Skip to main content

காந்தி: சத்திய சோதனைக்குப் பின் - 13


(காந்திஜி, தமது சுய சரிதையை 1920-ஆம் ஆண்டு வரையில்தான் எழுதியுள்ளார். அதிலிருந்து அவர் அமரத்துவம் அடைந்தது வரை, மொத்தம் 28 வருட காலத்தில் அவரது வாழ்க்கையிலும், நாட்டு வாழ்விலும் நிகழ்ந்த முக்கியமான சம்பவங்கள் வருடவாரியாக இத்தளத்தில் வெளியாகிறது. சுய சரிதையைப் படித்து முடித்த வாசகர்கள், காந்திஜியின் வாழ்க்கை முழுவதையும் தெரிந்துகொள்ளுவதற்கு உதவியாக இருக்கும் என்ற நோக்கில் இந்தக் குறிப்புகள் மகாத்மா காந்தி நூல்கள் வரிசையில், தொகுதி மூன்றில் சேர்க்கப்பட்டன.)

1936 (வயது 67)

ஜனவரி முதல் வாரத்தில் ஜப்பானியக் கவிஞர் யோனே நோகுச்சி சேவா கிராமத்துக்கு வந்தார். சில வாரங்களுக்குப் பிறகு டாக்டர் தோமிகா கோரா, காந்திஜியை ஜப்பானுக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பதற்கு அங்கே வந்தார்.

கர்ப்பக் கட்டுப்பாடு இயக்கத் தலைவி ஸ்ரீமதி மார்கரட் சாங்கர் ஜனவரிக் கடைசி வாரத்தில் வார்தாவுக்கு வந்து காந்திஜியைப் பார்த்தார். “பெண்களுக்கும் சுதந்திரம் உண்டு என்ற உண்மையைப் பெண்களே உணரும்படி செய்ய என்னால் முடிந்தால் அப்புறம் இந்தியாவில் கர்ப்பக் கட்டுப்பாட்டுப் பிரச்னையே இராது” என்றார் காந்திஜி.

பத்து வாரங்களுக்கும்  மேலாகவே காந்திஜிக்கு உடல் சோர்வு ஏற்பட்டிருந்தது.

மார்ச்சு முதல் வாரத்தில் சாவ்லியில் காந்தி சேவா சங்கத்தின் இரண்டாவது வருடராந்தரக் கூட்டம் நடைபெற்றது. அதற்குத் தலைமை வகித்த காந்திஜி, "காந்தியம் என்று ஒன்று இல்லை. எனக்குப் பின்னால் நான் எந்தப் புதியதோர் சமயத்தையும் விட்டுச்செல்ல விரும்பவில்லை'' என்று கூறினார்.

மார்ச்சு இரண்டாவது வாரத்தில், நீக்ரோ தூது கோஷ்டிக்குப் பர்தோலியில் காந்திஜி இரண்டு மணிநேரம் பேட்டியளித்தார்.

மார்ச்சு முதல் வாரத்தில் லட்சுமணபுரியில் காங்கிரஸ் மகாநாடு நடந்தது. அப்போதுதான் ஐரோப்பாவிலிருந்து திரும்பிவந்த ஜவாஹர்லால் நேரு, அம்மகாநாட்டுக்குத் தலைமை வகித்தார். 1935-ஆம் வருடத்து சட்டம், மக்களின் உரிமைகளை நசுக்கும் அரசியல். அடக்குமுறைக்குத் துணையாகச் சுமத்தப்பட்ட ஒன்று அது எனக் கண்டனம் செய்யப்பட்டது.

மார்ச்சு 22-இல் லட்சுமணபுரியில் அகில இந்திய நூற்போர் சங்கமும், அகில இந்தியக் கிராமக் கைத்தொழில் சங்கமும் நடத்திய கதர், கிராமக் கைத்தொழில் கண்காட்சியைக் காந்திஜி திறந்து வைத்தார்.

