Skip to main content

இருவரும் வாழ்க - வெ. சாமிநாத சர்மா



கீதையை அருளிய கண்ணனாகக் காந்தியடிகளை நாம் கற்பனை செய்து கொண்டோமானால், அர்ஜுனன் வடிவமாக ஜவஹர் நமது மனக்கண் முன்னர் உடனே தோன்றிவிடுகிறார். வெண்ணெய் திருடி ஆய்ச்சியரை வேடிக்கை காட்டிய கிருஷ்ணனையோ, கள்ள மணம் புரிந்த பார்த்தனையோ நாம் இங்குக் குறிப்பிடுகிறோமில்லை. சில காலம் வரை, அதாவது நமது தேசம் சுதந்திரம் அடையும் வரை, இவர்களை மறந்துவிட்டால்கூட நல்லதுதான். நாடு கொள்ள வேண்டும்மென்ற ஆசை நோய் பற்றி, சுயநலப் புழுவினால் அரிக்கப்பெற்று, ஆங்காங்கு ரத்தக் கறை படிந்திருந்த பாரத சமுதாயத்தைச் சத்தியத்தினாலும், தர்மத்தினாலும், தியாக சிந்தனையினாலும் தட்டி எழுப்பிய கர்ம வீரர்களல்லவா கிருஷ்ணார்ஜுனர்கள்? கிருஷ்ணனுடைய சங்க நாதத்தையும் அர்ஜுனனுடைய காண்டீபத்தின் நாணொலியையும் நாம் கேட்க மறந்துவிட்டோம். அதற்குப் பதிலாக அவர்களைப் படத்திலே, கற்சிலையிலே ஏற்றி தூபதீபங்காட்டித் திருப்தியடைந்துவிடுகிறோம். அவர்களுடைய வீர உணர்ச்சியை நமது ரத்தத்திலே பாய்ச்ச முற்படுகிறோமில்லை. வீழ்ச்சி ஏற்பட்டுவிட்டதில் என்ன ஆச்சரிய மிருக்கிறது?

கடைசி வரை சமாதானத்தை நாடுவோம், ஒத்துழைத்துப் பார்ப்போம் என்ற கருத்துக்கொண்டே கெளரவரிடம் தூது நடந்தான் கண்ணபிரான், முணு முணுத்தான் பாண்டவ வீரன். காந்தி - இர்வின் ஒப்பந்த காலத்தில் இந்தக் காட்சியை அப்படியே கண்டோமில்லையா? காந்தி - இர்வின் சம்பாஷணையைக் கேட்ட செவிகள் ஜவஹரின் முணுமுணுப்பையும் கேட்டன. கண்ணபிரானின் அருள்வலி முன்னர், அர்ஜுனனின் புயவலி பணிந்து நின்றது. காந்தியடிகளின் ஆன்ம சக்தி முன்னர் ஜவஹரின் வீரம் வணக்கம் செலுத்தியது; ஆனால் முணுமுணுப்புடன்தான். கண்ணனின் இனிய தோழன் காண்டீபன். காந்தியடிகளின் கண்ணிலும் இனியவன் ஜவஹர்.

இருவருக்குமுள்ள தொடர்பு சொல்ல முடியாதது, ஆனால், கண்டனுபவிக்கக் கூடியது. கருத்தொருமித்த காதலரிடையே சில சமயங்களில் ஊடல் நிகழ்ந்த போதிலும், இருவர் மனமும் எப்பொழுதும் பேசிக்கொண்டிருக்கிறதல்லவா? இந்தச் சம்பாஷணையை அனுபவிக்கத்தான் முடியுமே தவிர, பிறருக்கு எடுத்துச் சொல்ல முடியாது. அது போன்றதுதான் காந்தி - ஜவஹர் உறவும்.

