Skip to main content

காந்தி: சத்திய சோதனைக்குப் பின் - 6


(காந்திஜி, தமது சுய சரிதையை 1920-ஆம் ஆண்டு வரையில்தான் எழுதியுள்ளார். அதிலிருந்து அவர் அமரத்துவம் அடைந்தது வரை, மொத்தம் 28 வருட காலத்தில் அவரது வாழ்க்கையிலும், நாட்டு வாழ்விலும் நிகழ்ந்த முக்கியமான சம்பவங்கள் வருடவாரியாக இத்தளத்தில் வெளியாகிறது. சுய சரிதையைப் படித்து முடித்த வாசகர்கள், காந்திஜியின் வாழ்க்கை முழுவதையும் தெரிந்துகொள்ளுவதற்கு உதவியாக இருக்கும் என்ற நோக்கில் இந்தக் குறிப்புகள் மகாத்மா காந்தி நூல்கள் வரிசையில், தொகுதி மூன்றில் சேர்க்கப்பட்டன.)


1925 (வயது 56)

பெல்காம் காங்கிரஸுக்குப் பிறகு கத்தியவார், மத்திய இந்தியா, வங்காளம், மலபார், திருவாங்கூர் ஆகிய பகுதிகளில் காந்திஜி நீண்ட பிரயாணம் செய்தார். மார்ச்சு-ஏப்ரலில் தென் இந்திய விஜயம் நிகழ்ந்தது. வட இந்தியச் சுற்றுப் பிரயாணத்தை முடித்துக்கொண்டு, மார்ச்சு 7-ஆம் தேதி சென்னைக்கு வந்து, 9-ம் தேதி திருவாங்கூரிலுள்ள வைக்கத்துக்குச் சென்றார். அங்கே அதற்கு ஒரு வருஷ காலத்துக்கு முன்பிருந்தே சத்தியாக்கிரகம் தொடங்கி நடைபெற்று வந்தது. அதற்குக் காந்திஜியே ஆலோசனை கூறினார். தீண்டாமையின் கொடுமையை முதல் முதலில் இந்தியாவுக்குத் தெள்ளத்தெளிவாக எடுத்துக் காட்டியது வைக்கம் சத்தியாக்கிரகமே. வைக்கத்திலுள்ள ஒரு பொதுப் பாதையில் நடந்து செல்லத் தீண்டாதார் அனுமதிக்கப்படவில்லை. இதை எதிர்த்துச் சத்தியாக்கிரகம் நடைபெற்றபோது, வைதிக சமூகத்துக்குச் சமஸ்தான சர்க்கார் போலீஸ் உதவி அளித்தது. காந்திஜி அங்கே சென்றது, பிரச்னை தீருவதற்கு உதவி புரிந்தது. அந்தச் சமயத்தில் காந்திஜி திருவனந்தபுரத்துக்கும் கன்னியாகுமரிக்கும் விஜயம் செய்தார்.

அந்த அழகுமிக்க நாடு காந்திஜியின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. அங்கே ஆபரணங்களின்றி, தூய வெள்ளை உடையணிந்து வாழும் பெண்களை அவர் பாராட்டினார். ''... அஸ்ஸாமைத் தவிர, இந்தியாவில் வேறு எங்கும் மலபார் மாதர்களைப் போல எளிமையாகவும், லாகவமாகவும் உடை உடுத்துபவர்களை நான் பார்த்ததில்லை. தங்கள் புடவைகளுக்குக் கரை இருக்க வேண்டுமென்றுகூட அவர்கள் விரும்பவில்லை. புடவையின் நீளமோ நான்கு கெஜங்கள் தான். கிழக்குக் கரையில் வசிக்கும் தமிழ்ச் சகோதரிகளுக்கோ, ஏறக்குறையப் பத்துக் கெஜத்தில் கெட்டிச் சாயப்புடவைகளாக வேண்டியிருக்கிறது. மலையாள மாதர்கள் எனக்குச் சீதையை ஞாபகப்படுத்தினார்கள். சீதை, தன் அழகிய வெறுங்கால்களால் நடந்து சென்று இந்தியாவின் வயல்களையும், வனங்களையும் புனிதப்படுத்தியபோது இப்படித் தான் உடை உடுத்தியிருந்திருக்க வேண்டும்'' என்று காந்திஜி எழுதினார். மலையாளப் பெண்களைப்போல அவ்வளவு அதிகச் சுதந்திரத்தோடு வாழும் பெண்கள் இந்தியாவில் கிடையாது என்றும் கூறினார்.

தென் இந்தியாவிலிருந்து காந்திஜி கல்கத்தாவுக்குச் சென்றார். 'ராட்டையின் பொருளாதார, ஆத்மிக மதிப்பைப் பற்றி ரோட்டரி சங்கத்தில் சொற்பொழிவாற்றினார்
.
மே, 29-ஆம் தேதி சாந்திநிகேதனுக்குச் சென்று டாகுரைச் சந்தித்தார்.

