Skip to main content

அவரவருக்கு வேண்டிய மகாத்மா | ராமாநுஜம்


சந்நியாசம் ஏற்காமல் ஆதி சங்கரன் அத்வைதம் பேசியிருக்க முடியாது. துறவறம் ஏற்காமல் புத்தன் சாத்தியமில்லை. நிர்வாணத்தைக் கொண்டாடாமல் மகாவீரர் அகிம்சையை முன்நிறுத்தியிருக்க முடியாது. மேற்கத்திய உடையை விட்டெறியாமல் காந்தி மகாத்மாவாகியிருக்க முடியாது. மேற்கத்திய உடையை அணியாமல் அம்பேத்கர் ஜாதி நிறுவனத்திற்கு எதிராகப் போராடி இருக்க முடியாது. கலாசாரத்தில் ஒதுக்கப்பட்ட கறுப்பு நிறத்தைக் கொண்டாடாமல் பெரியாரியம் சாத்தியமில்லை.
இதை வைத்து நாம் சூத்திரங்களை உருவாக்க முடியாது என்றாலும் உள்ளடக்கத்திற்கும், வடிவத்திற்கும் உள்ள இணைவை நாம் போற்ற முடியும். இந்த உள்ளடக்கத்திற்கும் வடிவத்திற்குமான உறவைக் காந்தி ஒரு புதிய தளத்திற்கு எடுத்துச் சென்றார். உடலின் சாத்தியங்களை இதற்குமுன் வரலாற்றில் காணாத அளவிற்கு விரிவுபடுத்தினார்.
அரசியல் போராட்டம் ஆகட்டும், ஆன்மீகச் சிந்தனையாகட்டும், சமூகச் சீர்திருத்தங்கள் ஆகட்டும், அறிவியல் விஞ்ஞான தொழில்நுட்பச் சிந்தனையாகட்டும் எல்லாவற்றிற்கும் அடிப்படையாகத் தன் உடலையே காந்தி மையப்படுத்தினார். காந்தி முன்வைத்த உடல் என்பது மதங்கள் போற்றிய வரையறைகளுக்கு வெளியே இருந்தது. அது காலனியம் முன்வைத்த உடலை நிராகரித்தது. இந்தியத் தேசிய எழுச்சி முன்வைத்த ஆண்- மைய உடலை மறுத்தது. காந்தியின் உடல் வரலாற்றிலிருந்தும், கருத்தாக்கத் தளத்திலிருந்தும் தனி மனிதனின் உடலை விடுதலை செய்ய முயற்சித்தது. காந்தி உடலின் சாத்தியங்களை விரிவுபடுத்த முயற்சித்த அதே வேளையில் அதன் எல்லையும் அவரால் ஏற்றுக்கொள்ள முடிந்தது.
காந்தியின் உடலை நாம் இரண்டு தளங்களில் வைத்துப் புரிந்துகொள்ள முயற்சிப்போம்.
1. சமூக, கலாச்சார அரசியல் தளத்தில் காந்தியின் உடல் (காலனிய எதிர்ப்பும் தேசியக் கட்டமைப்பும்)
2. பிரம்மச்சரிய பரிசோதனைகளில் காந்தியின் உடல்
காந்தியை முழுவதுமாக ஏற்பதும் சாத்தியமில்லை, நிராகரிப்பதும் சாத்தியமில்லை. நேரு, அம்பேத்கர், பெரியார் போன்ற தலைவர்களை ஒரு சாரார் முழுமையாக ஏற்பதும் மற்றொரு சாரார் முழுமையாக நிராகரிப்பதும் சாத்தியப்படுகிறது. காந்தியைப் பொறுத்த மட்டில் இது சாத்தியப்படாமலே போகிறது. காந்தியின் அரசியல் அறத்தைப் போற்றியவர்கள் அவருடைய பிரம்மச்சரியப் பரிசோதனையை ஏற்க மறுத்தார்கள். அவருடைய சமூகப் பார்வையை விமர்சித்தவர்கள் அறத்தை மையமாக வைத்த அவருடைய அரசியலைப் போற்றினார்கள். காந்தியின் மத நல்லிணக்கத்தை ஏற்றுக்கொண்டவர்கள் அவருடைய சாதி நிறுவனத்திற்கு எதிரான கருத்துகளை விமர்சித்தார்கள். மறைந்த எழுத்தாளர் ராஜாராவ் காந்தியைப் பற்றிக் குறிப்பிடும்போது 'இஸ்லாமை எதிர்ப்பதற்காக அவர் இஸ்லாமியர்களை ஆதரித்தார்' என்று எழுதியுள்ளார். தோழர் அ.மார்க்ஸ் அண்மையில் எழுதிய புத்தகத்தில், ‘சாதி நிறுவனத்தால் பயன் அடைந்தவர்களுக்கிடையே காந்தி சனாதன எதிர்ப்புப் பற்றி பேச வேண்டியிருந்தது என்றால் அம்பேத்கர், பெரியார் போன்றவர்கள் சனாதனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் பேச வேண்டியிருந்தது. அதனால் காந்தியின் மொழி, அம்பேத்கர் மற்றும் பெரியார் பேசிய மொழியிலிருந்து வேறுபட்டுத்தான் இருக்கும்என்கிறார். அதே சமயத்தில் வைதீக சனாதனிகளிடமிருந்து காந்தியைப் பிரித்தெடுக்கவும் முயற்சிக்கிறார். பெரியார் பற்றி பல புத்தகங்களைத் தோழர் எஸ். வி. ஆருடன் இணைந்து எழுதிய வ.கீதா அவர்கள் ஆங்கிலத்தில் 'Soul Force' என்று காந்தியின் அறம் பற்றி ஒரு புத்தகத்தைத் தொகுத்துள்ளார். எப்படிப் பார்த்தாலும் காந்தி சிக்கலான மனிதர்தான். புரிந்துகொள்ள முடியாத மகாத்மாதான். அவரவருக்கு வேண்டிய மகாத்மாவைக் காந்தியிடமிருந்து அவரவர் உருவாக்கிக் கொள்ள முடியும் என்றே தோன்றுகிறது.
'காந்தியின் உடலரசியல்: பிரம்மச்சரியமும்காலனிய எதிர்ப்பும்' நூலின் முன்னுரை (கருப்புப் பிரதிகள் வெளியீடு, 2007)