காந்தியடிகள் எங்கே செல்கிறார். எந்த லட்சியத்தை நாடிச் செல்கிறார் என்பது ஜவஹருக்குச் சில சமயங்களில் தெரிவதில்லை. ஆனால் அவரைப் பின்பற்றிச் செல்வதிலே அபார நம்பிக்கை இருக்கிறது. லட்சியத்தைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆவல். அந்த ஆவலைப் பூர்த்திசெய்து கொள்ளாமலே அந்த லட்சியத்தை நாடிச் செல்லுதல். இதற்கு எத்தகைய மனோ உறுதியும், தியாக புத்தியும் வேண்டும் தெரியுமா? ''பதினான்கு வருஷங்களாக நான் தங்களிடம் நெருங்கிப் பழகிக்கொண்டுவந்த போதிலும், என்னால் அறியக்கூடாத ஒரு தன்மை அல்லது சக்தி தங்களிடம் மறைந்திருக்கிறது. அதை நினைக்க எனக்கு அச்சமாயிருக்கிறது'' என்று காந்தியை பார்த்து ஜவஹர் ஓரிடத்திலே குறிப்பிடுகிறார். ''காந்தியின் தத்துவங்கள் பலருக்குத் தெரியாமலிருக்கலாம். ஆனால் அவரைப் பின்பற்றுதல் எல்லோராலும் முடியும்'' என்று பிறிதோரிடத்தில் கூறுகிறார். கிருஷ்ணன் - அர்ஜுனன் சம்பாஷணைகளில் இந்தக் கருத்துக்கள் தொனிக்கவில்லையா?

காந்தி ஒரு வித்து. அதிலிருந்து தோன்றிய முளை ஜவஹர். காந்தியின் மேல் ஜவஹர் எங்கே? ஜவஹர் தோன்றாவிட்டால், காந்திக்குத்தான் என்ன பெருமை? வித்து, மண்ணிலே இருக்கிறது, அதில் வாழ்க்கையையும் காண்கிறது; தன்னினின்றும் பிறந்த மரத்துக்கும் வாழ்வை நல்கி இன்பம் நுகர்கிறது. வித்தினின்று உண்டான முளையோ, அதனின்று வேறுபடாததாய், ஆனால் அதைக் காட்டிலும் பெரிதாய் வானுற ஓங்கி வளர்ந்து, இருக்க நிழலும், உண்பதற்குப் பழங்களும் அளிக்கிறது. வித்து பெரிதா? மரம் பெரிதா? இந்தக் கேள்வியே தவறு. காந்தியடிகள் மண்ணில் வேலை செய்யும் விவசாயியாக, ஏழை மக்களிலே ஒருவராக இருக்கிறார். அவர்களுடைய ஆசாபாசங்களின் பிரதி பிம்பமாக, சுக துக்கங்களின் வடிவமாக, வாழ்வு தாழ்வுகளின் பிரதிநிதியாக அவர் விளங்குகிறார். தம்மை ஒரு விவசாயி என்று அவர் சொல்லிக்கொள்வதன் ரகசியமும் இதுதான். காந்தி வேறு. இந்தியா வேறு என்று பிரிக்க முடியாது. காந்தியின் அபிலாஷை இந்தியாவின் அபிலாஷை. காந்தியின் உணர்ச்சி இந்தியாவின் உணர்ச்சி. பொதுவாகச் சொல்லும்போது, காந்தி, இந்தியாவின் கண்ணாடி; இந்தியாவின் நாடி ஓட்டத்தை அளந்து கூறும் கருவி.

காந்தி வித்தினின்று தோன்றி விருட்சமாக வளர்ந்த ஜவஹர், பாமர ஜனங்களிடத்திலிருந்து வேறுபட்டவராயிருந்துகொண்டு அவர்களிடத்தில் அன்பு காட்டுகிறார்; அவர்களுக்கு இடமும் உணவும் வழங்க முயல்கிறார்; அதிலே பெருமையும் கொள்கிறார். பாமர ஜனங்களின் உள்ளத்திலே ஒரு சக்தி பொருந்திய மூர்த்தியாகக் கோயில் கொண்டிருக்கிறார்.

காந்தி, நீறுபூத்த நெருப்பு. அதிலே கொழுந்து விட்டெரியும் ஜ்வாலை ஜவஹர். காந்தியடிகளின் எஃகு போன்ற மனோ உறுதியை, ஆளை மயக்கும் ஒரு வித புன்சிரிப்பு கவிந்துகொண்டிருக்கிறது. அவருடைய அன்பான வார்த்தைகளிலே அதிகார தோரணை அடங்கியிருக்கிறது. அவருடைய அடக்கத்திலே எதற்கும் அஞ்சாத வீரம் அடைக்கலம் புகுந்துகொண்டிருக்கிறது. சத்துருக்களின் கோபாவேசமெல்லாம், அவருடைய பணிவிலே கரைந்துவிடுவதை எத்தனை முறை நாம் பார்த்திருக்கிறோம்? இந்த நீறுபூத்த நெருப்புத்தன்மையே இந்தியாவின் நாகரிகம். இதனாலேயே காந்தியடிகள் இந்தியாவாகப் பிரதிபலிக்கிறார். உலகம் அவரை இந்தியாவாகக் கருதுகிறது.