காந்திஜி, சேவா கிராமத்துக்கு விஜயம் செய்து, அங்கேயே வாசம் செய்வதற்குத் தாற்காலிகமாக முடிவு செய்தார்.

ஏப்ரல் மாதக் கடைசியில் நாகபுரியில் அகில இந்திய இலக்கிய மகாநாட்டுக்குக் காந்திஜி தலைமை வகித்தார். “என்னிடத்தில் மட்டும் சக்தி இருக்குமென்றால், வகுப்புவாதம், வெறி, துவேஷம் முதலியவற்றை வளர்க்கும் இலக்கியம் முழுவதையுமே சபித்து ஒழித்துவிடுவேன்'' என்றார் காந்திஜி.

ஏப்ரல் 30-ஆம் தேதி அதிகாலையில் மகன்வாடியிலிருந்து சேவா கிராமத்துக்குச் சுமார் 5 மைல் தூரமும் காந்திஜி நடந்தே சென்றார். அவருடைய குடிசை இன்னும் தயாராகவில்லை. ஆகவே, உட்கார்ந்து வேலை செய்வதற்கு மூங்கில் பாய்களைக்கொண்டு மரத்து நிழலில் ஒரு தாற்காலிக இருப்பிடம் தயாரிக்கப்பட்டது. மறுநாள் மாலைப் பிரார்த்தனைக்குப் பிறகு கிராமவாசிகளுக்கு நூல் நூற்பது எப்படி என்பதைக் காட்டினார். டாக்டர் அம்பேத்காருக்குப் பேட்டியளித்தார்.

மே 10-ஆம் தேதி டாக்டர் அன்ஸாரி காலமானார்.

மே மாதம் மூன்றாவது வாரத்தில் மகன்வாடியில் கிராம ஊழியர்களுக்குப் பயிற்சிப் பள்ளியைத் திறந்து வைத்தார்.

ஜூன் மாதத்தில் அப்பாஸ் தயாப்ஜி காலமானார்.

ஆகஸ்டில் காங்கிரஸ், பொதுமக்களுக்கு தேர்தல் வேண்டுகோளை விடுத்தது.

அக்டோபரில் தேசியக் கல்வி மகாநாட்டுக்குக் காந்திஜி தலைமை வகித்தார்.

நவம்பர் முதல் வாரத்தில் அகமதாபாத்தில் குஜராத்தி இலக்கிய மகாநாட்டுக்குத் தலைமை தாங்கினார். ''கோடிக்கணக்கான மக்களோடு பேசக்கூடிய இலக்கியத்தையும், கலையையுமே நான் விரும்புகிறேன். நம்முடைய இலக்கியம், கஷ்டம் தரும் சமாசாரமாக இருக்கிறது'' என்றார் காந்திஜி.

டிசம்பர் கடைசி வாரத்தில் பெயிஸ்பூர் காங்கிரஸின்போது அங்கே கதர், கிராமக் கைத்தொழில் கண்காட்சி நடைபெற்றது. அலங்கார வேலைகள், ஓவியர் நந்தலால் போஸிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. அதைக் காந்திஜி திறந்து வைத்தார். காங்கிரஸ் மகா சபை ஒரு கிராமத்தில் கூடுவது இதுதான் முதல் தடவை. இதில் பணிபுரிந்த தொண்டர்களும் கிராமங்களிலிருந்து திரட்டப்பட்டவர்களே. ஜவாஹர்லால் நேரு மகாநாட்டுக்குத் தலைமை வகித்தார். ஐரோப்பாவில் பாஸிஸ அபாயம் வளருவதையும், ஸ்பெயின் உள்நாட்டுப் போரையும், இந்தியாவுக்கு அரசியல் நிர்ணய சபை வேண்டியதன் அவசியத்தையும், தொழிலாளிகளும் விவசாயிகளும் நல்வாழ்வு வாழ வகை செய்ய வேண்டும் என்பதையும் நேரு தமது தலைமைப் பிரசங்கத்தில் விவரமாக எடுத்துக் கூறினார்.

1937 (வயது 68)

தீண்டாமை ஒழிப்புப் பணிக்காக ஜனவரியில் காந்திஜி திருவாங்கூருக்கு விஜயம் செய்தார். சாலைகளும், கோவில்களும் ஹரி ஜனங்களுக்குத் திறந்து விடப்பட்டன. கோவில்களில் காந்திஜி சொற்பொழிவாற்றினார். திருவனந்தபுரத்திலிருந்து கன்னியாகுமரிக்குச் சென்றார்.

விரும்பினால் விலகிக்கொள்ளும் உரிமையோடு கூடிய டொமினியன் அந்தஸ்து வழங்குவதாக இருந்தால் அதைத் தாம் ஏற்றுக்கொள்ளத் தயார் என்று பிப்ரவரியில் ஸ்ரீ போலக்குக்குக் காந்திஜி எழுதினார்.

பிப்ரவரியில் நடந்த தேர்தல்களில் காங்கிரஸுக்கு அமோக வெற்றி கிடைத்தது. இந்தியாவின் 11 மாகாணங்களில் 8 மாகாணங்களில் காங்கிரஸ், ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கான பலத்தைத் தேர்தல்களில் சம்பாதித்தது.

நிர்வாகப் பொறுப்பை ஏற்பதற்கு அதிகாரம் அளிக்கும் தீர்மானம் ஒன்று மார்ச் மாதத்தில் நடந்த அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், கவர்னர்கள் தங்களுடைய விசேஷ அதிகாரங்களை உபயோகித்துத் தலையிடமாட்டார்கள் என்ற உறுதி ஏற்படும் வரையில் மந்திரிப் பதவிகளைக் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இந்தச் செயல்முறையை காந்திஜியே வகுத்தார். காங்கிரஸின் சட்டசபை நடவடிக்கைகளை மேல்பார்க்கப் பார்லிமென்டரி உப-கமிட்டி அமைக்கப்பட்டது.

ஏப்ரல் மாதத்தில் சென்னையில் ஹிந்தி சாஹித்ய சம்மேளனத்தில் காந்திஜி பேசினார். பாரதீய சாஹித்ய பரீஷத்துக்குத் தலைமை வகித்தார். ''மாகாண மனப்பான்மையையும், குறுகிய புத்தியையும் விட்டொழிக்கும் விஷயமே இது. இதில் கஷ்டங்களே இல்லை. இலக்கியத்தை இலக்கியத்துக்காக மட்டும் நான் விரும்பவில்லை.'' என்றார் காந்திஜி.

ஏப்ரலில், கர்னாடகத்தில் ஹுப்லி கிராமத்தில் காந்திஜி சேவா சங்க வருடாந்தரக் கூட்டத்தில் பேசியபோது, ''சட்ட சபைகளைப் பகிஷ்கரிப்பது, சத்தியத்தைப் போலவும், அகிம்சையைப் போலவும் நிரந்தரமான தத்துவமல்ல. அங்கே நமது சத்தியத்தையும், அகிம்சையையும் நாம் நிலை நிறுத்த வேண்டும்'' என்று கூறினார்.

ஜூலை மாதத்தில் பல மாகாணங்களில் காங்கிரஸ், ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. ''யோக்கியப் பொறுப்பும், தன்னலமின்மையும், உழைப்பும், விழிப்பும் உடைய மந்திரிகளுக்குக் கோடிக்கணக்கான ஏழை மக்களின் உண்மையான நல்வாழ்வுக்காகப் பாடுபடுவதற்கு மிகப்பெரிய சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது'' என்று மகாத்மா சொன்னார்.

மதுவிலக்கு, குடியானவர்களுக்குக் கஷ்ட நிவாரணம், ஆதாரக் கல்வி, சிறைச்சாலைகளைச் சீர்திருத்தும் சாலைகளாக மாற்றுவது ஆகியவை அவசரசமாகச் செய்யவேண்டிய சீர்திருத் தங்கள் என்று காந்திஜி கூறினார்.

