Skip to main content

காந்தி: சத்திய சோதனைக்குப் பின் - 3



(காந்திஜி, தமது சுய சரிதையை 1920-ஆம் ஆண்டு வரையில்தான் எழுதியுள்ளார். அதிலிருந்து அவர் அமரத்துவம் அடைந்தது வரை, மொத்தம் 28 வருட காலத்தில் அவரது வாழ்க்கையிலும், நாட்டு வாழ்விலும் நிகழ்ந்த முக்கியமான சம்பவங்கள் வருடவாரியாக இத்தளத்தில் வெளியாகிறது. சுய சரிதையைப் படித்து முடித்த வாசகர்கள், காந்திஜியின் வாழ்க்கை முழுவதையும் தெரிந்துகொள்ளுவதற்கு உதவியாக இருக்கும் என்ற நோக்கில் இந்தக் குறிப்புகள் மகாத்மா காந்தி நூல்கள் வரிசையில், தொகுதி மூன்றில் சேர்க்கப்பட்டன.)

1922 (வயது) 53

1921, டிசம்பர் மாதத்திலும், 1922, ஜனவரி மாதத்திலும் சுமார் 30,000 பேர் தண்டிக்கப்பட்டனர். ஜனவரி 12-இல் வரிகொடா இயக்கத்தைக் குண்டூர் பிரகடனம் செய்தது.

சமரசத்தை உண்டுபண்ண ஜனவரி 14-இலிருந்து 16 வரை சர்வகட்சி மகாநாடு கூட்டப்பட்டது. அம் முயற்சி தோற்றது.

பிப்ரவரி முதல் தேதி காந்திஜி வைசிராய்க்குக் கடிதம் எழுதி, தமது சொந்த மேற்பார்வையில் பர்டோலியில் சட்ட மறுப்பைத் தொடங்க உத்தேசித்திருப்பதைத் தெரிவித்தார். அடக்குமுறைக் கொள்கை நியாயமானதே என்று கூறி சர்க்காரிடமிருந்து உடனடியாகப் பதில் வந்தது.

பிப்ரவரி 5-ஆம் தேதி ஐக்கிய மாகாணங்களிலுள்ள செளரி செளராவில் 21 கான்ஸ்டபிள்களையும் சப்-இன்ஸ்பெக்டரையும் ஜனக்கூட்டம் போலீஸ் ஸ்டேஷனுக்குள் தள்ளி நெருப்பு வைத்துக் கொளுத்திவிட்டது.

பிப்ரவரி 12-இல் பர்டோலியில் காரியக் கமிட்டி கூடியது. சட்ட மறுப்பு இயக்கம் நிறுத்திவைக்கப்பட்டது. காந்திஜி 5-நாள் உண்ணாவிரதத்தை மேற்கொண்டார்.

பிப்ரவரி 24, 25-ஆம் தேதிகளில் டில்லியில் நடைபெற்ற . . கா. . கூட்டத்தில், தனி நபர் சட்ட மறுப்பை அனுமதித்துப் பர்டோலித் தீர்மானம் ஊர்ஜிதம் செய்யப்பட்டது.

1920, நவம்பர் 10-ஆம் தேதியிலிருந்து காந்திஜி தாம் கைது செய்யப்படுவதை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார். மார்ச்சு 9-ஆம் தேதி அவர், ''ரத்த ஆறு ஓடும்படி சர்க்கார் செய்தாலும், அது என்னைப் பயமுறுத்த முடியாது'' என்று எழுதினார். தாம் கைது செய்யப்படுவதற்காக ஹர்த்தாலோ, ஆர்ப்பாட்டங்களோ செய்யக்கூடாது என்றும், நிர்மாணத் திட்டத்தை நிறைவேற்றிக்கொண்டு சட்ட மறுப்பு இயக்கத்தைப் பலப்படுத்த வேண்டும் என்றும் மக்களுக்குக் கோரிக்கை விடுத்தார்.

'எங் இந்தியா'வில் வெளியான மூன்று கட்டுரைகளுக்காக ராஜத்துவேஷக் குற்றம் சாட்டப்பட்டுக் காந்திஜியும், சங்கர்லால் பாங்கரும் மார்ச்சு 10-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். மார்ச்சு 18-இல் அகமதாபாத்தில் மாபெரும் விசாரணை ஆரம்பமாயிற்று. குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்ட பின் காந்திஜி குற்றத்தை ஒப்புக்கொண்டு ஒரு வாக்குமூலம் கொடுத்தார். அதன் பீடிகையில், “எங் இந்தியாவுடன் தாம் தொடர்புகொள்ளுவதற்கு முன்பே இன்றைய அரசாங்கத்திடம் விசுவாசமின்மை ஏற்படப் பிரசாரம் செய்யத் தொடங்கிவிட்டதாகக் காந்திஜி கூறினார். சென்னை, பம்பாய், சௌரி சௌரா ஆகிய இடங்களில் நடைபெற்ற சம்பவங்களுக்குத் தாமே முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். ''நான் நெருப்போடு விளையாடிக்கொண்டிருக்கிறேன் என்பதை அறிவேன். இன்னும் அதைத்தான் செய்வேன். நீதிபதியவர்களே, நீங்கள் செய்யக்கூடிய ஒரே காரியம் என்னவென்றால், உங்கள் பதவியை ராஜிநாமாச் செய்துவிட வேண்டும்; அல்லது எனக்குக் கடுமையான தண்டனை விதிக்க வேண்டும்'' என்றார் காந்திஜி.