ஜூன் 16-இல் தாஸ் காலமானதற்காகக் குல்னாவில் காந்திஜி உருக்கமான பிரசங்கம் செய்தார். வங்காளத்தில் தங்கும் காலத்தை அதிகப்படுத்தினார். தாஸின் வீட்டைப் பெண்களுக்கும் குழந்தைகளுக்குமான ஆஸ்பத்திரியாக மாற்றுவதற்குப் பத்து லக்ஷ ரூபாய் வசூலித்தார்.

செப்டம்பர் 22-இல் பாட்னாவில் கூடிய . .கா.. கூட்டம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி அகில பாரத சர்க்கா சங்கத்தை ஸ்தாபித்தது. கையினால் நூற்பதையும், கதரையும் அபிவிருத்தி செய்வதற்காகக் காங்கிரஸின் ஓர் அங்கமாக இது நிறுவப்பட்டது. இதற்குப் பிரதான ஆதரவாளர் காந்திஜி.

ஆசிரமத்தில் சில குறைகள் இருப்பதைக் காந்திஜி அறிந்தார். இதற்காக நவம்பர் 24-இல் ஏழு நாள் உண்ணாவிரதத்தை மேற்கொண்டார்.

டிசம்பர் 26-இல் கான்பூரில் காங்கிரஸ் மகாநாடு நடைபெற்றது. ஸ்ரீமதி சரோஜினி நாயுடு தலைமை வகித்தார். காந்திஜி தமது ஐந்தாண்டு வேலையை விமர்சனம் செய்து ஐந்து நிமிஷம் நேரம் பேசினார்.

"மக்களிடத்தில் துடிப்பும் ஆவேசமும் இருக்குமென்றால், நான் இன்றே சட்டமறுப்பு இயக்கத்தை ஆரம்பித்துவிடுவேன்" என்று சொன்னார். அரசியல் மெளனம் பூணுவதற்குப் பிரதிக்ஞை செய்துகொண்டார்.

காங்கிரஸ் மகா சபைக் கூட்டம், . . கா. . கூட்டம் ஆகியவற்றில் ஹிந்துஸ்தானி மொழியை உபயோகிப்பது என்று தீர்மானம் ஆயிற்று. வெளிநாடுகளில் இந்தியர்களின் நலன்களைக் கவனித்துக்கொள்ளுவதற்காக வெளிநாட்டு இலாகாக்களைத் திறக்க . . கா. கமிட்டிக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது.

1926 (வயது 57)

சீன மாணவர்களின் அழைப்பின் பேரில் காந்திஜி சீனாவுக்குப் போக நினைத்தார்; தமது சாத்விக எதிர்ப்பு முறைகளை அங்கே பரப்புவதற்கும் உத்தேசித்தார். ஆனால், இந்தியாவில் அவருக்கு இருந்த வேலைகள் சீன விஜயத்துக்கு அவகாசமில்லாமல் செய்துவிட்டன.

டிசம்பர் 26-இல் கெளஹத்திக் காங்கிரஸ், ஸ்ரீனிவாச ஐயங்கார் தலைமையில் நடைபெற்றது. நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் கிடந்த சுவாமி சிரத்தானந்தரை ஒரு முஸ்லிம் சுட்டுக்கொன்றதாகச் செய்தி வெளியாயிற்று. அவரது மரணத்துக்காகத் துக்கம் தெரிவிக்கும் தீர்மானம் ஒன்று, காங்கிரஸில் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தைக் கொண்டுவந்தவர் காந்திஜி; ஆமோதித்தவர் முகமது அலி. சுதந்திரத் தீர்மானமும் கொண்டுவரப்பட்டது. இதைக் காந்திஜி எதிர்த்தார். காந்திஜியின் அரசியல் மெளனப் பிரதிக்ஞை கைவிடப்பட்டது.
  • (நன்றி: மகாத்மா காந்தி நூல்கள் - தொகுதி மூன்று)

