மனிதனுடைய அடிமனம் (நனவிலி மனம்) எது என்பது
பற்றியும் அதிலே அழுந்திக் கிடக்கிற உந்தல்கள், இச்சைகள் பற்றியும் பொதுவாகத் தெரிந்துகொண்டோம்.
அடிமனம் எப்படியெல்லாம் தனது வல்லமையை வெளிப்படுத்துகின்றது என்றும் கண்டோம்.
இந்த அடிமனத்தின் வேலையால் மனிதனுடைய நடத்தை
பாதிக்கப்படுகிறது. அதனால் அவன் எல்லாச் சமயங்களிலும் ஏற்ற முறையிலே காரியம் செய்வதில்லை.
பகுத்தறிவுக்கு ஒவ்வாத வகையிலும் அவன் நடக்கிறான்.
இவ்வாறு பலர் பல விதங்களிலே நடப்பதன் விளைவாகவே
சமூகம் அமைகின்றது. பிறகு அந்தச் சமூகம் வருங்கால மக்களைப் பாதிக்கின்றது. குழந்தைகள்
சமூகச் சூழ்நிலையால் பாதிக்கப்படுகிறார்கள். இந்த மாதிரியாக சமூகமும் மனிதனும் மாறிமாறிப்
பாதிப்பதால் முன்னேற்றம் தடைப்படுகிறது. யாராவது ஒரு சில மக்களே இந்தக் தடைகளையெல்லாம்
மீறி நின்று உயர்வடைகிறார்கள். அப்படி விடுதலை பெற்று நிற்பவர்களை உலகம் போற்றுகின்றது;
மகான்கள் என்று கொண்டாடுகின்றது.
பெரும்பாலான மக்கள் கட்டுண்டே கிடப்பதால்
சமூகத்திலே விரைவான முன்னேற்றம் ஏற்படுவதில்லை என்று பிராய்டு கருதுகிறார். சமூகம்
ஒரே நிலையில் சுழன்றுகொண்டுதானிருக்கும்; அதை மீறி நின்று ஒரு சிலரே மேன்மையடைய முடியும்;
அவர்கள் ஏற்படுத்துகின்ற இயக்கங்கள், எண்ணப் புரட்சிகள் ஓரளவு சமூகத்தை விழிப்படையச்
செய்யும்; ஆனால் அது பெரியதோர் அளவிற்கு முன்னேற்றத்தை உண்டாக்குவதில்லை; அப்படி உண்டாக்க
முடியுமானால் புத்தர், இயேசு போன்ற மகான்களாலும், அவர்களைப் போலவே உண்மை ஞானம் பெற்ற
மற்ற மகான்களாலும் நமக்குக் கிடைத்துள்ள உதாரணங்களும் உபதேசங்களுமே போதாவா என்று கேட்பவர்களுண்டு.
இவர்கள் சமூகத்தின் முன்னேற்றத்திலே நம்பிக்கை குறைந்தவர்கள்.
இந்த நிலையிலிருந்து சமூகம் விடுபட வேண்டுமானால்
குழந்தைகளை வளர்க்கும் முறையிலும், அவர்களுக்குக் கல்வியளிக்கும் முறையிலும் மனவியல்
தத்துவங்களை நன்கு கடைப்பிடிக்க வேண்டும் என்று பிராய்டு கருதுகிறார். அதற்கு முதற்படியாகப்
பெற்றோர்களும் ஆசிரியர்களும் மனவியலைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ள வேண்டும். இன்னும்
ஒரு முக்கியமான விஷயத்தை நாம் இங்கு கவனிக்க வேண்டும். அடிமனத்தில் இழிந்த இச்சைகளும்,
உந்தல்களும், இயல்பூக்கங்களும் பதுங்கியிருக்கின்றன என்றும், அவை எவ்வாறு வெவ்வேறு
வழிகளில் வெளியாகித் திருப்தி பெற முயல்கின்றன என்றும் கண்டோம்.
மனத்திற்குள்ள ஆற்றல் ஒரு குறிப்பிட்ட
அளவுடையதுதானென்றும், அந்த ஆற்றல் இத், அகம், அதீத அகம் ஆகிய மூன்று பெரும் பிரிவுகளிலே
ஒரு சந்தர்ப்பத்தில் பல வேறு அளவுகளில் இருக்கின்றது என்றும் முன்பே குறிப்பிட்டேன்.
இத்தின் ஆற்றல் அதிகப்படுகின்றபோது மற்ற இரண்டின் ஆற்றல் அந்த அளவுக்குக் குறைந்துபோகும்.
அதீத அகம் முன்பே எச்சரிக்கையாக இருந்து இத்தின் போக்கைத் தடைசெய்யாவிடில் இத்தின்
ஆற்றல் மிகுந்து விடுகிறது.
காம இச்சைகளைக் கட்டுப்படுத்தி உள்ளத்தை
ஆன்ம ஞானத் தேட்டத்திலே சதா ஈடுபடச்செய்ய விரும்பியவர்கள் பழங்காலத்திலே மனித சஞ்சாரமற்ற
காடுகளுக்குச் சென்றதில் நிறைந்த பொருள் இருக்கிறது. இத்தின் இழிந்த உந்தல்கள் மேலோங்குவதற்குத்
தூண்டுதல்களாக இருக்கும் சூழ்நிலையைத் தவிர்க்க வேண்டும் என்பதையே அவர்கள் முக்கியமாகக்
கருதினார்கள். உணவுக் கட்டுப்பாடு செய்ததும், சாத்துவிக உணவுமுறையை அனுஷ்டித்ததும்
இந்த நோக்கத்தைக் கொண்டேதான்.
இதிலிருந்து சமூகத்தில் வாழும் நாம் ஒரு
விஷயத்தைத் தெரிந்துகொள்ளக் கூடும். இழிந்த உணர்ச்சிகளுக்கு ஆதரவாக அவற்றை மேலெழுப்பும்
காட்சிகளைக் காண்பதோ நூல்களைப் படிப்பதோ இத்தின் ஆற்றலுக்கு வலிமை தேடுவதாக முடிகிறது.
அது நமது சமூகத்திற்குப் பாதகம் செய்வதாக அமையுமென்பதை நாம் எளிதில் கண்டுகொள்ளலாம்.
புதிய பாரத சமுதாயத்தை நமது பண்பாட்டின்
அடிப்படையிலே உருவாக்க முனைந்திருக்கும் நாம் இன்று இந்த விஷயத்தைப் பற்றித் தீவிரமாக
ஆலோசிக்க வேண்டும். வாழ்க்கை முறையிலே சில லட்சியங்களை அடிப்படையாக நமது நாடு கொண்டிருக்கிறது.
அந்த லட்சியங்களைக் கடைப்பிடித்து வாழ்ந்தவர்களையே இந்த நாடு போற்றுகிறது. அந்த லட்சியங்களையே
அஸ்திவாரமாகக்கொண்டு சமூகத்தை அமைக்கவும் விரும்புகிறது.
அப்படியிருக்கும்போது அதற்கு விரோதமான
இச்சைகள் வளர்வதற்குத் தூண்டுகோலாக இருக்கும் எதையும் நாம் அநுமதிக்க முடியுமா?
சமூகத்தைப் பாதிக்கும் விஷயங்கள் சிலவற்றைப்
பற்றித் தெரிந்துகொள்ளுவதற்கு உதவுவது போலத் தனிப்பட்டவர்களின் வாழ்க்கையைப் பாதிக்கும்
அடிமன உந்தல்களைப் பற்றி அறிந்து முன்கூட்டியே எச்சரிக்கையாக இருப்பதற்கும் பிராய்டின்
கொள்கைகள் உதவுகின்றன. அவர் கூறுவதில் சில கருத்துக்கள் எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்படாமலிருக்கலாம்;
தவறு என்றுகூட எதிர் காலத்தில் நிரூபிக்கப்படலாம். ஆனால் அவர் ஆராய்ந்து கண்ட அடிப்படைக்
கருத்துக்களிலே சந்தேகமில்லை. அவை மனத்தின் தன்மைகளை அறிந்து கொள்வதிலே ஒரு பெரிய முன்னேற்றத்தை
உண்டாக்கிவிட்டன.
அவற்றைத் தெரிந்துகொண்டால் ஒவ்வொருவனும்
தனது வாழ்க்கையைத் திருத்திக்கொள்ளுவதற்கு அநுகூலமுண்டாகும். மனம் என்பது குரங்குக்குச்
சமானம் என்று பெரியவர்கள் ஏன் கூறியிருக்கிறார்கள் என்பதும் நமக்கு விளங்கும்.
மனத்தின் தன்மைகளை அறிந்து அம்மனத்தை விவேகத்தால்
நல்வழியில் செல்லுமாறு செய்வதே வாழ்க்கையின் மிகப்பெரிய வெற்றியாகும்.
Comments
Post a Comment