நீதிபதி புரூம்பீல்ட், காந்திஜிக்கு ஆறு வருடச் சிறைவாச தண்டனை விதித்து, ''உங்களை ஸ்ரீ திலகரோடு ஒன்றாக வைத்து எண்ணுவதைச் சரியல்ல என நீங்கள் நினைக்கமாட்டீர்கள் என்று கருதுகிறேன்'' என்றார். தம்முடைய பெயரை லோக மான்யருடன் தொடர்புபடுத்துவதைப் பெரிய கெளரவம் என்று தாம் கருதுவதாகக் கூறி, நீதிபதிக்குக் காந்திஜி நன்றி தெரிவித்தார். மக்கள் அமைதியாக இருந்து நிர்மாணத் திட்டத்தில் முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டும் என்று ஸ்ரீமதி கஸ்தூரிபாய் காந்தி வற்புறுத்தினார்.

1922-இலிருந்து 1924 வரை சிறைவாசம் செய்தபோது தென்னாப்பிரிக்கச் சத்தியாக்கிரகத்தின் முதல் முப்பது அத்தியாயங்களை எழுதினார். சத்திய சோதனையின் வரலாற்றை (சுயசரிதையை)யும் காந்திஜி எழுதத் தொடங்கினார். தம்மோடு இருந்த ஓர் அரசியல் கைதியை எழுதும்படி சொல்லி, தாம் குஜராத்தி மொழியில் சொல்லிக்கொண்டு வந்தார். சிறையில் இருந்த போதும், வெளியே வந்த பிறகும் எழுதப்பட்ட சுயசரிதை "நவ ஜீவன்'' பத்திரிகையில் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டது. இதை மகாதேவ தேசாயும், பியாரிலால் நய்யாரும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தனர். அதைக் காந்திஜி கவனமாகப் பரிசீலனை செய்தார். ஆங்கில மொழிபெயர்ப்புக்கு இறுதி வடிவம் கொடுப்பதில் மீரா பென் (குமாரி ஸ்லேடு) உதவி புரிந்தார்.

சிறையிலிருந்து விடுக்கப்பட்ட ஒரே செய்தி, ''அமைதி, அகிம்சை, கஷ்டப்படுதல் '' என்பதாகும்.

1922-நவம்பர் கடைசிவாக்கில் கெமால் பாஷா துருக்கியில் ஆட்சி நிர்வாகத்தை எடுத்துக்கொண்டார். துருக்கி சுல்தான் பிரிட்டிஷ் கப்பலில் மால்டாவுக்கு ஓடினார். கிலாபத் பிரச்னை எதிர்பாராத விதமாக முடிவடைந்தது.

டிசம்பரில் கயாவில் கூடிய காங்கிரஸ் மகாநாடு காந்திஜியிடமும் ஒத்துழையாமையிடமும் விசுவாசம் தெரிவித்தது. சட்டசபைகளில் பங்கெடுத்துக்கொள்ளுவதை எதிர்த்து 1740 வோட்டுகளும், ஆதரித்து 890 வோட்டுகளும் கிடைக்கவே அத் தீர்மானம் தோல்வியடைந்தது. முதலாவது கதர்க் கண்காட்சி அங்கே நடைபெற்றது. மகாநாட்டின் முடிவில் பிரிட்டிஷ் பத்திரிகைகளும், ஆங்கிலோ - இந்தியப் பத்திரிகைகளும் பொது ஜன இயக்கத்தின் முன்னேற்றத்தைக் கண்டு ஆச்சரியமும் ஏமாற்றமும் தெரிவித்தன.
  • (நன்றி: மகாத்மா காந்தி நூல்கள் - தொகுதி மூன்று)

