Skip to main content

இருவரும் வாழ்க - வெ. சாமிநாத சர்மா



கீதையை அருளிய கண்ணனாகக் காந்தியடிகளை நாம் கற்பனை செய்து கொண்டோமானால், அர்ஜுனன் வடிவமாக ஜவஹர் நமது மனக்கண் முன்னர் உடனே தோன்றிவிடுகிறார். வெண்ணெய் திருடி ஆய்ச்சியரை வேடிக்கை காட்டிய கிருஷ்ணனையோ, கள்ள மணம் புரிந்த பார்த்தனையோ நாம் இங்குக் குறிப்பிடுகிறோமில்லை. சில காலம் வரை, அதாவது நமது தேசம் சுதந்திரம் அடையும் வரை, இவர்களை மறந்துவிட்டால்கூட நல்லதுதான். நாடு கொள்ள வேண்டும்மென்ற ஆசை நோய் பற்றி, சுயநலப் புழுவினால் அரிக்கப்பெற்று, ஆங்காங்கு ரத்தக் கறை படிந்திருந்த பாரத சமுதாயத்தைச் சத்தியத்தினாலும், தர்மத்தினாலும், தியாக சிந்தனையினாலும் தட்டி எழுப்பிய கர்ம வீரர்களல்லவா கிருஷ்ணார்ஜுனர்கள்? கிருஷ்ணனுடைய சங்க நாதத்தையும் அர்ஜுனனுடைய காண்டீபத்தின் நாணொலியையும் நாம் கேட்க மறந்துவிட்டோம். அதற்குப் பதிலாக அவர்களைப் படத்திலே, கற்சிலையிலே ஏற்றி தூபதீபங்காட்டித் திருப்தியடைந்துவிடுகிறோம். அவர்களுடைய வீர உணர்ச்சியை நமது ரத்தத்திலே பாய்ச்ச முற்படுகிறோமில்லை. வீழ்ச்சி ஏற்பட்டுவிட்டதில் என்ன ஆச்சரிய மிருக்கிறது?

கடைசி வரை சமாதானத்தை நாடுவோம், ஒத்துழைத்துப் பார்ப்போம் என்ற கருத்துக்கொண்டே கெளரவரிடம் தூது நடந்தான் கண்ணபிரான், முணு முணுத்தான் பாண்டவ வீரன். காந்தி - இர்வின் ஒப்பந்த காலத்தில் இந்தக் காட்சியை அப்படியே கண்டோமில்லையா? காந்தி - இர்வின் சம்பாஷணையைக் கேட்ட செவிகள் ஜவஹரின் முணுமுணுப்பையும் கேட்டன. கண்ணபிரானின் அருள்வலி முன்னர், அர்ஜுனனின் புயவலி பணிந்து நின்றது. காந்தியடிகளின் ஆன்ம சக்தி முன்னர் ஜவஹரின் வீரம் வணக்கம் செலுத்தியது; ஆனால் முணுமுணுப்புடன்தான். கண்ணனின் இனிய தோழன் காண்டீபன். காந்தியடிகளின் கண்ணிலும் இனியவன் ஜவஹர்.

இருவருக்குமுள்ள தொடர்பு சொல்ல முடியாதது, ஆனால், கண்டனுபவிக்கக் கூடியது. கருத்தொருமித்த காதலரிடையே சில சமயங்களில் ஊடல் நிகழ்ந்த போதிலும், இருவர் மனமும் எப்பொழுதும் பேசிக்கொண்டிருக்கிறதல்லவா? இந்தச் சம்பாஷணையை அனுபவிக்கத்தான் முடியுமே தவிர, பிறருக்கு எடுத்துச் சொல்ல முடியாது. அது போன்றதுதான் காந்தி - ஜவஹர் உறவும்.

