்னும் சிங்கள மொழிச் சொல்லினைப் பாலி மொழியில் உப்பலவண்ணன் என்றும் , வடமொழியில் உத்பலவர்ணன் என்றும் மாற்றிப் பிற்காலத்தவர் வழங்கினார்கள். வழங்கியது மட்டுமல்ல , உபுல்வனை (வருணனை) விஷ்ணுவாகவும் மாற்றிவிட்டார்கள். இது பிற்காலத்தில் உண்டான மாறுபாடு.   ஒரே பொருளுடைய இரண்டு சொற்கள் சேர்ந்தது உதகபால வருணன் என்பது. உதகபாலன் என்றால் நீரை ஆள்பவன் என்பது பொருள். வருணன் என்றாலும் நீர்க்கடவுள் என்பது பொருள். சிங்களவர் முருகனைக் கந்த குமரன் என்றும் கூறுகின்றனர். கந்தன் என்றாலும் முருகன் , குமரன் என்றாலும் முருகன். ஒரே பொருள் உள்ள இரண்டு சொற்களை இணைத்துக் கந்தகுமரன் என்று கூறுவத