Comments

Most Popular

கு. ப. ராஜகோபாலன் என்கிற முழுமை | க. நா. சுப்ரமண்யம்

கு. ப. ராஜகோபாலனின் கதைகளை , அவை எழுதப்பட்டு சற்றேறக் குறைய ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு இன்று படித்துப் பார்க்கும்போது கூட அவர் லாகவமும் , கதை நடத்தும் திறனும் , உருவ , கருத்து அமைதியுடன் மிகவும் சிறப்பாகவே உள்ளத்தில் தட்டுகின்றன. வாழ்க்கையை முழுப்பார்வையுடன் பார்ப்பது அவர்க்கு மிகவும் சிறிய கதைகளிலும் கூடச் சாத்தியமாக இருந்திருக்கிறது. ஆண் , பெண் உறவுகளை , பால் உணர்ச்சிகளை அப்பட்டமாக , உரக்க , மனத்தையும் கண்ணையும் ஒருங்கே உறுத்துகிற மாதிரிச் சொல்வது இன்று பலருக்கும் கைவந்த கலையாக இருக்கிறது. ஆனால் , அதையே சூக்ஷ்மமாகச் செய்கிற காரியம் , கலையுணர்ச்சியுடன் முழுவதும் சொல்லாமல் சொல்லிவிடுகிற காரியம் கு.ப.ரா . வுக்கு மிகவும் சிறப்பாக கைவந்திருந்ததை இன்று படிக்கும்போதும் உணர முடிகிறது. இந்த மென்மையும் , கலை உணர்ச்சியும் பக்கம் பக்கமாக பச்சையாக எதை எதையோ எழுதுகிற தமிழ் எழுத்தாளர்களுக்கு எட்டாத ஒரு விஷயம். அவர்கள் கு.ப.ரா . விடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். புத்தனுடைய துறவுக்கு அசுவகோஷன் முதல் எத்தனையோ இலக்கியாசிரியர்கள் பலர் காரணங்கள் கண்டு சொல்லிவிட்டார்கள். மூப்பு , நோய் , சாவு...