காந்தியடிகள் எங்கே செல்கிறார். எந்த லட்சியத்தை நாடிச் செல்கிறார் என்பது ஜவஹருக்குச் சில சமயங்களில் தெரிவதில்லை. ஆனால் அவரைப் பின்பற்றிச் செல்வதிலே அபார நம்பிக்கை இருக்கிறது. லட்சியத்தைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆவல். அந்த ஆவலைப் பூர்த்திசெய்து கொள்ளாமலே அந்த லட்சியத்தை நாடிச் செல்லுதல். இதற்கு எத்தகைய மனோ உறுதியும், தியாக புத்தியும் வேண்டும் தெரியுமா? ''பதினான்கு வருஷங்களாக நான் தங்களிடம் நெருங்கிப் பழகிக்கொண்டுவந்த போதிலும், என்னால் அறியக்கூடாத ஒரு தன்மை அல்லது சக்தி தங்களிடம் மறைந்திருக்கிறது. அதை நினைக்க எனக்கு அச்சமாயிருக்கிறது'' என்று காந்தியை பார்த்து ஜவஹர் ஓரிடத்திலே குறிப்பிடுகிறார். ''காந்தியின் தத்துவங்கள் பலருக்குத் தெரியாமலிருக்கலாம். ஆனால் அவரைப் பின்பற்றுதல் எல்லோராலும் முடியும்'' என்று பிறிதோரிடத்தில் கூறுகிறார். கிருஷ்ணன் - அர்ஜுனன் சம்பாஷணைகளில் இந்தக் கருத்துக்கள் தொனிக்கவில்லையா?

காந்தி ஒரு வித்து. அதிலிருந்து தோன்றிய முளை ஜவஹர். காந்தியின் மேல் ஜவஹர் எங்கே? ஜவஹர் தோன்றாவிட்டால், காந்திக்குத்தான் என்ன பெருமை? வித்து, மண்ணிலே இருக்கிறது, அதில் வாழ்க்கையையும் காண்கிறது; தன்னினின்றும் பிறந்த மரத்துக்கும் வாழ்வை நல்கி இன்பம் நுகர்கிறது. வித்தினின்று உண்டான முளையோ, அதனின்று வேறுபடாததாய், ஆனால் அதைக் காட்டிலும் பெரிதாய் வானுற ஓங்கி வளர்ந்து, இருக்க நிழலும், உண்பதற்குப் பழங்களும் அளிக்கிறது. வித்து பெரிதா? மரம் பெரிதா? இந்தக் கேள்வியே தவறு. காந்தியடிகள் மண்ணில் வேலை செய்யும் விவசாயியாக, ஏழை மக்களிலே ஒருவராக இருக்கிறார். அவர்களுடைய ஆசாபாசங்களின் பிரதி பிம்பமாக, சுக துக்கங்களின் வடிவமாக, வாழ்வு தாழ்வுகளின் பிரதிநிதியாக அவர் விளங்குகிறார். தம்மை ஒரு விவசாயி என்று அவர் சொல்லிக்கொள்வதன் ரகசியமும் இதுதான். காந்தி வேறு. இந்தியா வேறு என்று பிரிக்க முடியாது. காந்தியின் அபிலாஷை இந்தியாவின் அபிலாஷை. காந்தியின் உணர்ச்சி இந்தியாவின் உணர்ச்சி. பொதுவாகச் சொல்லும்போது, காந்தி, இந்தியாவின் கண்ணாடி; இந்தியாவின் நாடி ஓட்டத்தை அளந்து கூறும் கருவி.

காந்தி வித்தினின்று தோன்றி விருட்சமாக வளர்ந்த ஜவஹர், பாமர ஜனங்களிடத்திலிருந்து வேறுபட்டவராயிருந்துகொண்டு அவர்களிடத்தில் அன்பு காட்டுகிறார்; அவர்களுக்கு இடமும் உணவும் வழங்க முயல்கிறார்; அதிலே பெருமையும் கொள்கிறார். பாமர ஜனங்களின் உள்ளத்திலே ஒரு சக்தி பொருந்திய மூர்த்தியாகக் கோயில் கொண்டிருக்கிறார்.

காந்தி, நீறுபூத்த நெருப்பு. அதிலே கொழுந்து விட்டெரியும் ஜ்வாலை ஜவஹர். காந்தியடிகளின் எஃகு போன்ற மனோ உறுதியை, ஆளை மயக்கும் ஒரு வித புன்சிரிப்பு கவிந்துகொண்டிருக்கிறது. அவருடைய அன்பான வார்த்தைகளிலே அதிகார தோரணை அடங்கியிருக்கிறது. அவருடைய அடக்கத்திலே எதற்கும் அஞ்சாத வீரம் அடைக்கலம் புகுந்துகொண்டிருக்கிறது. சத்துருக்களின் கோபாவேசமெல்லாம், அவருடைய பணிவிலே கரைந்துவிடுவதை எத்தனை முறை நாம் பார்த்திருக்கிறோம்? இந்த நீறுபூத்த நெருப்புத்தன்மையே இந்தியாவின் நாகரிகம். இதனாலேயே காந்தியடிகள் இந்தியாவாகப் பிரதிபலிக்கிறார். உலகம் அவரை இந்தியாவாகக் கருதுகிறது.