அக்டோபர் முதல் தேதியிலிருந்து சேலத்தில் பரீட்சார்த்த மதுவிலக்குத் தொடங்கப்பட்டது.

அக்டோபரில் நடந்த அ. இ. கா. க. கூட்டத்தினிடம் காந்திஜிக்கு அதிருப்தி ஏற்பட்டது. அக்கூட்டத்தில், மைசூர் அடக்குமுறை சம்பந்தமாக வருந்தத்தக்க வார்த்தைகள் அடங்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை "ஹரிஜன்'' பத்திரிகையில் காந்திஜி வன்மையாகக் கண்டித்தார்; ஜவாஹர்லால் நேரு ராஜிநாமாச் செய்துவிட நினைத்தார்.

கல்கத்தாவில் சுபாஷ் சந்திர போஸுடன் காந்திஜி தங்கியிருந்தபோது, ரவீந்திரநாத டாகுர் தாம் நோய்வாய்ப்பட்டிருந்துங்கூடக் காந்திஜியைப் பார்க்க வந்தார்.

அக்டோபர் 17-இல் லட்சுமணபுரியில் நடைபெற்ற அகில இந்திய முஸ்லிம் லீக் மகாநாட்டில், சுதந்திரமே அதன் லட்சியம் என்று தீர்மானிக்கப்பட்டது.

அக்டோபர் 22, 23 தேதிகளில் வார்தாவில் கல்வி மகாநாடு நடைபெற்றது. தலைமை வகித்த காந்திஜி, ஆதாரக் கல்விக் கொள்கையை விளக்கினார்.

நவம்பர் 20-ஆம் தேதி ஹரிஜனில், தொழிலாளர் தகராறுகளிலும், வகுப்புக் கலகங்களிலும் காங்கிரஸ் மந்திரி சபை பலாத்காரத்தைப் பிரயோகித்ததைக் காந்திஜி கண்டனம் செய்தார்.

தேகாரோக்கியத்துக்காக டிசம்பரில் சேவாக் கிராமத்திலிருந்து ஜுஹுவுக்குச் சென்றார்.

டிசம்பரில் அகமதாபாத்தில் சாவர்க்கர் தலைமையில் நடந்த ஹிந்து மகாசபை மகாநாட்டில், பூரண சுயராஜ்யமே அதன் லட்சியம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • (நன்றி: மகாத்மா காந்தி நூல்கள் - தொகுதி மூன்று)

Comments

Most Popular

மணிபல்லவம் - ஜம்பு கொல பட்டினம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்ககாலத்து நூலாகிய மணிமேகலையிலே, இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப்பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள பழைய பௌத்த நூல்களிலேயும் இலங்கைத்தீவின் வடகோடியில் இருந்த ஜம்புகோல் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. தமிழ் நூலில் கூறப்படும் குறிப்பு களைக் கொண்டும் பாலி மொழி நூல்களில் கூறப்படும் குறிப்புகளைக் கொண்டும் மணிபல்லவமும் ஜம்புகொல பட்டினமும் ஒரே இடம் என்று துணியலாம். பெயர் வேறுபடு வதிலிருந்து இரண்டும் வெவ்வேறிடங்கள் எனக் கருதும்படி இருந்தாலும், இவைகளைப்பற்றிக் கூறப்படும் செய்திகளை உற்றுநோக்கினால், இரண்டும் ஒன்றே என்பது ஐயமற விளங்குகிறது. இதனை ஈண்டு ஆராய்வோம். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலேதான் மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்தது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை கூறுவது காண்க. சோழ நாட்டின் துறைமுகப்பட்டினமாகிய புகார்ப்பட்டினத்தில் இருந்து தெற்கே 30 யோசனை தொலைவில் மணிபல்லவம் இருந்தது (