எழுத்து ஆக்கம் - மயிலை சீனி. வேங்கடசாமி

பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னே மனிதன் பேசக் கற்றுக்கொண்டான். அஃதாவது, தன் எண்ணங்களைப் பேச்சின் மூலமாகப் பிறருக்குத் தெரிவிக்கக் கற்றுக் கொண்டான். மனிதன் கற்றுக்கொண்ட பேச்சு அவனை மிருகத் தன்மையிலிருந்து மனிதத் தன்மைக்கு உயர்த்திவிட்டது. பின்னும், பல காலம் சென்ற பிறகு மனிதன், தன் எண்ணங் களையும் கருத்துக்களையும், எழுத்து மூலமாகப் பிறருக்குத் தெரிவிக்க முயற்சி செய்தான், முயற்சி செய்து அதில் வெற்றி அடைந்தான். எழுத்துக்களைக் கண்டுபிடித்து அதன் மூலமாகத் தன் கருத்துக்களை மற்றவர்களுக்குத் தெரிவிக்கக் கற்றுக்கொண்ட வித்தையானது, மனிதனை மிக உயர்ந்த நாகரிகத்தை அடையச் செய்துவிட்டது. எழுதப் படிக்கக் கற்றுக்கொள்ளாமல், வெறும் பேச்சோடு மட்டும் நின்று விட்டிருந்தால், இப்போது மனிதன் அடைந்திருக்கிற உயர்ந்த நாகரிக நிலையை அடைந்திருக்க முடியாது. எழுத்தைக் கண்டுபிடித்த ஆதிகாலத்து மனிதர், இப்போது உலகத்திலே வழங்குகிற ஒலி எழுத்துக்களைக் கண்டுபிடிக்கவில்லை. அஃதாவது, தனித்தனியாக ஒவ்வொரு ஒலிக்கும் ஒவ்வொரு எழுத்தைக் கண்டுபிடிக்கவில்லை. உருவங்களைச் சித்திரம் வரைவதுபோல் வரைந்து அவற்றின் மூலமாக அக்காலத்து மனிதர் ...

மனமும் அதன் விளக்கமும் | கனவின் பொருள் | பெ. தூரன்

ப ல கனவுகள் சிக்கல் நிறைந்திருக்கின்றன; அவற்றில் தோன்றும் நிகழ்ச்சிகள் மேலாகப் பார்க்கும்போது பொருளற்றவைகளாகவும் இருக்கின்றன. கோ. என்பவர் கண்ட ஒரு கனவை இங்கே ஆராய்வோம். “ஏதோ ஒரு பெரிய கோயில். அங்கே நானும் என் நண்பர்கள் சி. வே. மா. ஆகிய மூவரும் சேர்ந்து ஒருவனைக் கொலை செய்தோம். அவனுடைய மூக்கை மாத்திரம் அறுத்துச் சந்தனத்தில் வைத்துச் சாமிக்கு வைத்தோம். பிணம் வெளியிலேயே கிடந்தது. சி. தான் மூக்கை அறுத்தவர். கடவுளைத் தொழுவதற்காகப் பலர் ஒரு மோட்டார்க் காரில் வந்தார்கள். உடனே நான் பிணத்தைத் துரக்கிக் கோபுரத்தின் மேல் வீசினேன். இதை எனது ஆசிரியர் ஒருவர் பார்த்துக் கொண்டார்.” “நான் ஒடி வந்துவிட்டேன். வழியில் என் நண்பர் வீ. யைச் சந்தித்து வேறொருவனிடம் சைக்கிள் வாங்கி இருவரும் ஏறிக்கொண்டு ஊருக்குச் சென்றோம். வழியில் சி. தம் அண்ணனிடம் ஒன்றும் நடக்காதது போல் வந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கொலை செய்துவிட்டு இவர் இவ்வளவு தாராளமாக வெளியில் நடமாடுகிறாரே என்று வியந்தேன்.” "நாங்கள் ஒரு சத்திரத்தில் புகுந்துகொண்டிருந்தோம். ஆனால் சி. வேறு சில நண்பர்களிடம் சாலையில் சென்றுகொண்டிருந்தார்.” ...