ஜவஹர் ஜ்வாலை, எட்டி நின்றோர்க்கு வெளிச்சம் கொடுக்கிறது; கிட்டச்சென்று தட்டிப் பார்ப்போரைச் சுட்டு விடுகிறது. இந்த ஜ்வாலையின் வெளிச்சத்தினால் நமக்குத் தெரியாத வழிகளெல்லாம் தெரியகின்றன. அவைகளுடே செல்ல வேண்டுமென்ற தைரியம் நமக்கு உண்டாகிறது. நமது தேசத்தின் தாழ்ந்த நிலையை இந்த ஜ்வாலை கொண்டு பார்க்கிறோம். நம்மிடத்திலே ஊறிக் கிடக்கும் கோழைத்தனத்தை இந்த ஜ்வாலை சுட்டெரிக்கிறது. உலகம் இப்பொழுது இந்த ஜ்வாலையின் பிரகாசத்தைக் கொண்டு இந்தியாவைப் பார்க்கத் தொடங்கியிருக்கிறது. நெருப்பினின்று பிறந்த ஜ்வாலைக்குப் பெருமையா? ஜ்வாலையை உண்டாக்கிய நெருப்புக்குப் பெருமையா?

பண்டித மோதிலால் நேரு திரட்டி வைத்த ஏக புத்திரனான தங்கக் கட்டியை, காந்தி என்னும் பொற்கொல்லன், தியாகம் என்னும் தீயிலே வைத்து உருக்கி, ஜவஹர் என்னும் ஆபரணமாகச் செய்து பாரத மாதாவுக்குச் சூட்டிவிட்டான். தாய்க்கு அணி பூட்டிய பொற்கொல்லனுக்குப் பெருமையா? அல்லது அணியாக அமைந்த பொன்னுக்குப் பெருமையா? காந்தி வாழ்க! ஏன்? ஜவஹரை வாழ்விக்க இருவரும் வாழ்க! ஏன்? இந்தியா வாழவேண்டுமல்லவா?


(காந்தியும் ஜவஹரும் நூலிலிருந்து)

Comments

Most Popular

மனமும் அதன் விளக்கமும் - மனமெனும் மாயம் | பெ. தூரன்

ம னம் என்பதென்ன? அது எங்கே இருக்கிறது? கை, கால், கண், இதயம் என்றால் உடம்பில் உள்ள உறுப்புகள் என்று உடனே தெரிகிறது. அவைகளுக்கு வடிவம் உண்டு. பருமன் உண்டு. ஆதலால் அவைகளை எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மனம் என்பது எது? அதற்கு வடிவம் உண்டா? பருமன் உண்டா? தொட்டுப் பார்த்து அறிந்துகொள்ள முடியுமா? இவ்வாறு எண்ணிப் பார்த்தால் ஒன்றும் விளங்குவதில்லை. இவ்வாறு எண்ணுவதற்கு அந்த மனமே காரணமாக இருக்கிறதென்று தோன்றுகிறது. ஆனால் அது என்ன என்று மட்டும் எளிதில் அறிந்துகொள்ள முடிகிறதில்லை. மனத்திற்கு உருவமில்லை; கன பரிமாணமும் இல்லை. மனம் என்பது தசை, நரம்பு முதலியவைகளால் ஆக்கப்பட்டதன்று. அது சடப் பொருள் அன்று; அது சூக்குமப் பொருள், சடப் பொருள் என்றால் அது உடம்பைச் சேர்ந்த ஒர் உறுப்பாகிவிடும்; எளிதாக அதை அறிந்துகொள்ளவும் முடியும். சிலர் மூளைதான் மனம் என்று தவறாகக் கருதுகிறார்கள். மூளை என்பது உடம்போடு சேர்ந்த ஒரு பருப்பொருளான உறுப்பு. அது மனம் அல்ல. சூக்குமப் பொருளாக மனம் இருக்கிறதென்று மட்டும் நமக்குப் புலனாகிறது. அந்த மனந்தான் ஆசைகள், எண்ணங்கள், நோக்கங்கள், நம்பிக்கைகள் முதலியவற்றிற்கு இடமாயிரு