Comments

Most Popular

மனமும் அதன் விளக்கமும் - மனமெனும் மாயம் | பெ. தூரன்

ம னம் என்பதென்ன? அது எங்கே இருக்கிறது? கை, கால், கண், இதயம் என்றால் உடம்பில் உள்ள உறுப்புகள் என்று உடனே தெரிகிறது. அவைகளுக்கு வடிவம் உண்டு. பருமன் உண்டு. ஆதலால் அவைகளை எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மனம் என்பது எது? அதற்கு வடிவம் உண்டா? பருமன் உண்டா? தொட்டுப் பார்த்து அறிந்துகொள்ள முடியுமா? இவ்வாறு எண்ணிப் பார்த்தால் ஒன்றும் விளங்குவதில்லை. இவ்வாறு எண்ணுவதற்கு அந்த மனமே காரணமாக இருக்கிறதென்று தோன்றுகிறது. ஆனால் அது என்ன என்று மட்டும் எளிதில் அறிந்துகொள்ள முடிகிறதில்லை. மனத்திற்கு உருவமில்லை; கன பரிமாணமும் இல்லை. மனம் என்பது தசை, நரம்பு முதலியவைகளால் ஆக்கப்பட்டதன்று. அது சடப் பொருள் அன்று; அது சூக்குமப் பொருள், சடப் பொருள் என்றால் அது உடம்பைச் சேர்ந்த ஒர் உறுப்பாகிவிடும்; எளிதாக அதை அறிந்துகொள்ளவும் முடியும். சிலர் மூளைதான் மனம் என்று தவறாகக் கருதுகிறார்கள். மூளை என்பது உடம்போடு சேர்ந்த ஒரு பருப்பொருளான உறுப்பு. அது மனம் அல்ல. சூக்குமப் பொருளாக மனம் இருக்கிறதென்று மட்டும் நமக்குப் புலனாகிறது. அந்த மனந்தான் ஆசைகள், எண்ணங்கள், நோக்கங்கள், நம்பிக்கைகள் முதலியவற்றிற்கு இடமாயிரு...

மனமும் அதன் விளக்கமும் | கனவின் பொருள் | பெ. தூரன்

ப ல கனவுகள் சிக்கல் நிறைந்திருக்கின்றன; அவற்றில் தோன்றும் நிகழ்ச்சிகள் மேலாகப் பார்க்கும்போது பொருளற்றவைகளாகவும் இருக்கின்றன. கோ. என்பவர் கண்ட ஒரு கனவை இங்கே ஆராய்வோம். “ஏதோ ஒரு பெரிய கோயில். அங்கே நானும் என் நண்பர்கள் சி. வே. மா. ஆகிய மூவரும் சேர்ந்து ஒருவனைக் கொலை செய்தோம். அவனுடைய மூக்கை மாத்திரம் அறுத்துச் சந்தனத்தில் வைத்துச் சாமிக்கு வைத்தோம். பிணம் வெளியிலேயே கிடந்தது. சி. தான் மூக்கை அறுத்தவர். கடவுளைத் தொழுவதற்காகப் பலர் ஒரு மோட்டார்க் காரில் வந்தார்கள். உடனே நான் பிணத்தைத் துரக்கிக் கோபுரத்தின் மேல் வீசினேன். இதை எனது ஆசிரியர் ஒருவர் பார்த்துக் கொண்டார்.” “நான் ஒடி வந்துவிட்டேன். வழியில் என் நண்பர் வீ. யைச் சந்தித்து வேறொருவனிடம் சைக்கிள் வாங்கி இருவரும் ஏறிக்கொண்டு ஊருக்குச் சென்றோம். வழியில் சி. தம் அண்ணனிடம் ஒன்றும் நடக்காதது போல் வந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கொலை செய்துவிட்டு இவர் இவ்வளவு தாராளமாக வெளியில் நடமாடுகிறாரே என்று வியந்தேன்.” "நாங்கள் ஒரு சத்திரத்தில் புகுந்துகொண்டிருந்தோம். ஆனால் சி. வேறு சில நண்பர்களிடம் சாலையில் சென்றுகொண்டிருந்தார்.” ...

தமிழில் வசனநடை | க. நா. சுப்ரமண்யம்

எல்லா மொழிகளிலுமே இலக்கிய ரீதியாகக் கவனிக்கும்போது கவிதை என்பதை ஒட்டிப் பின்னர்தான் வசன நடை என்பது எழுந்திருக்கிறது என்பது வெளிப்படை . தமிழும் அதற்கு விலக்கல்ல . தமிழ்க் கவிதை கி . மு . ஐந்தாயிரத்தில் தோன்றியது என்று வைத்துக்கொண்டால் , கவிதை தோன்றி ஆறாயிரத்து எழுநூற்றிருபது வருஷங்களுக்குப் பிறகுதான் வசன நடை தோற்றிற்று . தமிழ்க் கவிதை தோன்றியது கி . பி . மூன்றாம் நூற்றாண்டை ஒட்டியே என்று ஏற்றுக்கொண்டால் , வசனம் தோன்றியது ஒரு ஆயிரத்தி நானூறு வருஷங்களுக்குப் பிறகு என்றுதான் சொல்ல வேண்டும் . நான் இந்த இரண்டாவது காலவரையே நியாயமானது என்று எண்ணுபவன் . எஸ் . வையாபுரிப் பிள்ளை அவர்களின் ஆராய்ச்சிகளும் இதையே வற்புறுத்துகின்றன என்று தான் சொல்லவேண்டும் . உரை என்று சொல்லப்படுவதும் வசனமும் ஒன்றுதான் என்று அபிப்பிராயம் தெரிவித்துக்கொண்டிருப்பதில் சாரமில்லை . உரை இருந்திருக்கிறது . தமிழர்கள் ஊமைகள் அல்ல , ஆரம்ப காலத்திலிருந்தே உரையாடிக்கொண்டுதான் வந்திருக்கிறார்கள் என்று சொல்வது ஹாஸ்யமாகப் பொருத்தமாக இருக்கும் . உ...