மனமும் அதன் விளக்கமும் | இன நனவிலி மனம் | பெ. தூரன்

பி ராய்டு என்ற உளவியலார் நனவிலி மனத்தைப் பற்றி ஆராய்ந்து உளப் பகுப்பியல் முறையைத் தோற்றுவித்தார் என்று கண்டோம். உளப்பகுப்பியலின் தந்தை அவரே. அவரோடு ஆட்லரும், யுங் என்பவரும் மாணவராகப் பல ஆண்டுகள் வேலை செய்தனர். பிறகு இருவரும் கொள்கை வேறுபாடுகளால் வேறு வேறாகப் பிரிந்தனர். ஆட்லரின் பிற்காலக் கருத்தைப் பற்றி முன்பே கூறப்பட்டுள்ளது. இங்கு யுங்கின் கொள்கையைச் சுருக்கமாக ஆராய்வோம். நனவிலி மனத்தைப் பிற்காலத்தில் பிராய்டு ‘இத்’ என்றும், அதில் எழும் ஆற்றலை ‘லிபிடோ’ (Libido) என்றும் குறிப்பிட்டார். லிபிடோ பாலியல்பு வாய்ந்தது என்றும், மனக் கோளாறுகளெல்லாம் இது ஒழுங்காக அமையாததால் ஏற்படுகின்றன என்றும், இந்தப் பாலியல்பு குழவிப் பருவ முதற்கொண்டே தொடங்குகிறதென்றும் கருதினார். நனவிலி மனம் குழவிப் பருவத்தில் சிறிதாக இருந்தபோதும், வயது ஆக ஆக அக்குழந்தைக்குத் தடைகளும் விதிகளும் பெருகுகின்ற காரணத்தினால் நனவிலி மனத்தில் பல விதமான இச்சைகளும் ஆர்வங்களும் மிகுதியாகி நனவிலி மனம் விரிவடைகின்றது. அதனால்தான் நனவிலி மனம் நனவு மனத்தினின்றும் வளர்ந்ததேயாகும் என்று பொதுப்படையாகக் கூறுவதுண்டு. இக் கருத்தைப் பல ந

இலங்கைத் தீவில் வருணன் வணக்கம் | மயிலை சீனி. வேங்கடசாமி

பழந்தமிழ் நாட்டிலே நெய்தல் நிலப்பகுதியில் வாழ்ந்த மக்கள் கடல் தெய்வமாகிய வருணனை வழிபட்டார்கள் என்றும் அவ்வருணன் வழிபாடு தமிழ்நாட்டிலிருந்து இலங்கைத் தீவிலும் பரவியிருந்தது என்றும் சென்ற திங்கள் தமிழ்ப் பொழிலில் எழுதியிருந்தோம். இலங்கைத் தீவில் , வருணனைச் சிங்களவர் தமது மொழியில் உபுல்வன் என்று அழைத்தனர் என்றும் , உதகபால வருணன் என்னும் சொல் உபுல்வன் என்று சிங்கள மொழியில் திரிந்து வழங்கிற்று என்றும் எழுதியிருந்தோம். உபுல்வன் என்னும் சிங்கள மொழிச் சொல்லினைப் பாலி மொழியில் உப்பலவண்ணன் என்றும் , வடமொழியில் உத்பலவர்ணன் என்றும் மாற்றிப் பிற்காலத்தவர் வழங்கினார்கள். வழங்கியது மட்டுமல்ல , உபுல்வனை (வருணனை) விஷ்ணுவாகவும் மாற்றிவிட்டார்கள். இது பிற்காலத்தில் உண்டான மாறுபாடு.   ஒரே பொருளுடைய இரண்டு சொற்கள் சேர்ந்தது உதகபால வருணன் என்பது. உதகபாலன் என்றால் நீரை ஆள்பவன் என்பது பொருள். வருணன் என்றாலும் நீர்க்கடவுள் என்பது பொருள். சிங்களவர் முருகனைக் கந்த குமரன் என்றும் கூறுகின்றனர். கந்தன் என்றாலும் முருகன் , குமரன் என்றாலும் முருகன். ஒரே பொருள் உள்ள இரண்டு சொற்களை இணைத்துக் கந்தகுமரன் என்று கூறுவத