எழுத்தாளர்களும் மின்னூல்களும்

இது குறைந்தது இரண்டு மின்னூல்களாவது வெளியிட்டுள்ள தமிழ் எழுத்தாளர்களின் அகரவரிசை தொகுப்பு. அவ்வப்போது புதிய இணைப்புகள் சேர்க்கப்படுகின்றன. இணைப்புகளில் அந்தந்த எழுத்தாளர்களின் இனி வரும் நூல்களும் தொகுக்கப்படும். கடைசியாக செப்டம்பர் 03, 2020 அன்று புதுப்பிக்கப்பட்டது.) அசோகமித்திரன் https://amzn.to/3cIKLFC |  https://amzn.to/3avBTS4 |  https://amzn.to/2zqxsLz அம்பை  https://amzn.to/3eIsOsl அருட்செல்வப்பேரரசன்  https://amzn.to/3eOosQr அருண் நரசிம்மன்  https://amzn.to/2VRkUV4 அழ. வள்ளியப்பா  https://amzn.to/2ZcvybO அழகிய பெரியவன்  https://cutt.ly/Lft1hhC அழகுநிலா  https://amzn.to/37bgFc5 அனோஜன் பாலகிருஷ்ணன்  https://amzn.to/2KvZM1n அஜயன் பாலா  https://amzn.to/2xJFC1e அ. கா. பெருமாள்  https://cutt.ly/pfs2w5j அ. வெண்ணிலா  https://cutt.ly/9fhYybK ஆரணி குப்புசாமி முதலியார்  https://amzn.to/2V1OWWD ஆ. இரா. வேங்கடாசலபதி  https://amzn.to/2RZQrD0 ஆ. சிவசுப்பிரமணியன் https://amzn.to/2xHVVvp ஆத்மார்த்தி  https://amzn.to/3eOnx2r ஆனந்த்  https://cutt.ly/LaTpEs7 ஆர். சிவகும

பாண்டியர் நிறுவிய தமிழ்ச் சங்கம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்க காலத்திலே, மதுரை மாநகரத்திலே பாண்டிய மன்னர் மூன்று தமிழ்ச் சங்கங்களை நிறுவித் தமிழை ஆராய்ந்தார்கள் என்று இறையனார் அகப்பொருள் உரை முதலிய நூல்கள் கூறுகின்றன. அச்சங்கங்களில் இயல், இசை, நாடகம், என்னும் முத்தமிழ்கள் ஆராயப்பட்டன. பத்துப் பாட்டு, எட்டுத் தொகை முதலிய செய்யுள்கள் கடைச் சங்கப் புலவர்களால் பாடப்பட்டன. கடைச் சங்கம் கி.பி. 300க்கு முன்பு இருந்தது என்று சரித்திரம் கூறுகிறது. ஆனால், இக்காலத்தில் சிலர், தமிழ் வரலாற்றினையும், நாட்டு வரலாற்றினையும் நேர்மையாகவும் சரியாகவும் ஆராய்ந்து பாராமல், தமிழ்ச் சங்கம் கி.பி. 5ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டது என்றும், அந்தத் தமிழ்ச் சங்கத்தில் தொல்காப்பியம் தோன்றியது என்றும் கூறுகின்றனர்; எழுதுகின்றனர். இவ்வாறு பிழைபட்ட ஆராய்ச்சியைக் கூறுகிறவர்களில் முதன்மை யானவர் அண்மையில் காலஞ்சென்ற திரு. எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்கள். வையாபுரிப் பிள்ளையவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழாராய்ச்சித் துறைத் தலைவராக இருந்தபடியால், அவர் கூறுவன எல்லாம் உண்மை என்று பாமர மக்கள் நினைக்கிறார்கள். பாமர மக்கள் மட்டும் அல்லாமல் படித்தவர்கள் கூட, ஆராய்ந்து பார்த்