ஜவஹர் ஜ்வாலை, எட்டி நின்றோர்க்கு வெளிச்சம் கொடுக்கிறது; கிட்டச்சென்று தட்டிப் பார்ப்போரைச் சுட்டு விடுகிறது. இந்த ஜ்வாலையின் வெளிச்சத்தினால் நமக்குத் தெரியாத வழிகளெல்லாம் தெரியகின்றன. அவைகளுடே செல்ல வேண்டுமென்ற தைரியம் நமக்கு உண்டாகிறது. நமது தேசத்தின் தாழ்ந்த நிலையை இந்த ஜ்வாலை கொண்டு பார்க்கிறோம். நம்மிடத்திலே ஊறிக் கிடக்கும் கோழைத்தனத்தை இந்த ஜ்வாலை சுட்டெரிக்கிறது. உலகம் இப்பொழுது இந்த ஜ்வாலையின் பிரகாசத்தைக் கொண்டு இந்தியாவைப் பார்க்கத் தொடங்கியிருக்கிறது. நெருப்பினின்று பிறந்த ஜ்வாலைக்குப் பெருமையா? ஜ்வாலையை உண்டாக்கிய நெருப்புக்குப் பெருமையா?

பண்டித மோதிலால் நேரு திரட்டி வைத்த ஏக புத்திரனான தங்கக் கட்டியை, காந்தி என்னும் பொற்கொல்லன், தியாகம் என்னும் தீயிலே வைத்து உருக்கி, ஜவஹர் என்னும் ஆபரணமாகச் செய்து பாரத மாதாவுக்குச் சூட்டிவிட்டான். தாய்க்கு அணி பூட்டிய பொற்கொல்லனுக்குப் பெருமையா? அல்லது அணியாக அமைந்த பொன்னுக்குப் பெருமையா? காந்தி வாழ்க! ஏன்? ஜவஹரை வாழ்விக்க இருவரும் வாழ்க! ஏன்? இந்தியா வாழவேண்டுமல்லவா?


(காந்தியும் ஜவஹரும் நூலிலிருந்து)

Comments

Most Popular

கு. ப. ராஜகோபாலன் என்கிற முழுமை | க. நா. சுப்ரமண்யம்

கு. ப. ராஜகோபாலனின் கதைகளை , அவை எழுதப்பட்டு சற்றேறக் குறைய ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு இன்று படித்துப் பார்க்கும்போது கூட அவர் லாகவமும் , கதை நடத்தும் திறனும் , உருவ , கருத்து அமைதியுடன் மிகவும் சிறப்பாகவே உள்ளத்தில் தட்டுகின்றன. வாழ்க்கையை முழுப்பார்வையுடன் பார்ப்பது அவர்க்கு மிகவும் சிறிய கதைகளிலும் கூடச் சாத்தியமாக இருந்திருக்கிறது. ஆண் , பெண் உறவுகளை , பால் உணர்ச்சிகளை அப்பட்டமாக , உரக்க , மனத்தையும் கண்ணையும் ஒருங்கே உறுத்துகிற மாதிரிச் சொல்வது இன்று பலருக்கும் கைவந்த கலையாக இருக்கிறது. ஆனால் , அதையே சூக்ஷ்மமாகச் செய்கிற காரியம் , கலையுணர்ச்சியுடன் முழுவதும் சொல்லாமல் சொல்லிவிடுகிற காரியம் கு.ப.ரா . வுக்கு மிகவும் சிறப்பாக கைவந்திருந்ததை இன்று படிக்கும்போதும் உணர முடிகிறது. இந்த மென்மையும் , கலை உணர்ச்சியும் பக்கம் பக்கமாக பச்சையாக எதை எதையோ எழுதுகிற தமிழ் எழுத்தாளர்களுக்கு எட்டாத ஒரு விஷயம். அவர்கள் கு.ப.ரா . விடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். புத்தனுடைய துறவுக்கு அசுவகோஷன் முதல் எத்தனையோ இலக்கியாசிரியர்கள் பலர் காரணங்கள் கண்டு சொல்லிவிட்டார்கள். மூப்பு , நோய் , சாவு...

எழுத்து ஆக்கம் - மயிலை சீனி. வேங்கடசாமி

பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னே மனிதன் பேசக் கற்றுக்கொண்டான். அஃதாவது, தன் எண்ணங்களைப் பேச்சின் மூலமாகப் பிறருக்குத் தெரிவிக்கக் கற்றுக் கொண்டான். மனிதன் கற்றுக்கொண்ட பேச்சு அவனை மிருகத் தன்மையிலிருந்து மனிதத் தன்மைக்கு உயர்த்திவிட்டது. பின்னும், பல காலம் சென்ற பிறகு மனிதன், தன் எண்ணங் களையும் கருத்துக்களையும், எழுத்து மூலமாகப் பிறருக்குத் தெரிவிக்க முயற்சி செய்தான், முயற்சி செய்து அதில் வெற்றி அடைந்தான். எழுத்துக்களைக் கண்டுபிடித்து அதன் மூலமாகத் தன் கருத்துக்களை மற்றவர்களுக்குத் தெரிவிக்கக் கற்றுக்கொண்ட வித்தையானது, மனிதனை மிக உயர்ந்த நாகரிகத்தை அடையச் செய்துவிட்டது. எழுதப் படிக்கக் கற்றுக்கொள்ளாமல், வெறும் பேச்சோடு மட்டும் நின்று விட்டிருந்தால், இப்போது மனிதன் அடைந்திருக்கிற உயர்ந்த நாகரிக நிலையை அடைந்திருக்க முடியாது. எழுத்தைக் கண்டுபிடித்த ஆதிகாலத்து மனிதர், இப்போது உலகத்திலே வழங்குகிற ஒலி எழுத்துக்களைக் கண்டுபிடிக்கவில்லை. அஃதாவது, தனித்தனியாக ஒவ்வொரு ஒலிக்கும் ஒவ்வொரு எழுத்தைக் கண்டுபிடிக்கவில்லை. உருவங்களைச் சித்திரம் வரைவதுபோல் வரைந்து அவற்றின் மூலமாக அக்காலத்து மனிதர் ...

‘எழுத்து’ - 119 இதழ்களின் பொருளடக்கம்

எழுத்து 1: ஜனவரி 1959 எழுத்து வளர - தலையங்கம் சாகித்ய அகாடமி தமிழ்ப் பரிசு – க.நா.சு. பெட்டிக்கடை நாரணன் – ந. பிச்சமூர்த்தி கவிதை - மயன் சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்: ஒரு தொகுப்புக்கான சில குறிப்புகள் – க. நா. சுப்ரமண்யம் எழுதுவதெல்லாம்… - சிட்டி தாழை பூத்தது – பெ. கோ. சுந்தர்ராஜன் பாரதிக்குப்பின்-1: டாக்டர் சாமிநாதையர் – க.நா.சு. கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா விண்ணும் மண்ணும் – ந. சிதம்பரசுப்ரமண்யன் இன்றைய தமிழ் இலக்கிய விமர்சன தோரணை – சி. சு. செல்லப்பா வானம் - மயன் கெளமாரி – சாலிவாஹனன் உண்மைதேடியின் அனுபவ இலக்கிய வடிவங்கள் – தி. ஜானகிராமன்   எழுத்து 2: பிப்ரவரி 1959 வாடைக் காற்று - அசுவதி எழுத்தும் அதன் வாசகர்களும் இலக்கியமும் குழுவும் எஸ். வையாபுரிப்பிள்ளை – க. நா. சுப்ரமண்யம் திறனாய்வு - வில்லி அருளும் பொருளும் – ந. சிதம்பர சுப்ரமண்யன் கவி – வேதனை – தி. சோ. வேணுகோபாலன் தர்க்கம் - ஜெயகாந்தன் அன்று வருவாரோ ? – கு. அழகிரிசாமி வெற்றியின் பண்பு - பராங்குசம் தரிசனம் - மயன் கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா ...