Skip to main content

சங்கரதாஸ் சுவாமிகள் வரலாறு - அவ்வை டி.கே. சண்முகம்


நாடகத் தமிழை வளர்த்த தந்தை அவர்; நாடகாசிரியர்கள் பலருக்குப் பேராசிரியர் அவர். சென்ற ஐம்பது ஆண்டுகளுக்கிடையே அவரது பாடல்களையோ வசனங்களையோ உபயோகிக்காத நடிக நடிகையர் தமிழ் நாடக உலகில் இல்லையென்றே சொல்லிவிடலாம்.

நாடக உலகம் அப்பெரியாரைத் தமிழ் நாடகத் தலைமையாசிரியர் எனப் போற்றியது. எளிமையும் இனிமையும் ததும்பும் பாடல்களாலும் தேன் சொட்டும் தீந்தமிழ் வசனங்களாலும் அப்பெருமகனார் இயற்றியருளிய நாடகங்கள்தாம் தமிழ் நாடகக் கலை வளர்ச்சிக்கு அடிப்படைச் செல்வம் என்று கூறினால் அது மிகையாகாது.

முழுப்பெயரையும் சொல்ல வேண்டியதில்லை. சுவாமிகள் என்றாலே போதும். தமிழ் நாடக உலகில் அது சங்கரதாஸ் சுவாமிகள் ஒருவரைத்தான் குறிக்கும்.

சுவாமிகள் காலத்திலிருந்த மிகப்பெரிய புலவர்களும் நாடகாசிரியர்களுமான உடுமலைச் சரபம் முத்துசாமிக் கவிராயர், குடந்தை வீராசாமி வாத்தியார் முதலியோரெல்லாம் சுவாமிகளின் புலமைக்குத் தலை வணங்கிப் பாராட்டினர்.

ஆங்கில மோகத்தால் தாய்மொழியிற் பேசுவதுகூடக் கெளரவக் குறைவென்று கருதப்பட்ட காலத்தில் நாடக மேடையின் மூலம் தமிழை வளர்த்த பெரியார் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள். இசையரங்குகளிலே தெலுங்கு மொழி ஆதிக்கம் பெற்றிருந்த காலத்தில் நாடக மேடையில் தீந்தமிழ்ப் பாடல்களைப் பொழிந்து தமிழுலகை மகிழ்வித்தவர் சங்கரதாஸ் சுவாமிகள்.

தோற்றம் 

1867-ஆம் ஆண்டில் ஆவணித் திங்கள் 22-ஆம் நாள் தமிழ் மாநிலம் சுவாமிகளைத் தாங்கும் பேறு பெற்றது. தமிழர் வரலாற்றிலே அழியாத இடம் பெற்ற கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார், மகாகவி பாரதியார், வீரபாண்டியக் கட்டபொம்மன் முதலிய தியாகிகளையும், வீரர்களையும், புலவர்களையும் தந்த திருநெல்வேலி மாவட்டம்தான் நாடகப் புலவராகிய சங்கரதாஸ் சுவாமிகளையும் நமக்குத் தந்தது. தென்பாண்டி நாட்டின் துறைமுக நகரங்களில் ஒன்றான தூத்துக்குடியிலே, வெள்ளையரை விரட்டியடித்த வெள்ளையத் தேவன் பரம்பரையிலே போரில் புறமுதுகு காட்டாத வீர மறக்குடியிலே தாமோதரக் கணக்கப்பிள்ளை என்பாரின் செல்வத் திருமகனாகப் பிறந்தார் சங்கரதாஸ் சுவாமிகள்.

கல்வி 

தந்தையார் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய தமிழ்ப் புலவர். நகர மக்கள் அவரை 'இராமாயணப் புலவர்’ என்ற சிறப்புப் பெயரிட்டு அழைத்தனர்.

“தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்”

என்னும் தமிழ் மறையை நன்கறிந்த தாமோதரத் தேவர் தமது புதல்வனுக்குத் தாமே தமிழ்க் கல்வி புகட்டினார்.

அக்காலத்தில் ‘புலவரேறு’ என்று அறிஞர்களால் போற்றப்பட்ட பழனி தண்டபாணி சுவாமிகளிடம் நமது சுவாமிகள் பாடம் கேட்டுத் தமது தமிழறிவை வளர்த்துக் கொண்டார்.

தண்டபாணி சுவாமிகளிடம் தமிழ்ப் பாடம் கேட்டபோது நமது சுவாமிகளுக்கு உடுமலைச்சரபம் முத்துசாமிக் கவிராயர் அவர்கள் சக மாணவராயிருந்தார். கவிராயர் அவர்கட்கும் ஆசிரியர் சுவாமிகளுக்குமுள்ள அன்புத் தொடர்பு மிகப் பிரசித்தமானது. அது பற்றிய சில குறிப்புகளைப் பின்னர் அறிவோம்.

கணக்கர் கவிஞரானார் 

தூத்துக்குடி உப்புப் பண்டகசாலையிலே சுவாமிகள் சிலகாலம் கணக்கராக வேலை செய்தார். தமது பதினாறாவது வயதிலேயே சுவாமிகள் வெண்பா, கலித்துறை, இசைப் பாடல்கள் முதலியனவற்றை எழுதத் தொடங்கினார். கவிதைப் புலமைக்கும் கணக்கு வேலைக்கும் போட்டியேற்படவே சில ஆண்டுகளுக்குப் பின் சுவாமிகள் தமது இருபத்துநான்காவது வயதில் நாடகத் துறையில் பிரவேசித்தார்.

நடிகர்-நாடகாசிரியர் 

முதன்முதலாகச் சுவாமிகளின் புலமையை அறிந்து பயன்படுத்திக் கொண்டது திருவாளர்கள் ராமுடு ஐயர், கல்யாணராமையர் ஆகிய பழம்பெரும் நடிகர்களின் நாடக சபையெனச் சொல்லப்படுகிறது. இச்சபையில் முதலில் நடிகராகவும் பின்னர் ஆசிரியராகவும் சுவாமிகள் சில ஆண்டுகள் பணியாற்றினார். இரணியன், இராவணன், எம தருமன், 'நளதமயந்தி'யில் சனீசுவரன் முதலிய வேடங்கள் சுவாமிகளின் நடிப்புத் திறமையை எடுத்துக்காட்டிய சிறந்த பாத்திரங்கள் என்று கருதப்பட்டன.

சூத்திரதார் 

திருவாளர் சாமி நாயுடு அவர்களின் நாடக சபையில் சிலகாலம் சுவாமிகள் ஆசிரியராக இருந்தார். அப்போது சூத்திரதாராகவும் நடித்து வந்தார். சுவாமிகள் சூத்திரதாராக வந்து நாடக நுணுக்கங்களைப் பற்றியும், நடைபெறவிருக்கும் நாடகத்தின் நீதிகளைப் பற்றியும் நிகழ்த்தும் விரிவுரையைக் கேட்க மக்கள் ஆவலோடு கூடுவார்கள்.

ஆண்டிக் கோலம் 

நாயுடு அவர்களின் குழுவில் இருக்கும்போது சுவாமிகள் வாழ்க்கையில் வெறுப்புற்று, தமது வழிபடு கடவுளாகிய முருகப்பெருமானின் திருவருளை வேண்டிக் கையில் ஐம்பது ரூபாய்களுடன் ஒருநாள் ஆண்டிக் கோலத்தோடு தீர்த்த யாத்திரை செய்யப் புறப்பட்டுவிட்டார். இவ்வாறு கோவணாண்டிக் கோலத்துடன் தலங்களைச் சுற்றி வந்தபோதுதான் எல்லோரும் அவரைச் சுவாமிகள் என்று அழைத்தத் தொடங்கினர்.

தத்து புத்திரர் 

தீர்த்த யாத்திரை முடிந்ததும் சில ஆண்டுகள் புதுக்கோட்டை மகா வித்துவான் கஞ்சிரா மான்பூண்டியா பிள்ளை அவர்களுடன் சுவாமிகள் இருக்க நேரிட்டது.

புலவர்களால் மிகக் கடினம் என்று கருதப்பட்ட வண்ணம், சந்தம், இவற்றைப் பாடுவதில் சுவாமிகள் மிகவும் வல்லவராயிருந்தார். அவரது ‘சந்தக் குழிப்பு’க்களிலே காணப்படும் தாள விந்நியாசங்களையும், சொற்சிலம்பங்களையும் பார்த்துப் பரவசமடைந்த மகா வித்துவான் மான்பூண்டியா பிள்ளை அவர்கள் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளைத் தமது தத்து புத்திரராக ஏற்றுக்கொண்டார்.

சக மாணவர்கள் 

சுவாமிகளைச் சந்தங்கள் பாடச்சொல்லிவிட்டுப் பிள்ளையவர்கள் கஞ்சிரா வாசித்துத் தானே களிப்படைவாராம். இந்தச் சமயத்திலேதான் தமிழகத்தின் தலைசிறந்த மிருதங்க வித்வான்களான திருவாளர்கள் புதுக்கோட்டை தட்சிணாமூர்த்திப் பிள்ளை, பழனி முத்தையா பிள்ளை இருவரும் மகா வித்துவான் மான்பூண்டியா பிள்ளை அவர்களிடம் மாணவர்களாக இருந்து வந்தனர்.

மீண்டும் நாடகாசிரியர் 

தமிழ்நாடு செய்த தவத்தின் பயனாக மகா வித்துவான் மான்பூண்டியா பிள்ளை அவர்கள் வேண்டுகோளின்படி சில ஆண்டுகளுக்குப் பின் சுவாமிகள் மீண்டும் நாடக ஆசிரியப் பொறுப்பை மேற்கொண்டார். பிள்ளை அவர்களையும் அடிக்கடி சென்று பார்த்து வருவதுண்டு. வள்ளி வைத்திய நாதய்யர், அல்லி பரமேஸ்வர ஐயர் ஆகியோர் நடத்தி வந்த நாடக சபைகளில் சுவாமிகள் சில ஆண்டுகள் ஆசிரியராக இருந்தார். திருவாளர் பி.எஸ். வேலு நாயர் அவர்களின் ஷண்முகானந்த சபையிலும் நெடுங்காலம் சுவாமிகள் பணிபுரிந்தார். திரு.பி.எஸ். வேலு நாயர் அவர்களும், எனது தந்தையார் திரு. டி.எஸ்.கண்ணுச்சாமிப் பிள்ளை அவர்களும் ஆசிரியர் சுவாமிகளின் அன்புக்குரிய மாணவர்களாவார்கள். திரு. வேலு நாயர் அவர்களின் குழுவிலிருந்தபோதுதான் நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்த முதலியார் அவர்களின் 'மனோஹரன்' நாடகத்திற்குச் சுவாமிகள் பாடல்கள் இயற்றினார்.

மாணவ மாணவியர் 

தமிழ் நடிகருலகில் திரு. வேலு நாயர் அவர்களின் பேச்சுத் திறனைப் புகழாதாரில்லை. இத்தகைய நாவன்மை நாயர் அவர்களுக்கேற்பட்டது சுவாமிகள் அளித்த தனிப்பட்ட பயிற்சியினாலும், சுவாமிகளின் பால் நாயரவர்களுக்கிருந்த ஆசிரிய பக்தியினாலும்தான் என்று எனது தந்தையார் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

அக்காலத்தில் தமிழ்நாட்டில் நடைபெற்று வந்த எல்லா நாடக சபைகளிலும் சுவாமிகள் ஆசிரியராக இருந்திருக்கிறார்.

சென்ற ஐம்பது ஆண்டுகளுக்கிடையே தமிழகத்தில் பிரசித்தி பெற்று விளங்கிய நடிகர்களான திருவாளர்கள் ஜி.எஸ். முனுசாமி நாயுடு, ஜெகந்நாத நாயுடு, சாமிநாத முதலியார், சீனிவாச ஆழ்வார், நடேசபத்தர், ராஜா, வி.எம். கோவிந்தசாமிப்பிள்ளை, எம்.ஆர். கோவிந்தசாமிப் பிள்ளை, சி. கன்னையா, சி.எஸ். சாமண்ணா ஐயர், மகா தேவய்யர், சூரிய நாராயண பாகவதர், சுந்தரராவ், கே.எஸ். அனந்த நாராயண ஐயர், கே. எஸ். செல்லப்ப ஐயர், பைரவ சுந்தரம் பிள்ளை, சீனிவாச பிள்ளை முதலியோரெல்லாம் நமது சுவாமிகளிடம் பயிற்சி பெற்றவர்கள். அவரது பாடல்களைப் பாடிப் புகழ் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகையரிலும் திருமதிகள் பாலாம்பாள், பாலாமணி, அரங்கநாயகி, வி.பி. ஜானகி, கோரங்கி மாணிக்கம், டி.டி. தாயம்மாள் முதலிய பலர் சுவாமிகளின் மாணவிகள் ஆவார்கள்.

சொந்த நாடகக் குழு 

சமரச சன்மார்க்க நாடக சபை என்ற பெயரால் சுவாமிகள் தாமே சொந்தத்தில் ஒரு நாடக சபையையும் சில ஆண்டுகள் நடத்தினார். இந்த நாடகக் குழுவிலேதான் தமிழ் நாடக மேடையின் மங்காத ஒளி விளக்காகத் திகழ்ந்த எஸ்.ஜி. கிட்டப்பாவும் அவரது சகோதரர்களும் பயிற்சி பெற்றனர். இசைப் புலவராக இன்று நம்மிடையே வாழும் மதுரை திரு. மாரியப்ப சுவாமிகளும் இந்த நாடகக் குழுவில் தோன்றியவரே.

சிறுவர் நாடகக் குழு 

கால வேகத்தில் நடிகர்கள் சுவாமிகளின் பாடல்களை மட்டுமே உபயோகித்துக்கொண்டு உரையாடல்களைத் தம் தம் உளப் போக்கிற்கேற்றவாறு பேசத் தொடங்கினர். நாடக மேடை விவாத மேடையாயிற்று. நாடகக் கலை நலியத் தொடங்கியது. ஸ்பெஷல் நாடகங்களிலே போட்டியும் பூசலும் தாண்டவமாடின. பெரிய நடிகர்கள் பலரிடம் ஏற்பட்ட இந்தக் கட்டுப்பாடின்மையே சிறுவர்களை நடிகர்களாகக் கொண்ட நாடக சபைகளின் தோற்றத்திற்கும், வெற்றிக்கும் காரணமாக இருந்தன என்பது மறுக்கமுடியாத உண்மை. மனம் போன போக்கில் பேசுபவர்கள்பால் வெறுப்புற்ற சுவாமிகள் கட்டுத் திட்டங்களுடன் அடங்கி நடிக்கும் முறையில் சிறுவர் நாடகக் குழுவைத் தோற்றுவித்தார்.

பால மீன ரஞ்சனி சபை 

சுவாமிகள் ஆசிரியராக இருந்த முதல் ‘பாய்ஸ்’ கம்பெனி திரு. ஜெகந்நாத ஐயர் அவர்களின் பால மீன ரஞ்சனி சங்கீத சபை. பிற்காலத்தில் ஆசிரியப் பொறுப்பேற்றுப் பல நடிக மணிகளைத் தோற்றுவித்த திருவாளர்கள் பி. டி. சம்பந்தம், எம். எஸ். முத்துகிருஷ்ணன், டி. பி. பொன்னுசாமிப் பிள்ளை, எம். வி. மணி, டி. பாலசுப்பிரமணியம், கே. சாரங்கபாணி, எஸ்.வி. வெங்கட்ராமன், நவாப் டி.எஸ். இராஜமாணிக்கம், எம். ஆர். ராதா முதலிய எண்ணிறந்த நடிகர்கள் மதுரை பால மீன ரஞ்சனி சங்கீத சபையில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தத்துவ மீனலோசனி சபை 

சில காலம் அந்தச் சபையில் இருந்த பிறகு திரு. ஜெகந்நாதய்யர் அவர்களுடன் ஏற்பட்ட மனத் தாங்கலின் விளைவாகச் சுவாமிகள் மதுரைக்கு வந்து சில நண்பர்களின் கூட்டுறவோடு 1918-ஆம் ஆண்டில் தத்துவ மீனலோசனி வித்துவ பால சபா என்ற நாடகக் குழுவைத்தோற்றுவித்து அதன் ஆசிரியராக அமர்ந்தார்.

எங்கள் குருநாதர் 

இந்தக் குழுவில்தான் டி.கே.எஸ். சகோதரர்கள் என்று குறிக்கப்படும் நாங்கள் சேர்க்கப்பட்டோம்.

1918-ஆம் ஆண்டு முதல் 1922-ஆம் ஆண்டு வரை ஏறக்குறைய நான்காண்டுகள் தமிழ் நாடகத் தலைமையாசிரியர் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளிடம் நாடகக் கல்வி பயிலும் நற்பேற்றினைப் பெற்றேன். அவருடைய அறிவாற்றலைப் பற்றி நன்கு அறிந்துகொள்ள முடியாத பருவம். இன்று உணருகிறேன் எங்கள் குருநாதரின் பெருமையை.

நோயும் சிகிச்சையும் 

1921-ஆம் ஆண்டின் இறுதியில் தத்துவ மீனலோசனி வித்துவ பால சபையார் சென்னைக்குப் புறப்பட்டபோது சுவாமிகள் நோயுற்றதின் காரணமாகத் தூத்துக்குடிக்குச் சென்றார். சென்னையில் நாடகம் தொடங்கியதும் தூத்துக்குடியிலிருந்து வந்த செய்தி எங்களெல்லோரையும் திடுக்கிடச் செய்தது. ‘சுவாமிகள் பக்கவாத நோயினால் பீடிக்கப்பட்டு வலது கால் வலது கை முடக்கப்பட்டு வாயும் பேச முடியாத நிலையில் படுக்கையில் இருக்கிறார்’ என்றறிந்ததும் எல்லோரும் கண்ணிர்விட்டனர்.

கம்பெனியின் உரிமையாளர்களில் ஒருவரான திருவாளர். பழனியாபிள்ளை அவர்கள் சுவாமிகளைச் சென்னைக்கே அழைத்து வந்து சிகிச்சை செய்ய முனைந்தார். மருத்துவர்கள் பலர் வந்து பார்த்தனர். எவ்வித முயற்சியும் பயனளிக்கவில்லை.

இந்த நிலையிலிருந்தபோதும் சுவாமிகள் நாடகப் பணியிலிருந்து ஒய்வெடுத்துக் கொள்ளவில்லை. நாடக அரங்கிற்கு வந்து திரை மறைவில் ஒரு சாய்வு நாற்காலியில் படுத்தவாறே அவ்வப்போது கைகளால் சைகை காட்டித் தமது ஆசிரியப் பொறுப்பை நிறைவேற்றி வந்தார்.

மறைவு 

இவ்வாறு ஆசிரியர்களுக்கெல்லாம் பேராசிரியராகவும், தமிழ் நாடக உலகின் தந்தையாகவும் பல ஆண்டுகளைக் கழித்த சுவாமிகள், இறுதிவரை பிரமச்சாரியாகவே இருந்து 1922-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13-ந் தேதி திங்கட்கிழமை இரவு 11 மணிக்கு பிரஞ்சிந்தியாவைச் சேர்ந்த புதுச்சேரி நகரில் தமது பூதவுடலை நீத்தார்.

தமிழ் நாடகத் தாய் பெறற்கரிய தனது புதல்வனை இழந்தாள். நடிகர்கள் தங்கள் பேராசிரியரை இழந்தனர். கலையுலகம் ஒர் ஒப்பற்ற கலைஞரை இழந்து கண்ணிர் வடித்தது.


(அவ்வை டி.கே. சண்முகம் எழுதிய 'தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்' நூலிலிருந்து)


Comments

Most Popular

பெரியம்மை | சுரேஷ்குமார இந்திரஜித்

பெரியப்பா அருமையாகப் பாடுவார். ‘முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே’ என்ற டி.எம்.எஸ். பாட்டை ஏற்ற இறக்கங்கள், பிர்காக்கள் பிசகாமல் பாடுவார். அப்போது பெரியம்மை முகத்தைப் பார்க்கவேண்டுமே. அவர் முகம் பெருமிதத்தோடும் பரவசத்தோடும் இருக்கும். பெரியம்மா முருங்கைக்காய் குழம்பு வைத்தால் நிறைய சாப்பிடவேண்டியிருக்கும். குழம்புகள் ருசியாகச் செய்வதற்கென்றே அவள் பிறந்திருக்கிறாள். கத்தரிக்காய் புளிக்குழம்பும் அப்படித்தான் அவ்வளவு ருசியாக இருக்கும். என் அம்மைக்கு இந்தக் குழம்புகள் ருசி கூடி வராது. சப்பென்று இருக்கும். நான் வேலை பார்க்கும் ஊரிலிருந்து வீட்டுக்கு வந்திருந்தேன். பெரியப்பாவைப் பார்ப்பதற்கும், அவர் பாட்டைக் கேட்பதற்கும் அவர் வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன். இது மார்கழி மாதம். வாசல்களில் கோலம் போட்டு பூசணிப்பூவை மையமாக வைத்திருந்தார்கள். அநேகமாக சில வீடுகள் நீங்கலாக எல்லா வீட்டு வாசல்களிலும் பூசணிப்பூவை வைத்திருந்தார்கள். செண்பகவல்லி மதினி வீட்டைக் கடக்கும்போது மல்லிகைப்பூ வாசம் வந்தது. மதினி வீட்டுக் காம்பவுண்டுக்குள் மல்லிகைப்பூ கொடிக்குப் பந்தல் போட்டிருந்ததைப் பார்த்தேன். வேல

குலாப்ஜான் காதல் | புதுமைப்பித்தன்

‘ காதலாவது உருளைக்கிழங்காவது ’ - சி . சுப்பிரமணிய பாரதி நான் ஆராய்ச்சிப் பிரியன் . அதிலும் தர்க்கரீதியாக புத்தியை வசீகரிக்கக்கூடிய ஆராய்ச்சியென்றால் , அதுதான் எனது தெய்வம் . கம்பனுடைய காவியங்கள் முதல் , நாணயச் செலாவணி , தீண்டாதார் ஆலயப் பிரவேசம் ஈறாக , எல்லாம் தர்க்க முறையில் அடைபட்டு ஒத்து இருந்தால்தான் எனது கொள்கை . இல்லாவிடில் அதற்கும் நமக்கும் வெகுதூரம் . இந்தக் காதல் விஷயத்தை நன்றாக ஆராய்ந்து கவனித்ததில் , சாதாரணமாக அல்ல , அபரிமிதமாக , காவியங்கள் , நாவல்கள் என்ற கற்பனைப் பிரதேசங்களில்தான் விளைகின்றன . இல்லாவிட்டால் அவை நமது பொருள்காட்சி சாலைகளைத் தப்பி இருக்க முடியுமா ? அகப்பொருள் இலக்கணக்காரர் கூறுவதைப் பார்த்தால் அசல் , கலப்பில்லாத பழம் பெருந்தமிழ் மக்களுடனிருந்து அவர்கள் தங்களுடைய ஏடுகளுடன் கடலால் கொள்ளப்பட்ட பொழுது , அவர்களுடன் சங்கமமாயிற்றென்று நினைக்க ஏதுவிருக்கிறது . ஆழ்ந்து யோசிக்குந்தோறும் , தர்க்க ஆராய்ச்சியை வழிபடும் எனக்கு , அதன் கூற்றுக்கள் வெகு வினோதமாகவே காணப்படுகின்றன . எனது ஆர

மணிபல்லவம் - ஜம்பு கொல பட்டினம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்ககாலத்து நூலாகிய மணிமேகலையிலே, இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப்பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள பழைய பௌத்த நூல்களிலேயும் இலங்கைத்தீவின் வடகோடியில் இருந்த ஜம்புகோல் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. தமிழ் நூலில் கூறப்படும் குறிப்பு களைக் கொண்டும் பாலி மொழி நூல்களில் கூறப்படும் குறிப்புகளைக் கொண்டும் மணிபல்லவமும் ஜம்புகொல பட்டினமும் ஒரே இடம் என்று துணியலாம். பெயர் வேறுபடு வதிலிருந்து இரண்டும் வெவ்வேறிடங்கள் எனக் கருதும்படி இருந்தாலும், இவைகளைப்பற்றிக் கூறப்படும் செய்திகளை உற்றுநோக்கினால், இரண்டும் ஒன்றே என்பது ஐயமற விளங்குகிறது. இதனை ஈண்டு ஆராய்வோம். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலேதான் மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்தது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை கூறுவது காண்க. சோழ நாட்டின் துறைமுகப்பட்டினமாகிய புகார்ப்பட்டினத்தில் இருந்து தெற்கே 30 யோசனை தொலைவில் மணிபல்லவம் இருந்தது (