Comments

Most Popular

கு. ப. ராஜகோபாலன் என்கிற முழுமை | க. நா. சுப்ரமண்யம்

கு. ப. ராஜகோபாலனின் கதைகளை , அவை எழுதப்பட்டு சற்றேறக் குறைய ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு இன்று படித்துப் பார்க்கும்போது கூட அவர் லாகவமும் , கதை நடத்தும் திறனும் , உருவ , கருத்து அமைதியுடன் மிகவும் சிறப்பாகவே உள்ளத்தில் தட்டுகின்றன. வாழ்க்கையை முழுப்பார்வையுடன் பார்ப்பது அவர்க்கு மிகவும் சிறிய கதைகளிலும் கூடச் சாத்தியமாக இருந்திருக்கிறது. ஆண் , பெண் உறவுகளை , பால் உணர்ச்சிகளை அப்பட்டமாக , உரக்க , மனத்தையும் கண்ணையும் ஒருங்கே உறுத்துகிற மாதிரிச் சொல்வது இன்று பலருக்கும் கைவந்த கலையாக இருக்கிறது. ஆனால் , அதையே சூக்ஷ்மமாகச் செய்கிற காரியம் , கலையுணர்ச்சியுடன் முழுவதும் சொல்லாமல் சொல்லிவிடுகிற காரியம் கு.ப.ரா . வுக்கு மிகவும் சிறப்பாக கைவந்திருந்ததை இன்று படிக்கும்போதும் உணர முடிகிறது. இந்த மென்மையும் , கலை உணர்ச்சியும் பக்கம் பக்கமாக பச்சையாக எதை எதையோ எழுதுகிற தமிழ் எழுத்தாளர்களுக்கு எட்டாத ஒரு விஷயம். அவர்கள் கு.ப.ரா . விடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். புத்தனுடைய துறவுக்கு அசுவகோஷன் முதல் எத்தனையோ இலக்கியாசிரியர்கள் பலர் காரணங்கள் கண்டு சொல்லிவிட்டார்கள். மூப்பு , நோய் , சாவு...

எழுத்து ஆக்கம் - மயிலை சீனி. வேங்கடசாமி

பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னே மனிதன் பேசக் கற்றுக்கொண்டான். அஃதாவது, தன் எண்ணங்களைப் பேச்சின் மூலமாகப் பிறருக்குத் தெரிவிக்கக் கற்றுக் கொண்டான். மனிதன் கற்றுக்கொண்ட பேச்சு அவனை மிருகத் தன்மையிலிருந்து மனிதத் தன்மைக்கு உயர்த்திவிட்டது. பின்னும், பல காலம் சென்ற பிறகு மனிதன், தன் எண்ணங் களையும் கருத்துக்களையும், எழுத்து மூலமாகப் பிறருக்குத் தெரிவிக்க முயற்சி செய்தான், முயற்சி செய்து அதில் வெற்றி அடைந்தான். எழுத்துக்களைக் கண்டுபிடித்து அதன் மூலமாகத் தன் கருத்துக்களை மற்றவர்களுக்குத் தெரிவிக்கக் கற்றுக்கொண்ட வித்தையானது, மனிதனை மிக உயர்ந்த நாகரிகத்தை அடையச் செய்துவிட்டது. எழுதப் படிக்கக் கற்றுக்கொள்ளாமல், வெறும் பேச்சோடு மட்டும் நின்று விட்டிருந்தால், இப்போது மனிதன் அடைந்திருக்கிற உயர்ந்த நாகரிக நிலையை அடைந்திருக்க முடியாது. எழுத்தைக் கண்டுபிடித்த ஆதிகாலத்து மனிதர், இப்போது உலகத்திலே வழங்குகிற ஒலி எழுத்துக்களைக் கண்டுபிடிக்கவில்லை. அஃதாவது, தனித்தனியாக ஒவ்வொரு ஒலிக்கும் ஒவ்வொரு எழுத்தைக் கண்டுபிடிக்கவில்லை. உருவங்களைச் சித்திரம் வரைவதுபோல் வரைந்து அவற்றின் மூலமாக அக்காலத்து மனிதர் ...

‘எழுத்து’ - 119 இதழ்களின் பொருளடக்கம்

எழுத்து 1: ஜனவரி 1959 எழுத்து வளர - தலையங்கம் சாகித்ய அகாடமி தமிழ்ப் பரிசு – க.நா.சு. பெட்டிக்கடை நாரணன் – ந. பிச்சமூர்த்தி கவிதை - மயன் சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்: ஒரு தொகுப்புக்கான சில குறிப்புகள் – க. நா. சுப்ரமண்யம் எழுதுவதெல்லாம்… - சிட்டி தாழை பூத்தது – பெ. கோ. சுந்தர்ராஜன் பாரதிக்குப்பின்-1: டாக்டர் சாமிநாதையர் – க.நா.சு. கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா விண்ணும் மண்ணும் – ந. சிதம்பரசுப்ரமண்யன் இன்றைய தமிழ் இலக்கிய விமர்சன தோரணை – சி. சு. செல்லப்பா வானம் - மயன் கெளமாரி – சாலிவாஹனன் உண்மைதேடியின் அனுபவ இலக்கிய வடிவங்கள் – தி. ஜானகிராமன்   எழுத்து 2: பிப்ரவரி 1959 வாடைக் காற்று - அசுவதி எழுத்தும் அதன் வாசகர்களும் இலக்கியமும் குழுவும் எஸ். வையாபுரிப்பிள்ளை – க. நா. சுப்ரமண்யம் திறனாய்வு - வில்லி அருளும் பொருளும் – ந. சிதம்பர சுப்ரமண்யன் கவி – வேதனை – தி. சோ. வேணுகோபாலன் தர்க்கம் - ஜெயகாந்தன் அன்று வருவாரோ ? – கு. அழகிரிசாமி வெற்றியின் பண்பு - பராங்குசம் தரிசனம் - மயன் கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா ...